திருவிளையாடல் புராணம்

திருவிளையாடல் புராணம் 01 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா.01)
கருங்குருவிக்கு உபதேசம் செய்த படலம்.

சிவபெருமானும் அன்னை தேவியும் ஆட்சிசெய்யும் அந்த மதுரையில் அன்று அவர்கள் பிரதிநிதியாக இராஜராஜ‌பாண்டியன் மகன் சுகுணபாண்டியன் ஆண்டுகொண்டிருந்தான்.

அக்கால கட்டம் மிக மிக தொன்மையானது, எல்லா உயிர்களும் தங்கள் இயல்பில் கொஞ்சம் கொஞ்சமாக மேம்பட்ட காலமிது.

இந்த உலகில் மானுடர் மட்டும் காலத்துக்கு ஏற்ப மாறி நிலைத்துக்கொண்டிருப்பதில்லை, காலம் மாற மாற சிந்தனை பெற்று வளர்வதில்லை, இந்த மாற்றம் எல்லா உயிர்க்கும் இயல்பானது.

எல்லா உயிர்களும் காலத்துக்கு ஏற்ப மாறுகின்றன, அவை தன் இயல்பில் சிந்திக்கின்றன, பறவைகளும் விலங்குகளும் மீன்களும் கூட இக்காலகட்டத்தில் வாழும்படி தங்களை மாற்றிக்கொள்கின்றன‌.

வைரஸ், பாக்டீரியாக்கள் கூட அப்படி மாறிவருவதை கவனிக்கலாம். கண்காணமுடியா கிருமிக்கும் அந்த தன்மையும் தேடலும் காலத்துக்கு ஏற்ப தன்னை மாற்றுதலும் அவசியம்.

இங்கு எல்லாமே காலத்திற்கு ஏற்ப மாறிவந்தவை, எல்லா வகை உயிர்களிலும் இந்த மாற்றம் உண்டு, இல்லையெனில் நிலைக்காது.

அந்தத் தொன்மையான காலத்திலே இந்த அவசியம் இருந்தது. அப்படி அன்று ஒவ்வொரு உயிருக்கும் ஒவ்வொரு தேடலும் அவசியமும் இருந்தது.

அதில் ஒன்றாக அந்தக் கருங்குருவி இனம் இருந்தது.

கரிச்சான் குருவி, கருங்குருவி, இரட்டைவால் குருவி என அழைக்கப்படும் அந்தக் குருவி அளவில் சிட்டுக்குருவி போன்றது. உடல்முழுக்க கருப்பு வண்ணமும் நுனியில் பிளவுப்பட்ட வாலும் கொண்ட அக்குருவி மைனா போல் பூச்சிக்களைப் பிடித்து உண்ணும் தன்மைக் கொண்டதால் விலங்கினங்கள் மேல், வயல்களில் சுற்றிக்கொண்டிருக்கும்.

அவை அன்று எளிய பறவை, அச்சம் மிகுந்தவை. மிகச்சிறிய அந்தப் பறவைகளை காகம், ஆந்தை, கழுகு எனக் கண்ணில் பட்டதெல்லாம் கொத்தி விரட்டும். ஒன்றும் இல்லாவிட்டால் குயில் கூட பொழுதுபோக்குக்கு கொத்தி கொத்தி விரட்டும்.

அன்று கரிக்குருவி இனம் சிட்டுக்குருவி இனம் போல் மிக மிக அப்பாவியாய், அடித்தால் சாகும்படி இருந்தது. அவைகளுக்குப் பலமுமில்லை, காவலுமில்லை.

காகம், பருந்து, வல்லூறுகளைக் கண்டால் அவை ஓடி ஓடி ஒளிந்துகொண்டிருந்த காலமது.

அப்படியான கருங்குருவிகளில் ஒரு குருவி கொஞ்சம் அறிவுடையதாக இருந்து வந்தது. அது தன் நிலை, தன் குலத்தின் நிலையினைக் குறித்து மிக மிக வருந்திற்று.

சில விலங்குகள், பறவைகள் கொஞ்சம் அதன் இயல்பிலிருந்து மாறி மேம்பட்ட அறிவை கொண்டிருக்கும். சில மாடுகள், குதிரைகள், யானைகள், குரங்குகள், நா(ய்)கள் எனப் பல விலங்குகள், சில பறவைகள் அந்த அறிவினைக் கொண்டிருக்கும், கொஞ்சம் விசேஷமாக இருக்கும்.

அதன் காரணம் முன் ஜென்ம தொடர்பன்றி வேறல்ல‌.

அப்படியான தன்மையினை அந்த கருங்குருவி பெற்றிருந்தது, முன் ஜென்மத்தில் நல்வாழ்க்கை வாழ்ந்து பல நன்மைகளை செய்தவன் ஒருவன் பிறப்பு அது. அவன் ஏகப்பட்ட நன்மைகளைச் செய்திருந்தாலும் தன்னை அறியாமல் செய்த சில தீவினை காரணமாக இந்த கருங்குருவியாகப் பிறந்தான்.

கருங்குருவியாக இருந்ததால் அதன் இயல்பிலே யோசித்தது அந்த உயிர். ஆனால், பூர்வ ஜென்ம தொடர்பால் சில சக்திகள் இருந்தன, அது மற்றவர் பேசுவதை புரிந்துகொள்வது.

அந்தக் கருங்குருவி இனமே மற்ற பறவைகளுக்கு அஞ்சி ஒடுங்கிய காலம் என்பதால் இதுவும் அஞ்சி அஞ்சி ஓடியது.

ஒரு அடர்ந்த காட்டின் மரப்பொந்தில் அது ஒளிந்து தன்னிலை குறித்து வருந்திக் கொண்டிருந்தது. இவ்வளவு பலவீனமாக இருக்கின்றோமே, இப்படி எதிரிகளுக்கு அஞ்சி அஞ்சி ஓடுகின்றோமே, ஏன் இப்படி ஆகிவிட்டோம், ஏன் நமக்கு இந்த நிலை?

இந்த நிலை எப்போது மாறும்? காகம், கழுகு, பருந்திடம் இருந்து, துஷ்ட பறவைகளிடம் இருந்து, காவல் எப்போது கிடைக்கும்? யார் காவல் தருவார்கள்? யார் அடைக்கலம் தருவார்கள்?

யாரை அண்டினால் நமக்கு பாதுகாப்பு உண்டு, அப்படி கிடைக்குமா? இல்லை இப்படியே இருந்து காலம் காலமாக அஞ்சி சாகவேண்டுமா? என அது அழுதுக்கொண்டிருந்தது.

அதற்கு யாரிடம் தன் குறையினைச் சொல்லவேண்டும் எனத் தெரியவில்லை. அது பறவையா, மரமா, மனிதரா, விலங்கா இல்லை அதை மிஞ்சிய சக்தியா என்பதும் தெரியவில்லை.

யாரிடம் எப்படி எந்த மொழியில் தன் இழிநிலை குறித்து சொல்லி புலம்பி அடைக்கலம் தேடுவது என அது தவித்துக் கொண்டிருந்தது.

அப்போது அந்த மரத்தின் அடியில் ஒரு சிவனடியார் கூட்டம் வந்து தங்கிற்று, நெற்றியெல்லாம் வெண் விபூதியும் உடலெல்லாம் ருத்திராட்சமும் கொண்ட அந்த அடியார்கள் சாம்பல் மரமொன்று ருத்திராட்சகனிகளோடு காட்சி தருவது போல் அதன் கண்களுக்கு தெரிந்தார்கள்.

அவர்கள் வார்த்தைகளெல்லாம் “ஓம் நமசிவாய, சிவாயநம” “சிவசிவ” என வந்துகொண்டே இருந்தது.

அந்த அடியார்கள் கூட்டம் செல்லும் எதிர்வழியில் ஒரு அடியார் வந்தார், அவரிடம் இவர்கள் அவர் பயணம் பற்றிக் கேட்டார்கள்.

அந்த அடியார் சொன்னார் “நாம் மதுரையில் குடிகொண்டிருக்கும் சோமசுந்தரேஸ்வரரைக் காணச் செல்கின்றோம், அந்தத் தலத்தை விட சிறந்த தலம் உலகில் ஏது?

அங்கேதான் மூர்த்தம், தலம், தீர்த்தம் என மூன்றுமே ஒருசேர சிறப்பான ஆலயம், அந்தப் பொற்றாமரைக் குளத்தில் நீராடி அந்த நாதனை வணங்கி மண்டியிட்டு பிரார்த்தித்தால் நமக்கு கிடைக்காத வரம் உண்டோ?

பூலோகத்தின் உயிர்கள் எல்லாவற்றுக்கும் அந்த ஆலயமல்லவா அடைக்கலம், அங்கேதான் சென்று கொண்டிருக்கின்றேன்” என்றார்.

அதற்கு அந்த அடியார் கூட்டம் “நீர் உண்மை உணர்ந்தவர், உமது பயணத்தை அந்தச் சிவனே பார்த்துக் கொண்டு உமக்கு நல்லாசி வழங்குவார்” எனச் சொல்லி திருநீறு கொடுத்து அனுப்பினார்கள்.

அவர்கள் கொடுத்த திருநீறு கொஞ்சம் கீழே சிந்திற்று.

பின் அனைவரும் கிளம்பினார்கள். அவர்கள் பேசியதெல்லாம் கேட்ட கருங்குருவி தனக்கு அபயம் அளிப்பவர், தன்னை காக்கும் சக்தி கொண்டவர் மதுரைவாழ் சிவபெருமான் ஒருவரே என உணர்ந்தது, மனதால் அவரை நினைந்து தன் கீச்சு குரலால் கத்தி தன் சிறகுகளைப் படபடவென அடித்துக் கொண்டது.

பின் அந்த சிந்திய வெண்திருநீற்றின் மேல் விழுந்து புரண்டது, அதன் உடலில் அந்த நீறுபட்டதும் அதன் உடலின் இறகுகளெல்லாம் சிலிர்த்துக் கொண்டன.

அந்தச் சிறிய குருவிக்குள் ஒரு உற்சாகம் பற்றிக் கொண்டது. தனக்கொரு தெய்வம் உண்டு, தன் குறைதீர்க்க ஒரு ஆலயம் உண்டு என அது கொண்ட நம்பிக்கையில் அதன் சிறகுகள் அசைந்தது.

முன்பின் அது ஆலயத்தைக் கண்டதில்லை. ஆனால், சாரை சாரையாய் ஊறும் அடியார் கூட்டம் செல்லும் திசைநோக்கி சென்ற பறவை அந்த ஆலயத்தை சரியாக அடைந்தது.

அந்த ஆலயத்தின் ஓரமாகச் சென்று அமர்ந்து காட்சிகளைக் கண்டது.

ஒரு பக்கம் பக்தர்கள் நீராடும் பொற்றாமரைக் குளம்; ஒருபக்கம் சோமசுந்தரர் சந்நிதி; அதன் அருகே நந்தி ஒருபக்கம்; தேவி சந்நிதி இன்னும் பற்பல காட்சிகளைக் கண்டது.

ஆலயமணியோசை, மந்திர முழக்கம், யாக பூசைகள், இசை முழக்கம், அடியார் பாடல்கள், சுவாமி ஊர்வலம், வழிபடும் பக்தர் கூட்டம், பிரமாண்ட யானைகள், நிறுத்திவைக்கப்பட்ட தேர் என எல்லாம் கண்ட அந்தப்பறவை மிரண்டே போனது.

ஆனாலும் தன் கடைசிமுயற்சி அது என்பதால் ஓரமாக ஒதுங்கிக் கொண்டது, ஒதுங்கிக் கொண்டு ஆலவாய் நாதனையே நோக்கிக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை அது அதிகாலையில் விழித்து அந்த பொற்றாமரைக் குளத்தில் நீராடியது, நனைந்த சிறகுகள் அசைய நீர் சொட்ட சொட்ட கோபுரத்தை வலம் வந்தது.

அருகிருந்த சிறிய செடியின் மலரைத் தன் சிறிய அலகால் கொத்தி எடுத்துக் கொண்டது.

பின் அந்த ஆலவாயன் சன்னதியில் வந்து அமர்ந்தது. அந்த மலரை இட்டது, அங்கே சிதறியிருந்த திருநீற்றில் புரண்டது, சிவனையே நோக்கிக் கொண்டிருந்தது.

அதற்கு மொழி தெரியாது; அதற்கு பாடத் தெரியாது; அதற்கு வணங்கத் தெரியாது; அதற்கு பூஜைகளோ ஆகமமோ தெரியாது. அதனால் தன் மனதில் தன் துயர் நினைந்தபடி சிவனையே நோக்கிக் கொண்டிருந்தது.

அங்கு அந்த எளிய பறவையால் நீண்ட நேரம் இருக்கமுடியாது என்பதால் சந்நிதிக்கு மேல் இருந்த சிறிய இடுக்கில் ஒடுங்கிக் கொண்டது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவனைக் காண்பதும் பின் இப்படி ஒடுங்குவதுமாக அது அங்கே தங்கி சுற்றிக்கொண்டிருந்தது.

எண்ணமெல்லாம் சிவனாக, அதன் தன்மையெல்லாம் தன் நிலையினை எண்ணி கலங்குவதாக அது ஒடுங்கியிருந்தது.

இப்படி மூன்று நாட்கள் கடந்தன. அது பொற்றாமரைக் குளத்தில் நீராடி சிறிய மலரை இட்டு சிவனை வணங்கி தரையில் புரண்டு திருநீறிட்டு மறுபடி அந்த இடுக்கில் ஒளிந்து கொண்டது.

நடப்பதை கண்ட தேவி சிவனிடம் கேட்டார், “இது என்ன குருவி, ஏன் இங்கே சுற்றித் திரிகின்றது, காரணங்கள் இல்லாமல் இந்தச் சந்நிதி முன்னால் ஒரு வண்டு கூட வராதே”

சிவன் சொன்னார்,” தேவி, இது பூர்வஜென்ம தொடர்பால் இன்று கருங்குருவியான ஆத்மா, சில காரணங்களை முன்னிட்டு நாமே இதனை நடத்துகின்றோம், வா அதனிடமே கேட்கலாம்” எனச் சொன்னவர் தேவியோடு அந்தக் கருங்குருவி முன் காட்சி தந்தார்.

அவரைக் கண்டதும் தன் சிறிய உடலின் இறகுகள் சிலிர்க்க, சிறிய இறக்கைகளை அசைத்து ஆனந்தப்பட்ட குருவி அவரைப் பணிந்தது.

சிவபெருமான் கேட்டார், “சிறிய் கருங்குருவியே, என்னை தேடிவந்து இங்கு வழிபட்ட நோக்கம் என்ன? என்ன வரம் வேண்டும்?”

சிவனே தன்னிடம் தன் பிரச்சினையினைக் கேட்டதும் அந்தக் குருவி நிலை குலைந்தது, சிவனையே பார்த்து அசையாமல் நின்றது, சிலையாய் நின்ற பறவை மெல்லச் சொன்னது.

“எம்பெருமானே, அண்டமெல்லாம் படைத்து, அங்கே எல்லா உயிரையும் படைத்து காப்பவர் நீர், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பவர் நீர், எமக்கும் படியளக்கின்றீர் அதில் நான் நன்றியுள்ள குருவியாய் இருக்கின்றேன்.

ஆனால், எமக்குப் பாதுகாப்பில்லை, நான் எளியவன், மிகச் சிறிய பலவீனமானவன், இதனால் காக்கையும் பருந்தும் எங்களைப் படாதபாடு படுத்துகின்றன, கண்ட இடமெல்லாம் எங்களை விரட்டி விரட்டி அடிக்கின்றன‌.

எல்லோருக்கும் எளியவனும் இளக்காரமுமாக ஆகிவிட்டோம். எங்குச் சென்றாலும் அடிக்கின்றார்கள். எங்கள் இனம் மட்டுமல்ல சிறிய குருவி இனமே இதனால் அஞ்சி நடுங்குகின்றது.

பரம்பொருளே, எங்களையும் சில காரியங்களுக்காக இந்த பூமியில் நீ படைத்தாய், எங்களுக்கு வாழ விதியும் கொடுத்தாய். ஆனால், இந்த ஆபத்தால் படாதபாடுபடுகின்றோம்.

பகலில் இந்த பறவைகளுக்கு அஞ்சி இரவில் வந்தால் அங்கே ஆந்தைகள் எங்களை விரட்டுகின்றன, கண் தெரியா இரவில் அதுவும் சாத்தியமில்லை.

எங்களுக்குத் தேவை சில பூச்சியும் புழுக்களும், அதனை உண்டு வாழக்கூட இந்த உலகில் உரிமை இல்லாவிட்டால் எப்படி?” எனக் கதறியது

சிவன் அதன் நிலை புரிந்து வரமருளினார், “கருங்குருவியே அஞ்சாதே, இனி நீ எளியவன் அல்ல, இனி நீ வலியான் என அழைக்கப்படுவாய், இனி உனக்கு எந்தப் பறவையினையும் தாக்கும் சக்தியும், தைரியமும் உண்டாகும், பறவைகளில் நீ இனி பலம் வாய்ந்தவனாய்.

உன் பொருட்டு உன் கருங்குருவி குலமே இனமே இனி வலியதாகும், எல்லா எளிய பறவைகளுக்கும் இனி உன் குலம் காவலாகும், அஞ்சாதே. இனி உலகம் அதிசயத்தை காணும்.

நீ வலியனாகும்படி ம்ருத்யுஞ்சய மந்திரத்தை உனக்கு போதிக்கின்றேன், அது உன்னை சக்தி உடையவனாக மாற்றும்.

ஏ கருங்குருவியே, என்னிடம் நீ அடைக்கலமானதால் உன் முற்பிறவியும் அடையக்கடவாய், முற்பிறவியில் நீ பல நல்ல வினைகளைச் செய்ததாலும், விதிவசத்தால் சில தீவினை செய்து இந்நிலை அடைந்தாய். அதிலும் எளிய பறவை குலத்துக்கு நல்லது செய்யும் வரத்தை வாங்கியிருக்கின்றாய்.

நான் உனக்கு ம்ருத்யுஞ்சய மந்திரத்தை உரைக்கின்றேன். இந்த மந்திரத்தை சொல்லிச் சொல்லி இப்பிறவியில் மரண பயம் அறுப்பாய், இந்த மந்திரம் மகா துணிச்சலாக, தைரியமாக இப்பிறப்பை எதிர்கொண்டு கடைசியில் கர்மாமுடிந்து என்னிடம் வரவழிச்செய்யும்” எனச் சொல்லி மிருத்யுஞ்சய மந்திரத்தை உரைத்தார். சிவனின் அருள் பெற்ற அந்த கருங்குருவி பின் வலியான் பறவையாகி காகம் முதல் கழுகுவரை எதிர்த்து நிற்கும் அதிசயப் பறவையாகி இன்றும் சிறிய பறவைகளுக்கு காவலாய் நிற்கின்றது.

ஆம். பறவை இனங்களில் மிகச் சிறியதாயினும் வானில் பெரிய பறவைகளுடன் போரிடுவதில் அதன் சக்தியும் ஞானமும் பெரிது. கழுகே வந்தாலும் தைரியமாக எதிர்த்து அதன் தலையினைக் கொத்தி கண்களைக் கொத்தி கழுகினை விரட்டி அடிக்கும் அசுரபலம் வாய்ந்தது கருங்குருவி.

எதிரிபறவையினை எதிர்பாரா கோணத்தில் சுழன்றுதாக்குவதும், தலையினைக் கண்ணை குறிவைத்து பல முனைகளில் சட்டென வெட்டி தாக்குவதும் அதன் சிறப்பம்சம்.

இதனாலே கருங்குருவிகள் இருக்குமிடம் காகம், பருந்து, கழுகு என எந்தப் பறவையும் வர அஞ்சும்.

இந்தக் கருங்குருவிகள் இருக்குமிடத்தில்தான் தூக்கணாங்குருவி, தேன் சிட்டு, மைனா, புணியல் எனச் சிறிய சிறிய பறவைகள் நம்பி கூடுகட்டும், எல்லாம் கருங்குருவி இருக்கும் தைரியம்.

பறவைகளில் சண்டையிடும் கலையில் அந்தக் கருங்குருவி கொண்டிருக்கும் ஞானம் அபராமானது, அந்த ஞானம் அந்த சின்னஞ்சிறு குருவிக்கு அதுவும் சிட்டுக்குருவி , மைனா என எந்த பறவைக்கும் இல்லாத ஞானம் அதற்கு மட்டும் வாய்த்தது.

இந்தத் தனித்துவமான ஞானத்தை கருங்குருவிக்குச் சிவன் வழங்கினார் என்பதே இந்த திருவிளையாடலின் தாத்பரியம்.

கருங்குருவியின் ஞானம் சிவன், அந்தத் தனித்துவமான சக்தி சிவன் என்பதே இதன் தத்துவம்.

கருங்குருவிகள் அன்றே வலியன் என அழைக்கப்பட்டவை, ஆண்டாள் இதனை ஆனைசாத்தன் என்பாள்.

இந்தக் கருங்குருவி தத்துவம்தான் இந்த ஞானம்தான் கடந்த 50 ஆண்டுக்கு முன் நவீன போர் விமானங்களின் செயல்பாட்டில் கைகொடுத்தன‌.

வானில் நவீன விமான சண்டையினைக் கருங்குருவிகள்தான் தான் சொல்லிக் கொடுத்தன. அமெரிக்க விமானப்படையின் பிரதான தாக்குதல் அதாவது விமான எதிர்ப்பு விமானங்களின் அடிப்படை இயங்கும் வியூகம் கருங்குருவியின் சண்டையினைச் சார்ந்தது.

அந்த மாபெரும் ஞானத்தை சின்னஞ்சிறிய பறவைக்குச் சிவனே கொடுத்தார் என்பது இந்தத் திருவிளையாடல் சொல்லும் காட்சி.

அதைத் தாண்டி இங்கு சிந்திக்க நிறைய உண்டு. நிறைய மறைபொருள் உண்டு.

இந்தத் திருவிளையாடலில்தான் ம்ருத்யுஞ்சய மந்திரம் உபதேசிக்கப்பட்டது. அர்த்தமுள்ளதும் பிறவிப்பிணி அகற்றி மரணபயத்தை போக்குவதுமானது அது.

கருங்குருவியின் சண்டை மரணத்துக்குத் துணிந்தது. அப்படியான துணிச்சல் அதனுடையது, அந்த சாவிற்கு துணிந்த சக்தியினைக் கொண்டிருக்கின்றது.

அந்தச் சக்தி அந்த ம்ருத்யுஞ்சய மந்திரம் இதோ.

“ஓம் த்ரயம்பகம் யஜாமஹே சுகந்திம் புஷ்டிவர்தனம்!!!!
உர்வாருகமிவ பந்தனாத் ம்ருத்யூர் முக்ஷீய மாம்ருதாத்!!!”

அதாவது, “முக்கண்களைக் கொண்ட ஈசனே! எல்லா வளமும், நலமும், ஊட்டமும் பெருகும்படி செய்யும் உன்னை, யாகம் செய்து பூஜிக்கிறேன்! வெள்ளரிப்பழம் போல இறப்பின் பிடியிலிருந்து விடுதலை செய்து சாகாமையை அருள்க” எனப் பொருள்.

இங்கே வெள்ளரிப்பழம் ஏன் சொல்லப்பட்டது என்றால் சுரைக்காய், பூசணி, பீர்க்கங்காய் போன்றவை கொடியில் காய்ப்பவை. ஆனால், அவை முற்றினால் கூடாக மாறும், அவை வாழ்ந்த அடையாளமும் இருக்கும். கொடி செத்தபின்பும் அது பயன்படும்.

ஆனால், வெள்ளரி அப்படி அல்ல. அது கனிந்தால் கொடியில் இருந்து தன்னைவிடுவித்து வெடித்து மறைந்தே போகும்.

ஆம். மற்ற காய்கள் அழிந்தாலும் குடுவையாக தொடரும், வெள்ளரி தடயமில்லாமல் மறையும்.

அந்தப் பிறப்பற்ற நிலை, வாழ்ந்து கனிந்து கரைந்து போய்விடும் நிலையினை வெள்ளரிப்பழமாகச் சொல்கின்றது ஸ்லோகம்.

இந்த ஸ்லோகம்தான் மார்கண்டேயனுக்கும் உரைக்கப்பட்டது. அவன் அதை சொல்லிச் சொல்லி தைரியம் பெற்று எமனை வென்றான்.

ரிக் வேதம், யஜுர் வேதம் என இருவேதத்தில் சொல்லப்படும் இந்த மந்திரம் மரண பயத்தை அழிக்கும், நல்ல கர்மத்தை அஞ்சாமல் செய்யவைக்கும். கடைசியில் சிவபாதம் சேர்க்கும்.

தினமும் 108 முறை இந்த மந்திரத்தினைச் சொன்னால் பெரும் மனோபலம் வாய்க்கும். மரணபயம் அகலும். பயங்களில் கொடியது அதுதான். ஒரு மனிதனை முடக்கிப்போடும் பெரும் சாபம் அதுதான்.

அந்தக் கொடிய சாபத்தை துணிச்சலாக, சாதனையாக மாற்றித்தரும் மனதை இந்த மந்திரம் செய்யும்.

கருங்குருவிக்குச் சிவன் சக்திகொடுத்தார் என்பது வெறும் நாடகம் அல்ல, புராணம் அல்ல, அது முழு பெரும் ஆத்ம போதனை.

ஒவ்வொருவரும் அறியவேண்டிய போதனை.

கருங்குருவி என்பது கரியநிறக்குருவி, இங்கே கர்மம் என்பதை கருப்புநிறமாக குறிப்பது இந்துக்கள் வழமை.

இராமன் கருப்பு, கண்ணன் கருப்பு என்பதெல்லாம் அவர்கள் கர்மம் செய்ய வந்ததை, கர்மம் செய்ததை குறிக்கும் அடையாளம்.

சனிபகவானுக்கும், எமதர்மனுக்கும் கரியநிறம் என்பது அவர்கள் பாரபட்சமின்றி கர்மத்தினைச் செய்வார்கள் என்பதைக் குறிக்கும் நிறம்.

ஆம். கருங்குருவி என்பது இங்கே கர்மம் கழிக்க வந்த ஆத்மாவாகின்றது. அந்த ஆத்மா இங்கே மாயை கர்ம வினைகள் எனக் காகம், கழுகு போல் படாதபாடுபடுகின்றது.

ஆத்மா இந்த உலகில் கர்மம் கழிப்பது சாதாரணம் அல்ல. அங்கு போராட்டம் அதிகம், வலிகள் அதிகம், அச்சமும் அழுகையும் பதற்றமும் மிக மிக அதிகம்.

அந்தப் போராட்டமான ஆன்மா சிவனைச் சரணடைந்தால் புதுவலிமை பெறும். புது வாழ்வை பெறும்; புது பலம் பெறும். எந்த சோதனை அபாயம் என்றாலும் மோதிப்பார்க்கும் தைரியத்தைப் பெறும். கர்மவினை மிகுந்த வாழ்வில் சோதனைகளை எதிர்கொள்ளும் பலம், போராடி வாழும் பலத்தை சிவன் தருவார். அவரை நம்பினால் எல்லாப் பலமும் கிடைக்கும், கர்மம் முடித்து அவர்பாதம் சேரலாம் என்பதே அந்தக் கருங்குருவிக்கு உபதேசித்த படலத்தின் தத்துவமாகும்.

ம்ருத்யுஞ்சய மந்திரம் என்பது அவ்வளவு சக்திவாய்ந்தது. அது பிறப்பறுக்கும் மந்திரம். மார்கண்டேயன் கர்மவினை அகற்றி அவனுக்கு பிறப்பில்லா, இறப்பில்லா நிலையினை அதுதான் கொடுத்தது.

கருங்குருவிக்குச் சிவன் அதை அருளினார் என்பது ஒரு ஆத்மா அதனால் பிறப்பற்ற நிலையினை எட்டும். அதை சொல்லச் சொல்ல அதன் கர்மவினை கழிந்து அந்த ஆத்மா சிவபாதம் அடையும் என்பதைச் சொல்லும் பெரும் தத்துவம்.

(இன்று மதுரை ஆலயத்தில் அந்த கருங்குருவிக்கு உபதேசம் செய்த லீலை நடக்கின்றது.

இன்று அந்த ஆலயம் சென்று வழிபட்டு அக்கதையினை கேட்போர் கொடுத்துவைத்தவர்கள். மதுரைவாழ் இந்துக்கள் அதை செய்தால் அவர்கள் கர்மவினை அழியும்.)

அங்குச் சென்று பகவானை தரிசித்து நில்லுங்கள்.

ஒவ்வொருவர் வாழ்வும் அந்த கருங்குருவி அன்று அஞ்சி, கலங்கி நிற்றல் போலத்தான் நிற்கின்றது. ஒவ்வொருவர் ஆன்மாவும் அப்படித்தான் ஏதோ ஒரு கவலையில் தீராசோகத்தில் கர்மவினை நினைந்து அழுதுக் கொண்டிருக்கின்றது.

அந்த கருங்குருவி கவலை தீர்த்து அந்த இனத்தையே உயர்த்திய இறைவன் உங்கள் ஆன்மாவால் உங்கள் குலத்தையும் மீட்பார்.

ஒரே ஒரு ஆன்மா, உலகை பற்றி தன் இனம் பற்றி கவலைப்படும் ஒரு ஆன்மா அக்குலத்தை மீட்கும்.

கண்ணன் அப்படி இடையர்குலத்தை மீட்டான், ராமன் ஷத்திரிய குலத்தை மீட்டான், பரசுராமம் பார்ப்பன குலத்தையே மீட்டான்.

இப்படி ஆத்மரீதியாக சக ஆத்ம துக்கம் அறிந்தவர்கள்தான் யோகிகளாக, மகான்களாக, ஞானிகளாக மானுட ஆத்மா உய்ய வழிகாட்டி உயர்ந்தார்கள்.

நீங்களும் அப்படி மானுடகுலம் வாழ, உங்கள் குலம் வாழ வழிகாட்டி நிற்பீர்கள். அந்த வரத்தை சிவன் தருவார்.

அங்கு செல்லமுடியாதவர்கள் உங்கள் வீட்டின் பூஜை அறையில் அமருங்கள், நீங்கள் யார் ஷன் மதத்தில் எந்த பிரிவு, சைவமா, வைணவமா, இல்லை வேறுமார்க்கமா என்பதெல்லாம் அவசியமே இல்லை.

உங்கள் ஆன்மாவினை அந்த பலவீனமான சிறிய அஞ்சி ஒடுங்கும் கருங்குருவியாக நினைந்து அந்தப் பரம்பொருளை எண்ணி வணங்கி நில்லுங்கள்.

ம்ருத்யுஞ்சய மந்திரம் 108 முறை சொல்லி அந்த மூலநாதனை, பரம குருபரனை அழையுங்கள்.

கருங்குருவி துயரம் போக்கிய அந்த மகா மூர்த்தியினை அந்த சொக்கநாதன் உங்கள் துக்கத்தை மகிழ்வாய், உங்கள் பலவீனத்தை பலமாய், உங்கள் அச்சத்தை முழு தைரியமாய் மாற்றித்தருவார்.

அந்த கருங்குருவி சிவனை பணிந்தபின் அதிசயம் பெற்றது போல் நீங்களும் அதிசய அசாத்திய பிறப்பாய் மாறி மாபெரும் அதிசய காரியங்களை எளிதாய் செய்து பெரும் காவலாய் நிற்பீர்கள். இது சத்தியம்.

(இன்றும் வல்லரசுகளின் விமான படைக்கு வழிகாட்டுவது கருங்குருவி. நவீன ட்ரோன்களின் இயக்கமும் அதை சார்ந்தே அமைக்கப்பட்டிருக்கின்றது.

அந்த கருங்குருவி எனும் வலியனின் ஞானம் தனித்துவமானது. இன்று மானிடன் கவனித்துச் சிலாகிக்கும் அந்த ஞானத்தை என்றோ அக்குருவிக்கு சிவன் அருளியதை சொல்லி அதனால் லௌகீக ஆத்ம தத்துவங்களை சொல்லி, பெரும் போதனை கொடுத்த மதம் இந்துமதம்.

கருங்குருவியின் மகா துணிச்சலும் சிவன், மகா ஞானமும் சிவன், அந்த சிவன் நமக்கும் அதே அருளை பலனைத் தருவார். விஞ்ஞான காலத்திலும் அந்த கருங்குருவி எனும் சிறிய குருவியினை இவ்வளவு துணிச்சலாக அறிவாக இயக்கும் சக்தி எது என கண்டு நிற்கும் விஞ்ஞானத்துக்கு அது சிவன் கொடுத்த தனி சக்தி, மானுடரின் லௌகீக, ஆன்மீக வழிகாட்டும் காரணத்துக்காக கொடுத்த சக்தி எனச் சொல்லி எல்லாவற்றின் மூலமும் இந்துமதமே, எல்லாவற்றின் முடிவும் இந்துமதமே எனச் சொல்லி விஸ்வரூபமாய் நிற்கின்றது மதுரை ஆலயமும் அங்கு நடக்கும் திருவிளையாடல் காட்சியும்.

திருவிளையாடல் புராணம் 02 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா : 02)
நாரைக்கு முக்தி தந்த படலம்.

அந்த நாரை பாண்டிய நாட்டின் தென்பக்கம் வைகையின் தொலைவான தென்பக்கம் ஒரு தடாகத்தில் வசித்து வந்தது‌. அது தாமரை போன்ற சிவந்த கால்களும நிலவுபோல் சாம்பல் நிறம் கொண்டதுமான நாரை.

நீர் இருக்குமிடத்தில் எல்லா ஜீவன்களும் வாழும், அப்படி அந்த தடாகத்தில் தாமரை அல்லி என மலர்கள் பூத்திருந்தன, அதை நம்பி வண்டு இனங்கள் சுற்றின, நீரில் எல்லாவகை மீன்களும் இருந்தன.

பூச்சிகள் வண்டுகள் சுற்றுவதால் தவளைகள் வந்தன, அதை பிடிக்க கரைகளில் நாகங்கள் இருந்தன.

மீன்கள் நிரம்பியிருந்ததால் கொக்கு, நாரை, மீன்கொத்தி என மீன்பிடி பறவைகள் தடாக கரையோரம் இருந்த மரங்களில் கூடுகட்டி வாழ்ந்தன, அதில் ஒன்று இந்த நாரை.

இந்த நாரை மீன் வேட்டையில் திறமையானது. எந்த வகை மீன்கள் என்றாலும் அதை தேடிப்பிடித்து வேட்டையாடுவதில் வல்லமையானது, தந்திரமும் வேகமும் கொண்டது, இதர நாரைகளால் பிடிக்கமுடியாத மீன்களையும் பிடித்து கரையில் கொண்டு போட்டு வேடிக்கை காட்டுமளவு பலமானது.

மீன்கள் எப்பொதும் விழிப்பானவை, அவைகளுக்கு நீரில் மேல் விழும் நிழலிலே தன் ஆபத்தை அடையாளம் காணமுடியும், அவற்றின் உள்ளுணர்வு அதிகமானது.

அப்படியான மீன்கள் பொதுவாகவே யாரை கண்டாலும் அசையும் எதை கண்டாலும் ஓடும், அவை அப்படி அஞ்சி அஞ்சி ஓடுவதை கண்டும், பதறி ஓடும் அவைகளை விரட்டி விரட்டி பிடிப்பதிலும் இந்த நாரைக்கு ஓர் ஆனந்தம்.

இந்த தடாகத்தின் எல்லா மீன்களையும் தான் மிரட்டி வைத்திருப்பதாகவும், தான் நினைத்தால் எதையும் கொத்திச் செல்லமுடியும் எனும் அகந்தை அதற்குள் வந்தது.

அந்த நாரை பூர்வஜென்மத்தில் சிவபக்தி கொண்டிருந்த ஆத்மாவின் மறுபிறப்பு. ஆனால், இப்பிறப்பில் எல்லா உயிர்க்கும் போல அது அதற்கு மறைக்கப்பட்டு இருந்தது.

பூர்வஜென்ம தொடர்புபடியே சூழலும் வாழ்வும் அமையும். அதற்கேற்பவே சூழல் மாறும். அதுதான் விதி. அதற்குத்தான் சூழ்நிலையும் ஒத்துழைக்கும்.

அப்படி அந்தத் தடாகம் கோடையால் வற்ற தொடங்கிற்று. கொஞ்சம் கொஞ்சம் சுருங்கிய தடாகம் முழுக்க வற்றிப்போனது. மீன்களெல்லாம் செத்து ஒன்றுமில்லா நிலமாக அது வெடித்துக் கிடந்தது.

நீரை நம்பித்தான் மீன்கள் வாழும். அதை நம்பித்தான் அந்த பறவைகளும் வாழும், நீரற்ற குளத்தில் இருந்து பறவைகள் “அற்ற குளத்தின் அறுநீர் பறவை” என ஓடிவிடும். இந்த நாரையும் அப்படி பறந்தது.

பறவைகள் விலங்குகளுக்கு ஒரு சக்தி உண்டு. நீர் இருக்கும் இடத்தினை அவை காற்றில் இருந்தே கண்டுகொள்ளும், சில நுணுக்கமான வாசனைகள் காற்றின் பதம் பொறுத்து அவை மோப்பம் பிடித்துவிடும்.

அப்படி இந்த நாரையும் நல்ல நீர்நிலை தேடிச் சென்றது. ஒரு மலையடிவாரத்தில் ஒரு அடர்ந்த காட்டுக்குள் ஒரு தடாகத்தை கண்டது.

அந்த மரத்தில் சென்று பல பறவைகளுடன் அமர்ந்தும் கொண்டது. அந்த குளத்தில் கெழுத்தி, கெண்டை , அயிரை, கெளிறு, உளுவை, விலாங்கு என வகை வகை மீன்களாக துள்ளின‌.

சில நாட்களாக பசியில் துடித்த நாரை வேக வேகமாக அவைகளை பிடித்து உண்டது. பசி தீர தீர வேட்டையாடியது. அந்த மீன்கள் இந்த நாரையினை கண்டாலே அஞ்சி ஓடும் அளவு அந்த தடாகத்தை ஆட்டிவைத்துக் கொண்டிருந்தது.

அந்த தடாகத்துக்கு ரிஷிகள் கூட்டம் வந்தது. அவர்கள் காட்டில் குடிகொண்டு தவம் செய்யும் முனிவர்கள், அவர்களில் மூத்த முனிவர் சத்தியன். அவர்தான் தலைமை முனிவர், அவர் தன் சீடர்களோடு தீர்த்த யாத்திரை செய்துக் கொண்டிருந்தார்.

செல்லும் வழியில் நீர்நிரம்பிய இடம் இருந்தால் அங்கே நீராடி திருநீறு தரித்து கொஞ்ச நேரம் சிவபெருமான் பெருமை, அவர் ஆலய பெருமையெல்லாம் பேசிவிட்டு அவர்கள் பயணத்தை தொடர்வது வழமை.

அப்படி அந்த தடாகத்திலும் நீராட வந்தார்கள். குரு நீராடும் போது மாணவர்கள் உள்ளே இறங்குவதில்லை.

குரு சத்தியமுனி நீராட இறங்கும் போதுதான் நாரை அந்த அதிசயத்தை கண்டது, வழமையாக ஒரு விலங்கு நீர் குடிக்க வந்தாலே பதறி ஓடும் மீன்கள் அவர் காலடி பட்டதும் வந்து சூழ்ந்து கொண்டன‌.

அவர் நீராடும் போது மீன் கூட்டம் மொத்தமாக வந்து அவரை சூழ்ந்து கொஞ்சிற்று, அவரின் முகத்தினை சுற்றி சுற்றி வந்தன. அவர் உடலோடு உரசின. அவரின் கூந்தலுக்குள் வலையாக இருக்கலாம் என்று கூட எண்ணாமல் நெளிந்து புகுந்து விளையாடின‌.

அவரைக் கண்டு தவளைகள் சத்தமிட்டன, அதைக் கண்ட பாம்பினம் வெளிவந்து அவரை நோக்கி அப்படியே ஸ்தம்பித்து நின்றது, முதலைகள் அவரை கண்டு மரகட்டை போல் கிடந்தன‌.

கொஞ்சமும் அச்சமில்லாமல் வளையில் இருந்து வெளிவந்த நண்டுகள் தங்கள் கொடுக்குகளினால் அவரை வணங்கின‌.

இதைக் கண்ட நாரைக்கு ஆச்சரியமே மிஞ்சிற்று, அதற்கு முட்டையில் இருந்து வந்தநாள் முதல் அது அறிந்ததெல்லாம் மீன்கள் அஞ்சி அஞ்சி ஓடும், தவளை பதுங்கும், நண்டு வளைக்குள் கிடக்கும் என்பது.

அதுவும் மனிதர்களை கண்டால் அவை மிக மிக பதற்றமாகி ஒளிந்துகொள்ளும், அப்படியான நிலையில் ஒரு மனிதனை கண்டு எல்லா ஜீவராசிகளும் இப்படி அன்போடு உறவாடுகின்றன, அச்சமின்றி உறவாடுகின்றன என்றால் இவர் எப்படிப்பட்ட சக்திகொண்டவராக இருக்க முடியும்?

வழக்கமாக நீராட வருபவர்கள் நீராடுவார்கள், சிலர் துணியில் மீன்பிடிப்பார்கள், சிலர் வலையில் பிடிப்பார்கள் யாராயினும் கிடைத்த மீனை அள்ளிச் செல்வார்கள்.

இவர் யார்? தன் நீண்ட கொண்டையில் மீன் பிடிக்கும் அளவு அவைவந்தபின்னும், அவை தன்னை சுற்றி சுற்றி வரும்போதும் அன்போடு புன்னகைத்து விலகி செல்கின்றார்?

எவ்வளவு புண்ணியவானாக இவர் இருத்தல் வேண்டும் என அது கூர்மையானது.

அவர் நீராடிவிட்டு வந்து சிவநாமம் சொல்லியபடி திருநீறு இட்டுக்கொண்டார், சூரியனை வணங்கினார், பின் கண்களை மூடி தியானத்தில் அமர்ந்தார், அவரின் வாய் மட்டும் “ஓம் நமசிவாய” என சொல்லிகொண்டே இருந்தது.

அப்போது சீடர்களும் நீராடிவிட்டு திருநீறெல்லாம் விட்டு அவர் முன் வந்து அமர்ந்தார்கள். கண் விழித்தவர் மதுரை சொக்கநாதர் பெருமைகளை சொல்லத் தொடங்கினார். அந்த சுந்தரேஸ்வரர் எப்படியானவர்? அவரின் அன்பு என்ன? கருணை என்ன? அவர் எல்லா உயிர்களிலும் இருக்கின்றார், எல்லா உயிர்களுக்கும் படியளக்கின்றார், அவராலே எல்லாம் இயங்குகின்றது, அவரை உணர்ந்து அடைதலைவிட உயிர்களுக்கு வேறு கதியில்லை, அவர்பாதம் அடையாத ஆத்மா மீண்டும் மீண்டும் பிறக்கும்.

என் அருமை சீடர்களே, நாம் அந்த ஆலயத்துக்குத்தான் செல்லப் போகின்றோம், அந்த சிவன் பாதம் உஙகள் மனதை சரணடையச் செய்து அவரையே தியானித்து இப்பிறப்பில் இருந்து விடுபடுங்கள், இல்லையேல் இந்த உலகில் புல்லாய் பூண்டாய் மரமாய் மீனாய் பறவையாய் வந்து படாதபாடுபடுவீர்கள், சிவனை அடையும் வரை இந்த சுழற்சி தொடரும்”

இதை கவனமாக கேட்டுக்கொண்ட நாரை தன் பூர்வ ஜென்ம பலனாய் சிந்தித்தது.

“அப்படியானால் நான் நாரையாக வந்து இப்படி குளம் குளமாய் அலையவும், மீனுக்காய் திரியவும் என் முன் ஜென்ம வினை காரணம், அதுதான் காரணம்.

சிவன் எல்லா உயிர்களிலும் இருக்கின்றார், இதை உணர்ந்தால் எல்லா உயிர்களையும் நேசிக்கமுடியும்.

இதோ இவரே சாட்சி, கண்முன் கண்ட சாட்சி. மீன்கள் இவர்மேல் ஓடி வந்து குவிகின்றது என்றால் எவ்வளவுக்கு அவர் அன்பானவராக இருத்தல் வேண்டும்? இவரே அன்பானவர் என்றால் அந்த சிவன் எவ்வளவு அன்பானவராக இருத்தல் வேண்டும்.

அன்புதான் சிவம், அந்த அன்புதான் அந்த பரம்பொருள், அவரிடம் சென்றால் எல்லா துன்பமும் தீரும். மீன்களை விரட்டி விரட்டி பிடித்த நான் இப்படி மீன்களே தேடிவந்து பணியும் மகானை கண்டு அதிசயிக்கின்றேன்.

இனி இவரே என் வழிகாட்டி, இவர் பின்னால் நான் செல்வேன் அந்த மதுரையம்பதியினை அடைவேன், அந்த சிவனை தரிசித்து வணங்குவேன்.

இவர்கள் வழியே என்வழி, இனி நான் உயிர்களை கொல்வதில்லை, எல்லாமே சிவவடிவம் எனும் போது அதை கொல்ல நமக்கு என்ன உரிமை உண்டு, இனி மீன்களை உண்ணமாட்டேன்” என சொல்லிக்கொண்டது.

அதன்படி அவர்களை பின் தொடர்ந்தது, அதற்கு பசிக்கும் போதெல்லாம் நீர் அருந்தியது சில கனிகளை கொத்திபார்த்தது. முன்பின் அறிந்ததில்லை என்றாலும் கொஞ்சம் முயற்சித்து தோற்றது.

ஓரிரு நாட்களில் அந்த முனிவர் கூட்டம் மதுரையம்பதி சொக்கநாதர் ஆலயத்தினை அடைந்தபோது அது ஒரு கணம் அப்படியே மரத்தில் அமர்ந்து அந்த ஆலயத்தையே நோக்கியது.

“இதுதானா அந்த பரம்பொருள் குடியிருக்கும் ஆலயமா?, இந்த சிவபெருமானேதான் எல்லா உயிர்களையும் படைத்து காத்து படியளக்கின்றாரா?

இவரிடம் அடைக்கலமானால் எல்லா துயரும் தீருமா? எல்லா சிக்கலும் முடிந்து பிறப்பில்லா நிலை கிடைக்குமா?, நமக்கு அதெல்லாம் தெரியாது நாரையாக பிறந்து குளம் குளமாக அலைந்து ஏகப்பட்ட மீன்களை கொன்ற இந்த வாழ்வு இன்னொரு பிறப்பில் வேண்டாம், எது என்றாலும் அந்த நாதனே முடிவு செய்யட்டும்” எனச் சொல்லிக்கொண்டது.

பின் அது மெல்ல அந்த ஆலயத்தில் நுழைந்தது, அப்பொது அதன் உடல் சிலிர்த்தது.

அக்காலத்தில் பொற்றாமரை குளத்தில் ஏகப்பட்ட மீன்கள் இருந்தன. வகை வகையான மீன்கள் துள்ளி குதித்து கொண்டிருந்தன, இதனால் பறவைகளும் இருந்தன,கொக்கு நாரை எனப் பலவகை பட்சிகள் இருந்தன‌.

அவை இந்த நாரையினை புதிய பறவையாக கண்டன, அங்கு இவை இயல்பாய் இருந்தன‌.

இது மீனுக்காய் வந்த நாரை அல்ல, சிவனுக்காய் வந்த நாரை என்பது அவைகளுக்கு தெரியவில்லை.

நாரை பொற்றாமரை குளத்தில் மூழ்கி குளித்தது, வாழ்வில் முதல் முறையாக மீன் இல்லாமல் எழும்பியது. பின் நேராக சொக்கநாதர் சன்னதிக்கு சென்றது, அந்த சொக்கநாதரையே பார்த்துக் கொண்டிருந்தது.

அங்கே பூஜைகள் வழிபாடுகள் நடந்தன, அதை கண்கொட்டாமல் பார்த்து கொண்டே இருந்தது பின் சுற்றி சுற்றி பறந்து வணங்கி பின் மரத்தில் வந்து அமர்ந்து கொண்டது.

அதற்கு மனம் நிறைய தொடங்கியது ஆனால் வயிறு பசிக்க தொடங்கியது, அந்த சிறிய பறவையின் சிறிய வயிறு நெடும்பசி தாங்கமுடியாது.

முனிவரை கண்ட நாள்முதலாய் அது மீன்களை உண்பதில்லை, நீர் புசித்து போராடியது. இப்போது உடல் தளர ஆரம்பித்தது.

அதற்கு கனி தின்று பழக்க்கமில்லை, காகம் போல் எல்லாம் தின்னவும் தெரியாது, அது தடுமாறி தடுமாறி கிடைத்த சாத்வீக உணவை உண்டு பார்த்து தோற்றது.

அந்நிலையிலும் அது ஆறுகால பூஜைக்கும் சிவன் முன்னால் சென்று அமர்ந்தது, சன்னதி திரையிடும் வரை சிவனையே பார்த்துகொண்டிருக்கும், பின் மரத்துக்கு வரும்.

பூஜை தொடங்கும் போது மீண்டும் செல்லும்.

இப்படியே 14 நாட்கள் சென்றன. அதன் உடல் தளர்வுற்றது, அதனால் பறக்க முடியவில்லை ஏன் மரத்தில் அமர கூட முடியவில்லை.

அந்நிலையிலும் பூஜையினை காண தயாராகும்படி குளத்தில் குளிக்கவந்த நாரை மேற்கொண்டு முடியாமல் அப்படியே விழுந்துவிட்டது.

ஏற்கனவே இதை கண்காணித்த சகநாரைகள் இப்போது வந்து அதன்முன்னால் நின்று கேட்டன, “நாரையே யார் நீ, இங்கு மீன்களை உண்பதை தவிர எதற்காக வந்தாய்? அவசியமே இல்லையே? நாங்கள் நீ மீன் உண்டு பார்த்ததே இல்லையே, இப்போதும் பசியால்வாடி கிடக்கின்றாய், என்ன சிக்கல் உனக்கு? எனக் கேட்டன‌.

நாரை மெல்ல சொன்னது, “நான் சிவனை தரிசிக்கவந்தேன், அனுதினமும் பூஜிக்கின்றேன். அவர் அருள் வேண்டி நிற்கும் நான் இன்னொரு உயிரை இம்சிக்கமுடியாது, என் பசிக்காக கொல்லமுடியாது.

நாரைகள் ஆச்சரியமாயின, விவாதம் நடந்தது.

“என்ன சொல்கின்றாய்? உன்னை நாரையாக படைத்ததே அவனல்லவா? உன் பிறப்பே மீன்களை கட்டுப்படுத்தும் கர்மம் அல்லவா?

அதனால்தானே உனக்கு சிறகும் மீன்பிடிக்கும் கலையும் கிடைத்து நாரையாய் பிறந்திருகின்றாய். அதைச் செய்யாமல் ஏதேதோ பேசுகின்றாய், இந்த குளத்திலே சிவன் மீன்களை அனுமதித்திருக்கின்றார் என்பதை கூட புரிந்துகொள்ளவில்லையா? இது உன் கர்மா, இதுதான் உன் பிறவிவேலை இதுதான் உன் வாழ்வு , சாப்பிடு” என்றன‌.

“என் வாழ்வும் பிறப்பும் இதுவரை எதுவாகவும் இருக்கலாம், இனி பிறப்பெடுக்க விரும்பேன். இனி ஒரு உயிரை இம்சிக்கமாட்டேன். சிவனை கண்டு மோட்சம் அடைவதை தவிர ஆசையில்லை. ஒருவேளை நான் இறந்தாலும் அடுத்த பிறப்பிலாவது அவரை அடைவேன்” என்றது.

நாரைகள் விடவில்லை தொடர்ந்தன, “இதோபார் தன்னை வதைத்து சாகுதல் இறைவனுக்கு பொறுக்காது, சரி நீ மீன்களை கொல்லவேண்டாம், நாங்களே பிடித்து கொன்று தருகின்றோம், பாவம் எங்களுக்கு வரட்டும் நீ சாப்பிடு ” என்றன‌.

“மாட்டேன், என்னால் இனி ஒரு மீனை கொல்லமுடியாது, சிவனை மனமார ஏற்ற ஒரு உயிர்க்கு இன்னொரு உயிரை பறித்து உண்ணும் மனம் வராது” எனச் சொல்லிவிட்டு தரையில் தலையினை வைத்துக் கொண்டது.

சக நாரைகள் அதை திட்டிவிட்டு பறந்தன, ஒரு சில நாரைகள் சில மீன்களை பிடித்துவந்து அவை முன் இட்டுவிட்டு “உண்ணவேண்டுமென்றால் சாப்பிடு இல்லையேல் விடு” எனச் சொல்லிவிட்டு சென்றன‌.

முடியாத நிலையிலும் தட்டு தடுமாறி எழுந்த நாரை, தன் அலகால் அங்கு துள்ளிய மீன்களை பிடித்து நீருக்குள் மீண்டும் இட்டது, பின் மெல்ல சில அடி எடுத்து சிவன் சன்னதி நோக்கி தலைவைத்து வீழ்ந்தது.

பதினைந்தாம் நாள் வந்தது. நாரைக்கு நினைவு மங்கிற்று அதன் சாவு நெருங்குவதை அறிந்து கண்களை மூடிகிடந்தது.

உடல் வற்றி சுருங்கி, கண் பாதி திறந்து தன்னை நோக்கி கிடந்த நாரையினை நோக்கி சிவனே தேவியுடன் வந்தார். ஒன்றுமே இல்லாமல் கிடந்தால் பட்டினி எனலாம். ஆனால், குளம் நிறைய மீன் இருந்தும் தனக்காக நாரை கிடக்கும் கோலம் கண்டு இரங்கிய எம்பெருமான் அதன்முன் நின்றார்.

ஏதோ பிரகாசமான ஒளியும் பெரும் ஆனந்தலயமும் கண்ட நாரை கண்விழித்து அவரை கண்டு ஆனந்தமாய் அழுது வணங்கியது.

சிவன் கேட்டார் “நாரையே, உனக்கு என்னவரம்வேண்டும், இங்கே என்ன வேண்டுதலோடு வந்தாய்?”

நாரை சொன்னது, “எம்பெருமானே உம்மை கண்டபின் என்ன வேண்டும் எனினும் இரு வரங்கள் வேண்டும் தருவீரா?” என்றது.

“நிச்சயமாக ” என்றார் சிவன்.

“பெருமானே, நான் உம் கைலாய சிவனடியார்களில் ஒருவராக அமர்ந்து காலம் காலமாக உன் பாதம் பணிந்திருக்க வேண்டும் இது முதலாவது.

இரண்டாவது, அன்பின் அடையாளமாகவும், கருணையின் உறைவிடமாகவும் நீர் வாழும் ஆலயம் இது, உம் அடியார்களும் அப்படியே இங்கு வருகின்றார்கள். அந்த அன்பான தலத்தின் இந்த குளத்தில் மீன்கள் வசிபப்தும் அவற்றை கதற கதற நாரையும்கொக்கும் விழுங்குவதும் சரியா?

உன் சன்னதியில் இருக்கும் குளத்தில் மீன் எனும் உயிரின் வதை நடக்கலாமா? அது இந்த மகாஷேத்திரத்துக்கு தகுமா? அதனால் இங்கு உம் அன்பும் கருணையும் விளங்கும்படி எல்லா உயிரும் அச்சமின்றி வாழமட்டும் முடியும் எனும் பெயர் விளங்கும்படி இந்த பொற்றாமரை குளத்தில் மீன் உயிர்கள் இல்லாத வரமருள்வீர்” என்றது.

புன்னகைத்த சிவன் அப்படியே ஆகட்டும் எனறார், உடனே அந்த நாரை ஒரு பூதகணமாக மாறியது. அது சிவனை பணிந்தது. அந்நேரம் வானில் இருந்து ஒரு தேர் வந்து அதனை சிவலோகம் அழைத்துச் சென்றது.

சிவன் அந்த நாரை வேண்டியபடி பொற்றாமரை குளத்தை நோக்கி கையினை உயர்த்தினார். அங்கிருந்த மீன்களெல்லாம் மறைந்தன, அதன்பின் அது மீன்கள் இல்லா குளமாயிற்று.

இன்றுவரை அந்த குளத்தில் மீன்கள் வசிக்காது, வராது. அந்த ஆலய பொற்றமரை குளத்தின் பெருமையும் சிறப்பும் அது.

இதுதான் நாரைக்கு சிவன் முக்தி அருளிய திருவிளையாடல். தன் முற்பிறவி தொடர்ச்சியாக நாரையாக பிறந்த ஒரு ஆத்மா முக்திபெற்று சென்ற நிகழ்வு அப்படியே இனி ஒரு மீனை கொல்லக் கூடாது என வரம் வாங்கி சென்ற பெரும் நிகழ்வு.

இன்றுவரை சாட்சியாக பொற்றாமரை குளம் மீன் இன்றி நிற்க காரணமான பெரும் திருவிளையாடல்.

நாரை முக்தி அடைந்தது என ஒருவரியில் சொல்லி செல்லும் விஷயம் அல்ல, முக்தி அடைய என்ன வழி என மானிடர்க்கு ஒரு நாரை மூலம் சிவன் காட்டினார், போதித்தார்.

நாரைக்கு முக்தி அருளினார் சிவன் என்பது ஒவ்வொரு மானுடர்க்கும் முக்தி அடைவதற்கான பெரும் போதனை, அங்கே மறைவாக போதிக்கப்படும் தத்துவம் அவ்வளவு ஆழமானது.

அந்த நாரை என்பது ஆத்ம தத்துவம், மீன்கள் என்பது ஆசை மயக்கங்கள், எப்போதும் மானிடன் அடைய விரும்பும் ஆசைகள் தேவைகளின் மயக்கங்கள்.

அந்த நாரை பூமியில் வாழ அந்த ஆசைதான் காரணமாக இருந்தது. அது வெறும் மாயையாய் இருந்தது. உண்ண உண்ண பசித்து அதற்கு மீனை நாரை பிடித்து கொண்டே இருந்தது என்பது ஆசைகளில் மானுட ஆத்மா வீழ்ந்து கிடக்கின்றது, மீன் பின்னால் நாரை ஓடியது போல ஆசைகள் பின்னால் மானுடன் ஓடிக்கொண்டே இருக்கின்றான் என்பதை சொல்கின்றது.

மீன் மேலான பற்று இருந்தவரை நாரை சிவனை நினைக்கவில்லை, எப்போது அந்த பற்று அறுந்ததோ தான் கொண்டிருப்பது மாய ஆசை எனும் பற்று அறுந்தோ, அந்த இடத்தில் அது சிவனை பணிந்தது.

அங்கும் பல நாரைகள் அதை சோதித்தன என்பது வகை வகையான ஆசை மாயசோதனைகள்.

நாரை மீனினை வெறுத்து சிவன் பாதம் பற்றி மோட்சம் அடைந்தது என்பது ஆசைகளை அறுத்த ஆன்மா இறைவனை அடையும் எனும் பெரும் தத்துவத்தை சொல்கின்றது.

புவிஈர்ப்பு விசை எல்லா பொருளையும் பூமிமேல் இழுத்து வைப்பதை போல, பெரும் ஆசைகள் ஆத்மாவினை இங்கே பிடித்து வைக்கும்.

நாரை மீன்களுக்காக குளத்துகரையில் இருந்தது என்பது ஆசைவயப்பட்ட ஆன்மா லௌகீக வாழ்வில் அடிமையாக இருக்கின்றது என்பது, நாரை தேடித் தேடி மீன்களை பிடித்தது என்பது மானுடன் ஏதோ ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டே இருக்கின்றான் ஆத்மா எதனெதன் பின்னாலோ அலைவதை சொல்கின்றது.

அடியாரிடம் அந்த மீன்கள் அடங்கி கிடந்தது என்பது ஆசைகள் என்பவை அது பணமோ புகழோ செல்வாக்கோ எதுவோ தேடினால் ஓடிக்கொண்டே இருக்கும், யார் அவற்றை தேடவில்லையோ அவர்கள் காலடியில் கிடக்கும் என்பதை சொல்கின்றது.

பணத்தை புகழை தேடுபவனுக்கு அது தூர தூர ஓடிகொண்டே இருக்கும்.‌ யார் அதை வெறுத்தார்களோ அவர்கள் காலடியில் அது கிடக்கும்.

தினம் தினம் பணம் என அலையும் உலகில் யோகியர் ஞானியர் காஞ்சியில் வாழ்ந்த மஹாபெரியவர் என அவர்கள் காலடியில் குவிந்த பணம் ஏராளம்.

அவர்களோ அதை துரும்பென்று எண்ணி கடந்துச் செல்வார்கள்.

இதைத்தான் அந்த நாரை வாழ்வில் வரும் சத்திய முனிவர் வாழ்வு சொலகின்றது, எந்த இடத்தில் தேடுவதை நிறுத்தி கைவிடுகின்றோமோ, இது இனி வேண்டாம் என எங்கு ஞானத்தை தொடங்குகின்றோமோ அதன் பின் தேடிய விஷயமெல்லாம் காலடியில் கிடக்கும் அதையும் தாண்டி செல்வதுதான் ஞானம்.

நாரை வாழ்வு அதைத்தான் சொல்கின்றது.

அது இன்னும் ஆழமாக அழுத்தமாக சொல்கின்றது.

எல்லா ஆத்மாவும் ஒரு ஆசைக்கும் பற்றுக்கும் கட்டுப்பட்டு கிடக்கின்றது, அதை அறுத்தால் அதன் மேலான பற்றை அறுத்தால் ஈசனை அடையலாம்.

அதுவும் ஒரு பற்றை அறுத்தபின்னால் உடனே ஈசனை அடையாலம் என்பதல்ல அங்கேதான் சோதனைகள் வாய்க்கும்.

நாரை மீன்களை வெறுத்தபின் உடனே மோட்சம் கிட்டவில்லை. கிட்டதட்ட அது 15 நாட்கள் சோதிக்கப்பட்டது, அது கடும்பசியில் இருந்தபோது கண்ணெதிரே மீன்களிருந்த போதும் சகநாரைகள் அதனை வற்புறுத்தியபோதும் நாரை அதை தொடவில்லை.

சோதனைகளை தாங்கி வைராக்கியமாக தன் ஆசைகளை வென்ற நாரை முக்தி அடைந்தது. அப்படி ஆசைகளை கைவிட்ட மானுடன், சோதனையிலும் வைராக்கியமாக நின்ற மானுடன் முக்தி அடைவான் என்பது நாரையின் வாழ்வு சொல்லும் தத்துவம்.

சமஸ்கிருத ஸ்லோகங்களில் பற்றருக்கும் ஸ்லோகம், பற்றினை அறுத்து ஆசை அறுத்து ஞானம் பெற வழி சொல்லும் ஸ்லோகம் நிறைய உண்டு, கீதையிலே அதற்கான உதாரணம் உண்டு.

கீதையின் பதினெட்டாம் அத்தியாயத்தில் உள்ள 66வது ஸ்லோகம் அதனை தெளிவாகச் சொல்லும்.

“சர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் சரணம்
வ்ரஜ அகம் த்வாம் மோட்சயின் மாசுச ” என்பது அந்த ஸ்லோகம்.

“எல்லா தர்மமான வழியிலும் உன்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் விட்டுவிட்டு, என்னை மட்டும் சரணடை. நான் உன்னை எல்லா பாவங்களில் இருந்தும் விடுவிப்பேன் வருந்தாதே” என்பது அந்த ஸ்லோகத்தின் பொருள்.

கீதையின் “ஏழாம் அத்தியாயமான விஞ்ஞான யோகம்” என்பதன் சில வரிகளை இங்கே காணலாம். இந்த பாடலுக்கு அது மிக மிக பொருத்தமானது.

“த்ரிபி ர்கு ணமயைர்பா வைரேபி ஸர்வமிதம் ஜகத்
மோஹிதம் நாபிஜாநாதி மாமேப்ய பரமவ்யயம்
தைவீ ஹ்யேஷா குணமயீ மம மாயா துரத்யயா|
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாமேதாம் தரந்தி தே”

மூவகை குணங்களால் இவ்வுலகமெல்லாம் மயங்கிப் போய், இவற்றினும் மேலாம் அழியாத இயல்பு கொண்ட என்னை உணராதிருக்கிறது, இவை எல்லாம் மாயை, இந்த மாயை கடத்தற்கரியது. என்னையே யாவர் சரணடைவரோ அவர்கள் இந்த மாயையைக் கடக்கின்றார்கள்” என்பது பொருள்

எல்லா துன்பங்களின் வேரும் தொடக்கமும் பற்றும் பந்தமுமாய் இருக்கின்றது, செல்வத்தை திரட்டவும் காக்கும் ஆசை, பந்தங்களை பிணைக்கவும் காக்கவும் வரும் ஆசையே எல்லா வாழ்வின் போராட்டத்துக்கும் காரணமாகின்றது.

அந்த மூல காரணத்தை வெட்டினால் , எது பாசபந்தமாக பிடித்து வைத்திருக்கின்றதோ அதை வெட்டினால் எல்லா வேதனையும் போராட்டமும் முடிந்துபோகின்றன.

ஆசைகளற்ற இடத்தில் தேவைகள் எதுவுமில்லை, எதுவுமில்லா இடத்தில் காவலும் தேடலும் போராட்டமுமில்லை
அங்கே முக்தி சாத்தியமாகின்றது.

எதெல்லாம் உன்னை இந்த உலகில் பிடித்து வைத்திருக்குமோ, எதன் மேலெல்லாம் பெரும் ஆசை வைத்திருப்பாயோ அதையெல்லாம் விட்டுவிடு, எல்லாவற்றையும் தர்மவழியில் துறந்துவிடு, எல்லா கர்மங்களையும் விட்டுவிட்டால் அந்த மகா பாக்கியமான முழுமுதல் நிறைவான முக்தி நிலை வாய்க்கும் என்பது இந்த திருவிளையாடலின் போதனை.

காசிக்கு செல்பவர்கள் தனக்கு பிடித்த ஏதோ ஒன்றை விட்டுவிட்டு வருதல் அவசியம் என்பது விதி. அதன் பொருள் எது நம்மை இந்த பூமியில் வாழ பிடித்துவைக்குமோ எதன் மேல் அதிக பற்றை வைத்திருப்போமோ அதிலிருந்து நம்மை விடுவிக்கும் போது ஞானம் வாய்க்கும், ஞானம் முக்தி அளிக்கும் என்பது.

அதைத்தான் நாரையின் வாழ்வும் முக்தியும் போதிக்கின்றது.

மிக முக்கிய தத்துவம் சிவன் எல்லா உயிரிலும் உண்டு, தன் உடலை வளர்க்க இன்னொரு உயிரை கொல்வதை எக்காலமும் இந்துமத ஞானம் அனுமதிக்கவில்லை.

அதே மதுரை ஆலய தமிழ்சங்கத்தில் அரங்கேறிய வள்ளுவன், ஒளவை என எல்லா ஞானியரின் இந்து நூல்களும் புலால் மறுப்பையே பேசின‌.

அதன் மூலம் இந்த பொற்றாமரை குளத்தில்தான் உண்டு, நாரை தன் இயல்பினை மீறி மீன்களை தொடாமல் விலக்கி முக்தி அடைந்தது என்பதை சொல்லும் அக்குளம், இந்துமதம் உயிர்களை கொல்வதை பாவம் எனக் கருதி விலக்கிவைத்ததை சொல்கின்றது.

பின் எப்படி புலால் மறுத்த வள்ளுவனின் குறள் அந்த பொற்றாமரை குளத்தில் மிதக்காமல் இருக்கும்?

ஆம். அந்த பொற்றாமரை குளத்தில் இன்றும் மீன்கள் இல்லை என்றும் மீன்கள் இல்லை என்பது இந்த நாரையின் தவத்தால் வந்த அதிசயம், அந்த சாட்சிதான் இந்துமதம் உயிர்பலிகளை உயிர்வதையினை முழுமையாக விலக்கி இருந்தது என்பதற்கும், அன்பே சிவம் எல்லா உயிர்களையும் நேசித்தால் அவற்றை அன்போடு நடத்தினால் தன்னை போல் நடத்தினால் முக்தி உறுதி என்பதை சொல்லும் பெரும் சாட்சியாகவும் நிற்கின்றது.

திருவிளையாடல் புராணம் 03 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா. 03 )
மாணிக்கம் விற்ற படலம்.

//ராசிக்கல் என்பதும் சக்திவாய்ந்த ரத்தினங்கள் என்பதும் மோசடி அல்ல, அது முழு பொய் அல்ல. அதில் பெரிய உண்மை இருந்தது. அறிவு, செல்வம், ஞானம், புத்தி, தெளிவு, ஆரோக்கியம் என எல்லாம் அவை பிரபஞ்சத்தில் இருந்து ஈர்த்து தருவதையும், அதனால் மானிடர்க்கு பல அசாத்திய பலன்கள் வருவதையும் அக்கால இந்து ஞானசமூகம் கணித்திருந்தது.

அவற்றை மந்திரம் மூலம் இன்னும் மேம்படுத்திக் கொடுத்தது. அதை அணிந்திருந்த அரசர்களின் ஆட்சியில் இநதுஸ்தானத்தில் செல்வம் கொழித்தது, அதைக் கொண்டு அந்த மணிகள் புதைக்கப்பட்டு அதன் மேல் எழுப்பப்பட்ட இந்து ஆலயக் கருவறைகள் சக்திமேல் சக்தி பெற்றன‌.

ரிஷிகள் ஞானியர் கூட சந்திரகாந்த கல், சூரியகாந்த கல், மரகதலிங்கம் என இந்தவகை கற்களை பயன்படுத்தி பலம் பெற்றார்கள். கோமதி கல்லில் வடிக்கப்பட்ட சிலை கூட சக்திவாய்ந்த கோமதி அம்மன் என்றாயிற்று.

இந்துக்களும் அதன் தேச மன்னர்களும் நவரத்தினங்களை அழகுக்காக ஆடம்பரத்துக்காக அணியவில்லை. அதில் பல சூட்சும சக்திகள் இருந்தன‌.

அந்நிய கொள்ளைக்கார கும்பலும், வியாபார கும்பலும் இதை அறிந்துதான் கொள்ளையிட்டன‌.

இந்திய அரசர்கள் ஆலயங்களின் வைரங்களும் ரத்தினங்களும் பல தேசங்களுக்கு கொண்டு செல்லப்பட்டபின்புதான் அந்த அரசுகள் எழும்பின‌.

அராபியா, பிரிட்டன் என எல்லாவற்றையும் கவனித்தால் அது தெரியும். அமெரிக்கா வரை அதுதான் நிலை. இந்து தேசத்தின் சக்திமிக்க நவரத்தினங்கள் பல இடங்களுக்கு சென்றபின்பே அவை உச்சம் பெற்றன‌.

கோஹினூர் என்றல்ல ஏகப்பட்ட வைரங்கள், நவமணிகள் இங்கிருந்து பல இடங்களுக்கு சென்றபின்பே அவை மிகப்பெரிய அதிகாரமையமாக உருவெடுத்தது.

நவரத்தினங்களின் சக்தி அது.

அவை நவகிரகங்களோடு தொடர்புபட்டவை, பிரபஞ்ச சக்திகளை ஈர்த்துத் தருபவை.

இந்த ரகசியத்தை இந்துக்களின் வழியான யூதர்கள் அறிந்திருந்தனர்; சாலமன் அதில் கரை கண்டிருந்தான்; வைரம் பட்டை தீட்டும் தொழில் முதல் அன்றே யூதர்களுக்கு அத்துப்படி.

அவர்கள் செய்த நவரத்தின நகைகளே ஜிவல்லரி என்றாயிற்று. இன்றும் யூத இனம் வலுவாக நிற்க அவர்களுக்கும் நவரத்தினங்களுக்குமான தொடர்பு முக்கிய காரணம். இன்றும் உலக வைர சந்தை, நவரத்தின சந்தை எது நல்ல மணி, எது போலி என வகையிடும் முக்கிய கை அவர்களுடையது.

அப்படியான நவரத்தின ரகசியங்களை முதன் முதலில் இந்துக்களுக்கு சிவனே மதுரையில் சொல்லிக்கொடுத்தார்.

நவரத்தின வகைகள், நவரத்தின் சக்திகள், நவக்கிரகத்துக்கும் அவற்றுக்குமான தொடர்புகள், அவற்றை தரம்பிரித்து அறியும் முறை, ராசிகள் பிரகாரம் அணிய வேண்டிய மணிகள், அவற்றுக்கான பூஜைவிதிகள் எனச் சிவனே கொடுத்தார்.

ஆம். சிவனே மானிடர்க்கு ராசிகற்கள் எனும் நவமணிகளின் இயல்பை அவசியத்தை விளக்கிச் சொன்னார். மதுரையில் தான் நடத்திய திருவிளையாடலில் அதை தெளிவாகச் சொன்னார்.

மக்களை வழிநடத்தவும் உலகுக்கு வழிகாட்டவும் பல சக்திகள் அவசியம். அந்த நல்ல சக்திகளை நல்ல பலன்களை ஒருவன் பெருக்கி சமூகத்தை காத்து நடத்துவது எப்படி என்பதை சிவனே சொல்லிக்கொடுத்து வழிகாட்டினார்.

அதுதான் மாணிக்கம் விற்ற லீலை.

மூன்றாம் நாளாக, அதை மதுரை ஆலய ஆவணி திருவிழாவில் கொண்டாடும் நேரம், அந்த திருவிளையாடலை காணலாம், அது ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய ஒன்று //

மாணிக்கம் விற்ற படலம்.

பாண்டிய நாட்டை மதுரையில் இருந்து ஆண்ட வீரபாண்டியன் மிகச் சிறந்த சிவபக்தன், சிவனுக்காகவே பாண்டியநாடு படைக்கபட்டிருக்கின்றது எனும்படி மதுரை சொக்கநாதர் ஆலயத்தினை கண்போல் நின்று காத்து அவர் பிரதிநிதியாக ஆண்டுக்கொண்டிருந்தான்.

அவனுக்கு இருந்த பெரும் குறையாதெனில் பட்டத்து ராணி மூலம் அவனுக்கு குழந்தைகள் இல்லை. அவன் இதனால் நிறைய அந்தப்புர பெண்கள் இன்னும் காமகிழத்தியருடன் கூடி பல மகன்களை பெற்றிருந்தான். ஆனால், ஏதும் உருப்படி இல்லை.

பொதுவாக அரசகுலத்தவனுக்கு அரசகுல பெண்மூலமாகத்தான் வாரிசுகள் வரவேண்டும், அதுதான் பரம்பரை அறிவு, குணம், குலப் பெருமை, அரசுஞானம் என எல்லா வகை அம்சங்களும் வரும். ஆனால் இங்கே மன்னன் தவறான முடிவெடுத்து எல்லாம் குழம்பிற்று.

காமகிழத்தியர் மூலம் வந்த மகன்களுக்கு பதவி ஆசை, பொருளாசை என எல்லா ஆசைகளும் நிரம்பியிருந்தன, தாய்வழி வந்த குணமாக அது அமைந்தது.

இதனால் பாண்டிய நாட்டுக்கு பொருத்தமான எதிர்கால மன்னனை வாரிசாக தரவேண்டி மன்னன் நிரம்ப வேண்டினான். சிவனருளால் பட்டத்து ராணிக்கு ஆண்மகவு உதித்தது.

மன்னனுக்கு வாரிசு வந்ததால் இனி தங்கள் மகன்களுக்கு வாய்ப்பில்லை என காமகிழத்தியரெல்லாம் கொதித்தனர். ஆனால், மன்னனை மீறி என்ன செய்துவிடமுடியும்.

இந்நிலையில் நாட்டுக்குள் ஒரு புலி வந்து அட்டகாசம் செய்தது. மன்னன் அதை கொல்ல சென்றபோது எதிர்பாராமல் இறந்தான்.

மன்னன் இறந்ததும் அமைச்சர்களும் ராணியும் மன்னனின் ஐந்துவயது மகனை அரசனாககும் வேலையினை தொடங்க, அதுகண்டு கொந்தளித்த காமகிழத்திகள் அரசனின் மணிமுடி இன்னும் கருவூல நகைகள், ரத்தினங்கள் என எல்லாம் கொள்ளை அடித்து ஓடிவிட்டனர்.

ரத்தினங்கள், நவமணிகள் என்பது ஒரே நாளில் வாங்கக் கூடியவை அல்ல, இவை பலப் பல தலைமுறைகளாக பலநூறு ஆண்டுகள் சேர்க்கப்பட்டவை, உடனே இனி வாங்கமுடியாது.

அதனிலும் முக்கியமானது மணிமுடி.

அது பலப் பல தலைமுறைக்கு முன் பசும்தங்கத்தில் நவமணிகள் பதிக்கப்பட்டு செய்யப்பட்ட கிரீடம். நவமணிகள் என்பதும், கிரீடம் எனபதும் வெறும் அழகோ அடையாளமோ அல்ல‌.

அது சூட்சுமமானது. பல வழி வழி ரகசிங்களை கொண்டது. கிரீடம் என்பது சூட்சும உடலின் சக்கரத்தை தொடும் அளவு உயரம் கொண்டதாக இருத்தல் வேண்டும்.

அதிலிருக்கும் நவமணிகளும் பழுதற்றதும், மிக மிக சுத்தமானதும், அரசனுக்கு எல்லா பிரபஞ்ச சக்திகளை பெற்றுதருவதுமாக இருத்தல் வேண்டும்.

கிரீடத்தை ஒரு பொற்கொல்லன் மட்டும் செய்யமுடியாது, அதில் வைக்கப்படும் ரத்தினங்களை சொல்ல யோக ஞானம், பிரபஞ்ச பெருஞானம் கொண்ட அனுபவஸ்தன் வேண்டும், அப்படி முன்பு இருந்தவனே ராஜகுரு.

நவமணிகள் என்பது நவக்கிரக ஆற்றலை பெற்றுத் தருபவை, அவை சரியாக அமைய சரியான மணிகள் அவசியம், அது கிரீடத்தில் பொருந்துமிடம் அரசன், ஆபரணங்கள், மோதிரங்களில் பொருந்துமிடம் மகா அவசியம்.

இந்துக்கள் நவமணிகளில் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் ரகசியம் அறிந்தவர்கள், அதனால் உலகிலே நவமணிகளை அதிகம் உடலில் அணியும் நாடாக இந்துஸ்தானமே இருந்தது.

இவைதான் ஆலயங்களில் சாமிசிலைகளுக்கு சாத்தப்பட்டு அந்த கருவறை சக்தியினை பெருக்கின, அவைதான் அரசனுக்கும் பெரும் சக்தியினை கொடுத்தன‌.

அவைதான் கல்வியாளர், அந்தஸ்தில் பெரியவர்கள் என எல்லோருக்கும் ஒவ்வொரு சக்தியினை வழங்கிற்று.

இந்த சூட்சுமம் அதாவது நவமணிகள் மூலம் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் ரகசியம் இந்துக்களுக்கு தெரிந்திருந்தது. மன்னர் குலத்துக்காக அது இன்னும் ரகசியமாக, சக்திவாய்ந்ததாக மறைக்கப்பட்டது.

அப்படி செய்யப்பட்ட கிரீடத்தைத்தான் இப்போது களவாடி சென்றுவிட்டார்கள். இதை வெளியில் சொன்னால் அவமானம். மணிமுடி என்பது நாட்டின் அடையாளம். ஒரு அரசன் இன்னொரு அரசனை வென்று அவன் நாட்டை கைப்பற்றும் போது மணிமுடியினைத்தான் முதலில் பறிப்பான்.

அப்படியான பெரும் அடையாளம் காணாமல் போனதால் அரண்மனை அதிர்ந்தது. ஒரு மகுடம் அவசரமாக செய்யலாமென ரத்தினங்களை தேடினால் அதுவும் இல்லாமல் எல்லாம் துடைத்து களவாடப்பட்டிருந்தது.

அவசரமாக ரத்தினங்களை வாங்கி செய்ய முடியாது. காரணம், நல்ல ரத்தினங்கள் என்பது உடனே கிடைக்காது. உலகின் பல பாகங்களில் இருந்து வாங்கி வாங்கி எத்தனையோ தலைமுறையாக சேமித்ததை இனி ஒரே நாளில் வாங்கமுடியாது.

ஆனால், அரசனுக்கோ மணிமுடி சூட்டியாகவும் வேண்டும்.

இதனால் இனி சிவனே பொறுப்பு என அரசியும் அமைச்சர்களும் அந்த ஐந்துவயது பாலகனோடு சென்று வணங்கி தங்கள் பரிதாப நிலை கண்டும் , சிவனாளும் பாண்டிய நாட்டின் துயரத்தையும் ஆபத்தையும் சொல்லி அழுதார்கள்.

எல்லா சோதனையும் தன் திருவிளையாடலை காட்ட எனப் புன்னகைத்த சிவன் அவர்களுகு அருள்புரிய சித்தமானார்.

அவர்கள் கோவிலை விட்டு வெளிவரும் நேரம் தோளில் மூட்டையுடன் ஒருவன் நின்றுகொண்டிருந்தான். அவன் காதினில் வைரம் மின்னியது; கழுத்தில் தங்கம் மின்னிற்று; கைகளில் ரத்தினங்கள் மின்ன மோதிரம் அணிந்திருந்தான்.

அவன் அமைச்சர்கள் முகத்தை ஏறிட்டு “என்ன பெரியோர்களே, ஏதோ கலக்கம் போலிருக்கின்றது” எனப் புன்னகைத்தான்.

அரசரகசியம் வெளிசொல்ல கூடாதது. ஆனால், அவன் முகத்தை நோக்கிய அமைச்சர்கள் அவன் நெற்றியில் மின்னிய திருநீற்றையும், கருணை பொங்கும் முகத்தையும் கண்டவர்கள் ஏதோ ஈர்ப்பால் பேசத் தொடங்கினார்கள், தலைமை அமைச்சர் சொன்னார்.

“ஒன்றுமில்லை, அரசனுக்கு மணிமுடி செய்யவேண்டும். ஆனால், அதற்குரிய ரத்தினங்கள் கிடைப்பதில் சிக்கல் என இழுத்தார்கள்.

அவன் சிரித்தபடி சொன்னான், “அய்யா, நான் ஒரு ரத்தின வியாபாரி. உலகின் தரமான ரத்தினங்கள் என்னிடம் உண்டு. நவமணிகளையும, அவற்றின் தன்மைகளையும் அதன் துல்லியத்தையும் அறிந்தவன் நான்.

நவரத்தின சூட்சுமம் அனைத்தும் தெரிந்தவன், அது தெரியாவிட்டால் எப்படி வியாபாரம் செய்யமுடியும்? நான் உங்கள் கவலையினை போக்க முயற்சிப்பேன்” என்றான்.

ஆலவாயன் வாசலில் நல்ல செய்தி கேட்ட அமைச்சர்கள அவனை யாருக்கும் தெரியாமல் அரண்மனைக்கு அழைத்துச் சென்று ரகசிய அறையில் அமரச் சொன்னார்கள்.

அவன் சற்று பொறுமையாய் இருந்தான். கைகளை மடக்கி கணக்குப் போட்டான், சாளரம் பக்கம் சென்று மரங்களின் நிழலை கவனித்தான்.

பின் வந்து அமர்ந்தவன், கண்களை மூடி பிரார்த்தித்துவிட்டு சொன்னான், “ம்ம்.. இனித் தொடங்கலாம்”

சொன்னவன் தன் மூட்டையினை பிரித்தான், நள்ளிரவு வானத்தைப் போல வகை வகையாய் நவரத்தினங்கள் அங்கே மின்னிக்கொண்டிருந்தன, அப்படி ஒரு பிரகாசமான நவமணி குவியலை யாரும் கண்டதில்லை.

எல்லோரும் வாயடைத்தனர். வானவில்லை இடித்துப் போட்டது போல் எல்லா நிற நவமணிகளும் அப்படி மின்னிகாகொண்டிருந்தன‌.

அவன் எட்டு மூலைகளில் எட்டுவகை ரத்தினங்களை வைத்து, நடுவில் மாணிக்கத்தை வைத்து நவமணிகளையும் புன்னகத்தபடியே விளக்கினான்.

அமைச்சர்களே, நவரத்தினம் என்பது பூமிக்கு வந்த கதை தெரியுமல்லவா, சிவபெருமான் இல்லையென்றால் இவை இல்லை, சிவபெருமான் வலன் எனும் சிவபக்தி மிகுந்த அசுரன் மூலமாக இவற்றை தன் சக்தி வெளிப்படும்படி லோக நலனுக்காய், மாந்தர் நலனுக்காய் கொடுத்தார் என்றான்.

அவர்கள் முன்பின் அந்த கதையினை அறிந்திருக்கவில்லை என்பதால் கேட்க ஆனந்தமானார்கள்; அவன் சொல்லத் தொடங்கினான்.

தேவர்களின் அரசனான இந்திரனுக்கு வலாரி என இன்னொரு பெயர் உண்டு அல்லவா? அந்தப் பெயர் எப்படி வந்தது எனக் கருதுகின்றீர்கள்? இதோ சொல்கின்றேன்.

வலன் எனும் அசுரன் காரணம் அவன் வல்லாசுரன் எனும் சக்திவாய்ந்த அசுரனை தந்திரமாக கொன்றவன், வலனை கொன்றதால் அவன் வலாரி.

வலன் எனும் அந்த அசுரன் சிவனிடம் வரம் பெற்றிருந்தான், அவன் மாபெரும் சிவபக்தன். அவன் தவம் சாகாவரம் பெறுவதாய் இருந்தது.

ஆனால், எல்லா பிறப்புக்கும் மரணம் தவிர்க்கமுடியாதது என்பதால் சிவன் அந்த உண்மையினை எடுத்துச் சொன்னார், அவனும் அதை ஏற்றுக்கொண்டு தன்னை போரில் யாரும் வெல்லக்கூடாது என்றும், தான் காலத்தால் சரிந்தாலும் தன் உடல் பொன்னும் மணியுமாக மாறும்படி வரம் வாங்கியிருந்தான்.

அதன்பின் அவனை வெல்வார் யாருமில்லை, எல்லா உலகங்களையும் வென்ற அவன் இந்திரனையும் தன் பொம்மைகளில் ஒருவனாக மாற்றியிருந்தான். அவனை வெல்வாரும், கொல்வாரும் யாருமில்லை எனும் நிலையில் அவன் அட்டகாசம் அதிகரித்தது.

இந்திரன் அவனை தந்திரமாக வீழ்த்த திட்டமிட்டு தான் பெரிய யாகம் செய்வதாகவும் அங்கு வலன் யாகத்திற்கான பொருளை தரும் பசுவாக வரவேண்டும் என யாசகம் கேட்டான்.

சிவபக்தனான அசுரனும் உடனே ஒப்புக்கொண்டு ஒரு பசுவாக மாறி யாகசாலைக்குச் சென்றான். யாக தீ முன்னிலையில் அந்த பசுவினை கட்டிவைத்து மூச்சடக்கி கொன்றான் இந்திரன்.

யாக தீக்கு கட்டுப்பட்டு வலன் நின்ற நேரம் அவனை அழித்தான் இந்திரன். அதன் பின் அந்த வலனின் உடல் நவமணிகளாக மாறி தேவலோகத்தை அலங்கரித்தன, வலனை வீழ்த்திய இந்திரன் வலாரி என்றானான்.

வீரத்தால் வீழ்த்தமுடியாத வலனின் பலவீனம் தானம், அந்த தானத்தினால் அவனை அழித்தான் இந்திரன்.

வலனின் ரத்தமே மாணிக்கமாயிற்று; பற்கள் முத்துக்களாயின; அவன் கரும் பித்தம் மரகதமாகவும்; நிணநீர் கோமேதகமாகவும்; தசைகள் பவளமாகவும்; மயிர் வைடூரியமாகவும்; எலும்பு வைரமாகவும்; கண்கள் நீலக்கல் மணியாக‌வும்; உடல் திரவம் புஷ்பராகமாகவுமாக மாறின‌.

அமைச்சர்களே, இனி நான் ஒவ்வொரு நவரத்தினமாக உங்களுக்கு விளக்குவேன், முதலில் மாணிக்கம் பற்றி பார்க்கலாம்.

மாணிக்கம் கிருதயுகம், திரேதாயுகம், துவாபரயுகம் கலியுகம் என்ற நான்கு யுகங்களிலும் முறையே மக்கம், காளபுரம், தும்புரம், சிங்களம் என்ற நான்கு இடங்களிலும் கிடைக்கும்.

(இங்கே சிங்களம் என்பது ஆசிய ஆப்ரிக்க நாடுகளை குறிக்கும் நிலபரப்புக்களை சொல்லும், இந்த யுகத்தில் இந்த இடங்களில்தான் வைரங்கள் அதிகம்.

முன்பு அது வேறு அண்டங்களில் உள்ளதை சொல்லும் விளக்கம் இது)

மாணிக்கம் என்பது தாமரை மலர், மாதுளம்பூ, மாதுளம்பழம், நெருப்பு தணல், செங்கழுநீர் பூ. மின்மினிப்பூச்சி, நரர்த்தம் பழம், தீபம், இந்திர கோபம் என்ற ஒன்பது வகை நிறங்களில் ஒன்றைப் பொதுவாக அது கொண்டிருக்கும்.

அந்த மாணிக்கத்தில் சாதரங்கம், குருவிந்தம், சௌகந்திகம், கோவாங்கம் என அது நான்கு வகைப்படும். மாணிக்கம் அந்தணர், க்ஷத்திரியர், வேளாளர், சூத்திரர் என்று நான்கு பிரிவுகளை போன்ற இயல்பைக் கொண்டது.

சாதரங்கம் என்னும் பதுமராகம் என்ற மாணிக்க வகை தாமரை மலர், கருநெய்தல் மலர், கதிரொளி, நெருப்பு, மின்மினி, மாதுளம் பூ, மாதுளை விதை, மேகம், தீபம், இந்திர கோபம் என்று சொல்லப்படும் பத்து வகை நிறங்களில் ஒன்றைக் கொண்டிருக்கும்.

குருவிந்தம் என்னும் இரத்த விந்து என்ற ஜாதி குன்றிமணி, முயல் இரத்தம், விளா மலர், பலாச மலர், மஞ்சாடி மலர், செவ்வரத்த மலர், முள்ளிலவ மலர், பொன் என்ற எட்டு வகை நிறங்களில் ஒன்றைக் கொண்டிருக்கும்.

சௌகந்திகம் என்னும் நீலகந்தி என்ற ஜாதி இலவ மலர், குயிலின் கண், அசோகந்தளிர், செம்பஞ்சு, பொன், மருதோன்றி என்னும் ஆறு வகை நிறங்களில் ஒன்றைக் கொண்டிருக்கும்.

கோவாங்கம் என்னும் படிதம் என்ற ஜாதி குராமலர், குசும்பை மலர், செங்கல், கொவ்வைக் கனி என்ற நான்கு வகை நிறங்களில் ஒன்றைக் கொண்டிருக்கும்

சாதரங்கம் எனும் பதுமராகம் மேற்புறமாக ஒளி வீசினால் உன்னதமானது , பக்கவாட்டில் ஒளி வீசினால் நடுத்தரமானது. கீழ்ப்புறமாக ஒளி வீசினால் அது வீழ்ச்சியினை தரும். அதை விலக்குதல் வேண்டும்.

நல்ல பதுமராகத்தை அணிந்து கொள்வோர் கல்வி, பசு, கன்னி, அறுசுவை உணவு முதலான தானங்களைக் கொடுத்த பலனையும், அசுவமேத யாகம் செய்த பலனையும் அடைவர். ராஜவாழ்க்கை அவர்களுக்கு வசப்படும்.

குருவிந்தம் அணிவோர் நிறைந்த செல்வத்தோடும், சிறந்த வெற்றியோடும் உலகம் முழுவதையும் ஒரு குடை கீழ் ஆள்வர், பலமான சேனை அமையும்.

சௌகந்திகம் அணிந்திருப்போர் செல்வமும் புகழும் பெற்று வாழ்வர், நல்ல அறிவும் ஞானமும் வாய்க்கும்.

கோவாங்கம் அணி வோர் பால் வளமும், தானிய வளமும் பெற்றுச் செல்வத்தோடும் நிறைவோடும் வாழ்வர்.

மாணிக்கங்களில் நேர திறம் (மெதுவான ஒளி), புள்ளி, காகபாதம், கீற்று. மங்கிய ஒளி என்னும் ஐந்து வகை குற்றங்களை உடைய மாணிக்கத்தை விலக்க வேண்டும். அது தோஷமிக்கது.

தோஷமில்லாத மாணிக்கத்தை அணிந்திருக்கும் அரசன் பகைவன் ஒழிந்து, பாம்பு, சிங்கம், புலி முதலிய துஷ்ட விலங்குகள், பேய், பூதம்,வறுமை,நோய், நெருப்பு, கூற்றுவன் கோபம் ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்கள் நெருங்க முடியாது மகிழ்ச்சியோடு வாழ்வான்.

மாணிக்கம் பற்றி அறிந்துகொண்டீர்களா அமைச்சர்களே, இனி முத்துக்களை பற்றி சொல்வேன் அறிந்துகொள்க‌.

அமைச்சர்களே, முத்து இருவகைப்படும் நீரில் தோன்றும் முத்து, நிலத்தில் தோன்றும் முத்து என இருவகை உண்டு.

சலசம் என்பது நீரில் தோன்றும் வகை, தலசம் என்பது நிலத்தில் தோன்றுவது.

முத்தானது சங்கு மூங்கில், பாம்பின் தலை, பன்றிக் கொம்பு, வெண்சாலி (ஒரு நெல்வகை), சிப்பி, கொக்கின் சுழுத்து ஆகிய பதி மீன் தலை, கரும்பு. யானையின் கொம்பு, சிங்கத்தின் கை, அபூர்வமான பெண்களின் கழுத்து, கொக்கின் கழுத்து ஆகிய படிமூன்று இடங்களில் முத்து தோன்றும்.

சிங்கத்தின் கை, சாமுதிகா லட்சணமும் அபூர்வ ஜாதகமும் கொண்ட பெண்களின் கழுத்து (வெகு அபூர்வமாக சில பெண்களின் கழுத்தில் அது கட்டிப்போல் வந்து முதிர்ந்து வரும்), கொக்கின் கழுத்து முதலான இடங்களில் தோன்றும் முத்துக்கள் கிடைப்பது மிக மிக அரிது.

சிப்பி, சங்கு ஆகிய இரண்டிலும் தோன்றும் முத்துக்கள் வெண்மையாய் மாடப்புறாவின் முட்டை போன்று வடிவில் உடையனவாய் இருக்கும்.

முகிலில் தோன்றும் முத்துக்கள் சூரியனைப் போன்று செந்நிறம் கொண்டு விளங்கும், மூங்கிலில் கிடைக்கும் முத்துக்கள் மழையோடு வரும் ஆலங்கட்டியின் நிறத்தைக் கொண்டிருக்கும். பாம்பில் தோன்றும் முத்துக்கள் நீல நிறத்தைக் கொண்டது.

வராகம் எனும் பன்றிக் கொம்பில் தோன்றும் முத்துக்கள் இரத்த நிறம் உடையது, வெண் நெல்லில் தோன்று முத்துக்கள் பசியநிறம் கொண்டது.

நாகத்திடம் இருந்து வரும் முத்து நீலநிறம் கொண்டது.

மீன் தலையில் தோன்றும் முத்துக்கள் பாதிரி மலர் நிறம் கொண்டும் இருக்கும். யானை கொம்பு, கரும்பு ஆகிய இரண்டிலும் கிடைக்கும் முத்து பொன் நிறத்தை உடையனவாய் காணப்படும்.

அமைச்சர்களே, முத்துக்களுக்கு உரிய தெய்வங்களை சொல்வேன். அவை அந்த முத்துக்களுக்கு கட்டுப்பட்டு அருள்தரும், அந்த தெய்வங்களின் அருளைக் கதிர்வீச்சாய் பெற்றுத்தரும்.

பால் போல் வெண்மையுடன் உள்ள முத்துக்கு வருணன் தெய்வம். செந்நிற ஒளிவீசும் முத்துக்களுக்கு தெய்வம் சூரியன். நீலதிறம் கொண்ட முத்துக்கு விஷ்ணுவும், இரத்தம் போல் காணப்படும் முத்துக்கு வாயுவும் தெய்வங்களாம். யமன் பசுமை நிறம் கொண்ட முத்துக்களுக்குத் தெய்வம், பொன் போன்ற நிறம் முத்துக்களுக்கு இந்திரன் தெய்வம் என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவை வழிபாட்டில் முக்கியம்.

நட்சத்திரம் போன்ற பொலிவும் , நல்ல திரட்சியும், உள்ளே வெற்றாக இல்லாததும், மணலோ கல்லோ உள்ளே இல்லாததுதும், பார்க்க அழகானதுதும் நல்ல கனமானதுமான‌ முத்துக்கள் உயர்ந்தது.

அழகான உருவமில்லா, பொலிவில்லாத, உள்ளே வெற்றிடம் கொண்ட, மணல் கலந்த, கல் கலந்த, எடை கனம் இல்லாத முத்துக்கள் விலக்க வேண்டியது.

முத்துக்களுக்கு இந்த ஆறு குணங்கள் அவசியம், அவற்றை அணிந்தால் எல்லா நலமும் கைகூடும், செல்வம் பெருகி வறுமை நீங்குவதோடு நீண்ட ஆயுள் பெருகும்.

கடல்போல் வற்றா செல்வமும் கீர்த்தியும் கிடைக்கும்.

பாண்டியர்கள் முத்துக்களின் தனி சக்தியாலே வாழ்வாங்கு வாழ்ந்தார்கள். வாழ்வார்கள். முத்து அவர்களின் தனிப்பெரும் வரம்கொடுக்கும் மணி என்பதை நீவீர் அனுபவத்தால் கண்டிருப்பீர்கள் அல்லவா?

பாண்டிய நாட்டின் மாபெரும் வரமும் அடையாளமும் அது, இங்கிருக்கும் தேவி அணிவதும் முத்து. அவள் பல இடங்களில் கொண்டிருக்கும் பெயர்களும் முத்து அம்மன் அல்லவா?

சொன்னவன் சிரித்துக் கொண்டே தொடர்ந்தான். அமைச்சர்களே இனி நான் வைரத்தின் தன்மையினை போதிப்பேன்.

கோசலம் முதலான நாடுகளில் வைரம் நிறைய‌ கிடைக்கும். அது பிரசித்தியானது.

நல்ல வைரம் என்பது கையில் எடுத்தால் இலேசாக இருக்கக் கூடியதும், தெளிவான ஒளி வீசுவதுமாக இருந்தால் மிக மிக உயர்ந்ததாகும். இதனை அணிவதால் செல்வம் பெருகும்; வறுமை நீங்கும்; வைராக்கியம் பெருகும்; சூட்சுமமான பேய்களாலும் பூதங்களாலும் துன்பங்கள் நேராது.

பிற மணிகளைத் துளையிட வைரம் உபயோகப்படுவதால் அதுவே மணிகளில் சிறந்தது. மிக‌ உறுதியானது.

அமைச்சர்களே, நான் இனி மரகதம் பற்றி உங்களுக்கு விளக்குவேன்.

வல்லாசுரனின் பித்தம் மரகதமனது, இது கருடன் மூலம் பல இடங்களுக்கு பரவியதால் கருடபச்சை என்பார், துருக்க நாடு மரகதம் அதிகம் கொண்டிருக்குமிடம், இதனால் பச்சை நிறம் அவர்களுக்கு பிரதானம்.

மரகதம் மூன்று வகைப்படும். அருகம்புல்லின் நிறம் கொண்ட காடம் எந்து முதல் வகை. இது சகுணம் என்றும் சதோஷம் என்றும் இரு பிரிவுகளாக இருக்கிறது.

மற்ற இரு வகைளும் சுப்பிரம், காளம் எனப்படும்.

சகுணம் என்ற மரகதமானது காடம், உல்லசிதம், பேசலம், பித்தகம், முத்தம், பிதுகம் என்று ஆறுவகைப் படும்.

காடம் அறுகம்புல்லின் பசிய நிறத்தை உடையது, உல்லசிதம் மென்மையான தன்மையினை உடையது. பேசலம் என்பது குளத்து நீரால் விளையும் செந்நெல் பயிரில் தோன்றிய பசிய முத்தினைப் போன்று நிறம் கொண்டது.

பித்தகம் என்பது பச்சைக்கிளியின் சிறகுடைய நிறத்தைப் போன்றும், முத்தம் துளசியின் நிறம் போன்றது, பிதுகம் என்பது தாமரை இலையின் நிறம் போன்றும் காணப்படும்.

ச‌தோஷம் என்ற மரகதம் தோடலே சாஞ்சிதம், துட்டம், தோட மூர்ச்சிதம், தோடலேசம், மந்த தோடம் என ஐந்து வகைப்படும்.

தோடலே சாஞ்சிதம் என்பது எலுமிச்சையின் இலையைப் போன்ற நிறத்தை உடையது, துட்டம் என்பது அலரி இலையின் நிறம், கருங்குவளை மலர் இதழின் நிறத்தையும் உடையது. தோடலேசம் என்பது தாமரை இலையின் நிறத்தில் இருக்கும்.

தோட‌ மூர்ச்சிதம் என்பது புல்லின் நிறத்தைக் கொண்டும், மந்ததோடம் மயில் இறகின் நிறத்தையும் கொண்டிருக்கும்.

சுப்பிரம், காளம் என்பது அடுத்த இருவகை. இவை இலைபச்சை, பாசி பச்சை நிறத்தை கொண்டிருக்கும். உத்தமமானது.

குற்றமில்லாத மரகதத்தை அணிபவர் நால்வகை சேனைகளோடும் வாழ்வர். எல்லா வளமும் வாய்க்கும். சேனை பலம் மிக்கவராய் இருப்பர்.

அமைச்சர்களே இனி நீலக்கல் வகைப் பற்றி சொல்வேன், அறிக‌.

நீலம் இரு வகைப்படும். அவை இந்திர நீலம் என்றும், மாநீலம் என்றும் சொல்லப்படும்.

நீலம் தோன்றிய கதையினை கேட்பீராக, விசுவரூபனைக் கொன்ற தோஷம் நீங்கும் பொருட்டு இந்திரன் செய்த அசுவமேத யாகத்தில் எழுந்த நறுமணம் புகை, குதிரையின் கண்களில் பட்டு பீளையினைச் சிந்த அப்படி உருவானதே இந்திர நீலம்.

சூரியனின் மகா வீரியத்தில் இருந்து தோன்றியது மாநீலம், இதனை தேவர்கள் விரும்பி அணிவர்.

மாநீல கல் என்பது மற்ற நிறங்கள் கலவாது வெண்மை, செம்மை பொன், கருமை ஆகிய நிறங்களில் காணப்படும்.

இதனை முறையே பிராமண‌, க்ஷத்திரிய, வைசிய, சூத்திரர் நால்வகை குலத்தின் தன்மையாய் சொல்வார்கள். இந்த மணியை அணிபவர் எந்நாளும் சுசுங்களை அடைந்து வாழ்வர்கள்.

இந்திர நீலம் என்பது கிடைத்தற்கரியது, அது மாநீலத்தை விட சிறந்தது.

பசும்பால் குடத்துக்குள் இந்த இந்திர நீலத்தை இட்டால் பாலே நீல நிறமாகும், அப்படி மாற்றுவதுதான் உண்மையான இந்திரநீலம், மகா அரிதான மணி இது.

அமைச்சர்களே, நவமணிகளில் மாணிக்கம், முத்து, வைரம், மரகதம் ஆகிய நான்கும் அதிக விலை மதிப்பு உடையவை.

கோமேதகம். புருடராகம் (புஷ்பராக கல்), வைடூரியம், பவளம் நான்கும் குறைந்த மதிப்பு உடையவை.

வலாசுரனுடைய நிணங்கள் சிந்திய இடத்திலிருந்து தோன்றிய மணி கோமேதகம் ஆகும். உருக்கிய நெய்த் தேன் துளி, பசுவின் சிறுநீர் ஆகியவை போன்று சிவந்து, பசும் பொன் நிறத்தையும் உடையதாயிருக்கும். கோமேதகம் அணிவதால் அஞ்ஞான மயக்கங்கள் தீரும், ஞானம் பெருகும்.

வலாசுரனுடைய கபம் (உடல் திரவம்)விழுந்த இடத்திலிருந்து தோன்றிய மணியே புருடராகம் (புஷ்பராகம்), அதே நேரம் பகவான் வராகமாக‌ அவதாரம் எடுத்து இரணியாஷனை அழித்தபோது பகவான் வாயில் இருந்தும் தோன்றிற்று.

புருடராகம் உச்சியில் வட்டவடிவமாகவும், மிக மெல்லியதாய் பொன் போல‌, தீ போலவும் ஒளி வீசுவதாக இருத்தல் வேண்டும், இந்த மணியைக் கொண்டுதான் விஸ்வகர்மா இந்திரனுடைய பட்டணத்தையும், அவன் சிம்மாசனத்தையும் அமைத்தான்.

இந்த புஷ்பராகம் அணிந்தவர் பகைவர்களை எளிதில் வெற்றி கொள்வார்கள், பகை இராது.

வலாசுரனுடைய கூந்தலே வைடூரியமாகத் தோன்றியது. இது முதலில் இளாவிருத வருஷத்தில் தோன்றியது.

இந்தமணி கோரக்கம், மகதம், சிங்களம், பாரசீகம், பொதிய மலை, திரிகூட மலை ஆகிய இடங்களில் கிடைக்கும்.

வானில் மேகங்கள் இடிக்கும் போதும் இது தோன்றும், நல்ல வைடூரியம் என்பது மூங்கிலின் இலை, மயிலின் கழுத்து, பூனையின் கண் ஆகிய நிறங்களில் இருக்கும். அது மெல்லிய கனமாகவும்; தெளிவான ஒளி கொண்டதாகவும், அடர்த்தியும் கொண்டிருக்கும்.

வைடூரியம் வலது பக்கத்தில் ஒளிவீசினால் பிராமண ஜாதி என்றும், இடது பக்கத்தில் ஒளி வீசினால் க்ஷத்திரிய ஜாதி என்றும், மேல் நோக்கிய பகுதியில் ஒளி வீசினால் வைசிய ஜாதி என்றும், கீழ்ப்பகுதி யில் ஒளி வீசினால் வேளாள ஜாதி என்றும் சொல்லப்படும்.

இதை தினந்தோறும் பூஜித்து அணிந்து வந்தால் ஞானம் பெருகும்.

வலனின் தசையில் இருந்து வந்தது பவளம். முன்பு பிரம்மன் தன் உடலை துறந்து சந்திக்கால வடிவமாக இருந்து பிதுர்களைப் படைத்த போது உருவானது என்றும், விஷ்ணு பகைவர்களை வதைத்த போது அவருடைய உடலிலிருந்து அழுக்கு விழுந்த இடத்தில் தோன்றியது என்றும், இந்திரன் பர்வதங்களுடைய சிறகுகளைச் சேதித்த போது இரத்தம் ஒழுகிய இடத்திலிருந்தும் தோன்றியது என்றும் சொல்வார்கள்.

இந்த பவளம் முருக்க மலர், பச்சைக்கிளியின் மூக்கு, செவ்வரத்த மலர், கொவ்வைக்கனி ஆகியவற்றின் நிறங்களப் போன்ற நிறத்தை பவளம் கொண்டிருக்கும்.

உருவமற்ற கோணலானது, புழு அரித்திருத்தல், முகம் ஓடிந்திருத்தல் ஆகிய பவளங்கள் தோஷம் உடையன. பவளம் பெண்களுக்கு நல்லது. இதனை அணிவதால் பெண்களுக்கு மகப்பேறு முதலான பலன்கள் ஏற்படுகின்றன.

அமைச்சர்களே, நவமணிகள் போக சூரியனின் ஒளியினை நெருப்பாக சிந்தும் சூரியகாந்தக் கல்லும், சந்திரன் போல குளிர்ந்த நீரை கொண்ட சந்திர காந்தக் கல்லும் நவமணிகளுக்குள் அடக்கம்.

அமைச்சர்களே, இந்த நவமணிகளின் சாதியினையும், குலத்தையும் சொல்வேன்.

வைரமும், முத்தும், கோமேதகமும் பிராமணர் ஜாதி, பவளமும் மாணிக்கமும் க்ஷத்திரியர் ஜாதி.

புஷ்பராகமும் வைடூரியமும் வைசியர் ஜாதி, நீலமும் மரகதமும் சூத்திர‌ ஜாதி.

அதாவது இந்த வர்ணத்தில் இருப்போர்க்கு இந்த தொழிலில் இருப்போர்கு இவை நலம் கொடுக்கும் மணிகளாகும்.

இன்னும் மூன்று குணங்களுக்கும் இந்த மணிகளுக்குமான தொடர்பையும் சொல்வேன். இக்குணங்ளை அவை கொண்டிருக்கும்.

முத்தும் மரகதமும் சாத்விக குணம் உடையவை, பவளமும் மாணிக்கமும், கோமேதகமும், புஷ்ப‌ராகமும். வைடூரியமும், வைரமும் ராஜத குணம் உடையவை.

நீலக்கல் தாமச குணம் உடையது.

அமைச்சர்களே, இந்த நவமணிகளை எந்தெந்த நாளில் அளவிட வேண்டும், எந்த நாட்களில் சோதனை செய்து தரத்தினை அவதானிக்கவேண்டும் என்பதையும் சொல்வேன். இந்த நாட்களில்தான் அவற்றின் தன்மை சரியாகத் தெரியவரும். கோள்களின் சஞ்சாரம் அதை செய்யும்.

மாணிக்கம், கோமேதகம் இரண்டையும் ஞாயிற்று கிழமையில் சோதிக்கவேண்டும். முத்து, வைடூரியம் இரண்டையும் திங்கள்கிழமையில் சோதித்தல் வேண்டும்.

பவளத்தை செவ்வாய் கிழமையிலும், மரகதத்தை புதன் கிழமையிலும் புஷ்ப‌ராகத்தை வியாழ கிழமையிலும், வைரத்தை வெள்ளிக்கிழமையிலும் ஆராய்தல் வேண்டும்.

நீலக்கல்லை சனிக் கிழமையிலும் ஆராய்ந்து மதிப்பிடுவது சிறந்தது.

இதனை எல்லோராலும் செய்யமுடியாது, நவமணிகளை ஆராய்வோர் என்பவர்கள் பற்று இல்லாதவர்களாக, தனக்கென சுயநலம் இல்லாதவர்களாக, இந்த மக்களையும் எல்லா உயிர்களையும் மிகவும் நேசிப்பவர்களாக, உள்ளும் புறமும் தூய்மை உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

நவமணிகள் என்பது பிரபஞ்ச சக்தியினை ஈர்த்து தருபவை, அந்த மகா சக்தி மிக மிக சரியானவர்களுக்கே தன்னை முழுமையாக வெளிப்படுத்தி நல்ல விஷயங்களை சொல்லும், அதனால் அப்படிப்பட்டவர்கள்தான் இந்த நவமணிகளை அளவிட தகுதியானவர்கள்.

அவர்களிடம் கொஞ்சம் சுயநலம் இருந்தாலும் இங்கே தவறு நிகழும், நவமணிகள் ரகசியம் புரியாது. செல்லாது.

இந்த நவமணிகளை எப்படி பூஜித்து சக்தி கொடுக்க வேண்டும், பிரபஞ்ச சக்திகளை அதனில் கூட்டவேண்டும் என்பதையும் சொல்கின்றேன். கேட்பீர்களாக‌.

செந்தாமரை மலர், சிறு செண்பக மலர், செவ்வல்லி மலர், செங்காந்தள் மலர். மல்லிகை மலர், வெண் தாமரை மலர், மரமஞ்சள் மலர், செங்கழு நீர் மலர், வெள்ளை மந்தார மலர் ஆகிய ஒன்பதையும் முடியிலே சூடிக்கொண்டு, சுத்தமான இடத்திலே ஆசனமிட்டு அதன் மேல் வெண்மையான ஆடை விரித்து,மாணிக்கத்தை நடுவிலும், முத்து முதலான மணிகளை கிழக்கு முதல் எட்டு திக்குகளிலும் வைக்க வேண்டும்.

பின்னர் மாணிக்கத்தில் சூரியனையும், முத்திலே சந்திரனையும், பவனத்திலே செவ்வாயையும், மரகதத்திலே புதனையும், புருடராகத்திலே வியாழனையும், வைரத்திலே சுக்கிரனையும், நீலத்திலே சனியையும். கோமேதகத்திலே ராகுவையும், வைடூரியத் திலே கேதுவையும். பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

மாணிக்கத்தை செந்தாமரை மலர் கொண்டும், முத்தினை சிறு செண்பக மலர் கொண்டும், பவளத்தை செவ்வல்லி மலர் கொண்டும், மரகதத்திலே செங்காந்தள் மலர் கொண்டும், புஷ்பராகத்தை மல்லிகை மலர் கொண்டும், வைரத்தை வெண் தாமரை மலர் கொண்டும், நீலகல்லை மரமஞ்சள் மலர் கொண்டும் , கோமேதகத்தினை செங்கழு நீர் மலர், வைடூரியத்தில் வெள்ளை மந்தார மலர் கொண்டும் அர்ச்சிக்க வேண்டும்.

இப்படி அவைகள் ஒவ்வொன்றையும் அதற்குரிய கிரகத்துடன் தொடர்புப்படுத்தி சக்தி அதிகரிக்க வேண்டும், இந்த பூக்கள் என்பது மண்ணில் இருந்து வந்தவை, அவை இந்த கல்லுக்கும் கிரகங்களுக்குமான தொடர்பை ஒரு இணைப்பினை பெற்றுகொடுத்து நிறுத்தும்.

இவ்விதமாக அந்த வணிகர் ஒன்பது வகை இரத்தினங்களைப் பற்றியும் எடுத்துக் கூறி, வடக்குத் திசை நோக்க அமர்ந்து இரத்தினங்களை வணங்கி, துதித்துப் பூஜித்தார்.

பின்னர், அவற்றைக் கைகளில் எடுத்து சோமசுந்தரப் பெருமான் இருக்கும் திக்கு நோக்கி அஞ்சலி செய்து, “பெரியோர்களே, இந்த அரசகுமாரனுக்கு அளவற்ற செல்வமும் நீண்ட ஆயுளும் உண்டாவதாக” என்று சொல்லி, இரத்தினங்களை அவன் கையில் கொடுத்தார், அரசகுமாரன் பணிவோடு அந்த இரத்தினங்களைப் பெற்றுக் கொண்டான்.

“ஐயா, இந்த மணிகளைக் கொண்டு புதிய மகுடம் செய்து அரசிளங்குமாரனுக்கு முடிசூட்டி, அபிஷேக
பாண்டியன் என்று அழைப்பீராக” என்று சொன்னார்.

அமைச்சர்கள் மிக மகிழ்ந்தார்கள், ராணிக்கு அவர் தந்த ரத்தினங்களுக்கு எடைக்கு எடை மும்மடங்கு கொடுக்க மகிழ்ந்து உத்தரவிட்டாள், அப்படியே அமைச்சர்கள் தராசும் பொன்னும் எடுக்கச் சென்றார்கள்.

ராணி தன் மகனுக்கு வந்த இடையூறு களைந்த மகிழ்வில் அவனை முத்தமிட்டாள்.

அந்த நிமிடம் அந்த வணிகன் மறைந்தே போனார், தாரசும் பொன்னும் கொண்டுவந்த நிலையில் திகைத்தார்கள், ராணி இன்னும் திகைத்தாள்.

அப்போது சோமசுந்தரப் பெருமான் தேவியோடு ரிஷபத்தில் இருந்தபடி காட்சி கொடுத்துச் சொன்னார், “இந்த மதுரையம்பதியினை ஆளும் மன்னன் எம் பிரதிநிதி, அவனுக்கான ரத்தினங்களையும், அவற்றின் ரகசியங்களையும் நாமே சொல்லித் தந்தோம்.

அவன் எல்லா வளமும் நலமும் பெற்றுவாழ்வான், இந்த நவரத்தின ரகசியங்களை வழி வழியாய் பெற்று வாழ்க” என வாழ்த்தி மறைந்தார்.

அரசமட்ட மக்கள் பெரும் மகிழ்ச்சி கொண்டவர்களாய் சுத்த தங்கத்தில் விதிப்படி அந்த ரத்தினங்களை வைத்து மகுடம் செய்தனர்.

சிவனுக்குரிய நாளில் அந்த மன்னனுக்கு பட்டாபிஷேகம் நடந்தது. அவன் “அபிஷேகப் பாண்டியன்” எனப் பெருவாழ்வு வாழ்ந்தான்.

தன் தந்தையின் மணிமுடியினை அவன் மீட்டெடுத்து கொள்ளைபோன ரத்தினம் ஒன்றுவிடாமல் மீட்டும் கொண்டான்.

தன் அடியாரின் குடும்பத்துக்கு சோதனை வந்தபோது சிவனே வந்து நவரத்தினம் கொடுத்து அவற்றின் சகல நுணுக்கமும் போதித்து வழிகாட்டிய திருவிளையாடல் இது.

இந்த திருவிளையாடல் மூலம் பகவான் போதித்தது நுணுக்கமான ஞானபோதனை.

அதாவது வலன் என்பவன் அசுரனாக இருந்தாலும் சிவன் அருளை ஈர்த்துக்கொண்டான். அதனால் அவன் உடல் நவமணிகளாக மாறினாலும் சிவன் அருளை ஈர்த்துத் தரும்.

இன்னும் ஆழமாக சொல்லவேண்டும் என்றால் நவமணிகள் என்பவை பிரபஞ்ச பேராற்றலை சக்தியினை ஈர்த்துத் தரும்.

நாம் வாழும் பூமியில் ஆகாயத்தில் இருந்தும் நவகிரகங்களில் இருந்தும் ஏகப்பட்ட கதிர்வீச்சுக்கள் வந்து கொண்டே இருக்கின்றன, சரியான வகையில் ஒரு சக்திமிக்க பொருள் இருக்கும் போது அவை ஈர்க்கப்படுகின்றன‌.

மானுடன் உருவாக்கிய போன், ரேடியோ போன்றவையே சரியான மின்காந்த அலைகளை ஈர்க்கும் போது, அந்த மகாசக்தி கொண்ட தெய்வம் படைத்த வகையில் நவமணிகளுக்கு அந்த சக்தி ஏன் இருக்கமுடியாது?

அவைதான் வலன் எனும் அசுரனின் வழியாக உலகுக்கு சிவனால் வழங்கப்பட்டன‌.

நவமணிகள் என வகைபடுத்தப்பட்ட ஒவ்வொன்றும் ஒவ்வொரு கிரகத்தோடு தொடர்புபட்டவை. முறையாக அதனை முறைபடுத்தும்போது எல்லா வளமும் பெறலாம்.

லௌகீகம், ஆன்மீக ஞானம் என எல்லாமும் அதனால் பெறலாம்.

அதை போதிக்கும் இந்த திருவிளையாடல் புராணம் தொடக்கத்திலே வலன் கதையினை சொல்லி எச்சரிக்கையோடுதான் தொடங்குகின்றது.

அதாவது நவமணிகள் மூலம் எல்லா சக்தியும் கிடைக்கும். ஆனால், அதைக் கொண்டு நல்ல தர்மங்களை செய்தால் மானுடம் வாழ எல்லா உயிர்களும் வாழ வழிசெய்தால் சிவன் மென்மேலும் அருளிக் காப்பார்.

அதைவிடுத்து அந்த பலம் கிடைத்த கர்வ அகங்காரத்தில் அதர்மம் செய்தால் எல்லா அநீதிகளையும் செய்து எல்லோரையும் சிரமப்படுத்தி வதைத்தால் அந்த மகா சக்தியே அவனை அழித்துவிடும்.

நவமணிகள் நல்ல பலனை தரும். அதன் பொருட்டு தர்மம் காத்து வாழ்தல் நன்று என்பதை போதிக்கும் திருவிளையாடல் இது.

அப்படியே தன்னை நம்பிய பக்தனின் குடும்பத்தை அவன் இல்லாவிட்டாலும் சிவன் கைவிடமாட்டார் தானே வந்து அவன் குலம் காப்பார் என்பதை ஆழமாக சொல்லும் திருவிளையாடலும் இதுதான்.

இந்துக்களின் அரசர்கள் பேராசையில் நவமணிகளை திரட்டவில்லை. இந்து ஆலய சுவாமி சிலைகளும், ஆலயங்களும் அர்த்தமின்றி நவமணிகளை அலங்கார நகைகள் என்றும் கொண்டிருக்கவில்லை.

எல்லாம் நல்ல அதிர்வுகளை, நல்ல சக்திகளை பெற்றுக்கொள்ளும் வழியாய் இருந்தது, அதுதான் இந்து சமூகத்தின் வளமான வாழ்வின் ரகசியமாயும் இருந்தது.

அவை மாற மாறத்தான், அவைகளை அந்நியர் அபகரிக்க அபகரித்தான் பல வீழ்ச்சிகள் வந்தன. பழைய பொற்காலத்தை இந்துக்கள் மீட்டெடுக்க்கும் போது எல்லாம் மாறும், அப்போது இந்த நவமணிகளும் பாரத தேசமெங்கும் ஆள்வோர்கள், ஆலயங்கள், வீடுகள் என எல்லோரிடமும் மீண்டும் குவிந்துகிடக்கும்.

மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா: 04 தருமிக்குப் பொற்கிழி அளித்த திருவிளையாடல்.

அந்த மதுரை தமிழ்ச்சங்கம் மிக மிகப் பரபரப்பாய் இருந்தது. அரசன் உத்தரவு இட்டும் தன் மனதின் சந்தேகத்தை போக்கும் பாடலை விளக்குவோர்க்கு ஆயிரம் பொன் என அறிவித்து அதனை தமிழ்சங்க வாயிலில் கட்டி தொங்கவிட்டு சில நாட்கள் ஆனபின்பும் இன்னும் யாரும் ரும் அப்படி ஒரு பாடலை பாடவில்லை. அது மன்னன் மனதை வாட்டுகின்றது என்பதையும் இந்த தமிழ்ச்சங்கம் அதனை இன்னும் போக்கவில்லை என்பதாலும் அச்சமும் பதற்றமும் கொண்டதாய் பரபரப்பாய் இருந்தது.

மன்னர் வரும் நேரம் எல்லோரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.

அந்த தமிழ்ச்சங்கம் பொற்றாமைரை குளத்தின் வடமேற்கே கோவில் உள்ளே அமைந்திருந்தது. பாண்டிய மன்னர்கள் சிவபக்தி மிக்கவர்கள். சந்திரகுல மன்னர்களான அவர்கள் இந்துஸ்தான அரசமர மரபிலே அதிதீவிர சிவபக்தர்களாக இருந்தார்கள்.

சிவனின் பிரதிநிதிகளாக அவர்கள் ஆட்சி செய்தார்கள், சிவனுக்கும் அவர்களுக்குமான பந்தம் அதிகமாக நெருக்கமாக இருந்தது. பார்வதியின் அம்சமான மீனாட்சி பாண்டிய குலத்தில் பிறந்து சிவனே அவர்களுடன் திருமண பந்தம் வைக்குமளவு பெரிய உறவு அது.

மூவேந்தர்களில் பாண்டிய குலமே அப்படி மிக மிக தீவிரசிவபக்தியினை கொண்டிருந்தது, வழி வழியாக வந்த உறவில் பெரும் பக்தியில் அங்கு எல்லாமே சிவமே.

அவர்களின் அரசவை சோமநாத சன்னதியினை ஒட்டித்தான் இருந்தது, அந்த பாண்டிய மன்னர்கள் பெரும் அரண்மனை கட்டி வாழவில்லை, மாபெரும் மாளிகை அமைத்து வாழவில்லை.

அவர்கள் படைநிலைகள் அரண் மிக்கதாக இருந்ததே தவிர இல்லம் சாதாரணமானது, அவர்கள் அவை நடத்தியது ஆலவாயன் சன்னதியினை அடுத்தே.

ஆம். கோவிலில்தான் அரச அவைகள் இறைவன் சன்னிதானம் முன்னால் நடந்தது, அங்கு தெய்வத்தின் சாட்சியாக தீர்ப்புகள் சொல்லப்பட்டன‌.

அப்படி தமிழ்ச்சங்கமும் அங்கே அடுத்து இருந்தது, அங்கே செல்லும் போது மன்னன் மணிமுடி தரித்து செல்வதில்லை, அவன் ஈராடை அணிந்து மேலே வெண் ஆடை அணிந்து தலையில் மகுடமின்றித்தான் செல்வான்.

அரச ராஜரீகம் வேறு, தமிழ்ச்சங்கம் வேறு.

தமிழ்ச்சங்கமும் அரசவை போலவே சிவனை தலைமையாக கொண்டது என்றாலும் மன்னன் அங்கும் ஒரு புலவன் போல் சென்று அமர்வதுதான் மரபு.

அவன் தன் சந்தேகத்தை தீர்ப்போர்க்கு ஆயிரம் பொன் என உத்தரவிட்டு ஒரு புலவனாக தமிழ்ச்சங்கத்தில் சென்று காத்திருந்தான்.

அவன் ஏன் ஆயிரம் பொன் பரிசு என அறிவித்தான் என்றால் அதன் பின்னணி இதுதான்.

அவன் மாபெரும்சிவபக்தன், தன் பாண்டிய‌ நாட்டில் சிவபக்தி எப்படி இருக்கின்றது , வேதநிலையங்கள் எப்படி சிவசக்தியினை போதிக்கின்றன? புலவர்களின் அறிவு என்ன?

சும்மா பரிசுக்கு பாடுகின்றார்களா? சிவதத்துவத்தில் நிறைந்து உண்மை பொருளை பாடுகின்றார்களா? என்பதில் கவனமாக இருந்தான்.

காரணம், அரசன் ஒருவனுக்கு தமிழ்சங்கத்தில் பரிசுகொடுத்துவிட்டான் என்றால் அவன் பெரும் அங்கீகாரம் பெற்றவனாகின்றான், அந்த பெரும் இடத்தில் இருப்பவன் என்ன சொன்னாலும் மக்கள் நம்புவார்கள்.

இதனால் தான் பரிசளிக்கும் நபர் சரியானவனா? அதனால் சிவசக்தி தத்துவம் எல்லோருக்கும் போய்சேருகின்றதா என்பதில் அவன் மிக கவனமாக இருந்தான்.

பாண்டிய குல சிவனடியார் மன்னர்கள் எப்போதும் சிவபக்திக்கே முதல் உரிமை கொடுத்தார்கள். மக்களை காப்பதும் வழிநடத்துவதும் வருமானம் பெருக்குவதுமட்டுமல்ல சிவபக்தியினை வளர்ப்பதே முதல் கடமை அதற்குத்தான் இந்த அரசு என்பதில் சரியாக இருந்தார்கள்.

அப்படியான மன்னர்கள் தமிழ்ச்சங்கம் என்பதை தமிழ் வளர்க்கும் இடமாக பார்க்கவில்லை, அது சிவனை தலைவராக கொண்டு முருகப்பெருமானும், அகத்தியரும் நடத்தும் சபை என்பதால் அங்கே சிவசக்தி தத்துவம் , சிவனின் புகழ், சிவனின் பெருமைகள் என அந்த விவாதமே எப்போதும் விவாதிக்கப்படும்.

சனாதனதர்மம் தொடர்பில்லா எதுவும் அங்கே விவாதிக்கப்படாது, அவை அரச அவையில்தான் சில நேரங்களில் அலசப்படும்.

தமிழ்ச்சங்கம் என்பது முழுக்க முழுக்க சிவபக்தி, சனாதனதர்ம சிந்தனைகளை வளர்த்த இடம், தமிழ் என்பது அதற்கொரு கருவி.

இப்படி சிவனுக்காக தமிழ்ச்சங்கம் மதுரையில் நடந்த காலத்தில்தான் வம்ச சேகர பாண்டியன் மகன் வம்ச சூடாமணி மன்னனாக இருந்தான்.

அவன் தன் ராஜ்ஜியத்தை மிக பெரிதாக ஆக்கியிருந்தான். சேரநாடு சோழநாடு காகதீயர் நாடு,கல்நாடு, சாளுக்கிய நாடு என எல்லாமே அவன் ராஜ்ஜியத்துக்குள் வந்திருந்தது.

கிருஷ்ணா நதிக்கு வடக்கே வரை அவன் ராஜ்ஜியம் விரிந்திருந்தது.

அவன் எல்லா தலங்களுக்கும் சுற்றுப்பயணம் செய்தான். சிதம்பரம், விருத்தாச்சலம், திருவாருர் என சோழ தலங்கள், திருவஞ்சைகளம், வடக்குநாதர் ஆலயம் என சேரநாட்டுதலம் என சென்றவன் சாளுக்கியர் காகதீயர் என ஆட்சி செய்த பகுதியில் இருக்கும் ஸ்ரீசைலம் ஆலயத்துக்கும் சென்றான்.

அக்காலம் சமஸ்கிருதமும், தமிழும் கண்ணென போற்றப்பட்ட காலம். மன்னர்கள் சமஸ்கிருதம் அறிந்திருந்தார்கள். சமஸ்கிருதமின்றி தேசமுழுக்க சனாதனதர்ம கொள்கைகளை தத்துவங்களை கொண்டு செல்லமுடியாது. பல மொழிகள் நிறைந்த பாரத கண்டத்தில் சமஸ்கிருதமே இணைப்பு மொழி என்பதால் தத்துவங்களை பரிமாற, சனாதான சிந்தனைகளை பரிமாற அதுதான் வழியாக இருந்தது.

ஒரு இந்து பாரத தேசத்தின் எந்த பகுதி ஆலயம் செல்லவும் வழிபடவும், விவாதம் செய்யவும் அறிவை கொடுக்கவும் பெருக்கவும் அது வழியாய் இருந்தது.

அந்த பாரம்பரியத்தில் மன்னனும் எல்லாம் அறிந்தவனாய் இருந்தான். அவன் எல்லா சிவதலங்களுக்கும் சென்றுவந்தான்.

எல்லா நூல்களையும் அவன் அறிவான். லலிதா சகஸ்ரநாமம் அவன் அறிந்த ஒன்று. அகத்தியரின் மனைவி லோபமுத்திரையால் உடைக்கப்பட்ட அந்த ஞான ஸ்லோகத்தை அகத்தியனை குருவாக கொண்ட மதுரை தமிழ்சங்கத்தார் அதுவும் அங்கே முதல்வனான மன்னன் அறிந்திருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

சிவதலங்களில் அந்த ஸ்ரீசைலம் மலைமேல் இருப்பது. இதனால் மிக மிக மணம் மிகுந்த சூழலில் இருப்பது. அவன் அங்கு தரிசிக்க செல்லும் போதெல்லாம் அந்த மணத்தில் மயங்கியிருக்கின்றான். சொக்கிப்போயிருக்கின்றான்.

அது மல்லிகார்ஜூன தலங்களில் முதலாவது, தலையார்ஜுனமென அதற்குப் பெயர், மருதமரங்களை தலமாக கொண்ட அந்த அடுத்த இரு ஆலயங்கள் சோழ நாட்டில் திருவிடை மருதூர், பாண்டிய நாட்டில் திருப்புடை மருதூர்.

அந்த ஸ்ரீசைலம் ஆலயம் ஜோதிர்லிங்களில் ஒன்று, அப்படியே அன்னைக்கான சக்திபீடங்களிலும் ஒன்று, அந்த பிரசித்தியான ஆலயத்தில் சிவன் மல்லிகார்ஜூனர் அன்னை பிரமராம்பா.

ராம்பா என்றால் வண்டு, பிரமராம்பா என்றால் வண்டுகள் தேனீக்களின் தாய். அதாவது அவள் வாசமுள்ள கூந்தலை கொண்டவள் அதனால் வண்டினங்கள் அவளை மொய்க்கின்றன எனும் பொருள்.

(இதை இன்னும் ஆழமாக சொல்கின்றார் ஆதிசங்கரர்

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமத்தில் “ஸௌரப்யம்” எனப்படும் அன்னையின் இயற்கையான கூந்தலின் நறுமணம் பற்றி சொல்கின்றார் அந்த திருநாமம் “சௌகந்திக லஸத்கசா “.

அதாவது அன்னையின் கூந்தலில் இருப்பதால் மல்லிகைக்கு மணம் அதிகமாம், அந்த மணத்தின் வாசனையால் தேவலோக பாரிஜாத மரங்களை சுற்றிய வன்டுகள் கூட அதைவிட இனிமையான மணம் எனக் கருதி அன்னையினை தேடி அவள் இருக்கும் ஆலயத்துக்கு வந்துவிட்டதாம், இப்படி வண்டுகள் சுழலும் தன்மை கொண்ட கூந்தலை கொண்ட‌தால் அவள் “ப்ரமராம்பா”.

கவனியுங்கள் சங்கரர் சொல்லவருவது அன்னை மல்லிகையில் மணமாய் இருக்கின்றாள், தன் கூந்தல் மணத்தையே மல்லிகைக்கு அவள் கொடுக்கின்றாள்.

அவள் கூந்தல் மணமிக்கது அதுதான் மல்லிகையில் மணமாய் மணக்கின்றது என்பது பொருள்.

நிச்சயம் இது ஒரு பெரும் தத்துவம், அன்னை ஒளியானவள், அன்னை நீரானவள், சூரியனின் ஒளி சந்திரனின் ஒளி அவள் என்பதுபோல மலர்களின் மணமும் அவளே என்பதுதான் தத்துவம்)

இந்த திருவிளையாடல் காலம் ஆதிசங்கரர் காலத்துக்கும் முந்தைய காலம். ஆனால், அப்போதே அந்த ஸ்ரீசைலம் ஆலயம் இருந்தது; லலிதா சகஸ்ரநாமமும் இருந்தது; அவளுக்கு “சௌகந்திக லஸத்கசா” அதாவது இயற்கையாக மணமிக்க கூந்தலை கொண்டவள் எனும் பெயரும் இருந்தது.

மன்னன் இதை அறிந்திருந்தான். ஆனால், இந்த தத்துவம் தன் புலவர்க்கு தெரியுமா இல்லை மக்களில் யாருக்கேனும் தெரியுமா அப்படி தெரிந்தால் இதை எல்லா மக்களுக்கும் சொல்லும்படி ஒரு விவாதம் அமையவேண்டும் என விரும்பினான்.

ஆனால், ஒரு அரசன் மனதில் நினைத்ததை சொல்லக் கூடாது. அங்கே தமிழ்ச்சங்கமாயினும் அவன் அரசகுணத்தைவிடவில்லை தன் திறமைமிக்க புலவர்களை சோதிக்க நினைத்தான்.

அவனும் குறியீடு அல்லது தன்னைப்பற்றிய ஒரு சிறப்பை அல்லது வழக்கத்தை சொல்லி தனக்கு எதுபிடிக்கும் என்பதையெல்லாம் எல்லோரும் அறிந்த நிலையில்தான் தன் மனக்கவலை என ஒரு கேள்வியினை எழுப்பினான்.

அதவாது அவன் பெயர் வம்சசூடாமணி என அறியப்பட்டாலும் அவன் அழைக்கப்பட்ட பெயர் செண்பக பாண்டியன், அதற்குக் காரணம் அவன் அமைத்திருந்த நந்தவனமும், அவன் வழிபட்ட இஷ்ட தெய்வமும்.

அவன் நறுமணங்களை எப்பொதும் விரும்பியவன், ஸ்ரீசைலம் போல எங்கும் எப்போதும் நல்ல மணம் வீசவேண்டும் என எண்ணம் கொண்டவன், அதுவும் ஆலயத்தில் நல்ல வாசனை இருந்தாக வேண்டும் என்பதில் அவன் மிக கவனமாய் இருந்தான்.

வாசம் என்று இப்போதும் நாற்றம் என அப்போதும் சொல்லப்பட்ட விஷயம் சாதரணம் அல்ல, நல்ல வாசமே நல்ல சிந்தனையினை கொடுக்கும் அந்த சிந்தனையே மனத் தெளிவினை கொடுக்கும்.

வாசத்துக்கும் மனதுக்கும் சிந்தைக்கும் தொடர்பு உண்டு. இதனாலேதான் நல்ல வாசனை மலர்களாக தூபமாக இருக்க வலியுறுத்தி கட்டாயமாக்கினார்கள் இந்துக்கள்.

நல்ல மணமிக்க மலர்கள் சூழ்ந்த இடத்திலே ஆலயமும் அமைத்தார்கள், அப்படி அமைந்தது ஸ்ரீசைலம் ஆலயம்.

அப்படி பாண்டியநாட்டில் அமைந்த ஆலயம் மதுரை, அது கடம்பாவனம் என அழைக்கப்பட்டு, கடம்பாவனத்தில் குடியிருந்த அன்னைதான் மீனாட்சியாகி பின் அந்த சொக்கனின் ஆலயமுமாகிவிட்டது.

இவ்வரிசையில் உள்ள ஆலயம்தான் குற்றாலத்தின் செண்பகா தேவி ஆலயம், பாண்டிய மன்னர்களுக்கு மதுரை நெல்லை குற்றாலம் என பிரதான ஆலயங்கள் உண்டு.

தாமிரபரணிக்கரை சிவாலயமெல்லாம் அவர்கள் திருப்பணி செய்து எழுந்தவை, அகத்திய முனி வாழ்ந்த இடம் என்பதால் குற்றாலம் பாபநாசம் தாமிரபரணி என அவர்கள் மிக மிக பெரிய திருப்பணி செய்தார்கள்.

குற்றாலத்தில் பிரசித்தியானது செண்பகாதேவி அம்மன் ஆலயம், அது செண்பக மரங்கள் நிறைந்த மணமிக்க இடத்தில் அகத்தியரால் ஸ்தாபிக்கப்பட்டது, அந்த அம்மன் சக்திவாய்ந்தவள் சித்திரை பௌர்ணமி அங்கு விசேஷம்.

அங்கு தொடங்கப்படும் விழாதான் மதுரையிலும் சித்திரை திருவிழாவாக எதிரொலிக்கும், பாண்டிய சிவபூமியின் மரபு இது.

அந்த செண்பகா தேவிக்கும் இந்த வம்ச சூடாமணிக்கும் பந்தம் அதிகம், இதனால் அவன் தன் பெயரை செண்பகப்பாண்டியன் என மாற்றி, மதுரையில் பெரும் பெரும் நந்தவனம் அமைத்து செண்பக சோலை எல்லாம் அமைத்து மணம் வீச செய்திருந்தான்.

மன்னருக்கு நறுமணம் மிக மிக பிடித்தது என்பது எல்லோரும் அறிந்தது, அவன் அவையில் ஆண்களும் பெண்களும் பூச்சூட வேண்டும், எங்கும் நறுமணம் பரவியிருக்க வேண்டும், தமிழச்சங்கத்தில் பூக்கள் மணம்வீசவேண்டும் என்பதெல்லாம் கட்டளை.

இதனால் தன் சந்தேகம் மணம் சார்ந்ததாக இருக்கும் என்பதை கண்டுபிடிக்கும் அறிவாளிகள் அப்படியே தான் ஒரு சிவபக்தன் என்பதால் அதை கணிக்கும் மிக நுணுக்கமான அறிவாளிகள் உண்டா? அப்படி இருந்தால் அவர்களைத்தான் தன் அருகே வைத்துக் கொள்ள வேண்டும் என முடிவெடுத்தான்.

அவன் மனசந்தேகம் ஸ்ரீசைலம் ஆலயத்து அன்னை, செண்பகா தேவி அன்னையின் பெயர்களில் இருந்து வந்தது, அவர்கள் மணமிக்க கூந்தலை உடையவர்கள் என்பது ஞானியர் சொன்ன விஷயம்.

இந்த தத்துவத்தை மிக மிக நுணுக்கமாக தனக்கு விளக்கும் மகாஞானி யார் என்பதைத்தான் அவன் போட்டியாக அறிவித்தான். ஆனால், தன் மனகேள்வியினை வாய்விட்டு சொன்னான் அல்ல‌.

மன்னருக்கு மணம் பிடிக்கும் அவன் சிவபக்தன், செண்பகா தேவி பக்தன் என்பதால் அவர்களே ஊகிக்கட்டும் என விட்டுவிட்டான்.

இந்த பரபரப்புத்தான் அன்று சில வாரங்களாக தொற்றிக்கொண்டது, ஆளாளுக்கு வந்தார்கள் பாடினார்கள், தமிழ்சங்க அங்கீகார புலவர்கள் பாடினார்கள் எதுவும் மன்னன் மனதின் கேள்விக்கு பதிலாக அமையவில்லை.

மன்னன் தன் ராஜரீக அவையினை முடித்து தமிழ்ச்சங்கம் வரும்போதெல்லாம் இது எதிரொலித்தது.

அன்று ஒரு திருவாதிரை நாளாக இருந்தது, சில குறிப்புக்கள் அது மாசி மாத திருவாதிரை என்கின்றன‌.

மன்னன் வழக்கம் போல் சோமசுந்தர சன்னதி சென்றான், தன் மனதில் எழும் கேள்விக்கு இன்றாவது பதில் கிடைக்க வேண்டுமென வேண்டிகொண்டான்.

தன் அங்கவஸ்திர்ம் போன்ற பட்டு துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு நீறு பூசியவன் சொன்னான்.

(எம்பெருமானே, இது நீ ஆட்சிசெய்யும் நாடு, இங்கே நான் பொம்மை , ஆட்டுபவன் நீ ஆட்டிவைப்பவன் நான்.

நான் என்ன பொழுதுபோகாமல் கேள்வி எழுப்பினேனா? அர்த்தமே இல்லாமல் ஆயிரம் பொன் பரிசு என அறிவித்தேனா?

ஒரு அரசன் தன் நாட்டில் திறமையானவர்களை அடையாளம் கண்டெடுத்து வளர்க்க வேண்டாமா? தன் அவையார் அறிவும் திறமும் என்ன என அடிக்கடி சோதிக்க வேண்டாமா?

இதனால் இப்படி ஒரு போட்டியினை அறிவித்தேன், எம் பெருமானே அன்னை செண்பகா தேவி , அன்னை ப்ரம்மராம்பா என தேவியர் ஆலயம் வழிபட்டு வரும் நான், அந்த‌ புனிதமான சகஸ்ரநாமத்தில் எழுந்த வரிகளை உலகம் அறியும்படி எல்லோரும் அறியவேண்டும் என விரும்பினேன்.

கேள்விகள் எழுந்தால்தான் சிந்தனை வரும், சிந்தனை ஓங்கினால்தான் பலரும் பலவற்றை விவாதிப்பார்கள், பின் பதில்வரும் போது அது எல்லோரையும் சென்றடையும்.

நான் அதைத்தான் செய்கின்றேன், ஒரு அரசனாக உன் புகழை தேவியர் புகழை, உன் ஆலய தலங்கள் பெருமையினை பரப்ப வேண்டிய கடமையினை செய்கின்றேன்.

இதற்கான பதிலை எவன் எத்தேசத்தில் இருந்து கொண்டுவந்தாலும், யார் கொண்டுவந்தாலும் எங்கும் பரவபோவது உன் பெயராக பெருமையாக இருக்கட்டும், அதுவன்றி எனக்கென்ன வேண்டும்” என வேண்டிக்கொண்டான்.

அவன் வேண்டிகொண்டு தமிழ்ச்சங்கம் சென்றபின் பல பக்தர்கள் வந்தார்கள், அவர்களில் அந்த தருமியும் ஒருவன்.

அவன் மிக மிக வறுமையான குடும்பத்தில் பிறந்தவன், பெரிய அறிவாளி அல்ல பெரும் கவிஞனும் அல்ல, ஏதோ ஒன்றிரண்டு பாடுவான் அதுவும் பிரசித்தியில்லை.

ஆனால், அவனுக்கு சிவனை மிக மிக பிடிக்கும், எப்போதும் அவர் சன்னதியில் வந்து அமர்ந்து அழுவான், புலம்புவான்.

தன் நிலை சொல்லி அழுவானே அன்றி அதனால் சிவன் இறங்கினாரா வரம் அருளினாரா என அவன் சிந்தித்ததே இல்லை, சிவன் சன்னதியில் அழுவதும் புலம்புவதும் தனக்கொரு ஆறுதல் என மட்டும் செய்தான்.

அப்படியானவன் ஆயிரம் பொன் என்றதும் பெரிதும் ஆர்பரிக்கவில்லை. தனக்கெல்லாம் அது கிடைக்காது என அவனே சொல்லிக்கொண்டான், எனினும் ஊரெல்லாம் அதே பேச்சு என்பதால் தன் மன ஆதங்கத்தை வழக்கம் போல் சிவனிடம் சொல்லிக்கொண்டான்.

“சொக்கநாதா மன்னர் ஆயிரம் பொன் பரிசளிக்கும் போட்டி நடத்துகின்றார், அவர் மனதில் உள்ள சந்தேகத்தை போக்கும் பாடல் சொன்னால் தருவாராம்.

ஆயிரம் பொன் கிடைத்தால் நான் முதலில் உனக்கு நல்ல காணிக்கை செலுத்துவேன், எனக்கு நீதான் முதலில் முக்கியம்.

பின் என் குடிசை வீட்டை காரையாக கட்டுவேன். எனக்கு மணம் செய்ய கூட பெண் கிடைப்பதில்லை, சல்லிகாசு இல்லாதவனை யார் மணப்பார், காசு இருந்தால் வாழ்வு வரும்.

எனக்கென ஒரு நிலம் வாங்கி வருமானத்தை உறுதிசெய்வேன்.

பின நான் வேதபாடசாலை கட்டுவேன். மாணக்கர்களை வரவழைத்து என் காசிலே சொல்லி கொடுப்பேன், வேதம் வளர்ப்பேன், கோசாலை அமைப்பேன், உன் புகழை பாட வைப்பேன் வேதமும் சிவபக்தியும் தழைக்க வைப்பேன்.

என் குலம் தழைத்ததும் நான் எல்லா சிவாலயமும் சென்று காசிவரை சென்று தரிசித்து உன் பாதம் வருவேன்.

எவ்வளவோ ஆசைகள் சொக்கா, ஆனால் நடக்குமா? என்னவோ உன்னிடம் சொல்லவேண்டுமென தோன்றிற்று சொன்னேன்”

சொன்னவன் தன் இடுப்பில் கட்டியிருந்த துண்டை சரிசெய்து நீறிட்டு தன் கூட்டம் நோக்கி செல்ல நினைத்தான். காரணம், பெரும் புலவர்களுக்கு பெரும் வேதியர்க்கு உதவி செய்து சிறு கூலிவாங்கும் அல்லது உணவுக்கு பணிசெய்யும் ஒருவனாய் இருந்தான்.

தன் கிழிந்தவேட்டியினை சரி செய்தபடியே அவன் சில அடிகள் எடுத்து நடந்தபோது குரல் கேட்டது.

“தருமி, உனக்கு என்ன பாடல் வேண்டும்?”

அவன் சுற்றுமுற்றும் பார்த்தான் யாரும் இல்லை, “யார் இது?” எனக் கேட்டான்.

“சொக்கன் சன்னதியில் யார் பேசுவார்கள்? உனக்கு என்ன பாடல் வேண்டும் என்பதை மட்டும் கேள்” என்றது குரல்.

தருமிக்கு உடல் சிலிர்த்தது. மனம் நெகிழ்ந்தான். உருவம் இல்லாவிட்டாலும் குரலை கேட்டவன் சொன்னான், “சொக்கநாதனின் குரல் என நம்பி சொல்கின்றேன், அந்த ஆயிரம் பொன் கிடைத்தால் நல்வாழ்வு வாழ்வேன். ஆனால் மன்னன் மனகுறை எனக்குத் தெரியாது.

தெரிந்தாலும் கவிதை எழுத தெரியாது, வராது. எனக்கு தமிழ் முறையாக தெரியாது. அந்த ஆற்றலுமில்லை.

அதனால் அந்த கவிதை கிடைத்தால் பிழைப்பேன், சொக்கனால்தான் இது சாத்தியமாகும்”

சொன்னவன் அழுதான்.

அவன் கண்ணீர் துளி விழுமுன்னே ஒரு ஓலை அவன் முன் விழுந்தது, அவன் அதை எடுத்து வாசித்தான்.

“‘கொங்குநேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற் செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே”

என நான்கே நான்குவரிதான் இருந்தது.

“சொக்கா இதன் பொருள் கூட எனக்கு சொல்ல தெரியாதே” என மறுபடியும் கலங்கினான் தருமி.

“இதை சபையில் கொடுப்பதுதான் உன் வேலை, பொருள் சொல்வது என் வேலை” என பதில் வந்தது.

தருமி பசியுற்ற ஏழை அறுசுவை விருந்துக்கு ஓடுவதை போல ஓடினான், வீசியெறியும் தானியத்தை உண்ண விரையும் பறவை போல் ஓடினான்.

அங்கே தமிழ்ச்சங்கம் கூடியிருந்தது, எங்கும் பூக்களின் நறுமணம் பரவியிருந்தது, மன்னன் வழக்கம் போல இறுக்கமாக அமர்ந்திருந்தான்.

தலைமை புலவன் நக்கீரன் இன்னும் இறுக்கமாக இருந்தான். தான் மகாகவிஞன் எனும் கர்வம் அவனுக்கு இருந்தது, தான் வீற்றிருக்கும் அவையில் மன்னரின் கவலை தீர்க்கவில்லை எனும் இயலாமையும் மன்னன் ஏன் தன்னிடம் தன் கவலை சொல்லவில்லை தான் அப்படி குறைந்துபோனவனா எனும் ஒரு அகங்காரமும் உள்ளே இருந்தது.

ஆயிரம் பொன்னுக்கு ஆசைப்பட்ட புலவர்கள் பலர் வந்தார்கள். அவர்கள் பாடல் எதுவும் சொல்லிக்கொள்வதாக இல்லை.

மன்னன் சிவனை வேண்டியபடி அமர்ந்திருந்தான். அவன் மனதில் செண்பகாதேவியும், ப்ரம்மராம்பாவும் வந்து கொண்டே இருந்தார்கள். அவர்கள் மணம் வீசும் கூந்தலைமொய்த்த வண்டுக்கள் வந்து கொண்டே இருந்தன‌.

அப்போதுதான் தருமி உள்ளே நுழைந்தான், “என் பெயர் தருமி” என அவன் சபை நடைமுறை தெரியாமலே வாசலில் சத்தமிட்டான்.

காவலர் நகைத்தனர், அவனோ ஆயிரம் பொன் வாங்கும் நினைப்பில் இருந்தான். முதலில் அந்த ஆயிரம் பொன்முடி எங்கே எனத் தேடினான். அது தொங்கிக் கொண்டிருந்தது.

“அப்பாடா இன்னும் யாரும் வாங்கவில்லை” என மகிழ்ந்துகொண்டவன் சபைக்குள் ஓடினான்.

ஒரு புலவர் அவனை தடுத்து “யாரப்பா நீ? ” என வினவினார்.

“மன்னரின் மனக்கவலை அறிந்து பாடலை நானே எழுதியுள்ளேன், அதை வாசித்து பரிசில் பெறவேண்டும்” என்றான்.

புலவர் அவனை நகைத்தபடி பார்த்தார்.

காரணம், அந்நாளைய சிறந்த புலவர்கள் பரிசுகள் பல பெற்றிருந்தால் பெரும் ஆபரணம் அணிந்திருப்பர், நவரத்தின ஆபரணம் வைரகடுக்கண் எல்லாம் இருக்கும், பார்க்க ஒரு தேஜஸ் தெரியும்.

இங்கோ இவனுக்கு தரித்திரகோலம் மட்டும் இருந்ததால் அவன் மேல் நம்பிக்கையின்றி “போ” என விட்டுவிட்டார்.

அவன் மன்னன் முன் வந்து வணங்கினான், அவனை ஏறிட்டு பார்த்தார் நக்கீரர், “இவனா, இவன் ஒரு புலவனா? இவனை பார்த்தால் எதற்குமே தகுதியற்றவனாக அல்லவா இருக்கின்றது.

தலைமுடி சரியாக கட்டவில்லை, தாடிமுடி சீர் செய்யவில்லை, கிழிந்த வேட்டி, இவன் அரசனை காணும் தயாரிப்பிலே வரவில்லையே? இப்படியா வருவார்கள்” என்ற படி அவனை நோக்கிக் கொண்டிருந்தான்.

மன்னன் செண்பக பாண்டியன் எங்கோ பார்த்துக் கொண்டிருக்க , மன்னரின் உதவியாளர் கையசைக்க தருமி அந்த பாடலை வாசித்தான்.

‘கொங்குநேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழிஇய நட்பின் மயிலியற் செறியெயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே”

மன்னன் முகம் மெல்ல மெல்ல பிரகாசித்தது, “என்ன பாடினீர், இன்னொரு முறை பாடும்?” என அதிர்ச்சியான ஆனந்தத்தில் கேட்டான்.

சபை அதிர்ந்தது, நக்கீரன் மிரண்டான், இதென்ன யார் பாடலுக்கும் வாய்திறக்கா மன்னர் இவன் பாடலுக்கு பதில் கொடுத்தார் எனப் பார்த்தது.

தருமிக்கு கைகால் ஆடியது, நா வறண்டது. காரணம், அவனுக்கு பாடலின் பொருள் தெரியாது, “மன்னா, இப்பாடல்..” என இழுத்தான்.

அவை சொன்னது “மரியாதை தெரியாதவனே மன்னர் சொல்லிவிட்டார் அல்லவா. படி”

தருமி நடுங்கியபடிவே வாசித்தான்.

அதுவரை தன் இருக்கையில் ஒரு கை ஊன்றி கிடந்த மன்னன் “இதுதான் நான் தேடிய விடை, இதுதான் எனக்கு வேண்டிய பதில், என் மனதின் எல்லா காட்சியும் இவன் பாடலில் வந்துவிட்டது, ஆயிரம் பொன் இவனுக்கே உரித்தாகுக. அதற்கு மேலும் கொடுங்கள்” என மகிழ்ந்தான்.

அது அரசவை என்றால் மன்னன் சொல்லுக்கு மறுபேச்சில்லை. ஆனால், தமிழ் அவை அல்லவா?

தங்களுக்கு கிடைக்கா பெயரும் புகழும் தருமிக்கு கிடைத்ததில் எல்லோருக்கும் பொறாமை வந்தது, அதுவும் நக்கீரனுக்கு அதிகம் வந்தது.

கர்வியான அவன் கர்வம் இந்த அவமானத்தில் தீயாக பற்றியது.

“மன்னா இப்பாடல் பரிசுக்கு உகந்தது அன்று, தவறான பாடலுக்கு இந்த அவை பரிசளித்தால் உங்கள் புகழுக்கு இழுக்கு” என்றான்.

தருமி அதிர்ந்தான். மன்னன் கேட்டான் “என்ன குற்றம், இலக்கணம் சரியாக வருகின்றது, சந்தமும் இதர இலக்கணமும் ஒரு பிசிறின்றி அமைந்திருக்கின்றது.

என் மனக்குறை தீர்ந்தது, பின் என்ன நக்கீரரே” என்றான்.

நக்கீரன் தன் மொத்த வன்மத்தை கொட்டி பேசினான், ” மன்னா, இந்த பாடலின் பொருள்படி பெண்களின் கூந்தல் இயற்கை மணமுள்ளது என்கின்றான், அப்படி இருக்கமுடியுமா?

குளிக்காத நறுமண தைலம் பூசாத, பூச்சூடாத பெண்ணின் தலைமுடி மணக்குமா? இதை ஒருவன் பாட்டில் சொன்னால் இந்த சபை ஏற்கமுடியுமா? “

மன்னன் நிதானமாக சிந்தித்தான், “ஓ.. இந்த புலவனும் தான் நினைத்தபடி அன்னை பெருமையினை சொல்லவில்லை மானிட பெண்ணை பாடிவிட்டான்.. எல்லாம் சிவமயம்.. எல்லாம் அவன் விளையாட்டு ஆயிரம் பொன்னுக்கான நேரம் இன்னும் வரவில்லை” என்றவன் அமைதியானான்.

எனினும் புலவன் ஒரு விளக்கம் கொடுப்பான் என எதிர்பார்த்தான்.

நக்கீரன் கொதித்தான் “சொல்லும் புலவரே, இப்பாடலின் பொருள் குற்றமுள்ளதுதானே”

தருமிக்கு கையும் காலும் ஓடவில்லை, கடும் பசியில் இருந்தவன் பந்தி அமரும்போது விரட்டியது போல் அவன் நிலை ஆகிவிட்டது.

“நான் பாடலை சொன்னேன் மன்னர் மகிழ்ந்தார் வேறு என்னவேண்டும்” என்றான்.

“விளக்கம் வேண்டும், பொருள் குற்றம் என சபை சொன்னதை விளக்க வேண்டும், இல்லையேல் வெளியேறும்” என மிரட்டினான்.

தருமி மிகுந்த அவமானப்பட்டு வைரநகைகளும் பட்டும் உடுத்திய மகளிர் கூட்டத்தின் நடுவே கிழிந்த சேலை அணிந்த பராரி ஏழை தலைகுனிந்து நாணி செல்வது போல் சென்றான்.

“மன்னா மன்னிக்கவேண்டும், அவன் அதை எழுதியிருக்கமுடியாது, அவன் அரசனை காணும் கோலத்திலே வரவில்லை, யாரோ எழுதி வைத்ததை ஏமாற்றுக்காரன். அள்ளி வந்திருப்பான்.

இந்த பொருட்குற்றமுள்ள பாடலை தானே வந்து தர அஞ்சிய யாரோ இவனை அனுப்பியிருக்கலாம், எது எப்படியாயினும் தவறான பொருள் கொண்ட பாட்டுக்கு விருது அளிக்க எம்மால் முடியாது” என சொல்லி அமர்ந்தான் நக்கீரன்.

மன்னன் பாதி தெளிந்தான், தன் திட்டத்தில் பாதியினை தொட்டுக்காட்டிய சிவன் மீதியும் காட்டட்டும் என “சிவனே..சொக்கநாதா..’ என சொன்னபடி மறுபடி சரிந்துகொண்டான்.

மன்னனாயினும் அவன் விதிகளுக்கு கட்டுப்பட்டவனே.

அந்த காட்சி நடந்ததும் புலவர்கள் சுதாரித்தார்கள், நக்கீரனும்சுதாரித்தான். ஆக, மன்னன் மனதில் உள்ள கவலை பெண்கள் கூந்தலுக்கு மணம் உண்டா இல்லையா என்பது?

போதும் இது போதும், இனி ஆயிரம் அடிகளில் காவியமே எழுதி அள்ளிவிடலாம் என சிந்தித்தார்கள் நக்கீரனுக்கே அந்த யோசனை வந்தது.

புலவர்கள் புத்திசாலிகள். உடனே பிடித்து கொண்டார்கள் இன்னும் சில நொடிகளில் அவர்கள் ஆரம்பித்துவிடுவார்கள்.

அங்கே வெளியேறிய தருமி சொக்கன் சன்னதிக்கு சென்றான், “வீட்டில் தன் வறுமை எண்ணி தரித்திரம் எண்ணி யாருக்கும் தெரியமால் முடங்கி கிடந்தவனை பணக்காரன் அவைக்கு இழுத்து சென்று இவன் இப்படியான தரித்திரன் என ஊரும் உலகமும் பரிகசிக்க செய்ததா உன் சித்தம்.

சொக்கா.. நீயா இப்படி செய்தாய், ஆனாலும் அவமானம் எனக்கு புதிதல்ல, நாளை உன்னிடம் வேண்ட மீண்டும் வருவேன் அப்போது என்னை இதைவிட இன்னும் அவமானபடுத்து என் கர்மா கழியட்டும்” என்றவன் அந்த ஏட்டை வீசிவிட்டு சென்றான்.

அடுத்த நொடி அந்த தமிழ்ச்சங்கத்தில் ஒரு இளம் கவிஞன் கையில் ஏடுகளுடன் ஒளிவீசும் கண்களுடன் உடலெல்லாம் நகைஅணிந்தபடி பட்டாடை உடுத்தி நெற்றியில் விபூதி பூச வந்தான், ஒரு தெய்வீகம் அவனிடம் இருந்தது.

ஒரு நறுமணம் அந்த அவையினை சூழ்ந்து கொண்டது.

அவன் கேட்டான், “இந்த பாடலில் பொருள் குற்றம் எனச் சொன்னது யார்? ” நக்கீரன் உடனே வாதிட தொடங்க அவை சூடானது.

“நீர் யார்?

நான் யார் என்பது அவசியமல்ல, இங்கே சண்டை பாடலைப் பற்றியது.

அதில் என்ன சண்டை. குற்றமுள்ள பாடலை யார் தந்தாலும் தமிழ் சபை ஏற்காது.

என்ன குற்றம் அப்படி கண்டீர்கள்?

பாடலை எழுதியவன் என எவனோ வந்தான். இப்பொது விளக்கம் சொல்ல நீர் யார்? ஆயிரம் பொன்னுக்கு ஆசை கொண்டீரோ?

பொன், பொருள், அரசுகள் எல்லாம் கடந்தவன் நான். பொன்னுக்காக அல்ல, இந்தப் பாடலை ஒருவன் விளக்கமுடியாமல் தலைகுனிந்து நின்றான், அவனுக்காய் வந்தோம். இங்கு மூலம் விஷயமல்ல, பாடலில் என்ன குறை அதை சொல்லும்.

இப்பாடலின் பொருளை நீர் சொல்லும் பார்க்கலாம்.

“”தேனைத் தேடிச் சுற்றி வரும் வண்டே விருப்பு வெறுப்பு என்று ஒரு பக்கம் பேசாமல் உண்மையைச் சொல். பூக்களை நாடி அவற்றின் தரம் அறிந்து, தேன் உண்டு மயங்கி வருவது உன் பிழைப்பு. மலர்களின் மணம் அதைப் பற்றிய குணம் அனைத்தும் நீ அறிந்து பழகி உள்ளாய். மயிலின் சாயலும் முல்லைப் போன்ற பற்களும் உடைய என் காதலியின் கரிய நீண்ட கூந்தலையும் நீ அறிவாய், நறிய பூ அதனினும் உண்டோ? இருந்தால் சொல்க நீ” என்பது அதன் பொருள்.

அதாவது?

என்ன அதாவது பொருள் தெரியா புலவரய்யா நீர்? பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலே மணம் உண்டு எனப் பாடினேன்.

அது எப்படி இருக்கமுடியும்?

எப்படி இல்லாமல் இருக்க முடியும்?

பெண்கள் நறுமணமிக்க மலர்களை சூடுவதாலும் நல்ல தைலங்களை பூசுவதாலும் மட்டுமே மணம் வரமுடியும், அதனால் பாடலின் பொருள் தவறு.

அப்படியா? நால்வகை பெண் அறிவீரோ?

ஆம். அறிவோம்.

பத்மினி ரக பெண்கள் கூந்தல் மணம் வீசும் என்பதையும் அறியாதவரோ நீர்?

எந்த மினிமினிக்கும் அப்படி இருக்க முடியாது.

எந்த பெண்ணுக்குமா?

ஆம்.

அப்படியா எந்த பெண்ணுக்கும்…

அப்படியானால் நீ வணங்கும் சோமசுந்தரின் மனைவி அந்த மீனாட்சிக்கு?

அவளுக்கும் இருக்கவே முடியாது. தேவியருக்கும் இருக்க முடியாது.

மன்னன் புன்னகைத்தான். தன் அவையில் இருப்போருக்கு பல பாடல்கள் தெரியவில்லை, பல மறைபொருள் தெரியவில்லை. இனியாவது தெரியட்டும் இந்த புலவன் சரியானதை செய்கின்றான் என ஒன்றும் அறியாதவன் போல் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தப் புலவன் சூடாகச் சொன்னான்.

“நக்கீரா, இதுதான் உன் முடிவா?

ஆம். எந்த பெண்ணுக்கும் கூந்தலில் மணம் இருக்க முடியாது.

அன்னை தேவியருக்கும்…

ஆம்.

என்னை நன்றாக பார்..”

நக்கீரன் உற்றுப்பார்த்தான். அந்த நெற்றியில் ஒரு கண் தெரிந்தது. வந்தது சிவனே என அறிந்துகொண்டான. ஆனாலும் அவன் அகம்பாவம் விடவில்லை.

என்ன ஆனாலும் தன் கர்வமே பெரிது என நின்றான்.

சிவன் தன் நெற்றிக்கண்ணை திறந்தார், அந்த வெம்மை அதிகரித்தது, அந்த வெம்மை அதிகரிக்காமல் அவன் பின்வாங்கினான், வெப்பம் இன்னும் தகித்தது, அவன் பின்வாங்கிச் சென்றான்.

ஒரு கட்டத்தில் முடியாமல் பொற்றாமரை குளத்தில் வீழ்ந்தான், அப்போதும் வெம்மை தாங்காமல் உடலெல்லாம் கொப்புளங்கள் வந்தன.

அத்தோடு அந்தப் புலவனும் மறைந்தான், அவை திடுக்கிட்டது, பாண்டிய மன்னன் செண்பகப்பாண்டியன் அதிர்ந்தான்.

பொற்றாமரை குளத்தில் கிடந்த நக்கீரருக்கு உடலெல்லாம் வெம்மை தாளவில்லை, நீரில் கிடந்தும் அவரின் வெம்மை தணியாத ஆச்சரியம் மேலிட்டது.

புலவர்களும் அரசனும் அதிர்ந்து நிற்க நக்கீரர் மெல்ல சொன்ன்னர், “வந்தது ஈசன் என் கர்வத்தால் இப்படி ஆனேன்”

அவர் சொல்லி தலைகுனிந்தார். மொத்த சமூகமும் சிவனிடம் வேண்டத் தொடங்கிற்று.

தன் கர்வத்தை சிவன் போக்க வந்தார் என நக்கீரர் “கயிலாயம் பாதி காளத்தி பாதி’ எனும் பாடலைப் பாடினார். அந்தாதி வகை பாடல் அது.

அவர் அப்பாடலை பாடும் போது சிவனே தோன்றினார், கயிலாயம் எல்லா பாவிகளுக்கும் மன்னிப்பு கொடுப்பது, காளத்தி என்பது அறியாமல் கண்ணப்ப நாயனார் பன்றிக்கறி கொடுத்ததையும் ஏற்று அவரை ஆட்கொண்டது.

அப்படி தன் அறியாமையும் சிவன் மன்னிக்க வேண்டும் என அவர் மன்றாட ஈசனே தோன்றி கரம் கொடுத்து அவரை வெளியே இழுத்துப்போட்டார், நக்கீரரின் வெம்மை அங்கே தணிந்தது.

அந்த இடத்திலே “தட்சனின் கர்வம், எமனின் கர்வமமெல்லாம் அழித்த அன்னலே, ஜலேந்திரனை அழித்த பெருமானே, திரிபுரம் எரித்த எம்பெருமானே.

இராவணனுக்கே மன்னிப்பு அருளியவரே…

எவ்வளவோ அகங்காரிகளை அழித்து பிரம்மனாலும் விஷ்ணுவாலும் அடிமுடி காணமுடியா அளவு நின்றவரே.

கரிகுருவிக்கும் நாரைக்கும் காட்டிய இரக்கத்தை எனக்கும் தந்தீரே” என மன்றாடி அழுதுத் தொழுதார்.

பின் அவர் இயற்றியதுதான் “பெரும்தேவபாணி, திருபெரும் கூற்றிருக்கை”

நக்கீரரின் கர்வம் அழிந்தது, பின் சபை கூடி அன்னையின் கூந்தலுக்கு இயற்கையில் மணம் உண்டு. அதாவது மலர்களின் மணமெல்லாம் அன்னை, அன்னை என்றால் அவளில் பாதியான சிவன்.

சிவன் எல்லா உயிராகவும் இயக்கமாகவும் இருக்கின்றார், எம்பெருமான் பூக்களில் மணமாக இருகின்றார் என ஒப்புக்கொண்டது.

லலிதா சஹஸ்நாரமத்தினை தமிழ்படுத்தும் பாடல்கள் அதன் பின்பு நிறைய வந்தன, தமிழ்ச்சங்கம் அன்னை பக்திக்கும் முக்கியத்துவம் கொடுத்தது.

அந்த ஆயிரம் பொற்காசுகளும் சிவனை நம்பி வாழ்ந்த தருமிக்கே வழங்கப்பட்டது, தன்னை சிவன் கைவிடவில்லை என அவனும் மிக மகிழ்வாக சிவனுக்கு சாட்சியாக நின்றான்.

இதுதான் தருமிக்கு சிவன் பொற்கிழி அளித்த திருவிளையாடல்.

இது பாண்டிய மன்னனின் சந்தேகத்துக்கு சிவன் விடையளிக்க வந்தார், பெண்ணின் கூந்தலுக்கு மணம் உண்டா? நக்கீரரை சிவன் தண்டித்தார் என பார்த்துவிட்டு கடக்கக் கூடிய விஷயம் அல்ல‌.

இது அன்னையின் புகழைப் பாடி சிவனில் பாதியாக அவள் செய்யும் பராக்கிரமத்தை அவ்ளின் அளப்பரிய ஆற்றலை காட்டுகின்றது.

செண்பகாதேவி அன்னை, ப்ரம்மராம்பா அன்னை என அவள் மணம் வீசும் கூந்தலை கொண்டிருக்கின்றாள் வண்டுகளை ஈர்க்கின்றாள் என்பது அவளின் சக்தியால் எல்லா உயிர்களையும் ஈர்த்து காக்கின்றாள் என்பது.

சிவன் அவளில் நின்று இயக்குகின்றார், எல்லாமும் சிவமயம் என்பது.

இங்கே அன்றைய பெரும் அரசனும், அன்றைய பெரும் ஏழையான தருமியும் ஒரே சன்னதியில் நின்று தொழுதார்கள், இருவருக்குமே சிவன் தகுந்த நேரம் வந்து அருளினார்.

அப்படியே நக்கீரரின் கர்வம் போக்கவும் வகை செய்தார்.

நிச்சயம் தமிழ்சங்கத்துக்கும் அதாவது நக்கீரர் தலைமையிலான புலவர் குழுவுக்கும், மன்னனுக்கும் ஏதோ ஒரு மனதாங்கல் இருந்திருக்கின்றது, இந்தப் புலவர் கூட்டம் கர்வத்தில் இருந்திருக்கின்றது.

தமிழ் என்பது இறைவனுக்குரிய மொழி, சிவனைப் பாட மட்டுமே உருவான மொழி என்பதை தாண்டி அந்தத் தமிழின் இலக்கியம் வேறு எங்கோ திரும்பியபோது ஒரு குழப்பம் வந்து அது கர்வமாயிருக்கின்றது.

அந்த கர்வத்தை சிவன் உடைத்துப்போட்டு தன்னைப்பற்றி நக்கீரர் மூன்று நூல்களை பாடும்படி செய்து தமிழ்ச்சங்கத்தை சரிசெய்தார்.

ஆம். இந்தத் திருவிளையாடல் சொல்வது அதுதான். நம்முடைய வேண்டுதல் ஏன் காலதாமதமாகின்றது எனச் சலித்துக்கொள்ளக் கூடாது. நம் கர்மா சிலரோடு தொடர்பு பட்டிருந்தால் அவர்களுக்கான நேரம் வரும்வரை காத்திருத்தல் அவசியம்.

தருமி நாள்தோறும் அழுதாலும் மன்னனும் நக்கீரனும் இவனும் ஒரே புள்ளியில் சந்திக்கும் போதுதான் இவன் சிக்கல் தீர்ந்தது. ஆக, சிவனை வழிபடும் போது காத்திருத்தல் அவசியம்.

அதுவும் கடைசி கட்ட சோதனைகள் இன்னும் பெரியவை, அது மனனுக்கு, தருமிக்கு, நக்கீரனுன்னு என எல்லோருக்கும் வந்தது. அதனைத் தாங்கி சிவனிடம் சரணடையும் போது அவர் கைவிடுவதில்லை.

மகா முக்கிய விஷயம் அகந்தையும் கர்வமும் சிவனுக்கு ஆகாது, சிவன் அகந்தையினை வெறுக்கின்றார்,அகங்காரம் அவருக்கு பிடிக்காதது.

அதை தன் அடியார் கொண்டிருந்தால் சேற்றில் கிடக்கும் குழந்தையினை தாய் குளிப்பாட்டி சேர்ப்பது போல் அகந்தை அழித்து சேர்த்து கொள்கின்றார். நக்கீரருக்கு அதுதான் நடந்தது.

அதனால் அகங்காரமில்லா மனம் சிவனுக்கு உகந்தது என்பதை அறிதல் அவசியம்.

இப்படி பல தத்துவங்களை போதிக்கும் இந்தத் திருவிளையாடல் இறைவன் நல்ல மலர்களில் வாசம் செய்கின்றார் என்பதையும் சொல்கின்றது.

இந்துக்கள் வழிபாட்டில் மலர்கள் வாசமிக்க மலர்கள் முக்கியமானவை, அந்த மணம் நல்ல உணர்வுகளை மனதில் கொண்டுவரும், மனம் அமைதியாகும், நல்ல சிந்தனை வரும்.

நல்ல வாசனைகள் மூளையில் நல்ல மாற்றங்களை தருகின்றது என்பது விஞ்ஞான முடிவு.

ஆம். இந்தத் திருவிளையாடல் அந்தத் தத்துவத்தையும் போதிக்கின்றது. நல்ல மணமிக்க மலர்கள் பூஜையில் அவசியம். தீபம், தூபம், நைவேத்தியம் என்பது மகா முக்கியம் மலர்களும் அவசியம் என்பதை சொல்லி வழிபாட்டின் நுணுக்கங்களையும் கற்றுத் தருகின்றது.

இந்தத் திருவிளையாடலை படிப்போர்க்கு அன்னையின் அருள் கூடும், தருமியின் துயரம் தீர்ந்ததுபோல் துயர் தீரும், நக்கீரர் அகந்தை அழிந்ததுபோல் அகந்தை அழியும், மன்னன் நல்ல வழியினை சிந்தித்ததுபோல் மக்களும் நல்வழியில் பிறரை நடத்த சிந்திப்பார்கள் என்பது இறைவன் வாக்கு.

அதன்படி எல்லோருக்கும் எல்லா நலன்களையும், அறிவையும், பொருளையும், ஞானத்தையும் இறைவன் அருளட்டும்.

திருவிளையாடல் புராணம் 05 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா: 05)
உலவாக்கோட்டை கொடுத்த படலம்.

அந்த மதுரையில் அன்று அடியார்க்கு நல்லார் எனும் ஒரு விவசாயி இருந்தார். அவரிடம் நிலபுலன்களும் ஏகப்பட்ட மாடுகளும் இருந்தன. வண்டிமாடுகள் உழவு மாடுகள் இருந்தன. நன்கு விளைச்சல் பெருகும்படி அவரின் நிலமும் செழிப்பான மண்ணைக் கொண்டதாய் இருந்தது.

முப்போகம் விளையும் நிலமும், அது கொடுத்த செல்வமும் பெரும் மாளிகை போல் வீட்டையும் பெரும் வசதிகளையும் கொடுத்தது. வீடெல்லாம் எல்லாப் பொருளும் நிரம்பி, நகைகளும், மாணிக்கமுமாக குவிந்திருந்தது. வேலையாட்கள் நிரம்ப இருந்தார்கள்.

அக்காலம் கால்நடையும் நிலமும் இருந்தால் பெரும் வசதியான வாழ்வினை அது கொடுக்கும். அவ்வகையில் மிகப்பெரும் செல்வந்தராய் அவர் அங்கு மதிக்கப்பட்டார்.

அவரின் மனைவி தர்மசீலை.அவள் கணவனுக்கு ஏற்ற புண்ணியவதி.

அடியார்க்கு பரம்பரை சொத்து நிரம்ப இருந்தது. இயல்பிலே சிவன் மேல் பக்திமேல் கொண்ட கணவனும் மனைவியும் சிவனடியார்களை விருந்து உபசரித்து கொண்டாடினார்கள். தினமும் ஏகப்பட்ட அடியார்கள் வந்து அங்கு அமுது உண்டார்கள்.

அவர் வீட்டு களஞ்சியம் பெரும் பெரும் நெல் தாழிகளைக் கொண்டிருந்தது. அவை எல்லாம் பல மூட்டை நெல்லை கொண்டிருக்கும் அளவு பெரியவை, அவை எந்நாளும் நிரம்பி இருக்கும் அளவு அங்கு தானிய வளம் இருந்தது.

இந்த அடியார்க்கு நல்லாரும் அவர் மனைவி தர்மசீலையும் விளைச்சல் வீடுவந்ததும் கூலியாட்களுக்கு போக கிடைத்ததை ஆறு பங்கு எனப் பிரிப்பார்கள்.

ஒரு பங்கு அந்நாளைய வழக்கப்படி அரசனுக்கு வரியாக செல்லும். மீதி அனைத்தும் அடியார்களுக்கு உணவிடுதல், அடியார்களுக்கு பொருள் வழங்குதல், அடியார்கள் பயணத்துக்கு உதவுதல் என அள்ளி அள்ளி கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

அது போக்குவரத்து வசதி இல்லாக் காலம், எல்லா இடமும் நடைபாதையும் மாட்டுவண்டி அல்லது குதிரை வண்டிகள்தான் செல்லும்.

சிவனடியார்கள் என்பவர்கள் ஊர் ஊராக சிவாலய தரிசனம் செய்பவர்கள், அவர்களுக்கு உணவும் இன்னும் தேவையானதை கொடுப்பதும் மகா புண்ணிய காரியமாக இருந்தது. அதைத்தான் இந்த அடியார் குடும்பம் செய்துக் கொண்டிருந்தது.

தினமும் அடியார்கள் வரும்போது கணவன் அல்லது மனைவி கால் அலம்ப நீர் கொடுப்பதும், பின் நீறு கொடுத்து வரவேற்று உபசரித்து உணவு மண்டபத்துக்கு அழைத்துச் சென்று உணவிட்டு மகிழ்வதும் அங்கு இயல்பான ஒன்று.

அடியார்கள் கிளம்பும் போது அவர்கள் தேவை எதுவோ அதற்கு வழிசெய்து அனுப்புதலும் அவர்கள் அன்றாட காரியம்.

இதனை இயல்பாக செய்து கொண்டிருந்தனர் அத்தம்பதியர். அவர்களும் அவர்களின் மாடுகளும், நிலங்களும், வேலையாட்களும் சிவதொண்டு ஒன்றுக்காய் வாழ்ந்து கொண்டிருந்தனர்.

அவ்வப்போது விளைச்சல் வந்தவுடன் எல்லாம் பங்கிட்டு வைத்துவிட்டு பணமும் நகையும் எடுத்துச் சென்று ஆலவாயனை வணங்கி வருவதும் அவர்கள் வாடிக்கையாய் இருந்தது.

உலகில் எல்லா நல்லவர்க்கும் எதிரிகள் இருப்பார்கள், தன்னால் செய்யமுடியாத ஒன்றை இன்னொருவன் செய்யும்போது அவனுக்கு எதிரிகள் உருவாவது இயல்பு.

அப்படி இந்த அடியாரையும் எதிரிகள் பழித்தார்கள், பரமபரை சொத்தை அள்ளி வீசுகின்றான், செல்வத்தின் அருமை தெரியாதவன்,விளம்பரப் பிரியன் என்றெல்லாம் அவருக்கு வசவுகள் வந்தன‌.

அவர் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தன் கடமை சிவனடியாரை காப்பதே எனச் செய்து கொண்டிருந்தார்.

இந்த ஒப்பற்ற அடியாரை உலகுக்கு காட்டி தன் அடியார்க்கு தொண்டு செய்வோரை தான் எப்போதும் கண்மணிபோல் காப்பேன் என உலகுக்கு சொல்ல சித்தம் கொண்டார் சிவன்.

பக்தனின் பெருமை விளங்க அவனை புடம்போடுதல் அவசியம். ஆம். எந்த சோதனையிலும் கலங்காத பக்தனின் பக்தியே சாலச் சிறந்தது, அதுதான் சரித்திரமாய் நிலைக்கும்.

தெய்வம் தன் பக்தனை அறியும், யார் சோதனையினை தாங்குவானோ அவனைத்தான் தெய்வம் சோதிக்கும்.

இந்த பக்தன் இதை தாங்குவான் என அறிந்துதான், அவனைத்தான் தெய்வம் சோதிக்கும். எல்லாரையும் அது சோதிப்பதில்லை.

சோதனை இல்லாமல் ஒருவன் பக்தி உலகறியமுடியாது, தேர்வு இல்லாமல் மாணவன் சிறப்பு இல்லை, யுத்தமில்லாமல் இராணுவத்தானுக்கு சிறப்பு இல்லை.

அப்படி பெரிய சோதனை இல்லாமல் பக்தனுக்கு பெருமை இல்லை.

சிவன் அடியார்க்கு நல்லாரை சோதிக்கத் தொடங்கினார். முதலில் அடியார்க்கு நல்லார் வயலில் விளைச்சல் மெல்ல மெல்ல குறைய ஆரம்பித்தது. மழையின்மை, மண்வளம் குன்றிப்போனது, ஏகப்பட்ட களைகள், பதர் விளைச்சல் என எல்லாம் நாசமாக ஆரம்பித்தது.

பெரும் செல்வனுக்கு இதையெல்லாம் முதலில் தாங்கமுடியும், அப்படித்தான் அவரும் தாங்கிக் கொண்டார். வீட்டின் திரள் செல்வம் அதனை முதலில் தாங்கிற்று.

ஆனால், மறுபடி மறுபடி அதே இழப்பு வர வர ஒவ்வொன்றாய் இழக்க நேரிட்டது.

என்ன இழந்தாலும் அடியார்களுக்கு அன்னமிடுவதைமட்டும் நிறுத்தாமல் செய்து கொண்டே வந்தார் அடியார்.

விளைச்சல் ஒரு கட்டத்தில் நின்றே போக முதலில் மாடுகள் விற்பனையாயின, பின் தங்க நகைகள் விற்பனையாயின, பின் முக்கியமான சொத்துக்கள் ஒவ்வொன்றாய் கையினை விட்டு செல்லத் தொடங்கின‌.

அந்த தம்பதியரோ அந்த நிலையிலும் உற்சாகமாக சிவனடியார்க்கு தொண்டு செய்துதான் வந்தார்கள். ஒவ்வொரு சொத்துக்களாய் இழந்துக்கொண்டே இருந்தாலும் தங்கள் திருத்தொண்டில் வழுவவில்லை.

வறுமையினை காரணம் காட்டி, செல்வம் இல்லாதததை காரணம் காட்டி திருத்தொண்டை நிறுத்தவில்லை. தங்கள் இயல்பில் செய்தார்கள்.

கடைசியில் ஒவ்வொரு நிலமாக இழந்து நிலமே இல்லா நிலைக்கு வந்தபோதும் கடைசி சொட்டு பணத்தையும் அடியார்க்கு இட்டார்கள்.

இன்றுமாறும், நாளை மாறும் சிவன் கைவிடமாட்டார் என சிவபக்தியில் உணவிட்டவர்களுக்கு அந்த நாள் வரவே இல்லை. ஆனாலும், திருத்தொண்டை செய்துக்கொண்டே இருந்தார்கள்.

நிலமும் கைவிட்டு போன பின் வீட்டில் இருந்த பண்டபாத்திரங்களை விற்றார்கள். அதில் சிவனடியாருக்காய் நெல்லை சேமித்த குதிர்களும் இருந்தன‌.

எல்லாம் விற்று இனி எதுமில்லை என்றபோதும் திருத்தொண்டை நிறுத்தவில்லை.

கடன்வாங்கி தங்கள் சிவசேவையினை செய்தார்கள். கடன் கொடுத்தவர்கள் சும்மா கொடுக்கவில்லை. அவர் மாளிகை போன்ற வீட்டை குறிவைத்தே கொடுத்தார்கள்.

அந்த வீட்டுக்கு ஈடான தொகை வரும்வரை பணம் கொடுத்துக்கொண்டே இருந்தார்கள், இந்த வீடும் போகப்போகின்றது எனத் தெரியாத அடியார் அதனையும் சிவனடியார்களுக்கே செலவிட்டார்.

கடைசியில் பணம்கொடுத்தவர்கள் வட்டி என மிரட்டி வீட்டையும் எடுத்துக்கொள்ள உடுத்த உடை ஒன்றோடு நடுத்தெருவுக்கு வந்தார்கள் அவர்கள்.

வீடு போகவும் அவர்கள் கட்டவேண்டிய கடன் இருந்தது. எதுவும் மிஞ்சவில்லை என்பதால் அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்க கூட யாருமில்லை.

அவர்களை சொந்தபந்தம் ஆதரிக்கவில்லை, ஊரார் உறவினர் பரிகாசம் செய்தார்கள், சிவனுக்கே எல்லாமும் செலவழித்தீர்கள் அல்லவா, சிவமே பெரிது என அள்ளி வீசினீர்கள் அல்லாவ? இனி சிவனே உங்களை காக்கட்டும் எனப் பரிகசித்தார்கள்.

இனி தங்களுக்கு சிவனே அடைக்கலம் வேறுவழியில்லை என பராரியான இருவரும் மதுரை ஆலயம் நோக்கி நடந்தார்கள்.

ஊரே வியக்க ஏகப்பட்ட அடியார்களுக்கு அள்ளி அள்ளி கொடுத்த இருவரும் ஒருவாய் சோறு இல்லாமல் நடந்தார்கள். வைரகடுக்கண் அணிந்து கைகளில் நவரத்தினம் மின்ன பட்டாடை அணிந்து அடியார்களை உபசரித்தவர் பராரியாய் நடந்தார்.

பட்டுச்சேலையும் தலைநிறைய பூவும், கழுத்தெல்லாம் நகையும் முகமெல்லாம் புன்னகையாய் அடியார்களுக்கு அன்னமிட்ட அப்பெண் தர்மசீலை கிழிந்த சேலையுடன் எண்ணெய் இல்லா தலையுடன் வெறும் மஞ்சள் கயிறு கழுத்தில் அணிந்து வந்துகொண்டிருந்தாள்.

அவர்கள் கண்ட கோலம் கண்டு நன்றியுள்ள சிவன்டியார்களே கலங்கி “சிவனே” என மனமார சொல்லிக்கொண்டார்கள்.

சோமசுந்தரர் ஆலயத்தை அடைந்ததும் இருவரும் பணிந்தார்கள், கண்ணீர் விட்டார்கள்.

அந்நிலையிலும் அவர்கள் சிவனை பழிக்கவில்லை, ஒரு வார்த்தை நிந்திக்கவில்லை. மாறாக நடந்ததை ஏற்றுக்கொண்டு சொன்னார்கள்.

“எம்பெருமானே , ஏதோ முன் ஜென்மத்தில் நாங்கள் செய்த வினை இந்த ஜென்மத்தில் இந்த கோலத்தில் நிறுத்திவிட்டது, இதெல்லாம் நாங்கள் எப்போதோ செய்த பாவம்.

அந்தக் கடனை முடிந்த அளவு இப்போது தொலைத்துவிட்டோம், கடைசி பணத்தையும் உம் அடியார்க்கு செலவழித்ததுவிட்டு இனி இழக்க ஒன்றுமில்லை என்ற நிலையில், கடன்காரர்கள் இனி வாழவிடமாட்டார்கள் எனும் நிலையில் வைகையில் குதித்து சாகப்போகின்றோம்.

சிவனடியார்க்கு அமுதளிக்காத ஒரு நாள் கூட எங்களுக்கு அவசியமில்லை, சிவனடியார்க்காக வாழமுடியா வாழ்வு தேவையே இல்லை, இந்த பிறவியினை இத்தோடு முடிக்கின்றோம்” என அவரை வணங்கி வலம் வந்து நீறுபூசி வைகை நோக்கி செல்லத் தொடங்கினார்கள்.

ஆலவாயனை மீண்டும் ஒருமுறை பார்க்க அவர்கள் திரும்பியபோது அசரீரி ஒலித்தது.

“அடியார்க்கு நல்லாரே, நீர் உங்கள் இல்லம் திரும்பலாம், அந்த வீட்டை அபகரித்தவர் உம்மிடமே தந்துவிடுவர், மேலும் அங்கே ஒரு உலவாக்கோட்டை ஒன்றை நெல்லுடன் தந்துள்ளோம், அள்ள அள்ள குறையாத நெல் அங்கிருந்து வரும்.

நாமே உம்மை சோதித்தோம், உம் பக்தி உலகறிய இப்படி செய்தோம், நீர் இல்லம் சென்று இழந்ததையெல்லாம் பெற்று வாழ்க” என அக்குரல் சொன்னது.

இருவரும் அப்படியே ஆனந்தத்தில் மகிழ்ந்து இழந்த உயிர் திரும்பியது போல் மகிழ்ந்தனர், அவர்கள் உடையும் தோற்றமும் பழையபடி மாறிற்று.

அவர்கள் தங்கள் இல்லம் விரைந்தனர், அந்த ஊர் கூடி அவர்களை வரவேற்றது. ஆளாளுக்கு பெரும் எச்சரிக்கைகளை பெற்றிருந்தவர்கள். அஞ்சி அவர்களை வரவேற்று வீட்டையும் கொடுத்தனர்.

அவர் விரைந்து சென்று பார்க்கும் போது உலவாக்கோட்டை ஒன்று இருந்தது. அது நிறைய நெல்லும் இருந்தது.

உலவாகாகோட்டை என்பது நெல் வைக்கும் குதிர், ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு பெயரைச் சொல்லி அதனை அழைப்பார்கள்.

கோட்டை என்பது அன்று நெல்லை அளக்கும் ஒரு அளவையின் பெயராகவும் இருந்தது, 4 படி என்பது ஒரு மரக்கால் என்றும், 24 மரக்கால் என்பது ஒரு கோட்டை என்றும் அளக்கப்பட்டது.

24 மரக்கால் நெல்லை சேமிக்கும் கலம் கோட்டை என்றானது.

உலவாக்கோட்டை என்றால் அசையாத அல்லது குறையாத கோட்டை எனப் பொருள், உலவுதல் என்றால் அசைதல் நகர்தல் தீர்ந்துபோகுதல் மறைதல் எனப் பொருள் உண்டு.

மறையாத அசையாத கலம் உலவாதது என்ற பொருளில் உலவாக்கோட்டை என்றானது.

சிவனுக்கு நன்றி சொல்லியபடி அதிலிருந்து நெல்லை அள்ள ஆரம்பித்தர் அடியாரக்கு நல்லார். ஆனால், அது தீராமல் வந்துக் கொண்டே இருந்தது.

அதைக் கொண்டு தன் அடியார் பணியினை செய்தார், இழந்ததை எல்லாம் மீட்டார், மேலும் கடும் பஞ்சம் வந்தபோது எல்லா மக்களையும் காத்தும் கொண்டார்.

அவர் கடைசிகாலம் வரை இப்பிறப்பில் தன் கர்மத்தை செய்யும் வரை அந்த குதிரில் நெல் வற்றவே இல்லை, அதைக் கொண்டு ஏகப்பட்ட திருப்பணிகளை செய்த தம்பதியர் பின் கயிலாயம் அடைந்தனர்.

இதுதான் உலவாக்கோட்டை அருளிய திருவிளையாடல்.

“எந்நிலையிலும் சிவனுக்கான‌ காரியத்தைக் கைவிடாதே. எந்த சூழலிலும் கைவிடாதே. முடிந்தமட்டும் அதை தொடர்ந்துவிடு. எந்நிலையிலும் அதை முன்னெடுத்து வந்தால் தாங்க முடியா சோதனையில் அந்த சிவமே உன்னை வந்து காக்கும்” என்பதே இந்த திருவிளையாடல் சொல்லும் தத்துவம்.

வேதமும், மந்திரமும், சாஸ்திரமும், சம்பிரதாயமும் , வழிபாடும், பாடலும் , இசையும் எதுவுமே தெரியாத ஒரு கிராமத்து விவசாயிக்கு பெரும் அருள்நிலையும், தீராப் புகழும் கொடுத்தது அவனின் சுத்தமான சிவ அன்பு.

ஆம். அடியார்களை தேடி வணங்குவதும் சிவனை தேடுவதும் ஒன்றே. அடியார்கள் எனும் அந்த நடமாடும் கோவில்கள் இல்லையெனில் எங்கிருந்து சிவன் செயலாற்ற முடியும்? யார் மூலமாக சிவன் தன்னை காட்ட முடியும்?

இறைவன் என்றாலும் அவன் விளையாட ஒரு ஊடகம் வேண்டும் அல்லவா? அந்த ஊடகம் அடியார்கள், அதுவும் இறைவனுக்கு தன்னை ஒப்புக்கொடுத்த அடியார்கள், அவர்கள் முழு மனதோடு இறைவனை ஏற்காவிடில் அங்கு சிவன் வரமுடியாது.

சிவன் தங்களில் வர தங்கள் சிந்தை முழுக்க அவனை நிரப்பி, முழு வாழ்வையே அவனுக்காய் கொடுத்தவர்கள் அடியார்கள் எனும் வகையில் அடியார்களின் மேன்மை எக்காலமும் பெரிது, தன்னிகரே இல்லா மாபெரும் பக்தி அது.

இதைத்தான் அந்த அடியார்க்கு நல்லார் செய்து கொண்டிருந்தார்.

ஆம். அடியார்களை வழிபடுதல் என்பது சாலச்சிறந்தது, கோவிலுக்கு செல்லும் பொழுது அடியார்களை வணங்கிவிட்டு செல்வதும் சிவனை தரிசிக்கும் முன் அடியார்களை வணங்குவதும் அவசியமான ஒன்று.

இதனாலே எல்லா சிவன் கோவிலில்களிலும் நாயன்மார் சிலைகள் வரிசையாக வைக்கப்பட்டு சன்னதிகளும் அமைக்கபட்டிருக்கின்றன, அதை வணங்குங்கள்.

நடராஜப் பெருமானின் அருகில் 4 மகா முக்கிய அடியார்கள் எப்பொழுதும் இருப்பார்கள், அவர்களை வணங்கிவிட்டு சிவனை வணங்குங்கள்.

தன்னை வணங்குபவர்களை விட தன் அடியார்களை வணங்குபவர்கள் மேல் சிவன் தனி கருணை காட்டுகின்றார்.

ஒரு வகையில் மதுரையில் சிவன் நடத்திய நாடகம், தன் அடியார் பெருமை விளங்கவும், முக்கிய அடியார்கள் பெயர் காலத்துக்கு நிலைக்கவும் அவர் நடத்திய பெரும் நாடகம்.

அன்று திருவாரூர் கோவிலில் தன் அடியாரான சுந்தரரை கொண்டு “தில்லைவாழ் அந்தணர்க்கு அடியார்க்கும் அடியேன்” எனப் பாட வைத்த சிவன் அதற்கு முன்பே மதுரையில் தான் அடியார்க்கு அடியார் என்பதை சொன்ன நாடகம் இது.

சிவம் எனும் மகா சக்தி தன்மேல் அன்புகொண்ட அடியார்களுக்கு ஒரு அடியாராய் இறங்கி வரும், தன் அடியான் என ஒருவனை கண்டுவிட்டால் அவன் அன்பை கண்டுவிட்டால் இறங்கி வந்து அடியாராய் சேவகனாய் நிற்கும்.

அன்பே சிவம் என்பது இதுதான்.

ஆம். அந்த சிவம் அன்பு ஒன்றுக்குத்தான் கட்டுப்படும். அதுவும் தன் மேல் அன்பு வைத்த அடியார்களுக்கு பாகனை பின்செல்லும் யானை போல் பின்னால் வரும்.

இந்தத் திருவிளையாடல் சொல்லும் முதல்பாடம் சிவனடியார்களுக்கு சிவனே அடிமை என்பது அவரே கொடுத்த வாக்குமூலம் என்பதால் அடியாரை வணங்குவதும், சிவனை வணங்குவதும் ஒன்றே.

சிவாலயம் செல்லும் பொழுது அங்கிருக்கும் 63 நாயன்மார்களையும் இன்னும் மாணிக்கவாசகர் போன்ற அடியார்களையும் வணங்க மறக்காதீர்கள், அவர்களை வணங்கிவிட்டு சிவனிடம் செல்லுதலே முழு அருள் பாலிக்கும்.

மதுரை ஆலயத்தில் இந்த திருவிளையாடல் மாந்தர்களை மறவாதீர்கள், அவர்களை நினைத்து வணங்குவதும் பெரும் பலன் தரும்.

அடியார் வாழ்வில் காணும் விஷயத்தில் முதலாவது அவரின் தன்னலமற்ற பக்தி , நிச்சயம் பலனை எதிர்பார்த்து அவர் செய்யவில்லை, .

மாறாக எதிர்பார்ப்பே இல்லாமல் சிவபக்தி கொண்டிருந்தார். அடியார்கள் என்பவர்கள் சிவனின் உருவங்கள் எனக் கொண்டாடி, சிவன் தன் அடியார்களை இப்படி எல்லாம் காத்து அரவணைத்து வந்தால் அவர் எவ்வளவு அன்பானவர் என்பதை மனமார உணர்ந்து உணர்ந்து மகிழ்ந்திருந்தார்.

சிவன் அன்பே உருவானவர் என்பதை உணர்ந்து அதை அவரின் அடியார்கள் மேல் கொண்டு, தொண்டு மட்டும் செய்து வந்தார் அடியார்க்கு நல்லார்.

சிவன் எனும் அந்த தெய்வம் ஒருவன் எதைக் கொண்டு தனக்கு தொண்டு செய்வானோ அல்லது எதன் மூலம் தன்னை நோக்கி வருவானோ அத‌னைக் கொண்டே அவனை தன்னை நோக்கி ஈர்க்கும்.

நாயன்மார் வாழ்வில் அதுதான் தெரிந்தது, திருவிளையாடல் புராணத்தில் தெரிந்ததும் அதுவேதான்.

அது மீனவர் அதிபத்தருக்கு மீனாய் வந்தது, குயவன் திருநீலகண்டருக்கு திருவோடு வடிவில் வந்தது, அமர்நீதிக்கு ஆடை வடிவில் வந்தது.

ஆம். அவரவர் செய்த தொண்டின் வகையால் அவர்களை சிவன் ஈர்த்தது போல அடியார்களை தேடித் தேடி கணக்கெடுத்த விறன்மிண்டருக்கு அடியார் தொகையே வந்தது. அதில் அவர் பெயரும் இருந்தது.

அடியாரின் வாழ்வு உறுதியாகச் சொல்வது இதுதான். சிவபக்தியில் உருகி நின்றீர்களென்றால் எதையும் எதிர்பாராமல் உங்கள் கடமையினை நீங்கள் செய்யுங்கள், உங்களை எப்படி பயன்படுத்தவேண்டும் எனச் சிவன் திருவுளம் கொண்டிருப்பாரோ அப்படி பயன்படுத்துவார்.

ஒவ்வொரு பக்தனையும் ஒவ்வொரு நோக்கத்துக்காக பயன்படுத்தும் சிவன் இந்த அடியாரையும் தன் சித்தப்படி அவன் பக்தியின் வலிமை பெருகவும், இன்னும் தன் அடியார்களை உபசரிக்கவும் அவரை பயன்படுத்தினார்.

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம், நீங்கள் யார் என்பதையும் உங்கள் தொண்டு எத்தகையது என்பதையும் மானிடரிடம் எதிர்பாராதீர்கள், அது முட்டாள்தனம்.

சிவன் உங்களை நோக்குகின்றார், உங்களை கவனித்துக் கொண்டே இருக்கின்றார் உரிய நேரத்தில் வந்து ஆட்கொள்வார் என நம்பி நில்லுங்கள், அது நடக்கும்.

ஆம். சிவனிடம் மனதை வைத்து தொண்டை செய்யுங்கள், மானிடர் முன் பெருமையினையும் அங்கீகாரத்தையு எதிர்பாராதீர்கள், மானிட கண்களின் பார்வை வேறு. சிவனின் கருணை பார்வை வேறு.

சிவபக்தியினை முழுமையாக வையுங்கள், எந்த எதிர்பார்ப்புமின்றி வையுங்கள். சிவன் உங்கள் அருகே வருவார், உரிய நேரத்தில் உங்களை எப்படி பயன்படுத்தி பெருமைபடுத்தவேண்டுமோ அப்படி பெருமைபடுத்தி கயிலாயமும் சேர்ப்பார்.

எதிர்பார்ப்பில்லா பக்தி, அடியார்கள் மேல் கொண்ட அளப்பரிய பக்தி ஒருவனை உயர்த்திடும். அவன் மூலம் சிவன் கால காலத்துகும் நிற்கும் மிகப்பெரிய காரியங்களை செய்வார் என்பது இங்கே விளங்கிற்று.

ஓளவையார் ஒரு தெய்வப் புலவர், முருகன் விநாயகர் என இருவரையுமே நேரில் தரிசித்துப் பாடியவர், அவரின் விநாயகர் அகவலும் முருகன் பாடல்களும் அவர் ஒரு மிகப்பெரிய இறை அடியார் என்பதை சொல்கின்றது.

அந்த ஓளவையார் பாடுகின்றார்.

“பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகனோ கரியமால் வந்தியில் வந்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி அங்கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்திற் பிறந்தோன்
கலசமோ புவியிற் சிறு மண்
புவியோ அரவினுக்கு ஒரு தலைப்பாரம்
அரவோ உமையவள் சிறு விரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்து ஒடுக்கம்
இறைவனோ தொண்டர் உள்ளத்து ஒடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே.”

அதாவது இந்த உலகம் பிரம்மனால் படைக்கப்பட்டது, அந்த பிரம்மன் திருமாலில் அடக்கம், அந்த திருமால் பாற்கடலில் அமர்ந்திருப்பவன்.

அந்த கடலே அகத்தியமுனியின் கையில் அடக்கம். ஆனால், குறுமுனியோ ஒரு கலத்தில் பிறந்தவன், அந்த கலசம் புவியில் ஒரு சிறு மண், அந்த புவி ஆதிசேஷனின் தலையில் இருக்கும் ஒரு சுமை.

அந்த ஆதிசேஷனை விரல் மோதிரம் போல் வைத்திருப்பவள் அன்னை சக்தி, அந்த சக்தி சிவனில் ஒடுக்கம். ஆனால், சிவனோ அடியாரில் ஒடுக்கம்.

ஆம். உலகில் மிகப்பெரிய விஷயம் சிவன், அந்த சிவனை விட அடியார்கள் பெரியவர்கள் என அறுதியிட்டு சொல்கின்றாள் ஓளவை மூதாட்டி, மாபெரும் இறை பக்தை எனும் வகையில் அவள் சொல்வது எக்காலமும் சரியே.

இந்த அடியாரின் வாழ்வும் இதைத்தான் சொல்கின்றது, அவரின் வாழ்க்கை தத்துவமாக இதுதான் இருந்தது.

முழுவதும் உங்களை சிவனிடம் ஒப்படைத்துவிட்டு உங்கள் தொண்டினை தொடருங்கள்.

ஆம். சிவனில் நீங்கள் கரையும் பொழுது உங்களில் குடியேறும் சிவன் உங்கள் குரலாக அவரே பேசுவார். சிவனில் உங்கள் பக்தி அதிகரிக்க அதிகரிக்க நீங்களே சிவமாக மாறுவீர்கள்.

எதிர்பார்ப்பு இல்லா பக்தி, வைராக்கியமான பக்தி உரிய நேரத்தில் உங்களுக்கு பெரும் அங்கீகாரத்தை கொண்டு வரும்.

எதிர்பார்ப்பே இன்றி அன்பின் உச்சத்தில் செய்யப்படும் பக்தி மூலம் மாபெரும் காரியங்களை சிவன் உங்கள் மூலம் உலகுக்கு கொடுப்பார், காலம் காலமாக அது நிலைத்து நிற்கும், அதில் நீங்களும் நிலைத்திருப்பீர்கள்.

எக்காரணம் கொண்டும் மானிடர் முன் திருத்தொண்டுக்கு அங்கீகாரம் தேடாதீர்கள், சிவனே உங்களுக்கு உரிய அங்கீகாரம் தருவார்.
மிக முக்கியமாக உங்கள் ஆறுதலை அவமானங்களை சிவனிடம் சொல்லுங்கள், அவர் எது நல்லதோ அதை தருவார்.

சிவனடியார்கள் இல்லையேல் சைவமில்லை, சிவனின் பெருமை நிலைநாட்டப்பட வழியுமில்லை. கோவில்களும் வழிபாடும் இறைவனுக்கானவை என்றாலும் இறைசக்தி தன் பெருமையினை வலிமையினை நிலை நாட்ட சில அடியார்கள் அவசியம்.

அதுவும் சிவன் எனும் பெரும் சக்தி தானாக வராது, தன்னை முழு கோவிலாக மாற்றி சதா சர்வ காலமும் தன் மேலான பக்தி ஒன்றாலே வழிபடும் மனதுக்குத்தான் அது இறங்கிவரும்.

இந்த அடியார்கள் அப்படி நடமாடும் ஆலயங்கள், இதனால் சிவனடியார்களை கண்டால் அவர்களை ஆதரித்து உபசரிக்க மறவாதீர்கள்.

சிவனும் அவன் அடியார்களும் ஒன்றே. இருவரிலும் எந்த பேதமுமில்லை. சிவனடியார்க்கு செய்யும் திருத்தொண்டெல்லாம் சிவனையே சாரும், நதியில் கலக்கும் பொருள் கடலை சேர்வது போல் அடியாருக்கு செய்வதெல்லம் சிவனையே அடையும்.

எங்கெல்லாம் அடியார்களை காண்பீர்களோ, எவ்வளவு உங்களால் முடியுமோ அவ்வளவு அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள். அதில் உங்கள் பாவம், வம்ச சாபம், முன் ஜென்ம கர்மா எல்லா களையப்பட்டு சிவனருள் முழுக்க கிட்டும். அப்படியே கயிலாயமும் மறுமையில் வசமாகும். இது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் : 06 (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா : 06)
அங்கம் வெட்டின படலம்.

அப்போது மதுரையினைக் குலோத்துங்க பாண்டியன் ஆண்டு கொண்டிருந்தான். அவன் வலுவான படைகளை உருவாக்கும்படி தேசமெங்கும் யுத்தம் மற்றும் தற்காப்பு கலைகளை பயிற்றுவிக்கும் கடிகை எனும் நிலையங்களை ஊக்குவித்தான்.

யார் வேண்டுமானாலும் வந்து பாண்டிய நாட்டு இளைஞர்களுக்கு நால்வகை சேனை பயிற்சியும் கொடுக்கலாம். அவர்களில் திறமையானவர்களுக்கு பெரிய சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தும் இருந்தான்.

இதனால் பல நாடுகளில் இருந்து திறமையானவர்கள் வந்தார்கள். தங்கள் அனுபவத்தால் பாண்டியநாட்டு இளைஞர்களுக்கு எல்லாப் பயிற்சியும் கொடுக்கத் தொடங்கினார்கள்.

அப்படி வந்த ஒரு முதிர்ந்த அனுபவஸ்தர் இருந்தார், அவர் வாள் வித்தையில் வல்லவர், மிக நுணுக்கமான வகையில் வீசும் கலையினை கற்றுக்கொடுத்தவர்; அவர் பாணன் என அழைக்கப்பட்டார்; அவருக்கு ஒரு இளம் மனைவி இருந்தாள்; அவள் பெயர் மாணிக்கமாலை.

மதுரை வந்த இவர்கள் ஒரு கடிகை அமைத்தார்கள், வாளாசிரியர் மாணவர்களுக்கு வாள்வீச்ம் கலையினை போதித்துக் கொண்டிருந்தார்.

வாள் வீசுதல் என்பது ஒரு கலை, ஒரு நொடி கூட கவனம் சிதறாமல் மனம், சிந்தை உடல் என எல்லாமும் ஒரே புள்ளியில் நிற்கவேண்டிய ஆபத்தான விளையாட்டு. அங்கே பல வகையான வீச்சுக்கள் உண்டு, தாக்குதல் தற்காப்பு இன்னும் எதிரியினை மட்டுப்படுத்துதல், காயப்படுத்துதல், அவனை ஆயுதம் இழக்கச் செய்தல், ஒரு வகையான வீச்சில் கொண்டு சென்று சட்டென கொல்லுதல் என ஏகப்பட்ட நுணுக்கங்கள் உண்டு.

முக்கியமாக வாளின் எடை, அது செய்யப்படும் உலோகம், வாளின் கூர்மை, மற்றும் வடிவம் எனப் பல விஷயம் உண்டு. வீரனின் உடல் உயரம் மற்றும் கைகளின் தன்மை பொருத்து வாளின் வடிவமும் மாறவேண்டும்.

ஒரு கையால் வாள் சுழற்றுதல், ஒரு கையில் வாளும் மறுகையில் கேடயமும் கொண்ட சண்டை, இரு கையில் வாளேந்தி சக்கரம் போல் சுழன்றடிக்கும் முறை எனப் பல உண்டு.

வாள்களில் பல வகை உண்டு. ஒவ்வொன்றுக்கும் ஒரு வழிமுறை உண்டு.

இப்படி பலமான வகையில் அவர் தன் மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருந்தார், பலர் வாள்வீச்சு வீரர்களாக பாண்டிய நாட்டுக்கு பலம் சேர்த்துக்கொண்டிருந்தனர்.

இப்படி கடிகையில் பயிற்சி நடக்கும் போதும் இன்னொரு பக்கம் இந்த ஆசிரியரும் அவர் மனைவி மாணிக்கமாலையும் ஆலவாய் நாதனிடம் மாபெரும் பக்தி வைத்திருந்தார்கள், வேறு தேசத்தில் இருந்து வந்த தங்களுக்கு ஆலவாயனே மாபெரும் பாதுகாப்பு எனக் கருதி அவரிடமே தங்களை ஒப்படைத்து வாழ்ந்துவந்தார்கள்.

அனுதினமும் ஆலவாயன் சன்னதிக்கு செல்வதும், அங்கே சற்றுநேரம் அமர்ந்து பிரார்த்திப்பதும் வழமை ஆயிற்று, இருவரில் ஒருவராவது கண்டிப்பாகச் செல்வார்கள்.

இப்படியாக சோமசுந்தரேஸ்வரர் மேலான பக்தி ஒருபக்கமும், வாள் வீச்சு ஒருபக்கமுமாக அவர்கள் வாழ்வு சென்றுக்கொண்டிருந்தது.

அந்த கடிகையில் பொல்லா குணமுள்ள ஒருவன் இருந்தான். அவன் பெயர் சித்தன், இந்த சித்தன் பேராசைக்காரனும் வஞ்சகனுமாய் இருந்தான். இப்படியான அசுர குணம் கொண்டவர்கள் சிலருக்கு நினைத்ததை சாதிக்கும் குணமும் ஆற்றலும் வாய்த்துவிடும்.

அப்படியானவனுக்கு வாள்வீச்சு கலை நன்றாக வந்தது, அதை கொண்டு குருவினை மிஞ்சிய சிஷ்யன் எனப் பெயரெடுத்தவனுக்கு அகந்தை கூடிற்று.

அந்த அகந்தையில் அவன் தன் குருவினையே அடிக்கடி அவமானப்படுத்த முனைந்தான், அவரை விட தான் சிறந்த வாள்வீச்சுக்காரன் என மார்தட்டிக் கொண்டான்.

அவனுக்கும் அந்த ஆசிரியருக்கும் இடையே இடைவெளி வலுத்தது. யார் பெரியவர் எனும் சர்ச்சை அவனால் கிளப்பிவிடப்பட்டு பலரால் வளர்க்கப்பட்டது.

நல்ல குரு எக்காரணம் கொண்டும் தன் சீடனுடன் மோதமாட்டார், அவருக்கு அவன் மகன் போன்றவன் என்பதால் அவர் அவனிடம் மோதாமல் கருணை காட்டியே வந்தார்.

ஆனால், ஆணவமும் அகங்காரமும் கொண்ட அவன் குருவினை எதிரியாக பார்க்கத் தொடங்கினான், அவனுக்கு எல்லாமே தான் எனும் பெரும் எண்ணம் வந்திருந்தது.

இது கடிகையில் சிக்கலாகிவிட ஒரு கட்டத்தில் அவன் வெளியேறினான்.

அப்படி வெளியேறிய சித்தன் தனக்கென ஒரு வாள்வீச்சு கலை கடிகையினை நிறுவிக் கொண்டான். தனக்கென ஒரு கூட்டமும சேர்த்துக்கொண்டான். அந்நிய தேசத்தவனை விட இந்த மண்ணின் வீரன் நமக்கு முக்கியம் என அவன் கடிகைக்கும் கூட்டம் சேர்ந்தது.

அவன் இன்னும் அகந்தை கொண்டான். ஒரு கட்டத்தில் தன் குரு என்று கூட பாராமல் அவரை முழுக்க அவமானப்படுத்த திட்டமிட்டான்.

எல்லா மாணவர்களும் தன்னை கொண்டாட வேண்டும்; மதுரையில் மட்டுமல்ல பாண்டிய நாட்டிலே தான் பெரிய வீரனாக வலம் வந்து அரசனிடம் அமரவேண்டும் எனும் பெரும் ஆசை கொண்டான்.

இந்த ஆசைக்கும் கனவுக்கும் அந்த ஆசிரியர் தடையாக இருப்பார் என அஞ்சினான், அவரின் திற்மையினை அவன் அறிவான். ஒருவேளை தன்னைவிட திறமையான ஒருவனை அவர் உருவாக்கிவிடக் கூடாது எனும் கவனமான பதற்றமும் அவனிடம் இருந்தது.

இதற்கு ஒரே தீர்வு அவரை பெரிதாக அவமானப்படுத்தி நாட்டைவிட்டே விரட்டிவிடுவது எனத் துணிந்தான்.

அவமானமென்றால் அவரை பெரிதாக அவமானப்படுத்தி விரட்டியடிக்க வேண்டும் அல்லது கொன்றே விடவேண்டும் என வஞ்சகமாக முடிவெடுத்தான்.

அதற்கு அவன் கையாண்டவழி பெரும் பெரும் பாதகமானது, நினைத்தாலே நடுங்க வைக்கக் கூடியது.

ஆம். ஒரு ஆண்மகனின் பெரும் பலம் அல்லது அடையாளம் தன் மனைவியினை காப்பது, அதுதான் ஆண்மை. அங்கே அவரை அவமானப்படுத்தினால் அவர் மனமுடைந்து தன்னிலை தாழ்ந்து அவமானப்பட்டு ஓடிவிடுவார்.

அவரை விரட்டி அவர் ஒரு வீரரே அல்ல தன் மனைவியினையே காக்க சக்தியற்றவர் எனக் காட்டிவிட்டால் தான் மிகப்பெரிய ஆளாக கருதப்படுவோம் எனக் கணக்கிட்டான்.

அதன்படி அந்த பாதகத்தை செய்யத் துணிந்தான், குருவின் மனைவி என்று கூட எண்ணாமல் அவளிடம் சொல்ல கூடாத வார்த்தைகளை சொன்னான்.

சொன்னவன் அவள் கணவனிடம் சொல்வாள், அவன் தன்னிடம் மோதவருவான் அப்போது கொன்றுவிடலாம் அல்லது அங்கஹீனமாக ஆக்கிவிடலாம் எனத் தயாராக இருந்தான்.

அவளோ நற்குடி பெண், இதனை வெளியில் சொன்னால் அவமானம். இது தனக்கும் தன் வீட்டுக்கும் நல்லதல்ல என எண்ணி தனக்குள் மறைத்தாள்.

அவள் தனக்குள் மறைத்ததை ஒரு ஆதாயமாக கருதி சித்தன் ஆட ஆரம்பித்தான். அவனின் அட்டகாசம் அத்து மீறிற்று.

அவளை விடாமல் விரட்டுவதும் மிரட்டுவதுமாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தான், அவளும் எல்லாம் சகித்தபடி மனதுக்குள் அழுதுக் கொண்டிருந்தாள்.

தன் வேதனையினை சிவனிடம் மட்டும் சென்று சொல்லி வந்தாள்.

“எம்பெருமானே, நான் என்ன செய்வேன்? தாயென காண வேண்டிய என்னை அவன் தவறான கண்களோடு பார்க்கின்றான், நானோ இந்த ஊருக்கு அந்நியம். உன்னைத தவிர யாரையும் தெரியாது.

நான் என் மனத்துயரை யாரிடம் சொல்வேன், அவரிடம் சொன்னால் அவனோடு சண்டைக்குச் செல்வார், அந்தக் கொடியவன் அவரை கொன்றுவிட்டால் எனக்கு யார் உண்டு?

நான் இந்த பெரும் துயரை இந்த கவலையினை உன்னையன்றி யாரிடம் சொல்லமுடியும்?

மங்கைக்கு ஒரு பாகம் கொடுத்த சிவன் நீ அதனால் மங்கையர் துயரம் உனக்குத் தெரியும், என் துயரமும் புரியும்.

அவன் மனதை நீ மாற்று, மன்மதனை எரித்த நீ அவனின் கெட்ட என்ணங்களை எரித்துப்போடு. அவன் என்னை தொந்தரவு செய்யா வகையில் எனக்கு சகாயம் அருளி அவனை திருத்திவிட்டு விடு” எனக் கெஞ்சினாள்.

இது அவளின் பிரார்த்தனையாக இருந்தது.

ஆனால், அவனோ திருந்தவில்லை. இவளின் அமைதியினை தவறாக புரிந்து கொண்டு அத்து மீறி வம்பு செய்தான், ஒருநாள் அவள் வீட்டுவாசலிலே சென்று அவளை மிரட்டினான்.

அவள் கெஞ்சினாள், அழுதாள் கதறினாள். அவனோ அதை பொருட்படுத்தாமல் கண்ணை மறைத்த காமம் அதை தூண்டிவிட்ட மன அகங்காரப்படி அவள் கையினை பற்ற துணிந்தான்.

அவள் பாதுகாப்புக்காக வைத்திருந்த குத்தீட்டியினை எடுத்து தன் கழுத்தை அறுப்பதாக சொல்லி மிரட்டினாள், அவன் அரண்டான். அதற்குள் வேகமாக வீட்டுக்குள் சென்றவள் கதவைச் சாத்தி தாழிட்டாள்.

அவளின் ஆவேசத்தை கண்டு யோசித்தவன் அப்போதைக்கு பின்வாங்கி சென்றுவிட்டான்.

உள்ளே அவள் மிக மிக மனமுடைந்து அழுதாள், அவள் தலை கலைந்திருந்தது. கண்கள் நீரை கொட்டத் தொடங்கியிருந்தன, தன் நிலை இனி என்னாகும் என தெரியாதவள் அந்த சிவனையே சத்தமிட்டு அழைத்தாள்.

“சொக்கா, நான் உன்னை மட்டும்தானே நம்பியிருக்கின்றேன், அந்தக் கயவன் என் வீட்டு வாசலுக்கே வந்துவிட்டானே , இனி நான் என்ன செய்வேன்?

இவரிடம் சொன்னால் சிக்கல், சொல்லாவிட்டால் எனக்கு இனி வாழ்வில்லை எனும் நிலையில் எனக்கு இனி அடைகலம் யார்? எனக்கு இனி காவல் யார்?

பாண்டிய நாட்டின் மன்னன் அவையில் எல்லோர் முன்னும் நான் இதனை சொல்லமுடியுமா? ஊர் நகைக்காதா? உலகம் என்னை எப்படி பார்க்கும்? நற்குடி பெண் அதை தாங்கமுடியுமா?

இதை இவரிடம் சொன்னால் அவர் சண்டைக்கு செல்ல, அவரை அவன் கொன்றுவிடுவான். பின் நான் சாக வேண்டும், வெளியில் சொன்னால் என் மானமெல்லாம் போகும். அதற்கு சாவே பரவாயில்லை.

இவனின் ஆசைக்கு பலியாவதை விட நான் என்னை கொன்றுவிடுகின்றேன் , சொக்கா நான் இனி செத்தே விடுவேன் செத்தே விடுவேன, என்னை காப்பாற்று, இன்னொரு முறை அவன் என்னிடம் வந்தான் என்றால் எனக்கு சாவதை தவிர வேறுவழியில்லை” எனக் கதறினாள், தலையில் அடித்து அடித்து கதறியவள், ஆலவாயன் இருக்கும் திசை நோக்கி கை கூப்பி வணங்கி அழுதாள்.

ஆலவாயன் அவளுக்காய் மனமிரங்கி அங்கே நின்றது அவளுக்குத் தெரியாது.

பாஞ்சாலி கதறியவுடன் கண்ணன் வந்தது போல அங்கே அந்த மாணிக்கமாலை கதறியவுடன் சிவனே வந்தார், மதுரையில் வந்தார், ஆலவாயன் சன்னதியில் இருந்து வந்தார்.

சிவன் அவள் கணவர் உருவில் சென்று அந்த சித்தனை கண்டு சொன்னார், “சித்தா, உன்னால் நான் நிரம்ப அவமானப்படுகின்றேன், நாம் இதுவரை மோதியதில்லை அதனால் நாளை காலை ஊருக்கு வெளியே நாம் மோதலாம் தயாராக வந்துவிடு”

சித்தன் புன்னகைத்தான் “நாளை என்ன இப்போதே தயார்” என வாளை உருவினான்.

ஆசிரியர் உருவில் இருந்த சிவன் சொன்னார், “இது உன் இடம் அதுவும் மக்கள் அக்கம் பக்கம் உண்டு, இப்போது மோதினால் சரிவராது, நாளை காலை நகருக்கு வெளியே ஆற்றங்கரை பக்கம் வா, மோதிவிடலாம்” எனச் சொல்லிவிட்டு சென்றார்.

மறுநாள் விடிந்தது, அங்கே அந்த மாணிக்கமாலையின் கணவர் மனதில் மதுரை ஆலயம் செல்ல தோன்றிற்று. அவர் சென்றுவிட்டார்.

இங்கே சிவன் அவர் உருவில் வந்து ஆற்றங்கரையில் காத்திருந்தார்.

அந்த சித்தனோ தன்னை வெகு அறிவாளியாக நினைந்து தன் காவலை பலப்படுத்தி சிலரை அழைத்துக் கொண்டு சென்றான். செல்லும் வழியில் அவர் தன்னை மறைந்திருந்து கொன்றுவிட கூடாது என எச்சரிக்கையாய் இருந்தான்.

அவரைக் கண்டதும் வாளை உருவி கொண்டு ஓடினான், அவர் தன் வாளால் அவனை எதிர்கொண்டார்.

சண்டை வலுத்தது. அவன் ஒவ்வொரு வித்தையாக காட்டினான், அவரோ நிதானமாக எதிர்கொண்டார், அவனால் அவரை ஒரு இடத்தில் கூட காயப்படுத்த முடியவில்லை.

அவரின் ஆட்டம் மிக இயல்பாக நேர்த்தியாக இருந்தது, யானையின் தும்பிக்கை முன் ஒரு நரி மோதுவது போல் அவன் மோதிக் கொண்டிருந்தான், அவர் எளிதாக தாக்குபிடித்தார்.

அவன் முழுபலம் காட்டியும் அவரை ஒரு முள் அளவு கூட நெருங்கமுடியவில்லை, அவன் சோர்ந்தான், பின் தன் ஆட்களை நோக்கி கைகாட்டினான். அவர்கள் இன்னொரு வாளை வீசினார்கள்.

அவன் இரு கரமும் வாளேந்தி சுழன்றான், அவரோ ஒரு கைவாளோடு அவனை எளிதாக சமாளித்தார், நேரம் கூட கூட அவனுக்கு காயங்கள் வந்துகொண்டே இருந்தன அவன் எவ்வளவு போராடியும் அவரை விழ்த்தமுடியவில்லை.

ஒரு கட்டத்தில் அவன் முழுக்க சோர ஆரம்பித்தான். அவன் சோர்வடைய சோர்வடைய அவர் உக்கிரம் காட்டினார்.

கடைசியில் அவர் சுழன்றடிக்க அவனின் இரு வாள்களும் கரங்களை விட்டு அகன்றன, நிராயுதபாணியாய் அவன் நின்றபோது இடியோசை போல அசரீரி கர்ஜித்து முழங்கிற்று.

“தாயை போல காக்க வேண்டியவளை இழுத்த கரம் இதுதானே” என அசரீரி சொன்னபோது அவன் கரங்களை வெட்டினார் ஆசிரியர்.

“குருவின் மனைவியினை நோக்கிய கண் இதுதானே’ என அசரீரி சொன்னபோது அவன் கண்களை தோண்டினார், “அவள் கெஞ்சுவதை கேட்டும் இரங்காத காது இதுதானே” எனக் காதுகளை வெட்டினார்.

“அவளிடம் தகாதவை பேசிய வாய் இதுதானே” என வாயில் விட்டு விழுந்து அடுத்து “இந்த மகா பாதகம் விளைந்த நெஞ்சம் இதுதானே என அவன் நெஞ்சில் வாளை பாய்ச்சினார்.

அவனின் ஆட்கள் அந்தக் குரலை கண்டும், மின்னல் வேகத்தில் அவன் சரிவதை கண்டும் அலறி ஓடிவரும் போது அவர் மறைந்துபோனார்.

அவர்கள் அதிசயித்தார்கள். யார் பேசியது என்று குழம்பி அவசரமாக அவரைத் தேடினார்கள். வெட்டு பட்டு செத்துகிடந்த அவனை தகனம் செய்ய சிலர் தொடங்கினார்கள்.

ஒரிருவர் உருவிய வாளோடு ஆசிரியர் இல்லம் தேடி ஓடினார்கள், அங்கே மாணிக்கமாலை மட்டும் இருந்தாள். “எங்கே அவர்?” என உறுமினார்கள்.

அவர் சோமசுந்தரேஸ்வரை வணங்கச் சென்றுவிட்டார், ஆலயத்தில் இருப்பார் என்றாள் மாணிக்கமாலை. அவர்கள் குழம்பிப் போனார்கள்.

கொஞ்ச நேரத்தில் அவரே வந்தார். அவரிடம் “எங்கள் தலைவனை கொன்றுவிட்டு எங்கே சென்றீர்கள்? ஏன் அவனை கொன்றீர்கள்?” என வாளை உயர்த்தினார்கள்.

அவரோ தனக்கு ஏதும் தெரியாது. தான் சிவனை வழிபட்டு இவ்வளவு நேரம் அவன் சன்னதியிலே அமர்ந்திருந்தேன். வேண்டுமானால் அர்ச்சகர்களிடம் கேளுங்கள் எனச் சொன்னார்.

அவர்கள் திகைத்தார்கள்.

மாணிக்கமாலை நடந்ததை எண்ணி பதறினாள். அச்சப்பட்டாள். அந்த அச்சம் அவளின் இயல்பை குலைத்தது, “அந்த காமாந்தகார கொடியவன் என்னிடம் முறைதவறி நடந்தான். அதை உங்களிடம் சொன்னால் அவனுடன் மோதுவீர்கள், பெரிய சண்டையாகும் எனச் சொல்லாமல் மறைத்தேன், சொல்லுங்கள் எப்படி உங்களுக்கு அவனோடு மோதும் எண்ணம் வந்தது’ எனக் கதறினாள்.

அவரோ அவளை இன்னும் குழப்பமாக பார்த்தார், எனக்கு எதுவும் புரியவில்லை நான் ஆலயத்தில் இருந்துவருகின்றேன் எனக் குழம்பினார்.

அப்போதுதான் அங்கே நின்றோர்க்கு புரிந்தது, அந்த சித்தன் வதைக்கப்படும் போது என்ன வார்த்தை அசரீரியாக கேட்டதோ அதை இங்கே அவள் வாயால் கேட்டார்கள்.

அவள் சொன்னாள், “நான் அழுததும் புலம்பியதும் சிவனிடம் மட்டும்தானே, அவனைத் தவிர யாருக்கும் தெரியாதே” என அவள் ஓங்கி புலம்பியபோது அவர்கள் நடந்ததை சொல்லி அசரீரி ஒலித்ததை சொன்னார்கள்.

பெரும் குழப்பமாயிற்று. கடைசியில் ஆலவாயன் அர்ச்சகர்களே அவர் சம்பவம் நடந்தபோது கோவில் சன்னதியில் இருந்ததை சொல்ல அப்படியானால் வந்தவர் சிவனே, அவள் தன் மனத்துயரை சிவனிடம் மட்டும்தான் சொன்னாள். அதனால் சிவனே வந்து அவள் துயர் துடைத்து அவள் கண்ணீரை துடைத்து அபாயம் களைந்து காத்தார் என்பதை உறுதி செய்தார்கள்.

செய்தி எல்லா இடமும் பரவிற்று, மன்னன் குலோத்துங்க பாண்டியனே செய்தி கேள்விப்பட்டு நேரே வந்து அவர்களை சந்தித்து நடந்ததை அறிந்தான்.

தன் ஆட்சியில் ஒரு பெண் கலங்கியதையும் அவளுக்கு சிவனே வந்து காவல் கொடுத்ததையும் அறிந்தவன், தன் ஆட்சிதான் குற்றம் என மனம் கலங்கினான்.

அவர்கள் இருவரையும் பட்டத்து யானையில் ஏற்றி வலம் வர செய்தவன், இனி இங்கே பெண்களுக்கு அநீதி நடந்தால் பெரும் தண்டனை, சிவனே எனக்கு வழிகாட்டிவிட்டார் எனப் பெரும் எச்சரிகையினை செய்தான்.

இனி தான் அரசாள தகுதியில்லாதவன், சிவனே வந்தபின் இந்த பதவிக்கு தான் தகுதியற்றவன் எனச் சொல்லி முடிதுறந்து தன் மகன் அனந்த‌குணபாண்டியனை அரசனாக்கினான்.

அந்த ஆசிரியரை அரசவை ஆயுத பயிற்சிக்கு நியமித்து அந்த மாணிக்கமாலைக்கு சிவன் ஆலயத்தில் சேவை செய்யும் பொறுப்பை வழங்கினான்.

சிவனை நம்பிய அந்த தம்பதியர் இப்படி ஆபத்து நீங்கி பெருவாழ்வு பெற்றனர், இதுதான் அங்கம் வெட்டின படலம்.

இந்த திருவிளையாடல் தேர்ந்த போதனைகளை தெளிவாக தருகின்றது.

இந்துமதம் எக்காலமும் பெண்ணை மதித்த மதம், பெண்கள கண் என போற்றிய ஞானமதம் என்பதையும், பெண்களை தெய்வமென காத்த மதம் என்பதையும் இந்தப் படலம் சொல்கின்றது.

ஒரு பெண் அழுதால் சிவனே வந்து அவளுக்கு நியாயம் சொல்வார், நல்ல பெண் தன்மேல் குற்றமில்லா பெண்ணின் கதறலுக்கு சிவனே வந்து நியாயம் சொல்வார் என்பதையும் இதுவே சொல்கின்றது.

அந்த காமுகன் குருவின் மனைவிமேலே கண் வைத்தான் என்றால் அவனுக்கு பல பலங்கள் வாய்த்த நிலையில் என்னென்ன செய்வான், எப்படியெல்லாம் பெண்கள் பாதிக்கபடுவார்கள் என்பதை அனுமானிப்பது சிரமம் அல்ல‌.

இவனே இப்படியென்றால் இவனிடம் கற்றுவரும் வீரர்கள் மனம் எப்படி இருக்கும்? என்னென்ன பாதகமெல்லாம் ஏற்படும்?

அதனைத்தான் சிவனே உணர்ந்து அவனை வீழ்த்தினார், பாண்டிய நாட்டுக்கு தானே காவல் என்பதை சொல்லி ஒரு மன்னனாக நின்று அதர்மக்காரனை அழித்தே போட்டார்.

அக்கிரமக்காரர்கள் அழிய ஒரு பெண்ணின் கண்ணீரை, குற்றமற்ற கண்ணீரை தெய்வம் காரணமாக கொண்டு அந்த கூட்டத்தையே அழிக்கும்.

இதைத்தான் பாஞ்சாலி கண்ணீருக்கு கண்ணனாக பாரதத்தில் வந்தான், இராமபிரான் இராமாயணத்தில் வந்தார்.

பாண்டிய நாடு சிவனாளும் தேசம் என்பதால் பெண்களுக்கான கண்ணீருக்கு எப்போதும் பதில் கிடைத்துக் கொண்டே இருந்தது.

பொற்கை பாண்டியன் ஒரு பெண் மானம் கெடக்கூடாது எனத் தன் கையினை வெட்டி பின் தங்கக் கையினை சிவனிடம் பெற்றது அப்படியே.

பாண்டிய மன்னனின் அஜாக்கிரதையால் கோவலன் கொல்லப்பட கண்ணகி மதுரையினை எரித்ததும் அப்படியே, கண்ணகியிடம் இருந்து எழுந்தது சிவாக்கினி, சிவனின் ஊழி அக்னி.

ஆம். பெண்களின் நியாயமான கண்ணீருக்கு அந்த ஆலவாய் நாதன் எப்போதும் செவிசாய்கின்றார் , அப்படித்தான் சமணர் கொடுங்காலத்தில் மங்கையர்கரசி எனும் பெண்ணுக்கும் செவிசாய்த்து அவரை நாயன்மார் என்றாக்கினார்.

சிவன் எப்போதும் பெண்களை காக்கும் தெய்வம், அப்படித்தான் இங்கு தன்னை நம்பிய பக்தையினை காத்து அவள் ஆபத்தை களைந்து அவளை தன் ஆலயத்திலே பணி செய்யவும் வழி செய்தார்.

பெண்களின் கண்ணீருக்கு எப்போதுமே அந்தப் பரம்பொருள் இறங்கிவரும் என்பதையே அந்தத் திருவிளையாடல் காட்சி சொல்கின்றது.

இந்தப் படலம் சொல்லும் மகா முக்கிய காட்சி குருவின் மனைவி தாய்க்கு சமம், குருதுரோகம் பெரும் பாவம். அவர் மனைவியினை தவறாக பார்ப்பது உடனே சாகும் அளவு சாவுக்கு ஏதுவான பெரும் பாவம்.

அப்படியே மன்னன் தீர்க்காத சிக்கலை மகேசனே இறங்கி வந்து தன் பக்தர்க்கு செய்வார் என்பதை சொல்லி, அவரே உலகாளும் மன்னர், நிரந்தரமான மாறாத மன்னர் என்பதையும் இந்தப் படலம் சொல்கின்றது.

இந்த நம்பிக்கை ஒவ்வொரு பெண்ணும் கொண்டிருக்க வேண்டியது, ஒவ்வொரு பெண்ணும் சிவனில் நம்பிக்கை கொண்டு காவலும் பலமும் அடைய சிவனால் அருளப்பட்டது.

ஆம். இந்த உலகில் பெண்களுக்கான சிக்கல் பெரிது , ஒவ்வொரு பெண்ணும் அனுதினமும் ஆயிரம் சிக்கல்களை மனதாலும் உடலாலும் எதிர்கொள்ளும் வாழ்வு இது.

எல்லாப்பெண்ணுக்கு பின்னாலும் ஒரு சோகம் உண்டு, சொல்லமுடியா வலி உண்டு, யாரிடமும் சொல்லி அழமுடியாத வேதனைகள் உண்டு, மிரட்டல்கள் உண்டு, கண்ணீரும் அச்சமும் பெரும் கவலையும் உண்டு.

அந்தப் பெண்களுக்கெல்லாம் என்றோ இப்படி ஒரு படலத்தை அருளி, இப்படி ஒரு நாடகம் நடத்தி, எக்காலமும் பெண்களின் கண்ணீர் துடைக்க சிவன் உண்டு, ஆதரவற்ற பெண்ணுக்கு அழும் பெண்ணுக்கு அவரே நியாயம் வழங்கி ஆறுதல் கொடுத்து காவலும் கொடுத்து வாழவைப்பார் எனும் நம்பிக்கையினை சொல்லும் படலமும் இதுதான்.

பெண்களின் குரலுக்கு ஈசன் ஓடிவந்து நின்று அவர்கள் வாழ்வை காப்பார், மதுரை ஆலயம் எக்காலமும் பெண்களை வாழவைக்கும் பெரும் அருளும் சக்தியும் கொண்ட ஆலயம் என்பதை இந்தப் படலம் சொல்கின்றது.

எல்லா பெண்களுக்கும் ஆலவாயனே காப்பு, எல்லா பெண்களின் கண்ணீரையும் துடைத்து அவர்களை வாழவைப்பதே அவன் பொறுப்பு.

தேசத்து மாந்தரெல்லாம் அந்த ஆலவாய் நாதனை கூவி அழைத்து தங்கள் பாரத்தை கவலையினை அச்சத்தை சொன்னால் அவரே வந்து காத்து நிற்பார். இது சத்தியம்.

பெண்களின் எல்லா கண்ணீருக்கும் அங்கு ஆறுதலும் நியாயமும் உண்டு, எந்த பெண்ணாயினும் அவரை நம்பி பணிந்தால் காவலும் கருணையும் நிச்சயம் அந்த சன்னதியில் இருந்து வரும்.

அதைத்தான் இப்படலம் சொல்கின்றது.

அப்படியே ஒரு ஆன்மீக ஞான தத்துவத்தையும் போதிக்கின்றது.

மனதுக்குள் ஐம்புலன் வழியாக ஆசைகள் நுழைகின்றன, மனம் அதனை முதலில் அனுமதிக்கின்றது, அறிவினை கொண்டு ஐம்புலன்களின் ஆசைகள் வளர்கின்றன‌.

ஒரு கட்டத்தில் மனதை அவை அடிமையாகுகின்றன. பின் ஆத்மாவினை அவளை களவாடி செல்ல முயல்கின்றன, ஆசை மயக்கங்கள் வளர்ந்து ஆத்மாவினை கட்டிப்போட்டு இழுத்து மூழ்கடிக்க பார்க்கின்றன‌.

அப்போது அந்த ஆத்மா பரம்பொருளை அழைத்தால் அவரே வந்து ஐம்புலன்களின் ஆசைகளையும் வெட்டி அந்த ஆத்மாவினை மீட்டு தன்னோடு சேர்த்து கொள்கின்றார் என்பதே ஞான தத்துவம்.

ஆசை மயக்கத்தில் மூழ்கி மாயையில் சிக்கி தவிக்கும் ஆத்மா அந்த ஆலவாய் நாதனை நினைந்து உருகினால் அவரே வந்து ஆசை மயக்கத்தை வெட்டி அதனை மீட்டெடுப்பார் என்பது இந்த புராணத்தின் ஆத்ம தத்துவம்.

இவ்வாறு இரு வகையிலும் , ஆன்மீகம் லௌகீகம் என இருவகையிலும் பெரும் நம்பிக்கையும் ஆறுதலும் கொடுத்து சிவன் எந்நிலையிலும் லௌகீக வாழ்வு ஆன்மீக வாழ்வு என இருநிலையிலும் நம்மை காப்பார், ஆலவாய் நாதனை அண்டிய கருங்குருவிக்கும் நாரைக்குமே பலன் உண்டு எனும்போது மானுடர்க்கு இருக்காதா?

அதுவும் தேவிக்கே தன் இடபாகம் கொடுத்த சிவனுக்கு மங்கையர் மனமும்துயரமும் தெரியாதா? அதனால் பெண்களின் எல்லாச் சிக்கல்களையும் அவரே தீர்த்துவைப்பார், அந்த பரம்பொருளை நம்பி கல்லுக்குள் இருக்கும் தேரையே கவலையின்றி இருக்கும் போது மானுட பிறப்புக்கு என்னகவலை? யார் இல்லை என்றாலும் அந்த சிவன் போதும், அவன் அருள் போதும். அது நம்மை எக்காலத்திலும் காக்கும் எனும் பெரும் நம்பிக்கையினை இந்த படலம் மூலம் அந்த ஆலவாயன் ஆலயம் அருள்கின்றது.

திருவிளையாடல் புராணம் 07 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா : 07.)
வளையல் விற்ற திருவிளையாடல்.

தாருகாவனம் எனும் அந்த வனத்தில் ரிஷிகள் எப்போதும் அன்று அகந்தை கொண்டிருந்தார்கள். அவர்களின் அகந்தைக்கு காரணம் வேதங்கள் வழி அது சொல்லும் யாகங்கள் வழி இறைவனை அடையலாம் இறைநிலை அடையலாம் என இறுமாப்பு கொண்டிருந்தார்கள்.

இந்த முறைக்கு மீமாம்சம் எனப் பெயர். யாகங்களினாலே சக்திப்பெற்று இறைநிலை அடையலாம் என நம்பிய அவர்கள் சிவனுக்கே சவால்விட்டார்கள்.
சிவனின் நிலையினை விட வலுவான நிலையினை தங்களால் அடையமுடியும், தங்கள் யாகங்கள் அதற்கு கைகொடுக்கும் என சிவனையே பொருட்டாக மதிக்காமல் ஆணவத்தில் ஆடத் தொடங்கினார்கள்.

அந்த யாகங்களால் தங்களுக்கு தேவையானதை பெற்று உலகில் எல்லா வகையிலும் அதிசிறந்ததை தாங்களால் பெறமுடியும், எல்லாம் தங்களால் படைக்க முடியும், கட்டுப்படுத்தமுடியுமென தனி அதிகாரம் கொண்டு அங்கே சஞ்சாரம் செய்தார்கள்.

அப்படிப்பட்டவர்கள் ரிஷி பத்தினிகள் என அழகான மனைவியரை கொண்டிருந்தார்கள், அவர்களின் அழகுக்கு ஏற்ப தங்களையும் தேஜஸும் வசீகரமும் கொண்டவர்களாக மாற்றிக் கொண்டார்கள்.

எல்லா வகையிலும் தாங்கள் மேம்பட்டவர்கள், சிவன் எனும் மகா சக்தியினை விட தங்கள் யாகமும், அதன் சக்தியும் பெரிது என அகந்தை கொண்டு ஆடிக்கொண்டிருந்தார்கள்.

சிவன் அந்த அகந்தையினை அழிக்க விரும்பினார், இந்த தாருகாவனத்து ரிஷிகளை பலவகையில் அவர் சோதித்ததும், அவர்கள் யாகத்தினால் மான், யானை, முயலவன் எனும் அரக்கனை ஏவிவிட்டதும், மானை அழித்த சிவன், யானையினை கொன்று தோலை தன் மேல் போர்த்தி நின்றதும், முயலவனை தன் காலில் போட்டு மிதித்து அழித்து தாருகாவனத்து ரிஷிகளின் அகந்தையினை அழித்ததும் எல்லோரும் அறிந்தது.

ஆனால், அதன் தொடக்கம் எங்கிருந்து தொடங்கிற்று என்றால் இந்தத் திருவிளையாடல் காட்சியோடுதான் தொடங்கிற்று.

ஆம். சிவன் முதலில் தாருகாவனத்து ரிஷிகளின் தன்மான அகந்தையினை உடைத்துப்போட்டார், அவர்களுக்கு தங்கள் மனைவியர் பற்றி பெரும் பெரும் பெருமிதம் இருந்தது. அந்த ரிஷிபத்தினிகள் அழகானவர்கள், பெரும் ஞானம் படைத்தவர்கள். தங்களின் வலிமையான யாகமும் வழிபாடும் அவர்களுக்கு கற்பை வலிமையாக்கி வைத்திருக்கின்றன, அழகான மனைவியரும அவர்களின் சிறப்பும் தங்கள் யாகத்தின் வலிமை. அதனால் அவர்களை, அவர்கள் மனதை யாரும் அசைக்கமுடியாது என நம்பிக்கொண்டிருந்தார்கள்.

சிவன் அவர்களின் அகங்காரத்தை உடைக்க விருப்பம் கொண்டார். எல்லா யாகங்களும், வேதங்களும் அவற்றின் பலனும் தனக்கு கட்டுப்பட்ட தே எனக் காட்ட விரும்பினார். அதன்படி முனிவர்கள் யாகம் செய்யும் நேரம் ஒரு இளம் யாசகனாய் அரையாடை அணிந்து உடலெல்லாம் திருநீறு பூசி, கையில் திருவோடு ஏந்தி அங்கே அவர்கள் தெருவில் வநதார்.

யாசகக் கோலத்தில் ஆண்டியாய் நின்றாலும் பெரும் வசீகரம் அந்த யாசகனிடம் இருந்தது. பொலிவான செந்நிற மேனி; கட்டான தோற்றம்; கண்களில் ஒரு ஈர்ப்பு; உதட்டோரம் ஒரு புன்னகை; நடையில் ஒரு கம்பீரம் என ஒரு வசீகரமும் ஈர்ப்பும் அந்த ஆண்டியிடம் இருந்தது.

ரிஷி பத்தினிகள் அவர் யாசகம் கேட்க வந்ததும் வெளிவந்து அந்த யாசகனை கண்டு சொக்கிப் போனார்கள்; அந்த அழகான தோற்றத்தில் உருகிப் போனார்கள்; தாங்கள் யார் என்பதையே மறந்தார்கள்.

மனம், ஆத்மா, புத்தி, சிந்தை என எல்லாம் அந்த யாசகன் பால் ஈர்க்கப்பட்டு சிலைபோல் ஆனார்கள். சிலர் அவன் பின்னால் மந்திரித்துவிட்டது போல் நடக்கத் தொடங்கினார்கள்.

ஒரு கையில் ஓடும், ஒரு கையில் உடுக்கையும், காலில் சலங்கையும் கொண்டு அவன் நடந்தது அவர்களுக்கு தெய்வ கானமாய் கேட்டது.

தாங்கள் மாபெரும் முனிவர்களின் பத்தினிகள் என்பதை மறந்து அந்த ஆண்டியினை பற்றிக்கொள்ள வேகமாய் தொடர்ந்தார்கள், கடல் அலை கரையினை நோக்கி சீறிவருவது போல் விரட்டினார்கள்.

நகைக் கடையில் பெண்கள் குவிவது போல் அந்த யாசகனை சுற்றி மது உண்ட வண்டுபோல் மயங்கி நின்றார்கள்.

அந்த யாசகன் எல்லாப் பெண்களையும் தன் பின்னால் வரவைத்து தெருமுனைக்கு சென்று மறைந்தே போனார்.

பின் இவர்கள் அவன் சென்றவழி கண்டு பித்து பிடித்தவர்கள் போல் வாசலிலே அமர்ந்திருந்தார்கள். கண்களில்
ஏக்கம் மின்ன, உதடுகளில் அது புன்னகையாக தெரிய, ஆடை அலங்கோலமான கோலத்தில் இருந்தது.

அவர்கள் அந்த ஏக்கத்திலே இருக்க, வழிபாடு யாகங்களை முடித்த ரிஷிகள் இல்லம் வந்தார்கள்; அங்கே தங்கள் மனைவியர் நிலை கண்டு அதிர்ந்தனர்; ஏன் இந்த காரணம் என தங்கள் கண்களை மூடி யோக சக்தியால் தேடினார்கள்; அங்கே ஒரு பிச்சைக்காரன் வந்து தங்கள் மனைவியர் மனதை மயக்கியதை அறியமுடிந்தது.

யார் அப்படிப்பட்ட வசீகரமான பிச்சைக்காரன் என தேடியபோது அது சிவன் எனத் தெரிந்து நொடிந்து போனார்கள். தங்கள் பரம எதிரி, அதுவும் அவன் ஒரு பிச்சைக்காரன் வடிவில் வந்தபோது இவர்கள் மயங்கிவிட்டார்கள் என அதிர்ந்து போனார்கள்.

எதனை மிக மிகப் பெருமையாக கருதினார்களோ, தங்களின் மாபெரும் பெருமை எனவும் சிறப்பு எனவும் கருதினார்களோ அந்த மனைவியரை தங்கள் வீட்டு வாசலில் ஒரு பிச்சைக்காரன் , எதுவுமற்றவன் திருவோடு மட்டும் கொண்ட பிச்சைக்காரன் மயக்கியதை எண்ணிக் கொதித்தார்கள்.

அவர்கள் அகங்காரமும் ஆணவமும் இன்னும் கொதிக்க வைத்தது.

அகங்கார ஆணவம் உடையும் நேரம் ஆத்திரம் வெடித்து பிறக்கும், அப்படி அங்கும் பெரும் ஆத்திரம் எழுந்து அந்த ரிஷிகள் சபித்தார்கள்.

“எந்த சிவனிடம் மயங்கி நின்றீர்களோ அவனையே தேடிச் செல்லுங்கள், இந்த சிறப்பான நிலையினை இழந்த நீங்கள் சாதாரண மானிடராய் பிறந்து வாழுங்கள், சிவனுக்கு சக்தி இருந்தால் உங்களை மீட்டு இங்கே சேர்க்கட்டும்” எனச் சாபமிட்டார்கள்.

ரிஷிகளின் சாபத்தை பெற்ற பெண்கள் மதுரையில் வணிகர் குலமெனும் செட்டிக் குலத்தில் பிறந்து செட்டித் தெருவில் வளர்ந்தார்கள்.

எல்லா மானுடர்களை போலவே அவர்களுக்கும் முற்பிறவி நினைவு அகன்றது, மதுரையில் வணிகர் தெருவில் பிறந்தவர்கள் என்பது மட்டும் நினைவில் இருந்தது.

அவர்கள் அன்றாடம் சொக்கநாதரை தரிசித்தார்கள்; சிவவழிபாடுகளை செய்தார்கள்; ஆனால் முற்பிறவி எனும் சிறிய நினைவு கூட அவர்களுக்கு வரவில்லை.

அவர்கள் சிறுமியர் தாண்டி பருவம் எய்தினார்கள், இதனால் பருவப்பெண்களுக்கான எல்லா வேடிக்கை ஆசைகளும் அவர்களுக்கும் வந்தது.

அப்படி வளையல் மேலும் ஆசைகள் வந்தன; வளையல்காரனை தேடுவதும் வாங்குவதும் அதை அணிந்து அழகுபார்ப்பதும் அவர்கள் விளையாட்டுக்களில் ஒன்றாக இருந்தன‌.

அப்படி அந்த வளையல்காரன் அந்தத் தெருவுக்குள் வரும்போதும் ஆர்வமானார்கள், அவனும் தன் வியாபாரம் பெருக நிறைய நிறைய பேசியபடியே வந்தான்.

பருவப்பெண்கள் வேடிக்கை பேச்சினை எளிதாக பேசுவார்கள், அதுவும் கூட்டமாக கூடிவிட்டால் கேலியும் கிண்டலும் வந்து குவியும்.

அப்படி அவர்கள் கேட்டார்கள், “எல்லாரும்தான் வளையல் விற்பார்கள், உன்னிடம் என்ன அப்படி சிறப்பான வளையல்கள் உண்டு?”

அவன் சொன்னான்.

“என்னிடம் தங்கம், வெள்ளி, செம்பு வளையல்கள் மட்டுமல்ல, யானை தந்ததினால் செய்யப்பட்ட வளையல்கள், சங்கினை அறுத்துச் செய்த வளையல்கள், மூங்கிலை அறுத்துச் செய்த மரவளையல்கள், அரக்கினால் செய்யப்பட்ட வளைகள், சுட்ட மண்ணால் செய்யப்பட்ட மண் வளையல்கள் என எல்லா வகையிலும் உண்டு.

எம்மாதிரி வளையல் வேண்டுமோ அப்படித் தருகின்றேன். என்னிடம் வளையல் வாங்கினால் மணமாகாத பெண்ணுக்கு ராஜா போல் கணவன் வருவான்; மணமான பெண்ணுக்கு மான்கன்றுபோல் பிள்ளை பிறக்கும்; இந்த வளையல்களை வீட்டில் வைத்தால் செல்வம் வரும்; தானத்தில் செய்தால் செல்வம் பெருகும்.

இதனைக் கர்ப்பிணி பெண்களுக்கு அணிவித்தால் பிறக்கும் குழந்தை உலகாளும், என் கைராசி அப்படி” எனச் சொல்லிக்கொண்டே போனான்.

அப்பெண்கள் அந்த வளையல்களை வாங்க ஆசைகொண்டார்கள்; அவன் அந்த வீதியின் திண்ணையில் அமர்ந்து கொண்டு ஒவ்வொன்றாக எடுத்துக் காட்டினான்.

அவர்களும் எல்லா வளையல்களையும் துழாவித் தேந்தெடுத்தனர்; அவர்களுக்கான வளையல்களை அவன் தேடி எடுத்து அவர்களுக்கு அணிவிக்க அந்த கரத்தை தொட்டபோது அவர்களுக்குள் அந்த மாற்றம் வந்தது.

ஆத்மாவினை உயிர் தொட்ட பரவசம் போல் இனம்புரியா மயக்கத்தில் கிறங்கிப்போனார்கள். ஆத்மசுகம் என்றால் என்ன என்பதை அப்போதுதான் அறிந்தும்கொண்டார்கள்.

இனம்புரியாத சொல்லத் தெரியாத அல்லது சொல்ல அவசியமில்லா அந்தப் பரவசம் தொடர அவன் கையினை பற்றிக்கொண்டிருக்கவே துடித்தார்கள். அதனால் வளையல்கள் அணிவித்தாலும் அதை உடைத்துப் போட்டு இந்த வளையல் அந்த வளையல் என கையினை நீட்டிக்கொண்டே இருந்தார்கள்.

அவன் நடப்பதையெல்லாம் புன்னகையோடு பார்த்து அவர்களை கவனித்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் நான் இங்கேமட்டும் வியாபாரம் செய்தால் எப்படி எனச் சொல்லி கிளம்பினான்.

அவர்கள் விடுவதாக இல்லை, அவன் அவசரப்படுத்தினான்.

மயக்கத்தின் உச்சியில் இருந்த அவர்களோ நாளை வந்து காசுவாங்கி கொள் என்றார்கள். அவன் புன்னகைத்தபடி கிளம்பினான்.

அவன் செல்லும்போது அவனை பிரிய மனமில்லாதவர்கள் இதோ பணம் என்றபடி பின்னால் சென்றார்கள். அவன் இன்னும் வேகமாகச் சென்றான்.

மதுரை செட்டித்தெருவில் அவன் வளையல் பெட்டியுடன் முன்னால் செல்ல, இவர்கள் பின்னால் செல்ல , நடை வேகமாக பின் ஓட்டமாக அவன் ஓடோடி சென்று சொக்கநாதர் ஆலயம் புகுந்தான்.

அப்பெண்களும் பின்னால் விரட்டிச் சென்றார்கள்; அவன் ஆலவாயன் சன்னதியினை நெருங்கினான்; அவர்களும் நெருங்கினார்கள்; அவன் அவர்களை திரும்பிப்பார்த்து புன்னகைத்தபடி ஆலவாயன் சனனதிக்குள் சென்று மறைந்தே போனான்.

அந்த பெண்களுக்குள் அப்போதுதான் முழுமாற்றம் வந்தது; தங்கள் முன் ஜென்ம நினைவும் வந்தது; தாங்கள் யார் எதற்காக இங்கு வந்தோம் எனும் உண்மையும் விளங்கிற்று.

ஆலவாயன் சன்னதியில் தங்களுக்கு சாபம் தீர்ந்ததை எண்ணி வணங்கி நின்றார்கள். சிவனே தங்களை தேடிவந்து சாபம் தீர்த்த கருணையினை எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள்.

சாபம் தீர்த்த சோமசுந்தரேஸ்வரரை பணிந்து வணங்கினார்கள். சாபம் தீர்ந்ததால் இனி அங்கு இருக்க அவசியமின்றி தாங்கள் தங்கள் கணவர்கள் இல்லம் ஏகினார்கள்.

இப்படி அந்த தாருகாவனத்து ரிஷிகளின் மனைவியருக்கு வளையல் வியாபாரியாக வந்து சிவன் சாபம் தீர்த்த படலமே இந்தத் திருவிளையாடல்.

புரிந்துகொள்ள கொஞ்சம் சூட்சுமமான இந்த திருவிளையாடலின் தாத்பரியம் எளிமையானது.

அதாவது சிவன் அகந்தையினை, அகங்காரத்தை, ஆணவத்தை மிக மிக கொடியதாய் வெறுக்கின்றார். ஆணவம் அவருக்கு உகந்ததே அல்ல, தாருகாவனத்து ரிஷிகளின் ஆணவத்தை அடக்கி அகற்ற முடிவெடுத்த சிவன் அவர்களுக்கு பெரும் தண்டனை கொடுக்கின்றார்.

அந்த ரிஷிகளின் யாக சக்தியினை விட, அவர்களின் மந்திர சக்தியினைவிட தான் எவ்வளவு வல்லமை கொண்டவன் என்பதை அங்கே காட்டுகின்றார்.

பெரும் ரிஷிகளின் மனைவியராக காவல் மிகுந்த, செல்வம் மிகுந்த வீட்டில் இருந்த மனைவியரை ஒரு யாசகன் வடிவில் கவரச்செய்து, ஒரு ஆண்டி கோலத்திலே அந்த ரிஷிகளுக்கு பெரும் பாடம் போதித்து அகந்தை அகற்றுகின்றார்.

ஆம். அங்கே ரிஷிகளின் கர்வமும் ஆணவமும் அடிபட்டது.

எந்த அகங்காரமனமும், எந்த பெரும் ஆற்றலும் சிவனிடம் வெல்லமுடியாது. அவரிடம் யாராக இருந்தாலும் அடங்குவர் என்பதை முதல் காட்சி காட்டுகின்றது.

அந்த ரிஷி பத்தினிகளின் ஆன்மா சிவனால் ஈர்க்கப்பட்டது. ஆன்மா என்பது காந்தம் கண்டால் ஈர்க்கப்படும் இரும்பு போல சிவனிடம் தானே ஈர்க்கப்படும்.‌ அது இயல்பு என்பதை சொல்கின்றது.

அந்த ரிஷிபெண்கள் சிவனின் அழகினில் மயங்கினார்கள் என்பதைவிட ஆத்மரீதியாக ஒரு பிணைப்பை பெற்றுத்தான் தவித்தார்கள் என்பதை காட்சி சொல்கின்றது.

ஆம். ஆத்மரீதியான பந்தமே உயர்ந்த்து. உலகில் உள்ள எல்லா உறவை விட சிவன் மேல் கொள்ளும் அந்த பக்தியும் பந்தமுமே உன்னதமானது என்பதை அந்தக் காட்சி சொல்கின்றது.

இதைத்தான் இந்த காட்சியின் தத்துவத்தைத்தான் கிருஷ்ணரின் வாழ்வில் கோபியர் லீலை, ராசலீலை என அவன் வாழ்வு சொல்கின்றது.

அது உடல்சார்ந்த மயக்கம் அல்ல, அழகான கோலம் கண்ட ஐம்புலன்களின் நடுக்கம் அல்ல. அது ஆத்மா, இந்த ஜீவாத்மா பரமாத்வாவோடு கூடும் ஒரு ஆனந்தப் பெருநிலை.

கண்ணன் ராசலீலைதான் இங்கே ரிஷிகளின் மனைவி சிவன் பின்னால் சென்ற கோலத்தைக் குறிக்கின்றது.

சரி, இங்கு ஒரு கேள்வி எழலாம் ஏன் அந்தப் பெண்களுக்கு சாபம் கிடைக்கப்பெற்றது?

காரணங்கள் இல்லாமல் காரியங்கள் இல்லை. அங்கே இப்படி அந்தப் பெண்கள் அகற்றப்பட்டபின்புதான் தாருகாவன ரிஷிகளின் யாக குண்டத்தை சிவன் சம்ஹாரம் செய்தார். மிகப்பெரிய யுத்தம் அங்கே நடந்தது. அது நடக்குமுன் அப்பெண்களை பத்திரமாக வெளியேற்றினார்.

அதன்பின் தன்னை நம்பிய அப்பெண்களை மதுரையிலே பிறக்கச் செய்து உரியநேரம் வரும்போது அவர்களை ஆட்கொண்டு சாபம் தீர்த்து கர்வம் அடங்கிய ரிஷிகளிடம் அனுப்பிவைத்தார்.

இந்தத் திருவிளையாடல் இன்னும் பல சிந்தனைகளைச் சொல்கின்றது.

ஏன் அவர் வளையல் வியாபாரியாக வந்தார்? எவ்வளவோ வியாபாரிகள் இன்னும் எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தும் வளையல் வியாபாரியாக வந்தார்.

அங்கேதான் விஷயம் இருக்கின்றது.

இந்துக்கள் மரபில் வளையல் என்பது அலங்காரப்பொருளாக பின்னால் மாறினாலும் அதன் உண்மையான தாத்பர்யம் காப்பு என்பது.

கையில் ஒரு காவலின் அடையாளமாக இடப்படும் வளையம் அது, காப்பாற்றுதல் அல்லது இவருக்கு ஒரு காவல் உண்டு என்பதை சொல்லும் தத்துவம் அது.

சங்கில் இருந்து எடுக்கப்பட்ட வளையல் சங்குப்பூச்சியின சங்கு காப்பது போல் சமபந்தபட்டவன் உன்னைக் காப்பான் உனக்கு பொறுபேற்பான் என்பதை சொன்னது.

இந்துக்கள் மரபில் ஒரு பெண்ணுக்கு தாய்மாமன் இடும் காப்பு எனும் வளையல் முக்கியமானது, கிராமங்களில்
அந்த மரபு இன்றும் உண்டு.

ஆம். இந்தப் பெண்ணுக்கு தாய்மாமன் காவல் உண்டு என்பதை சொல்வதே அந்தக் காப்பு எனும் வளையின் தத்துவம்.

அதைத்தான் பின் ஒவ்வொரு உறவும் பெண்ணுக்கு சொன்னது. அவள் கணவன் முதல் அவள் கர்ப்பகாலத்தில் அவளுக்கு வளையில் இடும் உறவுகள் வரை உனக்கு நாங்கள் காவலாய் உண்டு, எக்காலமும் உன்னோடு இருப்போம் அஞ்சாதே என நம்பிக்கையினை சொன்னது.

ஆம். வளையல் என்பது காப்பு, காப்பு என்றால் காவல்.

அம்மனுக்கு வளையல் சாற்றுவது எங்களை காப்பாற்று எனும் வேண்டுதல், அன்னையிடம் இருந்து வளையல் பெற்று பெண்களுக்கு கொடுப்பது என்பது அன்னை உனக்கு காவலாய் காத்து நிற்பாள் எனும் நம்பிக்கையினை சொல்வது.

இங்கே சிவன் அந்தப் பெண்களுக்கு அந்த உறுதியினை கொடுத்தார், தான் உங்கள் காவல் எனச் சொல்லி அடையாளம் கொடுத்தார், அவர்களின் பூர்வஜென்ம சாபத்தை நீக்க தானே வந்திருப்பதை சொல்லி இனி உங்களுக்கு காவல் என்பதை தெளிவாக உறுதியாகச் சொன்னார்.

ஆம். கர்ம வினைகளை முன் ஜென்ம வினைகளை ஒரு மனிதனால் இப்பிறப்பில் புரிந்துகொள்ள முடியாது. கர்மவினைப்படிதான் வாழ்வும் அமையும்.

அந்த முன் ஜென்ம சாபத்தை சிவன் தானே வந்து அகற்றுவார். தன்னை நம்பியவர்க்கு முன் ஜென்ம வினையினை சாபத்தை நீக்கி தானே உனக்கு காப்பு என காத்தருள்வார் என்பதை இந்த திருவிளையாடல் சொல்கின்றது.

ஆம். மதுரை ஆலயம் பூர்வ ஜென்ம வினைகளை அறுக்குமிடம், பூர்வ ஜென்ம சாபங்களை போக்குமிடம்.

அங்கு நடந்த மீனாட்சி திருவிளையாடல் முதல் எல்லாமே அதை மீண்டும் மீண்டும் சொல்லும். பூலோக கயிலாயம் என அதற்கு ஒரு பெயரும் அடையாளமும் உண்டு.

ஆம். அந்த மதுரை சொக்கநாதர் ஆலயத்தில் முன் ஜென்ம வினை தீரும்; தீர்ந்ததோடு மட்டுமல்லாமல் இந்த ஆத்மாவுக்கு நானே காப்பு, நானே காவல் எனச் சிவனே காவலாக வந்து நிற்பார்.

மதுரையில் சிவன் வளையல் விற்றார் என்பது வெறுமனே வளையல் வியாபாரியாக வந்தார் என்பதல்ல, ரிஷிகள் மனைவியரின் கர்ம சாபத்தை தீர்த்தார் என்பதுமல்ல‌.

அது ஆத்மார்த்த தத்துவம், பிறவி எடுக்கும் ஆன்மா ஒவ்வொரு பிறவியிலும் இறைவனை தேடி ஓடி கலந்துவிடத்தான் துடிக்கின்றது, இறைவனைத்தான் நாடி ஏங்கி நிற்கின்றது.

ஆனால், கர்ம வினைகளும் சில சாபங்களும் அந்த ஆத்மாவினை மீள மீள பிறக்கவைக்கின்றன‌.

அப்படியான பிறப்புக்கள் சிவனை வணங்கினால் அதுவும் இந்த புனிதமான மதுரையின் சொக்கர் சன்னதியில் வணங்கினால் இனி பிறப்பில்லை, இந்த ஆத்மாக்களுக்கு நானே காவல் எனச் சிவனே உறுதிசொல்லி தன்னோடு சேர்த்துக் கொள்வார். ஆத்மா கர்மவினை நீங்கி பிறப்பற்ற நிலை அடைந்து இறைபாதம் கலந்துவிடும். கயிலாயம் ஏகிவிடும் என்பதே தத்துவ போதனை.

முன் ஜென்ம நிலையும், சாபமும், கர்மாவும் யாரும் அறியமுடியாதபடி இப்பிறப்பில் மறைக்கப்பட்டிருக்கின்றது, அதை அறியமுடியாததால் ஆயிரம் ஆயிரம் சிக்கல்களை, சிறைகளை இந்த ஆன்மா சந்திக்கின்றது.

அந்த ரிஷி பத்தினிகள் தங்கள் சாபம் அறியாமல், கர்மா அறியாமல், தான் யார் என அறியாமல் செட்டி தெருக்களின் வீடுகளில் முடங்கி கிடந்ததுபோலத்தான் ஒவ்வொரு ஆன்மாவும் உடல் எனும் சிறைக்குள் சிக்கி தான் யார் என்பதை தெரியாமல், அறியாமல் மயங்கி குழம்பிகா கிடக்கின்றது.

அப்படியான நிலையில் யார் அந்த மதுரை சொக்கனை பணிகின்றார்களோ அவர்களை சொக்கனே வந்து நானே உன்னை காக்கும் காவலன், இந்த ஆத்மாவினை நானே பொறுப்பெடுத்து காவலில் எடுத்து என்னில் சேர்க்கின்றேன் எனச் சேர்த்துகொள்வார்.

பூர்வஜென்ம சாபத்தால், கர்மாவால் இந்தப் பிறப்பில் அவதிபடுவோரெல்லாம் சொக்கனை வணங்கினால் தீர்வு பெறலாம், அந்த சாபங்களை கரைக்கலாம் என்பதையும், அந்த சாப கர்மங்களை நீக்கிய சிவன் தானே உங்களுக்கு காப்புமிட்டு உறவாக பலமாக காவலாக நிற்பார். அவர் காவலை விட வேறு எந்த பலமும் துணையும் அவசியமில்லை, நீங்கள் எல்லா நலமும் பலமும் பெற்று பெருவாழ்வு வாழ்வீர்கள் என்பதை இந்த திருவிளையாடல் மூலம் சிவனே உரக்கச் சொல்கின்றார்.

அந்தச் சொக்கநாதன் பாதம் பணியுங்கள்; அவனே உறவாக வந்து காப்பிட்டு காவலிருப்பான்; எல்லாமும் நலமாகும் கயிலாயமும் அருகில்வரும்.

திருவிளையாடல் புராணம் 08 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா : 08)
நரிகளை பரிகளாக்கிய படலம்.

இரண்டாம் வரகுணபாண்டியன் எனும் மன்னன் பாண்டிய நாட்டை ஆண்டுக்கொண்டிருந்த காலம் அது; அவனுக்கு அரிமர்த்தன பாண்டியன் எனும் பெயரும் இருந்தது; அவனுக்கு போர் ஆபத்துக்கள் நாலாபுறமும் இருந்தன‌.

அது கப்பல் போக்குவரத்தும், நிலவழி போக்குவரத்தும் அதிகமாகிவிட்ட காலக்கட்டம். எல்லா மன்னரகளிடமும் வேகமான குதிரைப்படைகள் பெருகிய காலம்.

அன்று இந்திய மன்னர்கள் யானைகளை பழக்கத் தெரிந்தவர்கள், யானைதான் அவர்களின் பலமாய் இருந்தது. ஆனால், குதிரைகள் வளர்ப்பு அப்படி அல்ல‌.

ஆனால், அந்த அறிவு இல்லை எனச் சொல்லமுடியாது . குதிரைகளை வளர்ப்பதும், அஸ்வம் என அதனை கொண்டாடி அஸ்வமேத யாகமெல்லாம் செய்யுமளவு குதிரைகளைப் பற்றிய பெரும் அறிவு இருந்தது.

குதிரைகள் வளர்க்கும் கலையினைத்தான் மகாபாரதம் சொல்கின்றது, நகுலன் அதில் எப்படியான வித்தகன் என்பதைச் சொல்கின்றது, கண்ணன் வாழ்வு சொல்கின்றது.

நளன் கதை சொல்கின்றது.

குதிரைகளை எப்படி வளர்க்க வேண்டும், பயிற்றுவிக்க வேண்டும் என்பதையெல்லாம் விளக்கமாக இந்துபுராணங்களும் பழம் இலக்கியங்களும் சொல்கின்றன‌.

குதிரை எவ்வளவு முக்கியமானது என்பதைத்தான் ஹயக்ரீவர்க்கு குதிரைமுகம் கொடுத்து இந்துமதம் சொன்னது.

குதிரையின் பல குணங்கள் அசாத்தியமானவை. நின்றுகொண்டே தூங்கினாலும் ஒரு விழிப்பு நிலை, வேகம், ஆபத்தை எதிர்கொள்ளல், காயங்களில் இருந்து தப்புதல், யுத்தத்தில் அஞ்சாமல் தன் மேல் இருப்பவனுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தல், ஆபத்து என்றால் அவனைக் காப்பாற்றுதல் என அதன் நுணுக்கமான அறிவு எப்போதும் விசேஷம்.

குதிரையின் மூச்சுக்காற்று நோய்தீர்க்கும் விஷயம். நல்ல சிந்தனைகளை தரும் விஷயமாக இருந்தது. இந்துக்கள் குதிரைக்கு கொடுதத இடமும் அதை பழக்கிய விதமும் அலாதியானது.

உலகுக்கே குதிரை வளர்க்கும் கலை இந்துக்களிடம் இருந்துதான் சென்றது. பின்னாளைய பௌத்த, சமண குழப்பமோ இந்துமத வீழ்ச்சியோ வந்தபோது குதிரை பராமரிப்பு கலைகள் இங்கு அழிந்துவிட்டன‌.

யானைகள்தான் பலம் என அங்கே கவனம் செலுத்தப்பட்டது. குதிரைகள் பெரிதாக இங்கு இக்காலத்தில் இல்லை.

ஆனால், வலுவான குதிரைப் படைகள் பெருகிய காலத்தில் காவேரி பூம்பட்டினம், நாகப்பட்டினம் எனப் பல துறைமுகங்களுக்கு கப்பலில் குதிரைகள் வந்தன.

இவை பெரும்பாலும் ஐரோப்பிய வளர்ப்புக்கள். துருக்கி வழியாக அவை அரபு நாடுகளின் சந்தைகளுக்கு வந்து, அராபிய சந்தையில் வாங்கப்பட்ட குதிரைகளாக கப்பல்களில் தென் இந்தியாவுக்கும், நிலம் வழியாக வட இந்திய பிராந்தியங்களுக்கும் வந்தன‌.

இப்படியான காலகட்டத்தில்தான் உயர்ரக குதிரைகளை வாங்கி தன் சேனையினை பலப்படுத்த வரகுணபாண்டியன் எனும் அரிமர்த்தன பாண்டியன் விருப்பம் கொண்டான், அது அவன் கடமையுமாயிற்று.

இதனால் ” தென்னவன் பிரம்மராயன்” என்ற பட்டத்துடன் தன் தலைமை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் தன் அமைச்சர்களில் தலைசிறந்த அறிவாளியுமான, திருவாதவூரார் எனும் மாணிக்கவாசகரிடம் நிரம்ப பொன் கொடுத்து திருபெரும்துறைக்கு சென்று நல்ல உயர்சாதி குதிரைகள் வாங்கப்பணித்தான்.

அவை யுத்தம் மாறியிருந்த காலம். கோட்டைகள் போல சிறிய நீண்ட பள்ளம், குட்டை மதில்கள், தடைகள் என எதிரிகள் வைத்து போரிடும் களத்தில் அவற்றை தாண்டி செல்லுதல், ஆற்றில் நீந்தி செல்லுதல், மின்னல் வேகத்தில் எதிரிகளின் முன் அரணை உடைத்து மையத்தில் நிற்றல், அரசனை வீழ்த்துதல் என சீறிப்பாயும் உயர்ந்த முரட்டுக் குதிரைகள் அவசியமான காலம்.

அவை பல்வேறு நாடுகளில் இருந்து, ஐரோப்பா, மங்கோலியா துருக்கி எனப் பலநாடுகளிலிருந்து சோழநாட்டுக்கு வந்து, சோழ பாண்டிய நாட்டின் எல்லையான திருப்பெருந்துறைக்கு விற்பனைக்கு வந்த காலம்.

அந்த திருப்பெருந்துறைக்கு பெரும் பொன்னோடு சென்றார் மாணிக்கவாசகர், அவரை அப்போதே சிவன் ஆட்கொண்டிருந்ததால் எல்லாமே சிவமயமாயிற்று.

அவருக்கு எல்லாமே சிவன், எல்லாமே அவன் நினைவு. காண்பதெல்லாம் சிவம், செய்வதெல்லாம் சிவப்பணி என அவர் மனதால் சிவனோடு ஐக்கியமான காலம்.

அப்படியான மாணிக்கவாசகருக்கு குதிரை என்பதோ, உயர்சாதி என்பதோ, அதிலும் பழுதில்லா குதிரைகள் என்பதோ பெரிய கவனமே இல்லை, அதுவும் திருபெருந்துறைக்கு சென்று அங்கு பாழ்பட்டு கிடந்த சிவாலயத்தை கண்டதும் எல்லாம் சுத்தமாக மறந்தது.

அக்கோவில் பாழ்பட்டுக் கிடந்தது. ஆனால், அவர் அங்கே சிவன் அமர்ந்திருப்பதையும் , சிவன் ஞானகுருவாக அமர்ந்து சிவகணமெல்லாம் சீடராக அமர்ந்த காட்சியும் கண்டு ஆனந்த பித்து நிலைக்குச் சென்றார்.

அந்த மகிழ்வில் மன்னன் தனக்கு மன்னன் கொடுத்த பொன்னையெல்லாம் கொண்டு “ஆவுடையார் கோவில்” எனும் அதிசிறப்பான கோவிலை அவர் கட்டத் தொடங்கினார்.

அக்கோவில் இன்றும் அழகான அதிசயமான அற்புதமான கோவில்களில் ஒன்று. கலைநயமும் அற்புதமான சிற்பங்களும் வியக்கதக்க அம்சங்களும் அமைந்த கோவில்.

அதை அவர் கட்டக் கட்ட எல்லா தொகையும் செலவாயிற்று.

மன்னனின் உளவாளிகள் இதனை மன்னர் காதில் போட்டுவைத்தார்கள். திருவாதவூரார் ஒரு குதிரைவியாபாரியினையும் பார்க்கவில்லை, எந்த முயற்சியும் எடுக்கவில்லை மாறாக கோவிலிலே கிடக்கின்றார் எனத் தகவலை சொன்னார்கள்.

மன்னன் குறித்துக் கொண்டான்.

கோவில் பணிகளுக்கு எல்லா பணத்தையும் கொடுத்த மாணிக்க வாசகர் மன்னன் முன் செல்ல அஞ்சினார். ஆனால், மன்னனிடமிருந்து காரியம் என்னாயிற்று எனக் கேள்வி வந்தபோது ஆடிமாதத்துக்குள் வருவதாக சொன்னவர் அனுதினமும் சிவனிடமே தன் கவலையினை சொல்லிக் கொண்டிருந்தார்.

மன்னன் கடைசியாக பெரும் கோபத்தில் ஒலை அனுப்ப ஆடிப்போன மாணிக்கவாசகர், “சிவனே இனி நான் செல்லாமல் முடியாது, குதிரை வாங்க தந்த பொன்னை எல்லாம் இந்த ஆலயத்துக்கே கொடுத்துவிட்டேன், இனி நான் என்ன செய்வேன் எனத் தெரியாது, இது பொருள்களவு குற்றம் என தண்டிக்கபடுவேன்” எனக் கதறினார்.

தன் அடியாருக்காக இறங்கிய எம்பெருமான், “சில நாட்களுக்குள் குதிரை வரும் எனச் சொல்” எனும் அசரீரி வாக்கை கொடுத்து அனுப்பி வைத்தார்.

மாணிக்கவாசகரும் இறைவன் வாக்கை நம்பி மதுரைக்கு வந்தார். வந்தவர் சிவன் சொன்ன வாக்கான “சில நாட்களில் குதிரை வரும்” என்பதை மட்டும் சொல்லிவிட்டு சிவனை நம்பிக்கொண்டிருந்தார்.

எந்த வியாபாரியினை கண்டீர், எத்தனை குதிரைகளை வாங்க பணம் கொடுத்தீர் என மன்னன் விசாரித்தான்.

“உலகிலே உன்னதமானவன் ஆக சிறந்த ஞானம் கொண்டவனிடம் எல்லாம் ஒப்படைத்து பொன்னும் கொடுத்துவிட்டேன் அவனைத் தவிர யாரும் சிறந்த குதிரைகளை தரமுடியாது” என்றார்.

மன்னன் அவர்மேல் அதுவரை ஒரு துளி குற்றசாட்டு இல்லை என்பதையும், அவர் இறைபக்தி கொண்ட்வர் என்பதையும் அறிந்திருந்ததால் அவர் சொன்னதை ஏற்றுக்கொண்டான்.

ஆனால், மன்னனை சார்ந்தோரும் உளவாளிகளும் நம்பவில்லை. இவர் எல்லாவற்றையும் கோவிலுக்கு கொடுத்து அழித்துவிட்டு நம்மிடம் பொய் சொல்கின்றார், இனி குதிரைபடையின்றி நாம் எதிரிகளிடம் எல்லாம் இழப்போம், எல்லாம் இவரால்வந்தது எனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

மன்னனோ, “ஆடி முடியும் வரை அவர் வாக்கின்படி நாம் பொறுப்போம்” என அவகாசம் கொடுத்தான்.

ஆடிமுடிந்ததே தவிர குதிரைகள் வரவில்லை, மன்னன் மறுபடியும் கேட்டான். இது கடைசி வாய்ப்பு எனச் சொல்லி ஆள் அனுப்பினான். “இன்னும் மூன்றுநாளில் குதிரைகள் வரும்” எனச் சொன்னார் மாணிக்கவாசகர்.

சொன்னாரே அன்றி பெரும் கவலை கொண்டார். சிவனுக்காக ஆலயம் கட்டச் சென்று , சிவனே அஞ்சாமல் மதுரைக்கு போ எனச் சொன்னதை நம்பி வந்துவிட்டோமே என வருந்திக் கலங்கினார். மூன்று நாட்கள் அவர் விரதமிருந்தும் பதில் இல்லை.

மூன்று நாட்கள் முடிந்ததே தவிர குதிரைகள் வரவில்லை. ஆடிவரை காத்திருந்து கூடுதல் மூன்று நாட்கள் அவகாசமும் கொடுத்த மன்னன் இனி முடியாது என அவையோரிடம் அவரை கையளித்துவிட்டான்.

மூன்றுநாட்கள் விரதமிருந்த அவரை தளர்ந்தவர் என்றும் பாராமல் கால் கைகளில் விலங்கிட்டு மிகக் கொடிய வசைகளை பாடி அழைத்து வந்த விசாரணை சிப்பாய்கள், அவர் அப்பணத்தை என்ன செய்தார்? அரச பணத்தை எங்கே பதுக்கினார் எனக் கேட்டு கொடுமைபடுத்தினார்கள்.

அவரின் கால் கைகளை சங்கியியால் பிணைத்து தலையில் பெரும் பாறாங்கல்லை ஏற்றி வைத்து உடலெல்லாம் காயம் செய்து சித்திரவதை செய்தார்கள். அவரின் விரல்களும் மூட்டும் இடுக்கிகளால் இடுக்கப்பட்டன‌.

அவரோ, “சிவனறிய நான் எடுக்கவில்லை, சிவனறிய நான் பதுக்கவில்லை, குதிரை வரும், குதிரை வரும்” எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

இன்னும் அவருக்கு ரத்தம் கீறி மிளகு வைப்பது, சூடு வைப்பது எனப் பெரும் பெரும் கொடுமைகளைச் செய்தனர்.

ஆனால், அவையெல்லாம் மாணிக்கவாசகருக்கு பாதகம் செய்யவில்லை. அவருக்கு அந்த வலிகளெல்லாம் வராதபடியும் அவர் தலையின் பாறாங்கல் பஞ்சுமெத்தைபோலவும் அவர் உணவற்று இருந்தாலும் உடல் சோர்வடையாமல் இருக்கும்படியும் சிவன் பார்த்துக்கொண்டார்.

சிறையில் இருந்தபோதும் சாரளம் வழியாக அவர் உற்று நோக்கியபோது ஆலவாயன் கோபுரம் தெரிந்தது, கைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் “அன்னலே, உன்னை கைஎடுத்து வணங்கமுடியாமல் இங்கே சிக்கிக் கிடக்கின்றனே, என் நிலை அறிவாயோ” என மனதால் கதறிக்கொண்டிருந்தார்.

அவரை வதைத்தவர்கள் சோர்ந்தார்களே தவிர அவர் கற்சிலைபோல் இருந்தார், அவரின் வாய் சிவநாமத்தை உச்சரித்துக் கொண்டே இருந்தது.

பெரும் உத்தமர் , ஒரு குற்றம் சொல்லமுடியாதவர், கூரிய அறிவாளி என்றெல்லாம் பெயரெடுத்த அவரை தன் அரண்மனையிலே வீரர்கள் வதைப்பதை கண்டு மன்னன் மனமுடைந்தான்.

ஆனால், பணம் கொடுத்து குதிரைவராத நிலையில் ஒரு தலைமை அமைச்சரே சறுக்கி அவரை வெளியில் விட்டால் அது பெரும் தவறான உதாரணமாகும். எல்லோரும் அதைக்காட்டி தப்பலாம் என்பதால் மனதை கல்லாக்கிக் கொண்டான்.

மாணிக்கவாசகரின் அருமை அறிந்தவர்களும், அவரின் சிவபக்தி அறிந்தவர்களும் கண்ணீர் விட்டார்கள்.

மிகவும் கொடுமையாக “பணம் எங்கே? குதிரை எங்கே?” என அவரை அடித்து அடித்து கேட்டாலும் “குதிரை வரும், சிவன் எல்லாம் அறிவான்” எனச் சொல்லிக்கொண்டே இருந்தார்.

மாலை நேரம் வந்தது, பொழுதானபின் குற்றவாளியினை விசாரிக்க கூடாது என்பது விதி.

அதனால் அவர் காயத்தோடு விடப்பட்டார். ஆனால், விலங்குகள் அகற்றப்படவில்லை, கல்பாரம் இறக்கப்பட்டு கீழே வீழ்த்தி படுக்க வைக்கப்பட்டார்.

அப்போதும், “சிவனே, குதிரை வரும் என நீர் சொன்னதை நம்புகின்றேன், அதைத்தான் இங்கும் சொல்கின்றேன்” எனச் சொல்லி சொல்லி கலங்கினார்.

தன் உன்னதமான பக்தனை காக்க சிவனே இறங்கினார். தன் பூத கணங்களுக்கெல்லாம் சொன்னார், “நமக்கு ஆலயம் கட்டியதால் பாதிக்கப்பட்ட பக்தனை நாமே காப்போம், ஆனாலும் மன்னன் செய்யவேண்டிய வேலையினை இவன் செய்தும் அவனை புரிந்துகொள்ளா மன்னனையும் அந்த மக்களையும் நாமே தண்டிப்போம்.

மதுரை என்பது யாருடைய ஆட்சி என்பதை இனி காட்டுவோம்” எனச் சொல்லி வந்தார்.

அவர் உத்தரவுப்படி காட்டின் நரிகளை எல்லாம் பூதங்கள் இழுத்து வந்தன. சிவன் ஒரு புன்னகை செய்ய அவையெல்லாம் பொலிவும், அழகும், வனப்பும் நல்ல உயரமும், வாகுவான உடலும், எல்லா அம்சமும் கொண்ட ராஜகுதிரைகளாக பிடரிமயிரை குலுக்கியபடி நின்று கனைத்தன‌.

சோமசுந்தரப் பெருமான் தன் வலப்பக்கம் நோக்கினார். அங்கே வேதமே அவருக்குக் குதிரையாக வந்தது, அறம், பொருள், இன்பம், முக்தி எனப்படும் நான்கும் குதிரைக்கு நான்கு கால்களாக வந்தன‌.

ஞான காண்டம், கர்மகாண்டம் எனும் இரண்டும் அதன் காதுகளாய் வந்தன‌.

விதி குதிரையின் முகமாயிற்று.

அபரம், பரம் எனும் ஆகமங்கள் அதன் கண்களாயின, சூரியன் சந்திரன் அதன் பின்பக்கமாயின‌.

ஆகமங்கள் அதன் அணிகலனாயின, மந்திரங்கள் சலங்கைகளாயின, உபநிஷங்கள் சேணமாயிற்று.

பிரணவமந்திரம் அதன் கடிவாளமாயிற்று, இன்னும் பல்வேறு வேத சிறப்புக்களை பெற்ற அக்குதிரையில் சிவன் வியாபாரியாக தலைப்பாகை கட்டி ராஜ தோரணையில் கம்பீரமாக அமர்ந்திருந்தார்.

(இதுதான் ஹயக்ரீவர் தத்துவம், ஹயக்ரீவர் எனும் பெரும் ஞான தத்துவத்தை குதிரை வடிவில் ஏன் இந்துக்கள் சொன்னார்கள் என்றால் காரணம் இதுதான்.

குதிரை சூட்சுமம் நிறைந்தது, குதிரை மதிப்பும் பலவகை சிறப்பும் மிகுந்தது. அப்படி தெய்வீக குதிரை வேதங்கள், ஆகமங்கள், இன்னும் சாஸ்திரங்கள் என எல்லாம் கலந்து வந்தால் எப்படி இருக்குமோ அப்படி சக்திமிக்கவர் ஹயக்ரீவர் எனச் சொன்னது இந்துமதம்.

அதைத்தான் இங்கே இந்த திருவிளையாடல் காட்சியும் சொல்கின்றது.

சைவம், வைவணம் என்பதெல்லாம் இங்கு பிளவு அல்ல; இரண்டும் வேறு வேறு அல்ல; இரண்டுக்கும் வேதம் ஒன்றே சாஸ்திரம், யாகம் என எல்லாமும் ஒன்றே.

அப்படி ஒரு பெரும் சக்தியினை குதிரைவடிவில் வெற்றிதரும் வடிவில், சூட்சுமமும் அறிவும் கொண்ட பல வகை வெற்றிகளை சிறப்பை தேடி காத்து தரும் சக்தியாக, எந்த தடை என்றாலும் தாண்டிச் சென்று வெற்றிதரும் சக்தியாக சொன்னார்கள்.

அதைத்தான் அந்த ஹயக்ரீவர் தத்துவத்தைத்தான் இங்கேயும் இந்த திருவிளையாடல் சொல்கின்றது)

அவர் முன்னே அணிவகுக்க இதர குதிரைகள் பின்னால் அணிவகுக்க முன்னால் வேலையாட்கள் செல்ல பெரிய குதிரை அணி மதுரை கோட்டை வாசலில் நின்றது.

அந்த வியாபாரி சொன்னார், “மன்னர் கேட்ட குதிரைகள் வந்துவிட்டன, அவரிடம் அறிவியுங்கள்”

காவலர் ஓடோடி சென்று விஷயத்தை சொன்னார்கள். மன்னன் உடனே மாணிக்கவாசகரை விடுவிக்க நேரே சென்று, “தவறு நிகழ்ந்துவிட்டது, குதிரைகள் வந்துவிட்டதால் நீர் தண்டனை அனுபவிக்க அவசியமில்லை. பாண்டிய மன்னனாக மன்னிப்பு கோருகின்றேன்”

அவர் சொன்னார், “மன்னா, இதெல்லாம் என் முற்பிறவி கர்மா, இப்படியெல்லாம் அவமானப்பட வேண்டுமென்றிருந்தால் நீர் என்ன செய்யமுடியும்? நான் என்ன செய்யமுடியும்? அதனால் வருந்த ஒன்றுமில்லை” எனச் சொல்லி சென்றார்.

சிவன் சொன்னதை செய்தார். இனி தனக்கு சிக்கலில்லை என்றவர் ஆலவாயன் ஆலயம் சென்று சிவனை வணங்கிவிட்டு இல்லம் சென்று சோர்ந்து படுத்துக்கொண்டார்.

இங்கே மன்னன் அந்த குதிரை வியாபாரியினை உள்ளே வர அனுமதி கொடுத்து காத்திருந்தான். பெரிய பெரிய குதிரைகள். அந்த மன்னனும், அவன் சேனையும் பார்த்திராத மிகமிக உயர்தரமான குதிரைகள் அங்கே வந்தன‌.

அக்குதிரைகளை கண்டு மன்னன் அதிசயித்தான். தளபதியும் குதிரைப்படை அதிகாரிகளும் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள். மாணிக்கவாசகர் சரியான வேலைதான் செய்திருக்கின்றார் மறுநாள் கௌரவிக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டார்கள்.

குதிரை வியாபாரி சொன்னான், “மன்னா இந்த குதிரைகள் உங்களுக்கு புதியவை, இதுவரை நீங்கள் அறியாதவை. அதனால் இவற்றை பற்றி சொல்லி குதிரை சாஸ்திரங்களையும் உங்களுக்கு உரைப்பேன்.

“அரசே சிறந்த லட்சணங்களை ஒருவன் அடைந்தால் அவன் லட்சுமி கடாட்சம் பெற்று வாழ்வான். அவன் செல்வம் பெருகும், அவன் புகழ் நாலாபக்கமும் பெருகும்.

குதிரைகளில் பல வகை உண்டு, அவை ஒவ்வொன்றாய் சொல்வேன்.

பாடலம் எனும் சாதி குதிரையின் நாக்கு மாந்தளிர் நிறத்தை உடையதாகவும், நெய் பசைகொண்டதாகவும் இருக்கும். அவற்றின் குளம்புகள் உயர்ந்து இருக்கும். அவற்றின் கழுத்தும் மார்பும் பாம்பின் படம்போல விரிந்து இருக்கும்.

கோடகம் எனும் ஜாதி குதிரைக்கு பரந்த நெற்றி இருக்கும். முகம் முக்கோண வடிவில் இருக்கும். பிடரிமயிர் குடுமி போல ஒரே நிறத்தை உடையதாக சீராக‌ இருக்கும்.

இவை மன்னர் பவனிவரவும், அவசர பிரயாணத்துக்கும், வேக செய்திகள் கொண்டு செல்லவும், தேருக்கும் உரியவை.

இவுளி எனும் ஜாதி குதிரை போர்க்களத்தில் நின்று சாதிக்கும், எதிரி என்ன உக்கிரமாக போரிட்டாலும் இவை பின் வாங்காமல் அஞ்சாமல் தீரத்துடன் எதிர்க்கும் சக்தி கொண்டவை, அவற்றின் வேகத்துக்கு எதிரிகள் திணறிப்போவார்கள், நின்று ஆடும் ஜாதி அது.

வ‌ன்னி எனப்படும் குதிரைகள் உயரமும் நல்ல நீளமும் உடையனவாக இருக்கும். அவற்றின் நிறம் பிங்கலமும் முகிலும் கொண்டதாக இருக்கும்.

இவை கழுத்திலே வலஞ்சுழி கொண்டிருக்க்கும். வலச்சுழி கொண்டிருந்தால் அதுதான் புரவி எனப்படும், அது உயர்வானது. எண் மங்கல அடையாளமும் பஞ்ச கல்யாணமும் இந்த ரகத்தில் வரும்.

அரசே, குங்குமம், கற்ப்பூரம், அகிற்குழம்பு, கஸ்தூரி ஆகியவற்றின் மணத்தை கொண்டவை பரி எனும் ஜாதி குதிரையாகும், சிங்கம் போல் கனைக்கும்.

சந்துகம் எனும் ஜாதியினை சேர்ந்த குதிரையின் கால்கள் தச்சன் கடைந்தெடுத்தாற்போல் ஒரே போல் அச்சாக அமைந்திருக்கும், அவை சுழலும் போது கொள்ளி வட்டம் போல் தோன்றும்.

இந்த வகை குதிரைகள்தான் யுத்தத்துக்கும் அரசனுக்கும் அரண்மனைக்கும் பயன்படும், இவைதான் களத்தில் நின்று சாதிக்கும், சுவற்றை தாண்டுவதிலும், சிறிய அகழியினை தாண்டுவதிலும் ஆற்றை நீந்திக் கடப்பதிலும் பெரும் வலிமை கொண்டவை.

இவை கூர்மதி படைத்தவை. தன் எஜமானனை எந்நிலையிலும் காத்து நிற்க துடிப்பவை , கட்டளைகளை சரியாக புரிந்து களத்தில் கைகொடுப்பவை.

அப்படியான குதிரை ரகங்களை கொண்டுவந்துள்ளேன். இவை எல்லாமே எட்டுவயது கொண்ட பிராயத்து குதிரைகள், வாருங்கள் பார்க்கலாம்.

அவன் குதிரையின் தன்மைகளை விளக்க விளக்க வாயடைத்த அரசனும் தளபதிகளும் அவனுடன் ஒவ்வொரு ரக குதிரைகளாக கண்டார்கள்.

“அரசே, இது காம்போஜத்தில் இருந்து வந்தது, இது மந்தார நாட்டில் இருந்து வந்தது, காந்தார தேசத்து முரட்டு சாதி இது.

இது வான்மீக தேசத்தில் இருந்து வந்தது, இந்த கந்துக சாதி குதிரை சிந்து நாட்டில் இருந்து வந்தது. இந்தக் குதிரை பாஞ்சாலத்தில் இருந்து வந்தது.

இந்தக் குதிரை துளுவநாட்டுக் குதிரை, இந்தத் துரகத சாதி இமயத்தில்தான் கிடைக்கும், இந்த மண்டிலம் கலிங்கத்திலிருந்தும் தருவிக்கபட்டது.

இந்த பாடலம் ஆரியநாட்டில் இருந்தும், இந்த அர்வம் கூர்ஜர நாட்டில் இருந்தும் வாங்கிவரப்பட்டது.

இந்த‌ துரங்க சாதி குதிரை கேகய நாட்டில் இருந்து வந்தது, இந்தக் கொய்யுளை சாதி குதிரை யவணர் நாட்டில் இருந்து வந்தது.

இக் கொக்கு சாதி மகதநாட்டில் இருந்தும், இந்த இவுளி வனாயுசத்து பிரதேசத்தில் இருந்தும் ஓட்டி வரப்பட்டவை. இந்த பாய்மா சாதி பல்லவ நாட்டைச் சேர்ந்தது.

இந்த கோரம் எனும் ஜாதி சவ்வீர நாட்டுக் குதிரையாகும். இது வன்னி மராட்டியத்தில் கிடைத்தது.

இந்த கோடக சாதி வாசந்திகத்தை சார்ந்தது. இந்த அயம் எனும் சாதி காஷ்மீரக் குதிரையாகும். இந்தக் கோணம் எனும் சாதி குதிரை மாளவத்திலிருந்து வந்தது. இக் குந்தம் எனும் சாதியும் சுந்தாரத்தை சேர்ந்தது, இந்த அரி எனும் சாதி சௌராஷ்டிரத்தை சேர்ந்தது, இத் துரகம் எனும் சாதி தீவு கூட்டங்களின் பிரதேசத்திலிருந்து வந்தது; இக் குரகதம் எனும் ஜாதி ஆதி குரு நாட்டைச் சேர்ந்தது.

“மேன்மை பொருந்திய மன்னரே, இன்னும் இவற்றின் லட்சணம் எனும் அம்சத்தை சொல்வேன் கேளுங்கள். இக்குதிரைகளிலே வெண்மை செம்மை, பொன்மை, கருமை என நிறங்களை உடையனவும் கலந்த நிறத்தை உடையனவும் இருக்கின்றன.

வெள்ளி, முத்து, பால், சந்திரன், சங்கு, வெண்பனி ஆகியவற்றின் நிறத்தை உடையவை, வெண்புரவிகளும் இருக்கின்றன‌.

மாதுளமலர், செம் பஞ்சுக் குழம்பு ஆகியவற்றின் நிறம் கொண்டவை செம்பரகள் எனும் செம்பட்டை நிற குதிரைகளும் இருக்கின்றன‌.

கருமுகில், குயில், வண்டு ஆகியவற்றின் நிறம் கொண்ட கருங்குதிரைகள் இருக்கின்றன‌.

பொற்பரிகள், நெருப்பு, கோரோசனை போன்ற நிறத்தில் உள்ள பொன்போன்ற குதிரைகளும் உள்ளன‌.

மேற்சொன்ன இந்நான்கு நிறங்களும் கலந்தவை மிச்சிரபுரவிகள்.

இப்படி ஐந்து நிற குதிரைகள் உண்டு.

முகம், மார்பு, உச்சி, வால் , நான்குகால்கள் என எட்டு இடங்களும் வெண்மையாக இருந்தால் அக்குதிரை அஷ்ட மங்கலம் என அழைக்கப்படும்.‌ இது அபூர்வம். நல்ல பலன்களை தரும்.

தலை,வால், மார்பு நீங்கலாக மற்ற இடம் வெண்மையாக இருந்தால் அவை பஞ்ச கல்யாணி என அழைக்கப்படும்.

அழகிய கழுத்திலே அருமையான வலஞ்சுழி இருந்தால் அது தெய்வமணி என அழைக்கப்படும்.

முகம், தலை, மூக்கு, மார்பு ஆகிய நான்கு இடங்களிலும் இரண்டு சுழியும்,, நெற்றியின் நடுவிலும் பின்பக்கத்திலும் ஒவ்வொரு சுழியும் கொண்டவைதான் சிறந்த லட்சணம் கொண்ட குதிரைகளாகும்.

மார்பிலே ஒன்றாக ஐந்து சுழிகளை சேர்ந்து பெற்றிருந்தால் அக்குதிரை ஸ்ரீவம்சமாகும்.

இவைகள் நல்ல சிறப்பினை பெருமைகளை பெற்றுதரும் அதிர்ஷ்டமானவை, அப்படியே நெற்றியில் இரண்டு அல்லது மூன்று சுழிகள் கொண்ட குதிரைகளும் நல்லது.

அரசே, நடுக்கழுத்தில் இரட்டை சுழி இருக்கும் குதிரை துரதிருஷ்டம் கொண்டது, அதை வைத்திருப்பவன் மரணமடைவான், கால்களிலே சுழிகொண்ட குதிரையினை வைத்திருப்பவன் சிறைவாசம் அடைவான்.

தாடை, முன் காலடி, கவுள், முழந்தாள் ஆகிய இடங்களில் சுழிகள் இருந்தால் அக்குதிரையினை யோசிக்காமல் விலக்கி வைத்தல் வேண்டும்.

மன்னா குதிரைகளின் ஆயுளை கணிக்கும் முறையும் சொல்வேன். குதிரைகளுக்கு ஆயுள் முப்பத்திரண்டு ஆண்டுகள். அதைப் பத்துப் பருவமாகக் கூறுவர். ஒரு பருவத்து மூன்று ஆண்டுகளும், இரண்டு மாதங்களும், பன்னிரு நாட்களும் ஆகும்.

குதிரைகளுடைய சிறப்பை இன்னும் சொல்வேன் கவனமாய் கேளுங்கள். எந்த நிறத்தை உடையதாக இருந்தாலும் அங்கே வெண்மை கலந்திருந்தால் அக்குதிரையைக் கொள்ளலாம்.

கருங்குதிரைக்கு வயிறோ, மார்போ ஏதாவது ஒன்று சிகப்பாய் இருந்தால்தான் பெருமை.

மார்பிலும், வயிற்றிலும் வெண்மை இருந்து மற்ற உறுப்புக்கள் கருமையாக இருந்தால் அவற்றை வாருணம் என்பர். இக்குதிரைகள் போரில் பெரும் வெற்றியினை தரும்.

பிடரி வெளுப்பாக இருக்கும் குதிரையினை உடையவன் உத்தமமான பிள்ளைகளை பெற்று பெருமை அடைவான், கழுத்திலே வெண்மை இருக்கும் குதிரையால் செல்வம் பெருகும்.

குதிரையின் முகத்திலே வெண்மை இருக்குமானால் செல்லும் காரியம் வெல்லும், குதிரையின் பின்பக்கம் வெண்மை இருக்குமானால் அந்த குதிரைக்காரன் சுகம் அடைவான். அங்கேயும் இடப்பக்கம் வெண்மை இருக்குமானால் தன விருத்தியும், வலப்பக்கம் வெண்மை இருக்குமானால் தானியவிருத்தியும் ஏற்படும்.

குதிரையின் மார்பிலே வெண்மை இருந்தால் ஒருவன் மகிழ்ச்சி அடைவான்.

முதுகு, வால், முகம் மூன்றும் வெண்மையாக இருந்தால் வெற்றி கிட்டும், நாபியிலிருந்து முன்புறமெல்லாம் சிவந்தும், பின் முழுதும் வெளுத்தும் இருக்கும் குதிரை பகலிலேலே வெற்றி தரும். முன்புறம் வெளுத்தும் பின்புறம் சிவந்தும் இருக்கும் குதிரை இரவிலே வெற்றி தரும்.

மன்னா, குதிரையின் அசைவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் சொல்வேன்.

குதிரை அடி எடுத்து வைக்கும்போது கால்கள் ஒத்து வரவேண்டும், அவை நிற்கும்போது மலைபோல் நிமிர்ந்து நிற்க வேண்டும், கனைக்கும் போது சிங்க கர்ஜனை போல் இருக்க வேண்டும், அது பாய்ந்து செல்லும் போது காற்றை போலவும், குதிக்கும் போது நாட்டியப் பெண்ணை போலவும், நடக்கும் போது ஆண்யானை போலவும் விளங்கும் குதிரையே எல்லாவற்றிலும் சிறந்தது.

அது பெண்கள் போல் கவிழ்ந்த முகம் கொண்டிருக்கும், கருத்த நெய்தல் மலர்போல் கண்களையும், மேகம் போல நிறமும், நெய்தல் மலர் போல் வாசனையும் கொண்டிருக்கும். இதுதான் பட்டத்து குதிரையாக வரும் யோகத்தைப் பெறும்.

அரசே குதிரையின் உயரமும் மிக மிக முக்கியமானது. மிகச் சிறந்த குதிரையின் உயரம் நூறு விரல்களாம். எண்பத்து நான்கு விரல்கள் உயரம் இருப்பது மத்திமம். அறுபத்தொரு விரல்கள் உயரம் இருப்பது அதமம்.

அரசே, உங்களுடைய அமைச்சர் என்னிடம் எல்லா குதிரையும் பார்த்து சோதித்து விலக்க வேண்டியவற்றை விலக்கி, சேர்க்க வேண்டிய குதிரைகளை கவனமாக சேர்த்தபடி வந்த குதிரைகள் இவைதான், அவர் அப்போதே குதிரைக்கான பொன் முழுக்க கொடுத்துவிட்டார். அதனால் இனி பாக்கி இல்லை.

இப்போது இந்த குதிரையின் திறமையினை உங்களுக்கு காட்டுவேன்”

அவன் அப்படி சொன்னதும் அவன் ஆட்கள் அங்கிருக்கும் குதிரைகள் மேல் ஏறி எல்லா வித்தைகளையும் காட்டினார்கள்.

அவை மின்னல் வேகம் காட்டின, காற்றின் வேகத்தில் சீறின, எல்லா தடைகளையும் தாண்டி சாதித்தன, பெரும் கூட்டம் என்றாலும் அஞ்சாமல் ஊடுருவிச் சென்றன.

அந்த வியாபாரியே தன் குதிரை மேல் ஏறி குதிரையினை செலுத்தும் பதினெட்டு வழிகளையும் செய்து காட்டி விளக்கினான், இத பதினெட்டு வழிகளின் வேறுபாட்டை சொல்லிக் கொடுத்தான்.

அந்தக் குதிரைகள் காட்டிய வித்தைகளும், அவை இருந்த பொலிவும், அழகும் ,வனப்பும், எந்த களத்துக்கும் ஈடுகொடுக்கும் வலிமையும் அழகும் அரசனை பெரும் மகிழ்வு கொள்ள செய்தன‌.

அவன் குதிரை தலைவனுக்குப் பாண்டிய நாட்டின் சிறந்த முத்துமாலையினை பரிசளித்தான். பட்டுத்துணி போர்த்தினான். அப்படியே அவன் ஆட்களுக்கும் சிறப்புக்களை செய்தான்.

வியாபாரம் முடிந்ததின் அறிகுறியாக குதிரை கயிற்றை அரசனிடம் கொடுத்துவிட்டு அவனும் அவன் ஆட்களும் விடைபெற்றனர்.

குதிரைகள் புதிய எஜமானனுடன் மெல்ல முரண்டபடி குதிரை லாயம் நோக்கிச் சென்றன. அரசன் மறுநாள் மாணிக்கவாசகருக்கு பெரும் சிறப்பு செய்யவேண்டும் என எண்ணியபடியே குதிரைகளை மீண்டும் காணச் சென்றான்.

இரவு மெல்ல மெல்ல ஓங்க ஆரம்பித்தது.

இதுதான் நரிகளை பரிகளாக்கிய திருவிளையாடல்.

அதாவது தனக்காக ஆவுடையார் கோவிலில் அரசன் குதிரை வாங்க கொடுத்த செல்வத்தை எல்லாம் செலவழித்த மாணிக்க வாசகருக்காக இறைவனே மதுரைக்கு வந்து நரிகளை பரிகளாக்கி அவரை பெரும் பழியில் தண்டனையில் இருந்து விடுவித்தார்.

இந்தத் திருவிளையாடல் சிவனுக்காக மாணிக்கவாசகர் செய்த மகாபக்தியினை சொல்கின்றது, அவரின் அதி தீவிரமான பக்தியினை சொல்கின்றது.

அவர்தான் பாண்டிய மன்னன் அவையில் தலைமை அமைச்சர் எனும் வகையில் எல்லாம் அறிந்திருப்பார், அரசபணம் என்றால் என்ன? குதிரை என்றால் என்ன? இதெல்லாம் எவ்வளவு அவசியம் என்பதை அறிந்திருந்தார்.

ஆனால், சிவனுக்கான வேலையா மன்னருக்கான வேலையா என்றபோது சிவனையே அவர் தேர்ந்து கொண்டார்.

அந்த சிவனுக்கு ஆலயம் கட்டினார் என்றால் அது எளிதான காரியம் அன்று, அரசனின் கோபம் மரணத்தைக் கொடுக்கும் என்பதை அவர் உணர்ந்தே இருந்தார். ஆனால், போகும் உயிர் சிவனுக்காக செல்லட்டும் எப்பபடியும் சிவனிடம் செல்லும் இந்த ஆத்மா ஒரு கோவில் பொருட்டு சென்றால் என்ன என மிகத் தெளிவான ஞானத்தை பெற்றிருந்தார்.

அப்படியே அரசனை மறந்து சிவனை நினைந்து பெரும் கோவிலை கட்டினார்.

பின் அரசன் என்னாயிற்று என கேட்டபோது அவர் சிவனிடம்தான் ஓடிவந்தார், சிவன் “குதிரை வரும் எனச் சொல்” என்பதை பிடித்துக் கொண்டு கடைசிவரை சிவன் கொடுத்த பதிலையே சொன்னார்.

ஒரு இடத்திலும் அவர் தானாக பேசவில்லை, தானாக எதையும் சொல்லவில்லை. கோவில் கட்டினேன் என வாதிடவில்லை, மாறாக சிவன் என்ன சொன்னாரோ அதைத்தான் சோதனையிலும் சொன்னார்.

அந்த அளவு அவர் சிவனை இறுக்கப்பற்றி அவர் வழி நடந்தார்.

கடைசியில் குதிரை வந்தபோதும் அவர் பெரிதாக அலட்டவில்லை. மன்னரிடம் குதிக்கவில்லை மாறாக இதெல்லாம் என் பூர்வஜென்ம கடன், அப்படியே நடக்கட்டும் என ஆலவாயனிடம் சென்று வணங்கிவிட்டு அவர்போக்கில் சென்றார்.

அதாவது தன் கடமையினை செய்துவிட்டு தன் கர்மாவினை செய்துவிட்டு “எல்லாம் சிவமயம்” என அவர்போக்கில் வருவதை எதிர்கொண்டார், எங்கும் வருந்தவுமில்லை. பெரிதாக மகிழவுமில்லை.

மாணிக்கவாசகர் எவ்வளவுக்கு பெரும் ஞானம் பெற்றிருந்தார் என்பதை இந்த இடம் தெளிவாக காட்டுகின்றது.

இந்த திருவிளையாடல் சொல்லும் மிகப்பெரிய தாத்பரியம் ஹயக்ரீவர் தத்துவம், அந்த ஞான தெய்வத்தின் குதிரை வடிவத்தை இங்கே காட்டி, பக்தியில் சிறந்து ஞானம் அடைந்தால் ஹயக்ரீவரே வந்து நம்மை காப்பார், அந்த பரம்பொருளின் சக்தி நம்மை காக்கும் என்பதை சொல்கின்றது.

இன்னும் ஆழமான ஒரு மறைதத்துவம் உண்டு.

ஆம். நரி என்பது தந்திரமிக்கது மாய்மாலம் செய்வது, எப்படியெல்லாமோ குழப்பி அடித்து தப்பி தப்பி செல்வது.

கவனியுங்கள், காட்டில் எவ்வளவோ விலங்குகள் இருந்தபோதும் சிவன் ஏன் நரியினை தேர்ந்தெடுத்து குதிரையாக்க சொன்னார்?

அதுதான் ஆத்ம தத்துவம். ஆம். மனம் நரிக்கு சமமானது. அது எல்லாவித மாய தந்திரங்களையும் செய்வது. அதனை சிவன் அருளில் கட்டுப்படுத்தினால் அது ஹயக்ரீவரின் அருளைப் பெற்று உயர்ந்து நிற்கும், குதிரை போல் கட்டுப்பட்டு பெரும் சிறப்பை தேடித் தரும், ஞானத்தை பெற்று தரும் என்பது.

இதுதான் அந்தத் திருவிளையாடலில் உள்ள ஞான தத்துவம், உள்ளே மறைந்திருக்கும் பெரும் தத்துவம்.

சிவனை அண்டி முழுக்க சரணடைவோரின் மனம் நரி எனும் தந்திரமும் கீழானதுமான நிலையில் இருந்து ஹயக்ரீவர் எனும் ஞானமும் தெளிவும் கொண்ட ஞானநிலைக்கு செல்லும் என்பது.

இதைத்தான் இந்த காட்சி மீண்டும் மீண்டும் சொல்கின்றது.

லௌகீகமாக இங்கு சிவனே வந்தார், பாண்டிய நாடு முன்பு வைத்திருந்து பின்பு தொலைத்துவிட்ட குதிரை வளர்ப்பு கலைகள், குதிரை பற்றிய சூட்சும ரகசியங்கள், குதிரையின் இயல்புகள், அதன் பராமரிப்பு என எல்லாம் சொல்லிக்கொடுத்தார்.

எதையெல்லாம் பாண்டிய நாடு இழந்ததோ அந்த அறிவை மீண்டும் கொடுத்தார். ஹயக்ரீவர் என்பவர் ஞான தெய்வம். அந்த குதிரைவடிவ தெய்வம் வேத ஞானத்தை மீட்டு கொடுத்தது போல் கொடுத்தார்.

சிவனை நம்பிய பாண்டிய நாடு ஆலவாய் நாதனை தொழும் நாடு இழந்ததையெல்லாம் பெற்றுக்கொண்டது.

இதுதான் இந்த திருவிளையாடல் சொல்லும் தாத்பர்யம்.

சரி , இத்தோடு எல்லாம் முடிந்ததா என்றால் இல்லை. நடந்தது சிவனுக்கு தெரியும். மாணிக்கவாசகருக்கு தெரியும். வேறு யாருக்கும் தெரியாது.‌ பின் எங்கிருந்து மாணிக்கவாசகரின் பெருமையும் அளவிட முடியா பக்தியும் உலகுக்குத் தெரியும்?

தன் மாபெரும் பக்தனை உலகுக்கு காட்டி இதோ இவன் சீடன் என மகிழ்வதை விட தெய்வத்துக்கு என்ன பெருமை உண்டு? தாயினும் சாலப்பரிந்தது தெய்வம் அல்லவா?

அதனால் அவர் பெருமையினை உலகுக்கு சொல்ல இந்த நாடகத்தின் அடுத்தக் கட்டத்தை சிவன் தொடங்கினார்.

திருவிளையாடல் புராணம் 09 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா : 09)
பிட்டுக்கு மண் சுமந்த படலம்.

மாணிக்கவாசகர் நிம்மதி கொஞ்சம் கூட நீடிக்கவில்லை. சிவன் அவரைக் கொண்டு ஆட இருந்த திருவிளையாடலின் உச்சகட்ட காட்சி அப்போதுதான் வந்தது.

மன்னன் உயர்ரக குதிரைகள் வந்த நிறைவில் உறங்கச் சென்றிருந்தான். ஊரும் அடங்கியிருந்தது. அந்த நள்ளிரவில் தான் அந்த அதிசயம் நடந்தது.

சிவபெருமானால் குதிரைகளாக்கப்பட்ட நரிகள் மீண்டும் நரிகளாயின. அவை குதிரை வடிவில் இருந்து நரிக்கு மாறியதால் கட்டுகள் தானாக கழன்றன, அவை தம் இயல்புபடி நள்ளிரவில் ஊளையிட்டு ஓடத் துவங்கின‌.

குதிரை லாயத்து தொழிலாளர் அதைக் கண்டு அலறினார்கள். அதைக் கேட்ட காவலர்கள் ஓடிவந்தார்கள். தீபந்தங்கள் எல்லா இடமும் ஏற்றப்பட்டன. எங்கும் குழப்பமும் பதற்றமும் ஏற்பட்டது. என்ன நடந்தது என்பதே முதலில் தெரியவில்லை.

சத்தம் கேட்டு எழுந்த மன்னன் கையில் வாளை பற்றி சாளரம் திறந்து நோக்கினான், அவசரமாக இறங்கி ஓடிவந்தான், மன்னன் வந்ததும் எல்லோரும் அமைதியாயினர்.

“என்ன நடந்தது?” எனச் சீறினான் அரிமர்த்தன பாண்டியன்.

“மன்னா, எங்களால் அதனை நம்பமுடியவில்லை, அப்படி உங்களாலும் நம்பமுடியாது. ஆனால், நடந்தது அதுதான், அந்த குதிரைகளெல்லாம் நள்ளிரவில் நரிகளாக மாறி ஊளையிட்டு ஒடிவிட்டன, இதோ ஒன்றிரண்டை பிடித்து வைத்திருகின்றோம். அதோ பாருங்கள் குதிரை லாயம் காலியாகக் கிடக்கின்றது ” எனக் காட்டினார்கள்.

மன்னன் அதிர்ந்தான். குழம்பிப் போனான். பின் அப்படியே அமர்ந்துவிட்டான். அவன் பார்த்த பார்வைக்கு அர்த்தம் புரிந்த மூத்த பணியாளன் பேசினான்.

“அரசே, இது மாய வித்தை போலிருக்கின்றது, அந்த திருவாதவூரார் குதிரைகள் வரும் காலத்தை தள்ளிப்போட்டார், பின் இப்படி குதிரைகள் வந்தன, அதுவும் நரிகளாகி ஓடினால் என்ன அர்த்தம்?

அவர் ஏதோ கண்கட்டு வித்தை செய்து நம்மை ஏமாற்றிவிட்டார். கொஞ்ச நாளாகவே அவர் அவராக இல்லை, ஏதேதோ செய்திகள் வந்தன அல்லவா? அவர் மாயமந்திரம் கற்றிருப்பார் போலிருக்கின்றது.

நாம் மோசம் போய்விட்டோம். இது பெரும் ஆபத்தின் அறிகுறி, நாம் பலவீனமாக வேண்டும் என யாரோ ஒரு எதிரிக்கு அவர் உதவும் அறிகுறி”

மன்னன் கண்கள் சிவந்தன, “இழுத்துவாருங்கள் அந்த துரோகியினை” என உறுமினான்.

சிலமாதங்களுக்கு பின் அன்றுதான் நிம்மதியாக உறங்கத் தொடங்கியிருந்தார் மாணிக்கவாசகர். ஆனால், விதி விடுமா? காவலர்கள் வந்து கதவைக் கோபமாக தட்டி எழுப்பினர்.

அவர்களை கண்டதும் “என்ன?” எனக் கேட்டார், “துரோகியே உன்னை உடனே இழுத்துவர சொன்னார் மன்னர்” என்றவர்கள் மின்னல் வேகத்தில் கை கால்களில் விலங்கிட்டு தர தரவென இழுத்துச் சென்றனர்.

“எம்பெருமானே, இதென்ன மீண்டும் சோதனை, இப்போதுதானே கண்டம் தப்பினேன் அதற்குள்ளா? என்ன நடந்தது எனத் தெரியவில்லையே, என் சிவனே” என அழுதபடியே அவரும் சென்றார்.

மன்னன் முன் அந்த இரவில் நிறுத்தப்பட்டார், மன்னன் ஆத்திரத்தில் நின்றான். அவன் அருகில் பிடிபட்ட நரிகள் நின்றன‌.

ஒன்றும் புரியாமல் அவனை கண்டார் மாணிக்க வாசகர் “ஏ அயோக்கியனே, நீ எல்லாம் பிராமணனா? இழிகுலத்தவன் கூட செய்ய துணியா காரியத்தை செய்தவனே” என மன்னன் வார்த்தைகளைத் தொடுத்தான்.

அப்படிஒரு வார்த்தையினை முதல் முறையாக கேட்டவருக்கு பதில் சொல்லமுடியாமல் நாவு ஒட்டிக் கொண்டது, மன்னன சீறினான்.

“குதிரைகளை வாங்கிவர சொல்லி கஜானாவினை அள்ளிக் கொடுத்து அனுப்பினால் நீர் என்னென்ன செய்தோ அரசபணத்தை அழித்துவிட்டாய், என்னை ஏமாற்ற நரிகளைக் குதிரைகளாக உன் மந்திர சக்தியால் மாற்றி அனுப்பிவிட்டாய்.

இது சிவன் வாழும் மதுரை, இங்கே மாய மந்திரம் செல்லாது என்பதால் அவை நரிகளாகிவிட்டன, இதோ பார் உன் நரிகள் லட்சணத்தை.

ச்ச்சீ.. நல்லவன் இதை செய்வானா?, இதெல்லாம் அண்டைநாட்டு மன்னன் சொல்லி செய்தாயா? இல்லை இப்படி செய்துவிட்டு அவனை அழைக்க இருந்தாயா? பாண்டிய நாட்டுக்கு பாதகம் செய்ய துணிந்தவனே, இனி உன்னை விடமாட்டேன், நீ ராஜ்ஜியத்தின் அபாயமும் அவமானமுமாகிவிட்டாய்.

இவனை இழுத்துச் சென்று கடுமையாக தண்டியுங்கள், எல்லா தண்டனையும் நிறைவேற்றியபின் ஊரின் நடுவில் வைத்து யானையால் மிதித்துக் கொல்லலாம்” எனச் சீறினான்.

மன்னன் பேச்சுக்கு ஏது மறுமொழி? மாணிக்கவாசகர் இழுத்துச் செல்லப்பட்டு சங்கிலியால் கட்டிவைக்கப்பட்டார், அவருக்கான சித்திரவதைகள் அன்றே தொடங்கின‌.

“சிவனே, என்னை இப்படி வதைக்கவா முன்பு காப்பாற்றினாய், எனக்கு உன்னை தவிர யாரை தெரியும்” எனப் புலம்பி சொக்கநாதரை அழைத்துக் கொண்டே அடிவாங்கினார் மாணிக்கவாசகர்.

அவர் மேல் முதல் அடி விழுந்ததும் வைகை மெல்ல மெல்ல பெரிதானது, அது பெரும் வெள்ளமானது, திடீரென பெருகிவிட்ட வெள்ளம் இரு கரைகளையும் நிரம்பித் தொட்டு ஓடியது. பின் இன்னும் கூடி கரைகளைத் தாண்டி ஊருக்குள் வெள்ளம் வரும் அபாயநிலை வந்தது.

வெள்ளத்தின் அளவு தொடர்ந்து அதிகரிக்க அங்காங்கே கரைகள் உடைந்தன. தாழ்வான பக்கம் வெள்ளம் சூழ்ந்து இனி நகருக்குள் வரலாம் எனும் அளவு ஆபத்தானது.

அரச காவல் படைகள் மின்னல் வேகத்தில் இறங்கின, வெள்ளம் உயர்வதால் கரையினை பலப்படுத்த அவசரமாக ஆட்களை திரட்டினர், வீட்டுக்கு ஒருவர் கட்டாயம் வரவேண்டுமென கட்டளை பிறப்பிக்கப்பட்டது.

அரசன் அரிமர்த்தன பாண்டியனே அதிகாலையில் களமிறங்கினான். அவனே வந்ததால் வீட்டில் இருந்து ஒருவர் தாமாக வந்தார்கள். இல்லையேல் அரச தண்டனையாகும்.

வந்தவர்களுக்கு வைகை கரையின் வரப்பில் ஒவ்வொரு குறிப்பிட்ட நீளம் பிரித்து கொடுக்கப்பட்டு அவசரமாக கரைகளை உயர்த்த கட்டளை இடப்பட்டது.

இது அவசரபணி, திடீரென வந்த வெள்ளத்தை சமாளிக்க ஆள்திரட்டமுடியாமல் திட்டமிட்டு செய்யமுடியாமல் மதுரையில் இருக்கும் மக்களைக் கொண்டே அந்தக் கரையினை பலப்படுத்தும் பணி தொடங்கியது.

இதனால் அரசன் இறுக்கமானான், பரபரப்பானான். அதனால் ஆட்களும் பம்பரமாக சுழன்றார்கள், இந்தப் பரபரப்பில் மாணிக்க வாசகரை சிறையில் விட்டுவிட்டு எல்லோரும் ஆற்று வெள்ளம் காக்க ஓடினார்கள்.

அரச அதிகாரிகள் பெரும் கெடுபிடி காட்டினார்கள், அதனால் வீட்டுக்கு ஒருவர் வந்தாக வேண்டிய கட்டாயம் வந்தது.

அந்தக் கெடுபிடியால் ஒரு மூதாட்டி கவலையுற்றாள், அவள் பெயர் வந்தி, அவளுக்கென யாருமில்லை. அன்றாடம் பிட்டு விற்று பிழைத்து வந்தாள். ஆனால், அவள் வீடும் வெள்ளத்தை தடுக்கும் பணியில் ஆளை வரவைக்க வேண்டும் என நிர்பந்திக்கப்பட்டது.

அவளோ யாருமற்ற அனாதை, பிட்டு விற்காவிட்டால் பிழைப்பு இல்லை, அப்படி இங்கே அதை விட்டு மண் அள்ளிப்போட சென்றால் பட்டினிதான், அதுவும் அந்த வயதில் அவளால் அந்தப் பணியினை செய்யமுடியாது.

என்ன செய்வது என அவள் ” சொக்கநாதா, உன்னைத் தவிர எனக்கு என் வேதனையை முறையிட்டு சொல்ல எவருமில்லை. எனக்கு வைகை கரை அடைக்க நீ உதவிசெய்ய வேண்டும்” என்று தவித்து பிராத்தனை செய்தாள்.

சுந்தரேஸ்வரப்பெருமான் தனக்கு தினமும் பிட்டு நிவேதனம் செய்து வணங்கி, அதை தானம் செய்த வந்திக்கு உதவி செய்ய முடிவெடுத்து, ஒரு சிவந்த வாலிப இளைஞனாக வந்தான். மடித்து கட்டிய வேட்டி, தலையில் துண்டு, தோளில் ஒரு மண்வெட்டி என அவன் அச்சமற்ற ஒரு நடை, அலட்சிய நடை நடந்துவந்தான். வந்தவன் இந்த மூதாட்டியினை நோக்கிக் கேட்டான்.

“ஏனம்மா இந்த ஊரில் எனக்கு ஏதும் வேலை கிடைக்குமா? பிழைப்பு தேடி வந்தேன்”

வந்தவன் கேட்க கிழவி பதில் சொன்னாள்.

“ஏனப்பா, நானே பிட்டு செய்து விற்றுப் பிழைப்பவள், அதற்கும் இங்கே கேடு வந்தது, மன்னர் ஆற்றங்கரையினை பலப்படுத்த எல்லோரையும் விரட்டிக் கொண்டிருக்கின்றார், நானே என்ன செய்வது எனத் தெரியாமல் இருக்கின்றேன்”

ஏன்?

பின்ன என்னப்பா? என்னால் அந்த வேலை செய்யமுடியாது, என் வீட்டிலோ என்னைத் தவிர யாருமில்லை, என் சார்பாக யாரும் செய்தால் சம்பளம் கொடுக்கவும் பணமில்லை, என்ன நடக்க போகின்றதோ தெரியவில்லை”

அவன் சில நொடி சிந்தித்துச் சொன்னான்.

“பாட்டி, நான் உனக்கு பதில் செல்கின்றேன். எனக்கு என்ன தருவாய்?

இப்போதுதானே சொன்னேன் என்னிடம் ஒன்றுமில்லை.

என்னிடம் மட்டும் என்ன உண்டு, பசிதான் உண்டு. சரி நீ எனக்கு பிட்டு தருவாயா, நான் உனக்காக மண் சுமக்கின்றேன், நல்ல பிட்டு கூட வேண்டாம் உதிர்ந்த பிட்டு போதும்.

அப்படியா?

ஆமாம், நானோ இங்கே புதியவன் யார் சாப்பாடு தருவார்கள்? அதனால் நீ பிட்டு கொடு, நான் மண் சுமப்பேன். சில நாட்களில் எல்லாம் சரியாகிவிட்டால் நான் வேறு வேலைக்குச் செல்வேன்”

வந்தி மகிழ்ந்தாள். அவனோ பிட்டினை வாங்கிக் உண்டான். வாழை இலையில் அவள் வைத்து கொடுத்த பிட்டை வாங்கி உண்டவன் ஏப்பமிட்டு புன்னகைத்தான்.

அவள் அவன் குடிக்க நீரும் கொடுத்தாள். பின் அதோ ஒரு கூடை இருக்கின்றது எடுத்துக் கொள், உன்னிடம் மண்வெட்டி இருப்பதால் பிரச்சினை இல்லை என்றாள்.

அவனும் அதை எடுத்துக்கொண்டு ஆற்றங்கரைக்கு சென்றான். அவனுக்கு எல்லாமே விளையாட்டும், அலட்சியமும், சிரிப்புமாக இருந்தது.

வைகை கரையில் மக்கள் கூட்டம் கூட்டமாக கரைக்கு அணையிட்டு உயர்த்திக் கொண்டிருந்தனர். கூடைகளில் மண் வெட்டி, அள்ளிச் சென்று கரையினை பலப்படுத்துவதிலும், மரமோ கல்லோ போட்டு உறுதிபடுத்துவதிலும்
மிக மிக வேகமாக இருந்தனர்.

அரசனின் ஆட்கள் தீவிரமாக கண்காணித்தனர். அந்த அதிகாரியிடம் கேட்டான் இவன், “ஏனப்பா, இந்த வந்தி கிழவிக்கு ஒதுக்கப்பட்ட இடம் எது, அவளுக்குபதிலாக நானேதான் வேலை செய்வேன்”

“அப்படியா, யார் வேலை செய்தால் என்ன வீட்டுக்கு ஒருவர் வந்தால் சரி, அதோ தெரிகின்றதல்லவா அந்த இடம்தான் உன்னுடையது. போய் உனக்கு ஒதுக்கப்பட்ட கரையினை மேம்படுத்து”

சிறையில் மாணிக்கவாசகர் பரிதவித்துக் கொண்டிருந்தார். எம்பெருமானே! எம்பெருமானே!! என கண்களை மூடி அழைத்துக் கொண்டிருந்தார்.

வைகையோ பெரும் வெள்ளத்துடன் சீறிக்கொண்டிருந்தது. கரைகளை உடைக்கும் ஆவேசத்தில் காட்டாறாய் பொங்கிக் ஓடிக்கொண்டிருந்தது.

மன்னன் அந்த நீண்டகரையினை ஓடி ஓடிச் சென்று பார்த்தான். வெள்ளம் புகுந்த பகுதிகளில் மீட்கப்பட்ட மக்கள் கால்நடைகளை பராமரிப்பதை நேரில் கண்டான். வைகை கரையினை சுற்றி சுற்றி வந்துக்கொண்டிருந்தான்.

பெரும் பரபரப்பாக எல்லோரும் வேலை செய்தபோது இந்த இளைஞன் மட்டும் விளையாட்டாய் வேலை செய்தான்.

மண்ணை வெட்டி கூடையில் இடுவான், தூக்கி பார்ப்பான். பின் கூடை மணலை கீழே தள்ளுவான். பின் பாதி மணலை கஷ்டப்பட்டு கொண்டு செல்வான், அந்த கொஞ்சம் மணலை கொட்டுவான், பின் கூடையினை ஆற்றில் எறிவான். பின் ஓடிச்சென்று பிடிப்பான்.

பின் வெற்றுக் கூடையுடன் பாட்டு படித்தபடி வருவான், அக்கம்பக்கம் வேலை செய்வோரை வம்பிழுப்பான், சற்று நேரம் எல்லோரும் என்ன செய்கின்றார்கள் எனப் பார்ப்பான்.

மண்ணை கொட்டுவிட்டு அக்கூடையில் அயிரை மீன் அள்ள பார்ப்பான், பின் சம்பிரதாயத்துக்கு மண் வெட்டுவான் , பின் மண்வெட்டியில் ஒட்டிய மண்ணை சுரண்டுவான்.

நாலு கூடை மண் அள்ளினால் நாற்பது முறை மண் அள்ளியது போல் “என்ன வியர்வை” என உடலை துடைப்பான், திடீரென மர நிழலில் சென்று படுத்துக் கொள்வான்.

இவன் செய்யும் சேட்டைகளால் ஆத்திரமான அதிகாரி அவனை விரட்டுவார். அவன் அகப்படாமல் ஓடுவான்; எல்லோரும் சிரிப்பார்கள்; அதிகாரிக்கு வெட்கமாகி தன் அடுத்த வேலைக்கு இவனை விட்டுச் சென்றுவிடுவான்.

இப்படியாக வேடிக்கையும் விளையாட்டுமாக அவன் அந்த ஆற்றங்கரையில் மண் அள்ளிப்போட்டான். அவன் சரியாக செய்யாததால் மற்றவர்களை விட இவன் பகுதி பள்ளமாகவே இருந்தது.

அவன் விளையாடி விளையாடி ஆட்டம் போட்டதில் இன்னும் அவன் பகுதி பள்ளமாகிகொண்டே சென்றது. மற்றவர்கள் பக்கம் உயர்ந்தது.

அரசன் வரும் நேரமும் நெருங்கிற்று.

‘மக்களே மன்னர் இப்போது வந்துவிடுவார், அவர் வரும்போது எல்லாம் சரியாக இருக்கவேண்டும், மம்ம் சீக்கிரம், அவர் கோபப்பட்டால் அவ்வளவுதான் ” என அதிகாரி எச்சரித்துக் கொண்டிருந்தான்.

எல்லோரும் அஞ்சி அஞ்சி வேகமாக கரை உயர்த்த தொடங்கியபோது இவன்மட்டும் விளையாட்டை தொடர்ந்தான். கொஞ்சமும் பயமில்லை.

“ஏய் , உன் பக்கம் தாழக்கிடக்கின்றது, உடனே சரிசெய். மன்னர் வந்தால் தொலைத்துவிடுவார்” என அதிகாரி சொன்னான்.

“யாரை உன்னைத்தானே தொலைப்பான், உனக்குத்தானே வேலை வாங்க தெரியவில்லை, எனக்கென்ன” என அவன் தன் விளையாட்டை தொடர்ந்தான்.

சிறுபிள்ளைகள் விளையாட்டு அத்தனையும் செய்தவனை அதிகாரி கடுமையாக எச்சரித்தும் அவன் கேட்கவில்லை.

சற்று நேரத்தில் அரசன் வந்தான். பெரும் இரைச்சலும் வெள்ளமுமாக ஓடிக் கொணடிருந்த அந்த பெரும் ஆற்றைவிட அவன் கண்கள் பரபரப்பும் வேகமும் கொண்டிருந்தன‌.

எல்லோரும் அரசனை பணிய இவன் மட்டும் “அப்பாடா” என்றபடி மரத்தடியில் சென்று சாவகாசமாக படுத்துக் கொண்டு “என்ன சுகம்” எனச் சொல்லிக்கொண்டான்.

பல இடங்களுக்கு சுற்றி வந்த மன்னன் இந்த இடத்துக்கு வந்தான், எல்லாம் சரியாக இருப்பது போல் தோன்றினாலும் ஒரு இடத்தில் பள்ளம் இருந்தது.

ஆற்றின் வெள்ளம் இந்தப் பள்ளம் வழியே ஓடினால் போதும் கரைகள் எல்லாம் இடிந்துவிடும், எல்லாம் பாழாகும்.

“இதென்ன அங்குமட்டும் உயரம் இல்லை, இன்னும் பள்ளமாக இருக்கின்றது, அதிகாரியே என்ன செய்கின்றாய்” எனச் சீறினான் மன்னன்.

“மன்னா, அது வந்தி எனும் கிழவிக்கான பகுதி, அவள் தன்னால் மண் சுமக்க முடியாது எனச் சொல்லி தன் சார்பாக ஒருவனை அனுப்பினாள், அவன் இங்கு புதிதானவனாக இருக்கின்றான், உருப்படியாக ஒன்றும் செய்யவில்லை, ஒரே விளையாட்டு” எனத் தலைகுனிந்துச் சொன்னான்.

“எங்கே அவன்?, ஒரு பொறுப்பற்றவனால் மற்ற எல்லோரும் கெட்டுபோவார்கள் என்பது தெரியாதா? அவனை அடிக்கும் அடியில் அனைவரும் சரியாவார்கள்” என்றவன் அவனை எங்கே எனக் கேட்டான்.

“அதோ மரத்தடியில் படுத்திருக்கின்றான் பாருங்கள் அவனேதான்” என்றான் அதிகாரி.

ஆத்திரமடைந்த மன்னன் தேரோட்டி கையில் இருந்த குதிரையினை அடிக்கும் பிரம்பினை வாங்கினான், நேரே அவனை நோக்கிச் சென்றான்.

அவனோ முதுகைக் காட்டியபடி கையினை தலைக்கு வைத்துப் படுத்திருந்தான்.

“சோம்பேறியே வேலை செய்யாமல் படுத்தா கிடக்கின்றாய்” என்ற மன்னன் பிரம்பால் அவன் முதுகில் ஓங்கி அடித்தான்.

அவ்வளவுதான் எல்லார் முதுகிலும் அந்த அடி விழுந்தது, எல்லா உயிருக்கும் அதனதன் சக்திக்கு ஏற்ப விழுந்தது.

எல்லோரும் தங்கள் முதுகில் விழுந்த அடியின் வலியில் “அம்மா” என்றார்கள், குதிரைகளுக்கு அதே அடி விழுந்து அவை கனைத்தன‌.

அரசனுக்கும் விழுந்தது. அதிகாரிக்கும் விழுந்தது.

எல்லோரும் முதுகை பிடித்து கத்த, தனக்கும் முதுகில் விழுந்த அடியில் பெரும் வேதனை வர மன்னனுக்கு ஏதும் விளங்கவில்லை.

சில நொடி அப்படியே ஸ்தபித்தவன் இவன் யார் எனப் பார்த்தான். அவன் மறைந்திருந்தான். “அதற்குள் எங்கே போனான்” என அவன் அதிர்ந்து தேடியபோது அந்த ஆற்றங்கரை கூட சரியாகியிருந்தது, சற்றுமுன் பள்ளமாக கிடந்த கரை இப்போது மேடாகியிருந்தது.

மன்னன் நம்பமுடியாமல் தவித்தான், எல்லோரும் அடிபட்ட வலியில் நடப்பது என்ன எனத் தெரியமால் நின்றனர்.

மன்னன் “சொக்கநாதா இதென்ன?” என வாய்விட்டு சொன்னபோது அந்த அசரீரி ஒலித்தது.

“பாண்டிய மன்னா, எம் அடியார் திருவாதவூராரை என்ன நினைந்து சிறையிட்டாய்? அவர் எம் அன்பிற்குரிய அடியார் , நீ குதிரை வாங்க கொடுத்த பொன்னை எனக்குத்தான் கோவிலாக்கினார்.

நீ செய்யவேண்டிய வேலையினை என் அடியார் செய்தார், நீதான் தண்டனைகுரியவன்.

அவர்மேல் நான் கொண்ட அன்பின் நிமித்தமே நரிகளை பரிகளாக்கினேன், குதிரை வியாபாரி வடிவில் வந்தவன் நாமே, இப்போதும் எம் அடியாரை நீ சிறையில் இட்டதால் வைகையினை பெருக வைத்திருப்பதும் நாமே.

நீ எம் அடியாரை விடுதலை செய்து அவர் விரும்பும்படி என் பணி செய்ய அனுப்பு, இனி அவர் உனக்கு அமைச்சரில்லை எனக்கு முழுநேர சேவகன், அவரை விடுதலை செய்து அனுப்பு” என உத்தரவிட்டது.

மன்னன் அங்கே பணிந்தான். எல்லோரும் அவன் வந்தி எனும் கிழவி மூலம் அவளிடம் பிட்டுக்கு மண் சுமந்தவன் என்பதை சொன்னார்கள்.

மன்னன் அவளைத் தேடி ஒடினான். சிவனுக்கு பிட்டு கொடுத்த கரம் என்றால் எவ்வளவு புண்ணியம்?

ஆனால், அவன் அவளை நெருங்கும் முன்பே ஒரு விமானம் வந்து அவளை கயிலாயம் ஏற்றிச் சென்றது. அவள் பூர்வ ஜென்ம பலன் அது. அவள் செய்த பெரும் புண்ணியம், பூர்வ ஜென்ம புண்ணியம் என உணர்ந்தான் மன்னன்.

பின் நேரே அரண்மனை சிறைக்கு ஓடினான். மாணிக்கவாசகரிடம் மன்னிப்பு கேட்டு அவர் விலங்குகளை தானே அகற்றி, தன் அங்க வஸ்திரத்தை அவருக்கு சாற்றி, அவர் காலில் விழுந்து சொன்னான்.

“திருவாதவூரரே, நான் வெறும் அரசன், நீரோ சிவனின் அன்புகுரியவர். சிவனே வந்து உமக்காக சாட்சி சொல்லும் அளவு நீர் அவரின் அன்புகுரியவர், உம்மை பெற்றதில் பாண்டியநாடு பெருமை கொள்கின்றது.

ஐயா, உம்மை அரசப்பணியில் இருந்து சிவன் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார், நீர் இனி என்ன விரும்புகின்றீரோ அதைச் செய்யலாம்”

மாணிக்கவாசகர் அமைதியாக புன்னகைத்தார், வாழ்வை தரும் மதுரையில் வாழ்ந்துவிட்டேன். இனி நான் எம்பெருமான் அழைத்தபடி முக்தி நிலை தேடிச் செல்கின்றேன் என்றவர் ஆலவாயன் சன்னதியில் அமர்ந்து தியானித்து பாடினார்.

அப்போது “சிதம்பரம் வருக” என அவருக்கு குரல் ஒலிக்க அவர் அங்கு நோக்கிச் சென்றார். அவரை மதுரையின் கோட்டை வாசல் வரை வந்து வழியனுப்பினான் மன்னன்.

திரும்பி நின்று ஆலவாயன் கோபுரத்தை தரிசித்தபடி வணங்கி கண்ணில் நீர் தளும்ப சிதம்பரம் நோக்கிச் சென்றார் மாணிக்கவாசகர்.

அங்கே சென்று சிவனின் நடராஜகோலத்தை கண்டு வெகு ஆனந்தமடைந்தார். திருவாசக்த்தின் ஒரு பகுதியினை பாடியவர் பின் ஆலயத்தின் கிழக்கே இருந்த வனத்தில் தவம், தியானம் எனத் தனிமையில் மூழ்கினார்.

அப்போது பெரும் ஆபத்து ஒன்று வந்தது அது இலங்கையின் பௌத்தர்கள் வாதம் செய்ய வந்த காட்சி. பௌத்தர்களின் ஒரே இலக்கு அல்லது ஆசை இந்துமதத்தை அடியோடு ஒழிப்பது.

இதற்கு அவர்கள் செய்யும் வித்தை சித்தாந்த விவாதம், அவர்கள் அந்த விவாதத்தில் வென்றுவிட்டால் ஆலயம் கைவிடப்படும் , இவர்கள் வென்றுவிட்டால் அவர்கள் இப்பக்கம் வராமலே போகவேண்டும் என்பது விதி.

இதைத்தான் சமணரும் செய்தார்கள். பௌத்தரும் அதையே செய்தார்கள்.

பல நெருக்கடிகளை இப்படி கொடுத்து இந்துக்கள் ஆலயத்தை நாசமாக்கிய அந்த பௌத்த கும்பல் இப்பொது சிதம்பரம் ஆலயத்துக்கு வந்து சவால்விடுத்தது.

சோழர்கள் சோர்ந்திருந்த காலம் அது. தஞ்சாவூர் கோவில் எல்லாம் அப்போது வரவில்லை. சமணமும், பௌத்தமும் ஆங்காங்கே அட்டகாசம் செய்துகொண்டிருந்தன‌.

இந்த சமணர்களின் சவாலை எதிர்க்கொள்ளமுடியா தீட்சிதர்கள் அஞ்சினார்கள், சிவனிடமே மண்டியிட்டு இந்த ஆபத்தில் இருந்து எங்களை காப்பாற்றும் என மருகினார்கள்.

“வனத்தில் தவம்புரியும் எம் அடியாரை அழையுங்கள், அவனால் வெற்றியாகும்” என்றார் சிவன்.

தீட்சிதர்கள் சென்று மாணிக்க்கவாசகரை அழைத்தார்கள். அவரோ எல்லாம் கடந்த ஞான நிலையில் சிவனோடு கலந்த பெரும் ஞானநிலையில் இருந்ததால் இந்த மானுட வம்புசண்டைக்கு வரமறுத்தார். அது சிவனின் உத்தரவாக இருக்கமுடியாது எனக் கருதினார்.

அவர் வரமறுத்த நிலையில் தீட்சிதர்களே பௌத்தர்களுடன் வாதம் புரிந்தனர். ஏழுநாள் நடந்த வாதத்தில் இருதரப்புக்கும் வெற்றி தோல்வி இல்லை என்றாலும் வாதம் பௌத்தம் பக்கம் சரிந்த அறிகுறி தெரிந்தது.

தீட்சிதர்கள் மீண்டும் சிவனிடம் புலம்ப “என் அடியானை மாணிக்க வாசகரே என அழையுங்கள், மாணிக்க சிலம்பொலி காட்டி நானும் அவனும் கொண்ட பந்தமான அப்பெயரை இருவர் மட்டுமே அறிந்திருக்கின்றோம், அந்தப் பெயரோடு அவனை அழையுங்கள் ” என்றார்.

தியான நிலையில் இருந்தவரிடம் “மாணிக்கவாசகரே, சிவனே உங்களை அழைக்கின்றார்” என தீட்சிதர்கள் சொல்ல, தனக்கும் சிவனுக்குமான அந்த உறவின் பெயர் இவர்களுக்கு சிவனால் மட்டுமே தெரிந்திருக்க முடியும் என்பதை உணர்ந்த மாணிக்கவாசகர் பௌத்தர்களுக்கு எதிராக வாதிட வந்தார்.

ஒரு சில வார்த்தைகளிலே அவர் வென்றுவிட பௌத்தர்கள் மன்னிப்பு கேட்டு கிளம்பினார்கள்.

அவர்கள் வந்த நோக்கம் சைவத்தை அழிப்பது, நாகப்பட்டினம் அவர்களின் பிரதான தளமாக இருந்தது. அன்று தஞ்சாவூர் பெரியகொவில் எல்லாம் இல்லை, திருவாரூர் கோவிலும் பௌத்த சதியால் முடங்கிக் கிடந்தது. சோழர்கள் பெரிய எழுச்சியில் இல்லை.

அக்காலகட்டத்தில் சிதம்பரம் ஆலயத்தை முடக்கி திட்சிதர்களை விரட்டி அந்த ஆலயத்தை பாழடிக்க வேண்டும் எனும் சதியோடு வந்த பௌத்தர்கள் தோற்று ஓடினார்கள்.

நடந்ததை கேள்விப்பட்ட இலங்கையின் பௌத்த மன்னன் பெரும் மகான் எனப் போற்றப்பட்ட மாணிக்கவாசகரை தன் ஊமை மகளுடன் காணவிரும்பினான். பொல்லா பௌத்தர்கள் மன்னன் போக்கு சரியில்லை எனக் கூடவே வந்தார்கள்.

வந்தவன் தன் மகளோடு மாணிக்கவாசகர் பாதம் பணிந்தான், அவர் அந்த சிறுமி நோக்கி புன்னகைத்து “உன் பெயர் என்னம்மா” என்றார்.

“அவள் ஊமை” எனத் தலைகுனிந்து சொன்னான் பௌத்த மன்னன், ராணி கண்ணீர்விட்டாள்.

“சிவனருள் அவள்மேல் பட்டால் பேச்சு வந்துவிடப் போகின்றது” எனப் புன்னகைத்தபடி அவளை நோக்கினார் மாணிக்க்கவாசகர்.

“அப்படி நடந்தால் நான் சைவத்துக்கு மாறிவிடுவேன். என் தேசமும் மாறிவிடும்” என்றான் மன்னன்.

அதைக்கேட்ட பௌத்த கும்பல் அலறிற்று, “மன்னா , இதெல்லாம் எங்களுக்கும் சாத்தியம், நாங்கள் சில சுவடிகளை ஓதி, சில மந்திரங்களை சொல்லி உங்கள் மகளை பேசவைக்கின்றோம். எங்களால் முடியாததை இவன் செய்தால் நாங்களே உங்களோடு சைவம் ஏற்போம்” எனக் கொந்தளித்தார்கள்.

மாணிக்கவாசகர் சிரித்தபடி கை அசைத்தார்.

பௌத்தர் என்னென்ன மாய மந்திரங்களை ஓதியும் பலனில்லை, என்னென்வோ செய்து பார்த்தும் சிறுமி பேசவில்லை.

பின் அவர்கள் தலையினை தொங்கவிட்டபடி அமர்ந்தனர். மாணிக்கவாசகர் சிவனே என்றபடி “திருச்சாழல்” பதிகம் பாடி அவள் நெற்றியில் விபூதி இட்டார். அவள் உடனே பேசத்தொடங்கினாள்.

சபை அப்படியே மௌனமானது, யாரும் யாருடனும் பேசவில்லை.

அந்தச் சிறுமிக்கு “மீனாட்சி” எனப் பெயரிட்ட மாணிக்கவாசகர், அந்த மன்னனையும் அவன் சீடர்களையும் சைவமாக்கினார்.

காவேரியில் மூழ்கி வந்த அவர்கள் காதில் பஞ்சாட்சரம் ஓதி அவர்களுக்கு நீறுபூசி சைவமாக்கினார்.

சிதம்பரம் ஆலயத்துக்கும், சிவனின் சைவத்துக்கும் வந்த ஆபத்து மாணிக்கவாசகரால் நீங்கிற்று. அந்தச் சிதம்பரம் ஆலயத்திலே தங்கியிருந்த மாணிக்கவாசகர் அங்கே சிவனுடன் ஜோதியில் கலந்துவிட்டார்.

இதுதான் சிவன் பிட்டுக்கு மண்சுமந்த திருவிளையாடல். நரிளைப் பரிகளாக்கிய முந்தைய திருவிளையாடலின் தொடர்ச்சி இது.

இங்குதான் மாணிக்கவாசகர் எனும் தன் மகாபக்தனுக்காக சிவன் இறங்கிவந்து காத்த பல விஷயங்கள் நுணுக்கமாக விளக்கப்பட்டு தன்னை முழுக்க நம்பிய அடியார்க்கு சிவம் ஓடிவந்து நிற்கும், அதிசயம் செய்து காக்கும் என்பது சொல்லப்படுகின்றது.

மாணிக்கவாசகரை சிவன் ஆட்கொண்டார். அதன் பின் எந்த காலத்திலும் இவர் அவரைவிடவில்லை, அவர் இவரை விடவில்லை எனும் அளவு அது ஆத்மபந்தமாயிற்று.

சிவன் ஒருவரை தேர்ந்தெடுத்துவிட்டார் என்றால் அவரை விடவே மாட்டார், தன் திட்டத்துக்காக ஒருவரை ஆட்கொண்டுவிட்டால் எந்நிலையிலும் அவரை கைவிட மாட்டார், ஓடிவந்து காத்துக் கொள்வார்.

அவரை அவமானப்பட விடமாட்டார், அவர்களை கைவிடமாட்டார் என்பதை சொல்லும் திருவிளையாடல் இது.

இங்கே மிகப்பெரிய வகையில் தண்டிக்கப்படுபவன் அந்த பாண்டிய மன்னன், அவனுக்கு கர்வம் இருந்திருக்கின்றது, தான் எனும் அகந்தை இருந்திருக்கின்றது.

மாணிக்கவாசகர் சிவாலயம் கட்டியிருக்கின்றார் என்பதை தெரிந்தும் அவரை துன்புறுத்தினான்; சிவன் அருள் அல்ல, தன் பலமே தன்னை காக்கும் எனக் குதிரைகளை தேடியிருக்கின்றான்.

அவன் அகந்தை அழிக்கத்தான் நரிகளை குதிரைகளாக்கி, மீண்டும் அவற்றை நரிகளாக்கி “மன்னரே, என் அரூள் இல்லையென்றால் எந்த குதிரையும் நரிக்குச் சமம்” எனக் காட்டினார் சிவன்.

சிவன் அருள் ஒன்று போதும், சிவனடியார்களை பாதுகாத்தல் ஒன்று போதும் எனச் செய்யாமல் அவன் சிவனை நம்பாமல் தன் பலத்தை நம்பி சிவனடியாரான மாணிக்கவாசகரை சோதிக்க போய் சிக்கிக் கொண்டான்.

ஆம். சிவனை நம்பாமல் அகந்தை கொண்டிருப்பதும், சிவனடியார்களை அவமரியாதை செய்வதும் சரியல்ல. அது பெரும் சிக்கலை, மாபெரும் இன்னலை கொண்டுவரும். அதைச் செய்தல் கூடாது என்பதை இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது.

சிவனை நம்பாதவன் எந்தப் பெரிய குதிரையினை வைத்திருந்தாலும் நரிப்படை போல் பலனற்று போவான் என்பதை சொல்லி அவனை எச்சரித்த சிவபெருமான், அப்படியே இந்த வைகையினை அளவாய் கட்டுப்பாடாய் ஓடவைப்பது நாமே, வைகை பொங்கினால் உன்னால் என்ன செய்யமுடியும் என மீண்டும் காட்சியால் கேட்டார்.

அந்தப் பதற்றத்தில் பரபரப்பில் அவன் சிக்கி வேலைக்காரனை அடித்தபோது இரு தத்துவங்களைச் சொன்னார் சிவன்.

முதலாவது, எல்லா உயிர்களிலும் இருப்பது சிவம், எல்லாமும் சிவவடிவம் என்பதைச் சொல்லி, சக மானுடர்களை வதைக்கக் கூடாது, அது சிவபாதகம் என்பதைச் சொன்னார்.

“ஒன்றேதா னூழி முதலாகிப் பல்லுயிர்க்கும்
ஒன்றாகி நிற்குஞ் சிவம்.”

“நிற்கும் பொருளும் நடப்பனவுந் தானாகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்”

“உலகத்திற் பட்ட உயிர்க்கெல்லா மீசன்
நிலவுபோ னிற்கும் நிறைந்து”

என ஒளவையின் ஞானகுறளில் சொல்லப்பட்ட தத்துவத்தை காட்சியாக காட்டினார் சிவன்.

ஒரு ஏழை கிழவி என்றுகூட பாராமல், அவளுக்கு யாருமில்லை எனத் தெரிந்தாலும், அவளும் கரையினை செம்மைப்படுத்த வரவேண்டும் என கட்டளையிட்டதெல்லாம் நிச்சயம் அகந்தை அல்லது எளியவர்களை ஒடுக்கும் அகம்பாவம்.

அதை சிவன் உடைத்துப்போட்டார். யாருமற்றவர்க்கு தானே வந்து ஆபத்பாந்தவனாய் காப்போம் என்பதையும் சொன்னார்.

மகா முக்கியமான தத்துவம் சிவன் ஒரு கட்டளையிட்டால் அதற்கு கீழ்படியவேண்டுமே தவிர, ஏன் எதற்கு எனக் கேள்விகள் அவசியமற்றவை. சிவம் ஏதோ ஒன்றுக்கு நம்மை தயார்படுத்தும், அதற்கே சோதனைகள் என்பதை தாங்கும் மனம் வேண்டும்.

மாணிக்கவாசகருக்கு அது இருந்தது. எந்த சோதனையிலும் அவர் மனம்தளரவில்லை. அவர் போதும் இந்த சிவவாழ்வு என அலறி ஓடவில்லை.

மாறாக, அவர் எல்லா சோதனையும் ஏற்றுக்கொண்டார். மதுரையினை விட்டு கிளம்பு என்றபோது கிளம்பினார். அதுவரை அமைச்சர் எனும் பெரும் நிலையில் மன்னனுக்கு அடுத்த நிலையில் வாழ்வாங்கு வாழ்ந்தவனை இனி நீ பண்டார சன்னியாசி என்றபோதும் ஏற்றுக்கொண்டு அப்படியே சிதம்பரம் சென்றார்.

அங்குதான் பௌத்தம் எனும் பெரும் ஆபத்தை முறியடித்து சிதம்பரம் ஆலயம் சைவ ஆலயமாக நிற்க வழி செய்தார்.

ஆம். சிதம்பரம் ஆலயத்தை காக்கவும், திருவாசகம் எனும் அதி அற்புதமான நூலை அங்கு தரவுமே எம்பெருமான் தன்னை ஆட்கொண்டார் என உணர்ந்தவர் தன் கர்மா முடிந்த மகிழ்வில் அங்கே சிவனுடன் கலந்தார்.

பிட்டுக்கு மண் சுமந்த படலம் என்பது சிவன் வந்து நடத்திச் சென்ற வெறும் நாடகம் மட்டுமல்ல. மாணிக்கவாசகரை காத்து மன்னன் செருக்கை அடக்கி வந்தி எனும் மூதாட்டிக்கு மோட்சம் கொடுத்தது மட்டுமல்ல‌.

அது ஒரு அழகான ஞான தத்துவம்.

பிட்டும் மண்ணும் தொட்டுப்பார்க்க ஒன்றுபோல் பரபரவென இருக்கும் தன்மை கொண்டது. கண்களை மூடிக்கொண்டு தொட்டுப்பார்த்தால் மணலுக்கும் பிட்டுக்கும் பெரிய வித்தியாசம் இராது.

மண்ணில் இருந்து வரும் நெல்லில் கிடைப்பதுதான் பிட்டு.

அரசன் மண். தன் மண், தன் நிலம், தன் நாடு என லௌகீகமாக மண்ணை நேசித்தான். மாணிக்கவாசகர் மண்ணை நேசிக்கவில்லை, அந்த மண்ணில் விளைந்த ஞானத்தை தேடினார்.

மதுரை மண்ணை மன்னன் நேசித்தான். அந்த மண்ணில் விளைந்த பிட்டு எனும் அந்த சொக்கநாதர் ஆலயத்தை மாணிக்கவாசகர் தேடினார்.

அதைத்தான் பிட்டுக்கு மண் சுமந்தான் என் சீடன், பாண்டிய மன்னனுக்கும் எல்லா உயிர்க்கும் சொல்லி சென்றார் சிவன்.

இந்த லௌகீக வாழ்வை தேடுவதை விட, இந்த மண்ணை அதன் காவலை தேடுவதை விட, மண்ணிலிருந்து வரும் எல்லாவற்றையும் கொண்டு வளரும் இந்த உடலை தேடுவதை விட, அந்த உடலினுள் இருக்கும் ஆத்துமத்தை தேடுங்கள், அதைக் கொண்டு சிவனை நாடுங்கள் என்பதே பிட்டுக்கு மண் சுமந்த தத்துவம்.

ஒவ்வொரு மனிதனும் மட்பாண்டத்துக்கு சமம், மானிட உடல் என்றும் அழியும் மண்.

அதைத்தான் “நாற்ற பாண்டம்” என்றார் பட்டினத்தார். “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன் நாலாறு (பத்து) மாதமாய் குயவனை வேண்டி ” என்றார் இன்னொரு சித்தர்.

ஆம். மானுட உடல்தான் மண். அது மண்ணில் இருந்து உருவாகி, மண்ணால் வளர்ந்து, மண்ணுக்கு செல்லும்.

அந்த மண்ணுக்குச் செல்லும் அந்த உடல்தான் பிட்டு எனும் ஆன்மாவினை தாங்குகின்றது. மானுட வாழ்வே பிட்டு எனும் ஆன்மாவை தாங்கும் காலம்தான். அந்த பிட்டை சிவனுக்கு கொடுக்க வேண்டும், அந்த ஆத்மா சிவனை அடையவேண்டும், முற்றிய நெல்லில் இருந்து வரும் அரிசி பிட்டு போல, நெல்லை அவித்து அதை இடித்து பின் அரிசியினை நொறுக்கி செய்யும் பிட்டு போல, ஆத்மாவினை வருத்தி ஐம்புலன் நொறுக்கி பெரும் பெரும் வலியும் வேதனையும் தாங்கி அந்த ஆன்மா எனும் ஞான பிட்டினை இறைவனுக்கு கொடுத்திடல் வேண்டும். சிவ வாழ்வு என்பது அதுதான்.

மாணிக்கவாசகர் அந்த வாழ்வைத்தான் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த பெருவாழ்வின் தத்துவ காட்சிவடிவமே பிட்டுக்கு மண்சுமந்த படலம். ஒவ்வொருவரும் அதை மாணிக்கவாசகர் வாழ்வில் இருந்து கற்று, அதையே தானும் செய்தால் அந்தச் சிவனருள் கிடைக்கும். கயிலாயம் அவர்களுக்கு காத்திருக்கும் என்பதே இந்த படலத்தில் சிவபெருமான் சொல்லும் ஞான‌போதனை.

திருவிளையாடல் புராணம் 10 : (மதுரையம்பதி ஆவணி மூல திருவிழா : 10) விறகு விற்ற திருவிளையாடல்.

அது பாண்டிய நாட்டை வரகுணபாண்டியன் ஆண்ட காலம் மாணிக்கவாசகர் காலத்தில் இருந்தவன் இரண்டாம் வரகுணபாண்டியன், இந்த பாண்டியன் காலத்தால் மூத்தவன்.

அந்தப் பாணடிய நாடு செழிப்பாய் இருந்தது. வைகையும், பொருநையும் இதர நதிகளும் விளைச்சலை அள்ளிக் கொடுத்தது, பொதிகை மலை எல்லா மலை வளங்களையும் சந்தனம், மாணிக்கம் இன்னும் காடு கொடுக்கும் வளம் என எல்லாம் கொடுத்தது.

கொற்கை முதலான துறைமுகங்களில் கப்பல்கள் காத்துக் கிடந்தன. கடலோரத்தில் தூத்துக்குடி குலசேகரன் பட்டனம் போன்ற இடமெல்லாம் அதிசிறந்த முத்துக்களை குவியல் குவியலாக குவித்துப் போட்டிருந்தார்கள்.

ஆறு, மலை, கடல் என எல்லா வளமும் கொண்ட செழிப்பான நாடு பாண்டிய நாடு. அதன் வளம் மதுரையின் தெருக்களில் தெரிந்தது.

அந்த மதுரையின் வாசலில் வந்து நின்றான் ஏகநாதன் அல்லது ஹேமநாதன் எனும் பாகவதர். அவன் வடதேசத்தை சேர்ந்த இசைக்கலைஞன். இராமேஸ்வரம், கன்னியாகுமரி எனத் திருப்பயணம் வந்தவன் ஒவ்வொரு தேசமாக தன் இசைத்திறமையினை காட்டிப் பெரும் பரிசும் பொருளும் பெற்றுவந்தான்.

அதனால் கர்வமும், அகம்பாவமும் அவனிடம் மிகுந்திருந்தன‌.

அந்த இந்துஸ்தானம் இசையில் தேசம் முழுக்க ஒரே தன்மையினை கொண்டிருந்தது. இந்துஸ்தானி, கர்நாடகம் என வகை வகையாக பிரித்தாலும் அதன் ஆதாரம் ஒன்றாய் இருந்தது.

அது வான்மீகி இராமாயணமோ கம்ப ராமாயணமோ, துக்கராம் பாடலோ, ஆண்டாள் பாடலோ இல்லை வங்கத்து பாடலோ ஏழு ஸ்வரங்களுக்குள் பொருந்துமாறுதான் எல்லா மொழியிலும் கவிதை இலக்கணம் இருந்தது.

சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வங்கம், மலையாளம், கன்னடம் என எல்லா மொழியின் அக்கால கவிதைகளும் ஏழு ஸ்வரங்களுக்குள் அப்படியே பொருந்தும்படிதான் யாப்பு இருந்தது.

இதனால் பாரதம் முழுக்க இசை ஒன்றாக இருந்தது. இசையினை கொண்டே இறைவனை அடையலாம் என்பதால், ஆத்ம ராகத்தை இசை தட்டி எழுப்பி இறைவனோடு மானுடனை ஒன்றச் செய்யும் என்பதால் அதை இந்துமதம் வலியுறுத்திற்று.

புல்லாங்குழலோடு கண்ணன், மிருதங்கத்தோடு நந்தி, வீணையோடு கலைவாணி, மஹதி எனும் வீணையுடன் நாரதர் இன்னும் ஏகப்பட்ட தெய்வங்களை, அது இசைக்கும் கோலத்திலே நிறுத்தி இசையின் பெருமையினைச் சொன்னது.

அந்த இசையினை பாரத கண்டம் முழுக்க மன்னர்கள் வளர்த்தனர். எந்த நாட்டு இசைமேதை என்றாலும் அவனை இசைக்கவைத்து அவனுக்கு பொருள், பொன் கொடுத்து அவன் வாழ்வினை காத்து, நிம்மதி கொடுத்து இசைத்துக் கொண்டே இரு, அதில் பகவானை பாடிக்கொண்டே இரு, மக்களை இறைவன்பால் திருப்பிக்கொண்டே இரு என உற்சாகபடுத்தினார்கள் இந்து மன்னர்கள்.

இந்த நாட்டின் வாழ்வு அப்படித்தான் இருந்தது. இசையினை அப்படி வளர்த்த இடம் இது, பாண்டிய நாடு அந்த பாரம்பர்யத்தில் வந்தது.

முத்தமிழில் இசைத்தமிழ் என ஒன்றை கொண்டு இசையினை போற்றிய இடம் மதுரை தமிழ்ச்சங்கம், அந்த மதுரைக்குள் ஒரு இசைமேதையாய் தன் பரிவாரங்களுடன் வந்தான்.

அவன் கைவிரல்களில் மாணிக்க வைர மோதிரங்கள் மின்னின; கழுத்தில் முத்துமாலை அணிந்திருந்தான்; இன்னும் நகைகள் உயர்ந்த பட்டு ஆடைமேல் மின்னின‌.

சிவந்த மேனியில் உச்சிக் குடுமினை சுற்றி கூட தங்க காப்பானே தாங்கிக் கொண்டிருந்தது.

அவனின் பரிவாரங்களும், அவர்கள் வந்த குதிரை வண்டியும் அவனுக்கான சேவகர்களும் சுமார் 100 பேர் இருந்தார்கள்.

மகா கர்வியான அவன் பாண்டிய நாட்டின் நகர வாசலில் நின்றபடி தன் ஆட்களை விட்டு மாமேதை ஹேமநாத பாகவதர் வந்திருக்கின்றார், அரச மரியாதையுடன் அவனை அழைத்து செல்ல மன்னரிடம் சொல்லுங்கள் எனச் செய்தி அனுப்பினான்.

மன்னன் அப்போது ஆலவாய் நாதன் ஆலய பூஜைக்கு தயாராகிக் கொண்டிருந்தான், ஒரு மன்னனை காணவும், பரிசு பெற்று வாழவும், புலவர்களும் பாணர் எனும் இசைபாடுவோரும் வருதல் மரபு.

அக்காலத்தில் எங்கிருந்தோ வந்து அவனிடம் பரிசுபெறுவார்கள். இலங்கையில் சிறந்த யாழ்மீட்டும் யாழ்பாணர்களெல்லாம் வந்து பரிசுபெற்று செல்வார்கள். பணக்கார மன்னனிடம் பரிசுவாங்கி வாழ்தல் அவர்கள் வாழ்வு, அவர்கள் வாழ இசை வாழும்.

அப்படி ஏகப்பட்டோரை பார்த்த அரண்மனை அது, அங்கே ஒரு இசை பாணர் அரசமரியாதை கேட்பதை புன்னகையோடு கடந்து, அந்நிய தேசத்தவனா அப்படியானால் தங்குமிடம் மட்டும் ஏற்பாடு செய்யலாம். மறுநாள் சபையில் பாடட்டும் எனச் செய்தி அனுப்பினார்கள்.

அதனை பெரும் அவமானமாக கருதினான் ஹேமநாதன், அவன் கர்வமிக்க மனம் கொதித்தது.

வரவேற்க ஆளில்லா பரதேசியா நான்? இங்கே பஞ்சம் பிழைக்க வந்த பண்டாரமா நான்? காட்டுகின்றேன் இந்த அரசனுக்கு நான் யார் எனக்காட்டுகின்றேன்? எனக் கறுவிக்கொண்டே தன் இடதுகாலை மதுரைக்குள் வைத்தான் ஹேமநாதன்.

அவனுக்கான மாளிகை நோக்கி அரசப்பணியாளன் அழைத்து செல்ல வளமான மதுரையின் தெருக்களை ஓரகண்ணால் பார்த்துக் கொண்டே வந்தான்.

முத்தும், நவமணியும் இங்கே குவிந்திருந்தத; பட்டும் பீதாம்பரமும் சல்லி விலைக்கு கிடைத்தது; தங்கம் எல்லோர் கழுத்திலும், கையிலும் தென்பட்டது.

மனிதர்கள் ஆரோக்கிய தேஜசுடன் தென்பட்டது அவர்கள் நல்ல உணவும், கவலையற்ற வாழ்வும் கொண்டவர்கள் என்பதை சொல்லிற்று.

ஒவ்வொரு கடையிலும் முதலாளிகள் சிரித்த முகத்துடன் இருந்தார்கள். வாங்குவோரும் விற்போரும் புன்னகை தளும்ப நின்றார்கள். எங்கும் கவலையோ வருத்தமோ இல்லை.

எல்லோரும் எல்லாம் பெற்றால் அன்றி அது சாத்தியமில்லை. காவலர்கள் ஓரமாக அமர்ந்து அடிக்கடி பலகாரமும், பருத்திப் பாலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். பெரும் காவல் கோட்டைக்குள் அவசியமே இல்லை.

ஒரு பக்கம் கண்ணை பறிக்கும் மணிகள் குவியல், ஒருபக்கம் பட்டாடைகள், ஒரு பக்கம் மணமிக்க நெய்யில் செய்த பலகார மணம், ஒருபக்கம் பலநாட்டு வணிகர்கள் கண்கள் விரிய பேய்போல் பொருளை விற்க வாங்க காட்டிய ஆர்வம் என அந்த மதுரை பெரிய பெரிய மாய்மாலம் காட்டி நின்றது.

அதன் மாடமாளிகை, பெரும் கோபுரம் எங்கும்வாழ்வு எங்கும் வளம் என பார்த்துக்கொண்டே வந்தவன், தனக்கு இங்கு நடந்தது அவமானம் அதற்கு இதே வீதிகளில் பழிதீர்ப்பேன் என சொல்லிகொண்டே வந்தான்.

அன்று இரவெல்லாம் மன்னனை எப்படி அவமதிப்பது என்பதிலே அவன் சிந்தனை இருந்தது. அவனின் அடிபொடிகள் அதனை “மகா பாகவதரான உங்களை அவமானப்படுத்திய இந்த மன்னனை சும்மா விடவே கூடாது” என அவன் வன்மம் மாறாமல் தூண்டிவிட்டுக் கொண்டே இருந்தனர்.

மறுநாள் மன்னன் அவையில் அவன் அரங்கேற்றம் இருந்தது. அவன் காலையிலே தயாராகி காத்திருந்தான். ஆனால் அவனுக்கான அனுமதி மாலையில்தான் கிடைத்தது.

அவன் இன்னும் அதனை அவமானமாகக் கருதினான் பொருமினான், “இந்த ஹேமநாத பாகவதனை காக்கவைத்த பாண்டிய மன்னா, உன்னை கதறவைக்கின்றேன் பார்” என உரக்கக் கத்தினான்.

மன்னன் தன் அன்றாட அலுவல்களை முடித்துவிட்டு தன் மாலை நேரத்தில் தன் அவையில் வீற்றிருந்தான். தகவல் ஹேமநாதனுக்கு தெரிவிக்கப்பட்டது.

ஹேமநாதன் தன் பரிவாரங்களோடு வந்தான், அப்படி பெரிய பரிவாரங்களோடு ஒரு பாகவதன் வருவது அங்கு அதுதான் முதல் முறை, மன்னன் நிமிர்ந்து உட்கார்ந்தான்.

அவை கொஞ்சம் ஆச்சரியமானது.

“எங்கள் குருநாதர் பாடிபிழைக்கும் பாணன் அல்ல, ஸ்வரங்களை உருவாக்கும் பிரம்மா, அவரை அறியாத பாரத தேச மன்னர்கள் இல்லை, அவர்கள் கொட்டாத பொருள் இல்லை.

அப்படியான எங்கள் குருநாதர் உங்கள் நாட்டில் கால்வைத்தது உங்கள் பாக்கியம், உங்கள் மன்னருக்கு அவரை தரிசிக்க தாமதமாகவே கொடுத்து வைத்திருகின்றது.

எங்கள் குருநாதர் இசையின் அரசன் என்பதால் அவர் சாதாரண அரியணையில் அமரமாட்டார். அரசனுக்கு சமமான உயரமான ஆசனம் அவருக்கு வேண்டும்” என்றான்.

அவை ஒருமாதிரி நெளிந்தது; பலர் ஆத்திரமடைந்தனர்; சிலர் முணுமுணுத்தனர்; அரசன் தன் உதவியாளனை நோக்கினான். அவன் சொன்னான்.

“யாராக இருந்தாலும் இங்கே இதுதான் வழமை, உங்கள் குருநாதர் பாடட்டும் அதன் பின் முடிவு செய்யலாம்”

இன்னும் ஆத்திரமான ஹேமநாதன் அதை வெளிக்காட்டாமல் தன் பரிவாரங்களை அமரச் சொன்னான், அவனும் மண்டியிட்டு குதிகாலை மடக்கி அமர்ந்தான்.

அவனின் உதவியாளன், “இப்போது எங்கள் குரு அவரின் சாதாரண ராகம் ஒன்றை பாடுவார்” என்றான்.

பாகவதன் சம்பிரதாயத்துக்கு அரசனுக்கு வணக்கம் சொல்லி அவையோரை ஒரு மாதிரி பார்த்து அகம்பாவ புன்னகை செய்தபடி தன் சித்தாரை நிமிர்த்தினான்.

அதில் நவமணிகளும் மின்னிக்கொண்டிருந்தன, தனக்கு சுதி சேர்ப்பவனை நோக்கி கையசைத்தான் பாகவதன்.

அவன் மெல்ல சுதியினை தொடங்க, இவன் ஆலாபனையினை கண்ணை மூடி தொடங்கினான், அவனின் குரலும் அவன் மீட்டிய இசையும் எல்லோர் ஆர்வத்தையும் தூண்டிற்று.

அவன் மெல்ல மெல்ல ஸ்வரங்களை தொடங்க எல்லா பக்கவாத்தியமும் ஒவ்வொன்றாய் இசைக்கப்பட்டன‌.

அந்த இசைக்கோர்வை மிக மிக நேர்த்தியாக வந்தது, அவையோர் மெல்ல மெல்ல வசப்பட்டனர். மன்னன் இன்னும் கூர்மையானான்.

அவை தன்னை கவனிப்பதை அறிந்த பாகவதன் அடுத்தடுத்த ஸ்வரங்களுக்கு தாவினான். அவனின் பக்கவாத்தியமும் அப்படியே துணைக்கு வந்தன‌.

மெல்ல மெல்ல ஒவ்வொருவர் இதயமும் அவன் இசைவசம் வந்தது. அவன் இன்னும் ஆழமாகச் சென்றான். அவன் இசையில் நுணுக்கம் காட்ட காட்ட எல்லோரும் கண்களை மூடி தலையாட்டத் தொடங்கினர்.

பெரிய பெரிய சபைகளில் அனுபவம் கொண்ட அவன் தன் நுணுக்கமான இசையால் ஒவ்வொருவரையும் வசப்படுத்தினான். அரசன் அப்படியே மகுடிக்கு கட்டுப்பட்ட நாகம் போலானான்.

சுமார் ஒருமணிநேரம் அப்படி இடைவிடாமல் அவன் இசைத்து பாடி முடித்தபோது சபை மூச்சுவிட மறந்து அவனையே நோக்கியது.

மன்னன் தானே எழுந்து தன் முத்துமாலையினை கழற்றி அவனுக்கு இட எழுந்தான்.

அப்போது அவன் உதவியாளன் சொன்னான், “இந்த மாலைகளை போல் ஆயிரம் மாலைகளை கண்டவர் எங்கள் குருநாதர்”

அரசன் இசைமயக்கத்தில் இருந்ததால் கேட்டான், “அப்படியானால் என்ன வேண்டும்?

என்ன கேட்டாலும் தருவீரோ?

ஆலவாயனை வணங்கும் நான் வாக்கு தவறுவதில்லை.

அப்படியா?

சத்தியமாக‌.

அப்படியானால் எங்கள் குருநாதருக்கு போட்டியாக பாட பாண்டியநாட்டில் யாராவது இருந்தால் உடனே போட்டிக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

போட்டி ஏன்?

எங்கள் குருநாதரை இசையில் தோற்கடிக்க பாண்டியநாட்டில் யாருமில்லாவிட்டால் அடுத்து என்ன என்பதுதான் உமது வாக்கில் இருக்கின்றது.

பந்தயத்தில் தோற்றால் என்ன வேண்டும், என் வாக்கு மாறாது.

ம்ம் என் குருநாதர் வென்றுவிட்டால் அவரை வெல்ல பாண்டிய நாட்டில் யாருமில்லாவிட்டால் அவரை பட்டத்து யானைமேல் ஏற்றி பவனிவரச் செய்யவேண்டும், அப்போது அவர் என்னென்ன உத்தவிடுவாரோ அதெல்லாம் நடக்கவேண்டும்.

அவரை அரசனாக்க சொல்கின்றீர்களா?

ஆம். அவருக்கு அந்த அதிகாரத்தை கொடுத்து பவனி வரச் சொல்ல வேண்டும், இந்த மதுரையில் அவர் மன்னனாக வலம் வரவேண்டும்”

மன்னன் அதிர்ந்தான். சபை அதிர்ந்தது.

முதல் முறையாக பேசினான் ஹேமநாதன், “என்ன மன்னரே, முத்தமிழ் வளர்த்த மதுரையாம், இசைத்தமிழ் என ஒரு பிரிவே உண்டாம், அப்படியான மதுரையில் எம்மிடம் போட்டியிட யாருமில்லையோ?

கலை வளர்க்காத அரசு ஒரு அரசா? நல்ல கலை வளர்க்கா அரசனுக்கும், காட்டு வேடனுக்கும் வித்தியாசமில்லை என்பது ஆன்றோர் வாக்கு.

உங்கள் நாட்டில் நல்ல இசைவாணர் இருந்தால் வந்து என்னோடு மோதட்டும், உங்கள் நாட்டின் இசையின் தரத்தை நானும் பார்க்கின்றேன், அப்படி எவனும் இல்லை என்றால் நானே உங்களுக்கு இசை வளர்த்து தருகின்றேன், ஏதோ என்னால் முடிந்த உதவி”

அவன் சொல்லும்போது அவன் பரிவாரங்களெல்லாம் வாய்விட்டு சிரித்தன, மன்னன் தன்னை அவமானமாக உணர்ந்தான்.

பாகவதனின் உதவியாளன் தொடர்ந்தான், “மன்னரே, சவாலை ஏற்றுக்கொள்கின்றீரா? இல்லையா?”

சவாலை ஒரு மன்னன் ஏற்றுக்கொள்ளாவிட்டால் அது அவமானம் என்பதால் மன்னன் “சரி, விரைவில் போட்டிக்கு ஏற்பாடு செய்கின்றேன்” என்றான்.

“சில நாட்களில் ஏற்பாடு செய்யவேண்டும் மன்னா, அதிகநாள் நாங்கள் இங்கு தங்கமுடியாது, நாளை கடத்தினால் எங்கள் குருநாதர் வென்றதாக இந்த சபை முடிவுசெய்யவேண்டும்” எனச் சொன்னான் அவன்.

மன்னன் தலையாட்டினான், சபை தலையாட்டிற்று.

அன்றிரவு மன்னனுக்கு தூக்கம் வரவில்லை. அமைச்சர்களுடன் பெரும் ஆலோசனை நடத்தினான். அவனுடன் போட்டியிட நம்மிடம் யார் உண்டு என்பது இரண்டாவது, முதல் ஆபத்து அவனை பட்டத்து யானையில் அமரவைத்து பவனிவரவைப்பது.

அதில் இன்னொருவன் அமர்வது அரச அவமானம், பாண்டியநாட்டுக்கு அவமானம். அப்படியே பட்டத்து யானையில் இருந்து அவன்சொல்வதெல்லாம் கட்டளையென்றால் என்னென்ன குழப்பத்தை அவன் செய்வானோ தெரியாது.

அவனை நம் இசைமேதைகள் வென்றாக வேண்டும். இல்லையேல் பாண்டிநாட்டுக்கு பெரும் அவமானம் வரும்
என ஆளாளுக்கு சிந்தித்தார்கள்.

இசைதுறையினை நான் வளர்க்காமல் விட்டுவிட்டேன். அதனால் சிவன் என்னை சோதிக்கின்றான். ஆனால் என்னால் பாண்டியதேசம் ஒரு அவமானத்தை சந்திக்கும் எனபதுதான் வேதனை எனக் கவலையுற்றான் மன்னன்.

எனினும், பாகவதனுடன் பாட யாரையாவது வைப்போம். முயற்சிப்போம். ஒருவனைக் கூட போட்டிக்கு வைக்காவிட்டால் எப்படி என்றவர்கள் யாரை அனுப்ப என சிந்தித்தார்கள். ஒன்றும் தோன்றாமல் நாடு முழுக்க இசை விற்பன்னர்களை திரட்டலாம் என முடிவெடுத்தார்கள்.

இந்தச் சிந்தனை மறுநாளும் நீடித்தது, பல வித்வான்கள் இருந்தாலும் ஹேமநாதன் முன் பாடுவது என்பது சவாலாக இருந்தது. அரண்மனை ஆஸ்தான சங்கீத வித்வான் எல்லோரையும் நிராகரித்தான். பாகவதனின் திறமையினை அவன் அறிந்திருந்ததால் அவனும் ஒதுங்கினான்.

பலரை அலசியவர்கள் கடைசியில் சொக்கநாத சன்னதிமுன் பாடும் பாணபுத்திரனை வரச் சொன்னார்கள். அரண்மனை வித்வானும் அதை ஒப்புக்கொண்டான், அந்த பாணபுத்திரன் இசையில் பெரிய அறிவு கொண்டவன் அல்ல. ஆனால், சிவன் முன் அவன்பாடும் பாடலும் ராகமும் சுகமானவை என்பது எல்லோரின் அபிமானம்.

மன்னன் முன் வந்து நின்றான் பாணபுத்திரன். மன்னன் சொன்னான், “பாணபுத்திரா இங்கொரு பாகவதன் வந்து பாண்டியநாட்டில் என்னுடன் போட்டியிட்டு பாட யாருமில்லையா என நமக்கு சவால்விடுகின்றான், நம் சார்பாக நீர் பாடமுடியுமா?” எனக் கேட்டான்.

மன்னன் கேட்டு மறுக்கமுடியா நிலையில் தலையாட்டினான் பாணபுத்திரன். மன்னன் பெரும் நம்பிக்கைசொல்லி பாணபுத்திரனை அனுப்பினான். அவையோரும் அனுப்பினார்கள்.

கலைக்கும் கலைஞர்க்கும் பாரதகண்டம் கொடுத்த இடம் அப்படி. கலைஞர்களால் கலை வாழும், கலையால் பக்திவாழும், பக்தியால் இந்துமதம் வாழுமென அவர்களை ஆதரித்து பெருமிடம் கொடுத்தார்கள்.

இதுவே வேறு யாரும் கேட்டிருந்தால், பட்டத்து யானைமேல் அமர கேட்டிருந்தால் தலை உருண்டிருக்கும். சங்கீதக்காரன் நாவில் சரஸ்வதி இருப்பதால் இவனுக்கு மன்னன் ஆடவேண்டியதாயிற்று.

பாணபுத்திரன் மன்னன் சொல்லுக்கு தலையாட்டினானே அன்றி மிக அஞ்சினான், எத்தனையோ வித்வான்கள் இருக்கும் நாட்டில் தன்னை ஒரு பலியாடாக அனுப்புகின்றார்கள், பந்தயத்தில் தோற்றால் தன் மேல் பழி விழுந்து பாண்டிய நாடே தன்னால் வீழ்ந்ததாக பழிப்பார்கள் என நொந்தே போனான்.

தீராப்பழியினை தன்மேல் பாண்டியநாடே சுமத்தப்போகின்றது, சம்பந்தமே இல்லாமல் பெரும் பழி தன் மேல் வரபோகின்றது என அஞ்சிய பாணபுத்திரன் சோமசுந்திர பெருமானிடமே புலம்ப ஆரம்பித்தான்.

இரு நாட்களில் போட்டி என அறிவித்தான் மன்னன், ஹேமநாதனுக்கு உற்சாகம் தாளவில்லை.

போட்டியில் தான் வென்றுவிட்டதாகவும், யானைமேல் அரசனாக ஊர்வலம் வந்து பாண்டிய மன்னனை தெருவில் நடக்க வைத்து, யானைமுன் நடக்கவைத்து மதுரையில் கண்ணில் பட்டதையெல்லாம் அள்ளி தனதாக்கிகொண்டு பெரும் பெரும் வலிகளை பாண்டிய மன்னனுக்கும் பாண்டிய தேசத்துக்கும் கொடுப்பதுபோல் கனவில் இருந்தான்.

பெரும் உற்சாகம் அவனுக்குள் வந்திருந்தது, தன்னை வெல்ல இங்கு யாராலும் முடியாது. இனி இந்த மதுரையே தனக்கு என்பது போல் இறுமாப்பில் இருந்தான்.

பாணபுத்திரனோ ஆலவாயன் சன்னதியில் புலம்பிக்கொண்டே இருந்தான்.

மறுநாள் போட்டி எனும் நிலையில் மன்னனும் அவையும் பாணபுத்திரனும் வாடி சிவனிடம் புலம்பிக்கொண்டிருக்க பாணபுத்திரன் மறுநாள் தானே ராஜா எனக் கனவில் இருந்தான்.

பாணபுத்திரன் என ஒருவனாம் அவனோடு போட்டியாம், கண்சிமிட்டும் நேரத்தில் அவனை வீழ்த்துவேன் எனச் சிரித்தான் ஹேமநாதன்.

அந்நேரம் மாலை ஒரு விறகுவெட்டி காய்ந்த விறகினை தலையில் வைத்தபடி மதுரைக்குள் ஒவ்வொரு வீதியாக வந்தான், “விறகு வாங்கலியோ விறகு” எனக் கத்திக்கொண்டே வந்தான்.

அந்த மதுரையில் விறகுக்கு எப்போதும் தேவை இருந்ததால் இம்மாதிரி வியாபாரிகள் வருவது இயல்பு, ஆனாலும் அவன் வித்தியாசமாக உற்சாகமாக விளையாட்டும் வேடிக்கையுமாக கத்திக் கொண்டிருந்தான்.

அவன் விறகுக்கு அதிக விலை சொன்னான், ஏதும் பெண்கள் கேட்டால் மலைமேல் ஏறி நல்ல பட்டமரமாக பார்த்து வெட்டினேன், சட்டென பற்றும் நின்று எரியும், அதை ஊதி ஊதி வாடவேண்டாம், கவலையின்றி சமைக்கலாம் அதனால் அதிகவிலை எனச் சொல்லிக்கொண்டான்.

வயதானவர்களை கண்டால் இப்போதே வாங்கிவைத்தால் நல்லதுதானே எனச் சொல்லி சிரித்தும் கொண்டான்.

கொஞ்சம் கருப்பாக நடுத்தர வயதான அவன் சில பல தெருக்களை சுற்றிவந்தான், யாரும் விறகு வாங்குவதாக தெரியவில்லை, மாலை வேளையாயிற்று.

அந்தி சாய தொடங்குவதை அறிந்தவன் வைகையில் நீராடிவிட்டு மீண்டும் விறகு கட்டுக்களுடன் கத்திக் கொண்டே வந்தான். வந்தவன் இந்த ஹேமநாதன் தங்கியிருந்த வீட்டின் திண்ணையில் தன் விறகு கட்டை வைத்துவிட்டு சுவற்றில் சாய்ந்தான்.

மெல்ல பாட ஆரம்பித்தான். அந்த பாடல் மாளிகைக்குள் இருந்தவர்களை எட்டி, ஹேமநாதனையும் எட்டிற்று.

சுக்குநீர் குடித்தபடி சாரீரம் செய்ய தயாரான அந்த ஹேமநாதன் இந்த இனிமையான பாடலை கேட்டு துணுகுற்றான். என்ன இனிமையான ராகம், என்ன குரல், என்ன துல்லியம் எனக் காதுகளை அவன் கூர்மையாக்கினான், அந்த பாடலும் ராகமும் அவனைக் கவர்ந்தன‌.

“இவ்வளவு கூர்மையாக ஒரு ராகத்தை முதல்முறையாக அல்லவா கேட்கின்றேன், யார் பாடுவது?” என அதிர்ந்தவன் அவசரமாக வெளியே வந்தான்,அங்கே பாடல் நின்றிருந்தது.

அங்கே கோடாரியும் விறகும் கட்டி வைக்கப்பட்ட கட்டு சாத்திவைக்கபட்டிருந்தது. அதன் அருகே அந்த விற்குவெட்டி அமர்ந்திருந்தான், நெற்றியில் திருநீறு பளிச்சிட்டது.

“இங்கே யார் பாடியது, யார் பாடியது” எனக் கேட்டான் ஹேமநாதன்.

“என்ன சாமி நீ, இங்க யார் பாடினாக நானேதான் பாடினேன்” என்றபடி அலுத்துக்கொண்டான் விறகுவெட்டி.

“என்னப்பா சொல்கின்றாய் நீயா! அற்புதமாக பாடினாய்.

ஆமாம் சாமி, இதுல என்னங்க‌…

நான் ஹேமநாத பாகவதனப்பா..

எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க, விறகுவெட்டி பொழைக்கிறது தொழிலுங்க, இன்னைக்கு வியாபாரம் சரியில்லீங்க, நாளைக்கு எப்படியாவது விறகு வித்துபுடும்னு நம்பிக்கையில சிவன்மேல் பாரத்தை போட்டு பாடுனேங்க..அதுக்கு சாமி போயிட்டு என்னமோ பேசுதுங்க” என அவன் அலுத்துக்கொண்டான்.

“இல்லையப்பா அந்தப் பாடல் என்னை என்னவோ செய்தது, இன்னொரு முறை பாடப்பா” என்றபடி அமர்ந்துக் கொண்டான்.

அவன் மகா கர்வம் பிடித்தவன், தன்னைவிட இசையில் யாரும் இல்லை எனும் கர்வம் கொண்டவனேதான். ஆனால், இசையின் எல்லா பக்கமும் அறிந்தவன் என்பதால் இசையினை தொழுதான். அந்த மனதை தொட்ட ராகத்தையும் கற்றுக்கொள்ளவும், இன்னும் படிக்கவும் ஆசைகொண்டான்.

நல்ல கலைஞனின் அம்சம் அது. அவனுக்கு வித்தை கர்வம் இருக்கலாம் ஆனால் எந்த கலைஞனும் தன் அளவுக்கு இன்னொரு கலைஞனை கண்டால் உருகிவிடுவான் அப்படி உருகினான் ஹேமநாதன்.

“அட வெக்கமா இருக்கு சாமி, நீங்க ஆளும் குடுமியும் எவ்வளவு அம்சமா இருக்கீக, உங்கமுன்னாடி நானா” என வெட்கப்பட்டான்.

“இல்லையப்பா எனக்காக ஒருமுறை பாடு” என்றான் பாகவதன்.

“சாமி கூட்டமா இருக்குங்க.. ” என்றான்.

உனக்கு பொன் தருவேனப்பா, வேண்டியன தருவேன் என்றான் பாகவதன்.

“அட கொப்புரான, அப்படியா சாமி, சல்லிகாசு மடியில் இல்லீங்க, வியாபரமும் நடக்கல, அந்த நாலாவது தெருவுல ஆப்பக்கார அம்மாவுக்கு கடன்பாக்கி வேற. அங்க போகமுடியல, சாமி பொன் தருமாம், அப்புறமென்ன சாமி” என்றவன் விறகு கட்டுக்கும் சுவற்றுக்கும் இடையில் கைவிட்டான்.

அங்கிருந்து சுரகுடுவையினையும் கொட்டாங்குச்சியினையும் வைத்து செய்யப்பட்ட சிறிய தம்புரா வந்தது, “சாமி இதுதான் நம்ப கருவி, நானே செஞ்சது சாமி” என்றவன் அதை மெல்ல உயர்த்தி பாட ஆரம்பித்தான்.

அவன் பாடப் பாட கண்களை மூடி கேட்ட‌ ஹேமநாதன் அப்படியே சொக்கிப் போனான், தங்கள் குருநாதன் இப்படி இன்னொருவன் முன்னால் அமர்ந்திருப்பதை கண்டு அதிசயித்த அடிபொடிகளும் அங்கு வந்து அமர்ந்தன‌ர்.

அவன் பாடப் பாட ஹேமந்தானின் முகம் யோகம உச்சம் அடையும் ரிஷியின் தன்மைக்குவந்து நிறைவான பொலிவும், ஆனந்தமும் காட்டிற்று.

எப்படி இப்படி ஒரு இசை சாத்தியம் என விறகுவெட்டியினை பாதி கண்களால் கண்டான்.

அந்த விறகுவெட்டி அமைதியான ஓடை போல் இருந்தான். அவனிடம் வயிறு உள்ளே இழுத்தல், முகத்தில் பல பாவனை காட்டல், வளைந்த புருவம் நெற்றியில் ஏறுதல், வாயை அகலத் திறத்தல், தலை நடுங்குதல், கண்கள் ஆடுதல், மிடறு விழுங்கல், பல்லைக் காட்டுதல் என ஒரு குற்றமும் காணப்படவில்லை.

ஆம். சங்கீத சாஸ்திரத்தில் இதெல்லாம் முக்கியம். முகத்தை அஷ்டகோணமாக வைத்தல், கண்களை உருட்டி உருட்டிப் பாடுதல், காதை பொத்திக் கொள்ளுதல், வாயை பெரிதாக திறத்தல், தலையினை பெரிதாக அசைத்தல், மிடறு விழுங்குதல் எல்லாம் குற்றமாகும்.

அதை சாஸ்திரிகள் தவிர்ப்பர். நல்ல சங்கீதம் கற்றவன் என்பதால் ஹேமநாதன் இதை அறிந்திருந்தான். அதை விறகுவெட்டி செய்வதை கண்டு அரண்டே போனான்.

மேற்சொன்ன எட்டுவகை குற்றமும் அங்கே அவனிடமில்லை. அப்படியானால் இவன் சங்கீதம் தானே கற்றவன் என்பதை உணர்ந்தான்.

இன்னும் கவனித்தான்.

அந்தப் பாடலில் வெடித்த ஓசை இல்லை; பேய் போன்ற ஆட்டமில்லை; கட்டை இசை இல்லை; ஒரு தாளத்தில் இன்னொரு தாளம் குறுக்கிடும் குற்றமிலை; குரல் தளரும் குற்றமில்லை.

பண் விலக்கவில்லை; ஒரு ஓசை பல ஓசையாக விரியும் குற்றமில்லை; எந்த குற்றமுமில்லாமல் மிக மிக துல்லியமான இசையாய் அது இருந்தது.

ஒரு கட்டத்தில் அவன் ஆனந்தகண்ணீர் விட்டான். தேம்பியவன் அழுது அழுது தலையாட்டி ரசிக்க ஆரம்பித்தவனை இன்னும் உச்சஸ்தானிக்கு விறகுவெட்டி இழுத்துச் சென்றான்.

அப்படி வில்லில் நாண் முழுக்க இழுக்கப்பட்ட நிலையில் நிறுத்துவதை போல் சட்டென நிறுத்தினான், ஹேமநாதன் என்ன எனப் பார்த்தான்.

அங்கே எல்லா உயிரும் மரமும் செடியும் காற்றும் கட்டுப்பட்டு நின்றது, எதுவும் அசையவில்லை எல்லாமே அப்படியே ஸ்தம்பித்து நின்றது.

தெருவில் மாடு ஸ்தம்பித்தது; காற்று வீசவில்லை; மரம் அப்படியே அசையவில்லை; மாடு நின்றது; தெருவில் சென்ற மக்கள் சிலையானார்கள்.

எல்லாமே ஸ்தம்பித்தது.

“ஐயோ இது என்ன மாயம், மாயம்” என ஹேமநாதன் ஆனந்ததில் அலறியபோது விறகுவெட்டி பாடலை இயல்பாய் தொடர்ந்தான். எல்லாம் இயங்க ஆரம்பித்தன‌.

சற்று நேரத்தில் பாடி முடித்தான் விறகுவெட்டி, அவனை பணிந்து கேட்டான் ஹேமநாதன் “ஐயனே, இது சாதாரணப் பாடல் அல்ல, பாரத தேசத்தில் இப்படி ஒரு பாடலை நான் கேட்டவனும் அல்ல‌.

சொல்லப்பா, பாடினால் மழைவரும், பாடினால் நெருப்புவரும் என்பதை நானும் அறிவேன். ஆனால், பாடினால் பிரபஞ்சமே கட்டுப்படும் என்பதை உன்னில்தான் கண்டேன்.

இந்த ராகத்தை நீ யாரிடம் கற்றாய், யார் உனக்கு இதெல்லாம் சொல்லித் தந்தார்கள்” என உடைந்து கேட்டான் ஹேமநாதன்.

“அட என்னங்க சாமி, நமக்கு சங்கீதம் கத்துக்கணும்னு சின்ன வயசுல ஆசைங்க, இதனால கோவில்லபாடுவாருல்ல பாணபுத்திரர் அவர்கிட்ட போனேனுங்க‌.

நாலு நாள் என்ன பாடவைச்சி பாத்துட்டு உனக்கு சங்கீதம் வராது போடான்னு விரட்டிவிட்டாருங்க, அப்புறம் நாம விறகுவெட்டி ஆயிட்டோமுங்க, அவரு அவர்போக்குல பாட்டு சொல்றதும் சிவனுக்கு பாடுறதுமா இருக்காருங்க‌.

அப்ப படிச்ச சில பாட்டுதாங்க இது, சரி சரி காச கொடுங்க ஆப்பக்காரி கடன அடைச்சிட்டு பசியாறிற்று வாரேன்” என்றான்.

நடுங்கிய கைகளினால் காசை கொடுத்தான் ஹேமநாதன், “சொக்கா, காசு கிடைச்சுட்ட சொக்கா” என விளையாட்டாய் ஓடிப்போனான் விறகுவெட்டி.

அத்தோடு மறைந்தே போனான்.

அவன் சென்றுவிட்டான். ஆனால், ஹேமநாதன் நிம்மதி இழந்தான்.

“ஒரு பொற்கொல்லன் ஆகாது என விலக்கிய ரத்தினமே பெரிதாக மின்னினால் அவன் செய்த நகை எப்படி இருக்கும்?

பாணபுத்திரன் சங்கீதம் வராது என ஒதுக்கிவைத்தவனே இப்படி மாய ராகம் இசைத்தால் அந்த பாணபுத்திரனிடம் என்னென்ன வித்தை இருக்கும்.

நாளை சபையில் அவன் என்னென்ன ராகம்பாடி நம்மை மிகக் கேவலமாக தோற்கடிப்பானோ தெரியாது என அஞ்சியவன் அன்றிரவே யாருமறியாமல் மதுரையினை காலி செய்தான்.

சொக்கநாத யாத்திரர்கள் எனச் சொல்லி மாறுவேடத்தில் தப்பி ஒடினான்.

அப்போது பாணபுத்திரர் கனவில் வந்த சிவபெருமான் “அடியானே, மதுரைக்கு வந்த ஆபத்து நீங்கிற்று, இனி நீ மேன்மை அடைவாய், நானே என்னை பாண புத்திரர் அடிமை எனச் சொல்லி அவனை ஓடவிட்டேன்” எனச் சொல்லி மறைந்தார்.

பாண்டிய மன்னன் மறுநாள் என்னாகுமோ எனும் அச்சத்தில் எழுந்தபோது செய்தி வந்தது. “மன்னா அந்த ஹேமநாதன் இரவோடு இரவாக ஓடிவிட்டான், நேற்று மாலை யாரோ பாணபுத்திரன் அடிமை எனச் சொல்லி அவனிடம் பாடினார்களாம், அத்தோடு அவன் அஞ்சி ஓடிவிட்டான், அவன் தங்கிய‌ மாளிகையில் இருந்த நம் வேலையாட்கள் சொன்ன தகவலிது” என்றார்கள்.

“பாண புத்திரர் அடிமையா?” எனச் சிந்தித்தவன் பாணபுத்திரரை அழைத்தான், அவர் தான் கண்ட கனவினை மன்னன் எப்படி நம்புவான்? எப்படியோ அவன் ஓடியிருந்தால் நல்லது” என அவரும் மன்னனை காணச் சென்றார்.

“பாண புத்திரரே, நேற்று மாலை நீர் எங்கிருந்தீர்” எனக் கேட்டான் மன்னன் “சொக்கநாதன் சன்னதியில் கண்ணீவிட்டபடி அமர்ந்திருந்தேன்” என்றார் பாணபுத்திரர்.

அப்படியானால் அங்கே அவனிடம் சென்றவர் யார் என மன்னன் சிந்தித்தபோதே தன் கனவுபற்றி சொன்னார் பாணபுத்திரர்.

“பாண்டியா, வந்தது நாமே, அனுதினமும் நம்முன் பாடும் பாணபுத்திரனுக்கு நாம் அடிமையன்றோ” எனும் அசரீரி கேட்டது.

வந்தது சிவனே என அறிந்த எல்லோரும் அவரைத் தொழுதார்கள். பாண்டிய மன்னன் பெரும் பொன்னும் பரிசும் கொடுத்து பாணபுத்திரரை கௌரவித்தான், தன் கடைசிமூச்சுவரை சொக்கனை பாடிவந்தார் பாணபுத்திரர்.

இதுதான் விறகுவிற்ற திருவிளையாடல்.

இந்த திருவிளையாடலில் சிவன் போதிக்கும் தத்துவம் நிறைய உண்டு எனினும் முதல் போதனை அகங்கார ஆணவமும், பேராசையும் யாராக இருந்தாலும் அழித்துவிடும்.

ஹேமநாதனின் அகங்காரமே அவனை அவமானமாக தப்பி ஓடச் செய்தது, சிவனடியார் முன்னால் சிவன் காவலில் இருப்போர் முன்னால் எந்த அகங்காரமும் வெல்லாது.

சிவனடியார் எங்கும் வெட்கப்பட்டு போவதில்லை, சிவனை நம்பினால் அவர் அவமானப்பட விடமாட்டார், தன் பக்தர்களை ஆச்சரியமான முறையில் காப்பார்.

மிக மிக முக்கியமாக ஒரு பக்தன் பலவீனமாக இருக்கலாம். ஆனால், சிவன் பலமானவர், அவனின் பலவீனத்தில் சிவன் தன் பலம்காட்டி அவனை காப்பார் என்பது இங்கு சொல்லப்படும் தத்துவம்.

இந்த உலகம் ஓம் எனும் ஓசையில் இயங்குகின்றது, ஓசைப்படாத அதிர்வில் ஒரு லயத்தில் இயங்குகின்றது, அந்த இசையால் இந்த பிரபஞ்சத்தை தொடலாம், இறைவனை அடையலாம் என்பதையும் இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது.

பாணபுத்திரர் செய்த ஒரே ஒரு சிவதொண்டு சொக்கன் சன்னதியில் அனுதினமும் பாடியது, அவரை விட நன்றாக பாடியவர்கள் அன்று இருந்தார்கள், பலர் இருந்தார்கள்.

அவர்களெல்லாம் தங்கள் புகழ், தங்கள் செல்வாக்கு, பணம், பரிசு எனப் பாடினார்களே அன்றி சிவனுக்காகப் பாடவில்லை.

எதையும் எதிர்பாராமல் எந்த புகழுக்கும் ஆசைபடாமல் தன் கடன் சிவனை புகழ்ந்துபாடி கிடப்பதே எனச் சொக்கன் சன்னதியில் பாடிநின்ற பாணபுத்திரர்க்கே சிவனருள் கிடைத்தது.

அதனாலே வாழும்போது அவர் பெரும் பேறுபெற்றார், இன்றுவரை அவர் புகழும் பக்தியும் நிற்கின்றது.

யுகம் யுகமாய் அவர் பெயர் வாழும், மதுரையும் அந்த சொக்கன் ஆலயமும் உள்ளவரை அவர் பெயர் நிலைக்கும்.

ஆம். சிவனுக்காக செய்யப்படும் எல்லாமும் நிலைக்கும் அதை செய்தவனும் நிலைப்பான். அதிக திறமை இல்லாதவர் என்றாலும் சிவனுக்காக பாடி சிவனுக்காய் வாழ்ந்த பாணபுத்திரர் வரலாற்றில்நிலைபெற்றுவிட்டார்.

அதாவது சிவனை நம்பி பணிந்தவர் பெருமிடம் பெற்றார். தங்களை தங்கள் திறமையில் நம்பிக்கைவைத்து தங்கள் லௌகீக பெருமையினைத் தேடியவர்கள் அழிந்தே போனார்கள்.

உலகில் எல்லா திறமையானவர்களைவிட மகா பெரியவர் சிவன், எல்லா திறனும் ஆற்றலும் கலையும் அவரிடமிருந்தே வருகின்றன, எல்லாவற்றுக்கும் அவரே மூலம் என்பதும் அவரை வேண்டினால் எல்லா காவலும் பலமும் வளமும் திறமும் ஆற்றலும் வரும். பக்தன் பலவீனமானவன் என்றாலும் பலமான சிவம் அவனைக் காக்கும் என்பதும் இந்தத் திருவிளையாடல் சொல்லும் போதனை.

மிக முக்கியமான தத்துவம் அந்த விறகு, எத்தனையோ வேடம் இருக்க சிவன் ஏன் விறகுவெட்டி வேடத்தில் அதுவும் காய்ந்த விறகு வெட்டி வேடத்தில் வந்தார்.

அதே விறகுடன் ஹேமநாதனையும் சந்தித்த சிவன் சொல்லாமல் சொன்னது இதுதான்.

எந்த உடலும் சுடுகாட்டில் விறகின் மேல் வேகப்போகின்றது, எல்லாரும் வந்து சேரும் இடம் அதுதான், விறகின் மேல்தான் எல்லோரும் ஒருநாள் சென்று கடைசியாக படுத்து எரியவேண்டும், எல்லார் வாழ்வும் விறகில் முடிகின்றது.

அந்த விறகில் இருக்கும் நெருப்பு சிவவடிவம், எல்லாரும் ஒருநாள் நெருப்பில் வெந்து சிவனிடம் அந்த விறகே இந்த உடலை சுட்டெரிக்கப் போகின்றது, இதற்கு யாரும் தப்பமுடியாது.

எல்லாமும் என்னில் தோன்றி, என்னில் இயங்கி, விறகில்வந்து படுத்து, என்னில் முடியும் நிலையில் உனக்கேன் ஆணவம் மானிடா என மானிட நிலையாமையினைச் சொல்லி விளக்கும் தத்துவம் நிறைந்த திருவிளையாடல் இது.

இதனைப் படிப்போருக்கு கர்வம் அகலும், ஞானம் பிறக்கும்.

விறகு உணவைச் சமைக்கும் அதாவது பக்குவப்படுத்தும், விறகின் நெருப்புத்தான் மானிட உணவினைப் பக்குவநிலைக்குக் கொண்டுவரும்.

என்னை நம்பி பணிபவன் பக்குவபப்படுவான். அவனுக்கு ஞான உணவுக்கு ஆதாரமான விறகு நான் என்பதும், எல்லா மானிடரும் நெருப்பில் வெந்து சாம்பலாகும் வாழ்விது, சுடுகாட்டு விறகின் நெருப்பில் கரைந்துபோகும் வாழ்விது, அந்த வாழ்வில் சிவனைத் தேடுதலே சாலச்சிறந்தது, மற்ற எல்லாம் மாயை. விறகு விற்றக் கோலத்தில் அந்த ஞானபேராலயத்தில் விளக்கிக் கொண்டிருகின்றார் எம்பெருமான்.

திருவிளையாடல் : 11 கல்யானை கரும்பு தின்றப் படலம்.

அப்போது மதுரையினை ஆண்டுக் கொண்டிருந்த பாண்டிய மன்னன் அபிஷேக பாண்டியனுக்கு வழக்கமான சிந்தனை அதிகமிருந்தது. அவன் தன் மாடத்தில் உலாவிக்கொண்டிருந்தார்.

அந்த அபிஷேகபாண்டியனுக்குத்தான் சிவபெருமான் மாணிக்க வியாபாரி வடிவில்வந்து அபிஷேக ரத்தினங்களை தந்து சென்றிருந்தார், அப்போது அவனுக்கு சிறியவயது என்பதால் அவனுக்கு பெரிய நினைவுமில்லை. அனுபவமுல்லை.

(அபிஷேக பாண்டியன், வீரபாண்டியனின் மகன். வீரபாண்டியன் நீண்ட காலம் குழந்தை இல்லாமல் அந்தப்புரபெண்கள் மூலம் நிறைய மகன்களை பெற்று கடைசியில் சிவனருளால் இவனைப் பெற்று, பின் அவன் திடீரென இறந்துவிட அந்த குழப்பத்தில் அந்தப்புர வாரிசுகள் மணிமுடி, ரத்தினமெல்லாம் எடுத்துக்கொண்டு பறந்துவிட மணிமுடி இல்லாமல் பாண்டிய குலம் தவித்தபோது சிவனே மாணிக்க வியாபாரியாக வந்து மாணிக்கம் விற்ற திருவிளையாடலை செய்து இவனுக்கு அபிஷேகம் நடக்க செய்து அபிஷேக பாண்டியன் எனும் பெயர் வர காரணமாகவும் ஆனார்)

அப்படியான அபிஷேக பாண்டியனுக்கும் வாரிசு இல்லை, நாலுமாடு வைத்திருப்பனுக்கே வாரிசு இல்லை என்பது கொடுமை என்றால் நாடாளும் மன்னன் நிலை எப்படி இருக்கும்?

அபிஷேக பாண்டியன் இப்படி பெரும் கவலை கொண்டிருந்தான். அவனுக்குள் மெல்லிய அவநம்பிக்கை தலைதூக்கியிருந்தது. சிவனால் காக்கப்படும் குலம், மதுரை சொக்கநாதரின் பிரதிநிதியாக மதுரையினை ஆளும் இக்குலம் இப்படி தவிப்பதா எனக் கொஞ்சம் சலனப்பட்டான்.

அவனுக்கு தன் முன்னோர்களை போல சிவனை காணவேண்டும் எனும் ஆவல் இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை என்பதால் ஆன்மீக ஞானம் பெற்றோர், சித்தர்கள் எனப் பலரை நாடிபார்த்தான்.

அவனுக்கு எங்கும் திருப்தி இல்லை; அவனின் பெரும் கேள்விக்கு பதிலளிப்பார் யாருமில்லை; அதைவிட முக்கியமாக அவனின் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி ஆதாரம் தரவும் யாருமில்லை.

அபிஷேகபாண்டியன் ராஜரீக பாடம் பயின்றவன். அதன்படி ஒரு அரசன் எதையும் ஆதாரமில்லாமல் நம்புவது தவறு எனப் பயிற்றுவிக்கபட்டவன். இதனால் எல்லாவற்றிலும் ஆதாரம் தேடினான்.

அவனுக்கு ஞானத்தேடலும் இருந்தது. அவன் தமிழ்சங்கம் நடத்தினான் என்றாலும், தமிழை சிவனுக்காய் வளர்த்தான் என்றாலும், தன் புகழ்பாட தன் அரசைபாட, பாடி பரிசில் மட்டும் பெற்று செல்லும் புலவர்களை தமிழுக்காக ஆதரித்தானே தவிர தனக்காய் மனமுவந்து செய்யவில்லை.

அவனின் தேடல் சிவனையும், அவரின் தாத்பரியத்தையும் அறிந்துகொள்வதாய் இருந்தது.

பல ஞானியரை அவைக்கு அழைத்து விவாதித்தான். பல மடாதிபதிகளை தேடிச் சென்று ஞானவிவாதம் செய்தான். எதுவும் அவனுக்கு சரிபடவில்லை.

சித்தர்கள் எனும் ஞானபெருமக்களை சந்தித்தான். சித்தர்கள் பொதுவாக அதிகம் பேசுவதில்லை. ஓரிரு வார்த்தைகள் பேசினால் பெரிய விஷயம், சில சித்துக்களை செய்வார்கள்.

சிவனில் கலந்தவர்கள் என்றாலும் சித்தர்கள் ஒருவனுக்கு சித்துவேலை அற்புதம் செய்ய கர்மவிதி முக்கியம், சிவனருள் முக்கியம். எல்லா சித்தரும் எல்லோருக்கும் அற்புதங்களை செய்துவிட முடியாது.

அப்படி அவனும் பல சித்தர்களை சந்தித்தான்.

பாண்டியநாடு என்றல்ல இந்துஸ்தானம் எனும் இந்த மாபெரும் பாரதநாடே ரிஷிகள் சித்தர்களின் பூமி. சித்தர்களுக்கு பெரும் இடம் கொடுத்து சப்தரிஷிகள் எனத் தொடங்கி இப்போது வரை கொண்டாடும் தேசம் இது.

தன்னை மறந்து தனக்காக தன் குடும்பத்துக்காய் வாழாமல் எந்த நோக்கத்துக்காக இறைவன் இந்த மண்ணையும் மக்களையும் படைத்தானோ அவர்களை இறைவனில் கலந்த தங்கள் வாழ்வுபடி நடத்திச் செல்பவர்கள் சித்தர்கள்.

இந்த பூமியின் இயக்கம் சூட்சுமமானது. அதே நேரம் மாயையின் கரங்களும் வலுவானவை. அந்த மாயை மக்களை குழப்பி இறைநம்பிக்கை, பக்திமிக்க வாழ்வு, ஆத்மத்தின் தேடல் இவற்றில் குழப்பம் விளைவித்து பெரும் சோதனை கொடுக்க அனுமதிக்கப்பட்டது.

அந்த மாயையின் கரங்களில் இருந்து மக்களை காக்க, அந்த இருளில் இருந்து மக்களை நடத்த சிவன் ஆட்கொண்ட மகான்கள் சித்தர்கள்.

அவர்கள எங்கெல்லாம் மானுடம் குழம்புமோ அங்கெல்லாம் வழிகாட்டுவார்கள். நோய் நொடி முதல் வாழ்வில் எல்லா துன்பத்துக்குமான தீர்வுகளை சொல்லி ஈசனை அடைய போதித்து காவலும் காத்துவருவார்கள்.

மனிதன் எப்படி தெய்வநிலை அடையமுடியும் என்பதை கண்கூடாக காட்டுபவர்கள் சித்தர்கள்.

அப்படியான சித்தர்களுக்கு தலைமை சித்தர்கள் என 18 மகா சித்தர்களை தமிழக இந்துக்கள், ஆம் தமிழகத்தில் மட்டும் வகைப்படுத்தினார்கள். இன்னும் ஆயிரக்கணக்கான சித்தர்கள் உண்டு.

பாண்டியநாடு இதில் இன்னும் விசேஷம்.‌ அங்கே எங்கெல்லாம் முருகன் கோவில் உண்டோ அங்கெல்லாம் குறைந்தபட்சம் ஒரு சித்தராவது சமாதி கொண்டிருப்பார். இன்னும் எத்தனையோ மகான்கள் சித்தராய் வாழ்ந்த இடம் இது.

அகத்தியமுனியில் இருந்து தொடங்கிய இந்த குருபாரம்பரியம் எக்காலமும் உண்டு. அப்படி அபிஷேக பாண்டியனும் பல சித்தர்களை சந்தித்திருந்தான். தன் குலவாரிசு சிக்கல் முதல் தன் ஞானதேடல் வரை பெரிய பெரிய சித்தர்களை தேடினான். எங்கும் அவனுக்கு முறையான பதில் இல்லை.

அவன் தன் மனக்குறை போக்குபவர் யார் என மனதார ஏங்கிக்கொண்டே வைகையினை கண்டான், அந்த வைகை சிவனால் உருவானது.

அவன் கொஞ்சம் ஏக்கமாய் ஆற்றோரமாய் நின்ற ஆலயத்தை கண்டான்.‌ அதுவும்சிவனால் உருவானது; திரும்பும் இடமெல்லாம் சிவன். சிவனின் திருவிளையாடல் என இருக்கும் இந்த மதுரையில் தன்னை மட்டும் ஏன் சிவம் தள்ளிவைத்துவிட்டது, சிவன் அல்ல ஒரு சித்தர் கூட நமக்கு சரியாக அமையவில்லையே என அந்த வழமையான கவலையில் அமர்ந்திருந்தவன் பின் அலுவலை தொடர்ந்தான்.

நாடாளும் மன்னன் என்றால் பொறுப்பு அதிகம். அவன் சொந்த கவலைகளுக்காக நாட்டை நடத்தாமல் இருக்க முடியாது. குடிகளை காப்பது அவன் பெரும் கடமை.

அந்நாட்களில் ஒரு சித்தர் மதுரைக்குள் வந்தார், எப்படி வந்தார் எனக் கோட்டை காவலர்கள் கூட அறிந்திருக்கவில்லை.

நீண்ட கொண்டையும் தாடியும் சிவந்த மேனியின் நெற்றியில் திருநீறும் பூசிக்கொண்டிருந்தார். அரையாடை கட்டியவர் கால்களில் பாதரட்சையும், தண்டையும் இருந்தது. கைகளில் கமண்டலமும் தண்டமும் இருந்தது. கழுத்தெல்லாம் ருத்திராட்ச மாலைகள் புரண்டன‌.

இடுப்பில் திருநீற்று சுருக்குப்பை ஒன்றும் இருந்தது.

தெருக்களில் ஒரு தெய்வீக புன்னகையும், கண்களில் ஒரு தீர்க்கமுமாய் கொண்டவர் நடந்து சென்றுகொண்டிருந்தார், அங்கே ஒரு சம்சாரி அழுதுக் கொண்டிருந்தான்.

“என்னப்பா அழுகின்றாய்” என்றார், வாழ்வின் ஆதாரமான பசு இறந்தது என்றான். அவர் பசுவினை உற்றுப் பார்த்தார், அது எழுந்து கன்றை அணைத்து நின்றது, குடியானவன் மூச்சற்று போனான்.

அவரோ தன் வழியில் நடந்தார். ஒரு ஏழை “சொக்கநாதா எனக்கொரு வழி இல்லையா” எனக் குடிசை வாசலில் கதறிக்கொண்டிருந்தான், அவர் அவனை நோக்கிப் புன்னகைத்தார் , “சாமி இந்த குடிசையும் அழியும் நிலையில் இருக்கின்றது , ஓலை மாற்றக்கூட வழியில்லை” என அவன் தன் துயரம் சொல்ல , “திரும்பி பார்” என்றார் குடிசை காரைவீடாயிற்று.

ஒரு வீட்டின் வாசலில் பலர் கூடியிருந்தார்கள். எல்லார் முகமும் துக்கமாய் இருந்தது. என்ன? என சித்தர் கேட்க “இளம் மனைவியும் குழந்தையும் கொண்டவன் சாககிடக்கின்றான், எதற்கும் கட்டுபடாத நோய்” என்றார்கள்.

சுருக்கு பையில் இருந்து திருநீற்றை எடுத்துக் கொடுத்து அவனுக்கு பூச சொல்லிவிட்டு அவர்போக்கில் சென்றார், அவர்கள் அவனுக்கு பூசியபோது அவன் நோய் நீங்கிற்று. எல்லோரும் சித்தரை தேடினார்கள். அவரோ அடுத்த தெருவுக்கு சென்றார்.

அங்கே 6 பெண்குழந்தைகளுடன் ஒரு விதவை கவலையுடன் இருந்தாள், “என்னம்மா” என்றார், “ஐயா கணவன் இல்லா நான் இந்த 6 பெண் குழந்தைகளை எப்படி கரையேற்றுவேன்” எனக் கலங்கினாள், “அதற்கென்ன” என்றவள் அந்த 6 பெண்குழந்தைகளில் ஐவரை மகன்களாக மாற்றிக் கொடுத்தார்.

இப்படி நம்பமுடியாத அதிசயம் பல செய்தபடி மதுரையினை சுற்றி சுற்றி வந்தார்.

இந்த சித்தரின் புகழ் பெரிதாக பரவிற்று, அவர் எல்லா அற்புதங்களும் செய்கின்றார்; குருடர்களை பார்க்க வைக்கின்றார்; நோயினை தீர்க்கின்றார்; அவரை பார்த்தாலே போதும் வீட்டில் செல்வம் கொழிக்கின்றது; அவர் ஏழைகளுக்கு இரும்பை தங்கமாக்கி கொடுக்கின்றார்.

பூனையினை பசுவாக்கி கொடுக்கின்றார், மக்கள் அவரால் பெரும் பெரும் நன்மை அடைகின்றார்கள்.

எந்த சிக்கலும் அவரால் தீர்கின்றது. எல்லா வகை அறிவும் தெளிவும் ஞானமும் கொண்டவராக அவர் வலம் வருகின்றார் எனும் செய்தி அரண்மனையினை எட்டிற்று.

மன்னன் அவரை காண விருப்பம் கொண்டான். அவரை அழைத்துவரச் சொன்னான்.

அவரை தேடிய காவலர்கள் வைகைநதி ஒரம் அவர் படுத்திருப்பதை கண்டு சென்று அழைத்தார்கள், “ஏ துறவியே , மன்னர் அழைக்கின்றார் வாருங்கள்”

“துறவிக்கு வேந்தன் துரும்பு, எனக்கு தேவர்களே துரும்பு” எனச் சொல்லிவிட்டு வைகை நதி நோக்கி திரும்பிக் கொண்டார்.

சிப்பாய்கள் விஷயத்தை மன்னரிடம் சொனனர்கள். மன்னன் யோசித்தான். யாரும் அறியாதபடி மாறுவேடத்தில் அவரை சந்திக்கலாம் என மனதார நினைந்து கொண்டான்.

அவன் இயல்பில் எல்லாமே சோதித்து அறிபவன் , அவன் கேள்விக்கு எங்கும் பதிலே கிடைக்கவில்லை என்பதால் சாமான்யனாக சென்று கேட்டாலும் சித்தர் சரியான பதிலை சொல்வாரா? அவர் தேர்ந்தவரா எனக் கொஞ்சம் உறுதிபடுத்த சிந்தித்தான்.

அதாவது சோதித்துப் பார்க்கத் துணிந்தான், அவன் மனம் அறிந்து சித்தர் சிரித்துக் கொண்டிருந்தார்.

அன்று மகரசங்கராந்தி நாள். சூரியன் மகரராசியில் நுழையும் மாதம் தை மாத தொடக்கம். பொங்கல் பண்டிகை, தமிழர் பண்டிகை, உழவர் திருநாள் என்றெல்லாம் அன்று அதற்குப் பெயரில்லை.

பொங்கிவரும் வைகை அள்ளி அள்ளி விளைவித்த காலம் அது.

தைமாதம் அறுவடை என்பதால் அந்த காலகட்டமே செழிப்பானது. ஆங்காங்கே கோவில் கொடை நடக்கும். அங்கே ஜல்லிகட்டும் நடக்கும். பணம் கையிலிருக்கும் மாதம் என்பதால் திருமணம் பேசுவார்கள், வீடுகட்ட தொடங்குவார்கள்.

இந்த நல்லகாரியங்கள் தொடங்கு முன்னால் வீடுகளில் புத்தாடை, புது அலங்காரம், புதுவாழ்வு எனத் தொடங்கு முன்னால் விளைச்சலை சொக்கனுக்கு காணிக்கையாக வைப்பார்கள்.

மூட்டை மூட்டையாக நெல், வாழை குலைகள், காய்கனிகள், தேங்காய் என எல்லாம் வந்து குவியும். அப்படி கரும்பும் கட்டுகட்டாக வரும்.

அப்போது பெருவாரியான நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானவை. இதனால் விளைந்ததில் கோவிலுக்கான பாத்தியத்தை கொட்டுவோர்களும் உண்டு.

அந்த மகரசங்கராந்தியில் மகா முக்கியமான விஷயம் எல்லோரும் கோவிலுக்குச் செல்வது. மன்னனும் அப்படியே காணிக்கை குவியலுடன் தன் தேவியருடன் பெரும் பவனியாய் நடந்துச் சென்றான். கோவிலுக்கு செல்லும் போது பட்டத்து யானையில் அவர்கள் செருக்காய் செல்வதில்லை, சிவனை காண செல்லும் போது நடந்துதான் செல்வார்கள்.

அப்படி அவன் மீனாட்சி அம்மனை வழிபட்டுவிட்டு சோமசுந்தரேஸ்வரர் சன்னதிக்கு செல்லும் போது அந்த சன்னதியின் மேற்கு பக்கமாக சித்தர், மன்னர் செல்லும் வழியில் அமர்ந்திருந்தார்.

மிக மிக சாதுவாக மெலிந்த தேகம், ஒட்டிய வயிறு என ஒரு பரதேசிக்கான அடையாளத்தில் இருந்தார். முதிர்ந்த தோல்கள், கானகாமாய் அடர்ந்த வெண்தாடி, பலமாதமாக உணவை பார்க்க தேகம், வளைந்த முதுகு, மெல்லிய இருமல் என அவர் பரதேசியாய் இருந்தார்.

மன்னனோ ஊருக்குள் சித்தர் வந்திருக்கின்றாராம், அவரை காண்பது எப்படி என்ற சிந்தனையில் வந்துக் கொண்டிருந்தான்.

மன்னர் வரும் வழியில் இவர் அமர்ந்திருப்பதை கண்ட சிப்பாய்கள் அவரை நோக்கி சொன்னார்கள் “ஏ பரதேசியே மன்னர் வருகின்றார், ஓரமாகப் போ..”

சித்தர் தாடியினை தடவிக்கொண்டு அவர்போக்கில் இருந்தார்.

“சொல்லிகொண்டே இருக்கின்றோம் உனக்கு அவ்வளவு திமிரா” எனச் சிப்பாய்கள் கத்தினார்கள்.

அசட்டு பார்வை பார்த்தபடி தன் போக்கில் அமர்ந்திருந்தார் சித்தர், “ஏய் எழும்பு” எனக் காவலர் சொல்ல “முடியாது என்பது போல் சரிந்து படுத்து கைகளை தலைக்கு கொடுத்து” ஒரு பார்வை பார்த்தார்.

“அகங்காரியே, மன்னர் வரூகின்றார்” எனச் சிப்பாய்கள் கத்தியும் அவர் எழவில்லை, அந்தநேரம் மன்னனே அங்கு வந்தான்.

“மன்னா, யாரோ ஒரு பரதேசி இங்கு அமர்ந்து குழப்பம் செய்கின்றான், எழும்பச் சொன்னால் எழும்புவதில்லை, கோவில் என்பதால் என்ன செய்வது எனத் தெரியவில்லை” எனப் பணிந்தார்கள்.

உடலில் நவரத்தினங்கள், கைகளில் மின்னும் நவமணிகள், பட்டாடை சூடியவன், கழுத்தில் பெரிய முத்துவடம், முகத்தில் பெரும் பொறுப்பு, இடுப்பில் இருக்கும் வாள் என அவனை எற இறங்க பார்த்து புன்னனைத்தார் சித்தர்.

காரணம் அவன் சூடிய ரத்தினங்கலெல்லாம் எப்படி வந்தது என்பதை அவர் அறிந்தவர் அல்லவா? மன்னன் அது புரியாமல் கேட்டான், அவரும் பதில் சொன்னார்.

“யார் நீ?

நான், காசியில் இருந்து ஒவ்வொரு சிவத்தலமாக வருகின்றேன், சிதம்பரம் சென்றவன் அங்கிருந்து இங்கே வந்தேனப்பா..

சிவனடியாரோ?

ஆம். அவரை உணர்ந்தவரெல்லாம் அவருக்கு அடியாரல்லாவா?

நல்லது. உமக்கு என்ன உதவி வேண்டும், சொல் தருகின்றேன். காசியில் இருந்து வந்த அடியாரை அரவணைக்க வேண்டியது பாண்டியர் கடமை.

எமக்கு எதுவும் வேண்டும் நிலையில் நான் இல்லையப்பா, நீதான் ஏதோ வேண்டி சொக்கனிடம் செல்கின்றாய், பின் எனக்கு நீ என்ன தரமுடியும்”

மன்னர்குழாம் அரண்டது.‌ மன்னன் திகைத்தான், “நீயே பிச்சைகாரன்” என்பதுபோல் அந்த பரதேசி சொல்லிவிட மன்னருக்குள் ஏதோ சுள்ளென்று சுட்டது.

அதே நேரம் இவன் சாதாரண ஆள் அல்ல என்பதை உள்மனம் அவனுக்குச் சொன்னது, தன் சந்தேக கேள்விகளை கேட்டுவிடலாம் என எண்ணி கேட்டான்.

“நீதான் எல்லாம் வல்லவன் என்கின்றாயே சிவன் காசியில் இல்லையா? பின் ஏன் இங்கு தேடிவந்தாய்?

சிவன் எங்கும் இருப்பானப்பா. ஆனால், அவனை தேடுவோருக்கெல்லாம் என்ன குறை? என்ன சிக்கல் என அறிந்துவரத்தானே நாங்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றோம், நீ தமிழ்ச்சங்கம் நடத்தும் தலைவன். அகத்தியனே அப்படி வந்தவன் என்பதை மறந்தே விட்டாயா?

ஏன் சிவனே நேரடியாக வந்தால்தான் என்ன? இங்கு அடிக்கடி அவரே வரும்போது நீ ஏன்?

நீ ஒரு மன்னன், நீயே எல்லா காரியத்துக்கும் நேரே மக்களிடம் செல்கின்றாயா? இல்லையே, உன் ஆட்களைத்தானே அனுப்புகின்றாய், அப்படி அவன் ஆட்களாகிய சித்தர்கள் இங்கு வருவார்கள், அவர்கள் கடமையினை செய்வார்கள்.

என் ஆட்சியில் என்ன குறை?

குறை இருந்தால் ஏனப்பா யாரோ ஒரு சித்தர் வந்து ஊருக்குள் மக்களுக்கு அதிசயமெல்லாம் செய்கின்றாராம் சொல்?”

மன்னன் கொதித்தான், இந்த பரதேசி தன்னை அவமானப்படுத்துவதாக உணர்ந்தான். பதிலுக்கு தான் அவரை அவமானப்படுத்தவேண்டும் என மனம் கொந்தளித்தது, அதை நோக்கி கேள்விகளைத் தொடுத்தான்.

“என் ஆட்சியில் குறையா? அதை சொல்லத்தான் இங்கு வந்தீரா? அது என் நாட்டின் விவகாரம், நீர் சிவனடியார் அல்லவா? என்ன கேட்டாலும் தருவீர் அல்லவா?

ஆம்.

வாக்கு மாறமாட்டீரே..

மாறும் வாக்கை கொடுத்ததில்லையப்பா..

நல்லது, சிவன் எங்கே இருக்கின்றார் என சொல்லமுடியுமா?

அவர் எங்கும் இருப்பானப்பா, தூணில் கல்லில் துரும்பிலும் இருப்பார்.

அப்படியா?

கல்லுக்குள் இருக்கும் தேரைக்கும் படியளப்பான் ஈசன்.

ம்ம், கல்லுக்குள் இருக்கும் தேரைக்கு படியளப்பது இருக்கட்டும், இந்த கல்யானைக்கு படியளப்பாரா?

கூட்டம் சிரித்தது, மன்னர் குழாம் சத்தமிட்டது, மன்னனும் புன்னகைத்தான்.

கல்யானைக்கு அவர் ஏனப்பா படியளக்க வேண்டும்?

இறைவன் எல்லா இடத்திலும் இருப்பவர் என்றீரே, அப்படியானால் இந்த கல்யானையிலும் இருக்கவேண்டுமே…

அவர் அங்கும் உண்டு அப்பனே, காண வேண்டுமா?

முடிந்தால் காட்டும்.

அந்த பரதேசி புன்னகைத்தார், மகர சங்கராந்திகாக வந்த கரும்புகட்டுகள் இருந்தன. அதை நோக்கி பிரகாரத்தில் சன்னதி முன் இருந்த யானையினையும் மாறி மாறி நோக்கியவர் சொன்னார்.

“அந்த கரும்பினை எடுத்துக் கல்யானைக்கு கொடு”

மன்னன் எகத்தாளமாய் கேட்டான் “கொடுத்தால்,,”

“ஊட்டு அப்பனே” என்றார்.

மன்னன் அப்படியே கரும்பு கட்டின் சில கரும்புகளை எடுத்து பரதேசியினை அவமானப்படுத்த ஒரு அசட்டு பார்வை பார்த்தபடி கல்யானையினை நெருங்கினான்.

பரதேசியின் கண்கள் தீர்க்கமாயின‌.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது; கல்யானைக்கு உயிர்வந்தது; ஆலய மணி தானாக ஒலித்தது; தீபங்கள் பெரிய பிரகாசத்துடன் எழுந்தன; தெய்வீக இசை கேட்டது.

சோமசுந்தரர் சன்னதி பிரகாசமானது. அந்த யானை மன்னன் கையில் இருந்த கரும்பு கட்டினை வாங்கி உண்ண ஆரபித்தது. அதன் வாயில் இருந்து வழிந்த சாறு ஓட ஆரம்பித்தது.

கல்யானைக்கு உயிர்வந்ததை கண்ட எல்லோரும் கல்போல் சிலையானார்கள். சிலநொடி சிலையாய் நின்றார்கள். யாரிடமும் வார்த்தையில்லை.

நடப்பதை அவதானிக்கவே சில நிமிடங்கள் தேவைப்பட்டன‌.

அந்த யானை அத்தோடு விடாமல் மன்னன் முத்துமாலையினை பறித்து வாயில் போட்டது. மன்னனின் முத்துமாலை பாண்டியனின் முத்துமாலை என்பது அரச கிரீடத்துக்கு சமம்.

அதனால் அதை கண்ட அந்த சேவகர்கள் வாளை உருவினார்கள், பரதேசி சொன்னார், “நில்லுங்கள்”

அத்தோடு வீரர்களால் ஒரு அடி எடுத்துவைக்க முடியவில்லை, ஓங்கிய கையினை தாழ்த்த முடியவில்லை, பரதேசி எழுந்து யானையிடம் சென்றார்.

அது குட்டியானை, அந்த யானை காதை ஆட்டியபடியே நின்றுகொண்டிருந்தது.

“மன்னா, நீ சொன்னதை நான் காட்டிவிட்டேன், சிவன் எல்லா இடத்திலும் உண்டு, உன்னில் உண்டு, என்னில் உண்டு இந்த கல்லில் உண்டு, அதைத்தான் கண்டாய்.

மன்னா, எல்லா இடத்தில் இருக்கும் பரம்பொருளை ஞானியரால் காணமுடியும். மாயையில் சிக்கியோரால் காணாமுடியாது. சிலநொடி உன் மாயை நீக்கினேன் நீ கண்டாய்.

சொல் என்ன வரம்வேண்டும்?” எனக் கேட்டார்.

நடந்த சம்பவம் கண்டு தன் அகங்காரம், சந்தேகம் என எல்லாம் உடைந்த மன்னன் சொன்னான், “சுவாமி எனக்கோர் மகவு வேண்டும்”

புன்னகைத்த பரதேசி யானையினை தொட்டார். அது அவன் முத்துமாலையினை பரதேசி கையில் கொடுத்தது, “உன் வம்ச மாலையினை அணிய உனக்கொரு மகன் பிறப்பான், நல்லாட்சி நடத்தி ராஜ்ஜியத்தை அவனிடம் கொடுத்தபின் நீயும் சிவனை அடைவாய்” என வாழ்த்தினார்.

அவன் முத்துமாலையினை பெற்றபின் அவரை குனிந்து வணங்கினான். நிமிர்ந்து பார்த்தபோது அவர் அங்கு இல்லை, அந்த யானை கல்லாக மாறியிருந்தது.

அந்த யானை கரும்பினை கடித்தபோது வழிந்தோடிய பாகின் நீரில் பரதேசியின் காலடித்தடம் இருந்தது, அது ஆலவாயன் சன்னதி வரை சென்றிருந்தது.

வந்தது சிவனே என எண்ணி மனமுருகி வேண்டி மகிழ்ந்தான் அபிஷேக பாண்டியன். யாருக்கு மாணிக்கம் விற்ற திருவிளையாடலை நடத்தினாரோ அவனுக்காய் இந்தக் கல்யானை கரும்பு தின்ற திருவிளையாடலையும் செய்தார்.

அதன் பின் மன்னனும் இன்னும் நல்லாட்சி நடத்தினான். சிவன் வாக்களித்தபடியே அவனுக்கோர் மகன் பிறந்தான். அவனுக்கு விக்ரமபாண்டியன் எனப் பெயரிடப்பட்டது.

விக்ரமபாண்டியன் வளர்ந்தபின் அதே முத்துமாலையினை அணிவித்து மன்னனாக்கிவிட்டு சிவபதம் அடைந்தான் அபிஷேக பாண்டியன்.

(இந்த சம்பவம் அன்றோடு மட்டும் முடியவில்லை, மதுரையினை முகமது பின் துக்ளக் ஆண்ட காலங்களில் இந்த ஆலயத்துக்கு பெரும் தொல்லை கொடுத்தான்.

ஒரு பொங்கல் அன்று இந்த கல்யானை கரும்பு தின்ன திருவிளையாடலை நடத்த அவனிடம் அனுமதி கோரினார்கள், அவன் பரிகசித்து உங்கள் கல்யானை கரும்பு தின்னுமா எனப் பரிகசித்தபடியே வந்து கரும்பை ஊட்டினான்.

அந்த யானை அப்போது கரும்பை தின்றது, துக்ளக் அத்தோடு அலறி அடித்து ஓடினான். அதன் பின் அவன் ஆலயம் பக்கம் வரவே இல்லை.

ஆம். அந்த யானை பாண்டிய மன்னன் காலத்தில் மட்டுமல்ல துக்ளக் காலத்திலும் அங்கு சிவன் உண்டு என்பதை காட்டிற்று.

இந்தத் திருவிளையாடல் இந்துக்களிடையே அக்காலமும் பிரசித்தி, இதுதான் பிரிட்டிசார் காலத்தில் கருமாத்தூர் கோவிலில், கொட்டாக்குடி கோவிலில் நடந்தது, பிரிட்டிசார் காலத்திலும் உண்டு.)

இதுதான் கல்யானை கரும்பு தின்ற திருவிளையாடல், இதனால் சிவன் போதித்த தத்துவமும் சொல்லிச் சென்ற உண்மைகளும் ஏராளம்.

முதலில் சிவன் எல்லா இடத்திலும் எல்லாப் பொருளிலும் உண்டு. “இறைவன் தூணிலும் இருப்பான் துரும்பிலும் இருப்பான்” எனப் பிரகலாதன் சொன்னதை மதுரை ஆலயமும் மெய்பித்து காட்டிற்று.

“தனுவொடு தோன்றுமே தானெல்லா மாகி
யணுவதுவாய் நிற்கு மது”

“ஒருவர்க் கொருவனே யாகுமுயிர்க் கெல்லாம்
ஒருவனே பல்குணமு மாம்”

என் இறைவன் எல்லா உயிரிலும் உண்டு, எல்லா பொருளிலும் எல்லா வடிவிவிலும் உண்டு என எந்த மதுரை தமிழ்சங்கத்தில் அந்த ஆலயத்தில் இருந்து ஒளவை தன் ஞானகுறளை பாடினாளோ அந்த இடத்தில் வந்து அவள் குறளை மெய்பித்தார் சிவன்.

இந்த திருவிளையாடல் சொல்லும் சூட்சும தத்துவம் ஒன்று உண்டு. அது இந்துக்களின் தெய்வமெல்லாம் கரும்பை வைத்திருப்பது.

அன்னை அபிராமி, அன்னை காளிகாம்பாள் கைகளில் இருந்து சித்தர் பட்டினத்தார் வரை கைகளில் கரும்போடு இருப்பதை கவனிக்கலாம்.

“வாழ்வின் துவக்கம் இனிமை முடிவு அவலம்” என்பதை சொல்ல அதனை வைத்திருந்தார் பட்டினத்தார்.

மன்மதனின் கரும்பு வில்லை அன்னை எடுத்துக்கொண்டாள். அவனை வென்றுவிட்டாள் என ஒரு தத்துவம் அவள் கையில் கரும்பு இருப்பதற்கு சொல்லப்பட்டாலும் ஆழ்ந்த தத்துவம் வேறு.

பிள்ளையாருக்கு கரும்பு பிடித்தமானது எனச் சொல்லப்படும் தத்துவத்தில்தான் அந்த நுணுக்கம் அடங்கியிருக்கின்றது.

ஒரு பாடல் உண்டு, அது அந்தத் தத்துவத்தை சொல்லும்.

“கரும்பாட்டிக் கட்டி சிறுகாலைக் கொண்டார்
துரும்பெழுந்து வேம்கால் துயராண் டுழவார்
வருந்தி உடம்பின் பயன்கொண்டார் கூற்றம்
வருங்கால் பரிவ தில”

கரும்புகாடு எரிகின்றது எனும் செய்தி வந்தால் ஒருவர் பதறி ஓடுவர். ஒருவர் பதறவே மாட்டார். அதாவது கரும்பை வெட்டி அதன் சாறை பிழிந்துவிட்டு வெறும் தோகையும் சக்கையும் குவித்திருப்பவர் பதறமாட்டார். எரியட்டும் என அவர்போக்கில் இருப்பார், யார் இன்னும் கரும்பை வெட்டி சாறு எடுக்கவில்லையோ அவர்தான் அலறி அடித்து ஓடுவர்.

அப்படி இந்த உடலாகிய கரும்பை ஏற்கனவே பிழிந்து அதாவது தன்னை வருத்தி இறைவனை கண்டோர் தன் உடலுக்கு தன் வாழ்வுக்கு என்ன வந்தாலும் அவர்கள் போக்கில் இருப்பார்கள். காரணம், முழு உண்மையும் அறிந்து இனி தன் ஆத்மா நித்திய ஒளியில் சஞ்சரிக்கும், சதா காலமும் பரம்பொருளுடன் பேரானந்த நிலையிலிருக்கும் என்பதை உணர்ந்ததால் அவர்கள் பதறமாட்டார்கள்.

வாழும்போதே உடலின் ஆத்மசாற்றினை இறைவனுக்கு கொடுத்தவர்கள் சித்தர்கள். வெறும் சக்கையென உடலை சுமந்து திரிந்தவர்கள் அவர்கள். உடலை ஒரு பொருட்டாக இவ்வுலக வாழ்வை ஒரு பொருட்டாக கருதாமல் பிறவியின் பயனை என்றோ ஆன்மாவினை சிவனோடு இணைத்துவிட்டு அவன் வழி நடப்பவர்கள்.

சிவன் அந்த ஆத்மத்தை கரும்பின் பாகு சர்க்கரையாக, வெல்லமாக வருவதை போல இவர்களின் ஆத்ம போதனையினை தத்துவத்தை மூட்டை மூட்டையாய் கட்டி மானிட எறும்புகளுக்கு கொடுக்கின்றார்.

அந்த மானுட எறும்புகள் பலநூறு ஆண்டுகள் அவற்றால் இனிமை அடைகின்றன எனும் பெரும் தத்துவத்தை சொல்லிச் சென்ற நாடகமே கல்யானை கரும்பு தின்ற படலம்.

சித்தர்கள் மானுட நலனுக்காக சிவனால் அனுப்பப்பட்டவர்கள். அவர்கள் எந்த உருவிலும் வருவார்கள். சிவனும், சித்தரும் ஒன்றே. சித்தர்களுக்கெல்லாம் தலைவன் சிவபெருமானே என்பதை ஓங்கி சொல்லும் தத்துவம் இது.

இந்துக்கள் மரபில் சித்தர் வழிபாடு அவசியம். அவர்கள் சிவனின் அருளை நமக்கு தரும் ஞானகண்ணாடிகள், ஞான தீபங்கள். அந்த சித்தர்களின் சமாதிகளும் அவர்கள் சம்பந்தப்பட்ட இடங்களும், போதனைகளும் எக்காலமும் முக்கியம்.

சித்தர் வழிபாட்டின் அவசியத்தை சிவனை வணங்குதலும், சித்தரை வனங்குதலும் ஒன்றே என்பதை சொல்லிச் சென்ற நாடகம் இது.

அந்தக் கல்யானைக்கு கரும்பு கொடுத்து பெரும் தத்துவத்தை சிவன் போதித்த அடையாளமாக அந்த சிவனுக்கு “எல்லாம் வல்ல சித்தர்” என மதுரை ஆலயத்தில் சன்னதி உண்டு.

ஆம். அந்த சன்னதி இந்தத் திருவிளையாடலால் வந்தது.

அங்கு அர்ச்சனைகள் எதுவுமில்லை. மாறாக, பச்சிலை மூலிகை சாற்றி வைப்பார்கள். அந்த சன்னதி மதுரை ஆலயத்தில் மகா முக்கியமான சன்னதி.

அந்த சன்னதி முன், அந்த “எல்லாம் வல்ல சித்தர்” சன்னதி முன் நின்று என்ன கேட்பீர்களோ அது நிச்சயம் கிடைக்கும். இது சத்தியம்.

முழு நம்பிக்கையோடு அங்கு செல்லுங்கள். அன்னையிடம் சோமசுந்தரரிடம் வைக்கும் வேண்டுதலோடு அந்த கல்யானையினை தேடிச் செல்லுங்கள்.

அந்தக் குட்டி கல்யானை இன்றும் ஆயிரம்கால் மண்டபம் செல்லும் வழியில் தனியாக உண்டு.

அந்த யானையிடம் சென்று அன்று மன்னன் தேடிய அடைக்கலம் போல மன்னன் தன் கவலை தீர அல்லாடுவது போல் நீங்களும் நிற்பதை சொல்லுங்கள்.

அந்த யானையினை தடவிவிட்டு, சிவனே தொட்ட அந்த யானையினை மெல்ல தொட்டு வணங்கிவிட்டு இந்த சன்னதிக்கு வாருங்கள். சிவனே வந்து உயிர்கொடுத்த கல்யானை அது, அவ்வளவு புண்ணியமானது.

அந்த “எல்லாம் வல்ல சித்தர்” சன்னதியில் உங்கள் குறைகளை எல்லாம் கொட்டுங்கள். பாண்டிய மன்னன் முதல் எல்லோருக்கும் ஏகப்பட்ட அதிசயங்களை செய்யும் அந்த “எல்லாம் வல்ல சித்தர்” எனும் சிவபெருமான் உங்களுக்கும் பெரும் அதிசயம் செய்ய காத்துக்கொண்டே இருக்கின்றார். உங்கள் வாழ்வும் கரும்புபோல் இனிக்க, மகிழ்ச்சி எனும் கரும்புசாறு உங்கள் வாழ்வெல்லாம் ஓட அவர் வரம் பல தருவார். சென்று பெற்றுக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பு, யாருக்கு பிராப்தம் உண்டோ அவர்கள் அதை பெற்றுக்கொள்வார்கள்.

திருவிளையாடல் : 12 விடை இலச்சினை இட்ட படலம்.

அந்தப் பாலாறு காஞ்சியினை ஒட்டி சலசலவென ஓடிக் கொண்டிருந்தது. அதன் அருகே இருந்த அரண்மனை மாடத்தில் தெற்கு நோக்கி நின்று கொண்டிருந்தான் சோழமன்னன். அவன் கைகளில் சோழரின் புலிசின்னம் மின்னிக் கொண்டிருந்தது, கழுத்தில் புலிநகம் தொங்கிக் கொண்டிருந்தது.

சிவபூஜை முடித்து வந்திருந்த அவன் நெற்றியில் திருநீறு பளிச்சிட்டது. தலையினை முடித்து கொண்டை கட்டியிருந்தான். வழக்கமான கவலை அவனுக்குள் எட்டிப் பார்த்தது “சிவனே” எனச் சொல்லி பெருமூச்சு விட்டான்.

அவனுக்கு எல்லாமும் வாய்த்திருந்தது. அவனுக்கு காடுவெட்டிச் சோழன் எனப் பெயர். எதிரிகள் நாட்டினை காட்டை அழித்து பாதை எடுத்து அழிப்பவன் என அவனுக்கு பெரும் அச்சம் கலந்த மரியாதை எல்லா இடமும் அந்தப் பெயரில் இருந்தது. எந்த காட்டிலும், எந்த எதிரி இருந்தாலும் அழித்துவிடுவான்.

அப்படியானவனுக்கு எந்தப் பெரிய கவலை இல்லை. காவேரியும், பாலாறும் கொட்டிக் கொடுத்தன. பூம்புகாரின் துறைமுகம் அள்ளி அள்ளிக் கொடுத்தது. காஞ்சியும், கடல்மல்லையும் அவன் பெரிய வளங்களாய் இருந்தன‌.

அப்படி எல்லாமும் பெற்றவனுக்கு ஒரே கவலை பாண்டிய நாட்டின் மதுரையில் வாழும் சோமசுந்தர பெருமானை தரிசிக்க முடியவில்லை என்பது.

அவனுக்கு சோழநாட்டில் திருவாரூர் முதல் சிதம்பரம் எனப் பல ஆலயம் உண்டு. அவனால் காசிவரை தரிசிக்க முடியும். ஆனால், பாண்டியநாட்டுக்குள் வரமுடியாத சிக்கல் இருந்தது. அதனாலே காசிபோல் மகா புனிதமான மதுரை சோமசுந்தரேஸ்வரரை காணமுடியா சோகம் அவனை ஆட்கொண்டது.

பாண்டிய நாட்டுக்கும், சோழ நாட்டுக்குமான பகை அது. அது இயல்பாகவே என்றோ ஒரு நாள் தொடங்கி அரசியல் உள்ளிட்ட பல காரணங்களுக்காக வளர்ந்து வளர்ந்து பெரிதாயிற்று.

அவன் சிந்தனையில் மூழ்கினான்.

பாண்டியர் சந்திரகுலம், சோழர்கள் சூரிய குலம் அதனாலே ஆதித்தன் எனும் பெயரோடு அடையாளமிட்டோம்.

இந்தச் சண்டை அங்கிருந்தே தொடங்கிற்று; அதிலிருந்தே யார் பெரியவர்கள் எனும் மோதல் தொடங்கிற்று; அதற்கு அரசியல் காரணமும் சேர்ந்துக் கொண்டது.

அது என்னவோ தெரியவில்லை. சிவனுக்கு காசியினை அடுத்து மதுரையினைத்தான் பிடித்துப்போனது. அவன் தேர்ந்துகொண்ட ஊர் அது. அங்கு ஆண்டவனாய் அமர்ந்ததும் அவனே; அங்கு மாப்பிள்ளையாய் வந்தவனும் அவனே; வைகையினை கொடுத்தவனும் அவனே.

அவனே அடையாளமிட்ட‌ ஊர்; தேடி தேடிச் சென்று திருவிளையாடல் செய்த மண்.

அவனுக்கும் பாண்டியருக்குமான பந்தம் அப்படி. அகத்திய முனி பாண்டியநாட்டில் இருந்துதான் தமிழ் வளர்த்தான். தமிழ்ச்சங்கம் பாண்டியனின் மதுரையில் சொக்கநாதன் சன்னதிக்கு அருகாமையில்தான் இருந்தது.

அந்தச் சங்கம்தான் எந்த நாட்டின் தமிழ் இலக்கியத்தையும் அங்கீகரிக்கும், எந்தப் புலவன் என்ன எழுதினாலும் அதை அங்கீகரிக்கும் தகுதி மதுரை பாண்டிய தமிழ்ச்சங்கத்துக்கே உண்டு.

அவர்கள்தான் தமிழின் அடையாளம்.

முருகப்பெருமான் அங்கேதான் தலைவர்; அகத்தியர் உள்ளிட்ட சித்தர்கள் அதன் அடுத்த தலைவர்கள்; எல்லாமே பாண்டிய அதிகாரம்.

பாண்டியருக்கு வைகை என இறைவன் கொடுத்த நதி உண்டு. வற்றா பொருநை எனும் தாமிரபரணி உண்டு. அவை அள்ளி கொடுக்கின்றன, புன்செய் நிலம் ஏராளம்.

ஐவகை நிலமும் கொண்ட நிலம் பாண்டியநாடு. மலைவளம் அதிகம். ஒரு நாட்டின் வளத்தில் மலை எப்போதும் முக்கியம். அதுதான் யானை உள்ளிட்ட பலங்களை கொடுக்கும்; அதுதான் நதிகளை கொடுக்கும்; அதுதான் காவலைக் கொடுக்கும்; மலைவளம் மாபெரும் சொத்து.

எல்லா வகை செல்வமும் கொட்டிக் கிடக்கின்றது. பாண்டிய நாட்டின் கடல் கூட அள்ளிக் கொடுக்கின்றது. முத்து தனி சொத்து என்றால் தேரிகாட்டு பனைகொடுக்கும் பனைவெல்லம் மாபெரும் வளம். நல்லெண்ணெய் உள்ளிட்டவையும்,@ மருத்துவமும் அது இன்றி இல்லை. உலகுக்கே பனைவெல்லம் கொடுக்கும் பூமி அது.

சந்தனம், அகில் என‌ எதை எடுத்தாலும் பொன்னாக்கும் மண் பாண்டிய மண், யாரையும் நம்பி அவர்கள் இல்லை.

சோழர் நிலை அப்படி அல்ல, இங்கே மலைவளம் இல்லை, காவேரி ஒன்றுதான் சொத்து. அதுவும் சாளுக்கியர் ஆங்காங்கே அணைகட்டினால் நின்றுவிடுகின்றது. இதற்காகவே சாளுக்கியரோடு தீராப் போர் புரிந்து கொண்டே இருக்கவேண்டும்.

இங்கு யானை முதல் எல்லாமே வாங்க வேண்டும். நெல் ஒன்றை தவிர விற்க ஏதுமில்லை. காவேரிபூம்பட்டினம் நிச்சயம் பெரும் வரம். ஆனால், அங்கும் சிக்கல் அதிகம். அதை தக்கவைக்கவும் பல சர்ச்சைகளை தாண்டி நிறுத்தவும் சவால் அதிகம். அடுத்திருக்கும் யாழ்ப்பாண மன்னர்கள், லங்காபுரி மன்னர்கள் தொல்லை வேறு.

பாண்டியர்கள் நம்மைவிட பலமானவர்கள். சிவனருள் அவர்களுக்கு உண்டு. அதற்காக சூரிய குல சோழர்கள் அவர்களுக்கு பணிந்துபோக முடியாது.

இது தீராப்போர். இருவரும் மாறி மாறி எழுந்து வீழ்ந்து சுற்றும் போர். இந்தப் போரை நடத்துவது யார் என்றால் சிவன். ஆம். அவனே.

இருவருக்கும் ஏகப்பட்ட விரோதம், பகை, போட்டி இருந்தாலும் இருவரும் ஒன்றுபடும் விஷயம் சிவன், இருவருக்கும் ஒரே சிவன்.

உனக்கு மதுரை சிவனா? வைத்துகொள் சிதம்பரத்தில் அதைவிட பெரிதாக கட்டுகின்றோம். உமக்கு நெல்லையப்பாரா, நாங்கள் திருவாரூரில் கட்டுகின்றோம், சிவன் எங்களுக்கும் வருவார்.

சொக்கநாதர் உங்களுக்கு என்றால், தியாகேசர் எங்களுக்கு. குற்றாலநாதர் உங்களுக்கு என்றால், நடராஜர் எங்களுக்கு.

இப்படி சிவபக்தி வளர்ந்தது. இரு நாடும் சிவனைக் கொண்டாடியது.

ஆனால், அந்தச் சிவன் ஆலவாயனாக, சொக்கனாக, சோமசுந்தரேஸ்வரராக மதுரையினை அதிகம் விரும்புகின்றார். எல்லா சிவாலயங்களையும் கண்ட நான் மதுரைவாழ் சொக்கனை காணமுடியவில்லையே.

நான் செல்லமுடியாது. காரணம், நான் சோழமன்னன். காஞ்சியிலே இருந்து பரிபாலனம் செய்கின்றேன். பல சிக்கல்களுக்காக எதிரிகளை அழிப்பதற்காக காஞ்சியிலே இருக்கின்றேன், இதுதான் எங்கள் வடக்கு தலைநகரம்.

நான் மதுரை செல்ல பாண்டியன் அனுமதி வேண்டும். நான் என் ரதத்தில் தேவியரோடு சோழ படைகள் புடைசூழ புலிக்கொடி பறக்க சென்றால்தான் சிறப்பு.

அதை பாண்டியன் அனுமதிக்கமாட்டான், நிச்சயம் மாட்டான். அதனால் நான் சொக்கநாதனை சந்திக்கும் காலம் இன்னும் வரவில்லை, தாமதமாகி சென்றுகொண்டே இருக்கின்றது.

எப்போது மதுரை சிவனை காணப்போகின்றேனோ, என் சிவன் மதுரையில் இருக்கும் அழகை காணப்போகின்றேனோ எனச் சொல்லி அலுத்துக் கொண்டு தென் திசை நோக்கி வணங்கிக் கொண்டான்.

அவனுக்கு மதுரைவாழ் நாதனை தரிசிக்க அவ்வளவு ஆசை, அது ஏக்கமாகி தவமாகிப் போனது. எவ்வளவோ ராஜ தந்திர தூதுக்களை விடுத்துப்பார்த்தான்.

சந்திரகுலம் ஆளும் பாண்டிய மண்ணில் சூரிய குலத்தவன் புலிக்கொடியோடு வருவதா? அதனை அனுமதிக்க முடியுமா? மதுரை சிவன் எங்களுக்கு. மதுரைவாழ் சொக்கன் பாண்டியநாட்டின் தலைவன் அவனை பாண்டிய விரோதிகள் ஒருகாலமும் சந்திக்க முடியாது என அதனை பாண்டியன் அனுமதிக்கவில்லை.

படை அளவில் பாண்டியரை விட சோழன் வலுவானவன்; அவனுக்கு வடக்கே இருந்து ஆட்களை திரட்ட வழி இருந்தது; கலிங்கம் வரை நீண்டிருந்த சோழதேசம் பல படைகளை திரட்டும் வலுக் கொண்டிருந்தது.

பாண்டியர் பலமானவர்கள். ஆனால், அண்டை நாடென்றால் சேர தேசம் தவிர யாருமில்லை. அவர்களும் விலகியே இருப்பார்கள், இதனால் படை அளவில் சோழர்கள் பலமானவர்கள்.

ஆனால், பாண்டியரின் அதிவீரம் முன்னால் அவர்கள் திணறுவார்கள். வெற்றி பாண்டியருக்கும் வசப்படும். ஐவகை நிலத்திலும் தேர்ச்சிப்பெற்ற வலுவான படையும், மலையானைகளையும் கொண்ட பெரும் படையும் பாண்டியர் பலம்.

இதனால் காடுவெட்டிச் சோழன் மிகுந்த மன அழுத்தத்துக்கு உள்ளானான். எல்லாமும் கிடைத்த அவனுக்கு மதுரைவாழ் சிவனின் தரிசனம் கிடைக்கவில்லை எனும் பெரும் வலி இருந்தது. அதைச் சிவனிடமே சொல்லிச் சொல்லி அழுதான்.

சிவன் அவன்பால் இரக்கம் கொண்டார். அவன் குறை போக்க ஒரு திருவிளையாடலை நடத்தினார்.

ஒருநாள் அவன் கனவில் சென்று “சோழனே அஞ்சாதே, தனியாக நீ எம்மை தரிசிக்க மதுரை கிளம்புவாயாக, உன்னை நாமே அழைத்துச் சென்று பத்திரமாக மீட்டு வருவோம், உரிய ஏற்பாடுகளை செய்துவிட்டு கிளம்பு” எனச் சொல்லி மறைந்தார்.

மன்னன் உடனே தயாரானான், பல ஏற்பாடுகளை செய்தான்.

ஒரு சாமானியன், ஒரு ஆண்டி உடனே கிளம்ப சிக்கல் ஏதுமில்லை. ஆனால், அரசன் அப்படி அல்ல, அவனுக்கு பொறுப்பு அதிகம். இதனால் தன் ரகசியம் அறிந்த குடும்பத்தவரிடம் மட்டும் தான் சிவபூஜையில் இருப்பதாகவும் சில நாட்களுக்கு மன்னர் வெளிவரமாட்டார் எனச் சொல்ல ஏற்பாடுகளை செய்தான்.

அவன் அரண்மனையில் சிவனடியார்க்கு உணவு இடுதல் வழமையான ஒன்று. அப்படி உணவருந்தி செல்லும் சிவனடியார் கோலத்தில் யாருக்கும் தெரியாமல் அரண்மனையினை விட்டு வெளியேறினான்.

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் இது. மிக மிக ரகசியமான பயணம்; சவால் நிறைந்தது; அவன் ஆண்டி கோலத்தில் இருப்பவன்; அவன் குதிரை ஏறினாலோ, இல்லை வண்டியில் சென்றாலோ பெரும் சந்தேகம் வரும். வேஷம் கலைந்தால் எல்லாம் முடிந்தது.

பலநாட்டு உளவாளிகள் கண்ணில் சிக்கிவிட்டால் போதும், அவன் அரண்மனையில் இல்லை தொலைவில் தனிமையில் இருக்கின்றான் என்றாலே போதும் எல்லாம் சர்வநாசமாகும்.

அரசன் இல்லா அரியணையும், நாடும் ஆளாளுக்கு இலக்காகும். இதனால் மன்னன் ஆண்டி கோலமிட்டு மதுரை நோக்கி செல்லத் தொடங்கினான். தனியாகச் சென்றான். சிலநேரம் ஆண்டியர் கூட்டம் அல்லது தனியாக என அவன் பயணம் தொடர்ந்தது.

மதுரைக்கு அவன் செல்லவேண்டிய தூரம் 400 கல் தொலைவு. இடையில் ஆறுகள் எல்லாம் கடந்து செல்வது என்பது சிரமமானது, அதுவும் ஆடிமாதம் எல்லாமே பெரும் வெள்ளம்.

அதையும் தாண்டி வந்தான். ஆண்டி கோலம் அல்லவா? அவன் பணம் எடுத்துவரமுடியாது, வழியில் அவன் தேச அன்னசத்திரத்தில் அவனே நடத்தும் அன்ன சத்திரத்தில் உண்டான், அவன் கட்டிய சத்திரங்களிலே உறங்கினான்.

அது அவனுக்கு ஒரு நாட்டின் சோதனையாகவும் இருந்தது.

இப்படியாக சோழன் காடுவெட்டி மிக மிகச் சிரமபட்டு வந்தான். சோழ நாட்டின் எல்லை வரை வந்தவனுக்கு பாண்டியநாடு அறியா தேசமாய் இருந்தது.

அவனுக்கு சிக்கல் உண்டாயிற்று. எப்படி செல்வது யாரிடம் கேட்பது எனத் தெரியாமல் இருந்த நிலையில் ஒரு சித்தர் வந்தார். முனிவர் கோலத்தில் இருந்தவர் சொன்னார், “அய்யா, மதுரைக்கு செல்கின்றீரா, நான் வழிகாட்டுகின்றேன்.

அங்கே சுங்கச்சாவடி, காவல் சாவடி இருந்தது. சித்தர் முன் செல்ல அவன் பின் செல்ல பெரிய சோதனை ஏதுமில்லை விட்டுவிட்டார்கள்.

சித்தர் அதிகம் பேசவில்லை. சில அடி முன்னே செல்ல இவர் பின்னால் செல்வார், சில நேரம் அவர் வேகமாய் முன்சென்று மறைவார், இவர் பதறியடித்து தேடும் போது தள்ளி நின்று சிரிப்பார்.

சிலநேரம் பின்னால் இருந்து அழைப்பார்.

இம்மாதிரி சித்தர்கள் பாரத தேசம் முழுக்க இருந்ததால் மன்னனும் அதைப் பெரிதாக கருதவில்லை. சிவன் அனுப்பிய சித்தர் என நினைந்து நன்றி சொல்லிக் கொண்டான்.

கடைசியில் அவன் மதுரையினை தொட்டான், அதாவது வைகையின் வடபக்கம் நின்று கொண்டிருந்தான், ஆற்றின் அக்கரையில் சொக்கநாதர் ஆலயம் தெரிந்தது.

ஆனால், வைகையின் வெள்ளம் பெரிதாக வந்தது. அவன் முன்பின் மதுரை அறியாதவன். வைகை தெரியாது, எங்கே வளையும் எங்கே கடக்கவேண்டும் என எதுவும் தெரியாது, அப்போது அந்தியும் சாய்ந்துவிட்டது.

அவனுக்கோ அவசரமாக நாடு திரும்பவேண்டும். ஒவ்வொரு நொடியும் அவனுக்கு முக்கியம். ஒரே நாளில் சொக்கனை தரிசித்துவிட்டு செல்லலாம் என வந்தவனுக்கு வைகையின் பெரு வெள்ளமும் அந்திமாலையும் பெரும் நடுக்கம் கொடுத்தது. அந்த சித்தரையும் காணவில்லை.

சோழநாட்டில் அவன் வேடம் கலைந்தால் கூட சிக்கல் இல்லை. ஆனால், பாண்டிய நாட்டில் சிக்கினால் தலை தப்பாது, பெரும் விபரீதம் நடந்துவிடும்.

அவன் சிவபக்தன் அல்லவா? அன்று பிரதோஷ நாளாய் இருந்தது.

வைகை கரையில் மணலால் லிங்கம் செய்து ஆங்காங்கே இருந்த மலர்களை கொண்டு பூஜித்தான், தனக்கு கனவில் வந்த சிவன் உதவி செய்ய வேண்டினான்.

அப்போது அதே சித்தர் வந்தார். அவன் நிம்மதி கொண்டான், “வா அங்கே வைகை நீர் குறைவாக ஓடும்” என அழைத்துச் சென்றார்.

அங்கே வைகை ஒரு ஓடைபோல் மாறிற்று, அவனுக்கு அந்த அந்திப் பொழுதில் அதை சரியாக பார்க்கமுடியவில்லை. அவன் அதிசயித்தான்.

கடல்போல் கங்கைபோல் ஓடியவகை, இங்கே இப்படி முட்டளவு ஓடுவது எப்படி என நம்பமுடியாமல் திகைத்தான். ஆனால், முன்னால் செல்வது சித்தர் என்பதால் எல்லாம் அவருக்கே சாத்தியம் எனச் சில நிமிடங்களில் கடந்தான்.

திரும்பி பார்த்தால் வைகை அதே பெரும் நதியாக ஓடியது.

சித்தருக்கு வைகை கட்டுப்பட்டது எனச் சிலிர்த்தவன் ஆலவாய் நாதனை நோக்கி நன்றி சொன்னான். அடுத்த ஆபத்து கோட்டை வடிவில் வந்தது.

அன்றைய மதுரையினை சுற்றி பெரும் கோட்டை இருந்தது. நான்கு வாசல்கள் இருந்தன. இந்த நான்கு வாசல்களும் காலை திறக்கப்படும். மாலையில் அவை மூடப்பட்டு பாண்டிய சின்னமான இரு மீன்கள் லட்சினையால் முத்திரை குத்த படும். இது வழமை.

அந்த வாயில் வழியேதான் யாராயினும் உள்ளே வரமுடியும் செல்லவும் முடியும். அனுமதிகள் அவசியம். வியாபாரிகள் வெளிநாட்டவரெல்லாம் கடுமையாக சோதிக்கப்படுவார்கள்.

வாயில் காவலர், கோட்டை மேல் ஆயுதம் தாங்கிய காவலர் என அது பலமான வாசல்.

அந்த வாசல் மூடப்பட்டு முத்திரையிடப்பட்டிருந்தது, இருமீன்கள் முத்திரையிடப்பட்டு காவலர் அருகில் இருந்தனர். தொலைவில் இருந்து இதைக் கண்ட மன்னன் மிகவும் வாடிப்போனான்.

இனி இரவெல்லாம் என்ன செய்வது என திகைத்தபோது சித்தர் சொன்னார், “என் பின்னால் வா, எதுவும் பேசாதே”

அப்படியே மன்னன் அவர் பின்னால் செல்ல அந்த அதிசயம் நிகழ்ந்தது. கோட்டை காவலர்கள் ஆழ உறங்கினார்கள், வடக்கு வாசல் கதவு தானே திறந்தது.

மதுரை வீதிகள் வழியே சித்தர் முன்செல்ல மன்னன் பின்னால் வந்தான், அந்த நடுநசியில் ஒரு ஜீவன் கூட குரைக்கவில்லை.

சித்தர் ஆலவாய்நாதன் அவனை அழைத்து வந்தார். அவர்களை கண்டதும் கோவில் கதவுகள் தானே திறந்தன‌.

மன்னன் அளவில்லா ஆனந்தம் அடைந்தான். அவனை பொற்றாமரை குளத்தில் நீராட சொன்ன சித்தர் பின் ஆலவாயன் சன்னதிக்கு அழைத்துச் சென்றார்.

காலம் காலமாக எந்தச் சிவனை காண மன்னன் ஏங்கினானோ, எந்தச் சிவனை காண தவமிருந்தானோ, அந்த ஆலவாயனை கண்டதும் “சிவனே, என் சிவனே” எனக் கதறியவன் கதறல் ஆலயம் ழுழுக்க கேட்டது.

அவன் ஓங்கி அழுத குரல் கேட்டது. ஆனால் யாரும் எழவில்லை, ஒரு சத்தமுமில்லை.

அந்த இருளிலும் பிரகாசமான ஒளியுடன் ஆலவாய் நாதனின் சன்னதி அவனுக்கு காட்சிக் கொடுத்தது. முன்னால் தெண்டனிட்டு வணங்கிய மன்னன், பெரும் ஆனந்தத்தில் அமர்ந்திருந்தான்.

சில நாழிகை அமர்ந்திருந்தவன் பின் பிரிய மனமில்லாமல் எழுந்தான். சித்தர் அவனுக்கு திருநீறு பூசிவிட்டார். அவன் பெரும் மகிழ்வு கொண்டான்.

அவனுக்கு ஆலய சன்னதியில் இருந்து பூக்களும், வில்வ இலையும் எடுத்துக் கொடுத்து அழைத்து வந்தார் சித்தர்.

எப்படி அழைத்துச் சென்றாரோ அப்படியே திரும்ப அழைத்து வந்தார். கோவில் கதவும், வடக்கு கோட்டை கதவும் தானாய் மூடின‌.

வைகையாறும் அப்படியே வழிவிட மன்னன் மறுகரை சேர்ந்தான். அங்கிருந்தே ஆலயத்தை பார்த்து கண்ணீர் விட்டவனை விரைவாக பாண்டிய எல்லை கடந்து அனுப்பிவிட்டார் சித்தர்.

அவன் சோழநாட்டுக்குள் நுழைந்திருந்தான். எப்படி அவன் இவ்வளவு வேகமாக வந்தான் என்பது தெரியா அளவு அவன் சோழநாட்டுக்குள் வந்திருந்தான்.

அதே நேரம் மதுரையின் வடக்குவாசல் பரபரப்பானது. காரணம், அங்கே வழக்கமாக இருக்கும் இருமீன்கள் முத்திரை இல்லை. மாறாக, நந்தி முத்திரை இருந்தது.

வீரர்கள் அதிர்ந்தனர். யாரோ அந்நிய உளவாளிகளா, இல்லை ஏதும் கொள்ளை முயற்சியா, இல்லை எப்போது நினைத்தாலும் மதுரையினை கைப்பற்றுவோம் எனும் மிரட்டலா என அதிர்ந்தார்கள்.

விஷயம் மன்னனுக்குச் சென்றது. அப்போது குலபூஷணன் எனும் பாண்டிய மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்தான்.

அவன் பதறியபடி கோட்டை வாசலுக்கு வந்தான். அங்கே நந்தி அடையாள முத்திரை இருந்தது.

மன்னன் மனம் நொந்தான், உரிய விசாரணை முடியும் வரை அதை உடைக்கவேண்டாம் எனச் சொல்லிவிட்டு காவலை வலுப்படுத்தினான்.

ஆனால், அவன் மனம் மிகத் துயரமடைந்தது. தன் தலைநகரில் தன் கோட்டை வாசலில் இன்னொரு முத்திரை இருக்குமானால் அது தன் ஆட்சியின் இழுக்கு, தனக்கு அவமானமல்லவா என நினைந்து நேரே சொக்கநாதர் சன்னதியில் மனமுடைந்து நின்றான்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது. “குலபூஷணா நாமே அந்த முத்திரையினை இட்டோம், எம் பக்தன் காடுவெட்டிச் சோழன் எவ்வளவோ முறை கேட்டும் நீ அவனுக்கு மதுரை வர அனுமதி கொடுக்கவில்லை, அதனால் நாமே அவனை அழைத்து வந்து இது எமது ஆட்சி எனச் சொல்ல நந்தி முத்திரையுமிட்டோம்.

அவனால் உனக்கு எந்த ஆபத்தும் வராது. எமக்கு நீங்கள் இருவரும் அடியவர்களே” எனச் சொல்லி மறைந்தார்.

குலபூஷணன் தன் தவறை உணர்ந்தான். உடனே அவனே தன் பரிவாரங்களுடன் சோழநாட்டு எல்லைக்கு சென்றான், அவன் வந்த செய்தி கேட்டு காடுவெட்டிச் சோழன் ஒடிவந்தான்.

இருவரும் நடந்ததை சொல்லி அன்றே நண்பர்கள் ஆனார்கள். அதன் பின் சோழநாட்டு தலங்களுக்கு பாண்டிய மன்னனும், மதுரை உள்ளிட்ட பாண்டிய தலங்களுக்கு சோழ மன்னனும் அடிக்கடி வருவது வாடிக்கையாயிற்று.

இதுதான் விடை இலச்சினை இட்ட படலம். சிவன் எந்த காளை எனும் விடையில் அமர்ந்திருப்பாரோ அந்த இலச்சினையினை முத்திரையாக இட்ட படலம்.

இந்தத் திருவிளையாடல் சிவன் தன்னை நம்பிய அடியாருக்காக பெரும் அற்புதம் செய்தார் என்பதோடு கடக்கும் விஷயம் அல்ல, ஆழ்ந்த தத்துவங்களைக் கொண்டது.

முதலாவது, அந்த சோழமன்னன் தான் ஒரு மன்னன், தான் ஒரு மகுடம் சூடிய மன்னனாக ஒரு சக்திவாய்ந்த தலைவனாக பெரும் அணிவகுப்பாக மதுரைக்கு செல்ல விருப்பம் கொண்டிருந்தான்.

சிவனே வந்து அவனை தனியே வரச்சொன்னபோது, அதுவும் ஆண்டி கோலத்தில் வரச்சொன்னபோது அவன் அரசநிலை துறந்து ஆண்டிக்கோலமாய் வந்தான்.

இதுதான் கவனிக்கதக்கது.

இறைவன் எப்போதும் மனதை பார்க்கின்றார், எந்த மனம் எல்லாவற்றையும் தூக்கி எறிய தயங்காதோ, எந்த மனம் பக்தியில் எல்லாவற்றையும் இழக்குமோ அந்த மனம் சிவனுக்கு உவப்பாகின்றது.

ஆம். பக்தியில் தேடவேண்டியது பெருமை அல்ல, மாய அகங்காரம் அல்ல, அங்கே வேண்டியது தாழ்ச்சி. பெரும் தாழ்மை. எல்லார்க்கும் அடியவர் எனும் அந்த தாழ்ச்சி.

சிவன் அவனுக்கு வைத்தது ஒரு சோதனை. சிவன் நினைத்திருந்தால் குலபூஷணிடமே முதலில் அவனை வரவேற்க சொல்லியிருக்கலாம்.

ஆனால், தெய்வம் சோதித்துத்தான் வரமருளும்.

அப்படி அவனுக்கும் சோதனை வைக்கப்பட்டது, அரசனாக சிவனை காணாமல் தவிக்க போகின்றாயா, இல்லை ஆண்டியாக வந்து தரிசிப்பாயா என்ற சோதனை அது.

அரசவாழ்வா? ஆண்டி கோலமா எனும் போது சிவனுக்காக ஆண்டி கோலமே மன்னன் தேர்ந்தெடுத்தான். அந்தப் பயணம் ஆபத்தானது என்றாலும் சிவனுக்காக அதை ஏற்றான்.

வாழ்வாங்கு வாழும் மன்னன் சிவனை காண ஆண்டியாய் அன்னசத்திரத்தில் கையேந்தி அவன் கால்தேய நடந்து, பஞ்சணை இன்றி சத்திரகல்லில் உறங்கி எவ்வளவோ துயரங்களை தாண்டினான்.

அவன் பக்தியினை கண்ட சிவன் அவனுக்கு வைகையினை பிளக்கச்செய்து, கோட்டைக் கதவை திறக்கச் செய்து தரிசனம் கொடுத்தார்.

தெய்வத்துக்காக எல்லாம் தூர எறிந்து சிவனே கதி என நடக்கும் போது சிவனே ஒருவனை முன்னின்று வழிநடத்தி கயிலாயத்தில் சேர்த்துக்கொள்வார் எனும் போதனை அது.

அப்படியே குலபூஷணின் ஆணவத்துக்கும் மாய அகங்காரத்துக்கும் அடி விழுந்தது. மதுரையின் மன்னன் நீ அல்ல, நான் எனச் சொன்னார் சிவன்.

இந்த ஆலயம் மன்னனுக்கானது அல்ல, அடியாருக்கானது, எல்லா நாட்டு அடியாருக்கும் இந்த கதவு திறக்கும் எனக் காட்டினார்.

ஆலயத்தில் எல்லோரும் ஒன்றே, தெய்வத்தின் முன் எல்லோரும் ஒன்றே என்பதை சொல்லும் தத்துவம் இது.

எந்நாடு என்றாலும், எந்த மொழி எந்த இனம் என்றாலும் அங்கே ‘ஒன்றே குலம் ஒருவனே சிவன்’ என உரக்க சொன்ன ஆலயம் இது.

சிவம் என்றால் அன்பு, அன்பே சிவம்.

அந்த சிவம் தன் மேல் உண்மையான பக்தி கொண்டவனுக்கு குழந்தைபோல் ஓடிவருகின்றது, காளை வண்டி இழுப்பது போல் ஓடிவருகின்றது.

அது நந்தனார்க்கு வந்தது, அப்பர் சுவாமிகளுக்கு வந்தது. இன்னும் எத்தனையோ பக்தர்க்கும் அடியார்க்கும் வந்தது. அந்த சிவம் இப்போது இந்த காடுவெட்டிச் சோழனுக்கும் வந்தது.

அப்படியே அது இருவரையும் அன்பால் இணைத்தது, சிவம் சுந்தரர் வாழ்வில் தூது போனது போல இங்கும் வந்து இருவரையும் நண்பர்களாக்கியது.

சிவம் இருக்கும் மனம் அன்பாகும்; சமாதானம் கொண்டாடும்; உறவில் இனிமையும் நிறைவும் காணும் என்பது இதுதான்.

இந்தத் திருவிளையாடல் வரலாற்றில் ஒரு முத்திரையினை கொடுத்தது, சிவன் தனக்காக செய்த அற்புதத்தை காஞ்சியில் பெருமையாக கொண்டாடினான் சோழன் காடுவெட்டி.

அவனின் அலுவலக விஷயங்களில் முக்கியமான இடங்களில் விடை சின்னம் இருந்தது. சந்திர குல பாண்டிய நாட்டில் சிவன் செய்ததை குறிக்கும் வகையில் பிறைசூடிய நிலாவோடு கூடிய சின்னம் இருந்தது.

காஞ்சியில் அது விசேஷமானது.

பின்னாளில் பழையாறை, தஞ்சாவூர் எனச் சோழர்கள் பெரும் ஆட்சிஸ்தலங்களை ஸ்தாபித்தாலும் காஞ்சியில் இந்த நந்தி முத்திரை பிரசித்தியானது.

இதுதான் பின்னாளில் பல்லவரின் அடையாளமுமானது.

சோழர்களிடம் இருந்து பல்லவர்கள் காஞ்சியினை கைபற்றியபின்பு அது பல்லவ அடையாளமாயிற்று.

அவர்கள் கொடி சிம்மம் என்றாலும், அவர்கள் லட்சினையும் முத்திரையும் பல இடங்களில் நந்தியாகவே வந்தது. பல்லவர்களின் காஞ்சி அடையாளங்களில் இந்த நந்தியும் ஒன்று.

நந்திவர்மன் என மன்னர்களே வந்தார்கள். நந்திகலம்பகமெல்லாம் அங்குதான் பாடப்பட்டது.

அதன் மூலம் காடுவெட்டிச் சோழனுக்கு சிவன் செய்த திருவிளையாடல், அங்கிருந்துதான் எல்லாம் உருவாயிற்று. அந்த சாட்சிதான் நந்தியும் பல்லவர்களும் காஞ்சியுமாக பிணைந்து நின்றது.

யாராக இருந்தாலும், எந்த கொம்பனாக இருந்தாலும் அகங்காரம் நீக்கி தலைக்கனம் கர்வம் நீக்கி, தான் எனும் ஆணவம் நீக்கி தன்னை வழிபட்டால் சிவன் அவனை தாங்கிக் கொள்வார் என்பதுதான் இந்த திருவிளையாடலின் போதனை.

ஆலயத்தில் எல்லோரும் சமம். ஆலயம் என்பது அடியார்களுக்கானது. அங்கே அதிகாரம் ஆர்ப்பாட்டமெல்லாம், ஆணவமெல்லாம் சிவனுக்கு பிடிக்காது. அப்படி செய்வோர் அகங்காரத்தை அவரே ஒடுக்குவார் என்பதும் இன்னொரு போதனை.

ஒருவனை பிடித்துவிட்டால் சிவன் விடமாட்டார். அடிக்கடி விளையாடுவார். அப்படி குலபூஷணன், காடுவெட்டிச் சோழன் என இருவரையும் கொண்டு இன்னொரு திருவிளையாடல் நடத்தினார். அதனை அடுத்துக் காணலாம்.

திருவிளையாடல் : 13 தண்ணீர் பந்தல் வைத்த படலம்.

காடுவெட்டி சோழன் சிவனை மிக ஆச்சரியமான வகையில் தரிசித்து சென்றபின் காஞ்சியில் செங்கோலாட்சி செலுத்தினான். குலபூஷண பாண்டியனும் சிவனே மதுரையின் அரசன், தான் அவன் வெறும் பிரதிநிதி என அந்த சொக்கநாதனுக்கு கட்டுப்பட்டு நல்லாட்சி செலுத்தினான்.

குலபூஷணன் காலத்தில் அடிக்கடி சோழன் பாண்டியதேசம் வருவதும், சொக்கநாதரை தரிசிப்பதும் இயல்பான விஷயமாய் இருந்தது.

அவனுக்கும் காடுவெட்டி சோழனுக்கும் சிவனருளால் நல்லுறவு இருந்தது, அந்த உறவு முறியும் விதமாக குலபூஷணின் காலம் முடிந்தது.

குலபூஷணின் மரணம் காடுவெட்டி சோழனை வெகுவாக பாதித்தத. இந்த சோழ, பாண்டிய நட்பு அதுவும் சிவனருளால் தொடங்கிய நட்பு, பெரும் போரை தவிர்த்த இந்த உறவு தன்னோடு அல்லாமல் தன் குலம் முழுக்க வர விரும்பினான்.

அப்படியே குலபூஷணனுக்கு பின் மதுரையினை ஆண்ட ராஜேந்திரபாண்டியனுடன் நல்லுறவை கொண்டிருந்தான். ஆனாலும், அவன் மனம் குழப்பத்திலே இருந்தது.

குலபூஷணுமில்லை, இனி தனக்கு பின் இந்த உறவு எப்படி தொடரும் எனச் சிந்தித்தவன் ஒரு முடிவெடுத்தான். தன் மகளை இராஜேந்திர சோழனுக்கு மணமுடித்து கொடுக்க விரும்பினான்.

இதனால் இந்த உறவும் நிலைக்கும். ராஜ்ஜியங்கள் இடையே சிக்கல் தீரும். அதே நேரம் சொக்கநாதரையும் அடிக்கடி தரிசிக்கலாம் என அவன் மனம் சொல்லிற்று, அவன் முடிவுக்கு அதுவே காரணமாயிருந்தது.

பெரும் ஆரவாரத்தோடு மதுரைக்கு கிளம்பினான். அங்கே சொக்கநாதரை தரிசித்து வேண்டியவன், பாண்டியனை சந்தித்து தன் விருப்பத்தை சொன்னான்.

இராஜேந்திர பாண்டியனும் தீவிரமாக யோசித்தான், இரு ராஜ்ஜியங்களுக்கும் நல்ல பலனை தரும் இந்த முடிவினை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டான், சோழன் அவனுக்கு பொன்னும் பொருளும் வழங்கினான்.

பதிலுக்கு பெரிய பெரிய முத்துக்களை கொண்ட மாலையினை கொடுத்து அனுப்பிவைத்தான் பாண்டியன்.

மண ஏற்பாடுகள் இன்னும் பல விஷயங்களுக்காக இராஜேந்திரன் தன் தம்பி இராஜசிம்மன் என்பவனை சோழனின் அவைக்கு அனுப்பினான்.

அந்த இராஜசிம்மன் பாண்டிய நாட்டில் இருந்தபோதே மனதுக்குள் பெரும் வன்மம் இருந்தது. இந்த பாண்டிய நாட்டுக்கு அண்ணன் அரசனாகிவிட்டான், தனக்கு இராஜ்ஜியம் கிடைக்கவில்லை எனும் பெரும் ஆற்றாமை இருந்தது.

அயோக்கியர்களும், வஞ்சகர்களும் எப்போதும் அமைதியாய் இயல்பாய் இருப்பதுபோலத்தான் இருப்பார்கள், உரிய வாய்ப்பு கிடைக்கும் போதுதான் தங்கள் சுயரூபம் காட்டுவார்கள். கொக்கு போல் தூக்குவார்கள், கழுகு போல் பாய்வார்கள்.

அப்படி இராஜசிம்மனுக்கு இயல்பாக இருந்த ஆற்றாமை இன்னும் அதிகமானது. பாண்டிய நாடு தன் அண்ணனுக்கு, இனி சோழனுடன் உறவு கொண்டால் சில பகுதிகளை அவன் விட்டுத்தருவான், இவன் பெரும் அரசனாக வாழ்ந்துகொண்டே செல்வான், அவன் ராஜ்ஜியம் பெருகிக்கொண்டே செல்லும் நான் ஒன்றுமில்லாமல் போவதா?

இது என் தகப்பன் ராஜ்ஜியம். இங்கே தனக்கும் பாதி அங்கு உண்டு. ஆனால், மூத்தவனுக்கே அரசுரிமை என்பதால் அவன் அரசனாகிவிட்டான், தான் ஒன்றும் சாதாரணம் அல்ல, சிறந்த தளபதி பெரும் வீரன் அதனால் ஆட்சியில் பங்குகோர தனக்கும் அதிகாரம் உண்டு எனப் பொருமினான்.

அதைப் பாண்டிய நாட்டில் அவனால் செய்யமுடியாது. இதனால் சோழநாட்டிற்கு சென்றபோது அவனுக்கு காலம் வாய்த்தது. தனக்கு விசுவாசமான சிலருடன் சோழதேசம் சென்றவன் இந்த ஆற்றாமையினை சொன்னபடியே சென்றான், அவன் மனம் பொறாமையாலும் ஆசையாலும் பற்றி எரிந்தது.

காஞ்சியினை அடைந்தவன் அந்த ஊரின் செழுமை, சோழனின் படைபலம், செல்வம், செல்வாக்கு, ஆளுமை என எல்லாம் கண்டு அதிசயித்தான்.

சோழனின் மகளைக் கண்டவன் அவள் அழகில் மயங்கினான், தன் அண்ணனுக்கு மணம் பேசிய பெண் எனும் அறம் அவனிடம் இல்லாமால் போனது.

மண்ணாசை கொண்ட அவன் இப்போது பெண்ணாசையில் மிதந்தான், அவனிடம் இருந்த அறம், விசுவாசம் சகோதரபாசமெல்லாம் அகன்றது.

நாடும் அவனுக்கு, அழகிய பெண்ணும் இன்னும் இன்னும் நிலமும் அவனுக்கா எனக் கொதித்தவன், மெல்ல மெல்ல காடுவெட்டி சோழனின் மனதை மாற்ற முயன்றான்.

இராஜேந்திரனை பற்றி மெல்ல மெல்ல அவதூறுகளை பரப்பினான்.

“சோழமன்னா நீர் சிவனருள் பெற்றவர், சிவனே உம்மை கோட்டைக் கதவினை திறந்து அழைத்துச் செல்லும் அளவு, உமக்காக சிவன் தன் லச்சினையினை பதிக்கும் அளவு சிவன் கருணை பெற்றவர், தனி வரமிக்கவர்.

அப்படியான நீர் மதுரை ஆலயத்துக்கு வர வேண்டும், அடிக்கடி சிவனை தரிசிக்க வேண்டும் என விருப்பம் கொண்டிருப்பது எல்லோரும் அறிந்தது, எமது தந்தையார் இருந்தவரை சிக்கல் இல்லை.

இராஜேந்திரன் காலத்திலும் அதை தொடர விரும்புகின்றீர் நல்லது. ஆனால், நீர் நினைப்பது போல் அவன் நல்லவன் அல்ல, சிவபக்தனும் அல்ல‌.

அவனுக்கு வஞ்சகம், தந்திரம் எல்லாம் தெரியும். உமது மகளை அவனுக்கு மணம் செய்து கொடுக்கும் வரைதான் அவன் அமைதிகாப்பான், பின் தன் சுயரூபம் காட்டுவான்.

உம் செல்ல மகள் எனும் துருப்பு சீட்டை வைத்து உம்மை மடக்குவான், சோழ தேசத்தை கைப்பற்றுவான், மெல்ல மெல்ல உம் சோழ வம்சத்தையே முடித்துவிடுவான், மணவுறவு என நீர் செய்யப்போவது உமது சோழ வம்சத்தையே முடிக்கும் காரியம், குலத்துக்கே கொள்ளிவைக்கப் போகின்றீர்.

சோழரே, உமக்கு பின் உம் வம்சம் இல்லாமல் போகும்படி, சோழநாடு பாண்டியருக்கு செல்லும்படி நீர் இந்த சம்பந்தம் பேசியிருக்கின்றீர் , எனக்கு இதனால் ஒன்றுமில்லை. பாண்டிய நாட்டின் வெறும் தளபதி நான், நாளையே அவன் உம்மை கொல்ல வேண்டும், உம் ராஜ்ஜியத்தை கைப்பற்ற வேண்டும் எனச் சொன்னால் நானேதான் வரவேண்டும், அவன் ஒருநாள் நிச்சயம் சொல்வான்.

ஆனால், நீர் சிவனருள் பெற்றவர் என்பதால் உண்மையினை உமக்கு சொல்வது எம் கடமை ” என்றான்.

அதுவரை சிவபக்தனாய் இருந்த காடுவெட்டி சோழன் அக்கணம் அரசனாய் சிந்தித்தான், அவனுக்குள் அச்ச உணர்வு மேலிட்டது. அதைவிட தான் சிவனருள் பெற்றவன், தனக்கு சிவன் எல்லா விதமும் துணையிருப்பார் என இயல்பான தைரியத்திலும் கர்வத்திலும் இருந்தான்.

அவனைப் பொறுத்தவரை அவன் செய்த மண உறவு பேச்சால் சோழநாட்டை பெரும் ஆபத்து சூழ்ந்ததாக அஞ்சினான், அந்த ஆபத்தை தானே சரிசெய்யவும் அவசரமானான்.

அதே நேரம் பாண்டிய நாட்டின் உறவும் அவனுக்கு அவசியம். அது அல்லாது சொக்கனை தரிசிக்க முடியாது.

இதுபற்றி ராஜசிம்மனிடமே ஆலோசித்தான். பிறந்தது முதல் அண்ணன் மேல் பொறாமையிலும், ஆட்சியின் மேல் பேராசையிலும் இருந்த இராஜசிம்மன் வாய்ப்பினை தவறவிடவில்லை.

“சோழரே, உமக்கு ஆபத்து பாண்டிய தேசத்தின் வடிவில் வரவில்லை, இராஜேந்திர பாண்டியன் என்பவன் உருவில் மட்டும் வந்திருக்கின்றது.

அவனை அகற்றிவிட்டு உமக்கு தோதான ஆட்சியினை ஸ்தாபித்துவிட்டால் போதும், பாண்டியநாடு உமக்கு நட்பாகிவிடும், அதன் பின் எந்த ஆபத்தும் உம்மை சூழாது, நீரும் எப்போதும் மதுரைக்கு வந்து செல்லலாம்” என ஆசைக்காட்டினான்.

சோழன் யோசித்தான், இராஜசிம்மன் வலையில் விழுந்தான்.

“இராஜசிம்மா, என் அருமை தெரிந்து எனக்காக இவ்வளவு விஷயங்களையும் சொன்னவன் நீ, நீயே என் நலம் விரும்பி, பாண்டிய ராஜ்ஜியத்தில் உனக்கும் பங்கு உண்டு அல்லவா? அதனால் நாம் இராஜேந்திரனை அகற்றிவிட்டு அரியணையினை கைப்பற்றிவிடலாம்.

நீயே பாண்டிய நாட்டின் மன்னனாக அமர்ந்துகொள், என் மகளையும் உனக்கே மணமுடித்து தருகின்றேன், நீ எனக்கு துரோகம் செய்யமாட்டாய் என நம்புகின்றேன்” என்றான்.

“சோழரே உமக்கு நன்றி, சிவனருள் பெற்ற உமக்கு யார் துரோகம் நினைக்க முடியும்? மதுரை ஆலயத்தின் சொக்கனால் தேர்ந்துகொள்ளப்பட்டவர் நீர், எம் தகப்பனின் ராஜ்ஜியம் எனக்கு கிடைத்தால் அதைவிட எனக்கு என்ன வேண்டும்? அந்த உதவியினை நீர் செய்தால் நான் எப்போதும் நன்றி மட்டும்தான் உடையனவாக இருக்கமுடியும்” என்றான்.

இருவர் மனமும் இராஜேந்திரனை ஒழிப்பதில் ஒன்றுபட்டது, தீவிரமாக ஆலோசித்தார்கள்.

ராஜசிம்மனுக்கும், பாண்டிய சேனையின் ரகசிய ஆதரவு இருந்தது, தளபதி எனும் வகையில் பலர் அவன் பக்கம் இருந்தார்கள்.

இதனால் பாண்டிய சேனையினை இரண்டாக உடைத்து ஒரு பங்கு சேனை சோழனிடம் வரும்படி வியூகம் வகுக்கப்பட்டு ரகசியம் காக்கப்பட்டது.

எல்லாம் சரியானதும், பெரும் படையோடு மதுரை நோக்கி கிளம்பினார்கள் காடுவெட்டி சோழனும், இராஜசிம்மனும்.

விஷயம் உளவாளிகள் மூலம் பாண்டிய தேசத்தை அடைந்தது. ஆனால், அது படையெடுப்பாக இருக்கமுடியாது ஏதும் மண சம்பந்தமாக இருக்கலாம். ஆனால், அதுவும் முறைப்படி அறிவிக்காமல் எப்படி சோழன் வருவான் என குழம்பிய இராஜேந்திரன் அவசரமாக செய்தி அனுப்பினான்.

“சோழமன்னரே, நீர் என்னிடம் வந்து மண உறவு பேசி நம்பவைத்தீர், நான் உம்மை நம்பினேன், அப்படியான நிலையில் நீர் படையெடுத்து வருவதெல்லாம் அதிர்ச்சி, போரை நிறுத்துங்கள், பேசலாம்” எனச் செய்தி அனுப்பினான்.

ஆனால், சோழன் அசையவில்லை, “இராஜேந்திரா இது உங்கள் குடும்பச் சண்டை, இராஜசிம்மன் என்னிடம் உதவி கோரினான், அவனுக்கு உதவுவதை தவிர வேறுவழியில்லை, இனி அவனை மதுரை மன்னனாக்க நான் முடிவு செய்துவிட்டேன், நீ அரியணை விட்டு விலகுவது உனக்கு நல்லது” என எச்சரித்தான்.

இராஜேந்திரன் அதிர்ந்தான், அதைவிட அதிர்ச்சியாக பாண்டிய சேனையில் பாதி ராஜசிம்மன் பக்கம் ஓடிற்று எனும் செய்தி வந்தது.

இனி தன்னால் ஏதும் ஆகாது, சோழனை இனி வெல்லும் சக்தியில்லை என்பதை அறிந்து சிவனிடமே அடைக்கலமானான்.

மன்னன் தனியே சென்று சொக்கன் சன்னதியில் கதறினான், “சிவனே, பாண்டியநாட்டின் காவலே நீர்தான், அந்தச் சோழனை அன்று இந்த மதுரைக்கு அழைத்து வந்ததே நீர்தான்.

இன்று அவன் இதே பாண்டியநாட்டை கைப்பற்றவருகின்றான், நீர் காட்டிய வழி இது, என் சேனையும் சகோதரனுமே அவனிடம் சென்றுவிட்டனர், இனி நான் வெல்லமுடியாது.

நான் ஒரு சிவனடியாராக இங்கே அமர்ந்துகொள்ள போகின்றேன், நீயே இனி என் காவல்” என அமர்ந்து கொண்டான்.

சொக்கனின் சன்னதியில் ஒரு அசரீரி ஒலித்தது “இராஜேந்திரா கலங்காதே. யுத்தத்திற்கு செல், போரிடுபவன் நாம், நீ வெறும் உருவம்”

பாண்டியன் இராஜேந்திரன் அதை ஏற்று அப்படியே யுத்த களத்துக்கு சென்றான். சோழனின் சேனை கடல் போல் பெருத்திருந்தது, புலிக்கொடியுடன் அது ஆர்ப்பரித்தது.

பாண்டியப்படைகள் மீன்கொடியுடன் நின்றன, அப்பக்கம் சோழன், இராஜசிம்மன் எனப் பெரிய பிம்பங்கள் இருந்தன‌.

இப்பக்கம் இராஜேந்திரன் தன் பிரதான தளபதிகளுடன் யானை மேல் அமர்ந்திருந்தான், யுத்த சங்கு ஒலித்ததும் மோதல் தொடங்கிற்று.

அந்த யுத்தம் கடுமையாக இருந்தது. இராஜசிம்மனின் குறி அண்ணன் இராஜேந்திரனாக இருந்தது, சோழன் காடுவெட்டி பெரும் மூர்க்கமாக இறங்கினான்.

சோழப்படையினரின் ஆவேச தாக்குதலில் பாண்டியப்படை திணறியது, இன்னும் ஒரிரு நாழிகைக்குள் போர் சோழன் வசம் சென்றுவிடும் எனும் நிலைக்கு களம் மாறிற்று.

பாண்டியப் படைகள் வேகமாக சரிக்கப்பட்டன, இராஜேந்திரனை தாக்கும் தொலைவுக்கு எதிரிப்படைகள் வந்திருந்தன‌.

இனி தோல்வி நிச்சயம் எனும் நிலையில் “சொக்கநாதா” எனக் கதறினான் இராஜேந்திரன், அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

பெரும் வெப்பம் களத்தில் வந்தது, அக்னி காற்று வீசிற்று. இரு பக்கமும் தாகம் எடுத்தது. சோழப்படைகள் தாகத்தால் இருந்த நீரையெல்லாம் காலி செய்தன. ஆனால் அக்னியின் தாக்கம் அதிகமாக இருந்தது.

சோழப்படைகள் நீரின்றி வாடத் தொடங்கின, அதே சிக்கல் பாண்டியருக்கும் வந்தது.

ஆனால், திடீரென பாண்டியர் படை நடுவே ஒருவன் பெரிய பெரிய பானைகளுடன் குதிர்கள் போன்ற பெரிய பானைகளுடன் தோன்றினான், சுற்றி கால்நட்டு பந்தலும் இட்டு கொண்டான்.

குவளை குவளையாக நீரை வாரி வாரி இறைத்தான், அந்த தண்ணீர் பந்தல் வந்ததும் பாண்டியப்படைகள் உற்சாகமாக போரிட்டன‌.

நீர் என்பது வீரர்களுக்கு மட்டுமல்ல, குதிரைகள், யானைகள் வண்டி இழுக்கும் எருதுகள் என களத்துக்கு அவசியம், பாண்டியருக்கு அதை அந்தப் பந்தல்காரன் கொடுத்தான்.

சோழப்படைகள் திணறின. அதே நேரம் எங்கிருந்தோ பெரிய சேனைகள் வந்துவிட்டதை போலவும், அவர்களை போல ஒரு சேனையினை முன்பின் கண்டதில்லை என்பது போலவும் சோழப்படைகள் திணறின‌.

அந்தப் புதுசேனையின் தாக்குதல் முன்பின் இல்லாத அளவு வித்தியாசமாய் இருந்தது. அவர்கள் கண்கள் செல்லும் வழியில் ஆயுதங்கள் பாய்ந்தன, துல்லியமாக பாய்ந்தன‌.

ஏற்கனவே தாகத்தால் வறண்டிருந்த சோழப்படைகள் அதற்குமேல் தாக்கு பிடிக்க முடியாமல் தடுமாறின, கடும் வெயிலும், தாகமும் அவர்களை வதைத்தன‌.

அவர்களின் யானைகளும் குதிரைகளும் சோர்ந்தன‌.

கடும் உஷ்ணம் அங்கே கவச உடைகள் அணிந்து போரிட்ட சோழபடைகள் அதை கழற்றிப்போட்டு மண்டியிட்டன. சோழப்படைகள் மண்டியிட்டதும் பாண்டிய படைகள் வேகமாக முன்னேறிச் சென்று இராஜசிம்மனையும், சோழன் காடுவெட்டியினையும் கைது செய்து யானைமேல் அமர்ந்திருந்த இராஜேந்திரன் முன் நிறுத்தினார்கள்.

போர் முடிந்தது. எல்லோரும் சரியான நேரம் தண்ணீர்பந்தல் கட்டி தாகம் தீர்த்த அந்த பந்தல்காரனை தேடினார்கள்; அங்கே பந்தலுமில்லை; மண்குடமுமில்லை; அவனுமில்லை.

அப்படியானால் வந்தது சிவன் என உணர்ந்து மன்னன் அங்கே மண்டியிட்டு தொழுதான், பிடிபட்ட பகைவர்களை யானைக் காலால் மிதித்து கொல்லும்படி மன்னனை கோரினார்கள் தளபதிகள்.

அதுவும் குலத்துரோகம், இராஜதுரோகம், சொந்த அண்ணனுக்கு துரோகம் எனச் செய்த இராஜசிம்மனை தலைவெட்டி கொல்ல அனுமதி கேட்டார்கள்.

பின் சொன்னான், “இது சிவன் நடத்திய யுத்தம், இந்த வெற்றி நம்மால் வந்ததல்ல. அதனால் முடிவினை சிவனே எடுக்கட்டும்” என அவர்களை விலங்கிட்டு சிவன் சன்னதிமுன் கொண்டு சென்றான்.

“சொக்கநாதா, உன் விருப்பபடி இனி நடக்கட்டும், நீயே எனக்கு உத்தரவிடு” எனப் பிரார்த்தித்தான்.

அப்போது அசரீரி கேட்டது, “பாண்டியா, நீயே உன் விருப்பபடி அவர்களை நடத்து, நாமே அவர்களை உம்மிடம் ஒப்படைத்தோம்” எனக் குரல் கேட்டது.

அக்குரலை எல்லோரும் கேட்டார்கள், இராஜசிம்மனும் காடுவெட்டி சோழனும் அதிர்ந்தே போனார்கள்.

இப்போது இவர்கள் தலைவிதி இராஜேந்திரன் கைகளில் இருந்தது, அவன் கண்களை மூடி சற்று நிதானித்துச் சொன்னான்.

பின் சொன்னான்.

“சோழனே, நீயும் சிவனடியார் நானும் சிவனடியார் ஒரே சிவனை வணங்குபவர்கள், அதுவும் நீ பெரும் விருப்பப்பட்டு, அதனால் சிவனே உனக்காக கோட்டை கதவை திறந்துவிட்டு வழிபடவைத்த மதுரையில் நிற்கின்றாய், உன்னை என்னால் கொல்லமுடியாது.

நீ தவறு செய்துவிட்டாய் அதை உணர்ந்து திருந்து, உன்னை நான் கொல்லப்போவதில்லை சிறையிடப் போவதுமில்லை , இப்போது உன் சோழநாடு என் வசம் என்றாலும் அதை எடுக்கப்போவதுமில்லை.

சிவனடியாரான நீ உன் நாட்டை எடுத்துக் கொண்டு போ, உனக்கு பரிசுகளும் தந்து அனுப்புகின்றேன், இனி இந்த போர் முயற்சியினை செய்யாதே” எனச் சொல்லி அவனுக்கு நீறுபூசி அனுப்பினான்.

பின் இராஜசிம்மனை நோக்கி சொன்னான், “நாம் ஒரே குடும்பம், ஒரே ரத்தம். இந்த அரசு உனக்கும் உண்டுதான். ஆனால், இது நமக்கானது அல்ல, இந்த மக்களுக்கானது.

அதுவும் இந்த பாண்டியநாட்டு சொக்கனுடையது, உனக்கு அரசு வேண்டுமென்றால் என்னை கேட்டிருக்கலாம். நாம் சொக்கனிடம் கேட்டிருக்கலாம். அதை விடுத்து நீ செய்தது ராஜதுரோகம், சிவபாதகம்.

அதனால் நீ இனி அரசகுடும்பத்தில் அரச நிர்வாகத்தில் இருக்க தகுதியற்றவன். உன் பலம் என அதைத்தானே கருதினாய். அது இனி இல்லை, நீ சாதாரண ஒருவனாக எங்காவது சென்று வாழ்ந்துகொள்” என அனுப்பினான்.

இப்படி ஆபத்து நீங்கப்பெற்ற இராஜேந்திரன் சகலமும் சிவனே என வாழ்ந்தான், சிவனுக்காக வாழ்ந்து பெருவாழ்வு வாழ்ந்து நிம்மதியான நிறைவான வாழ்வு வாழ்ந்து இறைபதம் சேர்ந்தான்.

இராஜேந்திரன் எனும் பாண்டிய மன்னனுக்காய் சிவனே வந்து தண்ணீர் பந்தல் வைத்து அவனை காத்த இந்த திருவிளையாடல்தான் “தண்ணீர் பந்தல் வைத்த படலம்”

இறைவன் தன்னை நம்பியவரை எக்காலமும் கைவிடுவதில்லை, சொக்கநாதன் தன்னை அண்டியோரை கைவிடவில்லை எனும் ஒரு தத்துவம் ஆழ சொல்லப்பட்டாலும் இந்தப் படலம் ஆழமான விவாததிற்குரிய ஒன்று.

காரணம், இருவருமே சிவபக்தி மிக்கவர்கள். அந்த சோழன் காடுவெட்டி சோழனை சிவனே மதுரைக்கு அழைத்துவந்து தன் முத்திரையினை கோட்டையில் பதித்தார்.

அந்த அளவு சிவனே வந்து வழிகாட்டிய பெருமை கொண்ட காடுவெட்டி சோழன் தன் அகந்தையால் அதை மறந்தான், இராஜசிம்மனின் துர்போதனையில் நிதானத்தை இழந்தான், என்ன ஆனாலும் சிவன் நம்மை கைவிடமாட்டார் எனும் நம்பிக்கை அவனுக்கு இல்லை.

மதுரை கோட்டையினை கடந்து ஆலயம் வரை அழைத்துச் சென்ற சிவன், இராஜேந்திர பாண்டியன் உண்மையிலே தனக்கு ஆபத்தாக மாறினாலும் சிவன் காப்பார் எனும் நம்பிக்கை அவனுக்கு இல்லை.

ஆம். சிவன் தனக்கு அனுக்கிரஹம் செய்யும்வரை அவரை நம்பியவன், வணங்கியவன் பின் சிவன் தான் எது செய்தாலும் துணை இருப்பார் என அவரை மறந்தான், சிவனை தன் நினைவில் இருந்து முக்கியமான நேரம் அகற்றிவிட்டான்.

அவன் அகந்தையும் ஆசையும் அச்சமும் அதை செய்யவைத்தது.

ஆனால், இராஜேந்திர பாண்டியன் அதை செய்யவில்லை. அவன் ஆபத்து என்றவுடன் சிவனைத்தான் சரணடைந்தான். இந்தச் சிக்கலில் சிவன் விருப்பத்தைத்தான் தேடினான், அவரை சரணடைந்து சிக்கென பிடித்துக் கொண்டான்.

சிவன் எது நியாயமோ எது தர்மமோ அதை செய்தார்.

தன் கோபத்தை அக்னி வடிவில் யுத்தகளத்தில் காட்டினார், தான் அக்னிபிம்பம் என்பதை காட்டி, தானே தலையில் கங்கையினை சூடியவன் என்பதையும் காட்டி பாண்டியர் தாகம் தீர்த்து வெற்றிபெற செய்தார்.

பாண்டியநாடு தாகத்தால் தவிக்கும் போதெல்லாம் கைகொடுப்பது சிவனின் வழமை. வைகை அப்படித்தான் உருவானது, அப்படி இப்போதும் வந்து தாகம் தீர்த்தார் சிவபெருமான்.

ஆம். யார் பாதிக்கபட்டாரோ அவருக்கு நீராகவும், யார் அக்கிரமம் செய்தாரோ அவருக்கு நெருப்பாகவும் வந்து தண்டித்தார் அந்தப் பரம்பொருள்.

இராஜேந்திர பாண்டியனின் மனதை சொக்கநாதர் அறிந்திருந்தார். இதனால் அவர் மனதின்படியே அவர்களை கையளித்தார்.

அவனும் சிவனில் கரைந்த அன்பே சிவம் எனும் கனிந்த மனத்தவனாக இருந்ததால் இருவரையும் கொல்லவில்லை, தண்டிப்பது மனிதகுணம், மன்னிப்பது தெய்வீகம் எனும் பெரிய பக்குவத்தில் இருந்தான்.

கவனியுங்கள், களத்தில் இருவர் பிடிபட்டதும் அவன் இருவரையும் கொல்லவில்லை. மாறாக, இந்த வெற்றி சிவனால் வந்தது, சிவனிடமே அவர்களுக்கான தண்டனை கிடைக்கட்டும், சிவனே களத்தில் வெற்றி தந்தவர் என்பதால் முடிவு அவரே எடுக்கட்டும் எனச் சொக்கன் சன்னதி முன் நிறுத்தினான்.

எந்த சன்னதியில் இருந்து “யுத்தம் செய், நான் இருக்கின்றேன்” என உத்தரவு வந்ததோ அந்த சன்னதியில் கொண்டு நிறுத்தினான்.

சிவன் அவன் உள்ளம் அறிந்தவர் அல்லவா? அவர் அங்கேயும் சோதித்தார் “உன் விருப்பபடி செய்”

இதுதான் உச்சகட்ட தேர்வு, மிக நுணுக்கமாக அந்த காடுவெட்டி சோழனை சிவன் மெல்ல அடித்த இடம்.

அதாவது சோழன் முன்பு சிவனை தரிசிக்க வந்தபோது எப்படி சிவன் ஆச்சரியமாக அவனை தரிசிக்க வைத்தாரோ, அந்த இடத்தில் அவன் கைதியாக சாவை எதிர்பார்க்கும் போது “என் அடியான் காடுவெட்டி சோழன்” எனச் சொல்லவில்லை.

“அவனை விடுவி” எனச் சொல்லவே இல்லை.

மாறாக, இராஜேந்திரன் மனம் எப்படிபட்டது என்பதை அவன் வாயாலே சொல்ல வைக்க “நீ விரும்பியதை செய்” என்றார்.

காடுவெட்டி சோழனின் அகங்காரம் அடிபட்டு போன இடம் இதுதான். எந்த சிவன் தன் காவல், தன் பலம், தன் பெருமை என நினைந்தானோ அந்த சிவம் இராஜேந்திரனிடம் தன்னை ஒப்படைத்துவிட்டதை அறிந்து கலங்கினான்.

ஆனால், இராஜேந்திரன் மனம் அறிந்துதான் சிவன் அவனை அவனிடம் ஒப்படைத்தார், அதை அவன் அறியவில்லை.

இராஜேந்திரனும் மிக மிக பக்குவமாக காடுவெட்டி சோழனை ஒரு அடியாராக சிவபக்தராக கருதி , பரிசுகளெல்லாம் கொடுத்து நாட்டையும் கொடுத்து மன்னனாக திருப்பி அனுப்பினான்.

“அன்பே சிவம்” , சிவனில் கலந்த மனம் யாரையும் கொல்லாது, யாரையும் காயப்படுத்தாது எனக் காட்டினான் இராஜேந்திர பாண்டியன்.

ஆக, இந்த திருவிளையாடல் சொல்லும் பாடம் இதுதான்.

சிவம் என்பது அன்பிற்கு கட்டுப்பட்டு உண்மையான பக்திக்கு கட்டுப்பட்டு வரும். ஆனால், அந்த சிவனருள் கிடைத்த மமதையில் அடாதன செய்தால் அது நிச்சயம் தண்டித்து திருத்தும்.

ஆம். சிவன் தன் அடியார் வழிதவறினால் அகங்காரத்தில் அலைந்தால் அழிப்பதில்லை, கொல்வதில்லை மாறாக தண்டித்து திருத்தும்.

சிவம் தன்னிடம் அடைக்கலமானவனை எப்படி காக்கவேண்டுமோ, எந்நிலையில் எப்படி கண்ணின் மணிபோல் காத்துவரவேண்டுமோ அப்படி காத்துவரும், மகா அற்புதமாக காத்துவரும்.

ஒருவன் மனநிலை அறிந்து, உள்ளம் அறிந்து அவனுக்கு சிவம் கருணைகாட்டும், இராஜேந்திர பாண்டியனின் மனம் அறிந்ததால் அவன் எப்படியானவன் எவ்வளவு இரக்கமும் அன்பும் கொண்டவன், தன் கடமையில் சரியாக இருப்பவன் என்பதை உணர்ந்துதான் அவனுக்கு அவ்வளவு பெரிய உதவியினை செய்து சிவன் தாங்கிக் கொண்டார்.

ஆம். சிவனருள் பெற்றுவிட்டால் ஆடக் கூடாது, சிவனருள் இல்லை எனக் கலங்கவும் கூடாது, தன் பக்தராயினும் அகங்காரிக்கு சிவனருள் கிடைப்பதில்லை.

முன்பின் தன்னை வெளிகாட்டவில்லை என்றாலும் ஒவ்வொருவரையும் தன் முன்னால் வரும் ஒவ்வொருவரையும் சிவன் பார்த்துக்கொண்டே இருக்கின்றார், யாருக்கு எப்போது எது அவசியமோ அதை அந்த நேரம் வரும் போது அருள்கின்றார்.

இராஜ்ஜியம் காக்க சிவனை அண்டிய இராஜேந்திரன் வாழ்ந்தான், தன்னால் முடியும் என குறுக்குவழியில் முயன்ற இராஜசிம்மன் இருந்ததையும் இழந்தான்.

தான் சிவனால் கொண்டாடப்பட்டவன் எனும் கர்வத்தில் சிவனை மறந்த சோழன் பெரும் இன்னலில் சிக்கி அதே சிவன் கருணையால் உயிர்பிழைத்தான்.

ஆக, சிவன் யாராயிருந்தாலும் அகங்காரத்தை வெறுக்கின்றார் என்பதும், சிவனருள் கிடைத்ததை வைத்து அக்கிரமம் செய்தால் சிவனுக்கு பொறுக்காது என்பதும் தெரிகின்றது.

சிவன் தன்னை அண்டியோர் மனம் ஒன்றையே பார்க்கின்றார், அந்த மனம் எப்படி இருக்குமோ அதைக் கொண்டே அருள்புரிகின்றார், சிவனை முழுமனதுடன், முழு அர்ப்பணிப்புடன், முழு ஆத்மசுத்தியுடன் சரணடைந்தவர் எக்காலமும் வீழ்வதில்லை என்பதை இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது.

சிவனிடம் நீங்கள் வேண்டுதலோடு சென்றிருக்கலாம், அந்த வேண்டுதல் பலித்திருக்கலாம், அந்த‌ மமதையில் சிவன் எப்போதும் நம்மோடு எனும் அகங்காரம் கொள்ளக் கூடாது.

சிவன் எல்லோருக்கும் பொதுவானவர். அவர் விருப்பப்படி அவர் ஒவ்வொருவரையும் நடத்துவார் என்பதை அறிந்து, நமக்கு எது தேவையோ அதை சிவனிடமே கேட்க வேண்டும், நமக்கு எது சரியோ, எது அவசியமோ அதை சிவனே தருவார்.

எது நமக்கு தரவேண்டும் என்பதை சிவனே அறிவார் என்பதையும் இந்தக் காட்சி போதிக்கின்றது.

மதுரை சொக்கநாதர் சன்னதிக்கு செல்லும் போது இந்த இருவர் மனதையும் நினைத்து பார்த்து வேண்டுங்கள்; முழுக்க சரணடைந்து வேண்டுங்கள். எது உங்களுக்கு தேவையோ, எது உங்கள் கர்மாவோ, எது உங்களுக்கு சரியானதோ, அதை சிவன் உரிய நேரம் தருவார், அவரே காத்து நடத்தியும் தருவார்.

மிக முக்கியமான விஷயம், சிவனை வணங்குவோருக்குள் சர்ச்சை வந்தால் சிவனிடமேதான் செல்லவேண்டும். அவர் எல்லோருக்கும் பொதுவான தெய்வம், தாய்போல் எல்லா பிள்ளைகளுக்கும் ஒரே மாதிரியானவர். ஆனால், எது சரியோ அதை நியாயமான தாயாக செய்வார், எது சரியில்லையோ அப்பக்கம் அன்பான தாயாக கண்டித்து திருத்துவார். இது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் : 14 இரசவாதம் செய்த படலம்.

மதுரைக்கு அருகில் இருக்கும் ஊர் திருப்புவனம், அன்றே அந்த ஊர் பிரசித்தியாய் இருந்தது. அங்கே பாண்டிய மன்னனுக்கு ஆயுதம் தயாரிக்கும் தொழில் அதிகம் இருந்தது. பலவகையான படைகலன்கள் செய்தார்கள், கலன்கள் மட்டுமல்ல விவசாய கலப்பைகள், மண்வெட்டிகள் என எல்லா இரும்புசார் உலோகம்சார் தொழில்களெல்லாம் சிறந்து விளங்கின‌.

அந்த ஊரின் சிவபெருமான் பெயர் புஷ்பவனேஸ்வரர், அன்னை சௌந்திரநாயகி. இந்த புஷ்பம் எனும் வடமொழி சொல்லுக்கு பூ எனப் பெயர், இந்தச் சிவனுக்கு பூவாணன் எனும் பெயரும் உண்டு.

ஆம். இங்கு பாரிஜாத பூவே சிவலிங்கமாக மாறியதால் இந்த சிவனுக்கு பூவண்ணன் எனப் பெயர், திருப்பூவண்ணன், திருப்பூவணம் என்பது திரிந்து திருப்புவனம் என்றாயிற்று.

இந்த ஆலயம் தேவாரம் பாடப்பட்ட‌ தலம். பாண்டிய நாட்டு தலங்களில் சைவ குரவர்கள் மூவராலும் பாடப்பட்ட தலம் இது. மதுரைக்கு சமணத்தை கருவறுக்க வந்த சம்பந்த பெருமான் இங்கு வந்து பாடிதொழுதபின்பே மதுரைக்குச் சென்றார்.

“மாதமர் மேனிய
னாகி வண்டொடு
போதமர் பொழிலணி
பூவ ணத்துறை
வேதனை விரவலர்
அரணம் மூன்றெய்த
நாதனை யடிதொழ
நன்மை யாகுமே.”

என்பது அவர் பாடிய பாடல். இங்கிருந்து அவர் மதுரைக்கு செல்ல ஆற்றை கடக்கும் போதுதான் அங்கிருந்த மணல் மூட்டைகளெல்லாம் அவருக்கு சிவலிங்கமாக காட்சியளித்தன, அப்படியான இந்தத் தலம் மிகப் பிரசித்தியானது.

பார்வதி சிவனை அடைய தவமிருந்த இடமும் இதுதான்.

இந்தத் திருப்புவனம் பாண்டிய மன்னர்களின் ஆட்சியில் சீரும் சிறப்புமாக இருந்தது. அந்த புஷ்பவனேஸ்வரர் ஆலயம் எல்லா வகையிலும் ஒரு குறையில்லா ஆலயமாக நாலுகால பூஜையுமாக பிரகாசித்துக் கொண்டிருந்தது.

அந்த ஆலயத்தில் எல்லா வகை பணியாளர்களும், அர்ச்சகர்களும், சாஸ்திரிகளும், சேவையாளர்களும் இருந்தார்கள். மேளதாள குழு இருந்தது. அப்படியே தேவதாசிகளும் இருந்தார்கள்.

அவர்களில் ஒருத்தி பொன்னையாள்.

தேவதாசி என்றால் இங்கு ஆழமாக புரிந்து கொள்ள வேண்டும். தாசி என்றால் அடிமை. தேவதாசி என்றால் அவள் ஆலயம் வாழும் தெய்வத்துக்கு மட்டும் அடிமை, வேறு யாரும் அவளைக் கட்டுப்படுத்த முடியாது, உத்தரவிட முடியாது.

இந்துமதம் மிக மிக ஞானமான மதம், அது உளவியல், உடலியல், ஆன்மீக‌ தத்துவங்களில் அன்றே பெரும் ஞானம் பெற்று அதை மக்களுக்கும் கொடுத்தது.

நடனம் எனும் விஷயத்தால் பல நன்மைகளை ஒரே இடத்தில் கொடுத்தது.

முதலில் நடனம் என்பதை அது வழிபாடாக செய்தது. ஞான தத்துவம் புராண காட்சிகளை வார்த்தையால் சொல்வது உபன்யாசம் என்றால் அதை நடனமாக அபிநயங்களில் செய்வது நடனம்.

அசையும் காட்சிகளை கண்டால் மானிட மனதுக்கு இறுக்கம் குறையும், இதனாலே ஆலய குளத்தில் மீன்களுக்கு பொரியிடுதல் பறவைக்கு மாடுகளுக்கு உணவிடுதல் என அசையும் காட்சிகளை காணச் சொன்னார்கள்.

சாமிக்கு அபிஷேகம், கற்பூர காட்சி எல்லாம் அதுதான், தேர் இழுக்கும் வகையும் அதுதான்.

அசையும் விஷயத்தை கண்டால் மனம் சீராகும் என்பது உளவியல். அதை நடனத்தை காணச் சொல்லி அந்த சீரான மனதில் நடன காட்சி மூலம் பக்தி வளர்த்தார்கள். இறைசிந்தனை, இறைபாடல்கள், புராண காட்சிகள் தவிர தேவதாசிகள் வேறு நடனம் கனவிலும் நினைப்பதில்லை.

இந்த நடனத்தின் இன்னொரு மிக முக்கிய சூட்சுமம் யோகம், 108 கர்ணங்களை வடிவமாக கொண்டதுதான் பரதம், யோகப்படிநிலைளை அப்படியே போதிக்கும் கலை அது.

பக்தர்களை சதா வழிபாடு, உபன்யாசம் என வைத்திருக்காமல் கொஞ்சம் தளர்வாக இசை நடனம் எனத் திசைதிருப்பி அங்கும் இந்துஞானதத்துவம், புராணம் என நடனத்தில் திருப்பியது இந்துமதம்.

அப்படி நடனம், பாடல் என கலைகளில் தேர்ந்து முழுக்க ஆலயத்துக்கே நடனம், பாடல், ஆடல் என வாழ்ந்திருப்பவர் தேவதாசிகள்.

தேவதாசி வேறு. கணிகையர் வேறு.

கோவிலில் ஆடும் தேவதாசிகள் வேறு, மாதவி வேறு.

அப்பெண்கள் தெய்வத்துக்கு சமமாக மதிக்கப்பட்டனர். கொண்டாடப்பட்டனர். ஆலயத்தில் பூ அலங்காரம், சுத்தப்படுத்துதல், பாடல், இசை உட்பட எல்லா வேலைகளையும் அவர்களே செய்தனர்.

மன்னன் ஆட்சி வரை சிக்கல் இல்லை.

மன்னர்கள் சரிய ஆரம்பித்ததும் தேவதாசிகளின் வாழ்வு சரிந்தது. புனிதமான அந்த நதி சாக்கடையில் கலந்து என்னமோ நடந்தேறிற்று. அது இந்து மன்னர்கள் வீழ்ந்து, இந்து தர்மம் சரிந்ததால் வந்த சிக்கலே அன்றி தேவதாசி முறையின் சிக்கல் அல்ல‌.

அந்தப் பெண்கள் தேவர் அடியார்கள் என அழைக்கப்பட்டனர், ஒரு காலத்தில் மிக உயர்வாக வணங்கப்பட்டவர்கள் அவர்கள்.
இராஜராஜ சோழனின் தஞ்சை கோவிலில் ஏராளமான பெண்கள் அப்படி இருந்ததாக வரலாறு சொல்கின்றது. ஜடாவர்ம சுந்தரபாண்டியன் காலத்தில் மதுரையில் ஆயிரக்கணக்கான தேவதாசிகள் இருந்து பணி செய்ததை வரலாறு சொல்கின்றது.

ஆலயத்தை பராமரிப்பது, பூச்சரங்களை தொடுப்பது என மிக உன்னதப் பணிகளை அவர்கள் செய்துவந்தனர்.
வழிபடுதல், ஆடல் கலைகளில் கடவுளை வணங்குதல் என மிகப்பெரும் பணிகளை செய்தவர்கள். சமூகத்தில் அவர்களுக்கான இடம் மிக உயர்வாய் இருந்தது.

மன்னன் அவர்களை தொடுவதில்லை மாறாக வணங்கினான், மன்னனுக்கு தனியாக அந்தப்புரம் எனும் இடம் இருந்தது.

இந்து மன்னர்கள் காலம் வீழ்ந்து அந்நிய ஆட்சி அட்டகாசம் ஆரம்பித்த காலத்தில் சர்ச்சைகள் தொடங்கின‌.

இந்து மன்னர்கள் கோலோச்சி இந்துமதம் வாழ்ந்த காலத்தில் தேவதாசிகள் பெரும் இடத்தில் மரியாதையாக இருந்தார்கள்.

அப்படியான தேவதாசிகளில் ஒருத்தியான பொன்னையாள் சிறந்த நடனக்காரி, புஷ்பவனேஸ்வரர் கோவிலில் அர்ச்சகர், மேளக்காரர் போல அவளும் ஆடல்பாடல் சேவகியாக இருந்து தொண்டாற்றி வந்தாள்.

அவள் மிகப்பெரிய சிவபக்தை, அவளுக்கு எல்லாப் பணியாளர்களையும் போல அரசன் கூலி கொடுப்பான், அதுபோக அங்கங்கே கச்சேரிகள், நடனங்களை, பக்திபாடல்களை பாடுவாள். திருபுவனத்திற்கு இரும்புக் கருவிகள் வாங்க வருவோர் இன்னும் தொழிலாளர்களெல்லாம் அதனை மாலை பொழுதுகளில் கேட்டு பார்த்து மகிழ்வர்.

அனுதினமும் கோவிலுக்கு செல்லமுடியாதவர்களை இப்படி மாலை பொழுதில் இறைசிந்தனையில் மகிழ்விப்பதில் அவளுக்கோர் நிறைவு.

நடனங்களில் சிவநடனம், நார்த்தகம் இன்னும் சக்தி நடனமெல்லாம் ஆடி அவள் இறைப்பணி செய்துவந்தாள்.

அவளின் பணி அசாத்தியமானது. காலையில் ஆலயம் சென்று வணங்கி கொஞ்சநேரம் நடனமிட்டு வழிபடுவாள், பின் வீடு வந்து பூஜைகளை முடித்துவிட்டு பயிற்சியில் ஈடுபடுவாள்.

மாலையில் ஆலயத்தில் ஆடிவிட்டு வந்து பின் இரவில் தன் வருமானம் நிமித்தம் மீண்டும் நீண்ட இரவுகளில் பாடலும் ஆடலுமாக பம்பரமாக சுழலுவாள்.

அவளுக்கு அரசன் கொடுக்கும் மானியம் போதவில்லை. மேலும் அவள் ஆடிப்பாடி சம்பாதிக்கும் வருமானமும் போதவில்லை. காரணம், அவள் வீட்டில் எப்போதும் சிவனடியார்களுக்கு அன்னதானம் நடைபெற்றுக்கொண்டே இருக்கும்.

மதுரைக்கு வரும் சிவனடியார்கள் இராமேஸ்வரம் செல்ல பயணிக்கும் போது, சிவங்கை இராமேஸ்வரம் எனச் செல்லும் போது இங்கே பசியாறுவார்கள், அவள் அவர்களுக்கு உணவு படைத்து பசியாற்றி வந்தாள். அவளின் வருமானம் இதற்கே போதவில்லை.

கோவிலில் பணிசெய்யும் தூயமகள் எனும் வகையில் அடியார்கள் அவள் வீட்டுக்கே ஓடிவந்து உண்பதில் விருப்பமாயிருந்தனர், அவள் இடும் அன்னத்தில் அவ்வளவு பக்தி இருந்தது.

எல்லாம் இறைவனுக்கே, தன்னை படைத்த இறைவனுக்கு தன்னிடம் இருப்பது எல்லாமே என்பதில் அவள் மிகக் கவனமாக இருந்தாள். அடியார்க்கு செய்யும் தொண்டு ஆண்டவனுக்கு என்பது அவளின் அசைக்கமுடியா நம்பிக்கை.

தனக்கென ஒரு குடும்பமின்றி, சொந்தமின்றி தானும் சிவனும் தனக்கான பணிப்பெண்கள் சிலருமாய் வாழ்ந்தாள்.

பணிப்பெண்கள் என்றால் ஆடல் பாடல்களில் இருப்பவள் தனியே இருந்துவிட முடியாது, கருவிகள் இசைக்க, ராகமிசைக்க இன்னும் இதர தேவைகளுக்கு சிலர் அவசியம், அவள் நிலை அப்படி.

இதனால் எல்லா வருமானமும் அவள் குழுவுக்கும் அன்னமிட்டு திருப்பணி செய்யும் காரியத்துக்குமே சென்றுக் கொண்டிருந்தது.

அவளுக்கு ஒரு பெரும் கனவு இருந்தது. அவள் வாழ்வின் ஒரே ஆசையாக அதைத்தான் கொண்டிருந்தாள். ஒரு இடத்தில் கூட, ஒரு நொடி கூட தனக்காக வாழாமல் தன் வருமானமெல்லாம் சிவனடியார்களுக்கு சிவனுக்கு என வாரி வாரி இறைத்தவள், சிவனுக்காய் வாழ்கின்றேன், என் கலை எல்லாம் சிவனுக்கே என வாழ்ந்தவள் இறைவனுக்கு பொன்னால் ஆன சிலை, முழு பொன்னால் ஆன சிலை ஒன்றை செய்ய விரும்பினாள்.

தங்கம் எப்போதுமே விலை உயர்ந்தது, அக்காலத்திலும் அது விலை மிக மிக உயர்ந்தது, அதனால் தங்கத்தில் சிலை என்பது அரசனுக்கும் மாபெரும் செல்வந்தர்களுக்குமே சாத்தியம்.

அவளை போல ஆலயத்தில் அரச மானியம் பெறுவோர்க்கு சாத்தியமில்லை.‌ அதுவும் இப்படி சிவனடியார்களுக்கே எல்லாம் செலவழித்துவிட்டு தனக்கு ஒன்றுமில்லாமல் இருப்பவளுக்கு அது வாய்ப்பே இல்லாதது.

ஆனாலும் நம்பினாள். ஏதோ ஒரு இடத்தில் செல்வம் சேர்த்து பொன்னால் ஒரு திருமேனி இறைவனுக்கு செய்து வைத்து மகிழலாம் என நம்பினாள்.

இளமையில் எல்லோருக்கும் எல்லா நம்பிக்கையும் இருக்கும், வயது ஏற ஏறத்தான் உண்மை நிலையும் எது சாத்தியம் என்பதும் தெரியவரும்.

அவள் தன்னால் அது முடியும் என நம்பினாள், இரவு பகலாக ஆடினாள் பாடினாள். முடிந்தவரை கடும் பாடுபட்டு உண்ணாமல் உறங்காமல் சிவப்பணி, சிவனடியார் பணி, ஆடல் பாடல் என எவ்வளவோ செய்து பார்த்தாள்.

சல்லிபொன் தேறவில்லை.

கொஞ்சம் கொஞ்சமாக மனம் நொந்தவள், அலங்காரம் செய்கையில் காதோரம் ஒரு முடி வெண்மை அடைவதை கண்டாள் அவள் நெஞ்சம் விம்மிற்று.

தனக்கு வயதாகின்றது என்பதை உணர்ந்தாள் அதுபற்றி அவள் கவலைப்படவில்லை, அவள் கவலையெல்லாம் தன் பெரும் கனவும் ஒரே கனவுமான சிவனுக்கு பொற்சிலை அமைக்காமல் போய்விடுமோ என்பது.

நடனக்காரிகள் வயது இருக்கும் வரைதான் ஆடமுடியும், குறிப்பிட்ட காலத்துக்கு பின் சுறுசுறுப்பு போகும், அழகு போகும், அதோடு வருமானமும் போகும்.

பருவத்திலே சேர்த்துவைத்துவிட்டு பிற்காலத்தில் நிம்மதியாக வாழவேண்டிய நிர்பந்தம் அவர்களுடையது.

தேவதாசிகளுக்கு குடும்பமில்லை. கடைசி காலத்தில் உணவும் உடையும் மட்டும் கிடைக்கும். இளம் தேவதாசிகளுக்கு பயிற்சி அளிக்க வழிகாட்ட பணிக்கப்படுவார்கள். அங்கே பொற்சிலை எல்லாம் அவ்வளவு பணம் சேர்ப்பதெல்லாம் வாய்ப்பே இல்லை.

கோவிலில் தவில் வித்வான், நாதஸ்வர வித்வான் போல ஒரு பணியினை செய்தவளுக்கு அந்த பொன்னால் ஆன சிலை என்பதெல்லாம் பெரும் கனவு. அதற்கான பொன் அல்ல, அச்சிலை செய்ய பொற்கொல்லனுக்கு கொடுக்கும் கூலியினை கூட அவளால் திரட்ட முடியாது.

இதனால் கலங்கத் தொடங்கினாள், அவள் கவலை அதிகமானது. அந்த கவலையிலும் சிவனுக்கான தன் பணி ஒன்றுவிடாமல் செய்தாள். தன் அன்றாட நடனம், இதர நிகழ்வுகள் அதனால் சிவனடியார்க்கு இடப்படும் அன்னம் என எல்லாமே குறைவின்றி நடந்தது.

குறை அவள் மனதில் இருந்தது. அது பெரிய கவலையானது.

அவள் கண்ணீரை சிவன் மட்டுமே அறிந்தார், அவளும் அவரிடம் மட்டுமே அழுதாள்.

‘பொன்னார் மேனியனே” எனத் தான்பாடும் சிவனுக்கு தங்கத்தில் சிலை செய்ய முடியவில்லையே, பொற்சபையில் ஆடும் நாயகனுக்கு தங்கத்தில் சிலை செய்ய முடியவில்லையே எனும் பெரும் கவலை அவளுக்கு இருந்தது.

தனக்கு கலை கொடுத்து வாழவைத்த சிவனுக்கு ஒரு தங்க சிலை செய்து அழகு பார்க்க வேண்டும் என்ற ஆசை கவலையாகி, கவலை ஏக்கமாகி அவள் ஆளே மாறிப்போனாள்.

அவள் கவலையினை யாரிடம் சொல்வது என்பதும், சொன்னாலும் தீர்வில்லை என்பதும் அறிந்தவள் மிகுந்த குழப்பத்திலே தன் கடமையைச் செய்துவந்தாள்.

அன்று ஒரு திருவாதிரை நாளாக இருந்தது, வழமை போல் அடியார்களுக்கு உணவிடும் காரியம் நடந்துக் கொண்டிருந்தது.

வீட்டின் மூலையில் தன் எண்ணம் நினைந்து ஏங்கியபடி திருப்புவனநாதரையும், அவருக்கான தங்கச் சிலையினையும் நினைந்து அவள் வருந்தியபோது அங்கே ஒரு அடியார் பைராகி கோலத்தில் வந்தார்.

தலையில் ஜடாமுடி, கழுத்திலே கபால மாலைகள், எலும்பு தொங்கும் மாலை, உடலெல்லாம் சுடலைப் பொடி, அரையிலே மட்டும் தோல் ஆடை என அணிந்து வந்தார்.

அவரின் கோலம் அச்சமூட்டுவதாய் இருந்தது, “இங்கே சிவனடியார்க்கு அன்னமிடும் இடம் எங்கே?” எனக் கேட்டார், பணியாளர்கள் அந்த இடத்தை பயபக்தியாய் காட்டினார்கள்.

அங்கே சென்று எல்லோரையும் ஒரு பார்வை பார்த்தவர், அந்த வீட்டை பார்த்தவர், வீட்டின் தாழ்வாரத்தின் ஓரமாக அமர்ந்து கொண்டார்.

அவர் ஏதோ பூஜையில் இருக்கின்றார் என முதலில் யாரும் கண்டுகொள்ளவில்லை. ஆனால், அதிக நேரமாக அப்படியே இருந்தார், கடைசிவரை பந்திக்கு வரவில்லை.

யாராவது அழைத்தால் ஒரு பார்வை பார்ப்பார், அவர்கள் பின்நகர்ந்துவிடுவார்கள், பின் அவர் போக்கில் அமர்ந்து ஏதோ முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

அவர் பைரவ கோலம் என்பதால் எல்லோர்க்கும் ஒரு அச்சம் இருந்தது, நெடுநேரமாகியும் அவர் எழவில்லை என்பதால் விஷயம் பொன்னையாள் காதுக்குச் சென்றது.

அவள் வந்து “சுவாமி தாங்கள் யார்? ஏன் உண்ணாமல் இருக்கின்றீர்கள்? இங்கு சைவ உணவுதான் உண்டு, நீங்கள் பைரவ சாயல் என்பதால் வேறு உணவு எதிர்பார்க்கின்றீர்களோ தெரியவில்லை, என்ன குறை இருந்தாலும் சொல்லுங்கள் “

அவர் ஓங்கி சிரித்து சொன்னார், “குறையா, அது இருப்பது என்னிடமா உன் மனத்தினிலா?”

அவள் அதிர்ந்து பார்த்தாள், “உன்னிடம் பேசவேண்டும்” என்றார் அடியார், அவள் குறிப்பறிந்து பணியாட்கள் விலகிச் சென்றார்கள்.

அவளை உற்றுபார்த்த அடியார் சொன்னார், “நான் முன்பும் வந்திருக்கின்றேன், அப்பொதெல்லாம் உன் முகம் மலர்ந்திருக்கும், உடலும் நல்ல தோற்றமாயிருக்கும்.

இப்போது உன் முகம் வாடிவிட்டது, கண்களின் கீழ் கருவளையம் விழுந்திருக்கின்றது, உடல் மெலிந்திருக்கின்றது, இது உன் பணியால் வந்த சோர்வு அல்ல. பணியால் ஒருவர் எவ்வளவு சோர்ந்தாலும் கண்ணும் முகமும் பிரகாசமாயிருக்கும்.

ஆனால், இப்போது உன் கண்கள் ஒளியிழந்தன; முகமோ வாடிவிட்டது; நெஞ்சத்தில் மிகுந்த கவலை கண்களில் தெரிகின்றது. அப்படி என்ன கவலை, நான் கொஞ்சம் மருத்துவம் அறிவேன், உனக்கு உடல்நிலை ஏதும் சரியில்லை என்றால் தீர்த்துவைப்பேன், அதற்கு மேலும் கவலை என்றால் சிவனே பார்த்துக் கொள்ள பிரார்த்திப்பேன், அடியாருக்கு தாய்போல் அன்னமிடும் உன் கவலையும் தீரவேண்டுமல்லவா?

அன்னமிடுபவள் மனதில் கவலையோடு இருந்தால் எப்படி அடியார்க்கு தாங்கும்?”

அந்த வார்த்தையினை கேட்டதும் அவள் மனமுடைந்தாள், உண்மையில் அப்படி விசாரிக்க கூட யாருமற்றவளாக அவள் வாழ்வு இருந்தது.

அவள் பொங்கி வந்த கண்ணீரை அடக்கிக் கொண்டு கேட்டாள், “சாமி எந்த ஊர்காரர், என் மேல் இவ்வளவு அன்பு கொண்ட அடியார் வந்திருப்பது என் பாக்கியம்”

“தாயே நான் மதுரைவாசி, அங்கேதான் சுற்றிக்கொண்டிருப்பேன், சில பயணங்கள் நிமித்தம் இங்கு வந்தேன், சிவன்மேல் அன்பு கொண்டவர்களை காண்பதும், அவன் புகழ் பாடுவதும், பேசுவதுமன்றி என்ன அறிந்தவன் நான்.

சொல்லம்மா உன் கவலை என்ன?”

அதுவரை யாரிடமும் சொல்லாதவள், எல்லாம் தன்னால் முடியும் எனப் பெரும் நம்பிக்கை கொண்டவள் அந்த நம்பிக்கை சிதறிச் சொன்னாள்.

“சுவாமி, எனக்கு பெரும் ஆசை உண்டு, இளம்வயதில் இருந்தே அதுதான் ஆசை. எனக்கு யார் வாழ்வளித்தாரோ, யார் அவர் சன்னதியில் எனக்கு அனுதினமும் ஆட அனுமதித்தாரோ அவருக்கு உற்சவர் சிலையினை தங்கத்தில் செய்தாக வேண்டும்.

அதற்குத்தான் இவ்வளவுகாலம் போராடினேன். ஆனால், ஒரு துளி தங்கம் வாங்கவும் முடியவில்லை. என் ஆசை நிறைவேறுவதாக தெரியவில்லை, அதுதான் கவலை, இதனை நான் யாரிடம் சொல்லமுடியும்? குருவிக்கு அதன் அலகில் கொத்துவதைத்தானே கொத்தமுடியும்?” என்றவள் கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.

“சிவன் மேல் அவ்வளவு அன்பா? இந்தத் தங்கம் கிடைத்தால் என்னென்ன செய்வாய்?” என மீண்டும் கேட்டார்.

“இதென்ன கேள்வி சுவாமி, அவ்வளவு தங்கம் கிடைத்தால் அத்தனையும் சிலையாய் செய்வேன், செய் கூலி என கொல்லனுக்கு மட்டும் கொஞ்சம் கொடுப்பேன், காரணம் கூலிக்கு கொடுக்க கூட பணமில்லை.

அப்படியா?

ஆமாம்.

உனக்காக வேண்டாமா, நகைகள் வேண்டாமா, எல்லா தங்கமும் சிலைக்கா?

எனக்கென என்று சுவாமி நான் வாழ்ந்தேன், எனக்குத் தேவை உணவும் உடையும், தங்குவது கூட ஆலய வாசலில் தங்கிவிடலாம், வீடும் பெரிதல்ல‌.

என் காலத்தில் நான் எந்த திருப்புவனம் ஆலயத்தில் வழிபட்டேனோ அங்கே தங்கத்தில் ஒரு உற்சவரை பார்த்துவிட வேண்டும் அது போதும் எனக்கென என்ன வேண்டும்?

இதை நீ மன்னனிடமே கேட்கலாமே?

சுவாமி மன்னன் எல்லோருக்கும் பொதுவானவன், இங்கே மட்டும் சிலை என சாதாரண தேவதாசி நான் எப்படி கேட்க முடியும், அதுவும் தேவதாசிகள் இறைவனுக்கு அடிமை, அரசனும் தெய்வமும் ஒன்று அல்லவா? நான் அவரிடம் எப்படி கேட்க முடியும், அப்படி ஒரு உரிமையில் கேட்டால் இந்த உலகம் என்ன உரிமை எனச் சொல்லும்?

வேறு செல்வந்தர்கள்?

கொட்டி தருவார்கள்தான். ஆனால், யார் பக்தியில் தருவார்கள்? பதிலுக்கு ஏதும் கேட்டால் என் நிலை என்னாகும்?

ஆமாம். அதுவும் சரிதான்.

இனி நான் என்ன செய்யட்டும் சுவாமி, சிவனைத் தவிர என் நிலை யாருக்கும் புரியாது”

சொன்னவள் கண்ணீர் விட்டாள், அவள் கண்ணீரை கண்டதும் சுவாமி சொன்னார்.

“சிவனடியார்க்கு அன்னமிட்டவளே, நீ அழக்கூடாது, எனக்கு இரசவாதம் தெரியும், உனக்கு தங்கம்தானே வேண்டும், இன்றுமாலை நான் உபாயம் சொல்வேன், இப்போது திருப்புவனநாதரை வழிபட்டு வருகின்றேன்” என்றார்.

“சுவாமி உண்ணாமல் சென்றால் எப்படி, என் மனபாரத்தை கொட்டிவிட்டேன், கொஞ்சம் நீங்கள் உண்டால் இன்னும் நிம்மதி அடைவேன்” என்றாள்.

அவளுக்காய் கொஞ்சம் பசியாறினார். சுவாமி பின் ஆலயம் சென்றார்.

மாலை திரும்ப வந்தவர் சொன்னார் “தாயே, உனக்கு தங்கம்தானே வேண்டும், நான் சொல்வதை செய்”

அவள் “உத்தரவிடுங்கள் சுவாமி” என்றாள்.

“தாயே, நான் இரசவாதம் அறிந்தவன், தங்கம் செய்யும் வித்தை தெரிந்தவன். நீ உன் வீட்டின் பாத்திரங்களை எல்லாம் விறகின் மேல் அடுக்கு, ஒரு அகப்பை கூட விடக்கூடாது. வீட்டின் எல்லா உலோகங்களும், கத்தி முதல் எல்லாமும் கொண்டு கொடு, நான் விபூதி இட்டபின் அவை எரியட்டும், உருகட்டும், காலையில் எல்லாம் தங்கமாகும்” என்றார்.

அவள் ஒரு வார்த்தை பேசவில்லை. அவர் சொன்னபடியே செய்தாள். அன்னதானத்துக்கான விறகின் அடுப்பு மீது வீட்டின் பாத்திரமெல்லாம், கருவியெல்லாம் அடுக்கி காத்திருந்தாள். அவர் மாலையில் வந்தவர், வீட்டின் எல்லா உலோகங்கள் அவள் சலங்கை உள்ளிட்ட எல்லாமும் உள்ளே வைத்து விபூதி வீசினார்.

சட்டென பெருநெருப்பு எழுந்தது, ஓங்கி எரிந்த நெருப்பில் எல்லாமே உருகிப் போயிற்று.

நெருப்பு தணிந்ததும் சொன்னார், “காலையில் இவை தங்கமாகிவிடும் நான் வருகின்றேன்” என்றார்.

“சாமி எங்கே செல்கின்றீர்கள்” எனக் கேட்டாள், “நான் மதுரைக்கு செல்கின்றேன், எனக்கு அங்குதான் தங்குமிடம்” என அவசரமாக சொல்லி விடைபெற்றார்.

பொன்னையாள் அவர் சொன்னபடியே எல்லாம் அப்படியே போட்டுவிட்டு உறங்கச் சென்றாள். மறுநாள் காலையில் எழுந்தவள் எல்லாமே தங்கமாகி கிடப்பதை கண்டாள்.

எல்லாமே தங்கம், உருக்கிய உலோகமும் பாத்திரங்களும் கட்டி தங்கமாய் உறைந்து கிடந்தன. அவள் கொண்ட ஆனந்தத்துக்கு அளவே இல்லை. எல்லாமே தங்கமயாகி கிடந்தது அந்த அன்னசாலை.

இது அந்த சிவனின் அருள் என எண்ணியவள் மறுபடி மறுபடி நடந்ததை நினைத்துப் பார்த்தாள். வந்தவர் தான் மதுரையில் இருந்து வந்ததை சொன்னதை எண்ணியவள் எல்லாம் அந்த சொக்கனின் கருணை என மனம் குளிர்ந்தாள்.

கட்டி கட்டியாக மூட்டை மூட்டையாக பொன் கிடைத்தபின்னும் அவள் மனம் கொஞ்சமும் மாறவில்லை. அவள் அதைக் கொண்டு அழகான பொற்சிலை ஒன்றை உரிய கொல்லர்கள் மூலம் செய்தாள்.

எஞ்சிய பொன்னில் அன்னதானம் தீவிரமாக நடக்க வழி செய்தாள். எல்லா இடமும் சிவ நாமம் துலங்க வழி செய்தாள், முழு சிவனடியாராக மாறிப் போனாள்.

அந்த சிலை விரைவில் தயாரானது, அதன் அழகினை கண்டு அவள் ஆனந்த கூத்தாடினாள், அவளின் எல்லையில்லா மகிழ்வில் அந்த சிலையினை மனம் மகிழ மகிழ பார்த்துக் கொண்டே இருந்தாள்.

அந்த சிலையின் முகம் அவ்வளவு அழகாக இருந்தது, “அச்சோ அழகிய பிரானோ இவன்” எனச் சொல்லி கன்னத்தை கிள்ளினாள். ஒரு தாய் உள்ளத்தை போல மகிழ்ந்து கன்னத்தை கிள்ளினாள்.

அந்தத் தங்கச்சிலையின் முகத்தில் அந்த நகக்குறி அப்படியே பதிந்தது, அந்த அதிசயம் நடந்தது. சிவன் அவள் பக்தியினை ஏற்றுக்கொண்டு அந்த அழியா அதிசயத்தை செய்தார்.

தன் முகத்தை பார்க்கும் பக்தர்களெல்லாம் தன் உன்னத பக்தையினை நினைந்து கொள்ள, காலமெல்லாம் அவள் புகழ் நிலைக்க சிவன் செய்த திருவிளையாடல் இது.

இந்தச் சிலை இப்போதும் திருப்புவனத்தில் உற்சவராக உண்டு.

இந்தத் திருவிளையாடலில் சிவன் சொல்லிச் சென்ற தத்துவங்கள் நிறைய உண்டு. ஒவ்வொன்றாய் பார்க்கலாம்.

முதலில், அவள் ஒரு நொடி தனக்காக வாழவில்லை. முழுக்க முழுக்க சிவனுக்காய் அவரின் சேவைக்காய் தன்னலம் பாராமல் உழைத்தாள்.

தனக்கு சிவன் என்ன கலை கொடுத்தானோ, என்ன திறன் கொடுத்தானோ அதைக் கொண்டு சிவத்தொண்டு செய்ய முயன்றாள். இறைவன் கொடுத்த கலையினை இறைவனுக்கே திருப்பிக் கொடுத்தாள்.

அதுதான் அந்த சிவனில் கரைந்த மனமேதான் சிவனை அவளை நோக்கி வரவழைத்தது.

அடுத்து, அவள் கொஞ்சமும் தன் எதிர்காலம் பற்றி கலங்கவில்லை, யோசிக்கவில்லை. சிவனை பற்றிகொண்டு அவள் தன் கடமையினை செய்தாள், பெரும் அற்புதத்துடன் அவள் பிறவி வெற்றிகரமாக முடிந்தது.

அழியா அடையாளத்தோடு சிவனே சாட்சி சொன்னதோடு முடிந்தது.

மிக முக்கியமாக அவள் சிவனை பரிபூரணமாக நம்பினாள், அந்த அடியார் செய்த ஒவ்வொரு ஏற்பாட்டுக்கும் துணை சென்றாள். கொஞ்சமும் தயக்கமில்லாமல் செய்தாள்.

ஆம். அவள் சமையல் பாத்திரங்களை எரியூட்டினாள் என்பது சாதாரணம் அல்ல, அங்கேதான் விஷயம் இருக்கின்றது.

ஏதோ ஓட்டை பாத்திரங்களை அடுக்கினாள் என்பது அல்ல விஷயம், அவை அவள் அனுதினம் சிவனடியார்க்கு சமைத்த பாத்திரங்கள்.

அக்காலம் மட்பாண்டங்களில் சமையல் நடைபெற்ற காலங்கள், அனுமினியம் இன்றைய நாகரீக காலமெல்லாம் இல்லை.

இம்மாதிரி பெரும் கூட்டத்துக்கு சமைக்க பெரிய கொப்பறைகள், சிறப்பு உருக்கு உலோகம் என அவற்றின் மதிப்பு பெரிது. விலை உயர்ந்தவை அவை.

உண்மையில் அவை பெரிய சொத்து.

அவை ஒரே நாளில் வாங்கமுடியாது. எளிதில் கிடைக்காது. அவை இல்லாவிட்டால் பெரும் சிக்கல், பெரும் தொகை கொடுத்து வாங்க வேண்டும், இப்படி உருக்கிவிட்டால் அவளின் அன்னதானமே தடைபடும்.

ஆனால், அவள் அந்த அடியார் சொன்னதை நம்பினாள், நம்பியவள் அப்படியே நெருப்பில் இட்டாள்.

இவ்வளவுக்கும் அவர் காலைவரை இருப்பேன் எனச் சொல்லவில்லை. மாறாக, அவசரமாக கிளம்பினார். அப்போதும் அவள் பதற்றம் கொள்ளவில்லை, ஏதோ தவறு என அங்கலாய்க்கவில்லை. மாறாக, முழு நம்பிக்கை கொண்டாள்.

அதனாலே அவள் கனவெல்லாம் நிறைவேறிற்று. அவள் பக்தி பூரணமாயிற்று.

எந்த பாத்திரங்களில் அடியார்களுக்கு அள்ளி அள்ளி இறைத்தாளோ அதே பாத்திரங்களை கொண்டு சிவன் அவள் பக்தியினை உலகுக்கு காட்டினார்.

அடியார்களுக்கு உணவளித்தல், சேவை செய்தல் எவ்வளவு புண்ணியம், சிவனடியார்க்கு சேவை செய்தல் எப்படியான பெரும் பலன்களைத் தரும் என்பதை சொல்லும் காட்சி இது.

சிவனடியார்க்கு செய்வதெல்லாம் சிவனுக்கு செய்தலே. அந்த அடியார்களும் சிவனும் வேறல்ல. தன் அடியார்க்கு செய்யும் புண்ணிய காரிய பலனை சிவன் தானே வந்து ஏற்று பக்தனுக்கு அருள் பாலிக்கின்றார் என்பதுதான் இந்த திருவிளையாடலின் போதனை.

சிவன் எப்படியானவர்,
“தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என அவர் தொடங்கி ஒவ்வொரு திருத்தொண்டருக்கும் அடியேன் எனச் சொல்வது, அடியார்களுக்கு இறைவனே இறங்கி வந்து அடியாராய் அருள்புரிவான் என்பதை சொல்லிற்று.

ஆம். அடியார்க்கு அடியார் சிவனே என்பதை விட சிவனடியார் பெருமையினை எப்படி சொல்ல முடியும்?

அடியார்கள் எவ்வளவு உயர்ந்தவர்கள் என்பதை சைவ புலவரான ஔவையார் தனக்கே உரித்தான பாடலில் தெளிவாக சொல்கின்றார்.

“பெரியதுகேட்கின் எரிதவழ் வேலோய்!
பெரிதுபெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன்கரிய மால் உந்திவந்தோன்
கரியமாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கையில் அடக்கம்
குறுமுனியோ கலசத்தில் பிறந்தோன்
கலசமோ புவியிற்சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப்பாரம்
அரவோ உமையவள் சிறுவிரல் மோதிரம்
உமையோ இறைவர் பாகத்தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத்தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே!”

உலகில் எது மிகப் பெரியது என விநாயக பக்தையான ஔவையாரிடம் முருகன் கேட்க அதற்கு ஔவைப் பிராட்டியார் பதில் சொல்லும் பாடல் இது.

இந்த உலகம் மிகப் பெரியது. ஆனால், இந்த உலகம் தான் பெரிதா? இல்லையில்லை அதை பிரம்மன் படைத்தான்.

அப்படியானால் பிரம்மன் தான் பெரியவனா?

பிரம்மன் திருமாலின் உந்தியில் (தொப்புள்) வந்தவன் அதனால் திருமால் பெரியவனா?
திருமால் பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவன் அப்படியானால் கடல் தான் பெரிதா?

அந்த அலைகடலும் குறுமுனி அகத்தியர் கையில் அடக்கம் என்பதால் அகத்தியர் தான் பெரியவரா?

அகத்திய முனி கும்பம் எனும் மண் பானையில் பிறந்தவர் அப்படியானால் மண்ணாகிய பூமி தான் பெரிதா ?

இந்த பூமி ஆயிரம் தலை கொண்ட ஆதிசேடனின் ஒரு தலையில் அடங்கிவிடும், அப்படியானால் ஆதிஷேசன் தான் பெரிதா?

அந்த பாம்பு உமையம்மையின் சுண்டுவிரல் மோதிரமாக இருக்கிறது அப்படியானால் உமையம்மை தான் பெரியவரா?

உமையம்மை இறைவன் சிவபெருமானின் இடப்பக்கத்தில் ஒடுக்கம் அப்படியானால் சிவபெருமான் தான் பெரியவரா?

அந்தச் சிவ‌பெருமானே அடியார் பெருமக்களின் உள்ளங்களில் அவர்களின் அன்பில் கட்டுண்டு கிடக்கிறார் என்றால் அவ்வளவு மகிமை வாய்ந்த அடியவர்கள் நாயன்மார்கள் பெருமையை என்னவென சொல்வது முருகா என்கின்றார் ஒளவையார்.

சொல்வது ஒளவையார், சொன்னது பாலசாமி என்ற முருக பெருமானிடம் என்பதால் இது எவ்வளவு பெரிய உண்மை என்பதை எளிதாக உணரலாம்.

ஆம். எல்லாவற்றையும் உலகில் தன்பால் உள்ள அன்பால் வெறுத்து தன்னையே கதி என நாடி கையில் ஓடு கூட இல்லாமல் ஆலயம் ஆலயமாக தன்னை தேடி தனக்காக வாழும் அடியாரில் சிவன் வசிக்கின்றார்.

அந்த அடியார்களுக்கு யாரெல்லாம் தொண்டு செய்கின்றார்களோ அந்த தொண்டை தனக்கானது என்பதில் அந்த திருத்தொண்டர்களை ஈர்த்துக் கொள்கின்றார்.

இங்கும் அதுதான் நடந்தது.

இந்தத் திருவிளையாடலின் மாபெரும் போதனை சூட்சுமமானது. அந்தப் பொன்னையாள் எல்லாம் இழந்தாள். கடைசியில் எஞ்சியிருந்த பாத்திரமும் இழந்துதான் பெரும் அடையாளம் அழியா அடையாளம் பெற்றாள்.

சிவனை அடைய வாழ்வில் ஒன்றை இழக்கவேண்டும். எது முக்கியம் என லௌகீக வாழ்வில் கருதுகின்றோமோ, எது ஆதாரம் எது வாழ்வு என கருதுகின்றோமோ அதை இழந்தால் அதை சிவனுக்காக இழந்தால் சிவம் பெரும் அருளைக் கொட்டி பெரும் மடங்கு ஆச்சரியத்தோடு கூடிய அருளை கொட்டி நம்மை வாழவைக்கும் உயரத்தில் வைக்கும் என்பது தாத்பரியம்.

இங்கு ஞானமொழியில் பாத்திரம் அதுவும் சமைக்கும் பாத்திரம் மானுட உடலை குறிப்பது, உடல் சுகம் தன்னலம் என எல்லாம் மறந்து இந்த உடல்பாண்ட சுகங்களை மறந்து இறைவனை தேடினால் தியானித்தால் அவரை அடையலாம் என்பது.

சிவனுக்காய் வாழும் மனமும், சிவனடியார்க்கு உதவும் குணமும் கொண்டவர்கள் சிவன் பொருட்டு எதை இழந்தாலும் அது பன்மடங்காக உலகம் ஆச்சரியப்படும்படியாக அவர்களுக்கே திரும்ப வரும்.

சிவனை முழுக்க நம்புவோர் வெட்கப்படமாட்டர்கள், அவமானப்படமாட்டார்கள், தலைகுனிய மாட்டார்கள், உரிய காலம் சிவன் அவர்களை உலகம் அறிய நிலைபெறச் செய்வார். அவர்கள் கண்ணீர்விடவோ, கலங்கவோ விடமாட்டார், காலத்துக்கும் நிலைபெற வழிசெய்வார் என்பது இங்கு நீருபிக்கப்பட்ட‌ பெரும் சாட்சி.

இன்றும் அந்தத் திருப்புவனம் கோவிலில் அந்தத் சிலை உண்டு. எந்தக் கையினால் அவள் சிவன் சன்னதி முன்னால் அபிநயம் பிடித்து ஆடினாளோ, எந்த கரங்களால் சிவனடியார்க்கும் சிவனுக்கும் அமுதுபடைத்தாளோ, அந்த கரத்தின் நகம் அவர் கன்னத்தில், சிவன் கன்னத்தில் பதிந்த அடையாளம் உண்டு.

திருப்புவனம் செல்லும்போது அதை காணத் தவறாதீர்கள்.

அந்தச் சிலை முழுக்க தங்கமே. ஆனால், இடையில் அந்நிய படையெடுப்பு, ஆப்கானிய படையெடுப்பு காலங்களில் கொடியவர்கள் கையில் சிக்கிவிடாமல் இருக்க சில மூலிகைகளைப் பயன்படுத்தி சிலையினை மங்கச் செய்திருக்கின்றார்கள், மறுபடி பொவிவினை கொண்டுவரமுடியவில்லை.

ஆனால், அது தங்கச்சிலை. சில ஆபத்துக்களில் இருந்து காக்க அதனை பத்திரப்படுத்தியபோது இப்படி மாறிவிட்டாலும் பொன்னையாள் பதித்த நகக்குறி இன்றும் உண்டு.

திருப்புவனம் ஆலயத்தில் தன் முகத்தை காணும் பக்தனெல்லாம் தன் ஒப்பற்ற பக்தையின் பெரும் பக்தியினையும் காணட்டும் என அவள் நகக்குறியினை தன் முகத்திலே வாங்கிக் கொண்ட கருணை மிக்க கோலமிது.

அடியார்கள் சேவையும் எள்முனையும் தன்னலமற்ற சிவவாழ்வும் காலம் தாண்டி நிற்கும். காலம் காலமாக நிற்கும் பலனை அது சிவனிடமிருந்து பெற்றுத்தரும் என்பதை அவள் வாழ்வு சொல்கின்றது.

அன்று வாழ்ந்த மன்னன் பெயர் தெரியாது, பெரும் செல்வந்தர் பெயர் தெரியாது. ஆனால், சிவனுக்காய் பொன்னால் சிலைவடிக்க விரும்பி, அதை சிவனிடமே சொல்லி, சிவன் கையாலே தங்கம் பெற்ற அந்த தேவதாசி காலமுள்ள காலமும் நிலைத்து நிற்கின்றாள் என்றால் அதுதான் சிவபக்தியின் மாபெரும் பெருமை, அழியா தாத்பரியம் என்பதை உறுதிபட சொல்லி நிற்கின்றது திருப்புவனம் ஆலயமும் அந்த பொன்னையாள் வாழ்வும், சிவன் முகத்தில் பதிந்த அவள் நகத்தின் தடமும்.

திருவிளையாட‌ல் : 15 வரகுணபாண்டியனுக்கு பிணி தீர்த்த படலம்.

மதுரையம்பதி அமைந்திருக்கும் பாண்டிய நாட்டை அப்போது வரகுண பாண்டியன் ஆண்டுக் கொண்டிருந்தான். சுந்தரேச பாதசேகரனின் மகனாக அவன் அரியணை ஏறி சில காலமே ஆகியிருந்தது.

வரகுணபாண்டியனின் தந்தை சுந்தரேச பாத சேகரன் மாபெரும் சிவபக்தன்; சிவன் மேல் அவன் கொண்டிருந்த பக்தி அளவற்றது; அவன் பொருட்டு அவன் மகன்மேல் சிவனுக்கு ஒரு கருணை இருந்து கொண்டே இருந்தது.

வரகுணபாண்டியன் மிகச் சிறந்த ஆட்சி கொடுக்க விழைந்தான். அவனின் சிவபக்திக்கும் குறையேதுமில்லை. ஆனால், தகப்பனை போல முழு சரணாகதி ஆகவில்லை. ஆட்சி வேகத்தில் அவன் கவனம் நாடு, மக்கள், ஆட்சி, சேனை என்றே இருந்தது.

சிவன் அதனை கவனித்துக் கொண்டே இருந்தார்.

அவன் ஆட்சியில் ஒரு சிக்கல் வந்தது. அது காட்டு விலங்குகள் அட்டகாசம் எல்லை மீறிற்று. பயிர்களை நாசம் செய்வது, கால்நடைகளை தூக்கிச் செல்வது , மக்களைக் கொல்வது என அவை பெரும் மிரட்டலை கொடுத்தன‌.

நல்ல அரசனின் அடையாளங்களுள் வீரத்தில் பகையினை வெல்வது மட்டுமல்ல, காட்டு விலங்குகளை கட்டுப்படுத்தி மக்களை காப்பதும் ஒன்று. அது கட்டாயம். அக்கால அரசர்களுக்கு விலங்குகளை வேட்டையாடுதல் மற்றும் ஆபத்து காலத்தில் அவைகளிடமிருந்து தப்பிக்கும் கலைகள் பயிற்றுவிக்கப்பட்டன‌.

(சீன மரபில் வரும் தற்காப்பு கலை இங்கிருந்தேதான் தொடங்கிற்று)

மன்னன் வரகுணபாண்டியன் தன் பரிவாரங்களோடு வேட்டைக்குச் சென்றான். பகலெல்லாம் வேட்டையாடி பல விலங்குகளை கொன்றான். வழமையாக வேட்டை காலம் என்பது சில வாரங்களாகும். அப்போதுதான் மீண்டும் அவை கொஞ்சகாலம் தொல்லை கொடுக்கமுடியாதபடி கட்டுப்படுத்த முடியும்.

ஆனால், அன்று அவனுக்கு அவசர அலுவல் இருந்தது. இதனால் பொழுது சாயும் போது வேட்டை காரியங்களை சில முக்கியமானவர்களிடம் ஒப்படைத்துவிட்டு அவன் அவசரகதியில் மதுரை நோக்கி குதிரையில் விரைந்தான்.

அது அந்திசாயும் பொழுது, மாலை கருக்கத் தொடங்கியிருந்தது. வரகுணன் மிக வேகமாக வந்து கொண்டிருந்தான்.

அந்த வழியில் ஒர் அந்தணன் படுத்திருந்தான், அதை மன்னன் அறியவில்லை. வேதம் அறிந்த அந்தணன் அவ்வழி வந்தபோது களைப்பால் அப்படி படுத்திருந்தான். யாரேனும் வருவார்கள், வண்டி வரும், இல்லை உதவி கிடைக்கும் என எதிர்பார்த்து படுத்திருந்தான்.

விரைந்து வந்த மன்னனின் குதிரை அவனை மிதித்துவிட்டு பறந்தது, அதை மன்னன் அறிந்தானில்லை. குதிரையின் காலடி அந்தணன் மேல் பட்டது. குதிரை துள்ளி சமாளித்தது, மன்னனும் ஏதோ கல் எனக் கருதி விரைந்துவிட்டான்.

அந்தணன் மரித்துப் போனான். அவனை சேர்ந்தவர்கள் அந்தணனை இரவிலே தேடி அலைந்தபோது அவன் அவ்வழியில் பிணமாக கிடந்ததை அறிந்தார்கள்.

அங்கே குதிரையின் காலடித்தடம் இருந்தது. அந்தப் புழுதிபடிந்த குதிரை லாட தடம் அவன் உடல் மேலும் இருந்தது, அது உயர்சாதி குதிரையின் தடம் என்பதால் மன்னனை தவிர யார் குதிரையுமாக இருக்கமுடியாது என்பதால் மன்னனிடமே நீதி கேட்டு வந்தார்கள்.

எப்போதுமே எல்லா வழக்குக்கும் மன்னனே நீதிபதி, இங்கு அவன் செய்த குற்றத்துக்கு அவனே நீதிபதியாக இருக்கும் நிலை வந்தது.

அவன் வெலவெலத்துப் போனான். தன்னை அறியாமல் செய்த பெரும் பாவத்தை ஒப்புக்கொண்டான். “பெரியோர்களே, நான் அவசரமாக திரும்பும்போது குதிரையின் பெரும் வேகம் காரணமாக இது நிகழ்ந்துவிட்டது, அறிந்து நான் செய்தவன் அல்ல‌.

இந்த பெரும் குற்றத்தை நான் ஒப்புக்கொள்கின்றேன், அவ்வழி குதிரையில் வந்தவன் நானே என்பதால் இதற்கு நானே பொறுப்பு . இந்த அந்தணனின் குடும்பத்தார்க்கு பெரும் செல்வம் தருகின்றேன், மாதம் மாதம் நிதி தருகின்றேன், அக்குடும்பம் வாழ என்னென்ன செய்யவேண்டுமோ செய்கின்றேன்” என உருகினான்.

மன்னன் அக்குற்றம் அறிந்து செய்யவில்லை என்பதால் அதை விபத்தாக கருதி அந்தணரை சேர்ந்தவர்களும் அரசன் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள்.

ஆனால், இறந்தவன் அந்தணன்; வேதம் அறிந்த அந்தணன்; அவனைக் கொன்றால் அது பிரம்மஹத்தி தோஷமாக மாறும். இது நியதி.

அதனால் அந்த வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த சாபம் பெரும் துன்பங்களை வருவித்தது.

அந்த அந்தணணின் ஆவி அவனை விடாமல் படுத்தியது. அவன் தூங்கினால் கனவில் கரிய நிறத்தில் அச்சுறுத்துவதும், அவன் உண்ண அமர்ந்தால் திடீரென முன்னால் வந்து கரும் உருவமாக பற்களை நறநறவென கடித்து அச்சுறுத்தும்.

அவன் குதிரையில் ஏறினால் அவன் குதிரை மிரண்டோடும், மன்னன் ஆடை கையில் எடுத்தால் அது திடீரென எரியும்.

மன்னனால் தூங்க முடியவில்லை. சாளரங்கள் படீரென அசைந்து உடைந்தன. யாரோ மன்னனை கழுத்தை நெறிப்பது போல் இருக்கும். திடீரென உடல் நலமின்றி போகும். இன்னும் என்னென்னவோ அந்த பிரம்மஹத்தி அவனைப் பாடாய் படுத்திற்று.

மன்னனால் அவை நடத்த முடியவில்லை; நகர்வலம் செல்லமுடியவில்லை; ஏன் உண்ண உறங்கக் கூட முடியவில்லை. அவனின் நிலை கண்டு அவன் மனைவி பிள்ளைகள் கூட அஞ்சத் தொடங்கின‌ர்.

அவன் காதில் திடீரென உரக்க சிரிக்கும் சத்தம் கேட்கும், “மன்னனே, மக்களை காக்க வேண்டியவன் நீ, எந்த நிலையிலும் நிதானமாய் விழிப்பாய் இருந்திருக்க வேண்டியவன் நீ, மன்னன் என்றால் அரசபோக வாழ்வா? அல்ல. அவன் குடிகளுக்கு காவல்காரன்.

ஆனால், நீ என்ன செய்தாய்? மயங்கி கிடந்த அந்தணனுக்கு உதவி செய்யாமல் அவனை கொன்றுவிட்டாய், விடுமா சாபம்? அவன் யார்? அனுதினமும் சோமசுந்தரருக்கு பணி செய்தவன், சோமசுந்தரேஸ்வரருக்கு பெரும் தொண்டு செய்தவன், அவனை கொன்ற பாவம் தீருமா?

இதோ பார், அவன் சூட்சும உடல் அந்த கோரத்தால் எப்படி கருத்து அகோரமாகிவிட்டது என்பதை பார். ஒளி பெற்று ஒளிரவேண்டிய சூட்சும உடல் அவன் கைவிட்ட மந்திர ஜெபங்களின் தடையாலும், இன்னும் பலவற்றாலும் எப்படி கருப்பாகிவிட்டதை பார்.

உன்னை விடமாட்டேனடா, மன்னனாய் இருந்தால் என்ன? உனக்கு சேவகர் படை காவல் ஆயிரம் இருந்தால் என்ன? என்னை யார் தடுக்கமுடியும்?” என அவனை மிகவும் தொந்தரவு செய்ய ஆரம்பித்தது.

மன்னன் அந்தணர்கள், அமைச்சர்கள், மறைஞானியருடன் பெரும் ஆலோசனை செய்ய தொடங்கினான்.

அதன்படி, அவர்கள் பல ஆலோசனைகளை சொன்னார்கள். மன்னன் ஒன்று விடாமல் செய்தான்.

ஏகப்பட்ட அந்தணர்க்கு ஆற்றங்கரையில் உணவளித்தல், பெரும் யாகங்களை செய்தல், 108 சிவலிங்கங்களை அர்ச்சித்தல், பசுக்களுக்கு அருகம்புல்லும் அகத்தி கீரையும் தன் கையால் கொடுத்தல், இன்னும் பூஜைகள் தான தர்மங்கள் என அவன் நிரம்பச் செய்தான்.

ஆனால், பலனேதுமில்லை. ஆவிகளை கட்டுப்படுத்தும் சுடுகாட்டு பூஜைவரை எல்லாம் செய்து பார்த்தும் பலனேதுமில்லை. அதன் அட்டகாசம் ஒயவில்லை.

என்ன பரிகாரம் அவன் செய்தாலும், என்ன பூஜை செய்தாலும் அது அவன் முன் சிரித்தது; அறையின் உத்திரத்தில் இருந்து சிரித்தது; அவன் குதிரை மேல் நின்று கெக்கலித்தது.

“அடேய் வரகுணா, என்னையா கொன்றுபோட்டாய், உன்னை இப்படி தொல்லைப்படுத்தி கொல்லாமல் விடமாட்டேன், எப்படி நான் வதைபட்டு செத்தேனோ அப்படி நீயும் சாகும்படி உன்னை செய்யாமல் ஓயமாட்டேன்.

என் வாழ்வை அழித்தவனே, என்னைப்போல் செத்துபோ அதுதான் முடிவு, எந்த பூஜையும் யாகமும் என்னை கட்டுப்படுத்தாது. சாஸ்திரங்களை அறிந்தவனடா நான், கரைகண்ட வித்தைக்காரன், வேதமறிந்தவன், என்னை எந்த பூஜையில் கட்டுவாய், எந்த பரிகாரத்தில் அடக்குவாய்” என கர்ஜித்தது.

மன்னன் அரண்டே போனான். கடைசியில் ஆலவாய் நாதனிடம் சரணடைந்தான். அங்கிருந்த தலைமை அர்ச்சகர் ஒரு யோசனை சொன்னார்.

“மன்னா, இந்த பொற்றாமரை குளத்தில் நீராடி சோமசுந்தரேஸ்வரரை 1008 முறை சுற்றிவாருங்கள், அந்த சோமசுந்தர பெருமான் இந்த இக்கட்டிலிருந்து உங்களைக் காப்பார்” என்றார்.

அதன்படி வரகுணபாண்டியன் நம்பிக்கையோடு பொற்றாமரை குளத்தில் நீராடி ஆலவாய் நாதனை அனுதினமும் தொழுதுவந்தான். ஆனாலும், அவன் ஆலயம்விட்டு நீங்கும் போது அந்த பிரம்மஹத்தி அவனை நிழல் போல் பற்றிக்கொண்டு தொல்லை செய்தது.

மன்னனோ மிக மிக நம்பிக்கையாய் வழிபட்டான்.

பத்தாம்நாள் வந்தது. மன்னன் இன்னும் பிரம்மஹத்தி அகலா நிலை கண்டு வருந்தினான். அந்த ஆலவாய் நாதனின் சன்னிதானத்தை சுற்றிவரும்போது சொன்னான்.

“சிவபெருமானே, இந்திரன் இங்கேதான் தன் பிரம்மஹத்தி தோஷம் போக்கினான், அவந்திபட்டண அந்தணன் இங்கேதான் பிரம்மஹத்தி தோஷம் போக்கினான்.

அப்படியான இத்தலத்தில் என் பிரம்மஹத்தியும் போக்க கூடாதா, இது உம்மால் முடியாததா?” என்றவன் கலங்கிச் சொன்னான்.

“ஆம், சிவனே நான் தவறு செய்துவிட்டேன். ஒரு அந்தணன் மயங்கி கிடக்கும் அளவு நான் அந்தணர்களை கவனியாது விட்டுவிட்டேன். அதனாலே அந்தணர்களுக்கு உணவிட்டேன், யாகம் செய்தேன், பல பூஜைகள் செய்கின்றேன்.

சிவனே! எம்பெருமானே! நான் அந்தணர்களை சரியாக கவனிக்காத பாவத்தின் தண்டனை இது. அதற்காக இந்த தண்டனை என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். ஆனால், இனி நான் சரியாக இருக்கும் பொருட்டு ஒரு வாய்ப்ப்பு அருளக் கூடாதா?” என ஏங்கினான்.

அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.

“வரகுண பாண்டியா அஞ்சாதே, இந்த சிக்கல் தீர நீ திருவிடை மருதூருக்கு செல்ல வேண்டும். அங்கே இந்த தோஷம் அகலும்” என்றது.

“அது சோழ தேசம் அல்லவா? பகைவனான அவன் என்னை எப்படி அனுமதிப்பான்? இந்த பிரச்சினை தெரிந்தாலே எதிரி அப்படியே ஒழியட்டும் என விட்டுவிடுவானே?” எனத் தயங்கினான் வரகுணன்.

“வரகுணா, நாம் உன் பக்கம் இருக்கின்றோம், சில நாட்களில் அவன் போரிட வருவான், நீ அவனை வெல்வாய். அதன் பின் சோழநாடு உன்னுடையதாகும், அங்கு நீ வழிபட தடையேதுமிறாது.

அவன் விரைவில் வருவான், அதுவரை இந்த பிரம்மஹத்தியின் தொந்தரவு குறையும்” என்றது.

மன்னன் கண்ணீருடன் நன்றி சொல்லிக் கிளம்பினான். சிவன் சொன்னபடியே பிரம்மஹத்தியின் தொந்தரவு கொஞ்சம் குறைந்தது. நிம்மதியாக மன்னன் கொஞ்சமாவது உண்ண உறங்க முடிந்தது. ஆனால், பல தொந்தரவுகள் அப்படியே இருந்தன‌.

வரகுணனின் நிலை உளவாளிகள் மூலம் சோழ மன்னனுக்கு தெரிந்தது. வரகுணன் பிரம்மஹத்தியினால் அவதிப்படுகின்றான், அவனால் சரியாக உறங்கக் கூட முடியவில்லை, பித்து பிடித்த நிலையில் இருக்கின்றான், சபையில் அவன் நடந்துகொள்ளும் விதமே கொடியதாய் பரிதாபமாய் இருக்கின்றது.

அவனால் குதிரை ஏறமுடியவில்லை, குதிரையே எதற்கோ அஞ்சி திசைமாறுகின்றது, இந்நேரமே நாம் படையெடுத்து பகைமுடிக்க சரியான நேரம்” எனச் சொன்னார்கள்.

சோழமன்னன் படைதிரட்டினான். வரகுணனுக்கு சிவன் சொன்னபடியே அவன் பாண்டிய தேசம் நோக்கி வந்தான்.

வரகுண பாண்டியனுக்கு பிரம்மஹத்தி தோஷம், அந்த சாபத்தில் அவன் சிக்கிக் கிடக்கின்றான், அவனால் படைநடத்தமுடியாது என எண்ணிவந்த சோழமன்னனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

சிவன் வாக்களித்தபடியே வரகுணபாண்டியன் மிக இயல்பாக போர் செய்தான். பிரம்மஹத்தி தோஷம் அவனிடம் அப்போது தற்காலிகமாக நீங்கியிருந்தது. போரில் சோழப்படைகள் முறியபடிக்கப்பட்டன, சோழநாடு வரகுணபாண்டியனிடம் சிக்கிற்று.

முதல் வேலையாக மன்னன் அந்த திருவிடை மருதூர் ஆலயம் சென்றான், சிவாலயங்களில் அது அர்ஜூனம் என அழைக்கப்படும் மூன்று முக்கிய ஆலயங்களில் ஒன்று.

இதன் பெருமையும் தொன்மையும் பழைய சுவடிகளில் நிரம்ப உண்டு.

சிவரகஸ்யம், ஸ்காந்தம், இலிங்கப்புராணம், பிரமகைவர்த்தம் முதலிய பிரபல கிரந்தங்கள் சிறப்பாக எடுத்துரைக்கின்றன.

மருதவனப் புராணம், திருவிடைமருதூர் உலா, திருவிடைமருதூர் கலம்பகம், திருவிடைமருதூர் பதிற்றுப் பத்தந்தாதி, திருவிடைமருதூர் நொண்டி நாடகம் முதலிய இலக்கியங்களும் இத்தலச் சிறப்பை விளக்குகின்றன. அந்த அளவு இது பழமையானதும், முக்கியமான ஆலயமுமாகும்.

இந்த ஆலயத்தை ஸ்தாபித்த வரலாறு அகத்திய முனிவரில் இருந்து தொடங்குகின்றது. அகத்தியர் தென்னகம் வந்து காவேரியினை திருப்பி சோழநாட்டிற்கு அனுப்பி அதன் கரையெல்லாம் சிவாலயம் ஸ்தாபித்ததில் இருந்து தொடங்குகின்றது.

அவர் பிரம்மன் அனுப்பிய அமிர்த துளிகள் அடையாளம் காட்டிய இடம், சக்திமிக்க இடம் இது என அறிந்து அங்கே அமர்ந்து ஈசனை வேண்டினார். இங்குவரும் மக்களெல்லாம் தங்கள் கர்மம் அழிய, தங்கள் பிணி அழிய, தேவர்களை போல பெருவாழ்வு வாழும் வரம் பெற தவமிருந்தார்.

அவரின் வேண்டுதலுக்கு ஏற்ப ஈசனே வந்து வரமருளினார். ஈசனே ஜோதிலிங்கமாக இங்கு அமர்ந்தார். அத்தோடு மட்டுமல்ல எப்படி வழிபாடுகளை செய்யவேண்டும் என சிவனே வழிபட்டு சொல்லிக் கொடுத்தார்.
சிவனே சிவபூஜை செய்த தலம் இது, அதாவது சிவனே “காமிகா ஆகமம்” எனும் மகா முக்கிய ஆகமத்து விதிகளை இங்கே போதித்து அதை தானே செய்துகாட்டி போதனையே நடத்தினார்.

ஆகமங்கள் மொத்தம் 28. அதில் முக்கியமானது இந்த காமிகா ஆகமம்,”காமிகம்” எனும் சொல்லுக்கு விரும்பியதை அடைவது எனப் பொருள், அதாவது தான் விரும்பிய ஒன்றை பெற்று தவிப்பில் இருந்து விடுதலை அடைவது எனப் பொருள்.

ஆத்ம விடுதலையினை குறிக்கும் தத்துவம் இது. ஆம். இந்த காமிகா ஆகமம் முழுக்க முறையான வழிபாட்டால் ஆத்ம விடுதலை அடைவது எப்படி என்பதை சொல்கின்றது. அதன் தாத்பரியம் இதுதான்.

இப்படியான பெரும் அற்புதம் நடந்த ஆலயம் இது, இங்கிருந்துதான் இதன் வரலாறு தொடங்குகின்றது.

மருதமரங்கள் இடையில் லிங்கம் வந்ததாலும், இரு அர்ஜூனங்களுக்கு இடையில் அமைந்த அர்ஜுனம் என்பதாலும் அது இடைமருதூர் என்றாயிற்று, பின் திருஇடை மருதூர் என அழைக்கப்பட்டு பின் திருவிடை மருதூர் என்றாயிற்று.

நீண்ட பாரம்பரியம் கொண்ட இக்கோவிலில்தான் பட்டினத்தார் ஞானமடைந்து நிறைய பாடினார். அவரின் சீடரும் உஜ்ஜைனியில் பிறந்தவருமான பத்ருஹரியார் இங்குதான் சித்தி அடைந்தார். அவர் சமாதி அங்கேதான் உண்டு.

இப்படியான கர்மம் கழிக்கும் ஆலயத்துக்கு வந்தான் வரகுண பாண்டியன், அவன் கிழக்கு வாசல் வழியாக பெரும் காணிக்கை தாம்பாளங்ளுடன் வந்து அந்த மஹாலிங்க சிவனை பணிந்தார்.

“சிவனே! எம்பெருமானே! மஹாலிங்கமாக நீர் நிற்கும் இந்த தலத்தில் என் வினையெல்லாம் தீரவேண்டும் ஐயனே” என அவன் கலங்கி நின்றான்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது.

“வரகுணா, இங்கே கர்மவினை அகன்றுவிடும். உன்னை பின்பற்றிவந்த பிரம்மஹத்தி கிழக்கு வாசல் வழியே நீ வரும்போது அகன்று அங்கே காவல் இருக்கின்றது. நீ அந்த வாசல் வழியாய் செல்லாமல் மேற்கு வாசல் வழியே வெளியேறுவாய்”

அப்படியே அவன் சிவனை தெண்டனிட்டு வணங்கி வெளியேறினான். அத்தோடு அவன் தோஷம் அகன்றது. அந்த பிரம்மஹத்தியினை சிவன் தன்னோடு சேர்த்துக் கொண்டார்.

அதன் பின் சிவபக்தியில் முழுக்க மூழ்கிப் போனான் மன்னன். அவனை ஆட்கொண்ட சிவன் அதுவரை சில கட்டுமானமும், பல குறைகளும் இருந்த அந்த திருவிடை மருதூர் ஆலயத்தை அவனைக் கொண்டே முழுமையடையச் செய்தார்.

அவன் தான் கர்மவினை நீங்கி வெளிவந்த அந்த மேற்கு வாசலில் ஒரு கோபுரம் அமைத்தான். இன்றளவும் அதற்கு அவன் பெயரே உண்டு.

வரகுண பாண்டியன் எந்த அளவு சிவபக்தி கொண்டிருந்தான் என்பதற்கு பட்டினத்தாரும் இன்னும் பலரும் எழுதிய வரிகளே சாட்சி.

பட்டினத்தார் காலத்தால் முந்தையவர், இந்த வரகுணபாண்டியன் காலம் அதைவிட முந்தியது. ஆனாலும், வழி வழியாக வந்த அவன் பக்தியின் சிலிர்க்கவைக்கும் விஷயங்களை அவர் எப்படி எழுதி வைத்தார் என்றால் இப்படித்தான்.

பட்டினத்தார் பாடலில்,

“வெள்ளை நீறு மெய்யிற்கண்டு
கள்ளன் கையிற் கட்டவிழ்ப்பித்தும்
ஓடும் பல்நரி ஊளை கேட்டு அரனைப் பாடின
என்று படாம்பல அளித்தும்

குவளைப் புனலில் தவளை அரற்ற
ஈசன் தன்னை ஏத்தின என்று
காசும் பொன்னும் கலந்து தூவியும்
வழிபடும் ஒருவன்

மஞ்சனத்தியற்றிய
செழுவிடை எள்ளை தின்னக் கண்டு
பிடித்தலும் அவன் இப் பிறப்புக்கென்ன
இடித்துக்கொண்டவன் எச்சிலை நுகர்ந்தும்

மருதவட்டத் தொருகனிக் கிடந்த
தலையைக் கண்டு தலையுற வணங்கி
உம்மைப்போல எம் இத்தலையும்
கிடத்தல் வேண்டுமென்று அடுத்தடுத்திரந்தும்

கோயில் முற்றத்து மீமிசை கிடப்ப
வாய்த்ததென்று நாய்க்கட்டம் எடுத்தும்
காம்பவிழ்த்துதிர்ந்த கனியுறுக் கண்டு

வேம்புகட்கெல்லாம் விதானம் அமைத்தும்
விரும்பின கொடுக்கை பரம்பரற்கென்று

புர குழல்தேவியைப் பரிவுடன் கொடுத்த
பெரிய அன்பின் வரகுண தேவர்”

அதவாது மன்னன் வரகுணபாண்டியன் எப்படி சிவனை, அந்த திருவிடை மருதூர் சிவனை கொண்டாடினான் என்பதை மெய் சிலிர்க்க சொல்கின்றார் பட்டினத்தார்.

கள்வன் என‌ ஒருவனை மன்னன் முன் கொண்டுவந்தார்கள். அவன் நெற்றியிலோ திருநீறு இருந்தது. அதனை கண்ட மன்னன் நீதிவழங்கும் இடத்தில் இருந்தும் அவன் திருநீற்றை கண்டு சிலிர்த்து, திருநீறு அணிந்தவன் குற்றம் செய்யமாட்டான், அவன் குற்றம் செய்திருந்தாலும் சிவனை முன்னிட்டும் திருநீற்றை முன்னிட்டும் நான் அவனை விடுவிப்பேன், திருநீறு அணிந்த ஒருவனை தண்டிக்க முடியாது என அனுப்பிவைத்தான்.

திருவிடை மருதூர் கோவிலை சுற்றி நரிகள் ஊளையிடும் ஓசை கேட்டதும், இரவில் நரிகளெல்லாம் சிவனை பாடுகின்றன எனச் சொல்லி நரிகளை கௌரவிக்க வகை செய்தான்.

அந்த திருவிடை மருதூர் குளத்தில் தவளை ஒலியினை கேட்டவன் அவைகள் சிவனை போற்றுவதாக சொல்லி பொன்னை அரைத்து தூவினான்.

கோவில் வாசலில் ஒரு மண்டையோடு கிடந்தது. இது யாருடைய ஓடோ என ஒரு பக்கம் சலசலப்பு வந்தது, இன்னொரு பக்கம் பதற்றம் வந்தது. அவனோ அதை எடுத்து இந்த மண்டை ஓட்டை போல என் தலையும் இங்கே கிடக்க வேண்டுமென சொல்லி மனமுருகினான்.

செக்கில் எள் காயவைக்கபட்டிருந்தது, அதை ஒருவன் தின்றுவிட்டதாக சர்ச்சை வந்தது. அதை தீர்ப்பிட வந்தவன், சிவனுக்கான தீபமெற்றும் எண்ணெய்க்கான எள்ளை தின்றவன் அடுத்தபிறப்பில் செக்குமாடாய் பிறப்பான், கோவிலுக்கு தீபமேற்றும் எண்ணெய் கொடுக்க செக்கிழுப்பான், நானும் அப்படி சிவனுக்காய் செக்கிழுப்பேன் எனச் சொல்லி அந்த எள்ளை அள்ளி வாயிலிட்டான்.

வேப்பம் பழம் உதிர்ந்துகிடக்கும் சித்திரை மாதம் கோவிலுக்கு வந்த மன்னன், தரையினை பார்த்து விழுந்து வணங்கினான், அவை மண்ணில் பாதி புதைத்து பாதி வெளிப்பட்டு சிவலிங்கங்களாக அவனுக்கு காட்சியளித்தன.

அவற்றை யாரும் மிதிக்காதபடி காவலிட்டு, அவை அனைத்தும் லிங்கமாக வணங்கினான்.

கோவிலில் நாயின் அசுத்தம் கிடந்ததை கண்டு மன்னனென்றும் பாராமல் அதை அவனே எடுத்து வீசி அவ்விடத்தை நீரால் சுத்தம் செய்தான்.

உச்சமாக தன் மனைவியினையே, தன் பட்டத்து அரசியினையே கோவிலை பார்த்து கொள்ளும் தாசி எனும் அடிமையாக சிவாயலத்துக்கு கொடுத்தான். அவள் தலைமை தாசியாக இருந்தாள்.

படிக்கும் போதே சிலிர்க்கவைக்கும் பக்தி அவனுடையது, இப்படி எப்போதும் சிவன், எல்லாமும் சிவன் நினைவாகவே அவன் இருந்தான் என்கின்றார் பட்டினத்தார்.

இப்படியான வரகுண பாண்டியன் முழுக்க சிவமயமாகி போனான். அவன் சொல், செயல், விவாதம், வாழ்வு என எல்லாமே சிவமயமாகியிருந்தது.

அப்படி அவன் அவையில் எப்போதும் சிவபெருமையே பேசபட்டும், விவாதிக்கப்பட்டும் கொண்டிருந்தது. முழுக்க சிவனில் கலந்தவனுக்கு பெரும் ஆசை ஒன்று பக்தியின் உச்சத்தில் தோன்றிற்று.

அது கையாலயத்தை தரிசிக்கும் பெரும் ஆவல். சிவனையும் அவன் உலகையும் காணும் பெரும் ஆவல்.

அதனையே அவன் மனம் சிந்தித்தது, பெரிதாக சிந்தித்தது. சிந்தனை ஏக்கமானது. அனுதினமும் அதையே வேண்டுதலாக வைத்தான்.

சிவபெருமானும் அதை ஏற்று அவனை சோமசுந்தரர் சன்னதிக்கு வரச்சொன்னார். அப்படி ஒருநாள் காலையிலே அவன் அங்கு அமர்ந்திருந்தான்.

அவன் கண்களை மூடி அமர்ந்து சிவநினைவில் அப்படியே கரைந்து போனான். கண்விழித்தபோது அவன் நந்தி தேவர் கரம் பற்றி சொர்க்க வாசலில் நின்றிருந்தான்.

அந்தப் பட்டணம் அவ்வளவு அழகாக இருந்தது. நந்தி தேவர் வரகுணபாண்டியன் கையினை பிடித்து அழைத்துச் சென்றார்.

தங்க தூணும், வளைவுகளும் தூண்களுமாய் தெருவில் இழைக்கப்பட்ட நவமணிகளுமாய் சொர்க்கம் ஜொலித்தது.

எங்கும் நறுமணம் கவிழ்ந்தும் தெய்வீக மலர்கள் மலர்ந்திருந்தன. எங்கும் நறுமணம் கவிழ்ந்திருந்தது.

“பாண்டியா இதுதான் ருத்திரன் வாழுமிடம், ருத்திரர் மகளிர் இங்கேதான் வசிக்கின்றார்கள் என்றார் நந்தி தேவர், பாண்டியன் அங்கே விழுந்து வணங்கினான்.

நந்தி தேவர் அவனை திருமால் வாழும் வைகுண்டம், பிரம்மன் வாழும் சத்தியலோகம் எனப் பல உலகங்களை காட்டினார், அதனை கண்டு பரவசமடைந்தான்.

ஒவொரு தேவலோகமாக காட்டிச் சென்ற நந்தி தேவர் கற்பக தரு, காமதேனு என எல்லாமும் காட்டிச் சென்றார். பொன்னிறமான கயிலாயம் என்பது என்ன என்பதை அப்போது மனமார அறிந்தான் வரகுண பாண்டியன்.

ஒரு பெரும் மண்டபத்தில் நுழைந்தார், அங்கே பல வரிசையாக ஏகப்பட்டோர் அமர்ந்திருந்து பரமனை பாடிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ஒவ்வொரு வரிசையாக காட்டி சொன்னார் நந்தி தேவர்.

“பாண்டியா இவர்கள் அதிகாலை எழுந்து சிவனை தேடி வந்தவர்கள். மலர்களாலும், தீபங்களாலும் அர்ச்சனை செய்து வழிபட்டவர்கள்.

இவர்கள் சிவநாமம் ஓதியவர்கள், இவர்கள் சிவனடியார்கள், இவர்கள் சிவனடியார்களை ஆதரித்தவர்கள்.

பாண்டியா இவர்கள் வேதம் மந்திரம் என யாகமியற்றி சிவனை வழிபட்டவர்கள்; இவர்கள் ரிஷிகள்; இவர்கள் தபஸ்விக்கள் என ஒவ்வொரு வரிசையாக காட்டி வந்தார்.

அங்கே மந்திரம் ஓதியோர், யாகம் புரிந்தோர், சாஸ்திரம் அறிந்து சிவனை பின்பற்றியோர் என எல்லோரும் இருந்தார்கள்.

ஒரு பக்கம் கிங்கரர் இசை அமைத்தார்கள். தேவலோகப்பெண்கள் ஆடிப்பாடிக் கொண்டிருந்தார்கள். யட்சர்கள் பெரும் அலங்காரம் செய்தார்கள், கந்தர்வர்கள் பாடினார்கள்.

ஒரு வரிசையில் அகத்தியர் முதலான ரிஷிகள் இருந்தார்கள், இன்னொரு வரிசையில் சப்த ரிஷிகள் இருந்தார்கள்.

பாதாள லோகம் , நாகலோகம் என எல்லா உலகின் தலைவர்களும் வந்திருந்தார்கள்.

முப்பது முக்கோடி தேவர்கள், இந்திரன் எனப் பெரும் வரிசை இருந்தது. வேலவன், கணபதி எனப் பலர் அமர்ந்திருந்தார்கள்.

திருமால், பிரம்மன் எனப் பலரும் அவரவர் தேவியரோடு காத்திருந்தார்கள்.

நந்திதேவர் அவனை அந்த இடத்தில் நிறுத்தினார். திடீரென பெரும் கோஷம் எழுந்தது “ஹரஹர மகாதேவா…” எனும் பெரும் கோஷம் எழுந்தது.

எல்லாரும் தலைக்கு மேல் கரங்களை குவித்தார்கள். இசைத்தவர், ஆடியவர், பாடியவர் என எல்லோரும் கரங்களை குவித்து “ஹர மஹாதேவா, சங்கரா” எனச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

மெய்சிலிர்த்த வரகுண பாண்டியன் கண்கள் சிலிர்க்க பனிக்க தரையில் வீழ்ந்து “எம்பெருமானே” என்றார்.

கண் விழித்தபோது அவர் சோம சுந்தர சன்னதி முன் வீழ்ந்து கிடந்தார்.

அப்படியே ஏதும் பேசாமல் அமர்ந்திருந்த வரகுண பாண்டியன் அந்த சோமசுந்தரரையே நோக்கிக் கொண்டிருந்தான், ஒரு சலனமும் அவனிடமில்லை.

பின், மெல்ல அவன் கண்களில் இருந்து நீர்வழிய, உதடுகள் மெல்ல பிரிய அழுதான், கதறி கதறி அழுதான். ‘இது கயிலாயம், இந்த ஆலயம் கயிலாயம், என் கண்ணுக்குத்தான் இதுவரை தெரியவில்லை. இதுவே எம் பெருமான் வாழும் கயிலாயம்” எனக் கதறி கதறி அழுதான்.

அதன் பின் பெரும் திருப்பணிகளை முழு மூச்சாக மதுரையம்பதிக்கு செய்தவன் அப்படியே வாழ்நாளெல்லாம் தொண்டாற்றி பின் சிவனோடு கலந்தே போனான்.

வரகுணனின் வாழ்வு மூலம் சிவபெருமான் போதிக்கும் காட்சி நிரம்ப உண்டு, பல போதனைகள் உண்டு.

முதலாவது, அந்த திருவிடை மருதூர் என்பது கர்மா தீர்க்கும் ஆலயம். ஒருவனின் கர்மா அங்கேதான் முடிகின்றது. அதனாலேதான் அங்கு மேற்கு வாசல் வழியாக அவனை வரச்சொன்னார் சிவபெருமான்.

அதன் பொருள் கர்மம் கழிந்து இனி பிறப்பற்ற நிலையினை அடைந்துவிட்டான் என்பது.

(அங்கு கிழக்கில் சென்று மேற்கு வாசல் வழியாக வருவதே முன்பு மரபு. ஆனால், காசி வடக்கே இருப்பதால் வடக்கு வாசல் இப்போது மரபாயிற்று)

கர்மவினைக்கு யாருமே தப்பமுடியாது. எல்லோருக்குமே வினை உண்டு. நிச்சயம் மன்னாய் பிறக்க பெரும் வரம் இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த வரமே சிக்கலாகும்படி ஒரு வினை வருமென்றால் கர்மத்தின் ஒவ்வொரு விஷயமும் சக்திவாய்ந்தது என்பதை உணர்தல் வேண்டும்.

பிரம்மஹத்தி தோஷம் என்பது ஒருவன் என்ன வாய்ப்பு பெற்றிருந்தாலும் அனுபவிக்க விடாதது. பெற்ற வாழ்க்கையினை வாழவிடாதது.

எல்லாம் இருந்தாலும் அதனை அனுபவிக்க விடாதபடி தடுத்து துயரப்படுத்துவது, அதுதான் பிரம்மஹத்தியின் பெரும் சாபம்.

பிரம்மஹத்தி என்றால் அந்தணரை கொல்வது என நேரடி அர்த்தம் மட்டுமல்ல, அது சாதுக்களை, நல்லவர்களை, அறம் அறிந்தவர்களை, தர்மம் அறிந்தவர்களை, அறிந்தோ அறியாமலோ தொல்லைபடுத்துவது. அழிப்பது.

இங்கு மிகக் குறிப்பிடப்படும் போதனையும், அவனுக்கு சொர்க்கத்தில் காட்டிய விஷயமும் முக்கியமானது.

அது வேதம் ஓதுதலும், சாஸ்திரப்படி யாக வழிபாடுகள் செய்வதும், சிவனுக்கு அடியாராக தொண்டராக வாழ்வோரை, ஆலயப் பணியாளர்களை மதிப்பதும் கொண்டாடுவதும் முக்கியம். அவர்களை புறம் தள்ளுவது பாவம் என்பது.

என்ன காரணத்தினாலோ வரகுணபாண்டியன் முதலில் அந்தணர்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அப்படி அவனால் எல்லா அந்தணரும் அறம் அறிந்தோரும் பலன் பெற்றிருந்தால் ஒரு அந்தணன் தனியாக அப்படி மயங்கி அனாதையாக கிடக்கும் அவசியம் வந்திருக்காது.

ஆம். அவன் அவர்களை கண்டுகொள்ளாமல் விட்டு குற்றம் இழைத்தான். அந்த குற்றமே பிரம்மஹத்தி தோஷமாக அவனை பந்தாடியது.

அதன் பின்பே அந்தணருக்கு உணவு, அன்னதானம், யாகம், பூஜைகள் என அவன் போக்கு மாறிற்று. அதுவும் பரிகாரம் தேடி ஓடினான்.

ஒரு அந்தணர்க்கு, ஒரு மறை அறிந்தவனுக்கு அவன் செய்த கொடுமை சிவன் காலடிக்கே அவனை வரவழைத்தது.

ஆம். அடியார்க்கு செய்யும் சேவை ஆண்டவனுக்கு, அப்படியே அடியார்க்கு செய்யும் கொடுமையும் இழிவும் ஆண்டவன் கணக்கு.

அப்படி அவன் செய்த தவறு அவனுக்கு பரிகாரம் தேடவைத்து அவன் கர்மத்தை மாற்றிற்று.

அவன் முழுக்க சிவமயமாய் போனபின் அவன் பாவம் மன்னிக்கப்பட்டது, அவனுக்கு சொர்க்கலோக காட்சியும் அருளப்பட்டு அங்கு சிவனடியார்கள் எப்படியான இடத்தில் இருப்பார்கள் என்பது காட்டப்பட்டது.

நந்தி தேவர் அங்கு சொல்லாமல் சொன்னது அதுதான்.

“பாண்டியா, இங்கே மன்னர் இல்லை, பணக்காரன் இல்லை, படித்தவன் அறிவாளி பெரும் கவிஞன் என யாருமில்லை, பூலோகத்தில் இருந்து இங்கு வந்தது யாரென பார்.

இங்கு வந்தது கோவிலில் பூஜை செய்தவர்கள், சிவனுக்காய் வாழ்ந்தவர்கள், வேதம் ஓதியவர்கள், யாகம் இயற்றிவர்கள், சிவனே சகலமும் என வாழ்ந்தவர்கள்”

அதை முழுக்க அறிந்த மன்னன் பின் அப்படியே சிவநினைவாகிப் போனான். சிவனை அடைய ஆலயமும் வழிபாடும் அவசியம் என எண்ணற்ற ஆலயங்களை கட்டினான்.

நெல்லை, அம்பாசமுத்திரம் என எல்லா இடமும் அவனால் கோவில்கள் எழுந்தன. எண்ணற்ற மக்கள் ஆலயம் வரவேண்டும், சிவனை தொழுது ஈடேற வேண்டும் எனப் பெரும் விருப்பம் கொண்டு, சிவனடி ஒன்றே சொர்க்கம் ஏகும் வழி என்பதை அனுபவித்து மற்றவரும் வர வழி செய்தான்.

ஆம். மன்னனோ, மக்களோ யாராயினும் சிவனடி வராமல் சொர்க்கம் ஏக முடியாது என்பதும், அடியார்களை ஆதரிப்பதே புண்ணியத்திலும் பெரும் புண்ணியம், அவர்கள் ஒருவர்தான் சொர்க்கம் செல்ல தகுதி உள்ளோர் என்பதையும், அவர்களுக்கு செய்யும் நல்லது கெட்டதெல்லாம் சிவனையே சாரும். அவர்களுக்கு நல்லது செய்தால் சிவம் நம்மை தேடிவரும், அவர்களை அலட்சியம் செய்தால் சிவம் நம்மை அலட்சியம் செய்யும் என்பதையும் இத்திருவிளையாடல் போதிக்கின்றது.

வேதம் அறிந்தவரை ஆதரிப்பது பெரும் புண்ணியம், சாதுக்களை அலட்சியப்படுத்துவதும் விரட்டி புண்படுத்துவதும் மகா பாவம் என்பதையும் இந்த திருவிளையாடல் சொல்கின்றது.

அப்படியே பிரம்மஹத்தி என்பது எந்த இன்பத்தையும் அனுபவிக்க விடாததும், எந்த வாய்ப்பு இருந்தாலும் அது துன்பத்தையே தரும், அந்த பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட எல்லா வினையும் அந்த திருவிடை மருதூர் கோவிலில் கழியும் என்பதையும் இந்த திருவிளையாடல் போதிக்கின்றது.

உச்சமாக மதுரை ஆலய சோமசுந்தரேஸ்வரர் சன்னதியும் கயிலாயமும் வேறல்ல, முழுக்க சிவனில் கரைந்தவர்கள் அங்கே அந்த சொர்க்கலோகத்தை, கயிலாயத்தை காணமுடியும் என்பதை மிக உறுதியாக சொல்லும் திருவிளையாடலும் இதுவே.

மதுரை ஆலயம் என்பது எல்லா தேவர்களும் வாழுமிடம், சிவன் வாழும் அவ்விடம் எல்லா தேவர்களும் உண்டு என்பதை சொல்லி அந்த ஆலய பெருமையினை மீண்டும் உரக்க சொல்கின்றது இந்தத் திருவிளையாடல்.

மதுரை ஆலயம் செல்வோர் திருவிடை மருதூருக்கு சென்றுவந்தால் கூடுதல் பலன், கர்மம் தீர்த்த பலன் உண்டு என்பதும் இங்கு ஆழ சொல்லப்படும் தத்துவம். முயன்று பலன் பெறுவோர் பாக்கியசாலிகள்.

திருவிளையாடல் : 16 சிவகணங்கள் வீரர்களாகிய படலம்.

பெரும் சிவனடியாராக வாழ்ந்த அனந்தகுண பாண்டியன் சிவலோகம் சென்றபின், அவன் மகன் குலபூஷண பாண்டியன் அரசனான காலமது.

எல்லா நாட்டிலும் பழைய அரசன் மறைந்து புதிய அரசன் வரும்போது உள்நாட்டிலும், அயல்நாட்டிலும் பலத்த சலசலப்பும், அரசியல் உள்ளிட்ட இதர கணக்குகள் பல காற்றில் ஆடும் கிளைகள் போல‌ நேரடியாக தெரியும். சில மண்ணுக்குள் வேர் போல அமைதியாக நடக்கும்.

அப்படி குலபூஷணன் பதவியேற்ற காலம், சேதிராயன் எனும் வேடர்குல அரசன் குலபூஷண பாண்டியனை வெல்ல படைதிரட்டத் தொடங்கினான். இவன் பாண்டியனுக்கு பெரும் பகைவனாக இருந்தவன், அனந்தகுண பாண்டியன் காலத்துக்கு பின் புதிய அரசனாக வந்த குலபூஷணுக்கு பெரும் அனுபவம் இல்லை என்பதாலும், அவனுக்கு ஆட்சி மற்றும் போர் பெரும் பழக்கம் இல்லை என்பதாலும் ஓசைப்படாமல் தயாரானான்.

வேடுவ குலம் என்றால் மலைநாட்டவர்கள், கடுமையான பயிற்சி கொண்டவர்கள். எப்போதும் விலங்குகளுடன் போராடிக் கொண்டிருப்பதாலும் ஒரு மாதிரியான மனம் படைத்தவர்கள். பாண்டிய தேசம் மலை வளங்களுக்காக தங்களை அடிமைப்படுத்தியதாகவும், இனி அவர்களை நாம் அடிமைப்படுத்தவேண்டும் என்றும் கருவிக் கொண்டிருந்தவர்கள்.

குலபூஷணின் எதிரிகள் வேறு அவனை தூண்டிவிட்டார்கள். ரகசியமான ஆதரவளித்து, அவன் பாண்டியனுடன் மோதி கலகம் செய்யும் போது தாங்களும் எதிர்பாரா விதமாக தாக்கி குலபூஷணனை நிலைகுலையச் செய்து நாட்டை கைப்பற்ற திட்டமிட்டார்கள்.

பெரும் சதி மெல்ல மெல்ல அரங்கேறிக் கொண்டிருந்தது.

குலபூஷண அவைக்கு இதெல்லாம் மெல்ல தெரியவந்தது. அதை எப்படி முறியடிப்பது எனப் பெரும் ஆலோசனை வந்தபோது பாண்டியன் அப்பொறுப்பை தன் அமைச்சன் சௌந்திரசாமந்தன் என்பவனிடம் கொடுத்தான்.

சாமந்தன் மாபெரும் சிவபக்தன்; எப்போதும் சிவநினைவில் சிவனுக்கான் காரியங்களை செய்து கொண்டே இருப்பவன். ஆலய உதவிகள், அடியார் உபசரணை, ஓதுவார்கள் உபசரிப்பு என எப்போதும் சிவநினைவிலே சிவபக்தியிலே ஊறியிருப்பவன்.

அப்படியான சிவனடியார் ஒரு பொறுப்பை தெய்வத்தை முன்னிட்டு மனசாட்சியோடு செய்வான் எனப் பாண்டியர் அவையில் அவனுக்கு தனி இடம் கொடுக்கப்பட்டது.

அந்த இடத்தின்படியே இப்போது வந்திருக்கும் பெரும் ஆபத்தை முறியடிக்க படைதிரட்டும் படி பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது, பெரும் நிதி அவரிடம் கொடுக்கப்பட்டது.

அதைக் கொண்டு உள்நாடு மற்றும் அயல்நாடுகளில் இருந்து பெரும் படை திரட்டவேண்டும்; வகை வகையான குதிரைகள் பலமான யானைகள்; மிக பலமான ஆயுதங்கள்; கவசங்கள்; வண்டி இழுக்கும் காளைகள் இன்னும் போர் என வந்தால் சமாளிக்க தேவையான உணவுப் பொருள்கள்; மருந்து வகைகள் என எல்லாம் தயார் செய்யும் பொறுப்பு அவரிடம் கொடுக்கப்பட்டது.

மன்னன் குலபூஷணன் அவனை மிகவும் நம்பினான்; பெரும் நம்பிக்கை கொண்டிருந்தான்; அதனால் அவையிலே துணிந்து சொன்னான்.

“சாமந்தா, இந்த அரசின் கருவூலமே உம்மிடம் ஒப்படைக்கப்படுகின்றது, எவ்வளவு பொருள் வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளுங்கள், பெரிய வலுவான படையினை தயார் செய்யுங்கள்.

குறுகிய காலத்தில் உள்நாடு, வெளிநாடு என ஆட்களை அனுப்பி பெரும் படையினை நாட்டுக்கு தரவேண்டும், இது அரசகட்டளை” எனச் சொல்லி கருவூல அறையின் திறவு கோலை அவரிடம் கொடுத்தான்.

சாமந்தனும் சரியாகத்தான் இருந்தான். ஆனால், அந்த கருவூலத்தை அவன் திறந்து பார்த்ததும் மலைத்துப் போனான், வாயடைத்துப் போனான்.

அரச கருவூலம் எப்படியானது என்பதை அங்கேதான் கண்டான். பெட்டிகளிலோ, பாதுகாப்பான அலமாரிகளிலோ வைக்கமுடியாதபடி அங்கே தங்கமும், நவமணிகளும், காசும், பொன்னும் குவிந்துக் கிடந்தது. பாண்டிய தேசம் எவ்வளவு வளமானது என்பது அங்கே தெரிந்தது.

தன் இடுப்பளவுக்கும்மேல் குவியல் குவியலாக செல்வங்கள் சுற்றி கிடக்கக் கண்டு மிரண்டுபோனான் சாமந்தன், அவை வீசிய ஒளியும் காட்டிய மாயாஜாலமும் அவனை மயக்கின‌.

அவன் அங்கே மயங்கிப்போனான். ஒருவன் எங்கு மயங்குகின்றானோ அங்கே அவன் அடியாழத்தின் ஆசைகளெல்லாம் ஊற்றெடுக்கும்.

அப்படி இந்த சாமந்தனின் மனதில் அவன் கொண்டிருந்த சிவபக்தி எனும் அந்த ஆசை பெரிதாய் வெடித்தது. இந்த செல்வத்தையெல்லாம் சிவனுக்கு கொடுத்தால் என்ன என மனம் சொல்லிற்று.

கொஞ்சமும் யோசிக்காமல் அதனை எடுத்து சிவகாரியக்களுக்கு செலவிடத் தொடங்கினான் சாமந்தன். கையில் மாத கொடுப்பனவு மட்டும் கொண்டிருந்து அதை வைத்தே சிவகாரியங்களை செய்தவனுக்கு இந்தப் பெரும் செல்வம் பெரும் வரமாயிற்று.

கிணற்றில் சொட்டு நீருக்காக ஏங்கியவனுக்கு காவேரி பொங்கி வந்தால் எப்படி இருக்கும்? அப்படி பெரும் செல்வம் கைக்கு வந்ததும் அதனை சிவனுக்காய் அள்ளி அள்ளி இறைக்கத் தொடங்கினான்.

கருவூல அதிகாரிகள் அவன் கேட்க கேட்க கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். ஆனால், கணக்கை சரியாக ஓலையில் குறித்து வைத்துக் கொண்டே இருந்தார்கள்.

சிவாலயப் பணிகள், அடியார் பணிகள் எனப் பெரும் பெரும் காரியங்களை செய்தான்; சிவனைப் பாடும் புலவர்களுக்கு நிதி அளித்தான்; கோவில் திருப்பணி கும்பாபிஷேகம், மடங்களுக்கு உதவி என எல்லா காரியமும் பெரிதாக செய்தான்.

அவன் முதலில் நெல்லுக்கு பாய்வது புல்லுக்கு பாயட்டும் என்பது போலத்தான் படைதிரட்டும் காரியத்தின் ஓரமாக சிவனுக்கும் செய்தான். ஆனால், அதுவே விருப்பமாகி ஆசையாகி தொடர்ந்து முழுக்க சிவகாரியங்களையே செய்யத் தொடங்கினான்.

இந்த ஒரு ஆலயம் மட்டும், இந்த ஒரு அடியார் மட்டும் என அவன் நீட்டிக்கொண்டது நீண்டு சென்றது. அவனால் அதில் இருந்து வெளிவரமுடியவில்லை. சிவபக்தி அவனுக்கு அப்படி ஒரு ஏகாந்த இன்பம் கொடுத்தது.

அதே நேரம் அவையில் மன்னரின் விசாரணையும் நடந்தது, படை திரட்டல் பற்றி விசாரித்து கொண்டே இருந்தான்.

அப்போதெல்லாம் ஏதேதோ சொல்லி சமாளித்தவன் விரைவில் படைதிரண்டுவிடும் என உறுதியோடு சொல்லி வந்துவிடுவான்.

மன்னன் சொல்லிவிட்டான் நாளை முதல் ஒழுங்காக படைதிரட்ட வேண்டும் என முடிவோடு இன்றைய திருப்பணிகளை முடிப்போம் என விழுபவன் அப்படியே விழுவான், அது நாளை நாளை என்றாகி நாட்கள் நீண்டதே தவிர ஆயுதம் என ஒரு வாள் கூட வாங்கவில்லை, படை என ஒரு வீரனைக் கூட சேர்க்கவில்லை.

ஒரு மன்னன் எப்போதும் ஒருவனை முழுக்க நம்பக் கூடாது என்பது விதி, அவன் இறைவனை தவிர எல்லோர் மேலும் சந்தேகம் கொண்டிருக்க வேண்டும், தன் உளவு ஆட்கள் மூலம் அவர்களை உளவு செய்தல் வேண்டும், தன் உளவுப்படையினையே உளவறிதல் வேண்டும் என்பதெல்லாம் ராஜநீதி.

அது அல்லாமல் ஒரு அரசன் நல்லபடியாக அரசாள முடியாது, யார் மனம் எப்படி மாறும் என்பதும், அரசன் எனும் அதிகாரமிக்க இடத்தை கைப்பற்ற எப்படியெல்லாம் திட்டமிடுவார்கள் என்பதும் எப்போதும் சொல்லமுடியாதது.

அதிகாரபோதை என்பது ஒவ்வொரு மனிதனின் அடியாழத்திலும் உண்டு. அகங்காரம், அகம்பாவம், ஆணவம் என வெளியில் சொன்னாலும் அதன் உள்ளிருக்கும் குணம் அதிகாரம், தான் சொன்னபடி நடக்கவேண்டும் எனும் அதிகாரம்.

இதனால் குலபூஷணனும் சாமந்தனை கண்காணிக்க ஆட்களை அனுப்பினான், அவர்கள் தரும் தகவல் அதிர்ச்சியாய் இருந்தது.

“மன்னா, படை திரட்டபட்டதாகவோ ஆங்காங்கே பயிற்சி நடப்பதாகவோ எங்கும் காணமுடியவில்லை. சரி ஒருவேளை அயல்நாட்டில் ரகசியமாக அப்படி நடக்குமோ எனச் சென்றுபார்த்தால் அங்கும் எதுவுமில்லை.

எங்களுக்கு தெரிந்து அவர் படை ஏதும் திரட்டவில்லை. காரணம், இது மறைக்கமுடியாத விஷயம். ஒரு மழை யாருக்கும் தெரியாமல் பெய்துவிடமுடியாது, அப்படியே படைதிரட்டலும் பயிற்சியும் யாருக்கும் தெரியாமல் செய்யும் விஷயம் அல்ல‌.

ஆட்கள், கருவிகள், திடீர் பெரும் உணவுத் தேவை, ஆடைகள், கொல்லர்கள், வண்டிகள், களம், வித்தை சொல்லிக்கொடுப்போர், குதிரைகள், யானைகள் எனப் படையும் பயிற்சியும் இருக்குமிடம் பெரும் களபேரமாய் இருக்கும்.

அப்படி ஏதும் காணப்படவில்லை என்பதை சொல்லிக் கொள்கின்றோம், மன்னர் மன்னிக்க எனச் சொல்லிவிடை பெற்றனர்.

குலபூஷணன் அதிர்ந்துபோனான். திகைத்தான். ஆனால், உடனே ஒன்றையும் வெளிகாட்டவில்லை. காரணம், ஆதாரமில்லாமல் உன்னதமான சிவனடியாரும், இதுவரை ஒரு குறையும் சொல்லமுடியாதவனுமான அந்த சாமந்தனை குற்றம் சாட்டிவிட முடியாது.

இதனால் உடனே ஏதும் பேசாமல் சிலநாட்கள் கழித்து அவையில் வைத்துக் கேட்டான்.

‘சாமந்தா, உம்மிடம் பொறுப்பை ஒப்படைத்து ஆறுமாதம் ஆகிற்று, எவ்வளவு படை திரட்டியிருக்கின்றீர், அதன் வலிமை எண்ணிக்கை என்ன என்பதை அரச சமூகம் அறிய விரும்புகின்றது, நாளை நீர் இதுவரை திரட்டிய படைகளை எம்முன் நிறுத்தவேண்டும், நாம் அதனைக் காணவிரும்புகின்றோம்.

சேதிராயன் படை வலுவாகிவருவதாக தகவல் தெரிவதால் நாமும் மிக வேகமாக தயாராக வேண்டும்” என உத்தரவிட்டான்.

சாமந்தனின் அடிவயிறு கலங்கிற்று; இனிதான் தப்பமுடியாது என்பதை உணர்ந்தான்; பன்னிரெண்டு நாட்களில் படைதிரட்டி வருவதெல்லாம் இனி சாத்தியமில்லை.

இது ராஜவிவகாரம், இங்கே விழுந்து மன்னிப்பு கேட்பதெல்லாம் சாத்தியமில்லை. ஒருவேளை அப்படியே மன்னன் மன்னிப்பு கோரினாலும் இதுவரை எடுத்து செலவழித்த பொருளுக்கு என்ன ஈடு?

எல்லாப் பொருளையும் சிவனுக்கு கொடுத்தபின் இனி என்ன செய்து சமாளிக்க முடியும்?

அரண்டே போனவன் இனி தனக்கு மரணம் என்பதை உணர்ந்தான், நிச்சயம் இனி தப்பமுடியாது எனத் தெரிந்தவன் நேரே சிவனை சரணடைந்தான்.

சொக்கநாதன் பாதம் பணிவதை தவிர அவனுக்கு வேறு வழியில்லை. அரசபணம் கையாடல் எனும் வகையில் அது பெரும் தண்டனை.‌ முதலில் விசாரிப்பார்கள், இவர் திருப்பணி எனச் சொன்னால் அது அரச அதிகாரம் எனும் வகையிலும், அரசனை மீறி செயல்பட்ட வகையிலும் கொடுத்த மகா முக்கியமான வேலையினை விட்டு நாட்டுக்கு துரோகம் எனும் வகையில் பலவீனமாக்கியதாகவும் குற்றம்சாட்டப்படும்.

எடுத்தப் பொருளை சிவனுக்கு கொடுத்ததற்கு கணக்கு சரியாக உண்டா என்றால் அதுவுமில்லை.

இனி அப்பொருளை திருப்பி கொடுக்க வழி உண்டா என்றால் இல்லை.

இனி தனக்கு மரணமே என்பதை உணர்ந்த சாமந்தன் நேரே ஆலயம் ஏகினான். பொற்றாமரை குளத்தில் குளித்தவன் இனி சிவனே தன்னை காக்கமுடியும் என அவர்முன் சென்று அமர்ந்துக் கொண்டான்.

எமன் வரும்போது சிவனை அணைத்துக் கொண்ட மார்கண்டேயன் போல “சிவனே, எம்பிரானே இதோ வரப்போகும் ஆபத்தை அறிந்தவர் நீர்.

நான் இந்த அரச பணத்தில் ஒரு காசு எனக்காக, என் குடும்பத்துக்காக எடுக்கவில்லை. நான் செய்ததெல்லாம் உமக்கானப் பணி, இந்த மதுரையம்பதியில் இருக்கும் ஒரே அரசனான உமக்கானப் பணி.

இனி நான் என்ன செய்வேன், காலை மன்னன் என்னை நிச்சயம் கொல்வான், நான் எதிரிநாட்டு மன்னனுடன் சேர்ந்து இப்படி திட்டமிட்டு சாதுரியமாய் நாட்டை பலவீனப்படுத்தினேன் எனச் சொல்லிக் கொல்வான்.

இனி என்னை காக்க உம்மால் மட்டும் முடியும். ஆனால், உமது சித்தம் நான் சாவது என்றால் கயிலாய பலனை எமக்கு தந்துவிடும்” எனச் சொல்லி கதறினான்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது, “சாமந்தா கலங்காதே, நாளை காலை நம்பிக்கையோடு அரண்மனைக்குச் செல், நாமே உமக்கு அதிசயம் நிகழ்த்துவோம், வீரர்கள் வருவார்கள்”

அதைக் கேட்டதும் மரணம் தப்பி பிழைத்தவன் போல், புலிவாயில் விழுந்து உயிரோடு எழுந்தவன் போல் மிக்க மகிழ்ச்சியுடன் பொங்கும் கண்ணீருடன் சிவனை வலம் வந்து பலமுறை வணங்கி, பூக்களிட்டு வணங்கி மறுபடி மறுபடி வணங்கி, வாசல்வரை சென்று மறுபடி ஓடிவந்து வணங்கி பிரிய மனமில்லாமல் சென்றான் சாமந்தன்.

மறுநாள் காலை விடிந்தது. மதுரையில் பாண்டிய மன்னன் தயாராக இருந்தான், அவன் அருகில் சிவனே என்றபடி ஆலவாய் நாதனை வணங்கி நின்றான் சாமந்தன்.

“எப்பொழுது படைகள் வரும் சாமந்தா” என்றான் பாண்டியன்.

“மன்னா, இன்னும் சற்றுநேரத்தில் வந்துவிடும் மன்னா” என்றபடி கலக்கமே இல்லாமல் அமர்ந்திருந்தான் சாமந்தன்.

மன்னனுக்கு சாமந்தன் மேல் சந்தேகம் உண்டு, அதனால் ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டான். ஆனால், சாமந்தனிடம் எந்த பதற்றமுமில்லை.

மன்னன் குழம்பினான். வாசலை பார்த்துக் கொண்டே இருந்தான், அரண்மனையின் பிரமாண்ட முற்றம் தயாராக இருந்தது.

திடீரென சங்கு மும்முறை முழங்கிற்று, அது படை வருகின்றது என்பதற்கான அறிகுறி.

மன்னன் எழுந்து நின்றான், சாமந்தனும் எழுந்து நின்றான். இதர அமைச்சர்கள் தளபதிகளெல்லாம் எழுந்து நின்று கவனித்தார்கள்.

சாமந்தனால் நம்பவே முடியவில்லை, அந்தக் காட்சியினை அப்படியே இமைக்காமல் பார்த்தான், மன்னன் மகிழ்வோடு பார்த்தான்.

ஆம் . பெரும் படை அவ்வளவு சீராக அணிவகுத்து வந்தது. முதலில் காலாட்படை வந்தது; அவர்கள் கையில் வலுவான ஈட்டி இருந்தது. அடுத்து வில் அம்பு படை, வாள் படை, அடுத்து குதிரைப் படை, அடுத்து பெரிய மலைகளை போன்ற யானைப்படைகள் வந்தன‌.

பல ஆயிரம் பேர் கொண்ட அந்த சேனை அணிவகுத்து வந்து நின்றது.

மன்னன் அதிசயித்து போனான். தளபதிகள் கண்களை சுருக்கியபடி மீன் கொடி பறந்த அந்த சேனைக்குள் சென்று பார்த்தனர்.

அளவெடுத்து செய்தது போல் ஒரே மாதிரியான பருவத்தில் வீரர்கள், ஆனால் முகஜாடை மட்டும் மாறியிருந்ததும், உயரம் உடல்கட்டு எல்லாம் அப்படியே இருந்தது.

ஈட்டி எரியும் வீரர்கள், வாள் வீரர்களெல்லாம் அவரவர்க்குரிய உடல்வாகில் இருந்தார்கள். உயர்சாதி குதிரைகளில் நல்ல உயரமான வீரர்கள் இருந்தார்கள்.

யானைகள் ஒரே தரத்துடன் பலத்துடன் இருந்தன; அவற்றின் கொம்புகளில் பூண் பூசபட்டிருந்தது; ஒரே தரத்தில் இருந்தன; அதன் மேல் அம்பும் ஈட்டியும் ஏந்திய வீரர்கள் இருந்தனர்.

யானைகள் மந்தகத்தின் மேல் கவசம் பூட்டப்பட்டிருந்தது. எந்த கோட்டையினையும் உடைக்கும் அளவு அவை பலத்த ஆயுதம் கொண்ட படையாக இருந்தது.

சுருக்கமாக, அப்படைகள் எப்போதும் யுத்தத்துக்கு தயாராக இருந்தது, இப்படி ஒரு படை அமைவது அபூர்வம், மகா அபூர்வம்.

தளபதிகள் பெரும் மகிழ்ச்சி கொண்டார்கள். யுத்த விதி அறிந்திருந்ததால், படைகள் பற்றிய பெரும் அறிவு கொண்டிருந்ததால் மன்னன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்.

சாமந்தனை சந்தேகித்துவிட்டோமே, நம் உளவுத்துறைக்கே தெரியாமல் ரகசியமாக இப்படி ஒரு படை திரட்டமுடியுமென்றால் எப்படிப்பட்ட வித்தகனாக இவர் இருக்கக் கூடும்?

தெரியாமல் சந்தேகித்துவிட்டோம் என்றவன் உடனே சாமந்தனை கட்டி வாழ்த்தினான், “சாமந்தா, இவ்வளவு பலமான படைகளை திரட்ட வாய்ப்பே இல்லை, ஒரே மாதிரியான ஆட்கள், ஒரே மாதிரியான குதிரைகள், பலமான யானைகள் என ஒவ்வொன்றும் பார்த்துப் பார்த்துச் செய்திருக்கின்றாய்.

உன்னை இனி நான் அரசின் பெரும் இடத்தில் அமர்த்துவேன்; பொன்னும் மணியும் உன் முன் குவிப்பேன்; நீ இனி அரசங்க தலைமை அமைச்சன்” எனச் சொல்லி வாழ்த்தி தன் முத்துமாலையினை அவனுக்கு அணிவித்தான்.

பாண்டிய மன்னர்கள் அதிசிறந்த முத்துக்களைத்தான் மாலையாக அணிவார்கள், அந்த மாலையினைப் பெறுதல் என்பது பெரும் கௌரவம்.

மரணப்பிடியில் இருந்து தப்பி மணிமுடி கிடைத்த மகிழ்ச்சியில் இருந்தான் சாமந்தன் “சிவனே நன்றி சிவனே” என மனமார உள்ளே சொல்லிக்கொண்டே இருந்தான்.

அரசன் சட்டென இறங்கிச் சென்று அந்த சேனைகளின் தலைவனை சந்தித்தான், குதிரையில் இருந்தவன் அரசனைக் கண்டதும் புன்னகைத்தபடியே இறங்கினான்.

அரசன் விசாரித்தான்.

“எந்த ஊர்”

“இதே மதுரைதான்”

“திருமணம் ஆகிவிட்டதா?”

“இந்த ஊர் பெண்ணேதான்”

“பிள்ளைகள்?”

“இருவர்”

“எப்படி சேனைக்குள் வந்தீர்?”

“பாண்டிய நாட்டுக்கு ஆபத்து என சாமந்தன் அழைத்தார், அவருக்காக நான் வந்தேன். இந்தப் படைகளை நானே திரட்டினேன். எல்லாமும் அவரின் பெரும் செலவு.”

“அப்படியா?”

“ஆம். சாமந்தன் ஒவ்வொரு துளி செல்வமும் இந்த படைக்குத்தான் செலவழித்தார், நானும் அவருமே இதனை ரகசியமாக செய்தோம், இன்னும் தேர்படை தயாராகின்றது, இதர படைகள் தயாராகின்றன, வேடுவர்கள அம்பு விடுவதில் வல்லவர்கள் என்பதாலும், இன்னும் பலமான படை என்பதாலும் நாமும் சிலவகை ஆயுதமும் செய்து பயிற்சியும் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அவை பின்னால் வரும், சாமந்தன் அதனை கண்காணித்துக் கொண்டிருக்கின்றார்.”

“நல்லது தலைவனே, உம்மால் சேனை பலம்பெற்றிருக்கின்றது.”

“நன்றி மன்னா”

குலபூஷணன் அவனுக்கு பொன்னும் மணியும் கொடுத்து, பட்டாடை அணிவித்து கௌரவித்தான், பெரும் மகிழ்ச்சி அடைந்தான்.

இனி எந்த சேனையும் பாண்டிய தேசத்தை வெல்லமுடியாது என்று குலபூஷணன் மிக்க மகிழ்ச்சியோடு திரும்பி வந்து மேடையிலிருந்து சேனையினை பார்த்துக் கொண்டே இருந்தான்.

இந்த சேனைகளை தங்கவைப்பது; குதிரை யானைகளை பராமரிப்பது; ஆயுத பாசறையெல்லாம் தயாராகட்டும். அதுவரை எப்படி நிலைமையினை கையாள்வது என மனதுக்குள் ஆலோசனை செய்தவன், சாமந்தனிடம் பேசத் தயாரானான்.

சாமந்தனோ நடப்பதை கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தான். இதெல்லாம் தான் செய்தது அல்ல என்பதையும், இந்த சேனை சிவனருளால் வந்தது என்பதையும் அறிவான்.

ஆனால், எங்கிருந்து இந்த சேனை வந்தது என்பது அவனுக்கும் தெரியாது.

அந்நேரம் ஒரு செய்தி வந்தது, “மன்னா எதிரி சேதிராயன் பெரிய புலி ஒன்றால் கொல்லப்பட்டான், அவன் உடல் கிழிந்து கிடந்தது தலை கூட கிடைக்கவில்லை” என அது சொல்லிற்று.

எதிரி அழிந்தான் என இரட்டை மகிழ்ச்சி அடைந்தான் பாண்டியன், “நம் எதிரி ஒழிந்தான் ஒழிந்தான் ஒழிந்தான்” என உரக்கச் சொன்னான்.

அதைக் கேட்டதும் எல்லோரும் மகிழ்ந்தார்கள், சாமந்தனும் மகிழ்ந்தான், எல்லோரும் நிம்மதி அடைந்தார்கள்.

அங்கே வந்திருந்த சேனைத் தலைவனும் அரசனை பார்த்து புன்னகைத்தான்.

சிறிய சலசலப்பு அங்கே உண்டானது. காரணம், எதிரி நாட்டு மன்னன் இறந்துவிட்டான், அந்நேரம் பெரும் சேனையினை போர்கால சூழலில் வைத்து பராமரிப்பது அனாவசியமான செலவு.

எந்த அரசும் அப்படி ஒரு சவாலை அவசியமற்று எடுக்காது, அதனால் போர் இல்லா நேரம் என்பதால் இந்த சேனையினை இனி அவரவர் வீட்டுக்கு அனுப்புவது என முடிவாயிற்று.

மன்னன் சொன்னான், “வீரர்களே, நமக்கிருந்த பெரிய ஆபத்து சிவனருளால் நீங்கிற்று, அதனால் இம்முறை இனி போர் இல்லை, இனி அவரவர் இல்லம் செல்லலாம், உங்களுக்கான மாதாந்திர ஊதியம் பௌர்ணமி தோறும் கொடுக்கப்படும்.

இனி நீங்கள் கலைந்து செல்லலாம்” என்றான்.

“அப்படியா மன்னா, நாங்கள் கலையலாமா?” எனப் புன்னகைத்தபடியே கேட்டான் சேனைத் தலைவன்.

“ம்.. அரச உத்தரவு” என்றான் பாண்டியன்.

அவ்வளவுதான், அந்த சேனை சட்டென மறைந்தது, முற்றம் முழுக்க காலியாக கிடந்தது.

எல்லோரும் அதிந்தார்கள். மன்னன் திகைத்தான். என்ன நடந்தது எனத் தெரியாமல் குழம்பினான். பின், மெல்ல சாமந்தனை நோக்கி “என்ன இது?” என்பது போல் பார்த்தான்.

அஞ்சி ஒடுங்கிய சாமந்தன் வேர்க்க விறுவிறுக்க மன்னன் முன் பணிந்து நடந்ததை சொன்னான்.

மன்னன் மனதால் ஒடுங்கிப் போனான், கருவூல பணத்தை எல்லாம் இவர் சிவபணிக்கு செலவழித்துவிட்டார் என்றால் இங்கு வந்தது யார்? என் முன் நின்றது யார்? யார் அது? எனத் திணறிப்போனான்.

அப்போது அசரீரி கேட்டது.

“பாண்டியா, சாமந்தன் எமக்கு செய்த திருப்பணியால் நாமே அவனுக்காக நம் கணங்களுடன் வந்தோம், சேனை தலைவனாக வந்தவன் நாமே, சாமந்தனின் பக்திக்காக நாமே இறங்கிவந்தோம்” எனச் சொன்னது.

“சாமந்தா, நீ எவ்வளவு பாக்கியசாலி. உனக்காக பரம்பொருளே இறங்கி வருவது என்றால் உன் பக்தி எத்தகையது, உன்னால் நானும் இறைவனை காணும் பாக்கியம்பெற்றேன்.

இனி நீ முழுக்க சிவனுக்கானவன், அரசகாரியங்களில் இருந்து உன்னை விடுத்து சிவகாரியத்துக்கே கொடுக்கின்றேன். சிவனுக்காய் நீ என்ன கேட்பாயோ அதை இந்த அரசு வழங்கும்” எனச் சொல்லி அவனை ஆலயவாய் சன்னதிக்கு அழைத்து சென்று மரியாதை செய்து சிவனிடம் ஒப்படைக்கின்றேன் எனச் சொல்லி வணங்கினான்.

சாமந்தன் நீண்டகாலம் சிவதொண்டை செய்து பெரும் திருப்பணிகள் செய்து சிவனில் கலந்து போனார்.

மதுரை ஆலயத்தின் அழிக்கமுடியா சாட்சிகளில் இந்த சாமந்தனும் ஒருவர், இந்தத் திருவிளையாடலும் ஒன்று.

இந்தத் திருவிளையாடல் சொல்லும் தத்துவம் நிறைய உண்டு. ஆழமான தாத்பரியம் உண்டு.

முதலாவது, மன்னன் லௌகீக காரியங்களை தேடினான். அதனால் அஞ்சினான்; அரற்றினான்; அவன் லௌகீக வாழ்விலே கருத்தாய் இருந்தான். சிவனை அவன் தேடவில்லை.

சாமந்தனோ ஒவ்வொரு இடத்திலும் சிவனையே தேடினான். பெரும் பொருள் கையில் இருந்த நேரம் அவன் தேனை தொட்டவன் புறங்கையினை சுவைப்பது போல் சுவைத்திருக்கலாம்.

எல்லையற்ற பெரும் பொருளும் அதிகாரமும் கிடைத்தபோது தனக்கென எல்லா இன்பங்களையும் வாங்கியிருக்கலாம், ஏன் தனக்கென கூட ஒரு படையே திரட்டி அதிகாரம் செய்திருக்கலாம்.

ஆனால், குவிந்த பெரும் செல்வத்தையும் அவன் சிவனுக்கே கொடுத்தான், ஒரு துளி கூட பாக்கியில்லாமல் கொடுத்தான்.

அவன் அரசாங்கத்தில் இருந்து பொருளை எடுக்கும் போதெல்லாம் கருவூல அதிகாரிகள் ஓலையில் எழுதியபோது சிவனும் தனக்கொரு ஒலையில் இவன் கணக்குகளை எல்லாம் எழுதிக்கொண்டேதான் இருந்தார்.

அவர் கண்காணித்துக் கொண்டே இருந்தார்.

உரிய நேரம் வந்தபோது தன் பக்தனை தன்னை நம்பியவனை காக்க அவரே தன் கணங்களோடு படைகளோடு வந்தார். வந்தவர் சாமந்தன் பக்தி எப்படியானது என்பதை உலகுக்கே சாட்சியாக சொல்லிவிட்டுச் சென்றார்.

சிவன் நினைத்திருந்தால் சேதிராயனை என்றோ புலி கொன்றிருக்கும். எப்போதோ சேனை அவசியமில்லாமல் போயிருக்கும்.

ஆனால், சாமந்தனின் புகழ் நிலைத்திருக்காது. அதனால், அவனுக்கு சாட்சி சொல்லும்படியே சரியாக வந்து, எதிரியினையும் ஒழித்து, சாமந்தனின் பக்திக்கு படையோடு வந்து, சிவகணங்களே படைவீரர்களாக வந்து, சாட்சி சொல்லிச் சென்றார்.

படையோடு வந்து மன்னனை மிரட்டிச் சென்றதால் அவர் “படைமிரட்டி” என்றானார்.

தன் பக்தனுக்காக சிவன் தன் படையோடு வந்து நின்றார். ஆலயங்களுக்கும், சிவனடியார்க்கும் செய்ததெல்லாம் தனக்கே எனப் பொறுப்பேற்று வந்து நின்றார்.

ஆம். சிவம் என்பது வெறும் சிலை அல்ல, கல் அல்ல. அது உயிருள்ள நன்றியுள்ள மகா தெய்வம், அது ஒவ்வொன்றையும் கண்காணிக்கின்றது.

அந்தக் கண்காணிப்பில் உளமான பக்தியுடன் ஒவ்வொருவர் செய்யும் ஒரு துளி காரியத்தையும் பதிந்து கொண்டு அவனை பின் தொடர்கின்றது.

எங்கே அவனுக்கு ஆபத்தோ, அங்கே வந்து அவனை தற்காத்து அவனுக்காய் சாட்சி சொல்லி அவனின் பக்தியினை உலகுக்கு சொல்லிச் செல்கின்றது.

தன்னை நம்பியவனை எக்காலமும் சிவம் கைவிடுவதே இல்லை, அது பக்தனுக்கு பொறுப்பேற்று கொள்கின்றது. தன் காலடியில் விழுந்த பக்தனுக்கு தானே சகலமும் என வந்து பணியும் பக்தனுக்கு அது சில சோதனைகளை முதலில் தருகின்றது.

அந்தச் சோதனையில் அவன் நின்று சாதிக்கும் போது அவனை தன் பொறுப்பில் எடுத்து தானே அவனுக்காய் நின்று காவல் இருக்கும்.

ஒருவனின் பக்தி உண்மையானால் சிவனும் அவனுக்கு உண்மையாக நின்று காப்பார்.

இந்தத் திருவிளையாடல் ஆழமாக சொல்லும் தத்துவம் இரண்டுதான்.

முதலாவது, சிவன் தன் அடியாரை ஒரு காலமும் கைவிடுவதில்லை. தனக்காக ஒருவன் செய்யும் எல்லா காரியத்தையும் சிவன் கவனித்து உரிய நேரம் பெரும் அங்கீகாரம் தந்து காக்கின்றார். சோதனைகளில் அவன் சரிவதில்லை , அவமானப்பட்டு வெட்கப்பட்டு போவதே இல்லை.

இரண்டாவது, இந்த சாமந்தனின் தொண்டால் நாட்டில் சிவாலயங்கள் பெருகின, அடியார்கள் பெருகினார்கள், சிவவழிபாடு புத்துயிர் பெற்றது.

சிவ வழிபாடு பெரிதாக நடக்கும் நாட்டின் எதிரிகள் தானே அழிவார்கள், அங்கு எல்லா ஆபத்தையும் சிவனே எதிர்கொள்வார், சிவனே காவல் இருப்பார்.

மன்னனிடம் செல்வம் இருந்தது. பெரும் செல்வமும் அதிகாரமும் குவிந்திருந்தது, அவன் அதை கொண்டு சிவனை முழுக்க நம்பாமல் படைகள், போர்கள் எனத் தன்னை நம்பினான்.

ஆனால், சாமந்தனுக்கு அதே செல்வம் வந்ததும் அவன் தன்னை நம்பவில்லை, மானிடரை நம்பவில்லை, சிவனுக்கு செய்யவேண்டிய எல்லாமும் செய்தான்.

கடைசியில் சிவனிடமே சரணடைந்தான்.

அந்த சரணடைவே சிவமே அவனுக்கு இறங்கிவரும்படி அதிசயம் செய்தது.

சிவனை நம்பியோர் வாழ்வர், சிவனை நம்பி வழிபட்ட தேசம் காவலோடும் நிம்மதியோடு வாழும், நாட்டில் சிவபக்தி அவசியம் என்பதை அழுத்தமாக சொல்லும் திருவிளையாடல் அது.

மாணிக்கவாசகருக்கு நரிகளை பரிகளாக்கிய எம்பெருமான் அதற்கு முன்பே சாமந்தனுக்கு படையோடு வந்து சாட்சி சொல்லி காத்தார், இது முக்கியமான சிவ‌ சாட்சி.

மதுரை ஆலயம் செல்லும் போது இந்த சாமந்தனை நினைந்து சிவனுக்கு காணிக்கை இடுங்கள். சாமந்தனை நினைந்து சிவனடியாரை ஆதரியுங்கள். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் உயர்வீர்கள். எந்தப் பெரும் சிக்கல் வந்தாலும் சிவனருளில் சத்தமில்லாமல் ஓய்ந்துபோகும், சிவன் உங்களுக்கு சாட்சியாய் நிற்பார். இது சத்தியம்.

காசி வாழ தேசம் வாழும் என்பது சாதாரணம் அல்ல; காசி வாழ்ந்தால் எல்லா சிவாலயங்களும் வாழும்; எல்லா சிவாலயங்களும் வாழ்ந்தால் சிவனருள் தானாக வரும். அப்போது தேசம் செழிக்கும்.

இதைத்தான் இந்த திருவிளையாடல் அன்றே சொல்லிற்று.

திருவிளையாடல் புராணம் : 17 இந்திரன் மணிமுடி சிதறிய படலம்.

அப்போது மதுரையினை உக்கிர பாண்டியன் ஆண்டுகொண்டிருந்தான். மிக மிகத் தொன்மையான அக்காலத்தில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் இருந்தன. அதுவும் முற்கால அரசாய் இருந்தன. அங்கே சிவபக்தி மேலோங்கி இருந்தது.‌ மதுரை ஆலவாயன் நாதன் ஆலயம் அந்த அரசுகளுக்குள் முக்கியமான சிவதலமாய் இருந்தது.

அகத்தியர் முதலானோர் முருகப்பெருமானை தலைவனாகக் கொண்டு தமிழ்ச்சங்கம் நடத்தி தமிழும் சனாதனமும் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் என்பதும், தமிழ்ச்சங்கம் என்பதும் சனாதனம் என்ற ஒன்றிற்கே அகத்திய முனிவரால் வளர்க்கப்பட்டது.

சீரும் சிறப்புமாக அரசுகள் இயங்கி, சிவ வழிபாடு மேலோங்கி அதனால் நாடு செழித்து மக்களும் வாழ்வாங்கு வாழ்ந்துக் கொண்டிருந்தனர்.

அப்படியான காலகட்டத்தில் சிவன் ஒரு திருவிளையாடலை செய்யவிரும்பினார். அதன்படி மழை பொய்த்தது. சேர, சோழ பாண்டிய தேசங்கள் மழையின்றி வறண்டன‌.

தென்முனை என்பது பனிபடர்ந்த மலைகள் கொண்ட இடம் அல்ல; மழை ஒன்றாலேதான் அவை நீர்வளம் பெறும்; இதனால் மழையின்றி வாழமுடியாது.

மழை பொய்த்ததால் மூவேந்தர்களும் அகத்தியரை அணுகி பரிகாரம் தேடினார்கள். மழை என்பது ஒரு நாட்டின் அளவுகோல்; மக்கள் அறநெறியிலும் பக்தியிலும் வாழ்வார்களோ அதை பொறுத்து பஞ்சபூதம் அளக்கும் ஐஸ்வர்யத்தின் அளவுகோல்.

மக்களை அந்நெறியில் செலுத்துதல் அரசனின் கடமை; அதனால் நாட்டின் மக்கள் செய்யும் எல்லா தவறுக்கும் மன்னனே பொறுப்பாகின்றான்; அதனால் அந்த மூவேந்தர்களும் அகத்தியரிடம் பரிகாரம் தேடி வந்தனர்.

அகத்தியர் மனம் சிவனில் கரைந்த ஒன்று; முழு யோகியான அவர் மனம் சிவனின் விருப்பத்தை, அவன் செயலை மட்டுமே சொல்லும்; சிவனின் விருப்பம் எதுவென உணர்ந்த அகத்தியர் அதை சரியாகத் தன் மொழியில் உரைத்தார்.

“மன்னர்களே, இது கோள்களின் சஞ்சாரத்தினால் வந்த சிக்கல். இந்த நிலை 12 ஆண்டுகள் நீடிக்கும். இந்த உலகில் எப்போதும் எல்லாமும் பெற்றிருக்கும் மனிதனுமில்லை, நாடுமில்லை. நவக்கிரகங்கள் நிலைப்படி இனி 12 வருடம் சோதனைக்காலம், மழை பெய்யாது” என வருத்தமாகச் சொன்னார்.

“இதற்குப் பரிகாரம் இல்லையா அகத்தியரே?” என மூவேந்தரும் கேட்க, “நீங்கள் சொர்க்கலோகம் சென்று தேவர்களின் அதிபதியான இந்திரனை சந்தித்தால் தீர்வு உண்டு” என மொழிந்தார் அகத்தியர்.

ஆனால், மானுடர்களான தாங்கள் எப்படி அவனிடம் செல்வது? அதற்கான எந்த சக்தியும் இல்லையே என மூவேந்தர் வருந்த, “மன்னர்களே அஞ்சவேண்டாம், சோமவார விரதமிருந்து சிவனை வேண்டினால் அந்த மகா பரம்பொருள் உங்களுக்கு இந்திரனை சந்திக்கும் அருளை தருவார்” என்றார்.

அதுவரை சோமவார விரதம் என யாரும் இருந்ததில்லை; கேள்விப்பட்டதில்லை. ரிஷிகளுக்கும், ஞானியருக்கும் தெரிந்த ரகசியமாய் இருந்த விஷயம் அது. அதன் பலன் மிக மிகப் பெரியது. சக்திவாய்ந்தது.

இந்தத் திருவிளையாடலின் பொருட்டு சிவன் விருப்பப்படி அகத்தியர் அதனை மன்னர்களுக்கு மொழிந்தார். மன்னர்கள் அதனை அவர் முன் அமர்ந்து கவனமாக கேட்டார்கள்.

ஒளவையார் காலம் அகத்தியரை விடப் பிந்தையது. காலத்தால் அகத்தியரே மூத்தவர். அவரே மூவேந்தருக்கும், ஒளவையாருக்கு முன் மிகப் பொதுவான சித்தராக இருந்தார்.

அகத்தியர் சோமவார விரதம் பற்றி தன் போதனையினை சொன்னார்.

“மன்னர்களே, விரதங்களில் சிறந்தது சோமவார விரதமாகும். அதுவும் அதனை மதுரையம்பதியில் அனுஷ்டித்தால் கோடிமடங்கு பெரும் பலன் உண்டு.

தவறா வரமருளும் விரதம் இது. கார்த்திகை அல்லது மார்கழியில் வரும் அமாவாசையோடு கூடிய சோமவார விரதம் சக்திவாய்ந்தது. அந்த வாரம் முக்கியமானது. இம்மாதத்தில் சுக்கில பட்ச காலத்தில் இருந்து அதாவது அந்த மாதம் சந்திரன் கால அட்டவணைப்படி தொடங்கும் மாதத்தில் இருந்து அந்த முதல் திதியில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.

மன்னர்களே, அந்த விரதம் எப்படி தொடங்கப்பட வேண்டும் என்பதை உரைப்பேன்.

ஞாயிற்றுகிழமை சூரியனை வணங்கி உங்களை தயார் செய்யவேண்டும்; அன்றே பல முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும்; அந்த ஞாயிறு மாலைமுதல் ஏதும் உண்ணாமல் உபவாசமாய் இருந்து திங்கள்கிழமை அதிகாலை எழுந்து கடன்களை முடித்து சிவநினைவில் சங்கல்பம் செய்து நீராட வேண்டும்.

ஈரம் போக உடலை துடைத்து வெண்ணிற வஸ்திரம் அணிந்து விபூதி தீட்டி, ருத்திராட்ச மாலைகள் அணிந்து வாசமிக்க மலர்களை எடுத்துக் கொண்டு, பூஜைக்கென அங்கீகரிக்கப்பட்ட மலர்களை எடுத்துக் கொண்டு சிவாலயம் செல்ல வேண்டும்.

ஆலயத்தில் சித்திவிநாயகரை முதலில் வணங்கிப் பணிதல் வேண்டும். அவரிடம் இந்த விரதம் சித்தியாக அனுக்கிரகம் செய்தருள விளக்கேற்றி நின்றிடல் வேண்டும். அவரிடம் வேண்டிய பின்பே சிவன் சன்னதி அடைதல் வேண்டும்.

அங்கே சிவாகம முறைப்படி சிவ லிங்கத்தை வழிபட வேண்டும். தீப தூபமிட்டு மலர்களிட்டு, நைவேத்யம் படைத்து வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் வேண்டும்.

அடியார்களே, வில்வ இலையின் பெரும் சக்தியினையும் பலனையும் நான் உங்களுக்கு உரைப்பேன். வில்வமானது சிவனின் சக்திகளான இச்சை, கிரியா, யோகம் எனும் மூன்று சக்திகளின் அம்சமாய் இருப்பது, அது பஞ்சபூத சக்திகளை ஈர்த்துத் தருவது.

இந்த வில்வமரத்தின் அடியில் மூன்றுநாள் தங்கி உணவும் உறக்கமுமின்றி சிவநாமத்தை சொல்லி தியானித்தால் எந்த பெரும் சாபமும் அகலும். பஞ்சமா பாதங்களின் சாபம் அகலும்.

அன்பர்களே, சிவனுக்கு அர்ச்சிக்கும் போது பூச்சி அரித்த அல்லது முழுமை இல்லாத வில்வ இலைகளை பயன்படுத்தக் கூடாது. அது விலக்கப்பட்டது. சிவனுக்கு படைக்கப்படும் எல்லாவற்றிலும் முழுமை அவசியம்.

வேறு வில்வ இலையே இல்லாவிட்டால் இந்தப் பழுதான வில்வத்தை இரண்டாம் பட்சமாக பயன்படுத்தலாம்.

நல்ல முழுமையான குறைவில்லா வில்வ இலையால் ஆயிரம் நாமங்களால் சிவனுக்கு அர்ச்சனை செய்து வந்தால் எல்லா ஐஸ்வர்யமும் வரும்; வரன் கைகூடும்; வியாதிகள் ஒழியும்; பகை நீங்கும்; செல்வம் பெருகும்.

வில்வ இலையால் சோமசுந்தரப் பெருமானை நேரடியாக அர்ச்சிக்க முடியாவிட்டால் ஆத்மார்த்தமாக பூஜிக்கலாம். அர்ச்சகர்களை செய்யவைத்து தள்ளி இருந்து அமர்ந்து காணலாம். அதுவும் கைகளால் பூஜை செய்த பலனைத் தரும்.

அடியார்களே, இந்த சோமவார விரதத்தை ஐந்து வகையாக அனுஷ்டிக்கலாம்.

ஒருநாளைக்கு உச்சிபொழுதில் மட்டும் சுத்தமான ஆகாரம் எடுத்தல்; இரவிலே மட்டும் ஒருமுறை உண்ணுதல்; பால் பழம் மட்டும் ஒருமுறை உண்டு இருபொழுது உபவாசமிருத்தல்; முடிந்தவரை திங்கள் இரவு உறங்காமல் இருந்து வழிபடுதல்; நான்கு ஜாமத்திலும் சிவபூஜை செய்தல் என ஐந்து வகையாக அனுஷ்டிக்கலாம்.

இவை ஒன்றுக்கு ஒன்று உயர்ந்த வழி, பெரும் பலனைத் தரும்.

இந்த விரதத்தை அவரவர் சங்கல்பம் செய்தபடி ஒருவருடம், இரு வருடம், மூன்று வருடம், 12 வருடம் அல்லது ஆயுளுக்கு எனத் தொடரலாம், ஆயுளுக்கும் விரதம் என்பவர்க்கு சங்கல்ப பூர்த்தி கிடையாது.

மற்றவர்கள் அவரவர் சங்கல்பம் செய்த காலத்தின் முடிவில் அதனை பூர்த்தி செய்யலாம். அதனை செய்யும் முறையும் அப்படியே பூர்த்தி செய்யும் முறையும் உங்களுக்கு உரைப்பேன்.

அடியார்களே, மதுரை ஆலவாயன் சன்னதியில் வழிபடுவது உத்தமம். அப்படி செல்லமுடியாதவர்கள் தங்கள் இடத்திலே ஒரு லிங்கம் ஸ்தாபிக்கலாம்.

வகுத்த விதிப்படி மண்டபம், குண்டம், மண்டலம் என எல்லாம் வகுத்து சுமார் 30 கழஞ்சு சுத்தமான வெள்ளியில் சிவலிங்கம் ஸ்தாபித்து அர்ச்சனை செய்தல் வேண்டும்.

திங்கட்கிழமை உச்சிப்பொழுது முதல் மாலை வரை சிவபுராணம், சிவலீலைகள் கேட்டு, சிவனின் நினைவுகளில் அவன் பராக்கிரமங்களில் கருணையில் கரைந்து கிடக்க வேண்டும்.

இரவிலே நான்கு ஜாமங்களிலும் சிவபூஜை அவசியம். அந்த நான்கு ஜாமங்களிலும் வில்வ இலை கொண்டு ஆயிரம் சிவநாமம் சொல்லி அர்ச்சித்து வழிபடல் வேண்டும். பூஜை முடியும் போது 108 முறை மூல மந்திரத்தால் ( சிவ சிவ) ஹோமம் செய்து, பஞ்சாட்சரத்தால் சிவனுக்கு அர்க்கியம் கொடுக்க வேண்டும்.

பின் மூலமந்திரத்தால் சிவனுக்கு பூரண ஆகுதி செய்து ஹோமத்தினை முடிக்க வேண்டும்.
இவை தொடர்ந்து செய்து கொண்டே இருக்க வேண்டும். விரதம் முடியும் நாளில் இந்த திங்கட்கிழமை வழமையான இந்த முறையினை மும்மடங்கு வீரியமாக செய்தல் வேண்டும்.

மறுநாள் நித்திய கர்மானுஷ்டங்களை முடித்து, பூஜை முடித்து பதிமூன்று வாழை இலையிலே அரிசி, காய்கறி பரப்பி, பசுவின் பால் நிறைந்த கலசம் வைத்து அர்ச்சித்து 13 பிராமணர்களை அழைத்து தானம் செய்தல் வேண்டும்.

அவர்களை சிவனாகவே பாவித்து முழு மனதோடு தட்சணை, பாதுகை, விசிறி, குடை, வஸ்திரம் எனத் தானம் செய்ய வேண்டும்.

தன் குரு அல்லது ஆச்சாரியாரை அவர் மனைவியோடு வணங்கி வீழ்ந்து தான் பூஜித்த அந்த வெள்ளி சிவலிங்கத்தை அவரிடம் கொடுத்துவிட்டு, பசுவோடு கன்றும் அவரிடம் காணிக்கையாக்கி பட்டும் தட்சணையுமாய் வீழ்ந்து வணங்கி ஆசிபெறுதல் வேண்டும், குருவின் மனமகிழ்ச்சி மிக முக்கியம்.

அதன் பின்பு சிவனடியார்களுக்கு அமுதுபடைத்து அவர்களோடு அமர்ந்து உண்ணுதல் வேண்டும்.

இதுதான் சோமவார விரதம் இருக்கும் முறை. இதனை சரியாக செய்தால் நீங்கள் விண்ணகம் சென்று இந்திரனை காணும் வழியினை பெறுவீர்கள். இந்த விரதம் அதை சாதிக்கும். சிவன்மேல் ஆணை என்றார்.

மூவேந்தர்களும் மக்களை தயார் செய்தார்கள், பெரும் பஞ்சம் ஏற்படுவதை தவிர்க்க பல வழிகளை சொன்னார்கள். முதல் ஆண்டே சுதாரித்து உணவு, நீர் என எல்லாமும் சிக்கனமாக இருக்கச் சொன்னார்கள்.

மக்களை முதலில் நெறிப்படுத்தினார்கள். மக்களும் சிவவழிபாட்டை முன்னெடுக்க வேண்டும். இது சிவனின் நாடு, சிவனே அரசன், எல்லா மக்களும் அவரை வழிபட்டால்தான் கிரகங்களின் பாதிப்பில் இருந்து மீளமுடியும் எனக் கேட்டுக்கொண்டார்கள்.

நாடெங்கும் சிவவழிபாடுகள் தொடங்கின, வானம் பார்த்து மக்கள் வணங்கி நின்றார்கள்.

அந்த விரதத்தை ஒரு வருட காலம் சங்கல்பம் என மூவேந்தர்களும் அறிவித்தார்கள். மூவேந்தர்களும் மதுரையில் தங்கி அனுதினமும் ஆலவாயனை தொழுதார்கள். அகத்தியர் சொன்னபடியே சோமவார விரதம் ஒரு கார்த்திகையில் தொடங்கினார்கள்.

அந்த மகாமுனியின் வழிகாட்டலில் அன்றாடம் பொற்றாமரை குளத்தில் குளித்து சிவனை வழிபட்டு, முறைப்படி பூஜைகள் செய்து, வில்வ இலை அர்ச்சனை, சிவநாமம் எனப் பாடி வணங்கி எல்லா வகையிலும் ஒரு குறைவின்றி ஒரு பொழுது உண்டு, இரு நாழிகை உறங்கி கடுமையான விரதம் இருந்தார்கள்.

எப்போதும் சிவ நினைவில் அவர்கள் காத்த விரதம் நிறைவடையும் நேரம் வந்தது. அந்த சக்திவாய்ந்த யாகத்தின் பலனால் இந்திர விமானமே மதுரைக்கு வந்து அவர்களை விண்ணகம் அழைத்துச் சென்றது.

அங்கே மூவேந்தருக்கும் ஆசனம் இடப்பட்டிருந்தது. சேர சோழ மன்னர்கள் அவர்களுக்கான ஆசனத்தில் அமர்ந்தார்கள். ஆனால், பழைய நட்புபடியும், வழி வழி உரிமையின்படியும் இந்திரனின் அருகில் அமர்ந்து கொண்டான் உக்கிரபாண்டியன்.

பாண்டியருக்கும் தேவலோகத்துக்குமான தொடர்பு வழி வழி வந்தது. பாண்டியன் முன்னோர்கள் இந்திரலோகத்துக்கு ஆதரவாக போரிட்ட காட்சியெல்லாம் உண்டு. அந்த உரிமையில் உக்கிர பாண்டியன் அவனோடு சரிக்கு சரி அமர்ந்தான்.

ஆனால், இந்திரன் அதை ரசிக்கவில்லை. பாண்டியன் தனக்கு சமமானவன் அல்ல, இது தனக்கு அவமரியாதை எனப் பொறுமினான்.

அப்படி பொறுமியவன் அதை மனதோடு வைத்துக்கொண்டு அவர்கள் வந்த நோக்கம் பற்றி கேட்டான்.‌ அவர்களோ மழையின்றி மக்கள் படும் வேதனையும், கிரக சஞ்சார நிலைகளையும் சொல்லி மழைவரம் கேட்டனர்.

“உங்கள் குறை தீர்க்கப்படும்” எனச் சொன்ன இந்திரன், தேவர்களின் அதிபதியாக நவக்கிரகங்களை அழைத்து சைகை செய்ய அவர்கள் கடமையாற்றச் சென்றார்கள்.

சேர, சோழ மன்னர்களை அனுப்பிய இந்திரன் பாண்டியனை சற்று பொறுக்கச் சொல்லி தன் அகந்தையினை காட்ட ஒரு பரிசளித்தான்.

அது எடைமிக்க முத்துமாலை.

ஒரு சிலர் மிக கனமான அந்த மாலையினை சுமந்து வந்து பாண்டியன் முன் வைத்தார்கள். “பாண்டியா, இது உனக்கான என் பரிசு” என்றான் இந்திரன்.

அதாவது, எனக்கு சமமானவன் நீ அல்ல, இந்த முத்துமாலையினை கழுத்தில் இட்டால் விழுந்து கிடப்பாய் எனும் பரிகாசம் அது.

பாண்டியன் அதை எளிதாக புறந்தள்ளி தன் வலது கையினால் அதை எடுத்து அணிந்து கொண்டு புன்னகைத்தான்.

இந்திரனுக்கு பெரும் அவமானமாய் போனது. அந்த அவமானத்தை மறைத்து “பாண்டியா, இனி நீ ‘ஆரம் தாங்கிய பாண்டியன்’ என அழைக்கப்படுவாய்” என்றான்.

உக்கிரபாண்டியனோ அதை பொருட்படுத்தவில்லை, “மழை பெய்ய உத்தரவிட்டதற்கு நன்றி தேவேந்திரா” எனச் சொல்லி மதுரை திரும்பினான்.

அதன்பின் சேர, சோழ நாட்டில் நல்ல மழை பெய்தது. ஆனால், பாண்டியநாட்டில் மழை இல்லை.

சில தினங்கள் இதைப் பொறுத்து பார்த்த உக்கிரபாண்டியன் அகத்தியரை சந்திக்க பொதிகைமலை சென்றான்.
அகத்தியரோ எல்லாம் அறிந்தும் ஏதும் அறியாதவர் போல் தியானத்தில் அமர்ந்திருந்தார்.

கொஞ்ச காலமாக மேகங்களை அப்பக்கம் காணாத பாண்டியன் அங்கே நால்வகை மேகங்கள் உலாவுவதை கண்டான்.

மேகங்களை ஏழுவகையாக இந்து முன்னோர்கள் சொன்னார்கள். இந்துக்களின் வானியலில் அது முக்கியமாக இருந்தது. திருமூலர் தன் திருமந்திரத்தில் அதுபற்றி சொல்லியிருக்கின்றார்.

‘சம்வர்த்தம்’ எனும் மணி மழை (ரத்தினக் கற்கள்), ‘ஆவர்த்தம்‍’ எனும் நீர் மழை, ‘புஷ்கலாவர்த்தம்’ எனும் பொன் மழை, ‘சங்காரிஷ்டம்’ எனும் பூ மழை, ‘துரோணம்’ எனும் மண் மழை, ‘காளமுகி’ எனும் கல் மழை, ‘நீலவருணம்’ எனும் தீ மழை என ஏழு உண்டு.

இங்கே மானுடர்க்கு அந்த ஆவர்த்தம் எனும் மழை மட்டும்தான் தெரியும், இதர ஐஸ்வர்யங்கள் தரும் மழையினை அவர்கள் சூட்சுமமாக காணமுடியாது.

ஆதிசங்கரர் பொன்மழை பெய்ய வைத்தார் என்பது அந்த ‘புஷ்கலாவர்த்தம்’ எனும் மேகத்தினை அழைத்தது, தீ மாரி பொழிந்தது, பூ மாரி பொழிந்தது எல்லாம் இந்த மேகங்களே.

இந்த மேகங்கள் இந்திரனின் உத்தரவு இல்லாமல் பொழியாது. ஆனால், ஆங்காங்கே சென்றுவரும்.

அப்படியான சங்காரிஷ்டம், துரோணம், காளமுகி, புஷ்கலாவர்த்தம் எனும் நான்கு மேகங்களை கண்டான் உக்கிரபாண்டியன். இன்னும், தன் நாட்டில் ஆவர்த்தம் எனும் மழைமேகம் வரா நிலையில் இவை வந்தது அதுவும் துரோணம், காளமுகி எல்லாம் வந்தது அவனுக்கு கோபத்தை கொடுத்தது.
உடனே அவற்றை சிறைப்பிடித்தான் உக்கிரபாண்டியன்.

ஏற்கனவே பாண்டியன் மேல் கடும் ஆத்திரத்தில் இருந்த இந்திரன் இதனால் போருக்கே வந்தான். இந்திரனா, உக்கிரனா எனும் பெரும் யுத்தம் அங்கே நடந்தது.

உக்கிரனின் தாக்குதலில் தேவேந்திரன் படைகள் சிதறின. ஆத்திரமடைந்த இந்திரன் தன் சூர்ய அஸ்திரம் எனும் பிரமாண்ட வெப்ப அஸ்திரத்தை ஏவினான். பதிலுக்கு சோம அஸ்திரம் எனும் குளிர்ந்த அஸ்திரத்தை பாண்டியன் ஏவிவிட அது தடுக்கப்பட்டது.

நரசிம்ம அஸ்திரம் எனும் பெரும் சக்தியான அஸ்திரத்தை இந்திரன் ஏவிவிட்டான். அது யாரையும் கிழித்துக் கொல்லும் சக்தி கொண்டது. பாண்டியன் பதிலுக்கு சரபாஸ்திரத்தை ஏவினான். நரசிம்ம அஸ்திரம் கட்டுப்பட்டது.

தன் வலிமையெல்லாம் முறியடிக்கப்படுவதை கண்ட இந்திரன் மோகன அஸ்திரத்தை ஏவினான். இது யாராயினும் மயக்கிப் போடும் வல்லமை கொண்டது.

பாண்டியன் பதிலுக்கு ஞான அஸ்திரம் ஏவிவிட, அந்த மோக அஸ்திரம் வலுவிழந்தது.

எல்லா அஸ்திரமும் வலுவற்று போக தன் ‘ஐராவதம்’ எனும் யானை மேலிருந்து கீழே குதித்த இந்திரன் தன் வஜ்ராயுதத்தோடு போரிட்டான், பதிலுக்கு பாண்டியன் தன் ‘வளை’ ஆல் போரிட்டான்.

வஜ்ராயுதத்தை பாண்டியன் உடைத்துப் போட்டான். அப்படியே இந்திரனின் மணிமுடியும் உடைந்தது.

இந்திரன் அரண்டே போனான். தான் மோதுவது சாதாரணமானவன் இல்லை என்பது தெரிந்தது. முன்பு, துர்வாசர் இட்ட சாபத்தை நினைத்தவன், அச்சாபப்படி தன் தேவலோக அரசை இழக்க வைக்க நடக்கும் காட்சி இதுவோ எனக் கலங்கி பின்வாங்கி ஓடினான்.

பின் தான் மழை மேகத்தை அனுப்புவதாகவும் அதற்கு பாண்டியன் நான்கு மேகங்களை விடுவிக்க வேண்டும் எனக் கேட்டான். ஆனால், இந்திரனை நம்ப பாண்டியன் தயாரில்லை.

பின், இந்திரன் தன் நண்பனான ஏகவீரன் என்பவனை பிணையாக அனுப்பினான். அந்த பிணையில் நான்கு மேகங்களை பாண்டியன் விடுதலை செய்ய, மழை மேகத்தை இந்திரன் அனுப்பினான்.

அதன் பின் பாண்டிய நாட்டில் மழை கொட்டிற்று; வைகை பெருக்கெடுத்தது; எல்லா உயிர்களும் மகிழ்ந்தன; ஆடிப்பாடின‌.

மன்னன் எல்லா வரத்துக்கும் காரணமான ஆலவாய் நாதனுக்கு பெரும் விழா எடுத்துக் கொண்டாடி மாபெரும் நன்றிக்கடனை செலுத்தினான்.

இதுதான் இந்திரன் மணிமுடி இழந்த படலம். இந்தப் படலம் சொல்லும் தத்துவம் ஆழமானது. ஒவ்வொருவரும் அறியவேண்டியது.

இந்தப் படலத்தின் தாத்பரிய போதனை வெகு நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றது. சோம்வார விரதம், அதுவும் கார்த்திகை சோமவார விரதத்தின் பலனை அவ்வளவு நுணுக்கமாக சொல்கின்றது.

மூவேந்தர்களுக்கு போதித்த காட்சி என ஒவ்வொரு மக்களுக்கும் சோமவார விரத பலனை அகத்தியர் உரைக்கின்றார்.

இந்தத் திருவிளையாடலில் சிவன் நேரடியாக வரவில்லை. அவர் வந்து எந்த காட்சியும் நடத்தவில்லை. ஆனால், இந்த நாடகத்தை நடத்தியவர் அவர்தான்; அதன் மூலம் கார்த்திகை சோமவாரவிரத பெரும் பலனை அவர் நுணுக்கமாக போதிக்கின்றார்.

மானுடரான மூவேந்தர்களுக்கு அந்த சோமவார விரதம் தேவர்களுக்கு சமமான ஆற்றலை கொடுக்கின்றது. நவகிரகங்களையும் கட்டுப்படுத்தும் பிரபஞ்ச சக்தியினை கொடுக்கின்றது என்பதுதான் அங்கு போதனை.

இந்த மூவேந்தர்களும் மானிடர்கள், பிரபஞ்சத்தை தொட்டுக்கூட பார்க்கும் சக்தி அற்றவர்கள், தங்கள் சக்திக்கு மீறிய விஷயத்துக்காக சிவனிடம் வந்தார்கள்.

அகத்தியர் அவர்களுக்கு சோமவார விரதத்தை சொன்னார். அவர்கள் உடனே பணிந்தார்கள்.

சோமவாரவிரதம் எல்லா இடங்களிலும் சிறந்தது. மதுரையில் அது கோடிமடங்கு பலன்மிக்கது என்பதை அகத்தியர் சொன்னவுடன் சிவனின் சொல்லாக ஏற்றுப் பணிந்தார்கள். உண்மையில் அது சிவனின் சொல்லே.

அந்த விரதத்தை சரியாக செய்ததில் அவர்கள் பிரபஞ்ச சக்தி பெற்றார்கள். தேவேந்திரனுடன் சரிக்கு சமம் அமரும் அளவு தெய்வீக நிலை அவர்களுக்கு வந்தது.

அதுவும் மதுரையிலே அனுதினமும் சோமசுந்தரரை வணங்கிய உக்கிரபாண்டியன் பெரும் சக்திபெற்றவன் என்றானான்.

சோமவார விரதம் அவனை இந்திரனுக்கு சரிக்கு சமமாக அமரவைத்தது.

அதைவிட முக்கியமாக தேவர்களும் சுமக்கமுடியா முத்து மாலையினை ஒற்றைக்கையில் ஏந்தி தன் கழுத்தில் அணிந்து நடக்கும் அளவு பலமுள்ளவனான்.

அவனுக்கு அந்த விரதம் எந்த அளவு பலன் கொடுத்தது என்றால் அவன் தேவலோக இந்திரனுடன் மோதி வெல்லும் அளவு அதுவும் சூர்ய அஸ்திரம், மோகன அஸ்திரம், நரசிங்க அஸ்திரமெல்லாம் வெல்லும் அளவுக்கு சக்தி கொடுத்தது.

உச்சமாக தேவர்கள் கண்ணுக்கே தெரியக் கூடிய மேகங்கள் அவன் கண்ணுக்குத் தெரிந்தன; அவற்றை கைது செய்யும் அளவு அவனுக்கு சக்தியும் வந்தது; மழையினை வரவழைக்கும் பெரும் சக்தியும் கிடைத்தது.

ஆக, அந்த கார்த்திகை சோமவார விரதம் அவனை தேவர்களுக்கு மேல் சக்தியுள்ளதாக்கிற்று. நவக்கிரகங்கள் அவனிடம் அடங்கிப் போயின, அவைகள் அவனுக்கு கட்டுப்பட்டன‌.

சோமவார விரதத்தை சரியாக செய்பவன் சிவன் அருளை முழுக்க பெறுகின்றான், அந்த பெரும் அருளில் அவன் தேவர்களை மிஞ்சிய சக்திபெற்று , பிரபஞ்சத்தை ஆட்டி கட்டுப்படுத்தும் சக்தி நிலையினை பெறுகின்றான் என்பது இந்த திருவிளையாடலின் போதனை.

ஆம். சோமவார விரதம் ஒருவனை தேவர்களில் ஒருவனாக்கும்; இறை தன்மை வாய்ந்தவனாக்கும்; தேவர்களுக்கும் கட்டளையிடும் சக்தி கொண்டவனாக்கும் என்பது இந்தத் திருவிளையாடலின் தாத்பரியம்.

உக்கிரபாண்டியனின் சிவவாழ்வு அதைத்தான் சொல்கின்றது.

இந்துக்கள் விரதம் இருப்பதை ஏன் வலியுறுத்தினார்கள் என்பதற்கும், கார்த்திகை மாத சோமவார விரதம் ஏன் முக்கியம் என்பதற்கும் இங்கேதான் விடை இருக்கின்றது.

மானுட உடல் வெறும் சதை பிண்டம் அல்ல; எலும்பும் சதையும் நிணமும் கலந்த ஒரு வஸ்து அல்ல; அது பிரபஞ்ச சக்திகளின் கூடாரம்.

அந்த உடலில் பிரபஞ்சத்தின் பெரும் சக்தி குண்டலினி என மறைந்திருக்கின்றது. சுருண்டு ஒளிந்திருக்கின்றது. அதனை எழுப்பி இந்த பிரபஞ்சத்தோடு இணைக்கும் போது அந்த சக்தி மானுட உடலின் சக்தி மையங்களை துலக்கி பிரபஞ்சத்தோடு இணைக்கும் போது அவன் தெய்வீக தன்மை அடைகின்றான்.

இதற்குத்தான் விரதம் அவசியம்.

விரதம் என்பது உடலையும் மனதையும் ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சி. விரதம் என்றால் அந்த இடத்தில் உணவின் மீதான பற்று துண்டிக்கப்படும். இன்னும் எதெல்லாம் ஒருவனுக்கு விருப்பம் என அவன் சிந்தனையினை ஈர்க்குமோ அந்த சிந்தையெல்லாம் அகற்றப்படும்.

அப்படி சிந்தனைகள் அற்றுப்போகும் இடத்தில் மனம் இறைவன்பால் குவியும்; மனம் ஒருமுகப்படும்; அந்த இடத்தில் தியானம் தன்னை அறியாமல் உருவாகும்.

விரதம் எனச் சொல்லி உணவு, ஆசாபாசம் தவிர்த்தல், இன்னும் பிடித்ததை விட்டுவிடுதல் என நெறிபடுத்தப்படும் போது அந்த நினைவே அவனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகின்றது.

விரதகால தோற்றம், உணவை ஏன் தவிர்க்கவேண்டும், ஏன் கட்டுப்பாடாய் இருத்தல் வேண்டும் என எல்லாமும் இறைவனுக்கான சிந்தனையினை தூண்டிக்கொண்டே இருக்கின்றன‌.

அங்கே பூஜையும் வழிபாடுகளும் இறைவன்பால் தள்ளுகின்றன‌.

உணவு கட்டுக்குள் வரும்போது வயிறு காலியாகின்றது. காலியான வயிற்றில் அடியில் இருக்கும் மூலாதாரம் எளிதில் துலங்குகின்றது.

இந்துக்கள் உடலை மிக சூட்சுமாக கண்டார்கள். 72 ஆயிரம் நாடிகளை 24 சக்தி மையங்கள் இணைப்பதையும், அந்த 24 மையங்களும் எட்டு இணைப்புக்களை கொண்ட மூன்று பிரிவுகளாக இருப்பதையும் அனுமானித்தார்கள்.

48 நாள் விரதம் இருக்கும் போது இதெல்லாம் ஒரு கட்டுப்பாட்டுக்குள் வருவதை சொன்னார்கள்.

விரதம் உணவை கட்டுப்படுத்தும்போது மூலாதாரம் எளிதில் துலங்குகின்றது. அந்தச் சக்கரம் மூலாதாரத்தில் இருந்து சுவாதிஷ்டானத்துக்கு வருகின்றது.

அதுதான் 24 சக்திகளின் மையமாக இருக்கின்றது. எல்லா உணர்வுகளும் இங்குதான் தோன்றுகின்றன. அங்கிருந்து சக்தி மணிப்பூரகத்துக்கு செல்கின்றது.

அங்கே எது நல்லது எது தீயது எனும் சிந்தனை தெளிவு கிடைக்கின்றது.

பின், அனாஹத சக்கரத்தில் இன்னும் தெளிவு கிடைக்கின்றது.

விஷுத்தி எனும் தொண்டை சக்கரத்தில் தான் மந்திரம் சொல்லச் சொல்ல, வார்த்தைகளால் சொல்லச் சொல்ல இன்னும் சித்திவாய்த்து சக்தி மேலேறி ஆக்ஞா சக்கரத்தை அடைகின்றது.

ஆக்ஞாவில் அது ஞானத்தை சுடராக காட்டுகின்றது. அதன் பின் உச்ச சக்கரத்தில் அது துலங்கும் போது சமாதி நிலை, சித்த நிலை வாய்க்கின்றது.

உச்சநிலை சக்கரம் துலங்கும் போது ஒருவன் முழு ஞானியாகின்றான்.

சஹஸ்ரார சக்கரத்தின் மேல் நிற்கும் சூட்சும உடலின் சக்கரம் துலங்கும் போது அவன் இறைதன்மையாகிவிடுகின்றான்.

இங்கு எல்லாமே எட்டு எனும் கணக்கு, கொஞ்சம் புரிந்தும் புரியாததுமான சூட்சும கணக்கு.

அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு எனும்படியானது இந்த உடல், பிரபஞ்சத்தின் எல்லா இயக்கமும் இங்கும் உண்டு.

எட்டு, இருபத்தி நான்கு, நாற்பத்தி எட்டு, எழுபத்திரண்டு என எல்லாமே எட்டு எட்டாக ஒரு தொடர்போடு வருவதை என்றோ அனுமானித்தார்கள் இந்துக்கள்.

அவ்வகையில் எட்டாம் ராசியான விருச்சிக ராசியில் சூரியன் வரும் மாதம் கார்த்திகை மாதம், மாதத்தில் இது எட்டாம் மாதம்.

இந்த எட்டாம் மாதத்தின் அமாவாசை வரும் சோமவாரம் எட்டாம் அமாவாசையாக மிகவும் சக்தியானது, தேய்பிறை அஷ்டமி கார்த்திகையில் சக்திபெறுவதும் இப்படித்தான்.

இந்த கார்த்திகை சோமவாரம் இயல்பாகவே பிரபஞ்ச சக்தியினை ஈர்ப்பது. இந்தக் காலகட்டத்தில் மானுட உடலானது பிரபஞ்சத்துடன் எளிதில் இணையும் வகையில் ஒரு சூழல் வானியல் ரீதியாக உருவாகும்.

அப்போது பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் வில்வ இலை முதல் பல வழிபாடுகள், மந்திரங்களை சொல்லும் போது மானுட உடலின் சக்கரங்கள் துலங்குகின்றன‌.

அந்தத் துலங்கிய சக்கரங்கள், ஒருமித்த மனதால் துலங்கிய சக்கரங்கள், அவனை பிரபஞ்சத்தோடு கலந்துவிட வைக்கின்றன, அவன் தெய்வநிலையினை அடைகின்றான்.

அப்படி அடைந்தவன் எதற்கும் கலங்காமல் அஞ்சாமல் தன் கர்மாவினை சரியாகச் செய்வான்.

உக்கிரபாண்டியனின் விரதம், அந்த மதுரையில் அவன் செய்த சோமவார விரதம் அவனை முழு சக்தியுள்ளவனாக்கிற்று.

அவன் மனமும் உடலும் சிவன் எனும் ஒரு புள்ளியில் இணைந்தது. நினைவும், செயலும், எண்ணமும், சிந்தையும், வார்த்தையும் எல்லாமும் சிவம் என்றானார்.

உணவை வெறுத்து, ஆசாபாசங்களை வெறுத்து, அவன் முழு மனமும் முழு நினைவும் சிவனை நினைந்ததில் அவன் உடலின் சக்கரமெல்லாம் தானே துலங்கிற்று.

உடலுக்கும் பிரபஞ்சத்துக்கான தொடர்பை அவன் பெற்றான். அவனால் தேவலோகத்தை வெல்லமுடிந்தது; தேவர்களை ஆட்டுவிக்க முடிந்தது; மழையினை பெய்விக்க முடிந்தது.

இதுதான் இந்திரன் மணிமுடி இழந்த படலம், இந்த படலம் சொல்லும் தத்துவம் ஆழமானது,ஒவ்வொருவரும் அறியவேண்டியது

இந்த படலத்தின் தாத்பரிய போதனை வெகு நுணுக்கமாக சொல்லபட்டிருக்கின்றது, சோம்வார விரதம் அதுவும் கார்த்திகை சோமவார விரதத்தின் பலனை அவ்வளவு நுணுக்கமாக சொல்கின்றது

மூவேந்தர்களுக்கு போதித்த காட்சி என ஒவ்வொரு மக்களுக்கும் சோமவார விரத பலனை அகத்தியர் உரைக்கின்றார்

இந்த திருவிளையாடலில் சிவன் நேரடியாக வரவில்லை, அவர் வந்து எந்த காட்சியும் நடத்தவில்லை ஆனால் இந்த நாடகத்தை நடத்தியவர் அவர்தான், அதன் மூலம் கார்த்திகை சோமவிரத பெரும் பலனை அவர் நுணுக்கமாக போதிக்கின்றார்

மானுடரான மூவேந்தர்களுக்கு அந்த சோமவார விரதம் தேவர்களுக்கு சமமான ஆற்றலை கொடுக்கின்றது நவகிரகங்களையும் கட்டுபடுத்தும் பிரபஞ்ச சக்தியினை கொடுக்கின்றது என்பதுதான் அங்கு போதனை

இந்த மூவேந்தர்களும் மானிடர்கள், பிரபஞ்சத்தை தொட்டுகூட பார்க்கும் சக்தி அற்ற்வர்கள், தங்கள் சக்திக்கு மீறிய விஷயத்துக்காக சிவனிடம் வந்தார்கள்

அகத்திய அவர்களுக்கு சோமவார விரத்தை சொன்னார் அவர்கள் உடனே பணிந்தார்கள்

சோமவாரவிரதம் எல்லா இடங்களிலும் சிறந்தது மதுரையில் அது கோடிமடங்கு பலன்மிக்கது என்பதை அகத்தியர் சொன்னவுடன் சிவனின் சொல்லாக ஏற்று பணிந்தார்கள், உண்மையில் அது சிவனின் சொல்லே

அந்த விரதத்தை சரியாக செய்ததில் அவர்கள் பிரபஞ்ச சக்தி பெற்றார்கள், தேவேந்திரனுடன் சரிக்கு சமம் அமரும் அளவு தெய்வீக நிலை அவர்களுக்கு வந்தது

அதுவும் மதுரையிலே அனுதினமும் சோமசுந்தரரை வணங்கிய உக்கிரபாண்ட்யன் பெரும் சக்திபெற்றவன் என்றானான்

சோமவார விரதம் அவனை இந்திரனுக்கு சரிக்கு சமமாக அமரவைத்தது

அதைவிட முக்கியமாக தேவர்களும் சுமக்கமுடியா முத்து மாலையினை ஒற்றைக்கையில் ஏந்தி தன் கழுத்தில் அணிந்து நடக்கும் அளவு பலமுள்ளவனான்

அவனுக்கு அந்த விரதம் எந்த அளவு பலன் கொடுத்தது என்றால் அவன் தேவலோக இந்திரனுடன் மோதி வெல்லும் அளவு அதுவும் சூர்ய அஸ்திரம், மோகன அஸ்திரம், நரசிங்க அஸ்திரமெல்லாம் வெல்லும் அளவுக்கு சக்தி கொடுத்தது

உச்சமாக தேவர்கள் கண்ணுக்கே தெரிய கூடிய மேகங்கள் அவன் கண்ணுக்கு தெரிந்தன, அவற்றை கைது செய்யும் அளவு அவனுக்கு சக்தியும் வந்தது, மழையினை வரவழைக்கும் பெரும் சக்தியும் கிடைத்தது

ஆக அந்த கார்த்திகை சோமவார விரதம் அவனை தேவர்களுக்கு மேல் சக்தியுள்ளதாக்கிற்று, நவகிரகங்கள் அவனிட்ம அடங்கி போயின, அவைகள் அவனுக்கு கட்டுபட்டன‌

சோமவார விரதத்தை சரியாக செய்பவன் சிவன் அருளை முழுக்க பெறுகின்றான், அந்த பெரும் அருளில் அவன் தேவர்களை மிஞ்சிய சக்திபெற்று , பிரபஞ்சத்தை ஆட்டி கட்டுபடுத்தும் சக்தி நிலையினை பெறுகின்றான் என்பது இந்த திருவிளையாடலின் போதனை

ஆம், சோமவார விரதம் ஒருவனை தேவர்களில் ஒருவனாக்க்கும், இறை தன்மை வாய்ந்தவனாக்கும், தேவர்களுக்கும் கட்டளையிடும் சக்தி கொண்டவனாக்கும் என்பது இந்த திருவிளையாடலின் தாத்பரியம்

உக்கிரபாண்டியனின் சிவவாழ்வு அதைத்தான் சொல்கின்றது

இந்துக்கள் விரதம் இருப்பதை ஏன் வலியுறுத்தினார்கள் என்பதற்கும், கார்த்திகை மாத சோமவார விரதம் ஏன் முக்கியம் என்பதற்கும் இங்கேதான் விடை இருக்கின்றது

மானுட உடல் வெறும் சதை பிண்டம் அல்ல, எலும்பும் சதையும் நிணமும் கலந்த ஒரு வஸ்து அல்ல அது பிரபஞ்ச சக்திகளின் கூடாரம்

அந்த உடலில் பிரபஞ்சத்தின் பெரும் சக்தி குண்டலினி என மறைந்திருக்கின்றது , சுருண்டு ஒளிந்திருக்கின்றது, அதனை எழுப்பி இந்த பிரபஞ்சத்தோடு இணைக்கும் போது அந்த சக்தி மானுட உடலின் சக்தி மையகளை துலக்கி பிரபஞ்சத்தோடு இணைக்கும் போது அவன் தெய்வீக தன்மை அடைகின்றான்

இதற்குத்தான் விரதம் அவசியம்

விரதம் என்பது உடலையும் மனதையும் ஒரு புள்ளியில் இணைக்கும் முயற்சி, விரதம் என்றால் அந்த இடத்தில் உணவின் மீதான் பற்று துண்டிக்கபடும், இன்னும் எதெல்லாம் ஒருவனுக்கு விருப்பம் என அவன் சிந்தனையினை ஈர்க்குமோ அந்த சிந்தையெல்லாம் அகற்றபடும்

அப்படி சிந்தனைகள் அற்றுபோகும் இடத்தில் மனம் இறைவன்பால் குவியும், மனம் ஒருமுகபடும் அந்த இடத்தில் தியானம் தன்னை அறியாமல் உருவாகும்

விரதம் என சொல்லி உணவு, ஆசாபாசம்தவிர்த்தல், இன்னும் பிடித்ததை விட்டுவிடுதல் என நெறிபடுத்தபடும் போது அந்த நினைவே அவனை ஒரு கட்டுபாட்டுக்குள் கொண்டுவருகின்றது

விரதகால தோற்றம், உணவை ஏன் தவிர்க்கவேண்டும், ஏன் கட்டுபாடாய் இருத்தல் வேண்டும் என எல்லாமும் இறைவனுக்கான சிந்தனையினை தூண்டிகொண்டே இருக்கின்றன‌

அங்கே பூஜையும் வழிபாடுகளும் இறைவன்பால் தள்ளுகின்றன‌

உணவு கட்டுக்குள் வரும்போது வயிறு காலியாகின்றது, காலியான வயிற்றில் அடியில் இருக்கும் மூலாதாரம் எளிதில் துலங்குகின்றது

இந்துக்கள் உடலை மிக சூட்சுமாக கண்டார்கள், 72 ஆயிரம் நாடிகளை 24 சக்தி மையங்கள் இணைப்பதையும், அந்த 24 மையங்களும் எட்டு இணைப்புக்களை கொண்ட மூன்று பிரிவுகளாக இருப்பதையும் அனுமானித்தார்கள்

48 நாள் விரதம் இருக்கும் போது இதெல்லாம் ஒரு கட்டுபாட்டுக்குள் வருவதை சொன்னார்கள்

எட்டு, இருபத்தின் நான்கு, நாற்பத்தி எட்டு, எழுத்தி இரண்டு என எல்லாமே எட்டு எட்டாக ஒரு தொடர்போடு வருவதை என்றோ அனுமானித்தார்கள் இந்துக்கள்

விரதம் உணவை கட்டுபடுத்தும்போது மூலாதாரம் எளிதில் துலங்குகின்றது அந்த சக்கரம் மூலாதாரத்தில் இருந்து சுவாஷ்டிதானத்துக்கு வருகின்றது

அதுதான் 24 சக்திகளின் மையமாக இருக்கின்றது எல்லா உணர்வுகளும் இங்குதான் தோன்றுகின்றன, அங்கிருந்து சக்தி மணிப்பூரகத்துக்கு செல்கின்றது

அங்கே எது நல்லது எது தீயது எனும் சிந்தனை தெளிவு கிடைக்கின்றது

பின் அனாதக சக்கரத்தில் இன்னும் தெளிவு கிடைக்கின்றது

விசுத்தி எனும் தொண்டை சக்கரத்தில்தான் மந்திரம் சொல்ல சொல்ல, வார்த்தைகளால் சொல்ல சொல்ல இன்னும் சித்திவாய்த்து சக்தி மேலேறி ஆக்னா சக்கரத்தை அடைகின்றது

ஆக்னாவில் அது ஞானத்தை சுடராக காட்டுகின்றது, அதன் பின் உச்ச சக்கரத்தில் அது துலங்கும் போது சமாதி நிலை சித்த நிலை வாய்க்கின்றது

உச்சநிலை சக்கரம் துலங்கும் போது ஒருவன் முழு ஞானியாகின்றான்

சகஸ்கர சக்கரத்தின் மேல் நிற்கும் சூட்சும உடலின் சக்கரம் துலங்கும் போது அவன் இறைதன்மையாகிவிடுகின்றான்

இங்கு எல்லாமே எட்டு எனும் கணக்கு, கொஞ்சம் புரிந்தும் புரியாததுமான சூட்சும கணக்கு

அண்டத்தில் இருப்பதெல்லாம் பிண்டத்திலும் உண்டு எனும்படியானது இந்த உடல், பிரபஞ்சத்தின் எல்லா இயக்கமும் இங்கும் உண்டு

அவ்வகையில் எட்டாம் ராசியான விருச்சிக ராசியில் சூரியன் வரும் மாதம் கார்த்திகை மாதம், மாதத்தில் இது எட்டாம் மாதம்

இந்த எட்டாம் மாதத்தின் அமாவாசை வரும் சோமவாரம் எட்டாம் அமாவாசையாக மிகவும் சக்தியானது, தேய்பிறை அஷ்ட்மி கார்த்திகையில் சக்திபெறுவதும் இப்படித்தான்

இந்த கார்த்திகை சோமவாரம் இயல்பாகவே பிரபஞ்ச சக்தியினை ஈர்பபது இந்த காலகட்டத்தில் மானுட உடலானது பிரபஞ்சத்துடன் எளிதில் இணையும் வகையில் ஒரு சூழல் வானியல் ரீதியாக உருவாகும்

அப்போது பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் வில்வ இலை முதல் பல வழிபாடுகள் மந்திரங்களை சொல்லும் போது மானுட உடலின் சக்கரங்கள் துலங்குகின்றன‌

அந்த துலங்கிய சக்கரங்கள், ஒருமித்த மனதால் துலங்கிய சக்கரங்கள் அவனை பிரபஞ்சத்தோடு கலந்துவிட வைக்கின்றன, அவன் தெய்வநிலையினை அடைகின்றான்

அப்படி அடைந்தவன் எதற்கும் கலங்காமல் அஞ்சாமல் தன் கர்மாவினை சரியாக செய்வான்

உக்கிரபாண்டியனின் விரதம் , அந்த மதுரையில் அவன் செய்த சோமவார விரதம் அவனை முழு சக்தியுள்ளவனாக்கிற்று

அவன் மனமும் உடலும் சிவன் எனும் ஒரு புள்ளியில் இணைந்தது,நினைவும் செயலும் எண்ணமும் சிந்தையும் வார்த்தையும் எல்லாமும் சிவம் என்றானார்

உணவை வெறுத்து, ஆசாபாசங்களை வெறுத்து அவன் முழு மனமும் முழு நினைவும் சிவனை நினைந்ததில் அவன் உடலின் சக்கரமெல்லாம் தானே துலங்கிற்று

உடலுக்கும் பிரபஞ்சத்துக்கான தொடர்பை அவன் பெற்றான், அவனால் தேவலோகத்தை வெல்லமுடிந்தது, தேவர்களை ஆட்டுவிக்க முடிந்தது, மழையினை பெய்விக்க முடிந்தது

ஆம். அவன் சோமவார விரதத்தால் இறைநிலையினை அடைந்தான். அந்த இறைநிலையிலும் அவன் தன் கடமையினை மன்னன் எனும் கடமையினை கர்மாவினை சரியாகச் செய்தான்.

ஆம். அவரவர் கர்மத்தை சரியாக செய்யவும், எந்த சிக்கல் வந்தாலும் அதைத் தாண்டி வெல்லவும் இந்த சோமவார விரதம் வழிசெய்யும்.

உக்கிரபாண்டியனின் கர்மா மக்களை காப்பது, நல்ல மழையினை பெற்று குடிகளை வாழவைப்பது.

அவன் நோக்கம் இந்திரனை வெல்வது அல்ல, தேவர்களை ஆட்டுவிப்பதுமல்ல, அவன் நோக்கம் தன் குடிகளை வாழவைப்பது.

அதற்கு இந்திரன் தடையாக வந்தபோது அவன் சோமவார விரத பலனால் தன் தடையினை உடைத்து கர்மத்தை சரியாகச் செய்தான்.

ஆம். ஒருவன் கர்மத்தை சரியாக செய்யவைக்கும் பலத்தை கார்த்திகை சோமவார விரதம் தரும்.

உக்கிரபாண்டியன் வரலாறு ஆன்மீகம், லௌகீகம் என இருபக்கமும் போதிக்கும் வரலாறு.

கார்த்திகை மாத சோமவாரவிரத பலன் ஒருவனை ஆன்மீக ரீதியாக தெய்வநிலைக்கு உயர்த்தும், இந்திரன் என்பது ஆசாபாசங்களின் உருவம்.

ஒருவன் தெய்வநிலை அடையவே கூடாது என்பது இந்திரனின் விருப்பம், அவன் முனிவர்கள் தவத்தை கெடுப்பதும், பலரை மயக்கி திசை திருப்புவதும் அப்படியே.

மாயைகளை காட்டி ஒருவனை வசப்படுத்தி அவன் இறைநிலை ஞானநிலை அடையாமல் தடுப்பது இந்திரன் மாயாஜாலம்.

சோமவார விரதம் அந்த இந்திரனின் சோதனையினை உடைக்கும், இந்திரனின் மயக்கங்களில் மாயைகளில் சிக்காமல் ஒரு ஆத்மா ஈடேற வழி செய்யும்.

அங்கே அதுகாலமும் அடைபட்டிருந்த பிரபஞ்ச பெரும் மழை கொட்டும்.

லௌகீகமாக ஒவ்வொருவருக்கும் ஒரு கடமை உண்டு; ஒரு கர்மா உண்டு. அந்த கர்மாவினை இறை சிந்தனையுடன் செய்து கர்மத்தின் மூலமாக இறைவனை அடைதல் அதன் நோக்கம்.

அந்த பலனை இந்த சோமவார விரதம் தரும், உடலாலும் மனதாலும் தரும்.

இந்த உடல் வெறும் சதையல்ல, சோறும் சுவையான உணவுக்குமான குப்பை தொட்டி அல்ல. இது சக்தி மையம், பிரபஞ்ச சக்திகளை ஈர்த்து தரும். அற்புதமான மையம்.

அந்த சக்தி மையம் நல்லபடியாக சக்திபெறும் போது அங்கே ஆத்மா பிரபஞ்சத்துடன் இணைகின்றது. அந்த மகா சக்தியின் அற்புத ஆற்றலில் இந்த சக்தி மையத்தின் ஆத்மா தெய்வீக தன்மை அடைகின்றது.

உக்கிரபாண்டியன் தன் கார்த்திகை சோமவார விரதத்தால் சிவநிலை அடைந்தார். அந்தச் சிவநிலையில்தான் தேவர்களை அவரால் கட்டுப்படுத்தமுடிந்தது. நவக்கிரகங்களையும் பணியவைக்க முடிந்தது என்பதே இங்கு எல்லோரும் அறியவேண்டிய போதனை.

கார்த்திகை சோமவாரம் அவ்வளவு சக்திவாய்ந்தது. அந்த விரதத்தை அகத்தியர் சொன்னபடி செய்யுங்கள். அங்கே வெள்ளி லிங்கம் செய்ய பணமில்லை, இதர பெரிய பெரிய காரியங்களுக்கு வழியில்லை என்பதெல்லாம் சிக்கல் அல்ல‌.

அகத்தியர் சொன்னதில் உங்களால் முடிந்த ஆகக்கூடிய விஷயம் எதுவோ அதை செய்யுங்கள். விரதம் என்பது பிடித்ததை இந்த லௌகீக உலகில் எது உங்கள் பற்றோ அதை அறுக்க வைக்கும் விஷயம், அப்படி ஆசைகள் அறுக்கப்படுமிடம் இறைசக்தி தானே வந்து அமரும்.

இதுதான் விரதங்களின் அடிப்படை.

அகத்தியன் போதித்தபடி முடிந்தவரை சோமவார விரதம் இருங்கள், கார்த்திகையில் அது அதிமுக்கியம். அதுவும் அமாவாசை வரும் காலகட்டங்கள் மிக மிக முக்கியமானவை.

மதுரையில் இருப்போர் பாக்கியம் செய்தவர்கள். ஆலவாயனை தரிசித்தே அந்த விரதங்களை தொடரலாம், அப்படி அல்லாதவர்கள் மனதால் அந்த ஆலவாயனை நினைந்து அகத்தியர் சொன்னபடி விரதம் கடைபிடியுங்கள் .

முழுக்க அல்ல, அந்த வகையில் முயற்சித்தாலே கோடி புண்ணியம். கோடி நன்மைகள் உங்களை தேடிவரும். பெரும் மழையாக எல்லா வரமும் சிவனருளால் உங்கள் மேல் கொட்டும். இது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் : 18 இடைக்காடருக்காய் இடம்பெயர்ந்த படலம்.

அப்போது மதுரையினை குலேசபாண்டியன் ஆண்டுவந்தான். அவன் கல்வி கேள்விகளில் சிறந்தவன்; அழகாக கவிபுனையும் ஆற்றலும் கொண்டவன்; இதனால் இயல்பாகவே அவனுக்குள் ஒரு கர்வம் வந்தது.

மதுரையம்பதியின் தமிழ்ச்சங்க தலைவர் சிவபெருமான்; அவரோடு முருகப்பெருமானும் தமிழ்ச்சங்கத்தின் தலைமையாக அமர்ந்திருப்பார்.

அங்கே 48 புலவர்கள் இருந்தார்கள். அகத்திய முனி அவர்களில் தனித்து குருவாக இருந்தார்; அவர் போக கபிலர், பரணர், நக்கீரர், ருத்திரகுமாரர் என 48 பேர் இருந்தார்கள், இவர்கள்தான் அங்கீகரிக்கப்பட்ட புலவர்கள்.

இந்த 48 பேர்தான் தமிழ் பாடல்களை அங்கீகரிப்பார்கள். இந்த தமிழ்சபைதான் முக்கிய நூல்களை அங்கீகரிக்கும். திருக்குறளை முதலில் சோதித்ததெல்லாம் இந்த அவைதான்.

இவர்கள் சாதாரணமானவர்கள் அல்ல; மகா மகா திறமைசாலிகள்; சரஸ்வதியின் அம்சமாக பூமியில் பிறந்தவர்கள்.

பிரம்மனுக்கும் சரஸ்வதிக்குமான ஒரு சண்டையில் சரஸ்வதி சாபம் பெற, அந்த சாபம் நீங்க 48 புலவர்களாக அவள் பிறந்து சிவனை வழிபட்டு சாபம் தீர்க்க வந்தாள்.

அவர்கள்தான் 48 புலவர்களாக அவையினை அலங்கரித்தார்கள்.

நக்கீரர், கபிலர், ப‌ரணர், ருத்திரகுமாரர், ஒள‌வையார், மார்க்கண்டேயர், நட்டத்தனார், கான ஆந்தையார்
நடுமுடியார், பெரியதாழியார், கோவூர் கிழார், மருதநிலையார், பாஞ்சாளி, அரிசில்கிழார், நன்னக்கணார், வான்மீகனார், காரியசேனர், பூங்குன்றூர்க் கிழார், புளியூர்க் கிழார் , அயோதியார், ஆவூரி மூலங்கிழார்
ஊர்மூலனார், வியாழிப்பாடி கிழார், தென்னவன் பெருந்தேவியார்.

சேப்பல் குஞ்சன், கன்னூங்கிழார், மழலையார், கருவூர்க் கிழார், முத்தந்தாயனார், கொங்கணனார், சாத்தனார், தொண்டைமான் இளந்திரையார், பெருங்கோ செழியனார், சேரமான் குஞ்சிக்கிழார்
மதுரை மாருத்தனார், மொரியன், எறினியார், ஆலங்குடி வெங்காயன்மணியார், பெயினீரார், அரிவையார்
ஆலக்கிளர், சேனவன், இலந்தை நன்னகை, சிறுவூர் மடையனார், நெடுநல்வாடையார், வீரமிளகியார்
பாம்பாடியார், ச‌ந்தகை முறுங்கியார், பெரியதாழியார்
என நாற்பத்து எட்டுபேர் உண்டு.

அவர்கள் பெரும் சரஸ்வதி கடாட்சம் கொண்டவர்கள். அப்படியான அதி திறமையான கவிஞர்களை புலவர்களை கொண்டிருக்கும் அவைக்கு புரவலன் குலேச பாண்டியன் என்பதாலும், அந்த 48 புலவர்களே தன்னை கவிஞன் என ஒப்புக்கொண்டதால் தானும் பெரும் புலவன் எனும் இறுமாப்பில் இருந்தான் குலேசபாண்டியன்.

அந்த அவையில் இருந்த கபிலர் எனும் புலவருக்கு இடைக்காடர் எனும் நண்பர் இருந்தார். அவர் மதுரை அருகே உள்ள இடைக்காடு எனும் பகுதியினை சேர்ந்தவர், இடையர்கள் அதிகம் இருந்ததால் அது இடைக்காடு என்றானது அவரும் இடையர் குலத்தவரே.

அந்த ஊரின் பெயராலே அவரும் இடைக்காடர் என்றானார். ஆனால், எந்த தமிழ் சபையிலும் பாடியவரும் அல்ல; அவர் பெரிய அங்கீகாரம் பெற்றவரும் அல்ல. ஆனால், அற்புதமாக பாடும் வல்லமை கொண்டவர்.

மிகச்சிறந்த சிவனடியாரான அவர் சிவனை நோக்கி பாடுதல் வழமை. அப்படி அவர் பாடுதலை கண்டுதான் கபிலரே அவரிடம் நட்பு பூண்டார்.

இடைகாடனார் சிறந்த புலவர் எனினும் வறுமையில் வாடினார். புலவர்களின் சாபம் அது. புலமையும் கலையும் யாரோ ஒருவரின் ஆதரவில்தான் வாழமுடியும், ஒரு புரவலன் இல்லாவிட்டால் புலவன் வாழமுடியாது, அவன் கலை சிறக்காது.

காரணம், அவனுக்கு தொழில் இல்லை; சம்பாத்தியம் இல்லை; மற்றவர்களை போல காசும் பணமும் பிரதானம் என அவனால் குறியாக இருக்கமுடியாது; புலவன் தேடலிலும் கற்பனையிலும் சிந்தனை ஓட்டத்திலுமே வாழ்பவன்; அவனுக்கு ஒரு ஆதரவு அவசியம்.

கொம்பில்லாமல் கொடி படராது, புரவலன் இல்லாமல் புலவன் வாழமுடியாது.

இடைக்காடனாரின் துயரம் கண்டு வருந்திய கபிலர் அவரை அரசனிடம் பாடி பொருள் வாங்க யோசனை சொன்னார். அக்காலத்தில் அது புலவர்களின் தொழிலாய் இருந்தது.

தன் நண்பர் கபிலர் சொன்னபடியே மதுரைக்கு வந்தார் இடைக்காடர். இடைக்காடு என அவர் பிறந்த ஊர் மதுரைக்கு தள்ளி இருந்தது.

மதுரைக்கு வந்தவரை கபிலர் வரவேற்றார். பின், இருவரும் ஆலவாயன் சன்னதி சென்று வணங்கினார்கள்; இடைக்காடர் சிவனை வணங்கிப் பாடினார்; பின் மன்னன் அவை புகுந்தார்கள்.

தமிழ்சங்கத்திலே மன்னன் வீற்றிருந்தான், 48 புலவர்களும் அவரவர் ஆசனத்தில் அமர்ந்திருந்தார்கள்.

ஏகப்பட்ட புலவர்கள் தங்கள் பாடல்களை, காவியங்களை பாடி அங்கீகாரம் பெற வந்தார்கள்; சபை சிலவற்றை அங்கீகரித்தது; சிலவற்றை புறம் தள்ளியது.

மன்னன் பலவற்றை பாராட்டினான். சிலவற்றுக்கு பரிசளித்தான், இன்னும் பலரை கொண்டாடினான்.

தனக்கான முறை வந்தபோது அந்த அவையில் முட்டையில் இருந்து வந்த கோழிகுஞ்சு போல் நின்றார் இடைக்காடர். மன்னன் அவரை பற்றி பெரிய அபிமானம் கொண்டிருக்கவில்லை. காரணம், பெரிய பாடல்களோ பெயரோ அவருக்கு இல்லை. யாரோ என நினைந்து கொண்டு கையினை மட்டும் ஆட்டிவிட்டு அவன் போக்கில் இருந்தான்.

தன் பாடல்களை ஒரு நூலாக பாடினார் இடைக்காடர். ஆனால், மன்னன் கொஞ்சமும் கவனிக்கவில்லை. அவன் போக்கில் இருந்தான்.

ஒரு புலவனின் பாடல், கவிஞனின் பாடல், தாய் தன் குழந்தைக்கு உணவூட்டுவது போன்றது. அதை அவன் அவ்வளவு ரசனையாக செய்வான், மிக மகிழ்ந்து உளமாற செய்வான்.

குழந்தையின் ஒவ்வொரு அசைவையும் மகிழ்ந்து களித்துக் கொண்டாடும் தாய்போல அவன் தன் படைப்பால் பிறர் எப்படியெல்லாம் மகிழ்கின்றார்கள், உருகுகின்றார்கள் என்பதை கவனிப்பான்.

கலைஞர்களின் சாபம் இது, அவர்கள் சித்தர்கள் அல்ல, அவர்கள் கலைஞர்கள், ரசிகன் இல்லா கலை பெருமை கொள்ளாது.

அப்படி இந்த இடைக்காடர் பாடப் பாட மன்னனோ சிலையாக இருந்தான். புலவர் அதை கவனித்தாலும் மனம் உடையாது மிகுந்து பாடினார்.

அவர் பாடி முடித்தபின்னும் மன்னன் அவன் போக்கில் இருந்தான். மன்னன் மனவோட்டம் அறிந்து சபையும் மௌனம் காத்தது. அச்சபை தமிழ்ஞானம் பெற்றிருந்தாலும் பரிசு அளிக்கும் பலமும் உரிமையும் அரசனுக்கே இருந்தது.

அரசன் அவன் போக்கில் இருந்தான்; இடைக்காடரை ஒரு புலவராக அல்ல, ஒரு மனிதராக கூட அவன் ஏறேடுத்துப் பார்க்கவில்லை. ஏதோ வறுமைக்கு வாழ்பவர் பிதற்றுகின்றார் என்பது போல் அவன் போக்கில் இருந்து தலையினை திருப்பிக் கொண்டான்.

அவன் மனம் அப்படி இறுகும்படி சிவனே செய்தார் என்பதை அறியாத இடைக்காடர் மிகுந்த அவமானமாக உணார்ந்தார்; அவர் கண்கள் கலங்கின; அவையினை ஏறேடுத்துப் பார்த்தார்.

கபிலர் அவர் முகத்தை வாஞ்சையோடு கையறு நிலையில் கண்டார். நக்கீரர் இது தன் வேலையல்ல என அமர்ந்திருந்தார். இதர புலவர்கள் இவர் யாரோ என்பது போல் அவர்கள் போக்கில் இருந்தார்கள்.

ஒளவையார் போன்றவர்கள் இதெல்லாம் சிவனின் நாடகம் என உணர்ந்து அமைதியாக இருந்தார்கள்.

இடைக்காடர் பெருமூச்செறிந்தார். புலவன் வறுமைபட்டவன்தான், ஒன்றுமில்லாதவனேதான், ஆனால் தன் புலமை அவமானபடுத்தப்பட்டால் அது அவனுக்கு உயிரினை சுடுவதுபோல் நிச்சயம் சுடும், அப்படி அவருக்கும் தீயென சுட்டது.

அந்த வலியில் அவசரமாக சபையினை விட்டு வெளியேறியவர் நேரே ஆலவாயன் சன்னதிக்குச் சென்றார், சென்றவர் கதறினார்.

“சொக்கா, இந்த பாண்டிய நாட்டின் தலைமையம்பதி இந்த மதுரை, அந்த மதுரைக்கு எக்காலமும் அரசன் நீர். இந்த பாண்டிய மன்னன் உமக்கு கட்டுப்பட்டவன் என்றே நான் நம்புகின்றேன்.

எம்பெருமானே, இவன் தமிழை தமிழ் புலமையினை ஆதரிப்பான் என்றல்லவா வந்து பாடிவிட்டேன். அவன் என்னை ஆதரிக்காவிட்டாலும் பரவாயில்லை என் தமிழை என் பாடலை மிக கேவலமாக அவமதித்துவிட்டான் ஐயனே.

அவன் என் பாட்டுக்கு ஒரு அரசனாக கவிஞனாக இல்லமால், ஏன் மனிதனாக கூட இல்லாமல் கடல் போல், மண்போல் , மரம்போல், விலங்கு போல், கொடிய பாலை நிலம்போல் பாறைபோல் அல்லவா இருந்துவிட்டான். இது தகுமோ?

சிவனே நான் உன்னை நம்பி வந்தேன். இந்த அவமானம் எனக்கல்ல உனக்கு; இந்த அவமானம் தமிழுக்கு; தமிழ் பாடலுக்கு; அதனால் தமிழ் தந்த உனக்கான அவமானம்.

உனக்கான அவமானத்தினை நீயே பார்த்துக்கொள். வறுமை என் கர்மா என்றால் அதை நான் சுமக்கின்றேன். ஆனால், இந்த அவமானம் உனக்குத்தான் எம்பெருமானே, அதைத்தான் என்னால் தாளமுடியவில்லை” எனச் சொல்லி தன் ஊர் திரும்பினார்.

அவமானமும் ஆற்றாமையும் அவருக்குள் ஆறாய் பொங்கிற்று.

அந்த உன்னத பக்தனின் மனதை அறிந்த சிவன் தன் திட்டப்படியே குலேச பாண்டியனின் மமதையினை அகற்றும் பொருட்டு ஒரு நாடகம் ஆடினார்.

அன்றே அவர் தன் தேவியுடன் மதுரையினை விட்டு நீங்கி, வைகையின் வடக்கே நெடும்தூரம் நகர்ந்து ஒரு இடத்தில் தங்கினார்.

சொக்கனும், மீனாட்சியும் சென்றதை அறிந்த 48 புலவர்களும் சிவன் இருக்குமிடமே தங்கள் தமிழ்ச்சங்கம் என அவர்களும் சென்றார்கள்.

கோவிலில் சிவன் இல்லை; சிவலிங்கமில்லை; தேவி இல்லை; விளக்குகள் இல்லை; எதுவுமில்லை; அது வெறும் வீடுபோல் கிடக்கின்றது என்பதை அறிந்த மன்னன் அலறினான். என்னாயிற்றோ எனக் கலங்கி ஓடிவந்தான்.

அங்கே ஆலவாயன் சன்னதி காலியாக கிடந்தது.

என்ன நடந்ததோ எனப் பதறிய மன்னன் அலறினான்; அழுதான்; கண்ணீர்விட்டு பிதற்றினான்.

“பாண்டியரின் குலதெய்வமே, காலம் காலமாக பாண்டியரின் ஆதாரமும் அடைக்கலமும் பலமும் காவலுமான சிவனே! எந்த பாண்டியனும் பார்க்காத பார்க்கக் கூடாத காட்சியினை நான் கண்டுவிட்டேனே, பெரும் சாபம் என்னுடையது.

சிவனே! நான் செய்த பாவம் என்ன? நான் செய்த சிவதுவேஷம் என்ன? இந்த பாண்டிய வம்சத்திலே பெரும் பாவம் செய்துவிட்டவனான நான் என்ன தண்டனைக்கும் தயாராக இருக்கின்றேன்.

எம்பெருமானே! நீர் இருக்குமிடத்தை எனக்கு காட்டும்” எனக் கதறினான்.

நடுங்கிய கரத்தோடு கண்ணீர்வற்றிய கண்களோடு அவன் மீண்டும் சொன்னான்.

செண்பக மாறன் தொடங்கி, பிரதாப சூரியன், வங்கிசத்துவஜன், ரிபுமர்த்தனன், வங்கிச சாந்தகன், சேரவங்கி சாந்தகன், பாண்டி வங்கிசசேனன், வங்கி சிரோமணி, பாண்டீச்சுரன், குலத்துராஜன் வங்கிசபூஷணன், சோமசூடாமணி, குலசூடாமணி, சூடாமணி, பூபசூடாமணி, குலேச என்ற பெரும் வரிசையில் வந்தவன் நான்.

அவர்களெல்லாம் சிவனருளை பெற்றவர்கள். நானும் அவ்வரிசையில் இந்த பாண்டியகுல மன்னனாக சிவனருள் பெற்றதாக எண்ணிக்கொண்டிருந்தேன்.

இதோ மொத்தமும் போனதே; என் குலத்துக்கே தீரா களங்கம் செய்துவிட்டேனே; எம்பெருமானே எங்கு சென்றீர்; நீர் மீள வர நான் என்ன செய்யவேண்டும் எனக் கதறினான்.

அப்போதுதான் சிவன் தேவியோடு வைகைக்கு வடக்கே அமர்ந்திருப்பதும், அவருடன் தமிழ்ச்சங்கமே சென்றுவிட்டதுமான செய்தி அவனை எட்டிற்று.

அவன் அந்த நல்ல செய்தி சொன்னவனை கட்டித் தழுவி வாழ்த்தி பரிசளித்து பாராட்டிவிட்டு சிவன் இருக்கும் இடம் நோக்கி ஓடினான். வெறும் கால்களால் ஓடினான்.

அங்கே வைகையினை கடந்து அவன் சென்று பார்த்தபோது அங்கே 48 புலவர்கள் இருந்தார்கள். மன்னனால் சிவனை காணமுடியவில்லை, அவன் கண்ணுக்கு அவர் மறைந்திருந்தார்.

மன்னன் “ஓ..” எனக் கதறினான்; அரண்டு புரண்டான்; மதுரையின் மகிமை நீங்கிற்று என்றும், தான் செய்த தவறால் பாண்டிய குலத்துக்கே பெரும் அவமானம் வந்துவிட்டது என்றும் அரற்றினான்; அழுதான்.

கடைசியாக ஒரே ஒரு வாய்ப்பு தரும்படியும், தன் தண்டனைக்கான காரணம் என்ன என சொல்லும்படியும் அவன் மீண்டும் மீண்டும் கதறினான்.

அவனின் கதறலைக் கேட்ட சிவன் அசரீரியாகச் சொன்னார், ” பாண்டியா, இந்த மதுரை எனக்கு பிடித்தமான தலம், ஆயிரம் லிங்கங்களை, சுயம்பு லிங்களை கொண்ட அற்புதமான தலம், இங்கே நான் எக்காலமும் வாசம் செய்வேன்.

அந்த ஆயிரம் லிங்ககளில் 64 முக்கியமானது. திக்பாலர்கள் முதல் பெரும் பராக்கிரமசாலிகள் வழிபட்டு தொழுதவை அவை.

ஊழிக்காலமொன்றில் ஒரே ஒரு லிங்கம் தவிர வேறு எல்லாம் மறைந்தது; அந்த ஒரே ஒரு லிங்கம்தான் இப்போது என் வடிவாக உண்டு; அங்கே நாம் எக்காலமும் உண்டு.

பாண்டியா, நீ இந்த மகா சிறப்புவாய்ந்த லிங்கம் இருக்கும் மதுரையின் காவல்காரன். அந்த இடைக்காடர் என் அடியார், அவர் நாம் கொடுத்த தமிழால் உன்னிடம் பாடவந்தார், என்னைத் தொழுது வந்தார்.

ஆனால், நீ அவரை புறக்கணித்தாய்; அழவைத்தாய். ஒரு மன்னன் புலவர்களை ஆதரிக்கவேண்டும்; பல பாடல்களை பாடவைக்கவேண்டும்; அவை மன்னனுக்கோ, எனக்கோ இத்தமிழ் சங்கத்துக்கோ அல்ல; அந்த எழுத்தும் பாடலும்தான் தலைமுறை தலைமுறையாக நின்று எல்லா உண்மைகளையும் சொல்லும்.

நீ அழிவாய், உன் செல்வமும் அரசும் ஒரு காலத்தில் அழியும் அதுவிதி. ஆனால் ஒரு புலவன் பாடிவைத்ததும், எழுதிவைத்ததும் சாட்சி சொல்லும், அதுவும் என் அடியானாக நின்று ஒருவன் எழுதும் எழுத்து எக்காலமும் தாண்டி நிற்கும், அப்படிபட்டவனை நீ அவமதித்ததாலே நானும் என் புலவர்களோடு இப்பக்கம் வந்தேன்.

உன் தவறை நீ உணர்ந்ததால் நாம் மகிழ்ந்தோம், இந்தத் தலம் இனி உத்திர ஆலவாய் என அழைக்கப்படும்” எனச் சொல்லிற்று.

மன்னன் மகிழ்ந்தான். அப்படியே அந்த 48 பேருடன் மதுரை திரும்பினான். இடைக்காடரை உடனே சந்திக்க ஏற்பாடு செய்தான்.

மன்னனின் சேனைகள் இடைக்காடரை நோக்கிச் சென்றார்கள். மன்னன் அழைக்கின்றான் என்றதும் மிக மிக அஞ்சிய இடைக்காடர், ஏதோ பெரிய ராஜகுற்றமோ என அஞ்சிய இடைகாடர் பதறினார்.

அவர்களோ, “மன்னர் உங்களை பல்லக்கில் அழைத்துவர சொன்னார்” எனச் சொன்னார்கள். அப்படியே அவரை பல்லக்கில் ஏற்றி பெரும் ஆரவாரதோடும் மரியாதையோடும் அழைத்துச் சென்றார்கள்.

மன்னன் வடக்கு ஆலவாய் இடத்தில் இருந்து மதுரை சொக்கநாதர் ஆலயம் நோக்கி ஓடினான், வாசலில் விழுந்து உள்ளே சென்று பார்த்தான்.

அங்கே சிவன் அமர்ந்திருந்தார். அவரின் விளக்குகள் உள்ளிட்ட எல்லாமும் பழைய நிலைக்கு வந்திருந்தன. தேவியும் திரும்பியிருந்தார். மன்னன் மிக்க மகிழ்ச்சி அடைந்தான்.

மனமுருகி மன்னிப்பு கேட்டு மிகுந்த ஆனந்தம் கொண்டு விழா எடுக்க உத்தரவிட்டான்.

அப்படியே இடைக்காடர் வந்த செய்தி கேட்டு ஓடிவந்த மன்னன் அவரைப் பணிந்தான்; அவரை நல்ல மணமிக்க நீர் கொண்டு பாதம் கழுவி வரவேற்றும் அரச கோலத்துக்கு தயார் செய்யச் சொல்லி தன் நகைகளையெல்லாம் கழற்றி அவருக்கு அணிவித்து, அவரை தன் அரியாசனத்தில் அமர வைத்து பணிவோடு காலடியில் அமர்ந்து கொண்டான்.

பின் சொன்னான், “அவையோர்களே, இந்த இடைக்காடர் விஷயத்தில் நான் தவறிழைத்துவிட்டேன். அதற்கு எம்பெருமானே எம்மை தண்டித்துவிட்டார்.

அவர் எந்த பாடல் பாடும்போது நான் புறக்கணித்தேனோ அந்தப் பாடலை, அந்த நூலை அவர் இப்போது பாடுவார்” என அறிவித்தான்.

இடைக்காடர் முன்பு பாடிய பாடலை பாடினார். மன்னன் வரிக்கு வரி ரசித்துக் கைதட்டினான். அவை கொண்டாடிற்று.

கபிலர் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். இதர புலவர்களும் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்து கொண்டாடினார்கள்.

இடைக்காடரை அப்படி சிறப்பித்த மன்னன் பெரும் பொன்னும் பொருளும் கொட்டிக்கொடுத்தான்.

பாடலை முடித்த இடைக்காடர், “மன்னா, இது உமக்குரிய சிம்மாசனம், நான் பாடலை பாடி பரிசுபெறவே வந்தேன், இதோ பெற்றும் கொண்டேன், எம்பெருமான் எம்மை கைவிடவில்லை, அந்த மகிழ்வுடன் நான் கிளம்புகின்றேன்” என விடைபெற்றார்.

மன்னன் அவரோடு ஏழு அடி நடந்தான். அந்த சம்பிரதாயத்துக்கு அவரும் அவனும் ஒன்றாயினர்; ஒரே அரசகுலமாயினர் எனப் பொருள்.

மிகுந்த நிறைவுடன் நெகிழ்வுடன் ஆலவாயன் கோவிலுக்கு சென்ற இடைக்காடர் சிவனுக்கு தன்னால் முடிந்தமட்டும் நன்றி சொல்லிவிட்டு தன் இல்லம் திரும்பினார்.

குலேசபாண்டிய மன்னன் மிகுந்த பொறுப்புடன் தமிழ்ச்சங்கத்தையும், நாட்டையும் நடத்தினான். அடியார்கள், புலவர்கள் என ஒவ்வொருவரையும் மிகுந்த கவனமாய் தன்னில் ஒருவர் போல் நடத்தி வந்தான்.

இதுதான், “இடைக்காடனுக்காக இடம் பெயர்ந்த படலம்”. இந்த பெரும் நாடகத்தை தன் அடியாருக்காக செய்தார் சிவன்.

இந்தத் திருவிளையாடல் சொல்லும் போதனை எளிதானது. புலவர்கள் கலைஞர்களெல்லாம் ஒரு மன்னனால், இல்லை பெரிய இடத்தில் இருப்பவனால் ஆதரிக்கப்படவேண்டும்‌.

அடியார்களும், சிவன் பெருமை பாட வாழ்பவர்கள் அவர்கள்தான். காலத்தை பதிவு செய்பவர்கள், அவர்கள்தான். கால காலத்துக்கும் சிவன் பெருமையினை எழுதிவைக்க வந்தவர்கள், அவர்களாலேதான் மதம் வாழும்.

நால்வர் உள்ளிட்ட சைவக் குரவர்கள், சேக்கிழார் என எல்லோரும் அப்படி வந்தவர்களே. அவர்களால்தான் இன்றளவும் வரலாறு கண்முன் நிற்கின்றது.

ஆலயத்திருப்பணி செய்வது எவ்வளவு முக்கியமோ அவ்வளவுக்கு அடியார்களையும் அவர்கள் புலமையும் ஆதரித்து சிவனுக்கான காரியங்களை பாடவைப்பதும் எழுதவைப்பதுமாகும்.

இந்தத் திருவிளையாடல் அழுத்தமாக சொல்லும் உண்மை எது என்றால் சிவனடியார்களை மதிக்கா தேசத்தில் சிவன் இருக்க விரும்புவதில்லை, தன் அடியார் எங்கு உண்டோ, எங்கு தன் அடியார் வாழ்வாரோ அங்கே சிவனும் வாழ்வார்.

சிவனை கொண்டாட வேண்டுமென்றால் ஆலயம் கட்டி கொண்டாடுவது மட்டுமல்ல, பெரிய பெரிய கோபுரமும் பெரும் பிரமாண்டமும் காட்டுவதல்ல‌.

அங்கே மாபெரும் பொருட்செலவில் வழிபாடுகளும் செய்வதல்ல. அடியார்களை கொண்டாடும் இடத்தில் சிவன் இருப்பார்.

இதனாலே அக்காலத்தில் மன்னர்கள் ஆலயங்களை விட அடியார்களை கொண்டாடினார்கள். மன்னர்கள் சேக்கிழார் போன்றோரையும், அடியார்களையும் முன்னால் வைத்து நின்றார்கள்.

அடியார்கள் கூடிய மடங்கள் பெருகின. அவற்றுக்கு எல்லா வகை உதவியும் ஆதரவும் பலமும் அரசனால் கொடுக்கப்பட்டன. அந்த அளவு அரசர்கள் அடியார்களை ஆதரித்தனர்.

அன்னசாலை அமைத்தல், அடியார்க்கு உதவுதல் என அவர்களை நடமாடும் சிவலிங்கமாகவே அக்கால மக்கள் கண்டார்கள்.

ஒளவையார் ஒரு பாடலில் அதை அழகாக சொல்கின்றார்.

“பெரியது கேட்கின் எரிதவழ் வேலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது
புவனமோ நான்முகன் படைப்பு
நான்முகன் கரியமால் உதிரத்தில் உதித்தோன்
கரிய மாலோ அலைகடல் துயின்றோன்
அலைகடல் குறுமுனி கலசத்தில் அடக்கம்
கலசமோ புவியிற் சிறுமண்
புவியோ அரவினுக்கு ஒருதலைப் பாரம்
அரவோ உமையவள் ஒருசிறு மோதிரம்
உமையோ இறைவர் பாகத் தொடுக்கம்
இறைவரோ தொண்டர் உள்ளத் தொடுக்கம்
தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே”

அதாவது மிகப்பெரியது எது என்று கேட்டால், இந்த உலகம்தான் பெரியது. ஆனால், இந்த உலகமோ நான்முகனால் படைக்கப்பட்டது. எனவே, நான்முகன்தான் பெரியவன் என்றால் நான்முகனோ திருமாலின் உந்தியில் (தொப்புள்) தோன்றியவன். எனவே, திருமால்தான் பெரியவன் என்றால் திருமாலோ அலைகடலில் தூங்குகிறவன். திருமாலைத் தாங்கும் கடல்தான் பெரியது என்றால், அந்தக் கடலும் அகத்தியனின் கையில் உள்ள கலசத்தில் அடங்கியது. எனவே, அகத்தியர்தான் பெரியவர் என்றால், அந்த அகத்தியரும் கலயத்தில் (சிறு மண்குடம்) அடங்கி இருந்தவர்.

எனவே, கலயம் தான் பெரியது என்றால் அந்தக் கலயமோ இந்தப் பூமியில் உள்ள மண்ணால் செய்யப்பட்டது. எனவே, பூமிதான் பெரியது என்றால், இந்தப் பூமியை ஆதிசேஷன் என்னும் ஐந்து தலைகள் உள்ள பாம்பு தனது ஒரு தலையில் தாங்கியிருக்கிறது. பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் என்னும் பாம்புதான் பெரியது என்றால் அந்தப் பாம்பை, உமையவள் தனது விரலில் மோதிரமாக அணிந்துள்ளாள்.

எனவே உமையவள்தான் பெரியவள் என்றால், அந்த உமையவளோ சிவனது உடலின் ஒரு பாதியில் ஒடுங்கியிருக்கிறாள். எனவே சிவன்தான் பெரியவன் என்றால், அந்தச் சிவனோ அடியவர்களின் உள்ளத்தில் ஒடுங்கியிருக்கிறான். எனவே அடியவர்களின் பெருமைதான் உலகில் பெரியது.

அந்தப் பெரிய நிலையினை சொல்லி, அடியார்கள் அருமையினை சொல்லி விளக்குகின்றார் ஒளவையார்.

அந்த ஒளவையாரின் போதனையின் கண் கண்ட காட்சி இந்தத் திருவிளையாடல்.

அடியார்களையும் சிவன் புகழ் பாடுபவர்களையும் கொண்டாடுதல் கோவில் திருப்பணிகளை போல புனிதமானது என்பதும், சிவனடியாரை தொழாத தேசத்தில் சிவன் இருப்பதில்லை என்பதும் லௌகீக போதனைகள்.

ஒவ்வொருவரும் சிவன் புகழ்பாட படைக்கப்பட்டிருகின்றோம். சிவனடியார்களை கொண்டாட‌ என்பதும், அங்கே அந்தக் கடமையினை செய்யாவிட்டால் சிவம் நம்மைவிட்டு அகன்றுவிடும், அங்கே நிறைவில்லா பெருமையில்லா வாழ்வு மறுபடி பிறந்து கர்மம் தீர்க்கும் வாழ்வு அமையும் என்பதும் இங்குள்ள போதனைகள்.

ஒவ்வொருவர் இதயமும் எம்பெருமான் வாழும் ஆலயம், அங்கே அடியார்களை கொண்டாடாத நிலையில் அந்த மனதில் இருந்து சிவம் அகன்றுவிடும், எவன் அடியார்களை கொண்டாடுவானோ அங்கே சிவம் வாழும் என்பதும் இந்த திருவிளையாடலின் போதனை.

இந்த இடைக்காடர் இதன் பின் என்ன ஆனார் என்பது பற்றி இருவிதமான கருத்துக்கள் உண்டு.

முதல் கருத்து, அவர் அப்படியே சிவனடியாராக வாழ்ந்தார் என்பது. இரண்டாம் கருத்து இந்த அதிசயத்தின் பின் அவர் கொங்கண சித்தரின் சீடராகி இடைக்காட்டு சித்தர் என்றானார் என்பது.

இரண்டாம் வகை நடந்திருக்க வாய்ப்பு அதிகம். காரணம், மன்னன் நிச்சயம் அவரை அந்த 48 பேர் கொண்ட அவையில் சேர்த்திருப்பான், சிவனே ஒரு புலவருக்காக ஊரைவிட்டு நடந்தார் என்றால் நிச்சயம் அவரை அவையில் சேர்த்துதிருப்பார்கள்.

அவர் அப்பட்டியலில் இல்லை என்பதால் நிச்சயம் சித்தர் ஆகியிருக்கவே வாய்ப்பு உண்டு, அவ்வகையில் இவர்தான் இடைக்காட்டு சித்தர்.

அந்த சித்தர்தான் “அறுபது வருட வெண்பா” என ஒவ்வொரு தமிழ் வருடத்துக்குமான பஞ்சாங்கத்தை எழுதிவைத்தவர், அது ஒரு காலமும் பொய்ப்பதில்லை.

“இடைக்காட்டுச் சித்தர் பாடல்” எனும் அவரின் பாடல் அவ்வளவு நுணுக்கமானது, மிகுந்த ஞானமானது. இவர் திருவண்ணாமலையில் சமாதி அடைந்தார், அவர் சமாதி அங்குதான் உண்டு.

இந்தத் திருவிளையாடல் நடந்தபோது சிவன் தற்காலிகமாக தங்கியிருந்த “உத்ர ஆலவாய்” என்பது “திருஆலவாயர் திருக்கோவில்” என சிம்மக்கல் அருகே அமைந்துள்ளது.

இது ஆதி சொக்கநாதர் ஆலயம் என்றும் அழைக்கப்படுகின்றது. வடக்கு ஆலவாய் இதுதான், பஞ்ச பூத தலங்களில் இதுவும் ஒன்று.

மதுரைக்கு செல்வோர் அதாவது மீனாட்சி சொக்கநாதரை தரிசிக்க செல்வோர், இந்த ஆலயத்தை தவறாமல் தரிசித்தல் நன்று. அப்போதுதான் முழு பலனும் உண்டு, அடுத்தமுறை செல்லும்போது மறவாதீர்கள்.

ஆம். மதுரையில் ஒரு ஆலவாய் அல்ல, இரு ஆலவாய் இருத்தல் வேண்டும். எண்ணற்ற மக்களுக்கு அது அருளாசி வழங்க வேண்டும் எனப் பரமனே ஏற்படுத்திய ஆலயம் இது.

அங்கே சென்று எல்லா அருளையும் பெற்று அந்த ஞானத்தில் அடியார்களை, சிவன் அடிமைகளை முழுக்க ஆதரித்து சிவப்பணி செய்யும் வரம்பெறுதல் ஒவ்வொருவரின் கடமையாகின்றது. அதைச் செய்யும்போது சிவன் உங்களை உங்கள் குடும்பத்தை தன் கரம் கொண்டு காவல் இருந்து காப்பார். இது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் : 19 வேதம் விளக்கிய படலம்.

ஒவ்வொரு யுகம் முடியும் போதும் இந்தப் பிரபஞ்சம் முழுக்க அப்படியே சிவனில் ஒடுங்கும். எதுவுமே மிஞ்சாமல் அவருள் எல்லாமே ஒரு புள்ளிபோல் சுருங்கிவிடும். பின் உரிய காலத்தில் அந்தச் சிவனில் இருந்தே எல்லாம் மீண்டும் விரிந்து பரவத் தொடங்கும்.

இந்த விளையாட்டு எல்லா யுகத்திலும் உண்டு, அதைத்தான் “அலகிலா விளையாட்டு”. ‘அலகு’ என்றால் ஒரு அளவினைச் சொல்வது, இத்தனை முறைதான் என்றில்லாமல் இது சென்றுகொண்டே இருக்கும், பரம்பொருளின் விளையாட்டு இது. மானுடர்க்கு அல்ல, தேவர்களுக்கும் ரிஷிகளுக்குமே புரியாத தத்துவம் இது.

இதில்தான் இந்த பிரபஞ்சம் பிரளயகாலத்தில் அழிவதும், பின் மீள வருவதுமாக இயங்கிக் கொண்டிருக்கின்றது.

உண்மையில் இங்கு எதுவும் அழியவில்லை. மாறாக, எல்லாம் உருமாறி சிவனில் ஒடுங்குகின்றன, பின் உரிய நேரம் மீண்டும் விரிந்து பரந்து ஒவ்வொரு வடிவினை அடைந்து நிற்கின்றன‌.

அப்படியான ஒரு யுக தொடக்கத்தில் வழமை போல் சிவன் முதலில் விஷ்ணுவினைப் படைத்தார். விஷ்ணுவின் நாபியில் இருந்து பிரம்மன் உருவாகி உலகங்களைப் படைக்க ஆரம்பித்தார்.

அதே நேரம் சிவனிடம் இருந்து பிரணவம் வந்தது; பிரணவத்தில் இருந்து வேதங்கள் வந்தன; இந்த‌ச் சக்தியால் எல்லா உலகமும் மீண்டும் இயங்கத் தொடங்கின; வேதங்கள் எல்லா இடமும் ஒலிக்கத் தொடங்கின‌.

அப்படி நைமிசாரண்ய முனிவர்களும் வேதம் ஓதினார்கள். சிறந்த முனிவர்களான அவர்களுக்குள் அப்போது ஒரு குறைவந்தது. அது வேதங்களை அவர்களால் ஓதமுடிந்ததே தவிர அதன் பொருள் அறிய முடியவில்லை.

வேதங்களின் பொருள் தெரியாமல் குழம்பிய அவர்கள் தங்கள் குறையினை அங்கு வந்த அரபத்த முனிவர் என்பவரிடம் எடுத்துச் சொன்னார்கள்.

“அரபத்தரே, சிவபெருமானின் திருவாக்கில் இருந்து வந்த வேதங்களை நாங்கள் ஓதுகின்றோம். ஆனால், அதன் பொருள் அறிகிலோம், இதனை எங்களுக்கு விளக்கிச் சொல்வாரும் யாருமில்லை.

பொருள் தெரியா இந்த வேதத்தை சொல்லும் போது அடிமனதில் இருள் இருப்பதாகவே உணர்கின்றோம். ஐயா உமக்கு தெரியாததல்ல, இது சிவன் வாக்கு, அங்கே சந்தேகப்பட எதுவுமில்லை. ஆனால், அர்த்தம் சொல்வார்தான் யாருமில்லை” எனக் கொஞ்சம் சங்கப்பட்டனர்.

அரபத்தர் அவர்களுக்கு ஒரு உபாயம் சொன்னார்.

“முனிவர்களே, எம்பிரான் வாக்கிற்கு அவர்தான் விளக்கம் சொல்லமுடியும், உங்களுக்கு ஒரு யோசனை கூறுகின்றேன். அதை முயன்றுபாருங்கள்.

புண்ணிய ஸ்தலங்களிலே சிறந்ததும், தேவர்களே தங்கள் வேண்டுதலை அடைய வழிபடுவதும், சிவபிரான் மிக விருப்பமாக அமர்ந்து ஆட்சி செய்யும் தலம் ஒன்று உண்டு, ஜீவன் முக்திபுரம் எனும் மதுரையம்பதியே அந்த உன்னதமான சிவதலம்.

அங்கே எழுந்தருளியிருக்கும் சோமசுந்தரப் பெருமானின் தென் பக்கம் கல்லாலமரத்தின் கீழ் வீற்றிருக்கும் தட்சணாமூர்த்தி ஈடு இல்லாதவர்.

அவர்தான் சனகர் முதலான முனிவர்களுக்கு அரிய கலைகளை எடுத்து உரைத்து புரியவைத்தவர், அவரால்தான் உங்கள் கவலையினை போக்க முடியும்.

எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைப்பதும், எல்லா சந்தேகத்தையும் துலக்கி ஞானம் தருவதுமான அந்தத் தலம் உங்களுக்கு வேதத்தின் பொருளை தரட்டும்.

அங்கே நீங்கள் இருபத்தி இரண்டு அட்சரம் கொண்ட மேதா மந்திரத்தை மட்டும் உச்சரித்து வேண்டுங்கள், நான் அதை உங்களுக்கு உரைப்பேன்” என்றார்.

அதன்படி நைமிசாரண்ய ரிஷிகள் கண்மர் முனி தலைமையில் கிளம்பினார்கள். மதுரையம்பதியினை அடைந்து பொற்றாமரை குளத்தில் நீராடி ஆலவாயனை தரிசித்து கல்லால மரத்தடியில் இருக்கும் தட்சணாமூர்த்தியிடம் சரணடைந்தார்கள்.

கார்த்திகை மாத பௌர்ணமியில் இருந்து அவர்கள் வழிபாடு ஆரம்பமானது. அனுதினமும் அந்த அரபத்த முனிவர் சொன்ன மேதா மந்திரத்தை மிக பக்தியாக சொல்லி தட்சிணா மூர்த்தியினை தொழுது கொண்டே இருந்தார்கள்.

“ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்தயே மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா” எனும் அந்த மந்திரத்தை ஓதிக் கொண்டே இருந்தார்கள்.

ஒருவருட காலம் சென்றது. முனிவர்களோ கொஞ்சமும் அதுபற்றி கலங்காமல் விடாமல் ஆலவாய் நாதனை தொழுதுவிட்டு தென் பக்கம் இருக்கும் தட்சணாமூர்த்தியினை தொழுது வந்தார்கள்.

சரியாக ஒருவருடம் முடிந்து அடுத்த கார்த்திகை பௌர்ணமி அன்று அந்த காட்சி நடந்தது. முனிவர்கள் அதிசயித்து பார்க்க அந்த 16 வயது இளைஞன் மிகுந்த தேஜஸுன் கண்களில் ஒளிபொங்க நடந்து வந்தான்.

காதுகளில் குண்டலம் ஒளிவீசிற்று; மார்பிலே பூணூல் அழகாக சேர்ந்திருந்தது; கழுத்தில் ருத்திராட்சம் அவன் ஆன்மீக அழகை இன்னும் கூட்டிற்று; மார்பில் உத்தரீயம் மின்னிற்று.

நெற்றியிலே ஒழுங்காக திருத்தமாக பூசப்பட்ட திருநீறு அவனின் சிவதாத்பரியத்தை சொன்னது; வலது கையில் பவித்ரம்; இடது கையில் சிவஞான போத ஏடு தாங்கி கம்பீரமாக அவர்களை கடந்து செல்ல முனைந்தான்.

செல்லும் போது அவர்களை ஒரு பார்வை பார்த்தான். முனிவர் குழாம் அந்த வாலிபனின் தோற்றத்திலே மயங்கி கையெடுத்துக் கும்பிட்டார்கள்.

“முனிவர்களே, என்னால் உங்களுக்கு ஏதும் ஆகவேண்டி உள்ளதோ? இருந்தால் சொல்லுங்கள்” என்றான்.

“வேதங்களின் உட்பொருளை எண்ணி வேண்டி நிற்கின்றோம் ஐயனே, ஒருவருடம் தவமிருந்தும் எங்களுக்கு பதில் கிடைக்காமல் தவிக்கின்றோம். இந்த தட்சணாமூர்த்தி சன்னதியில் நீவீர் அதைச் சொன்னால் எங்கள் தவப்பயனை அடைவோம்” என்றார்கள்.

அந்த இளைஞன் அவர்களை பார்த்து இரக்கம் கொண்டு அவர்கள் முன் அமர்ந்து சொல்லத் தொடங்கினான்.

“முனிவர்களே, வேதங்களின் பொருள்கள் இரகசியமானவை.

சுயம்புவாய், உத்தமமானதாய், தத்துவங்களின் ஆதிப் பொருளாய் விளங்குகிறது. எங்கும் நிறைந்த வடிவமாய் விளங்கும் இச்சொக்கலிங்கம் வேதங்கள் அனைத்துக்கும் பராபரன். ஞானவடிவானவன், நிர்மயன்.

அந்த பரப்பிரம்மாகிய இம்மூர்த்தியின் வடிவமே வேதமாகும்.

முனிவர்களே லிங்கமும் வேதமும் வேறல்ல. வேதம் சாகைகளின் பேதத்தினால் பலவிதங்களாகப் பிரிநதுள்ளது.

ஆதிப்பரம்பொருளாகிய எம்பெருமான் படைத்தல், காத்தல், அழித்தல் ஆகிய மூன்று தொழில்களையும் செய்து மும்மூர்த்திகளானார்.

நான்முகனாகி மூன்று உலகங்களையும் படைத்து, விஷ்ணுவாக இருந்து அனைத்தையும் பாதுகாத்து ருத்திரனாகி எல்லாவற்றையும் அழிக்கின்றார்.

விங்கத்தின் கீழ்பாகம் பிரம்ம‌னாகும்; நடுப்பாகம் விஷ்ணு வடிவமாகும்; மேலேயுள்ள குழவி போன்ற பாகம் ஈசன். இந்த மூவகை தத்துவங்களிலிருந்து எல்லாத் தத்துவங்களுமே தோன்றுகின்றன. ஆன்ம தத்துவத்திலிருந்து அகாரமும், வித்தியா தத்துவத்திலிருந்து உகாரமும், சிவ தத்துவத்தில் இருந்து மகரமும் தோன்றின.

இந்த அகர உகர மகர அதாவது அ+உ+ம் எனும் கலவையால் ‘ஓம்’ எனும் பிரணவம் உருவாயிற்று.

அந்த பிரணவத்தில் இருந்தே அடுத்த தாரக மந்திரமாகிய மூன்று வடிவங்களைக் கொண்ட காயத்திரி உண்டாயிற்று. அது ஸமஷ்டி என்றும், வியஷ்டி என்றும் இருவகையாக விரும்பிய பொருள்களைப் பெறுவதற்குக் காரணமாக விளங்குகிறது.

இந்த காயத்ரியில் இருந்துதான் நால்வகை வேதங்களும் வந்தன‌.

முனிவர்களே, நான் உங்களுக்கு இன்னமும் உரைப்பேன், வேதங்கள் வந்த வகையினை ஆழமாக உரைப்பேன்.

இந்த நால்வகை வேதங்களும் காயத்திரியில் இருந்துதான் வந்தன. அவை இன்னும் இன்னும் பலவாய் பெருகின‌.

பிரணவத்தில் இருந்து அகரம் இன்னும் பலவற்றை தோற்றுவித்தது, அதன்படி லிங்கத்தின் உச்சமாகிய ஈசான முகத்தில் இருந்து சிவாகமங்கள் இருபத்தெட்டும் தோன்றின.

கிழக்கு முகமான தத்புருஷ முகத்திலிருந்து இருபத்தொரு சாகைகளோடு ரிக்வேதம் தோன்றியது.

தெற்கு முகமான அகோர முகத்திலிருந்து நூறு சாகைகளோடு யஜுர்வேதம் உண்டாயிற்று.
வடக்கு முகமான வாமதேவ முகத்திலிருந்து ஆயிரம் சாகைகளோடு சாமவேதம் தோன்றியது.

மேற்கு முகமான சத்யோஜாத முகத்திலிருந்து ஒன்பது சாகைகளோடு அதர்வணவேதம் தோன்றியது.
வேதங்கள் நான்குவகை, அப்படியே வர்ண பிரிவுகளும், அதைத் தாங்கும் ஆஸ்ரமங்களும் நான்கு வடிவங்களாயின‌.

தருமங்களும், யாகம் முதலான கருமங்களும் வேதங்களின் நெறியிலே தோன்றின.
வேதங்களை கர்மகாண்டம், ஞான காண்டம் என இருவகைப் படுத்துவர். கர்மகாண்டம் சொக்கலிங்க மூர்த்தியின் பூஜாவிதிகளைத் தெரிவிக்கும். ஞான காண்டம் அப்பெருமானுடைய சச்சிதானந்த வடிவத்தைக் கூறும்.

வேரிலே ஊற்றப்படும் தண்ணீர் கிளைகள் மூலம் இலைகளுக்குப் பரவுவது போல் எம்பெருமானுக்குச் செய்யப்படும் வழிபாடுகள் அவ்விறைவன் வடிவமாகிய தேவர்களை அடைகின்றன.

உலகத்தினர் சுகங்களை அனுபவித்து மோக்ஷத்தைப் பெறுவதற்காகவே சிவ அர்ச்சனை புரிய சிவ லிங்கம் காரணமாக இருக்கிறது.

வேதங்கள் பல சாகைகளைக் கொண்டு தேடியும் உணராது மயங்க, சிவலிங்க பூஜை முறையாலும், ஞான காண்டத்தில் கூறப்பட்ட தெளிவிலும் ஈசனை எளிதில் அறியலாம்.

சிவ பூஜை முதலான நற்கருமங்களாலே ஞானம் உண்டாகிறது. அக்கருமங்கள் உள்ளத் தூய்மையைக் கொடுக்கும். அதனால் சாந்தி ஏற்படும். அச்சாந்தியினாலே அஷ்டாங்க யோகத்தை அடையலாம். சிவபக்தி, சிவபூஜை, சிவதரிசனம், சிவலிங்கம் ஸ்தாபித்தல், சிவனடியார் வழிபாடு. சிவ சின்னம் தாங்குதல், குருபக்தி ஆகிய எல்லாவற்றையும் ஞானத்தால் அறியலாம்.

வேதத்திலே கூறப்பட்டுள்ளவற்றுக்கு ஸ்மிருதிகள் பிரமாணமாகும். ஸ்மிருதிக் கொள்கைகளை ஸ்மார்த்தம் என்று கூறுவர். ஸ்மார்த்தத்தைத் தழுவிய வேத நெறிகள் வைதீகம் எனப்படும். அவற்றுள் மேன்மையானது வைதீக சைவமே”

இப்படிச் சொன்ன அந்த இளைஞர் புன்னகைத்த முகத்துடன் முனிவர்கள் முதுகை தட்டி கொடுத்தார், அது வெறுமனே அல்ல, குண்டலியினை எழுப்பி அவர்களைச் சக்திபெற செய்யும் முறை.

அந்நேரம் அவர்கள் மிகப்பெரிய தெளிவை அடைந்தனர். வேதத்தின் உட்பொருள் அவர்களுக்கு புரிந்தது. அவர்கள் அந்த இளைஞனை கைகூப்பியபடி வணங்கி நிற்க அவனோ புன்னகைத்தபடி ஆலவாயன் சன்னதிக்குள் சென்று மறைந்தே போனான்.

வந்தது சிவனே என உணர்ந்த கண்மர் முதலான முனிவர்கள் விழுந்து விழுந்து வணங்கி தங்களுக்கு மதுரையம்பதியில் சிவனே காட்சிகொடுத்து வேதம் போதித்த வரத்தை எண்ணி எண்ணி மகிழ்ந்தார்கள்.

இதுதான் நைமிசாரண்ய முனிவர்களுக்கு வேதத்தை இறைவன் விளக்கிய படலம்.

முதன் முதலில் வேதம் விரிவாக சொல்லப்பட்ட இடம் இதுதான். இந்த தாத்பரியத்தின் அடிப்படையில்தான் இன்றுவரை வேதங்கள் நிலைபெற்றிருக்கின்றன‌.

ஒவ்வொரு யுகம் முடியும் போதும் எல்லாமே சிவனிடம் ஒடுங்குகின்றது. வேதங்கள் முதல் எல்லாமே அவரிடம் ஒடுங்கிவிடுகின்றன, எல்லாமே சூனியமாகிவிடுகின்றது.

பின், அவரிடமிருந்தே எல்லாமே பிரணவமாக தொடங்கி காயத்ரியாக விரிந்து வேதங்களாக படர்ந்து அது இன்னும் ஆகமங்கள் விதிகள் ஸ்ம்ருதிகள் என வளர்ந்து வருகின்றது.

இதை முதன் முதனில் சிவனே விளக்கிய இடம் மதுரை.

இதைத்தான் சிவ அம்சமான முருகப்பெருமான் பிரம்மனுக்கு உணர்த்தினார். சிவனுக்கு மட்டுமே தெரிந்த அந்த ரகசியங்களை மிக எளிதாக முருகப்பெருமான் கற்றார்.
பிரம்மனுக்கு முருகன் போதித்த வேதங்களின் உட்பொருள் இதுதான்.

இதுதான் இந்த யுகத்தில் வியாசர் மூலம் நமக்கு கிடைத்தது. வியாசருக்கு அந்த ஞானத்தை அருளியது அந்த நைமிசாரண்ய ரிஷிகள், அவர்களுக்கு எல்லாம் அருளியவர் அந்த ஈசன், அவர் மதுரையில் அருளினார்.

இந்தத் திருவிளையாடலில் மிகச் சுருக்கமாக சொல்லப்பட்ட போதனைதான் வியாசப் பெருமானால் பெரிதாக விளக்கமாக சொல்லப்பட்டது.

வியாசர் இந்த யுகத்தில் அந்த ரிஷிகள் பணியினைத் தொடர்ந்தார்.

வேதங்களை வகுத்ததால் அவர் வகுப்பாளர் அதாவது வியாசர் என்றானார், வேதங்களை வகுத்ததால் அவர் பெயர் வேத வியாசர் என்றாயிற்று.

அவர் வேதங்களை வகுத்ததோடு நிறைவடையவில்லை, வேதாந்த தத்துவங்களை சூத்திரங்கள் என வகுத்தார். அது உபநிஷங்கள், பிரம்ம சூத்திரம், பகவத் கீதை என வகுக்கப்பட்டன‌.

இது உலக இயக்கம், பிரபஞ்ச ரகசியம், மானிட ஆத்ம ரகசியம் எனும் வேதாந்தமாயின. வேதங்களின் அந்தமான அதாவது வேதங்களின் முடிவுவரை அலசி ஆராய்ந்து எழுதப்பட்டது அந்த மூன்று நூல்கள்.
இவை எல்லாம் மிகப்பெரிய தத்துவங்கள்.

மானிடர்கள் எல்லோரும் இதைப் புரிந்துகொள்வது சுலபமில்லை. மாபெரும் ஞானிகள் மட்டுமே புரிந்துகொள்ளமுடியும் என்பதால் இன்னும் கொஞ்சம் அதாவது நடுத்தர அறிவுடையவருக்கு பல விஷயம் புரிய புராணங்களை தொகுத்தார்.

18 புராணங்கள் அப்படி அவரால் தொகுக்கப்பட்டன‌.

பிரம்ம புராணம், பத்ம புராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம், லிங்க புராணம், கருட புராணம்
நாரத புராணம், பாகவத புராணம், அக்னி புராணம், கந்த புராணம், பவிசிய புராணம், மார்க்கண்டேய புராணம், வாமன புராணம், வராக புராணம், மச்ச புராணம், கூர்ம புராணம், பிரம்மாண்ட புராணம்
வாயு புராணம் என 18 புராணங்களைக் கொடுத்தார்.

இன்றுள்ள இந்துமதப் பிரிவுகள், அந்த வழிபாட்டு முறைகள், கடவுள்கள் என எல்லாமும் இங்கிருந்துதான் வந்தன. இந்த புராணங்கள்தான் இன்றிருக்கும் இந்துமதத்தின் ஆணிவேர்.

மிகப் பெரும் ஞானியரால் மட்டும் புரியும் வேதங்களை வகுத்து, அந்த வேதங்களை இன்னும் எளிமையாய் சொல்ல மூன்று சூத்திரங்களை உருவாக்கி, அதை செயல்பாட்டில் அதாவது செயல்முறை காட்சியில் காட்ட 18 புராணங்களை கொடுத்தவர் வியாசர்.

அந்த 18 புராணங்கள் அடிப்படையின் பரிட்சார்த்த முயற்சித்தான். ஆலயங்கள், அந்த வழிபாடுதான் ஆகம விதிகள், பூஜைகள், யாகங்கள் என இன்னும் வளர்ந்தன‌.

இப்படிப் பல வகை வழிகளை போதித்தவர் பாமரனும் கேட்டவுடன் வேதங்களின் தர்மத்தை அறிந்துகொள்ள இரு இதிகாசங்களை கொடுத்தார்.

அதில் ஒன்றை அவரே எழுதினார். ஆம். இராமாயணம் மகாபாரதம் எனும் இருபெரும் இதிகாசங்களின் மூலம் அவரே.

அதிலும் விநாயகப்பெருமான் அருளோடு பாரத்தை அவரே எழுதினார்.

நடந்த தன் குலத்தின் வரலாற்றை பாடமாக சொல்லி அதில் பகவத் கீதையினை கலந்து (கீதை என்பது வேத தத்துவம். அது மகாபாரதத்துக்கு முன்பே இருந்தது, கண்ணன் அந்த வேத கருத்துக்களைத்தான் போதித்தான்)
சொன்னார் வியாசர்.

பாமரனும் புரியும் வண்ணம் வேதங்களின் தத்துவத்தை அதில் சொன்னார்.

இன்றுவரை மட்டுமல்ல என்றும் உலகின் மிக நீண்ட இதிகாசம் மகாபாரதம்; அந்த பெருமை வேறு எந்த இலக்கியத்துக்குமில்லை; அதுதான் வியாசமாமுனியின் மாபெரும் சாதனை; இந்துமதத்தின் மிகப்பெரிய ஞான அடையாளம்.

வியாசர் படைத்த பாரத காவியத்தில் 6,00,000 செய்யுள்கள் இருந்தன. அவற்றில் 1,00,000 மட்டுமே நாம் வாழும் பூவுலகில் உள்ளன. மீதமுள்ள 5,00,000 செய்யுள்கள் தேவ லோகம், பித்ரு லோகம் (நம் முன்னோர்கள் வாழும் உலகம்) போன்ற பல உலகங்களுக்கு அளிக்கப்பட்டு விட்டன என்கின்றது தரவுகள்.

அப்படியானால் அவர் எவ்வளவு பிரமாண்டமாக பாரதத்தை எழுதியிருப்பார், நீங்களும் நானும் படிப்பதெல்லாம் அவர் அவர் எழுதியதில் ஆறில் ஒரு பங்கைத்தான் நாம் படித்துக்கொண்டிருக்கின்றோம். அது கூட முழுமை இல்லை.

இதிகாசம் என்றால் வேத தர்மம், தர்ம சாஸ்திரங்களில் கூறப்பட்டவை, இந்த மண்ணின் தாத்பரியம், அந்த தர்மசாஸ்திரங்கள் ஆயிரக்கணக்கில் உண்டு. பராசர ஸ்மிருதி, ஆபஸ்தம்ப ஸ்மிருதி போன்று மிக அதிகம் உண்டு…

இன்னும் இவ்வேதத்திற்கு அங்கமான சிக்ஷா, வியாகரணம், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் போன்ற சாஸ்திரங்களனைத்தின் சாரத்தையும் எடுத்து மகாபாரதத்தை படைத்தார்.

“இங்கிருப்பதே எங்கும் இருக்கும்… இங்கில்லாதது எங்கும் இல்லை” என்று மகாபாரதம் பற்றி அவர் சொன்ன மாபெரும் வாக்கியம்.

மகாபாரதம் தர்மங்களின் குவியல். அது உபாசனை மற்றும் உபதேசங்களின் பொக்கிஷம். அது வாழ்க்கை முறை.

அவரின் வேதங்களை அவரின் சீடர்களான பைலா, வைசம்பாயனர், ஜைமினி, சுமந்து ஆகியோர்தான் மக்களிடம் கொண்டு வந்தனர்.

ஆக, இன்று எல்லோரும் காணும் இந்துமதமும் அதன் மாபெரும் தத்துவ நூல்களையெல்லாம் ஏட்டில் தந்த குரு அந்த பெருமானேதான்.

வேதங்களை, பிரபஞ்ச விதிகளை, இன்னும் தேவ ரகசியங்களை, படைப்பின் நோக்கத்தை, இயல்பை மானிடன் பின்பற்றி இந்த உலகில் தர்மம் நிலைக்க செய்யப்பட்ட வாழும் முறை அல்லது தர்மம் அந்த சனாதான தர்மம்.
அதை உருவாக்கியது வேதங்களும், உபநிஷங்களும், இன்னபிற வேதாந்தங்களும், அதனை இந்த யுகத்தில் தொகுத்து தந்தவர் வேத வியாசர்.

சனாதான தர்மத்தை வகுத்த அந்த வியாசர் வேதங்கள் வழியில் மூன்று விதமான போதனைகளை அளித்துள்ளார். முதலாவது தர்மம். தர்மம் எப்போதும் செயல் வடிவில் இருக்கும். ஒவ்வொருவரும் தம் பிறவியை அனுசரித்துச் செய்யவேண்டிய செயல் தர்மம் எனப்படுகிறது.

இரண்டாவது, உபாசனை, பக்தி. பகவானை எந்தெந்த வடிவங்களில் எவ்விதமாக வழிபட வேண்டும்? எந்தெந்த இறை வடிவத்தின் தத்துவம் எவ்விதமாக இருக்கும்? பகவான் ஒருவனே என்றாலும் கூட பக்தர்களுக்கு அருளுவதற்காக அவரவர் வாழ்வியல் குணங்களுக்கு ஏற்ப உபாசனை செய்வதற்காக அனேக வடிவங்களாக தன்னைத்தானே வெளிப்படுத்திக் கொண்டான். ஒரே பகவான் சிவனாக, விஷ்ணுவாக, ராமனாக, கிருஷ்ணனாக, அம்மனாக, கணபதியாக, சுப்பிரமணியராக, சூரியனாக பல்வேறு வடிவங்களோடு வேத காலத்திலிருந்தே வழிபடப் படுகிறான்.

இவ்விதம் கூறப்படுகிற தெய்வங்களை எவ்விதம் வழிபட வேண்டும்? அந்தந்த தெய்வங்களுக்கான பிரத்யேக நட்சத்திரம், திதி என்ன? பூஜை விதானம் என்ன? மந்திரம், தந்திரம் என்னென்ன? இவையனைத்தையும் வேதங்களிலிருந்து வியாச பகவான் புராணங்கள் மூலம் நமக்களித்துள்ளார். அதனால் தர்மத்திற்கு அடுத்த அம்சமான உபாசனையில் யாருக்கு எந்த தெய்வத்தின் மீது பிரீதி உள்ளதோ அந்த தெய்வத்தை வழிபட முடியும்.

அவ்வாறு வழிபட நினைக்கும்போது அதற்கான வழிமுறைகள் நியமங்கள் ஆகியவற்றை வியாசர் அழகுற அமைத்துக் கொடுத்துள்ளார். சிவ ஆராதனை செய்பவர்களுக்காக சிவனை முதன்மைக் கடவுளாக கொண்ட புராணங்கள், அதேபோல் விஷ்ணுவை முதன்மையாகக் கொண்ட விஷ்ணு புராணங்கள், ராமர், கிருஷ்ணர், நரசிம்மர், ஹயக்கிரீவர் முதலான ஒரே விஷ்ணு தத்துவத்தின் பற்பல வடிவங்கள், அவற்றின் வழிபாட்டு முறைகள் ஆகியவற்றை அளித்து உள்ளார்.

அவதாரங்கள் எவ்வாறு ஏற்பட்டன? அவற்றின் வரலாறு என்ன? அவதாரங்களை எவ்வாறு உபாசனை செய்ய வேண்டும்? இவை அனைத்தையும் நமக்களித்தவர் வியாச பகவான். லட்சுமி, சரஸ்வதி, துர்கா, லலிதா, காளி போன்ற வடிவங்கள் அவை ஆவிர்பவித்த நேரங்கள், அந்த வடிவங்களில் இருந்துகொண்டு அம்பாள் செய்த லீலைகள்… இவை அனைத்தையும் வர்ணித்துள்ளார் வியாசர்.

அதேபோல் கணபதி பற்றி பல புராணங்களில் வர்ணித்துள்ளார். கணபதியை பரமாத்மாவாக நிரூபித்து காணபத்திய வழிபாடுகளைத் தெரியச் செய்தார். சுப்பிரமணிய வைபவங்களை ஸ்கந்த புராணத்தில் கூறியதோடு இதர புராணங்களில் கூட கந்தன் உபாசனையின் சிறப்புகளை விளக்கினார். சூரிய உபாசனை குறித்து புராணங்களில் எழுதியதோடு ஆதித்திய புராணம் போன்ற உப புராணங்களிலும் சூரியனை வர்ணிக்கிறார்.

இவ்வாறு சனாதன தர்மத்தில் உள்ள ஷண் மதங்களான சூரியன், சுப்பிரமணியன், கணபதி, சிவன், சக்தி, விஷ்ணு என்ற வேத சம்பந்தமான இந்த ஆறு வித கடவுளர்களின் உபாசனை வழிமுறைகளை போதித்தார். இவ்விதம் தர்மத்திற்கு அடுத்ததாக உபாசனை வழிமுறைகளை முறைப்படுத்தினார்.

மூன்றாவது, வேதாந்த விசாரணை. இது மிகப் பிரதானமானது. இதுவே மிக முக்கியமானது. வியாச பகவான் ஒவ்வொரு நூலிலும் தர்மத்தை போதித்து, பக்தி எனப்படும் உபாசனையை விளக்கி, மூன்றாவதான ஞானத்தையும் விளக்குகிறார்.

வேதாந்தத்திலும் உபநிஷத்திலும் கூறப்படுவவற்றின் சரமனைத்தியும் ஞானம் என்கிறோம். இது ஆத்மா விசாரணை எனப்படும். புத்தி ஆராய்ச்சி மூலம் அறியப்பட வேண்டியது. ஞானத்தை முழுமையாக ஒவ்வொரு புராணத்திலும் அளிக்கிறார்.

சனாதன தர்மம் என்றால் இவை மூன்றும் சேர்ந்ததே. தர்மம், உபாசனை, ஞானம் இம்மூன்றையும் போதித்தவர் வியாச பகவான்.

ஏன் வியாசர் கதையினை இவ்வளவு விளக்கமாக காண வேண்டும் என்றால் விஷயம் உண்டு.

வியாசர் என்பது ஒரு மனிதரின் பெயர் அல்ல. அது ஒரு பதவியின் பெயர். இப்போதைய மன்வந்திரத்தில் கிருஷ்ண துவைபாயனர் வியாசராக உள்ளார். அடுத்த மன்வந்திரம் வரும்போது வேறொருவர் வியாசராக வருவார். அகஸ்தியர் கூட வியாசராவார் என்று கூறப்படுகிறது.

அபாந்தரதமருடைய தேஜஸ் அந்தந்த ரிஷிகளிடம் பிரவேசித்து அதன் மூலம் வேதங்களை பரப்புவார். அதனால் நாம் வழிபடுவது உண்மையில் அபாந்தரதமரே. ‘அந்தர தமஸ்’ என்றால் உள்ளிருக்கும் இருட்டு. அதாவது அக்ஞானம்.

உள்ளே இருக்கும் அஞ்ஞானம் என்ற இருட்டை விரட்டி ஞானம் என்ற பிரகாசத்தை ஒளியைவிட செய்பவரே குரு. அப்படிப்பட்ட வியாசரை நினைத்து தியானிக்க வேண்டும்.

பராசர மகரிஷியின் புதல்வர் வியாசர். பராசர மகரிஷியின் குரு சக்தி மகரிஷி. பராசரரின் தந்தை சக்தி மகரிஷி. எவ்வாறு வியாசருக்கு பராசரர் குருவும் தந்தையும் ஆனாரோ அதே போல் பராசரருக்கு சக்தி மகரிஷி தந்தையும் குருவும் ஆவார். சக்தியின் தந்தையும் குருவும் வசிஷ்டர். வசிஷ்டரின் தந்தையும் குருவும் பிரம்மதேவர். பிரம்மதேவரைத் தோற்றுவித்தவர் நாராயணன். நாராயணரை தோற்றுவித்தது சிவன்
ஆதலால் சதாசிவ சபாரம்பாம் என்றும் நாராயண சபாரம்பாம் என்றும் கூறுகிறோம்.

வியாசர் கூட சுதந்திரமாக ஒரு புதிய சித்தாந்தத்தை உருவாக்கவில்லை. சானதனமாக, பரம்பரையாக இருக்கும் சித்தாந்தத்தை, இருக்கும் ஒரே சத்தியத்தை… அவர் எடுத்துரைத்தார்.

யார் உண்மையான ஆச்சாரியார் என்றால் எது சாதனமாக, பரம்பரையாக இருக்கும் சாத்தியமோ… அதை அளிப்பவர் சிறந்த ஆச்சாரியாரே தவிர புதிய நூல், புதிய மனிதர், புதிய போதனை போன்றவற்றின் பின்னால் சென்றால் அது நம்மை உய்வடையச் செய்யாது என்பதை அறிய வேண்டும்.

வியாசருக்கும் நமஸ்காரம் செய்கிறோம் என்றால்… குருபரம்பரை வியாசரிடம் இருந்து தொடங்கவில்லை. பரமாத்மாவிடம் இருந்து பிரம்ம தேவருக்கும் பிரம்ம தேவரிடம் இருந்து வசிஷ்டருக்கும் தொடர்ந்தது. வசிஷ்டர் ரிஷிகள் அனைவருக்கும் பிரதிநிதியாக இருப்பவர்.

வசிஷ்டரிடம் இருந்து வந்த குருபரம்பரையில் வந்தவர்தான் வியாசர்.

இங்கு வரை சனாதன தர்மத்தின் அனைத்து சம்பிரதாயத்தில் இருப்பவர்களும் இதே முறையை கடைபிடிப்பர். இதன்பிறகு துவைதம், விசிஷ்டாத்வைதம், அத்வைதம் பிரிவுகளைச் சேர்ந்தவர்களின் குருபரம்பரை மாற்றம் பெறுகிறது. வியாசருக்குப் பிறகு அவரவர் சம்பிரதாயம் மாறுகிறது. சிலர் யமுனாச்சாரியார், சிலர் மத்வாச்சாரியார், சிலர் ஆதிசங்கரர் என்று குரு பரம்பரை மாற்றம் பெறுகிறது.

சனாதன தர்மத்தில் வெவ்வேறு ஸ்தாயிகளில் மூன்று பிரிவுகளின் உதவியும் ஒருவருக்கொருவர் அவசியம், அதனால் அனைத்து சம்பிரதாயத்தினரும் வியாசரையே குருவாக வணங்குவர்.

ஆக, குருபரம்பரை என்றால் அது சிவனிடம் தொடங்கி வியாசர் வரையும் பின்னர் அந்தந்த குருபரம்பரை தொடங்கி ஆதிசங்கரர் ராமானுஜர் என தொடர்ந்து வருகின்றது.

இங்கிருந்துதான் இந்த திருவிளையாடலின் முக்கியத்துவம் உணரப்படவேண்டும்.

முதன் முதலில் வேதங்களின் ரகசியத்தை சிவனே நைமிசாரண்ய ரிஷிகளுக்கு மதுரையில் உபதேசித்தார், அதன் பின் அது யுகம் யுகமாக தொடர்ந்தது, இந்த யுகத்தில் வியாசரால் அது சொல்லப்பட்டது.

எல்லாவற்றுக்கும் அந்தச் சிவனே மூலம், சிவனே ஆதி காரணம். அந்தச் சிவன் தன்னை தேடிய நைமிசாரண்ய ரிஷிகளுக்கு வேதம் விளக்கிய இடம் மதுரை ஆலயம்.

மதுரை ஆலயத்துக்கு செல்லும் போது அந்த ஆலவாயன் சன்னதிக்கு தென்பக்கம் இருக்கும் தட்சிணாமூர்த்தியின் முன் நின்று வழிபட தவறாதீர்கள்.

அவர்தான் ஞானகுரு, அவரால்தான் அவர் கொடுத்த விளக்கத்தால்தான் வேதங்கள் என்பது இன்று சனாதன தர்மமாக, இந்துமதமாக, வாழ்வியல் முறையாக நம்முன் நிற்கின்றது. அவர்தான் வேத விளக்கம் சொல்லி அதனை மானிடர் எளிதாக பின்பற்ற மதம் நிறுவும் வழிகளைச் சொன்னார்.

அதிலிருந்துதான் இந்துமதம் தழைத்து ஆலயம், தேர்கள், பண்டிகைகள், நூல்கள், காவியங்கள், கலைகள் என எல்லா இடமும் வளர்ந்து நிற்கின்றது.

வேதங்கள் எனும் மாபெரும் பிரபஞ்ச ரகசியத்தை மானிடர் வாழ்க்கைக்கு அந்த தட்சிணாமூர்த்தி தந்த இடம் அந்த ஆலயம்.

அங்கே சென்று வேண்டுங்கள். நீங்கள் என்ன வேண்டுகின்றீர்களோ அதனை ஞானமாக அவர் தருவார்.

அதுவும் கார்த்திகை மாத பௌர்ணமி அவருக்கு முக்கியமானது, கார்த்திகை பௌர்ணமியில் மதுரையில் இருக்கும் தட்சிணாமூர்த்தியிடம் என்ன வரம் கேட்பீர்களோ அதை நிச்சயம் அருள்வார். அது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் : 20 சங்கப்பலகை கொடுத்த படலம்.

அப்போது மதுரையினை வங்கிசேகர பாண்டியன் ஆட்சி செய்துக் கொண்டிருந்தான். தமிழ்ச்சங்கம், பாண்டிய நாட்டு புலவர்கள் இன்னும் அறிவில் சிறந்த அண்டை நாட்டு புலவர்களுடன் இனிதுற நடந்துக் கொண்டிருந்தது.

அதே நேரம் உலக ஷேமத்துக்காக காசியில் பத்து அசுவமேத யாகங்களை செய்ய வந்தார் பிரம்மதேவன். பல உலக நன்மைக்காக தேவர்களும் யாகம் செய்யவேண்டும், அதுவும் படைப்பு தொழிலின் கடவுளான பிரம்மனும் யாகம் செய்யவேண்டும் என்பது விதி.

காசிக்கு வந்த பிரம்ம தேவன் லிங்கம் ஒன்றை பிரதிஷ்டை செய்து வணங்கினார்; அதற்கு பிதாமகேஸ்வர லிங்கம் எனப் பெயர்; அப்படியே ஒரு தீர்த்தம் ஒன்றை வெட்டி தான் செய்யும் பத்து யாகங்களின் பெயரால் அதனை தசாஸ்வமேத தீர்த்தம் எனப் பெயரிட்டார்.

ஒவ்வொரு யாகம் முடியும் போதும் கங்கையில் நீராடினான்; அவனோடு காயத்ரி, சரஸ்வதி, சாவித்திரி ஆகியோரும் நீராட வந்தார்கள். இப்படி ஒன்பது யாக முடிவிலும் நீராடினர்.

பத்தாவது யாக முடிவில் நீராட வரும் வழியில் விஞ்ஞை எனும் அழகான கந்தர்வலோக மாது யாழின் இசையில் காசி நாதனை இனிதுற உருக்கமாக பாடுவதைக் கண்டாள் சரஸ்வதி.

கலைகளின் தாயான அவளுக்கு அந்தக் கந்தர்வலோக மாதுவின் பாடல் மிக மிக இனிதாய் தோன்றிற்று. தன் சீடர்கள் தன் அருள் பெற்றோர் கூடப் பாடமுடியாத வகையில் அந்த கந்தர்வப்பெண் அதி அற்புதமாக சிவனை பாடுவதை அறிந்தவள் மனம் சொக்கி அங்கே நின்று பாடலில் கரைந்துக் கொண்டிருந்தாள்.

அதே நேரம் அவளைக் கவனியாது பிரம்மனும், சாவித்திரியும், காயத்ரியும் கங்கையில் நீராடச் சென்றனர்; கொஞ்ச நேரம் அந்தப் பாடலில் லயித்திருந்த சரஸ்வதி பின் சுயநினைவு வந்தவளாய் பிரம்மனையும் மற்றவர்களையும் தேடி ஓடினாள்.

அங்கே அவர்கள் நீராடி எதிரே வந்தனர்; தன்னை விடுத்து அவர்கள் நீராடியது எப்படி எனக் கொஞ்சம் கோபமானாள் சரஸ்வதி.

அப்போது பிரம்மன் சொன்னார், ‘சரஸ்வதி தவறு நின்னுடையது, யாகம் முடிந்து கங்கையிலே குளித்து கடமை முடிக்க வேண்டிய நீ கந்தர்வப்பெண்ணின் இசையிலும், பாடலிலும் மயங்கி நின்றாய். இது தவறல்லவா?

அசுவமேத யாகம் முடிந்து கங்கையிலே மூழ்காமல் இப்படி மனம் போன போக்கில் நின்றது தவறு. இந்தப் பெரும் தவறுக்கான தண்டனையாய் நீ 48 பிறவிகள் எடுக்க வேண்டும்” என்றார்.

சரஸ்வதி இது கேட்டு கலங்கினாள். தான் செய்தது பெரும் தவறுதான் என்றாலும், அதற்காக‌ 48 பிறவி என்பது நீண்டது, அதனால் வேறு மன்னிப்பு அருள வேண்டும், சலுகை செய்யவேண்டும் என்றும் மன்றாடினாள்.

பிரம்மன் அவள் மேல் கருணை கொண்டு சொன்னார்.

“சரஸ்வதியே, தேவ பாஷையான சமஸ்கிருதத்தில் ‘அ’கரம் முதல் ‘ஹ’கரம் வரையான 48 எழுத்துக்கள் உருவாக, நீ 48 புலவர்களாய் பிறந்து மதுரையம்பதியிலே சிவனை போற்றி பாடக்கடவாய்.

எந்தச் சிவனை குறித்து கந்தர்வப்பெண் பாடும்போது நீ மயங்கினாயோ அந்தச் சிவனை மதுரையில் பிறவி எடுத்து அதுவும் 48 உருவ பிறவி எடுத்துப் பாடுவாய், உன் ஆசை தீரபாடுவாய்.

அங்கே 49 ஆம் புலவராக அந்த ஈசனே வந்திருந்து உன்னை நடத்துவான்” எனத் திருவுளம் பற்றினார்.

அதன் படி பாரத கண்டமெங்கும் பல இனம், பல மொழிகளில் 48 புலவர்கள் சரஸ்வதியின் அம்சத்தில் பிறந்தார்கள்; பெரும் புலமையும் கீர்த்தியும் ஞானமும் கொண்டிருந்தார்கள்.

அன்று எல்லா புலவரின் அறிவையும் திறமையும் சோதிக்கும் இடமாகவும், இங்கே ஒருவர் அங்கீகரிக்கபட்டால் உலகில் எங்கும் பெரும் புகழோடு வலம் வரும் அளவு பெரிய சபையாகவும் ஞானபீடமாகவும் மதுரையம்பதி விளங்கிற்று.

ஈசனே தலைவனாக இருந்து அவை நடத்துவதால் மதுரை தமிழ்ச்சங்கம் மாபெரும் இடத்தில் இருந்தது. அது தமிழ்ச்சங்கம் எனச் சொல்லப்பட்டாலும் எல்லா மொழியும் தெரிந்த ஞானியர், எல்லா மொழியிலும் ஞானம் கொண்டோர் குறிப்பாக சமஸ்கிருதத்தில் பெரும் ஞானம் கொண்டோர் அங்கிருந்தனர்.

பாண்டித்யம் எனும் நிபுணர்களை வித்தகர்களை குறிக்கும் சொல் பாண்டிநாட்டு மதுரையில் இருந்துதான் உருவானது; ‘பாண்டித்யம்’ என்றால் பாண்டிய நாட்டில் ‘அங்கீகரிக்கப்பட்டவர்’ எனப் பொருள்.

அதுதான் பண்டிதர், பண்டிட் எனப் பின்னாளில் மாறிப் போனது. பாண்டிய நாட்டில் அங்கீகாரம் பெற்று பாரதம் முழுக்க சிறந்தோரே பாண்டித்யவர்கள் என அழைக்கப்பட்டு பண்டிதர் என்றானார்கள்.

குறிப்பாக காஞ்சி, தட்சசீலம் போல மகா பெருமையுடன் திகழ்ந்த காஷ்மீரத்து சாரதா பீடத்துக்கும், மதுரைக்கும் பெரும் தொடர்பு இருந்தது.

அப்படியான மதுரை நோக்கி தங்கள் திறமைக்கு அங்கீகாரம் பெறும் பொருட்டு 48 பேரும் மதுரையினை நோக்கிச் சென்றார்கள்.

நக்கீரர், கபிலர், ப‌ரணர், ருத்திரகுமாரர், ஒள‌வையார், மார்க்கண்டேயர், நட்டத்தனார், கான ஆந்தையார்,
நடுமுடியார், பெரியதாழியார், கோவூர் கிழார், மருதநிலையார், பாஞ்சாளி, அரிசில்கிழார், நன்னக்கணார், வான்மீகனார், காரியசேனர், பூங்குன்றூர்க் கிழார், புளியூர்க் கிழார் , அயோதியார், ஆவூரி மூலங்கிழார்

ஊர்மூலனார், வியாழிப்பாடி கிழார், தென்னவன் பெருந்தேவியார், சேப்பல் குஞ்சன், கன்னூங்கிழார், மழலையார், கருவூர்க் கிழார், முத்தந்தாயனார், கொங்கணனார், சாத்தனார், தொண்டைமான் இளந்திரையார், பெருங்கோ செழியனார், சேரமான் குஞ்சிக்கிழார்

மதுரை மாருத்தனார், மொரியன், எறினியார், ஆலங்குடி வெங்காயன்மணியார், பெயினீரார், அரிவையார்
ஆலக்கிளர், சேனவன், இலந்தை நன்னகை, சிறுவூர் மடையனார், நெடுநல்வாடையார், வீரமிளகியார்
பாம்பாடியார், ச‌ந்தகை முறுங்கியார், பெரியதாழியார் என நாற்பத்து எட்டுபேர் மதுரை நோக்கிக் கிளம்பினார்கள்.

ஆண்களும் பெண்களுமாக கிளம்பினார்கள்.

மொத்தமாக கிளம்பினார்களே தவிர யாருக்கும் வழி தெரியவில்லை, மதுரைக்கு எப்படி செல்வது எனத் தவித்த வேளை அங்கே ஒரு இளைஞன் வந்தான்.

“புலவர்களே, எங்கு செல்கின்றீர்கள், நானும் உங்களோடு வரலாமா?” எனக் கேட்டான், அவர்களோ கல்வியில் சிறந்த, மாபெரும் கல்விமான்கள் நிறைந்த மதுரைக்கு செல்கின்றோம். ஆனால், சரியான வழி தெரியவில்லை என்றார்கள்.

“எமக்கு அது பழக்கப்பட்ட வழிதான்” எனச் சொன்ன அவன் அவர்களை வழிநடத்திச் சென்றான். வளமும், செல்வமும், அறிவும் கொழிக்கும் பாண்டியநாட்டு மதுரையில் அவர்களை சேர்பித்துவிட்டு மறைந்தே போனான்.

சிவனே தங்களுக்கு வழிகாட்டினார் என்பதை அறிந்த புலவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்து ஆலவாய் நாதனை தொழுதார்கள். பல வகையான பாடல்களைப் பாடி நன்றி சொல்லி நெகிழ்ந்தார்கள், பின் அரசனைக் கண்டார்கள்.

வங்கிசேகர பாண்டியன் அவர்களை வரவேற்றான். அவர்களுடன் அவன் அவை வாதம் செய்தது; எல்லா வாதத்திலும் அவர்கள் எளிதாக வென்றார்கள். 48 பேருக்கும் இடையே ஒரு அழகான புரிதல் இருந்தது. ஒற்றுமை இருந்தது.

48 நவமணிகள் கோர்த்த மாலை போல மின்னிக் கொண்டிருந்தார்கள். எதுவுமே அவர்களுக்கு சிரமமாக இருக்கவில்லை. எல்லா விஷயத்திலும் ஆழ்ந்த அறிவும், வாதமும் அதைச் சரியாக சொல்லும் ஆற்றலும் கொண்டிருந்தார்கள்.

அரசன் தன் அவையில் மிகச் சிறந்த பொக்கிஷங்கள் கிடைத்த மகிழ்வில் ஆலவாயன் சன்னதிக்கு மேற்கே அவர்களுக்கு ஒரு சங்க மண்டபம் அமைத்துக் கொடுத்தான்; அவர்கள் அங்கே அமர்ந்து தங்கள் படைப்புக்களை குவித்தார்கள்.

அவர்களின் பெரும் கீர்த்தியும் அறிவும், மன்னர் அவர்கள்பால் கொண்டிருந்த அக்கறையும் இங்கிருந்த புலவர்களை, பாண்டி நாட்டு புலவர்களை ஆத்திரம் கொள்ள வைத்தது.

பலவகை வாதத்தினாலும் அந்த 48 புலவர்களை வெல்ல முடியாதவர்கள் பெரும் குழப்பம் செய்ய ஆரம்பித்தார்கள். எதையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம், தாங்கள் எழுதியதே சரி அதுதான் சிறந்தது என மல்லுகட்டினார்கள்.

எங்கிருந்தோ வந்தவர்களுக்கு இங்கு என்ன தெரியும்? இது எங்கள் அவை என முஷ்டி உயர்த்தினார்கள்.

அறிவில் சிறந்தவர்கள் எனக் கருதபட்டோர் மோதும் போது மன்னனாலும் ஒன்றும் செய்ய இயலவில்லை. காரணம், பாண்டியநாட்டு புலவர்கள் அவன் அவையில் காலம் காலமாக இருந்தவர்கள். இருப்பவர்கள். அவர்கள் புதியவர்கள் மேல் பொறாமையால் சாடுகின்றார்கள் என்பதை அறிவான்.

அதே நேரம் அறிவில் சிறந்தவர்களும், அருள் பெற்றவர்களுமான புதியவர்களை விடவும் அவன் தயார் இல்லை. அவர்கள் தங்கள் அவையில் மகா முக்கியமானவர்கள் என்பதையும் அறிந்திருந்தான்.

இதனால் மிகவும் குழம்பினான்.

ஆனால், இந்தக் கோஷ்டி பூசல் பெரிதானது. தாங்களே அறிவில், எழுத்தில், பாடலில், பொருளில் சிறந்தவர்கள்; அவர்கள் எழுதுவதெல்லாம் ஒன்றுமே இல்லை எனப் பாண்டிய தேச புலவர்கள் ஆடித் தீர்த்தார்கள்.

எது சிறந்த படைப்பு என்பதிலும், யார் சரியானதை சொன்ன புலவர் என்பதிலும் குழப்பம் விளைவித்தது.

சிக்கல் பெரிதானதால் அந்த 48 புலவர்களும் மன்னனிடம் சரணடைந்தார்கள்; மன்னனோ அவர்களை ஆலவாயனிடமே எல்லாவற்றையும் சொல்லச் சொன்னான்.

அதன்படி ஆலவாயன் சன்னதிக்கு சென்றவர்கள் சிவனிடமே தங்கள் குறையினை சொன்னார்கள்.

“எம்பெருமானே இந்த அவைக்கு தலைவர் நீர், இந்த சங்கத்தின் மூலவர் நீர், உமது முடிவே இங்கு இறுதியானது.

இங்கே எங்கள் புலவர்களுக்குள் குழப்பம் வருகின்றது, யார் சரியான பாடலை எழுதினார்கள் என்பதும், எது சரியான கருத்து? எது இலக்கணப்படி அமைந்த பிழையற்ற நூல் என்பதிலும் குழப்பம் நிலவுகின்றது.

பாண்டியநாட்டு புலவர்கள் கோபமிக்கவர்கள். ஆனால், கவியில் சிறந்தவர்கள், அழகான பொருள் கொண்டு அற்புதமான பாடல்களை இயற்றுகின்றார்கள். அதனால் எது சிறந்தது எனும் குழப்பம் எங்களுக்குள் ஏற்பட்டிருக்கின்றது.

யாராலும் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை; எல்லாமே அதிசிறந்தது போல தோன்றினாலும் ஏற்றுக்கொள்ள யாரும் தயாரில்லை. நீர் எல்லாம் அறிந்தவர் அல்லவா? அதனால் சரியான பாடல், சரியான புலவரை நீரே அடையாளம் காட்டித் தரவேண்டும்” என மன்றாடினார்கள்.

அப்போது சிவன் ஒரு புலவர் வடிவில் வந்தார்; அவர் கையில் ஒரு பலகை இருந்தது; சிறிய சதுர வடிவில் இருந்தது.

அவர் சொன்னார்.

“புலவர்களே, இந்தப் பலகையினை உங்களுக்கு அளிக்கின்றேன், இது சாதாரண பலகை அல்ல. இது சக்தி வாய்ந்தது.

எந்தப் புலவர் சரியானவரோ அவருக்கு இது இடம் கொடுக்கும்; அவரை அடுத்து சரியான புலவர் வந்தால் இது பெரிதாகி நீண்டு இடம் கொடுக்கும்; தவறான புலவர்களை இது ஏற்காது; அப்படியே இந்தப் பலகை மேல் அமர்ந்து பாடுவது சரியான பாடலாக கொள்ளப்படும்.

இந்தப் பலகை ஒரு தராசு போல உங்கள் சங்கத்தில் இருக்கும்; எவ்வளவு பேர் சரியானவர்கள் வந்தாலும் இது பெரிதாகி இடம் கொடுக்கும்; தவறானவர்கள் வந்தால் சுருங்கி இடம் தராது.

இதனை வைத்து யார் சரியான புலவர்; எது சரியான பாடல் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” எனச் சிறிய பலகையினைக் கொடுத்து மறைந்தார்.

அப்பலகைக்கு வித்யாபீடம், சரஸ்வதி பீடம், ஞான பீடம், மாத்ருகா பீடம், வியாக்ன பீடம் எனப் பல பெயர்களை சூட்டி சங்கம் கொண்டாடிற்று.

அதனை சொக்கநாதர் சன்னதியில் வைத்து பூஜித்தார்கள், பொற்றாமரை குளத்தில் வைத்து பெரும் வழிபாடுகளை செய்தார்கள், நாள் தோறும் செய்தார்கள்.

சிவனே அளித்த பலகை என்பதால் அது சரியானவர்களுக்கு இடம் கொடுத்தது. சரியில்லாதவர்கள் வந்தால் அது தன்னை சுருக்கிக் கொண்டது.

சங்கப் புலவர்களுக்கு அது இடமளித்தது, அதன் மேல் அமர்ந்து அவர்கள் எழுதி எழுதி குவித்தார்கள். ஏடுகள் பெருகின‌.

நடப்பதை கண்ட பாண்டிய நாட்டு புலவர்கள் நடப்பது சிவனின் விருப்பம் என்பதால் அமைதி கொண்டார்கள்.

இதனால் சர்ச்சை தீர்ந்தது, அதே நேரம் புதிய குழப்பம் ஒன்று வந்தது.

அது என்னவென்றால் 48 புலவர்களும், இன்னும் பலரும் அந்தப் பலகையில் ஒருசேர அமரமுடிந்தது, பலகை இடம் கொடுத்தது.

அதனால் அவர்கள் எழுதி குவித்து கட்டுக்கட்டாய் ஏடுகளை இட்டபோது யார் எதை எழுதினார் என்பது தெரியாத அளவு, யாருடைய பாடல் எது? என்ன பொருள் எனத் தெரியாத அளவு அங்கு ஏடுகள் குவிந்துக் கிடந்தன‌.

சங்கப்பலகையில் அமர்ந்து அது இடமளித்து எழுதினால் அது சரியான பாடல் என்பது இன்னும் குழம்பிற்று.

ஏகப்பட்ட குவியல்கள் குவிந்து கிடந்தன, புலவர்கள் மீண்டும் சிவனிடமே தஞ்சமானார்கள்.

சிவன் அவர்களுக்கு உதவ எண்ணம் கொண்டார், அவரே புலவர் வடிவில் வந்து பலகையில் அமர்ந்து பொருள் ரீதியாக, பாடல் ரீதியாக, யார் என்ன பாடினார்கள் என்ற வகை ரீதியாக அதனை பிரித்துக் கொடுத்தார்.

புலவர்கள் பெருமகிழ்ச்சி அடைந்து அவரிடம் வேண்டினார்கள்.

“ஐயனே, எங்கள் பாடலை எங்களுக்கே பிரித்துத் தந்தீர், இன்னும் இந்தப் பலகையும் உம்மை ஏற்றுக்கொண்டது, இந்தச் சங்கபுலவர்கள் 48 பேருடன் நீர் 49 வது புலவராக அமர்ந்து கவிபாட வேண்டும், எங்களில் ஒருவராக இருத்தல் வேண்டும்” எனக் கேட்டுக் கொண்டார்கள்.

அதன்படி அவரும் 49 ஆம் புலவராக அமர்ந்தார்; சொல்லழகு, பொருளழகு, ஆழ்ந்த அறிவு கொண்ட கருத்தழகு என யாரும் குறை சொல்லமுடியாத அற்புதப் பாடல்களை அவர் பாடினார்.

ஆனால், நக்கீரர் அதை ஏற்கவில்லை. வழக்கமான அகம்பாவத்தில் குறைகளை சொல்ல ஆரம்பித்தார், அப்போது ஒரு அசரீரி கேட்டது.

“நக்கீரா, வந்திருப்பது சிவபெருமான். அவரே இந்த புலவர்களின் ஜென்ம தொடர்புபடியும் கர்மவினைப்படியும் வந்து அமர்ந்து பாடிக்கொண்டிருக்கின்றார்.

காரணங்கள் இல்லமால் காரியங்கள் இல்லை, நீ அவரை பணிந்துகொள்” எனச் சொன்னது.

வந்திருப்பது சிவனே என அறிந்த நக்கீரர் தன் பிடிவாதம் நீங்கி அவரைப் பணிந்தார், அதன்பின் அந்த அவை இனிதே நடந்தது.

பலகை சரியான படைப்புக்களை அடையாளம் காட்டிற்று, சிவனும் அவர்களோடு இருந்து அவர்களை நடத்தி வந்தார்.

இதுதான் சங்கப்பலகை கொடுத்த படலம்.

இந்தப் படலத்தின் மூலமேதான் சிவபுராணம் முதல் ஏகப்பட்ட பக்தி நூல்கள் நமக்குகிடைத்தன. ஒளவையார், நக்கீரர், கபிலர் என்றும், ஏன் தொல்காப்பியர் எழுதிய நூல்களும் இன்னும் பலவும் இங்கிருந்தேதான் நமக்கு கிடைத்தன‌.

இந்தப் பலகைதான் இன்று காணும் பல நூல்களை எழுத உத்தரவு கொடுத்தது; அதை சிவனே வந்து பகுத்தாய்ந்து தந்தார்.

இந்தத் திருவிளையாடலை ஆர்வமாகக் கண்டால் பல போதனைகளை உணரமுடியும்.

முதலாவது, காசியில் சிவனை பாடிய அந்த கந்தர்வ குலப் பெண்ணின் இசையில் ஆழமாக கரைந்த சரஸ்வதியினை நோக்கி 48 புலவர்களாக மதுரையில் சிவனை பாடக்கடவாய் என அனுப்பினார் பிரம்மன்.

அதாவது தன்னை தேடுபவரை சிவன் தேடுகின்றார்; ஏதோ ஒரு வடிவில் அவர்கள் தன்னைப் பாட தன்னைப் பற்றி அறிய சிவன் வழி செய்கின்றார்.

ஆனானப்பட்ட சரஸ்வதியே 48 புலவர்களாக தன்னைப் பாட அவர் ஏற்பாடு செய்ததும், அதன் மூலம் பெரும் நன்மைகளை உலகம் பெறவும் சித்தம் கொண்டார்.

ஆம். சிவனை தேடுவோர்க்கு அவர் முந்திக்கொண்டு அருள்பாலித்து தன்னோடு சேர்க்கின்றார்.

மிக முக்கியமான விஷயம் அகங்காரம் சிவனுக்கு ஆகாது, அதே நேரம் நன்மையானதை மட்டும் அவர் ஏற்றுக் கொள்கின்றார், சரியில்லாததை தள்ளிவிடுகின்றார்.

சங்கப்பலகை என்பது சிவனின் மனதை அவர் குணத்தினை, தன்மையினை சொல்வது.

அங்கே நன்மை என்பது பெருகிக்கொண்டே செல்லும், எவ்வளவு நல்ல விஷயம் என்றாலும் சிவனிடம் இடம் உண்டு. ஆனால், அகங்காரமானதும் தீமையானதுமான விஷயங்களுக்கு அவரிடம் இடமில்லை.

இந்தப் பிரபஞ்சம் நன்மையானவற்றை எப்பொதும் ஏற்கின்றது. எது தீமையோ, எது பலனில்லாததோ அதை புறந்தள்ளிவிடுகின்றது என்பது இந்தத் திருவிளையாடலின் போதனை.

இந்தப் பூமி யுகம் யுகமாய் நிலைத்திருக்கின்றது; எவ்வளவோ புலவர்கள் எவ்வளவோ எழுதினார்கள். காலம் காலமாக எழுதினார்கள்.

ஆனால், எது அறமோ, எது வேதமோ, எது தர்மமோ, எது தர்மத்தின் தாத்பரியயோ, எது சத்தியமோ அதைச் சொன்ன சுவடிகள் மட்டுமே ஸ்லோகமாகவும் வேதமாகவும் நிலைத்திருகின்றன‌.

ஆயிரமாயிரம்பேர் பாடினாலும் நால்வரின் பாடலே தேவாரம் என நிலைத்து நிற்கின்றது.

இதைத்தான் லௌகீகமாக இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது. அதனையே ஆன்மீகமாகவும் சிவனே எல்லாமும் என்பதையும் இறைவனை நாடுவதை இந்த பிரபஞ்சம் ஏற்றுக்கொள்ளும். சிவனை நாடாதவர்களை, அகங்காரிகளை இந்தப் பிரபஞ்சம் ஏற்றுக்கொள்ளாது என்பதையும் போதிகின்றது.

சிவன் கொடுத்தது பெரும் பலகை அல்ல, இந்த உலகை இந்த பிரபஞ்சத்தை அவர் இயக்கும் மாபெரும் தத்துவம். நன்மை ஒன்றே சிவனை அடையும், நல்ல விஷயம் மட்டுமே, கால காலத்துக்கும் நன்மை தருவது மட்டுமே சிவனை அடைய முடியும் எனும் பெரும் தத்துவம் அது.

அப்படியே சிவன் சொல்லும் போதனை இன்னும் உண்டு.

அது சிவன் எல்லாவற்றுக்கும் பொதுவானவர், எல்லா வகை மக்களுக்கும் பொதுவான அவர் எது நியாயமோ எது நீதியோ அதை மட்டும் செய்வார், அவர் நடுநிலையானவர் எக்காலமும் நீதிபதியாக இருந்து வழிநடத்துபவர் என்பது.

இங்கு அந்த 48 புலவர்களை எங்கிருந்தோ அவரே அழைத்து வந்தார், அவரே சங்கப்பலகை கொடுத்து அவர்களை அங்கீகரித்தார்.

பின் அவர்கள் கொஞ்சம் அசட்டையாய் பலகையே தங்களை ஏற்றுவிட்டது எனக் எழுதி குவித்துவிட்டு பின் குழம்பி தவித்தபோது சிவனே அவர்களுக்கு வழிகாட்டினார்.

அவரே அவர்களுக்கு வந்து நூலை பிரித்தும் கொடுத்தார்.

அதாவது ஆர்வமிகுதியால் அவர்கள் செய்த தவறைக் கூட மன்னித்தருளி கருணைப் பொங்க நூல்களை ஒரு நீதிபதியாக நின்று பிரித்துக் கொடுத்தார்.

ஆம். சிவன் கருணை உள்ளவர். நன்மையான விஷயங்கள் மட்டுமே அவரை அணுக முடியும். மனதில் தூய்மையான பக்தி கொண்டவர்களும், நல்லதையே நினைப்பவர்களும், மாசற்றவர்களும் மட்டுமே அவரை அணுக முடியும்.

எது சுயநல்மில்லாததோ, எது இந்த உலகுக்கு கால காலத்துக்கு பயன்படுமோ அதை சிவன் ஏற்றுக் கொள்கின்றார். எது தீயதோ அதை அவர் புறம் தள்ளுகின்றார்.

எக்காலமும் இந்தப் பிரபஞ்சம் நன்மையானதை மட்டுமே ஏற்கும்; ஒரு காலமும் தவறான விஷயங்களை ஏற்காது; அந்தப் பிரபஞ்சமே சிவ வடிவம்; சிவவடிவே அந்த சங்கப்பலகை எனக் காட்டிய படலம் இது.

நீங்கள் யாராகவும் இருங்கள், நீங்கள் சரியானதை செய்தும் முறையற்ற வகையில் பாதிக்கபட்டால், பொறாமையாலும் வெறுப்பாலும் உங்கள் மேல் பலர் குற்றம்சாட்டினால், நியாயம் உங்களிடம் இருந்தும், பொறாமை குணம் கொண்டோரால் பாதிக்கபட்டால் உங்கள் திறமையும் பெருமையும் எதிரிகளால் மழுங்கடிக்கப்படுவதாக நீங்கள் மனமுடைந்திருந்தால் மதுரை ஆலயத்துக்கு செல்லுங்கள்.

அந்த ஆலவாயன் சன்னதியில் உங்கள் நிலைமையினை சொல்லி மன்றாடுங்கள்.

உங்களிடம் நேர்மையும், சத்தியமும் இருந்தால் உங்கள் நோக்கம் தூய்மையான பக்தியும், மாந்தருக்கும் உலகுக்கும் நல்ல வழி கொண்டதாக இருந்தால், யாருக்கும் வஞ்சகமில்லாத பலரை வாழவைக்கும் வழியாக இருந்தால் சிவனே உங்களுக்கு அங்கீகாரம் தருவார்.

நல்லோர்க்கும் சிவனடியார்க்கும் எக்காலமும் அங்கீகாரம் தருவார் ஆலவாயன், என்றோ சங்கப்பலகை தந்தார் என்றோ, யாருக்கோ சாட்சி சொன்னார் என்பதோடு அது முடியவில்லை.

மாறாக, தன்னை தேடிவந்து தனக்கு அங்கீகாரம் வேண்டும் என கதறுவோர்க்கு சரியான அங்கீகாரமும், அவர்களால் பல நல்ல விஷயங்களும் பலன்களும் தர மதுரைவாழ் ஆலவாயன் பெரும் அருள் புரிவார்.

நீங்கள் திறமை இருந்தும் எதிரிகளால் பாதிக்கப்பட்டிருக்கலாம், உரிய அங்கீகாரமில்லாமல் தடுமாறலாம், கல்வியில் வேலையில் பெரிய தடைகள் குழப்பங்கள் வரலாம்.

எல்லா திறமையும் இருந்தும் நீங்கள் முடக்கப்படலாம், அப்படி சிக்கலில் இருந்தீர்களென்றால் ஆலவாய் நாதனை மதுரையில் சரணடையுங்கள், அவரே உங்களுக்கு நல்ல அங்கீகாரம் தந்து சங்கப்பலகையாய் வந்து சாட்சி சொல்லி உங்கள் வாழ்வை மாற்றித் தருவார். இது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் : 21 ஈழத்து விறலி தோற்ற படலம்.

அப்போது பாண்டிய நாட்டை வரகுணபாண்டியனின் மகன் இராஜராஜ பாண்டியன் என்பவன் ஆண்டுவந்தான். அவன் மனம் தந்தையினைப் போல முழுக்க சிவனில் கரைந்திருக்கவில்லை, இளம் வயதிலே ஆட்சிக்கு வந்தவன், ஆட்சி ஒரு பக்கம் என்றால், இன்னொரு பக்கம் இளமையின் அத்தனை இன்பங்களிலும் மூழ்கி ஆட்டம் போட்டுக்கொண்டிருந்தான்.

வைகை நதிக்கு ஈடான இன்ப உலகில் நீந்திக் கொண்டிருந்தான்.

சுகபோகங்களில் மூழ்குவோர் அதுதான் இன்பம், அதுதான் வாழ்வு என நினைப்போர் அந்தச் சுகத்துக்கு எது காரணமோ அதனிடம் அடிமையாகிவிடுவார்கள்‌. அந்த இன்பத்தின் மூலம் அவர்களை ஆட்டி அடிமைப்படுத்தி வைக்கும்.

பலம் கொண்ட யானை தன் பலம் மறந்து பாகன் தரும் உணவை உண்ணாவிட்டால் தான் வாழமுடியாது என அவனிடம் சிக்கிக் கிடப்பது போல, இன்பத்துக்கு காரணமானவரிடம் ஒருவன் சிக்கிவிடுவான், அது எவ்வளவு பலமானவன் என்றாலும் அந்த மாயை அவனை சிக்கவைத்துவிடும்.

அப்படி இராஜராஜனும் தன் அந்தப்புர நாயகி ஒருத்தியிடம் சிக்கி மையல் கொண்டிருந்தான். இனம்புரியா அந்த உணர்வில் முழுவதும் அவளிடம் அவன் மூழ்கிக் கிடக்க அவளோ அவனை ஆட்டுவிக்கத் தொடங்கினாள்.

மனம் ஒரு குரங்குதான்.‌ ஆனால், அது ஒரு குரங்காட்டியிடம் சிக்கிவிட்டால் அதன் நிலை மிக பரிதாபமாகிவிடும், அப்படி அந்த அந்தபுர நாயகி அவனை ஆட்டி வைக்க தொடங்கினாள், அவள் இட்ட கோட்டை அவன் தாண்டுவதில்லை.

பொதுவாக, இம்மாதிரி பெண்கள் இயல்பில் சாதாரணமானவர்கள். ஆனால், அவர்கள் சந்திக்கும் சிக்கலும் அனுதினமும் அவர்கள்படும் அவலமும் இன்னும் பல இடங்களில் இருந்து அவர்களுக்கு கிடைக்கும் கசப்பான அனுபவமும் அவர்களை எப்போதும் விழிப்பிலும் ஒருவித எச்சரிக்கையிலுமே வைத்திருக்கும்.

சரியான வாய்ப்பு கிடைத்தால் எதையும், யாரையும் பற்றி கவலைப்படாமல் அதை பற்றிக்கொண்டு மேலேழுவார்கள், எழுந்தவர்களின் அடிமனதில் படிந்திருக்கும் அவமானமும் இன்னும் பலவும் பூதமாய் எழும்.

எங்கெல்லாம் அவமானபட்டார்களோ அங்கெல்லாம் மரியாதையாக கம்பீரமாக வலம் வரச் சொல்லும், இன்னும் ஒருவித அடக்குமுறையும், தானே மேலானவள் எனும் ஒரு குணத்தையும் தரும்.

வாழ்வில் பல அவமானங்களைப் பெற்ற பெண்ணுக்கு, பெரும் ஏமாற்றங்களைப் பெற்ற பெண்ணுக்கு ஆழ்மனதில் இருக்கும் வலி வாய்ப்பு கிடைக்கும் போது வன்மமாக வெளிப்படும்.

அப்படி அரசன் தன் கையில் சிக்கிவிட்டான் என்பதற்காக அவள் கடுமையாக ஆடத்தொடங்கினாள், அவள் வைத்ததே சட்டமாயிற்று.

இவளுக்கு எல்லோரும் அஞ்சினார்கள். ஆனால், ஒருத்தி மட்டும் அஞ்சவில்லை, அவள் பாணபத்திரனின் மனைவி.

இங்கே சிவன் முன்னால் பாடும் பாணர்கள், பாணர்கள் வம்சம் என்பதால் பாணபத்திரர் என அழைக்கபட்டார்கள்.

( இந்த பாணபத்திரர் வரகுண பாண்டியன் காலத்தில் சிவன் விறகுவெட்டியாய் வந்து திருவிளையாடல் செய்த அதே பாணபத்திரர் என்றும், இல்லை இது அவரின் சன்னதி என்றும் வேறு பாணபத்திரர் என்றும் பல விவாதங்கள் உண்டு)

அந்த பாணபத்திரன் மனைவி மாபெரும் சிவபக்தை, சிவனுக்காக மட்டுமே பாடுபவள். பாடல் பாடுவதில் அதுவும் கருவிகளை இணைத்துப் பாடுவதில் மிகச் சிறந்தவள்.

அப்படிப்பட்டவள் தன்னை தன் பிடியில் இருக்கும் மன்னனையும் பாடவேண்டும் என்பது அரண்மையினை ஆட்டிவைப்பவள் விருப்பம். ஆனால், சிவனைத் தவிர யாரையும் பாடமாட்டேன் என நின்றிருந்தவள் இவளை கொஞ்சமும் மதிக்கவில்லை.

மன்னனை ஆட்டிவைக்கும் ஒரு அந்தபுரத்தாளுக்கு தன்னால் பாடமுடியாது, அவள் சொல்லை ஏற்கமுடியாது, சிவனுக்கு பாடுபவள் சில்லறைகளுக்கு பாடமுடியாது என அவள் மறுத்துவிட்டாள்.

இது மிகப்பெரிய அவமானமாக அவளுக்குப்பட்டது, பாணபுத்திரனின் மனைவிக்கு என்ன திமிர்? அவள் நன்றாகப் பாடுகின்றாள் என்பதுதானே அகங்காரம்?

தன்னை மதிக்காத அவளை மட்டம் தட்டிவிட்டால், இவளுக்கு சரியாகப் பாடத் தெரியாது என இன்னொருவரை கொண்டு காட்டிவிட்டால், இவளைவிட மிக அழகாக பாடக்கூடிய ஒருத்தியினை கொண்டுவந்து பாடவைத்து காட்டிவிட்டால் என்னாகும்?

யார் சிறந்தவர்களோ அவர்கள்தான் சிவன் சன்னதியில் பாடமுடியும் எனத் தீர்மானமாகும், அப்போது இவள் வெளித்தள்ளப்படுவாள், நம் அதிகாரத்தால் அவளை வெளித்தள்ளிவிடலாம்.

அந்த அவமானத்துக்கு பின் அவள் என்னாவாள்? நிச்சயம் தன் காலடிக்கு வருவாள் எனச் சிந்தித்தவள் அவளை அவமானப்படுத்த ஒரு திட்டம் தீட்டினாள்.

அதன்படி லங்காபுரியின் யாழ்ப்பாணத்தில் இருந்து அற்புதமாய் பாடக்கூடிய ஒருத்தியினை அழைத்து வந்தாள்.

இலங்கை அப்போது சிவபூமி, அதுவும் வடஇலங்கை இப்போதும் சிவபூமி, சிவனைப் பாடிப் பாடி வழிபட்ட மக்கள் அதிசிறந்த இசைக்கலைஞர்களைக் கொண்டிருந்தார்கள், அதுவும் பாழ் மீட்டும் கலையில் சிறந்த பாணர்கள் அங்கேதான் உருவானார்கள்.

அவர்கள் வட இலங்கை கடல் தாண்டி இராமேஸ்வரம், இன்னும் பாண்டிநாடு, சோழநாடு, சேரநாடு என வந்து பாடுவதும் இயல்பாய் இருந்தது.

யாழ் வாசிப்பில் வித்தகர்கள் நிரம்பிய பாணர்கள் இருந்ததால் அவர்கள் குடியிருப்பே யாழ்ப்பாணம் என்றாயிற்று.

அங்கே அவ்வளவு திறமையான பாடகர்கள், யாழ் இசையில் வல்லவர்கள் இருந்தார்கள். சிவபூமியில் சிவனை பாடுவதிலும் , அற்புதமான ராகங்களை இசைத்து கேட்போரை மட்டுமல்ல தெய்வத்தையே வரவழைப்பவர்களுமாக அதி சிறந்த பாடகர்கள் இருந்தார்கள்.

அவர்களின் திறமை சிவனை பாடி, சிவனுக்காய் பாடிப் பாடி வளர்ந்ததில் இருந்தது.

அந்த யாழ்ப்பாணத்தில் இருந்து சிறந்த யாழிசை வித்தகி ஒருத்தியினை அரசனின் நாயகி வரச்செய்தாள், தன்னிடம் மயங்கிக்கிடந்த மனனனிடம் அவளை நிறுத்தி சொன்னாள்.

“பாணபத்திரனின் மனைவி என்னை அவமானப்படுத்தினாள், அப்படியானால் அந்த அவமானம் உங்களுக்குமானது, என்ன தைரியம் அவளுக்கு?

எல்லாம் நன்றாகப் பாடுகின்றோம் எனும் திமிர், அவள் திமிரை அடக்கி அவமானப்படுத்த நான் இவளை யாழ்பாணத்தில் இருந்து வரவழைத்திருக்கின்றேன், நீங்கள் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்து இவர்கள் இருவரையும் பாடவைத்து பாணபத்திரன் மனைவி தோற்றோடும்படி எனக்கு செய்தாக வேண்டும்” எனக் கொஞ்சினாள்

அவளின் ஆசையினை நிறைவேற்றுவதே தன் லட்சியம், தன் வாழ்வே அதற்காக என நினைத்து கொண்டிருந்த மன்னன் உடனே அதற்கு இசைந்தான்.

அதன்படி முதலில் ஈழத்து விறலியினை அழைத்தவன் எப்படியாவது அந்த பாணபத்திரன் மனைவியினை வெல்ல வேண்டும் அதுவும் சாதாரணமாக வெல்லக் கூடாது, அவள் அவமானப்படுமாறு வென்று பின் பலவகை இசை நுணுக்கம் குறித்த கேள்வி, இசைக் கருவி குறித்த கேள்விக்கேட்டு வாதத்துக்கு அழைத்து அவளை வென்று அவள் இனிப்பாடவே கூடாத அளவுக்கு அவமானமாக்க வேண்டும் எனக் கட்டளையிட்டான்.

மன்னனின் பெரும் பொருளுக்கு ஆசைபட்டும், தனிப்பட்ட வகையில் அரசனின் காதலி சொன்ன உறுதிமொழி வகையிலும் அந்த யாழ்பாண பாடினி பெரும் உற்சாகம் கொண்டாள்.

அடுத்து மன்னன் பாணபத்திரன் மனைவியினை வரச்சொன்னான், அவளும் வந்தாள்.

“பெண்ணே, பாண்டிய நாட்டில் பெரும் ஆபத்து வந்துள்ளது, பாண்டிய நாட்டில் தனக்கு இணையாக பாட யாருமில்லை என யாழ்ப்பாணத்தில் இருந்து யாழுடன் ஒரு பாடகி வந்துள்ளாள்.

நீ அவளை வென்று பாண்டிய நாட்டின் பெருமையினை காக்க வேண்டும்” என்றான், அவள் ஒப்புக்கொண்டாள்.

பாண்டிய மன்னன் பெரும் அறிவிப்பினை செய்து தன் அவையில் அந்தப் போட்டியினை ஏற்பாடு செய்தான். பெரும் புலவர்கள், இசை மேதைகள், சங்கீத நுணுக்கம் அறிந்தவர்கள் என எல்லோரும் வந்திருந்தார்கள்.

மன்னன் அங்கே தன் தந்திர அறிவிப்பினை தன் நாயகி சொன்னபடி சொன்னான்.

“அவையோரே கலைகளில் சிறந்த பாண்டிய நாட்டின் இசைச்துறைக்கு சவால்விடும் வகையில் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து இவர் பாட வந்துள்ளார்.

இவருக்கு போட்டியாக நம் சார்பில் பாணபத்திரன் மனைவி பாட இருக்கின்றார், இந்தப் போட்டி கடுமையானது, வெல்பவர் தோற்பவருக்கு அடிமை என பந்தயம் கட்டப்படுகின்றது” என்றான்.

யாழ்பாணத்து பெண் எழுந்து அதை தன் யாழுடன் ஏற்றுக்கொண்டாள், ஏற்றுக் கொண்டவள் யாழின் ஒரு நரம்பினை தட்டிவிட்டாள். அது அதிர்ந்தது, அவளைச் சுற்றியிருந்த அவளின் மாணவியர்களும், சீடர்களும் இதர கலைஞர்களும் பெரும் ஆரவாரம் செய்தனர்.

பாணபத்திரனின் மனைவி எழுந்தாள், “சிவனுக்கே அடிமையானவளான என்னை இன்னொருவருக்கு அடிமையாக என் நாதன் விடமாட்டான், சிவாய நமஹ” எனச் சொல்லி அமர்ந்தாள்.

அவளுக்கு அடிபொடிகள் யாருமில்லை, தனியாகவே வந்து அமர்ந்திருந்தாள், நெற்றியில் விபூதி பளிச்சிட்டது.

மன்னன் கையசைக்க போட்டி ஆரம்பமானது.

முதலிலே, அந்த யாழ்ப்பாணத்து பெண் வம்பிழுக்க ஆரம்பித்தாள், அவள் தன் அகங்காரத்தில் கேள்விகளைக் கேட்டாள்.

“பெண்ணே உன்னோடு போட்டியிடும் முன் சில கேள்விகளைக் கேட்க விரும்புகின்றேன். காரணம், என்னோடு போட்டியிட ஒரு தகுதி வேண்டும், எனக்கு சரியான தகுதி இல்லாதவருடன் நான் பாட முடியாது.

சரி இப்போது சொல், யாழின் வகைகள் என்ன? ஆயிரம் நரம்புகளை கொண்ட ஆதி யாழ் தொடங்கி, நாரதயாழ், மகர யாழ் என விரிந்து கிளியாழ் என முடியும் பலவகை யாழ்களின் இலக்கணம் என்ன?

யாழின் இசைக்கு எத்தனை குற்றங்கள் உண்டு? யாழின் உயிர் எது, அதன் தெய்வம் எது? யாழின் குணங்கள் என்ன?

உயிர், மெய், உயிர்மெய், நெடில், குறில் என யாழில் வாசிக்கப்படும் போது மாத்திரை அளவுகள் என்ன?

யாழ் இசையில் அடிப்படையில் எதை செய்யக்கூடாது, எதை செய்யவேண்டும் என சில விளக்கங்களைச் சொல்” என்றாள்.

அது அவளின் அகங்கார வார்த்தைகள் என்பதால் பாணபத்திரனின் மனைவி அவற்றுக்கு விளக்கம் அளிக்கவில்லை. மாறாக, பணிவாகச் சொன்னாள்.

“அம்மா, நாம் இங்கே இசை ஆராய்ச்சி செய்ய வரவில்லை, இசையின் நுணுக்கம் குறித்து விவாதிக்க வரவில்லை. நாம் பாடலில் மோத வந்திருக்கின்றோம். அதனால் அதை மட்டும் செய்தால் போதும்.

முதலில் நீ வாசிக்கலாம், அதன் பின் நான் வாசிக்கின்றேன், முடிவினை அவை கூறட்டும்” என்றாள்.

அதன்படி தன் பேரியாழ் எனும் 21 நரம்பு கொண்ட யாழை எடுத்து மீட்டி அரசனை புகழ்ந்து பாடினாள் யாழ்ப்பாணத்து பாடினி, அவள் பாடலின் நடுவே அரசன் அடிக்கடி கைதட்டி உற்சாகப்படுத்தினான், அரசன் கைதட்டியதால் அவையோர்க்கும் வேறு வழியில்லை, அவர்களும் கைதட்டினார்கள்.

அரசனை முழுக்க பாடி, அவன் தேர்வுகளெல்லாம் சரி, முடிவுகளெல்லாம் சரி என அவன் நாயகியினையும் ரகசியமாய் பாடி முடித்தாள் பாடினி.

அடுத்து பாணபத்திரனின் மனைவி முறை வந்தது, அவள் ஏழு நரம்புகளே கொண்ட கிளி யாழ் எனும் யாழை எடுத்தாள், மனமெல்லாம் ஆலவாய் நாதனை நினைந்து கொண்டாள், அவன் இருக்கும் திசை நோக்கி வீழ்ந்து வணங்கினாள், பின் யாழினை தொட்டு தன் கண்களில் ஒற்றி வணங்கியவள் பாடத் தொடங்கினாள், அந்தக் கிளி யாழ் அன்னையின் கையில் இருக்கும் கிளியாக நினைத்து கண்களை மூடி சிவனை நினைந்துப் பாடினாள்.

அவளின் அற்புதமான உருக்கமான பாடலும் , அவள் இசைத்த யாழின் அழகும் எல்லோரையும் மெய்மறக்க வைத்தன, அவளின் இசை எல்லோரையும் கவர்ந்தது, அவை சொக்கிப் போனது, பலர் கண்களில் நீர் வழிந்தது.

தான் தோற்பதை உணர்ந்த யாழ்ப்பாணத்து பாடினி கோபத்துடன் அரசனின் நாயகியினை பார்த்தாள், நாயகி அரசனைப் பார்த்தாள்.

அவள் பார்வைக்கு அர்த்தம் புரிந்த மன்னன் தலையாட்டிக் கொண்டான்.

பாணபத்திரன் மனைவி பாடி முடித்ததும் அவையோர் பெரும் ஆரவாரம் செய்தனர். ஆனால், மன்னன் முந்திக்கொண்டு இசையில் சிறந்தவள் யாழ்ப்பாண பாடினியே, அவள் இசையே தன்னை கவர்ந்தது என முந்திக்கொண்டு சொன்னான்.

மன்னன் சொல்லுக்கு மறுபேச்சு பேசமுடியா சபை அப்படியே அமைதியானது. ஆனால், அவர்கள் தேர்வு பாணபத்திரன் மனைவியாகவே இருந்தது.

அரசன் மிகத் தந்திரமாக காட்சிகளை நடத்தினான். அதன்படி அவனே சொன்னான், “நான் என் முடிவினை அறிவித்தேன், என் முடிவு தவறாக இராது என்பதை சொல்ல நாளையும் போட்டி நடைபெறும்” என்றான்.

“அரசே, வென்றது நான் என்பதை சொல்ல தயக்கமா? சரி நாளை அதனை அறிவியுங்கள், நாளை முதல் இவள் எனக்கு அடிமை” என அகங்காரமாக சொன்னாள் யாழ்ப்பாண பாடினி.

“நாளை போட்டி நடக்கட்டும்” எனச் சூசகமாக சொன்னான் மன்னன், அவள் தன் அடிபொடிகளோடு வெளியேறினாள்.

கலங்கிய கண்களுடன் குனிந்த தலையுடன் இருந்த பாணபத்திரன் மனைவியினை வெறுப்பும் வஞ்சக சிரிப்பும் கொண்டு பார்த்தாள் அரசனின் நாயகி, அவள் குரூரமனம் குதூகலித்துக் கொண்டிருந்தது.

பாணபத்திரன் குடும்பத்தாரும் பெரும் வலியோடு நின்றுக் கொண்டிருந்தனர்.

பெரும் அவமானம் தனக்கு நிகழ்ந்தது, அரசன் ஓரவஞ்சகமாக பேசிவிட்டான் என்பதை அறிந்த பாணபத்திரன் மனைவி சிவன் சந்நிதிக்கே சென்றாள்.

“எம்பெருமானே மதுரையின் அரசன் நீ, பாட்டு இசை நடனம் என எல்லா கலைகளுக்கும் மூலம் நீ. நீ சொல் அங்கே அவளா வென்றாள்?

ஆனால், உன் பிரதிநிதியாக நாட்டை ஆளும் மன்னன் தன் நிலை தவறி பொய்யாக தீர்ப்பிடுகின்றான், என்னை அவளுக்கு அடிமையாக்க முயல்கின்றான், இது பெரும் அநீதி அல்லவா?

அவையோர்க்கு உண்மை தெரிந்தும் அவர்கள் அரசனுக்கு அஞ்சி அவன்பக்கம் நிற்கின்றார்கள், அவனை எதிர்ப்பது யார்?

எம்பெருமானே, நான் குடும்பமாக உன்னையன்றி யாரைப் பாடினேன், இந்த சிக்கலுக்கு காரணமே நான் உன்னைவிடுத்து அரசனை புகழ்ந்து பாடவில்லை என்பதுதானே.

உன்னையே நம்பியிருக்கும் என்னை அந்த யாழ்பாணத்து பெண்ணுக்கு அடிமையாக்க போகின்றாயா? உன்னைவிட்டால் எனக்கு யார் உண்டு எம்பெருமானே.

நான் என் குடும்பம் விட்டு, உன்னை விட்டு அவளுக்கு அடிமையாக செல்ல வேண்டுமா? என் குடும்பத்தை விடு பெருமானே, உன்னை காணாது இங்கு உன்னை வழிபடாது என்னால் இருக்கமுடியுமா?” எனக் கதறினாள்.

அப்போது அசரீரியாக ஒலி கேட்டது “பெண்ணே அஞ்ச வேண்டாம், நீயே வெல்வாய்” என அது சொன்னது.

அந்தக் குரலால் ஆறுதலடைந்தவள் சிவனை தன் யாழால் பாடித் தொழுது, வணங்கி திரும்பினாள்.

மறுநாள் போட்டி துவங்கிற்று, முதலில் யாழ்ப்பாண பெண் பாடினாள், வழமையான அகங்காரத்துடன் பாடினாள், அவள் பாடப் பாட உற்சாகப்படுத்திய மன்னன் அவள் பாடி முடிந்ததும், “ஆஹா என்ன அருமையான‌
பாடல் இதற்காகவே என் முத்துமாலையினை பரிசளிக்கின்றேன்” எனச் சொல்லும் போது அதற்கு மேல் தாளமுடியாதவளாய் கத்தினாள் பாணபத்திரனின் மனைவி.

“மன்னா, நீங்கள் செய்வது அநீதி. அவளுக்கு ஒருதலைபட்சமாக நீங்கள் நடக்கும் அநீதி. போட்டி இன்னும் முடிவடையவில்லை, நான் பாடத் தொடங்கவே இல்லை, அதற்குள் அவளுக்கு பரிசு என போட்டியினை திசை திருப்புகின்றீர்கள்.

மன்னா இது சரியல்ல, இதனை கேட்க வேண்டிய அவையோரும் அமைதி. இங்கு பந்தயப்பொருள் நான், இவளுக்கு அடிமையாக போவது நான் என்பதால் நான் வாதிட எனக்கு உரிமை உண்டு.

பெரியோரே, அவையோரே, இங்கு நாட்டின் மக்கள் குழப்பம் செய்தால் அரசனிடம் வரலாம், அரசனே குழப்பம் செய்தால் நாம் யாரிடம் செல்லமுடியும்?

அரசர்க்கெல்லாம் அரசன், தெய்வங்களுக்கெல்லம தெய்வம், கலைஞர்களுக்கெல்லாம் பெரும் கலைஞனான அந்த சிவனிடமேதான் செல்ல முடியும்?

முன்பு இதே பாண்டிய நாட்டுக்கு ஹேமநாதனால் இதுபோல இசைப்போட்டி வந்தபோது அந்த பெருமானேதான் தீர்வு கொடுத்தார், அப்படி இப்போதும் அவரே தீர்ப்பளிக்கட்டும்.

நான் இனி அந்தச் சிவன் முன்னாலேதான் பாடுவேன், அவரே இனி நீதிபதி” என தன் கருத்தை ஆணித்தரமாக சொன்னாள்.

அவை அவளின் கோபத்தை மௌனமாக ஏற்றது, அரசன் திகைத்தான், அவனின் நாயகியும் எதிர்பாரா இந்தக் குரலை எதிர்பார்க்கவில்லை.

அவையில் மெல்லிய குரல் முனகலாக எழுந்து பின் வலுவானது.

“அந்நிய தேசத்து பெண் பாண்டியநாட்டு பெண்ணை அனுதினமும் ஆலவாயன் சந்நிதியில் பாடும் பெண்ணை அடிமையாக்கும் போட்டி என்றால் அதை ஆலவாயன் சந்நிதியிலே நடத்தலாம்” என அது சொல்ல ஆரம்பித்தது.

மன்னனும் வேறு வழியின்றி ஒப்புக்கொண்டான், யாழ்ப்பாணத்து பெண்ணுக்கோ தான் எங்கும் வெல்வோம் எனும் அகந்தை இருந்தது, அரசனே தன் பக்கம் எனும் தைரியம் இருந்தது.

மறுநாள், அந்தப் போட்டி ஆலவாயன் சந்நதிதியில் ஆரம்பித்தது , 100 நரம்புகளைக் கொண்ட யாழை எடுத்து வந்தாள் யாழ்ப்பாணத்துக்காரி, அந்த யாழின் இசையினை வெல்வது கடினம்.

பாணபத்திரன் மனைவியோ தன் இயல்பான கிளி யாழோடு வந்து அமர்ந்தாள்.

எல்லா இசைமேதைகளும் வந்தார்கள், அங்கே ஒருவர் தானும் இசை அறிந்தவர் என்பது போல குடுமியும் கடுக்கனும் கையில் ஒரு சிறிய தம்புராவோடும் வந்து அமர்ந்து கொண்டார்.

பார்க்க புதியவரான அவர் யாரோ ஒரு இசைக்கலைஞர் என எல்லோரும் நினைந்து கொண்டார்கள், அவரோ ஒன்றுமறியாதவர் போல் அமர்ந்து கொண்டார்.

போட்டி தொடங்கிற்று, முதலில் பாடிய யாழ்ப்பாண பாடினி மன்னனை வழக்கம் போல் புகழ்ந்தாள், பாடினாள் பெரும் இசைமீட்டி அதிரவைத்தாள், அவளின் 100 நரம்பு யாழ் பெரும் சாகசம் காட்டியது.

தம்புராவோடு அமர்ந்திருந்தவர் மன்னனை ஒரு பார்வை பார்த்தார், இம்முறை அவனிடம் சலனமில்லை, அவன் காது கேளாதவன் போல் அமர்ந்திருந்தான்.

மன்னன் தன்னை கொண்டாடுவான் என அவன் முகத்தையே நோக்கினாள் பாடினி. ஆனால், மன்னன் அவன் போக்கில் இருந்தான், அவன் நிலைக்கண்டு அவன் நாயகி ஏதோ காதோரம் சொன்னாள், அவன் அசையவில்லை.

அந்தத் தம்புராக்காரர் சிரித்துக் கொண்டார்.

அவள் முறை முடிந்ததும், பாணபத்திரன் மனைவி பாடும் முறை வந்தது, வாழ்வா? சாவா? எனும் நிலையில் இருந்தவள் சிவனை புகழ்ந்து மன்றாடி தன் முழு சக்தியுடன் பாடினாள்.

அவள் இசைத்தது என்னவோ யாழ் மட்டும்தான், ஆனால் தெய்வீக இசை அந்த இடத்தை சூழ்ந்தது. அப்படி ஒரு தெய்வீக இசையினை அதற்கு முன் யாரும் கேட்டதில்லை.

கேட்டோர் அனைவரும் அப்படியே உருகினார்கள், சிலர் அழுதார்கள், சிலர் இனம்புரியா உணர்வில் கரைந்துக் கிடந்தார்கள்.

அரசன் மனம் மாயையில் இருந்து விடுபட்டது, அவன் தன் சுயத்துக்கு திரும்பினான், அவனை ஆட்கொண்டிருந்தவள் நினைவே அகன்றுப்போனது.

அவன் எழுந்தான், “இதுவல்லவோ கானம், இதுவரை கேட்டறியா அற்புதமான கானம், அவையோரே இதற்கு மேல் நான் சொல்ல என்ன இருக்கின்றது, நீங்களே சொல்லுங்கள், வென்றது நம் பாண்டிய நாட்டு பாணபத்திரன் மனைவிதானே, இந்த ஆலவாயன் சந்நிதியில் சொல்லுங்கள்” என்றான்.

அவையோர் “மன்னா நிச்சயமாக அவளே வென்றாள், இப்படி ஒரு தெய்வீக கானம் நாம் எப்போது கேட்டோம்” என்றார்கள்.

அப்போது தம்புராக்காரர் சொன்னார், “இங்கே வென்றவர் தோற்றவர்க்கு அடிமை அல்லவா?”

மன்னன் துடித்தான், “ஆம், இங்கே இனி யாழ்ப்பாணத்துக்காரி பாணபத்திரன் மனைவிக்கு அடிமை, அவள் தோள்மேல் பாணபத்திரன் மனைவியினை சுமக்க வேண்டும்” என்றான்.

எல்லோரும் ஆமோதித்தார்கள். அரசனின் நாயகி அஞ்சினாள். அரசன் காதில் சென்று ஏதோ சொன்னாள், அவனோ அவளை யார் நீ என்பதுபோல் கண்டான்.

அரசனுக்கு ஏதோ ஆயிற்று, இவன் தன் கட்டுப்பாட்டில் இருந்த பழைய மன்னன் அல்ல என நினைத்தவள் உடனே அகன்று ஓடிப்போனாள்.

பாணபத்திரன் மனைவியினை தோளில் சுமக்கும் நிலைக்கு வந்தாள் யாழ்ப்பாணத்து பாடினி, அப்போது “நல்ல தீர்ப்பு, நல்ல தீர்ப்பு” எனும் சத்தம் கேட்டது எல்லோரும் திரும்பி பார்க்க அந்த தம்புராக்காரர் நின்றிருந்தார்.

சட்டென ஒரு ஒளிச்சுடராக மாறி அவர் மறைந்தே போனார்.

வந்தது சிவன் என உணர்ந்த எல்லோரும் மண்டியிட்டனர். மன்னன் கதறி வீழ்ந்தான். பாணபத்திரன் மனைவி “எம்பெருமானே எனக்காக வந்தீரோ?” என ஆனந்தத்தில் கத்தினாள்.

அந்த யாழ்ப்பாண பெண் என்ன இருந்தாலும் சிவபக்தை அல்லவா? அவள் இப்படிப்பட்ட பக்தையினை அதுவும் சிவனே தேடிவந்த பக்தையினை தான் தோளில் சுமப்பது பாக்கியம் எனச் சொன்னாள்.

ஆனால், அவள்தோள்மேல் ஏறாமல் அவளை அடிமை ஆக்காமல் “பெண்ணே, இதெல்லாம் எம் பெருமானின் விளையாட்டு , நீ இங்கு வந்து அவரைப் பாட எம்பெருமான் அழைத்திருக்கின்றார்.

எனக்கு உன்மேல் எந்த வருத்தமுமில்லை, வா நாம் சிவனை பாடலாம்” என அழைத்தாள்

இருவரும் சேர்ந்து அந்த ஆலவாய் சிவனை பாடித் தொழுதார்கள். மன்னன் பெரும் பரிசை பாணபத்திரன் மனைவிக்கு அளித்தான், அவளோ மன்னன் யாழ்ப்பாண பெண்ணுக்கும் பரிசளிப்பதே நியதி, அவளும் சிவனை பாடினாள் என அவளை பரிசுகள் நிரம்பிய கையுடன் அனுப்பி வைத்தாள்.

அந்த யாழ்ப்பாண பெண் ஆலவாய் நாதனின் சக்தி உணர்ந்து பணிந்து திரும்பினாள்.

அந்தக் கணம் முதல் இராஜராஜ பாண்டியன் மிகத் தெளிவானவனாக மாறினான். யார் பிடியிலும் அவன் இல்லை, தன் சுய அறிவில் அவன் தானாக இருந்தான், நல்லாட்சி நடத்தி ஆலவாய் நாதன் ஆலயத்தை கடைசிவரை நன்றாகக் கொண்டாடினான், பாணபத்திர்ன குடும்பத்தையே ஆதரித்தான்.

இதுதான் ஈழத்து விறலியின் அகங்காரத்தை பகவான் அடக்கிய திருவிளையாடல்.

இந்தத் திருவிளையாடல் அழகான தத்துவம் ஒன்றை சொல்கின்றது. முதலாவது, ஹேமநாத பாகவர் எனும் அகங்காரமிக்க இசைமேதையிடம் இருந்து மட்டும் மதுரையினை சிவன் மீட்கவில்லை, அவன் சாயலில் வந்த யாழ்ப்பாணத்து யாழிசை பெண்ணிடம் இருந்தும் பாண்டிய நாட்டை மீட்டார்.

இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் இங்கே காட்சிக்கு வருபவர்கள் மூன்று பெண்கள். ஆம். இந்துமதம் பெண்களுக்கு எப்படியான பெரும் இடத்தை கொடுத்திருந்தது என்பதை இந்தக் காட்சி சொல்கின்றது.

மன்னனை ஆட்டிவைத்த பெண், யாழிசையினை ஆட்டிவைத்த பெண், சிவனுக்கு அடிமையாய் இருந்து பாடிய பெண் என மூன்று பெண்களைக் காட்டுகின்றது

இந்துமதத்தில் பெண்கள் அவையில் பாட தடையில்லை, ஏன் சிவன் சந்நிதியிலே பாடத் தடையில்லை என்பதை
காட்டுகின்றது. ஆம். பெண்களுக்கு இந்துமதம் கொடுத்த சுதந்திரத்தை காட்டுகின்றது.

மன்னன் தீர்ப்பு தவறு என மதுரையில் சொன்னவள் கண்ணகிஅல்ல. மாறாக, சிவபக்தை ஒருத்தி அவையில் மன்னனை எதிர்த்துப் பேசி பின் மதுரை ஆலவாயன் சன்னதிக்கே தீர்ப்பு பெற செல்கின்றாள்.

மன்னனை ஆலவாயன் சந்நிதிக்கு பக்திமிக்க பெண் ஒருத்தியால் இழுக்க முடியும் என்பதை இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது.

அங்கே மன்னன் மனதை சிவன் மாற்றினார், யாரையும் அழிக்கவில்லை, யாரையும் கொல்லவில்லை, எல்லோரையும் சிவன் ஆட்கொண்டு, எல்லோருக்கும் நல்ல முடிவு சொல்லி, எல்லோரையும் வாழவைத்தார் என்பதையும் அறிய முடிகின்றது.

ஆம். இங்கே தன் முன் வாதிட்ட பெண்ணுக்கு சிவனே வந்து தீர்ப்பு சொல்லி அரசனுக்கு நல்ல மனமாற்றம் கொடுக்கின்றார்.

தன்னை நம்பிய பக்தைக்கு சிவன் வந்து வரமருளி அதிசயமாக காக்கின்றார்.

இந்தத் திருவிளையாடல் சொல்லும் தாத்பரியம் தன்னையே நம்பி, தன்னையே பாடி, தன்னை அடைக்கலமாக கொண்ட உன்னத பக்தையினை சிவன் ஒருகாலமும் கைவிடவில்லை என்பது.

ஆம். உங்களிடம் நியாயம் இருந்தால் உங்களுக்கு எந்த இடத்திலும் சரியான நியாயம் கிடைக்கவில்லை எனக் கலங்கினால் இந்த ஆலவாயனிடம் வாருங்கள்.

நீங்கள் பாதிக்கப்பட்ட விவகாரத்தை சிவனிடம் சொல்லுங்கள், மானுட நீதிமன்றம் உங்களை மறுத்திருந்தால் சிவனின் நீதிமன்றத்தில் முறையிடுங்கள்.

அந்தச் சிவன் உங்களிடம் நியாயம் இருக்கும் நிலையில் நிச்சயம் உங்களுக்கு பதிலளிப்பார், நல்ல தீர்ப்பை அவரே தருவார்.

இந்தத் திருவிளையாடல் நிச்சயம் சிந்தனையினை கிளறும். காரணம், ஒரு பக்தைக்கு சிவன் அருள்புரிந்த இந்தத் தலம், இந்தச் சிவாலயம் எக்காலமும் விசேஷமானது.

ஆனால், கண்ணகி கதையில் கண்ணகி இந்தச் சிவனிடம் வந்ததாக ஒரு காட்சியும் நீங்கள் பார்த்திருக்க முடியாது, மணிமேகலையில் ஒரு இடத்தில் இந்த மதுரை ஆலயம் வராது.

ஆக, பௌத்த சமண இலக்கியமெல்லாம் இந்துமதம் காட்டிய பெண் உரிமை, இந்துப் பெண்களின் தெய்வீக காட்சிகள், இந்து மதம் சொன்ன பக்திப் பெருமைகள், அந்த இந்துமதத்தின் பெரும் இடத்தில் இருக்கும் பக்தி மிக்க பெண்களை மறைத்தே, அந்த ஆலயப்பெருமைகளை மறைத்தே எழுதப்பட்டவை என்பது தெளிவாகும்.

இந்த ஈழத்து விறலியின் கதையில் பாதிக்கப்பட்டவள் ஒரு மதுரை சிவபக்தை, அவளுக்கு மன்னனிடம் அநீதி நிகழ்ந்தபோது அவள் மதுரை ஆலவாய் நாதனிடம் வந்து நீதிபெற்றுக்கொண்டாள்.

இப்படி ஆயிரமாயிரம் சம்பவங்களை திருவிளையாடல் என்றும், இன்னும் பல இடங்களிலும் கொண்ட மதுரை ஆலயத்துக்கு கண்ணகி ஏன் வரவில்லை என்பதும், அந்தச் சிவாலயம் இருந்த மதுரையினை கண்ணகி எரித்தாள் என்பதும் பௌத்தர்களின் பெரும் சதி.

அவர்கள் எரிக்க விரும்பியது மதுரையின் பெருமையினை, இந்த ஆலவாயனின் அற்புத வரலாறுகளை என்பதை இந்த திருவிளையாடலை வாசிக்கும் போது அறியலாம்.

மதுரை ஆலவாயன் தன் உன்னதமான பக்தர்களை கைவிடமாட்டான் எனும் போதனையினை தரும் இந்தக் காட்சி, ஒரு பெண்ணுக்கு சிவன் செய்த மிகப்பெரிய அற்புதத்தை செய்த காட்சி நிகழ்ந்த மதுரையினை கண்ணகி என்பவளை சொல்லி, அந்த ஆலயத்தின் பெருமையினை, இந்த மதுரையின் பெருமையினை பௌத்த கோஷ்டி மறைக்க துடித்தது என்பதையும் அழகாகச் சொல்கின்றது.

பௌத்தம் எந்த அளவு இந்துக்களை வெறுத்தது என்பதற்கு இந்தத் திருவிளையாடல் பெருமையும், அதைச் சார்ந்து பௌத்த கும்பல் உருவாக்கிய கண்ணகி கதையும் பெரும் சாட்சிகள்.

திருவிளையாடல் புராணம் : 22 மகாதேவன் மாமனாக வந்த படலம்.

அந்தப் பாண்டிய தேசத்தின் மதுரையில் தனபதி என்றொரு வணிகன் வாழ்ந்து வந்தான். அவன் மாபெரும் செல்வந்தனாய் வணிகத்தின் சக்கரவர்த்தியாய் பெரும் பொருள் குவித்துச் கோலோச்சினான். செல்வமும் பெரும் மாளிகையும் ஏகப்பட்ட சேவகர்களுமாய் பெரும் வாழ்வு வாழ்ந்து வந்தான்.

அவன் மனைவி சுசீலா என்பவள், அவளும் மிகுந்த நல்ல குணம் கொண்டவள். இல்லறத்தை எல்லா அறத்துக்கு உட்பட்டு மிக நன்றாக நடத்தி வந்தாள்.

எல்லோருக்கும் எல்லாம் இறைவன் கொடுப்பதில்லை, எல்லோருக்கும் எல்லாம் கொடுத்துவிட்டால் அவன் இயக்கத்தில் ஏதோ சரியில்லை எனப் பொருள், மழை கூட உலகில் ஒரே நேரம் பெய்வதில்லை, சூரியன் பூமியின் எல்லாப் பக்கமும் எந்நேரமும் ஒருபோல இருப்பதில்லை.

ஒருவருக்கு இருப்பது இன்னொருவருக்கு இருக்காது என்பதுதான் மானுட வாழ்வு.

அப்படி செல்வமும் எல்லா வகை வளமும் கொண்டிருந்த அவர்களுக்கு குழந்தை இல்லை. இது அவர்களுக்கு பெரும் வேதனையாயிற்று. முடிந்த வரையில் பிரார்த்தனைகள், கோவில் குளம் சென்று நேர்ச்சைகள் எனச் செய்தவர்கள் ஒரு கட்டத்தில் அந்தக் குறையினை ஏற்றுக்கொண்டார்கள்.

இதுதான் இப்பிறப்பின் கர்மா, எது குறையோ, எது தேடலோ, எது கிடைக்கவில்லையோ அதுதான் கர்மா, அதுதான் பிறப்பின் சாபம் என இந்துமதம் சொன்னதை ஏற்றுக்கொண்டார்கள்.

அவனுக்கோர் தங்கை இருந்தாள். ஆனால், அவள் விதவையாய் இருந்தாள். அதே நேரம் கருணை கொண்ட இறைவன் அவளுக்கோர் மகனை கொடுத்திருந்தார்.

தனபதியும் அவன் தங்கையும் சிறந்த சிவபக்தர்கள்; ஆலவாய் நாதன்மேல் அபாரமான பக்தி கொண்டவர்கள்; அனுதினமும் அவனை தரிசித்து பெரும் காணிக்கை வைத்து வணங்குபவர்கள்.

தனபதி தனக்கு வாரிசு இல்லை என்பதால் தன் தங்கை மகனை வாரிசாகக் கொண்டான், தன் எல்லா சொத்துக்கும் தன் தங்கை மகனே வாரிசு எனக் குடும்பத்தில் அறிவித்துக் கொண்டாடினான்.

என்னதான் அண்ணன் தங்கை என்றாலும் உறவுகளுக்குள் உரசல் வருவது இயல்பு, ஒரே மரத்துக் கிளைகள் என்றாலும் காற்றில் அவை உரசிக் கொள்வது உண்டு, ஒரே வேரின் மூங்கில்கள் தங்களுக்குள் உரசி நெருப்பென எரிந்துவிடல் உண்டு.

குளிர்ந்த நீரில் குதித்தாடும் மீன் அதே நீர் குழம்பென கொதிக்கும் போது செத்து மிதத்தலும் உண்டு.

எது நெருங்கிய உறவோ அதுவே ஒரு கட்டத்தில் பகையாகும், பேணி வளர்க்கும் உடலில் எழும் நோயே ஒருவனை கதறி அழ வைக்கும் பிணியாகும்.

அப்படி அண்ணன் தங்கைக்கும் சிறிய உரசல் வந்து, அது பெரிதாக வெடித்து சண்டையானது, ஆத்திரமான தங்கை ஒரு கட்டத்தில் கத்திவிட்டாள்.

தன்னை நம்பி இருப்பவள் எனும் நினைப்பில் அண்ணன் இருந்தான், அதே நேரம் அவள் வாழ்வு இப்படி ஆயிற்றே எனும் கவலையும் இருந்தது, என்னதான் தன் வீட்டில் பெரும் வசதியில் வாழ்ந்தாலும் கணவனை இழந்த தங்கை அண்ணனுக்கு பெரும் மனச்சுமையே.

தனக்குப் பிள்ளை இல்லை என்பதை கர்மா என ஏற்றவன், தங்கை வாழ்வையும் கர்மா என ஏற்றுக்கொண்டான், அவளைக் காப்பதே தன் கர்மா, கடமை என்பதில் அவன் அதிகம் பேசிவிட்டான்.

அவளோ திருப்பிக் கத்தினாள், “பிள்ளையே இல்லாத பாவி நீ, உனக்கு இந்தப் பிறவியில் கடமைகளைச் செய்து உனக்கு கொள்ளியிட்டு அனுப்பவும், மறுமையில் நீ நல்லபடியாக வாழ திதி தர்ப்பணமெல்லாம் கொடுத்து வரவும் என் மகனை விட்டால் யார் உண்டு, என்னிடமா பேசுகின்றாய்?” என அவன் நெஞ்சம் புண்பட பேசிவிட்டாள்.

சிறுவயதில் இருந்தே ஒன்றாய் வளரும் அண்ணன் தங்கைகள் உரிமையில் அதிகம் பேசுவார்கள். ஆனால், வயது ஏற ஒருகாலத்தில் வேடிக்கையாக இருந்த சொற்களெல்லாம் வெடியாக மாறும்.

அப்படி அவன் நெஞ்சம் அந்த வார்த்தையில் வலியானது.

அவன் அதன்பின் பேசாமல் சிந்திக்கத் தொடங்கினான். அவன் வலிபட்ட நெஞ்சம் கலங்கிற்று, “இந்தப் பிறவியில் நமக்கு குழந்தை இல்லை அது கர்மா.

குழந்தைள் ஒருவனுக்கு எதற்கு? வாழ்வில் எல்லா வகையிலும் கூட இருந்து சுடுகாட்டில் கொள்ளியிட்டு பின் தன் தந்தைக்கும் மூதாதையர்க்கும் தர்ப்பணம் திதியெல்லாம் செய்து அவர்களின் ஆன்மாவுக்காக அதன் ஈடேற்றம் அல்லது எங்கேனும் அது பிறந்திருந்தால் நல்வாழ்வு வாழ‌ வேண்டிக் கொள்வதுமே பெரும் கடமை.

தனக்கு குழந்தையினை இறைவன் தரவில்லை என்றால் என்ன அர்த்தம்?

தனக்கு இனி பிறவி இல்லை எனப் பொருள், இதுதான் இறைவன் விதித்தது. அதை மீறி தங்கை மகனை மகனாக வரிந்து கொண்டால் எப்படி இறைவன் பொறுப்பான்?

ஆக, இந்த வேதனைக்கெல்லாம் காரணம் குழந்தை இல்லை என ஏற்று அமைதியாக வாழ்வை கழிப்பதை விடுத்து தங்கை மகனை வாரிசாக எடுத்ததே. இனி அது வேண்டாம் எனத் தெளிவு கொண்டான்.

அவனுக்கும் வயது ஏறிக் கொண்டிருந்தது, அதனால் ஒரு முடிவெடுத்தான்.

தன் மனைவியோடு ஆலவாயன் சந்நிதிக்குச் சென்றவன் தன் முடிவினை சொன்னான், “எம்பெருமானே யாருக்கும் அளிக்காத பெரும் செல்வத்தையும் அது தொடர்ந்து குவியும் பெரும் வரத்தையும் எனக்குத் தந்தாய். ஆனால் அதே நேரம் எனக்குப் பிள்ளை செல்வத்தை கொடுக்காமல் தவிர்த்தாய்.

அது இனி எனக்கு மறுபிறப்பில்லை என்பதை சொல்வது.

ஆனால், நான் அதைவிடுத்து மானிட சுபாவத்தில் என் தங்கை மகனை வாரிசு என எடுத்து இப்போது மனச்சூடு பட்டுக்கொண்டேன், உன் சித்தம் மீறி அப்படி வேதனையுற்றேன்.

எம்பெருமானே, இனி நான் நீ விதித்ததை முழுக்க ஏற்கின்றேன், எனக்கு கொள்ளியிட எனக்கு திதிப்படி தர்ப்பணம் கொடுக்க யாரும் அவசியமில்லை. என் தங்கை அதை புரியவைத்துவிட்டாள்.

இனி நானும் என் மனைவியும் வடக்கே செல்கின்றோம், எல்லா சிவாலயமும் தரிசித்து காசியில் கங்கைக் கரையில் தவவாழ்க்கை வாழ்ந்து வாழ்வை முடித்து உன்னிடம் வரத் தயாராகின்றோம்.

என் தங்கையினையும் அவன் மகனையும் நீயே பார்த்துக்கொள், என் உறவுக்கும் அவனுக்கும் இனி பந்தமில்லையே தவிர இப்பூமியில் ஆதரவற்ற அவனுக்கு, தகப்பனில்லா அவனுக்கு நீயே துணையாக இருந்து காத்துவரவேண்டும், அவளுக்கும் உன்னைத் தவிர யாரையும் தெரியாது” எனச் சொல்லி வணங்கி மதுரை நீங்கி வடக்கே மனைவியோடு செல்லத் தொடங்கினான்.

கணவனுக்கு ஏற்ற பதிவிரதையான அவன் மனைவியும் அவனைத் தொடர்ந்தாள்.

தனபதி எல்லாவற்றையும் விட்டு ஆண்டி பரதேசியாய் கிளம்பினான் என்பதை அறிந்ததும் அவன் சொந்த பந்தங்கள், தாயாதி எனப்படும் தந்தை வழி பங்காளிகள் துள்ளி எழுந்தனர்.

எப்போதுமே உறவுகளுக்குள் யார் அதிகம் சம்பாதிப்பானோ அவனுக்கு சொத்துக்கள் மேல் ஆசையிராது, யார் சோம்பேறியாய் உறங்குகின்றார்களோ யார் சுகபோகிகளோ, யாருக்கு அதிக சம்பந்தமில்லையோ அவர்களுக்கு சொத்துமேல் பெரும் ஆசை வரும்.

அப்படிக் காவலில்லாத சொத்துகளுக்குள் பங்காளிகள் புகுந்து கொண்டார்கள், பெண்ணுக்கு வீட்டு சொத்தில் உரிமை இல்லை, ஆண்களுக்கே உரிமை அதனால் தனபதி சொத்து அவன் தங்கைக்கு செல்லாது, ஆண்வழி சொந்த பந்தத்தில் அவன் தந்தைவழி உறவினர்களுக்கே செல்லும் என எல்லாம் அபகரித்துக் கொண்டார்கள்.

அந்த விதவை தங்கை அதனை எதிர்பார்க்கவிலை.

அவள் முதலில் கொதித்தாள், ஆத்திரமடைந்தாள் இதை ஏற்க முடியாது எனச் சண்டையிட்டாள். ஆனால், கயவர் கூட்டம் பதிலுக்கு மிரட்டத் தொடங்கியதால் தன் மகனுக்கே ஆபத்து வரலாம் என அஞ்சினாள்.

சொத்துக்கள் எப்போதும் பொல்லாதவை, தன் மேல் மயக்கம் கொண்டவனை எந்த பழிபாவத்துக்கும் செல்ல வைப்பவை, அந்த கொடும் பேராசை கூட்டம் தன்னையும் தன் மகனையும் கொன்றுவிடக் கூடும் என அஞ்சியவள் இறங்கி வந்தாள்.

இதெல்லாம் என் அண்ணன் ஏற்கனவே என் மகனை வாரிசாக அறிவித்த சொத்துக்கள், எல்லோரும் அறியத்தானே என் மகனை அவர் தன் வாரிசாக அறிவித்தார், அது அறிந்தும் இப்படி செய்வது சரியா எனப் புலம்பினாள்.

எல்லா சொத்துக்களும் இல்லை என்றாலும் தனக்கும் தன் மகனுக்கும் வாழ்வின் ஆதாரமாக கொஞ்சம் போதும் எனக் கெஞ்சினாள்.

அந்தப் பேராசை கூட்டமோ ஒரு புள்ளி சொத்துக் கூட இல்லை, நீ மணம் செய்து கொடுக்கப்பட்டவள் அல்லவா? நீ இன்னொரு வீட்டு பெண்ணாகிவிட்டபின் இங்கே என்ன சொத்து? உன் கணவன் வழியில் ஏதும் இருந்தால் வாழ்ந்துகொள் இல்லை வேறுவேலை செய்து பிழைத்துக்கொள் அல்லது எப்படியும் போ.

இது எங்கள் வீட்டு சொத்து. உனக்குத் தரவே முடியாது. தனபதி எங்கள் வம்சத்தின் தொழிலை செய்தவன் அவன் சொத்தில் முன்னோர் பங்கு உண்டு, நீ மணம் செய்தபோதே இந்த வீட்டு பந்தம் அறுந்துவிட்டது பின் எப்படி உனக்கு சொத்துவரும்.

வேண்டுமானால் பஞ்சாயத்தை கூட்டு, பெரியோரை கூட்டு, யார் மணமுடித்துச் சென்ற பெண்ணுக்கு குடும்பச் சொத்தை தருவார்கள்? அப்படியே அவர்கள் சொன்னாலும் யார் ஏற்றுக்கொள்ள முடியும்.

இதை மீறி இந்தப் பிரச்சினையினை வளர்த்தால் எந்த மகனுக்காக நீ சொத்து கேட்கின்றாயோ அவன் இருந்துவிடுவானா எனச் சீறினார்கள்.

மிக அஞ்சிய அவள், அண்ணனைத் தவிர ஆதரவு இல்லாத அவள் தன் மகனோடு தெருவுக்கு வந்தாள்.

தன் அண்ணனோடு சண்டையிட்ட தவறை நினைந்து தலையில் அடித்தபடி கதறியவள், தன் மகனோடு கடைசி புகலிடமாக ஆலவாயன் சந்நிதிக்கு வந்தாள்.

“எம்பெருமானே, எமக்கு எல்லாமே நீர் அல்லவா? என் அண்ணனை நான் வார்த்தையால் கஷ்டப்படுத்தியதால் இந்த பாவம் என்னைச் சேர்ந்ததா? அப்படி இருந்தால் என்னை மன்னித்துவிடும் பெருமானே.

எம் பெருமானே, இந்த சொத்துகளுக்கு வாரிசு என என் அண்ணன் என் மகனை எல்லோரும் அறியும்படிதானே அறிவித்திருந்தான், இப்போது இந்தப் பங்காளிகள் இப்படி அராஜகம் செய்தால் நான் என்ன செய்வேன்?

எனக்கு யாருமில்லை, எந்த தொழிலும் தெரியவும் தெரியாது, அறிவும் அற்றவள். விதவையானவள், என் பையனோ பாலகன், இந்நிலையில் நான் இனி எப்படி வாழ்வேன், எனக்கிருந்த ஒரே உறவு என் அண்ணன் அவனுமில்லா நிலையில் இனி எப்படி வாழ்வேன்?

திருமணம் செய்து கொடுத்த பெண்ணுக்கு பிறந்த வீட்டில் உரிமையில்லை என அடித்து விரட்டிவிட்டார்கள், புகுந்தவீடும் இல்லாத நான் என்ன செய்வேன்?

எனக்கு இனி உன்னைவிட்டால் யார் ஆறுதல் எம்பெருமானே” என அலறி அழுதவள் அங்கேயே தூணில் சரிந்து வீழ்ந்தாள், வீழ்ந்தவள் மயங்கிவிட்டாள்.

அவள் மடியில் அந்தப் பாலகனும் படுத்துக் கொண்டான்.

அவள் கனவில் ஒரு குரல் கேட்டது.

“பெண்ணே கலங்காதே, நீ உன் உரிமைக்காக அவையினை கூட்டு” என்றது, அவள் அந்தக் கனவிலும் பதில் சொன்னாள் “மணமான பெண்ணுக்கு பிறந்தவீட்டில் உரிமை இல்லை என அவை சொல்லிவிடும், பின் ஏன் அங்கே செல்லவேண்டும்” என்றாள்.

“சொன்னதை மட்டும் செய், அங்கே என்ன நடக்கும் என்பது உன் முடிவு அல்ல” என அக்குரல் திரும்பச் சொன்னது.

கண் விழித்தவள் அதிர்ந்தாள் சொக்கநாதன் சந்நிதியில் கிடைத்த வார்த்தை சிவனின் வார்த்தையாக மட்டுமே இருக்கமுடியும் என நம்பியவள் உடனே வழக்காட முனைந்தாள்.

அது மாலை பொழுதாக இருந்ததால் மகனோடு கோவிலுக்கு வெளியே தங்கியவள், மறுநாள் காலை எழுந்து பொற்றாமரை குளத்தில் நீராடி சொக்கனை சுற்றிவந்து வணங்கி நீறு பூசி தன் மகனுக்கும் நீறு பூசி விட்டு சபைக்கு சென்றாள்.

மன்னன் அன்றைய குடிமக்கள் விசாரணையினை அரசனின் நீதிமன்றம் செய்து கொண்டிருந்தது, அந்த அவையில் தன் பிரச்சினையினை சொன்னாள் அந்தப் பெண்.

ஆன்றோர்கள் அந்தப் பங்காளிகளை வரச்சொல்லி ஆட்களை அனுப்பினார்கள், வந்த பங்காளிகள் தங்கள் வாதத்தை வைத்தார்கள்.

“ஆன்றோர்களே, இது எங்கள் குடும்ப விவகாரம், அதுவும் எங்கள் குடும்ப சொத்து விவகாரம், இவள் திருமணமாகி கொடுக்கப்பட்டவள் இன்னொரு குடும்பத்து பெண்ணாகிவிட்டவள்.

இந்தச் சொத்துக்களை எங்கள் சார்பாக தனபதி நிர்வாகித்தான், அவன் இப்போது கானகம் சென்றுவிட்டதால் அதனை குடும்பத்தார் நாங்கள் நிர்வகிக்கின்றோம், இதுதான் நம் நாட்டு நடைமுறை.

இங்கே இவள் எப்படி உரிமை கொண்டாட முடியும், ஒரு வாதத்துக்கு அவள் அண்ணன் இவள் மகனை வாரிசாகக் கொண்டான் என்றால் ஆவணம் எங்கே? எங்கே எழுதி வைத்தான்? யார் சாட்சி?

அதனால் இவள் இன்னொரு குடும்பத்துப் பெண், அங்கேதான் அவள் உரிமை கொண்டாட வேண்டுமே தவிர இங்கு அல்ல” என வாதிட்டார்கள்.

அவையின் ஆன்றோர்கள் மிக குழம்பிய நேரமது, பெற்றவர் சொத்தில் பெண்ணுக்கு பாத்தியம் உண்டா இல்லையா என்பதும், இங்கே ஆதாரமோ ஆவணமோ இல்லா நிலையில் என்ன சொல்வது எனக் குழப்பிக் கொண்டிருந்தார்கள்.

அவளோ ஆன்றோரைப் பார்த்து கையெடுத்து வணங்கினாள், கணவன் வீட்டில் வசதி இருந்தால் ஏன் அண்ணனிடம் அடைக்கலமாகின்றேன். அங்கே ஒன்றுமில்லை எனக் கண்ணீர்விட்டாள்.

அவையோருக்கு என்ன சொல்வது எனத் தெரியவில்லை.

காரணம், ஒரு தீர்ப்பினை வெறுமனே சொல்லிவிட்டால் அடுத்த அடுத்த வழக்குகள் சிக்கலாகும், அவையின் மதிப்பும் நம்பகதன்மையும் கெட்டுவிடும்.

அவர்கள் மிகவும் யோசித்த நேரம் இனி தனக்கு நீதியில்லை என உணர்ந்து “சொக்கநாதனே” எனக் கதறினாள் அப்பெண்.

அப்போது அங்கே வேகமாக வந்தான் அவளின் அண்ணன். “தங்கையே என்ன நடக்கின்றது?” எனக் கேட்டபடி அவைக்குள் வந்தான்.

அண்ணனைக் கண்டதும் அவள் ஓடிச் சென்று கட்டிப்பிடித்து அழுதாள், “அண்ணா என்னை மன்னித்துவிடு, நீ இல்லாத காலத்தில் இவர்கள் என்னை அனாதையாக்கிவிட்டார்கள்.

சொத்துக்களைப் பறித்துக் கொண்டு என்னைவிரட்டி விட்டார்கள், நான் ஒன்றுமில்லாதவளாக அனாதையாக இந்த வழக்குமன்றம் வந்தேன், இங்கும் சாட்சிகள் ஆதாரம் எனச் சொல்லி குழப்புகின்றார்கள்.

அண்ணா, பெண்ணுக்கு அவள் பிறந்தவீட்டில் பங்கே இல்லை என்கின்றார்கள். நல்ல வேளையாக நீ வந்தாய்.

அண்ணா, நான் சொன்னது பொய்யா? நீ சொல், என் மகனை உன் வாரிசாய் ஆக்கினாய் அல்லவா? அதை சபையில் சொல்” என்றாள்.

அண்ணன் அந்தத் தங்கையினை கட்டித் தழுவி முகம் பார்த்தார், அவளிடம் ஒரு நகையுமில்லை, “என்ன பார்க்கின்றாய் அண்ணா, மூக்குத்தியினை கூட கழற்றி வாங்கிவிட்டார்கள்” எனச் சொல்லி தலைகுனிந்தாள்.

“அம்மான்” என அவனைக் கட்டி கொண்டான் மருமகன், அவனையும் அணைத்துக் கொண்டான் மாமன்.

“இப்படியும் இரக்கமில்லா கயவர்களா, இதென்ன இவன் காதில் நான் இட்ட வைரகடுக்கன் எங்கே” என அவனை தூக்கி கையில் வைத்து கேட்டான் மாமன்.

“அதையும் அவர்கள் பறித்துக் கொண்டார்கள்” என்றாள் தங்கை.

அவன் ஆத்திரமும் கோபமுகாக கத்தி சொன்னான் “அவையோரே, இவர்கள் மகா பாவிகள், எங்கள் வீட்டில் நான் அறியாதவாறு பதுங்கிய நாகங்கள்.

அவையோர்களே, இவள் என் தங்கை, கணவனை இழந்த இவளை என் பராமரிப்பில் வைத்திருந்தேன், எனக்கு வாரிசு இல்லை என்பதால் இவள் மகனையே எனக்கு வாரிசாக அறிவித்தேன்.

சில காரணங்களால் அவசரமாக நான் மதுரையினை விட்டு வெளியேறவேண்டி இருந்தது, அதற்குள் இந்தப் பாவிகள் என் சொத்துக்களை அபகரித்து என் தங்கையினையும் விரட்டிவிட்டார்கள்.

இது இவளுக்கு நான் கொடுத்த சொத்து, என் வாரிசாக அவள் மகனைத்தான் நான் ஏற்றுக்கொண்டேன். இதை இந்த அவை அறிய இப்போது சொல்கின்றேன், இவனே என் வாரிசு.

ஆன்றோர்களே, அவையோர்களே, இந்த அவை என் வாரிசு என் தங்கை மகன் என்பதை நானே சொன்னபின்பு இதை தீர்ப்பாக அறிவிக்கக் கோருகின்றேன்” என்றான்.

பங்காளிகள் விடவில்லை. அவர்களைப் பொறுத்தவரை அந்தத் தனபதி திரும்ப வந்திருக்க முடியாது, வந்திருந்தாலும் இவ்வளவு விரைவாக அவர்களுக்கு தெரியாமல் வரமுடியாது.

அதனால் வந்தவன் அவன் இல்லை, இது இவள் செய்த மோசடி நபர் என கொந்தளித்தார்கள்.

ஆனால், தனபதியோ சிரித்தான், “அவையோரே, நீங்கள் என்னோடு வாருங்கள், என் வீட்டிற்கு வாருங்கள் என் வியாபார நிலையம் வந்து பாருங்கள், என் தொழிலாளர்கள், என் தொழில், என் நிதி நிலைமை என எல்லாமும் பாருங்கள்” என அழைத்தான்.

அவையோரில் சிலர் உடன் வந்தார்கள், தனபதி இயல்பாக தன் வீட்டுக்குச் சென்றான், அவன் மனைவியினை அடையாளம் காட்டினான், அவன் தொழிலாளர் அத்தனை பேரையும் அறிவித்தான், யாருக்கும் தெரியாத தன் கருவூலத்தின் கணக்கினைச் சொன்னான், தன் கடன் தனக்கு வரவேண்டிய கடன் என ஒன்றுவிடாமல் சொல்லி, யாருடன் என்ன வியாபாரம், யாருக்கு எவ்வளவு கடைசியாக அனுப்பினான் என்பது வரை சொன்னான்.

அவனின் வேலையாட்களும் அவனே தனபதி என இயல்பாய் இருந்தார்கள், அவன் வீட்டு மாடும் கன்றும் நாயும் கூட அவனோடு நன்றாக ஓட்டிக்கொண்டன‌.

அவையோர் அதைக் கண்டு மீண்டும் அவையினைக் கூட்டி அந்தத் தங்கை மகனே தனபதியின் வாரிசு என அறிவித்தார்கள், சபை கலைந்தது.

“அண்ணா, நல்ல நேரம் அந்த சொக்கனே உங்களை இங்கு அனுப்பினான், எனக்கு மறுவாழ்வு தந்தீர்கள், என் பேச்சினை மன்னித்துவிடுங்கள்” என அவன் காலில் விழுந்தாள்.

அவன் ஓங்கி சிரித்தான். பின் அவளை வாழ்த்தினான். அப்படியே மறைந்தும் போனான்.

அவள் அரண்டாள், குழம்பினாள், “அண்ணா, அண்ணா” எனத் தேடினாள், அந்த பாலகனும் “அம்மான், அம்மான்” என ஓடித் தேடினான்.

அவன் வரவே இல்லை, மின்னல் போல் மறைந்தே போனான்.

கொஞ்சம் நிதானமானவள் நடந்த அற்புதத்தை மெல்ல உணர்ந்தாள். வந்தது அண்ணன் அல்ல, இது சிவனின் விளையாட்டு என்பது அவளுக்கு அந்த அசரீரி குரலுடன் நினைவுக்கு வந்தது.

ஓடிச் சென்று சொக்கநாதன் சந்நிதியில் கதறினாள், உருகினாள், தனக்காக பகவானே வந்து சாட்சி சொன்னதற்காக அவர் முன்னால் விழுந்து விழுந்து வணங்கினாள், சுற்றி வந்து வணங்கி கண்ணீரால் நன்றி சொன்னாள்.

அவையோரின் உத்தரவால் பங்காளிகள் விரட்டப்பட்டு தனபதியின் ஆஸ்தி அனைத்தும் அவள் கைக்கு வந்தது, அவள் சொக்கனுக்கு திருப்பணியும் அறப்பணியுமாக செய்து நிறைவாழ்வு வாழ்ந்து கயிலாயம் அடைந்தாள்.

இதுதான் மாமனாக வந்து சிவன் சாட்சி சொன்ன திருவிளையாடல்.

இந்தத் திருவிளையாடல் ஆழமான தத்துவத்தை சொல்கின்றது. முதலாவது, வாழ்வில் எல்லோருக்கும் எல்லாம் தரப்படாது என்பதையும் ஏதாவது ஒரு குறை எல்லோருக்கும் உண்டு, அது கர்மா என ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை தனபதி வாழ்வில் சொல்கின்றது.

அப்படியே எல்லாம் இருந்தும் ஒரு குறை இருக்கும். அதே நேரம் எதுவுமே இல்லாவிட்டால் அவர்களுக்கு ஈசன் துணைவருவார் என்பதையும் சொல்கின்றது.

அப்பெண் கணவன் இல்லை என்றாலும், அண்ணனும் குழந்தையுமாக ஈசனை வணங்கி வந்தாள், தனக்கோர் குறை விதவை எனும் குறை இருந்ததாக அவள் முறையிடவில்லை.

ஒருவகையில் தன் கர்மப்படி தனக்கு குறைவைத்த சிவன் இன்னொரு வகையில் தனக்கு சரியான வழியில் வாழ்வைத் தந்தான், காவலை பராமரிப்பை தந்தான் என நிறைவு கொண்டாள்.

அந்தக் காவலும் உடையும் நேரம், கடைசி நம்பிக்கையும் பொய்த்த நேரம் அவள் சிவனிடமே சரணடைந்தாள்.

தன்னிடம் சரணடைந்தவளை சிவனே காத்தார், அவளே அவளுக்காக அண்ணன் வடிவில் வந்து சாட்சி சொல்லி அவளை வாழவைத்தாள்.

ஆம். அந்த மதுரை சொக்கநாதர் சாதாரணம் அல்ல, உண்மையிலே பாதிக்கப்பட்டவர் யாராயினும் அவர் நீதி வழங்குவார், அவர்கள் வாழ வழிசெய்வார்.

அதுவும் அபலைகள், ஆதரவற்றப் பெண்கள் எனில் அவர் ஓடி வந்து உதவுவார். அப்படித்தான் இந்தப் பெண்ணுக்கும் உதவினார்.

இது என்றோ ஒரு ஆதரவற்றவளுக்கு அபலைக்கு சிவன் உதவினார் என்பதல்ல, இன்றும் பெண்கள் பக்கமுள்ள நியாயத்தை அவர் காத்துத் தருவார், பாதிக்கப்பட்ட பெண்கள் வாழ வழியற்ற பெண்கள், பெரும் சிக்கலில் இருக்கும் பெண்கள் மதுரையில் சொக்கன் சந்நிதியில் முறையிட்டால் நிச்சயம் அவர்கள் குறையினை ஆலவாயன் தீர்த்துத் தருவார், அவர்களை வாழவைப்பார்.

இங்கு கவனிக்க வேண்டிய விஷயம், பெண்களுக்கு சொத்துரிமை என்பது இன்று சட்டமானது அல்ல, பெண்களுக்கு பிறந்த வீட்டில் உரிமை உண்டு, புகுந்த வீடு சென்றாலும் பிறந்த வீட்டில் உரிமை உண்டு என்பது இப்போதைய சட்டம் அல்ல‌.

அது என்றோ எத்தனையோ காலங்களுக்கு முன் இந்துமதம் சொன்ன சட்டம், அதைச் சொன்னவர் சிவன், சொன்னதோடு மட்டுமல்லாமல் தானே சாட்சியாக வந்து நின்று நிரூபித்தார்.

உடன் பிறந்தவளுக்கு சொத்தில் பங்கு உண்டு என அன்றே சிவன் போதித்தார், தன் இடபாகத்தை பெண்ணுக்கு கொடுத்த அந்த சிவன், மங்கையர்க்கு பிறந்தவீட்டில் பங்கு உண்டு என்பதை உலகுக்கே சொன்னார்.

அப்படி சொன்ன காட்சிதான் இந்தத் திருவிளையாடல்.

ஒவ்வொரு பெண்ணுக்கும் ஓராயிரம் பிரச்சினை கொண்ட வாழ்விது, அப்பெண்கள் யாராக இருந்தாலும் ஆலவாயன் சந்நிதியில் முறையிட்டால் அந்த சிவனே வந்து அவர்கள் சிக்கலைத் தீர்ப்பார், இந்தப் பூமியில் வாழும் எல்லா வழிகளையும் தந்து கர்மம் தீர துணையிருப்பார். இது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் : 23 மேகங்களை மாடங்களாகி தடுத்து நின்ற படலம்.

அது அபிஷேக பாண்டியன் மதுரையினை ஆட்சி செய்து கொண்டிருந்த காலம், மிகச் சிறிய வயதில் அரியணை ஏற வந்தவனுக்கு தகப்பன் வழி மகுடம் இல்லா நிலையில் சிவனே மாணிக்க வியாபாரியாக வந்து வகை வகையான மாணிக்கங்களை காட்டி நவமணிகளை வகை பிரித்துக் காட்டி இன்னும் ஏகப்பட்ட இயந்திரங்களைக் கொட்டிக் கொடுத்து அவனைப் பதவி எற்க வைத்தாரோ அந்த அபிஷேக பாண்டியன் ஆட்சி செம்மையாக நடந்தது.

அந்த நாள் சித்திரை பௌர்ணமியாக இருந்தது, எல்லாப் பௌர்ணமியும் விசேஷம் என்றாலும் சித்திரை பௌர்ணமி கூடுதல் சிறப்பு என்பதால் அதிகாலையிலே வழிபாடுகளை ஆலயத்தில் துவக்கினான் அபிஷேக பாண்டியன்.

ஆனால், அதே நாள் தேவர்களுக்கும் முக்கியமானது, இந்திரன் தன் சாபம் தீர்ந்த தலம் என்பதாலும், அவன் வாகனம் ஐராவதம் மீண்டு வந்த தலம் என்பதாலும் அந்த ஆலயத்தின் மேல் பெரும் பயமும் மரியாதையும் வைத்திருந்தான்.

இதனால் அவன் அடிக்கடி விசேஷ நாட்களில் வந்து அங்கு வழிபடுதல் உண்டு.

அப்படி அன்றும் வழிபட வந்தவன் அபிஷேக பாண்டியன் தலைமையில் பெரும் வழிபாடு நடத்தல் கண்டு காத்திருந்தான். அபிஷேக பாண்டியன் பூஜை செய்துமுடிக்கும் அளவும் அவன் காத்திருக்க நேரிட்டது, பாண்டியன் வழிபாட்டை முடித்துச் சென்றபின்பே இந்திரன் சொக்கநாதருக்கு பூஜை செய்து வணங்கிவிட்டு தேவலோகம் சென்றான்.

அவன் வழிபாட்டை முடித்துவிட்டு சென்றானே தவிர முகம் வாடியிருந்தது, ஒருவித அவமானம் போல் அமர்ந்திருந்தான்.

அவனின் முகவாட்டத்தை கண்ட வருணன் மெல்ல என்னாயிற்று என வினவினான். இந்திரன் போகங்களை கொடுப்பவன் அந்த இன்பவாழ்வுக்கு அடிப்படை மழை என்பதால் வருணன் அவனுக்கு நெருக்கமான தேவனாய் இருந்தான்.

அன்று வருணன் அவைக்கு வரும் போது எதிரில் காமதேனுவும் அதன் கன்றும் எதிர்பட்டன, அதனால் ஏதோ நல்ல விஷயம் நடக்கும் என எதிர்பார்த்து வந்தவனுக்கு இந்திரனின் சோகம் வருத்தம் கொடுத்தது.

“தேவேந்திரனின் சோகத்துக்கு காரணம் என்ன?” என அவன் வினவியபோது மதுரையில் தனக்கு நடந்துவிட்ட தாமதத்தை சொன்னான் தேவேந்திரன்.

எப்போதுமே தேவர்களுக்கு ஒரு உயர்ந்த எண்ணம் உண்டு, அதாவது தேவர்கள் உயர்ந்தவர்கள் தேவலோகம் என்பது புண்ணியம் செய்தவர் உலகம், அங்கே இருப்போர்க்கு சக்தி அதிகம், ஆயுள் அதிகம் அவர்கள்தான் பூமி உள்பட பல கிரங்களின் வாழ்க்கைக்கு மூலம் என்பதால் தாங்கள் சக்திமிகுந்தவர்கள் மானிடர் தங்கள் தூசுக்கு சமம் எனும் ஏளனம் உண்டு.

கர்மம் கழிக்குமிடம் பூமி எனும் வகையில் மானுடர்கள் கர்மத்தால் தங்களுக்கு கட்டுப்பட்டவர்கள் எனும் இறுமாப்பு உண்டு.

இந்த மனநிலையில்தான் இந்திரனும் இருந்தான், ஒரு மானுடன் தன்னை காக்க வைத்துவிட்டு முன்னுரிமை பெற்று சிவனுக்கு பூஜை செய்வதா? நாமல்லவா பெரியவன் என்னை எப்படி தாமதிக்க வைக்கலாம் எனும் வருத்தம் உள்ளூர இருந்தது.

அதே கொதிப்புக்கு வருணனும் வந்தான்.

ஆனாலும், அவன் இந்திரன் மதுரைக்குச் சென்ற காரியம் அறிய முனைந்தான் “தேவேந்திரா, எங்குமில்லா சிறப்பு அந்த மதுரையில் இருக்கின்றது என ஏன் நீங்கள் சென்றீர்கள்? அங்கே மானுடர் முன் அவமானபட்டீர்கள்?” எனக் கேட்டான்.

“வருணனே, தலங்களில் சிறந்தது மதுரை ஆலயம்; அங்கிருக்கும் மூர்த்திபோல் எங்குமில்லை; அது அதி சிறந்தது; அங்குதான் என் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிற்று; என் யானையான ஐராவதமும் அங்குதான் சாபம் நீங்கி என்னிடம் திரும்பிற்று.

அங்கு செல்வோர் சாபம் தீரும், நான் பௌர்ணமி தோறும் அங்கு சென்று வணங்கிவிட்டு வருவேன், என் குறை தீர்ந்த தலத்தில் ஈஸ்வரனுக்கு நன்றி சொல்லவேண்டும் அல்லவா? என்னைப் போல் அங்கு பல தேவர்கள் நலம் பெற்றார்கள் , நவகிரகங்கள் அருள் பெற்றன‌.

அதனால் எல்லோரும் வணங்குதல் முறை, நானும் அப்படித்தான் சென்றேன்” என்றான்.

வருணனுக்கு அப்போது உடலில் ஒரு நோய் இருந்தது, குன்மம் எனும் வயிற்றுவலி இருந்தது, அவன் மனதுக்குள் ஒரு கேள்வி எழுந்தது.

“தேவேந்திரா, அப்படியானால் நானும் சென்று வணங்கினால் எனக்கும் நலம் கிடைக்குமா?” என்றான்.

நிச்சயமாக என்றான் தேவேந்திரன்.

“இன்று காலை என் எதிரில் காமதேனு கன்றோடு வந்த காரணம் விளங்கிற்று, இந்த நாள் நல்ல நாள்” எனச் சொல்லியபடி மதுரைக்கு வந்தான் வருணன்.

ஆனால், தேவேந்திரனை மதிக்காத மன்னனை, மக்களை அச்சுறுத்திப் பார்க்க நினைத்தான், தான் யார் என்பதை காட்டி அந்த மன்னனும் மக்களும் தன்னை பணிந்து மகா மரியாதையாக ஆலயம் அழைத்துச் செல்லவேண்டும், தேவந்திரன் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

இனி இந்த மானுடர் தேவர்கள் என்றாலே அஞ்சி ஒடுங்க வேண்டும், அப்படி ஒரு காரியத்தை செய்தாக வேண்டும்.

இவர்களை மிரட்டி உருட்டி அடக்கி வைத்து தன் சக்தியினை காட்டி கதறவைத்து சிவாலயம் செல்ல வேண்டும்.

கர்மம் கழிக்கும் அற்ப மானிடர்க்கு இவ்வளவு திமிரா, கர்மம் கழிக்கும் மானுடர் நடுவில் அவர்களுக்கு ஆறுதலும் பலமும் கொடுத்து உதவ சிவன் வந்து அமர்ந்துவிட்டால் அதற்காக தேவர்களை அவமதிப்பார்களா?

சிவன் எங்களை பெரிய இடத்தில் வைத்திருப்பவர், அவருக்கு நாங்களே நெருக்கமானவர்கள் அற்ப மானுடர்கள் எங்களை எப்படி தாமதிக்க வைக்கமுடியும்?

முதலில் இவர்களுக்கு நம் சக்தியினை காட்டிவிட்டு, அவர்கள் அஞ்சி ஒடுங்கி நிற்கும் போது சிவன் முன்னால் தான் யார் என்பதை இவர்கள் அறிய வேண்டும் எனச் சொல்லிகொண்டவன் தன் சக்தியினை காட்ட ஆரம்பித்தான்.

பெரும் துவேஷம் ஒன்றைச் செய்தான்.

வருணன் மழைக்கு அதிபதி அதவாது நீர் அவனின் கட்டுப்பாடு, மழை என்றல்ல நதி, நிலத்தடி நீர், கடல் என எல்லாமே அவன் கைகாட்டியபடிதான் நடக்கும் அவனுக்கான அதிகாரம் அது.

அவன் மதுரைவாழ் மக்களை மிரட்ட கடலை மதுரைக்கு அழைத்தான், அவன் கட்டளைக்கு கட்டுப்பட்ட கடலும் பொங்கி வந்து மதுரையினை சூழ்ந்து கொண்டது.

மக்கள் நம்பமுடியாமல் திகைத்தார்கள், ஊழி காலமோ என அரண்டே போனார்கள், ஊரை சுற்றி கடலும் அலையும் காணப்படும் போது ஒரு சிறிய தீவு போல் தாங்கள் சிக்கிக் கொண்டதை அறிந்து நடுங்கினார்கள்.

அதுவரை அவர்கள் காணாதது மட்டுமல்ல கனவிலும் நினைத்து பார்க்காத விஷயம், யார் எதிர்பார்க்க முடியும்?

மக்கள் மிகுந்த அச்சத்துடன் மன்னனை அணுகினார்கள், அபிஷேக பாண்டியன் சிவனுக்கு ஏதோ குறைவைத்துவிட்டோம், சிவனுக்கான மண் இது, சிவனின் கோபமே இப்படி ஊழிக்கால வெள்ளமாய் மதுரையினை சூழ்ந்துவிட்டது எனக் கருதி மக்களைத் திரட்டி சொக்கநாதர் சன்னதி முன் சென்று தெண்டனிட்டு வணங்கினான்.

“எம்பெருமானே, உம்மை நம்பி வாழும் மானிடர்கள் நாங்கள், எதன்பொருட்டு இப்படி கடல் வந்து மதுரையினை சூழ்ந்தது என்பதை நாங்கள் அறியோம், ஆனால் ஏதோ ஒரு காரியம் பொருட்டு நாங்கள் உம்மை கோபபடுத்தியிருக்கின்றோம்.

உமது கோபத்தின் வெளிப்பாட்டை எங்களால் தாங்கமுடியவில்லை, எம்பெருமானே நாங்கள் எந்த பாவம் செய்திருந்தாலும் அதை மன்னித்து, இந்தச் சாபத்தில் இருந்து எங்களை காப்பீராக” என மன்றாடினான்.

மானிடரான அவனுக்கும் மக்களுக்கும் நடப்பது வருணனின் நாடகம் என்பது தெரியவில்லை, அவர்களுக்கு எல்லாமே சிவன் என்பதால் சிவனிடமே முறையிட்டார்கள்.

சிவன் நடப்பதை அறிந்தவர் அல்லவா? தம் மக்கள் மேல் எந்த குற்றமுமில்லை எல்லாம் வருணனின் அகங்காரம் என அறிந்தவர் அல்லவா? அவர் தம் மக்களை காக்க சித்தம் கொண்டார்.

அவரின் ஜடாமுடியினை உதறினார், அதில் இருந்து நான்கு மேகங்களும் சென்று மதுரையினை சூழ்ந்த கடலை அப்படியே உறிஞ்சி எடுத்தன, நகரம் கடல் வற்றி முன்பு போல் ஆயிற்று.

இந்த அதிசயம் கண்டு மக்கள் ஆர்ப்பரித்தனர். மறுவாழ்வு பெற்றதால் பெரும் மகிழ்வு அடைந்தனர், தங்களை ஆச்சரியமான முறையில் காத்த சிவனுக்கு விழா எடுக்கத் தயாரானார்கள்.

காரணம் வழக்கமாக கடலில் இருந்துதான் மேகம் உருவாகும், மேகம் மழையினை பூமிக்கு கொடுக்கும், இங்கோ மேகம் நீரை பூமியில் இருந்து உறிஞ்சி எடுத்த அதிசயம் தலைகீழாக நடந்தது

அந்த மாபெரும் அற்புதத்தை அவர்கள் கொண்டாடத் தயாரானார்கள்.

அதே நேரம் தன் கண்முன்னே நான்கு மேகங்கள் வந்து கடல் நீரை உறிஞ்சியதை கண்டு அதிர்ந்தான் வருணன், அவனின் ஆத்திரம் அதிகமானது.

எப்படி இது சாத்தியம்? நான் அனுப்பிய கடலை உறிஞ்சும் அளவு என்ன சக்தி இங்கே உண்டு? சர்வ சக்திவாய்ந்த என்னை அவமானப்படுத்த இந்த மானிடரால் முடியுமா? எனக் கொக்கரித்தவன் தன் ஏழு மேகங்களையும் அழைத்தான்.

சமவர்த்தம், ஆவர்த்தம், புட்கலம், துங்காரம், துரோணம், காளமுகி, நீல வருணம் எனும் ஏழு மேகங்களையும் அழைத்து மதுரை மேல் ஏவினான்.

(நவீன விஞ்ஞானமும் மேகங்களை ஏழுவகைபடுத்துகின்றது, அதன் உயரம் மற்றும் ஈரப்நதம் பொறுத்து அவை ஏழு வகையாக அட்டவணடையிடப்படுகின்றது, இதனை அன்றே சொன்னமதம் இந்துமதம்)

அந்த ஏழு மேகங்களும் வானம் இடிந்து கொட்டியது போல் கொட்டிற்று, எங்கிருந்தெல்லாமோ பெரும் நீரை அள்ளி வந்து மேகங்கள் மதுரையில கொட்டின‌.

மக்கள் சிவனுக்கு நன்றி சொல்லி விழா எடுத்து துதிக்கத் தொடங்கும் போது பெருமழை கொட்டியதால் மறுபடியும் அஞ்சினார்கள், கொட்டிய கனமழையால் வைகையில் வெள்ளம் பெருகி ஊருக்குள் வந்தது, கால்நடைகள் நடுங்கின மதுரை முழுக்க வெள்ளமானது.

முன்பு தீவு போல் கடலால் சூழப்பட்ட மதுரை இப்போது எல்லா இடமும் வெள்ளமாக நிறைந்தது, மக்கள் பெரும்பாடு பட்டுப்போனார்கள். மன்னனிடம் முறையிட்டார்கள்.

அபிஷேக பாண்டியன் பெரும் துயரம் கொண்டான், அவனுக்கு ஆலவாயனை தவிர யாரைத் தெரியும், அதனால் மறுபடி அந்த வெள்ளத்தின் இடையில் ஆலவாயன் சந்நிதிக்குச் சென்றான்.

“எம்பெருமானே, அந்தக் கொடிய பெரும் கடலை மேகம் உறிஞ்சியது இந்தக் கனமழை கொட்டத்தானா? மறுபடியும் எங்களை வதைக்க என்ன காரணமோ?

என்ன காரணம் என்பதை நாங்கள் அறியோம், எதுவாக இருந்தாலும் எங்களைக் காத்தருள வேண்டும் எனக் கதறினான் அபிஷேக பாண்டியன்.

சிவன் அவர்களைக் காக்க திருவுளம் கொண்டார், தன் நான்கு மேகங்களையும் மீண்டும் அனுப்பினார் அவை மதுரையின் நான்கு மூலையிலும் தூணாய் நின்று மண்டபம் போல் எழும்பி மதுரையினைக் காத்தது.

நான்கு மாடங்களும் கூடி நின்ற அந்த மண்டபம் போன்ற காவலை ஏழு மேகங்களாலும் மீற முடியவில்லை, ஒரு சொட்டு மழை மதுரைக்குள் விழமுடியவில்லை புகவும் முடியவில்லை.

தன் சக்தி எல்லாம் காட்டிய ஏழு மேகங்களும் தோற்று ஓய்ந்து வருணன் முன் வந்து நின்றன‌.

வருணன் அதைக் கண்டு அதிர்ந்தான், இது சாதாரண இடம் அல்ல என்பதும் மாபெரும் சக்தி இங்கே காவலாய் நிற்பதையும் அறிந்தவன் உடனே அந்த ஆலயம் பணிந்தான்.

அவன் அந்த ஆலயத்தை நெருங்கும் போதே அவனின் வயிற்றுவலி குணமாயிற்று, அவன் சிவனின் கருணை குறித்து மனம் கசிந்து அழுதான், மிகுந்து அழுதான்.

அவன் பயபக்தியாய் பொற்றாமரை குளத்தில் நீராடி நீறு பூசி , ருத்திராட்சம் அணிந்து கடம்பமரம் அடியில் இருக்கும் நாதனை தரிசிக்கத் தயாரானான்.

அவன் கைதட்டியதும் கங்கை முதலான புண்ணிய நதிகள் குடம் குடமாய் தங்கள் நீரைக் கொடுத்தன‌.

காமதேனு எலுமிச்சை, நாரத்தை, தரமத்தை, குளஞ்சி, மாதுளை என ஐந்து கனிவகைகளையும், பால் தயிர் நெய் தேன் சர்க்கரை என ஐவகை கவ்வியங்களையும் கொடுத்துப் பணிந்தது.

அவற்றைக் கொண்டு சிவனை அபிஷேகம் செய்து பணிந்து அழுதான்.

அதுவரை கடலையும் மழையும் கொடுத்து மக்களை, ஆலயத்தை சோதித்த வருணன் அங்கே தன் கண்ணீரே மழையாக கொட்டி அது கடலாக ஆலவாயன் சந்நிதியினை சூழ்ந்து கடலாக நிற்கும் அளவு அழுதான்.

அவன் கண்ணீர் கண்டு கருணையே உருவான சிவன் அவன் முன் தோன்றினார்.

அவன் கதறி அழுது சொன்னான் “பரம்பொருளே, நான் அற்ப மானுடர்கள் தேவர்கள் சக்தி தெரியாதவர்கள் எனக் கருதி விளையாடிவிட்டேன். ஆனால் நீர் எப்போதும் வாசம் செய்யும் இந்தத் தலத்தில் நான் விளையாடியிருக்கக் கூடாது.

ஆனாலும், நீர் என்மேல் கோபம் கொள்ளாமல் நான் இந்த ஆலயத்தில் நுழையுமுன் என்னைக் குணமாக்கினீர், உம் கருணை யாருக்கு வரும்?

நான் எம்பெருமான் இத்தலத்தின் பெருமையினை சொல்லக் கேட்டு என் நோய் குணமாக வந்தேன், ஆனால் என் அகந்தை காரணமாக இப்படி நடந்துகொண்டேன், நீர் அதையும் மன்னித்து என்னைக் குணமாக்கினீர்” எனச் சிவனை புகழ்ந்து நின்றான்.

சிவன் அவனை மன்னித்து அருளி மறைந்தார், தன் நோய் நீங்கப் பெற்ற வருணன் மீண்டும் ஆலயத்தை சுற்றிவந்து வணங்கி தேவலோகம் சென்றான்.

இதுதான் மேகங்களை மாடங்களாகி தடுத்து நின்ற படலம்.

இந்த சம்பவத்தில் இருந்துதான் நான்கு பக்கமும் சிவன் அனுப்பிய‌ மேகங்கள் மாடங்களாக நின்று கூடி மதுரையினை காத்த சம்பவம்.

இதனாலேதான் மதுரைக்கு “நான் மாடக் கூடல்” எனப் பெயரே வந்தது.

இன்றும் ஒவ்வொரு பௌர்ணமியிலும் தேவர்கள் வந்து , இந்திரன் தலைமையில் எல்லாத் தேவர்களும் வந்து சிவனுக்கு பூஜை செய்கின்றார்கள், மானுடரால் காணமுடியா அக்காட்சி சூட்சுமமாக என்றும் உண்டு.

இந்தத் திருவிளையாடலால் சிவன் காட்டிய அற்புதங்கள், செய்திகள் நிறைய உண்டு.

முதலாவது தன்னை அண்டியோர்க்கு ஊழி வெள்ளம் போல் துன்பம் வந்தாலும், வானமே இடிந்தது போல் பெரும் துன்ப மழை இடி மின்னல் போல் அழுகை கண்ணீரோடு கொட்டினாலும் சிவன் காத்துத் தருவார்.

எந்தப் பெரும் பெரும் இன்னல் வந்தாலும் அவர் காலத்துத் தருவார்.

முக்கியமாக வருணன் போல நவக்கிரகங்கள் ஒருவனிடம் தன் சக்தி காட்ட வந்தாலும் அந்தப் பக்தன் சிவனை அண்டினால் அவர் காத்தருள்வார்.

தேவர்கள், நவக்கிரகங்களின் சக்திகளெல்லாம் இந்த ஆலயத்தில் பணிவோர் முன் பலிக்காது, சிவன் ஆதிசக்தி மூல பரம்சக்தி என்பதால் அவர்களின் பாதிப்பினை அடக்கித் தருவார்.

இந்தத் திருவிளையாடல் சொல்லும் சூட்சுமமான போதனை ஒன்று உண்டு.

வருணன் மழைக்கான தெய்வம் அதாவது நீருக்கு அவன் அதிபதி, அவன் தன் சக்தியே நீர் என்பதை நினைந்து ஆடிக்கொண்டிருந்தான்.

ஆனால், நிஜத்தில் அப்படி அல்ல, சிவனின் பஞ்சபூத வடிவங்களில் ஒன்றே நீர். வருணன் சிவனின் கட்டளைப்படி அவரின் வேலையினைத் செய்தவன்.

ஆனால், அவனோ நீர் பஞ்சபூத வடிவம் சிவனின் வடிவம் என்பதை மறந்து தானே நீருக்கு அதிபதி என ஆடினான்.

கங்கையினைத் தலையில் சூடிய அந்தப் பரமசிவன் தானே வருணனிடம் உண்டு என்பதையும், அவன் தன் பணியாளன் என்பதையும் காட்டி நின்றார்.

எல்லா சக்திக்கும் மூலம் சிவன் என்பதே இந்தத் திருவிளையாடலின் தத்துவம்.

அந்த ஆலயம் உண்மையான பக்தியினை மட்டும் பார்க்கின்றது, அங்கு யார் தேவர் யார் மானுடர் என்பதெல்லாம் விஷயம் அல்ல, யார் பெரியவர் யார் சிறியவர் என்பதெல்லாம் சிவனுக்கு அவசியமே அல்ல‌.

அங்கு பக்தி ஒன்றுதான் பேசும், அகந்தையினை சிவன் ஏற்பதில்லை அகந்தையற்ற மனமே அவருக்கு உகந்தது.

அதனால் இந்த ஆலயம் பணியவரும் போது தங்கள் அகந்தை, அகங்காரம், பெரும் பதவி, செல்வாக்கு என எல்லாம் ஓரமாக வைத்துவிட்டு வெறும் பக்தனாக உண்மையான சரணாகதியுடன் வந்து பணிந்தால் நிச்சயம் பெரும் பலனை சிவன் தருவார்.

ஆம். அந்த மதுரை ஆலயத்தை வழிபடசா செல்லும் போது மிகுந்த ஜாக்கிரதையாக ஆணவம் அகற்றி நின்று வழிபடுதல் வேண்டும், அப்போது பூரண பலன் கிடைக்கும்.

வருணன் தன்னில் இருப்பது தன் தனி சக்தி என்பதாக அவனே நினைந்து கொண்டான், பஞ்சபூதத்தின் சக்திகளில் ஒன்றாகச் சிவனே தன்னுள் இருந்து தனக்கு சக்தி கொடுக்கின்றார் தன் மூல பலம் அவர் என்பதை மறந்து ஆடினான்.

அந்தத் தவறை அங்கு வழிபடும் பக்தர்கள் செய்யக் கூடாது, மாறாக எல்லாமும் சிவன் கொடுத்தது, எல்லா அதிகாரமும் ,வாழ்வும், செல்வாக்கும் அவரிடம் இருந்து வந்தது, நாம் வெறும் கருவி என்பதை உணர்ந்து பணிதல் அவசியம்.

இப்படி மிக ஆழமாகப் போதிக்கும் இந்தத் திருவிளையாடல் மிக முக்கியமான ஒரு விஷயத்தையும் போதிக்கின்றது.

அந்த வருணனும் சிவனும் இப்படி மோதிகாகொண்டபோது மதுரை மக்களுக்கு எதுவுமே தெரியவில்லை, என்ன நடக்கின்றது ஏன் கடல் வந்தது? ஏன் பெருமழை கொட்டிற்று என்பதெல்லாம் தெரியவில்லை.

அவர்கள் பாதிக்கப்பட்டார்கள், அதனால் ஓடிச் சென்று சிவனிடம் அடைக்கலம் நாடினார்கள், விடுதலை பெற்றார்கள்.

கடைசிவரை என்ன நடந்தது? எதற்காக நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியவே இல்லை, ஆனால் காவல் பெற்றார்கள்.

அப்படி வாழ்வில் நடக்கும் பல பிரச்சினைகளின் மூலக் காரணம் நமக்குத் தெரியாது, தெரிந்து கொள்வதில் அவசியமில்லை, தெரிந்தாலும் நம்மால் அதைக் களைய முடியாது.

அதனால் என்ன சிக்கல் வாழ்வில் வந்தாலும் அதன் காரணம் நீங்கள் அறியமுடியாதது, அதன் மூலமும் காரணமும் உங்களுக்குப் புரியாதது.

அதனால், அந்நேரம் காரணங்களை ஆராயாமல் ஆலவாய்நாதனிடம் ப‌ணியுங்கள், முழுச்சரணாகதியோடு பணியுங்கள், அப்படி பணியும் நேரம் காரணமின்றி அல்லது உங்களுக்குப் புரியாத வகையில் வந்த பிரச்சினை தானாகவே மறையும்.

அங்கே முழு அர்ப்பணிப்போடு சிவனை தொழுதலே அவரிடம் சரணடைதல் ஒன்றே நீங்கள் செய்யவேண்டியது.

எல்லாமே சிவன், எல்லா இயக்கமும் சிவன், எல்லாமும் எல்லாமுமாக இயக்குவது சிவன், மானுடர் செய்யவேண்டியது அங்குப் அடிபணிந்து முழுச் சரணாகதியாகி நிற்பது ஒன்றே என உணர்ந்து அந்த ஆலவாயனிடம் சரணடைந்தால் வாழ்வில் கடல் போல் வரும் துன்பமும் மழைபோல் கொட்டும் பெரும் வேதனைகளும் மாறும், இல்லாமல் போகும்.

நான்கு மாடம் எழுப்பி அதிசயமாக அன்று மதுரை மக்களை காத்த சிவன் உங்களைச் சுற்றியும் காவலிட்டு காத்து வருவார். இது சத்தியம். சட்ட

திருவிளையாடல் புராணம் : 24 நிருபம் தந்த படலம் மற்றும் பலகையிட்ட படலம்.

வரகுண பாண்டியன் காலத்தில் ஹேமநாத பாகவதர் வந்து இசையில் தனக்குப் போட்டியாக பாண்டிய நாட்டிலே யார் உண்டு எனச் சவால்விட்டு, அவனை எதிர்க்க வரகுணபாண்டியன் பாணபத்திரரை அணுகி, பாணபத்திரர் சிவனை மன்றாடி, பின் சிவனே பாணபத்திரனின் மாணவன் போல் விறகுவெட்டியாக வந்து, தன் பாடலால் ஹேமநாதனை விரட்டி அடித்த திருவிளையாடல் முன்பு நடந்தது.

அதன் தொடர்ச்சித்தான் இந்த நிருபம் தந்த படலம்.

ஹேமநாத பாகவதரை சிவபெருமானே வந்து தோற்கடித்து விரட்டியபின் மன்னனுக்கு பாணபத்திரன் மேல் மெல்ல மெல்ல அசட்டை உண்டாயிற்று. சிவன் பாண்டியநாட்டுக்காக வந்தார் இதில் பாணபத்திரனுக்கு என்ன சிறப்பு என்பது போல் அவன் அவரை அதிகம் கண்டுகொள்ளவில்லை.

ஆனால், சிவன் வரவில்லை என்றால் அவையில் தன் நிலை பெரும் சிக்கலாகியிருக்கும் என உணர்ந்து, தன்னை சிவனே காத்ததாக மனமார நம்பிய பாணபத்திரர் ஆலவாயன் சன்னதியிலே பாடி அவருக்கே பணிசெய்து கிடந்தார்.

முழு மனதோடு, அர்ப்பணிப்போடு சிவனுக்கு அப்படிப் பணிசெய்தார். ஆனால், அவருக்கான பொருள் வரவு என எதுவுமில்லை, அவையில் பாடினால் தனம் வரும். ஆனால், அவரோ ஆலவாயன் சந்நிதியில் பாடினார்.

அவரை அரசனும் கண்டுகொள்ளவில்லை, யாரும் கண்டுகொள்ளவில்லை, இன்னும் சிலர் ஒதுங்கியே போனார்கள்.

இதனால் மிகுந்த வறுமையில் சிக்கினார் பாணபத்திரர், அப்போதும் அவர் சிவபூஜையினை நிறுத்தவில்லை, மிகுந்த அனுசரணையாக அதனைச் செய்து, சிவனையே பாடி வந்தார்.

ஆனால், வறுமை மிக மிக பெரிதாக வளர்ந்தது, சிவனிடம் தன்னிலை குறித்து அவர் ஒரு வார்த்தை சொல்லவில்லை, அதே நேரம் அது பெரும் மனக்குறையாக வளர்ந்தது.

ஈசன் இதை அனுமதிப்பாரா? அவர் பொன்னால் படியளக்க ஆரம்பித்தார், அனுதினமும் பாணபத்திரர் முன்னால் ஆலவாயன் சன்னதியில் பொன்னோ, நகையோ ஒன்று வந்துவிடும்.

முதல்முறை அப்படி வந்தபோது பாணபத்திரர் திகைத்துப் போனார், இது யாருடைய பொன்னோ? யாருடையதாக இருந்தாலும் கோவிலில் கிடைப்பது சிவனுக்கு எனக் கருதி அதனை ஆலயக் கருவூலத்தில் சேர்க்கச் சென்றார்.

அப்போது “பாணபத்திரா இது உமக்கு நாம் படியளப்பது” என அசரீரிக் கேட்டது. பகவானின் கருணையினை எண்ணி தன்மேல் ஈசன் கொண்ட அன்பை எண்ணி கலங்கி அதைப் பெற்றுக்கொண்ட பாணபத்திரர் தன் வறுமையினைச் சமாளித்து வாழ்ந்தார்.

இது அனுதினமும் நடந்தது, அவர் வறுமையின்றி வாழ்ந்தார். சிவன் கொடுத்த பொன் சிவனுக்கு என அவரின் செயலும், சிவனடியார் உபசரிப்பு, சிவனுக்கான பணிகள் என இருந்தது.

இப்படி அவருக்குப் படியளந்து வந்தார் சிவன், ஆனால் ஒருநாள் திடீரென படியளப்பது நின்றுவிட்டது. எப்படியும் சிவன் படியளப்பார் என முழுக்க நம்பியிருந்த பாணபத்திரர் ஆடிப்போனார்.

இன்று வரும், நாளை வரும், நிச்சயம் சிவன் கைவிடமாட்டார் என ஆலவாயன் சந்நிதியில் தேடியவர் அப்படி ஏதுமில்லை என்றதும் ஏமாற்றம் கொண்டார்.

ஆனால், ஒரு வார்த்தைக் கூட இது ஏன் நடந்தது என்றோ, முதலில் தந்துவிட்டு இப்போது கைவிட்டது ஏன் என்றோ அவர் ஒருவார்த்தை கேட்கவில்லை.

எது தந்தாலும் தராவிட்டால் நீ எம்பெருமான், நான் உன் தொண்டன் என உளமார நினைந்து வழக்கம்போல் பாடினார், வழிபட்டார். எந்த வித்தியாசமும் அவரிடம் இல்லை.

அதேநேரம் பொருள் இல்லாததால் வீட்டில் வறுமை மிகக் கொடியதாக வளர்ந்தது, அவர் எப்படியோ சமாளித்தாலும் நிலைமை வற்றிப் போன வைகைப் போலிருந்தது.

மறுநாள் உண்ண ஒன்றுமில்லை எனுமளவில் சிக்கல் வந்தபோது பாணபத்திரர் கலங்கிப்போனார். என்ன நடந்தது, நடக்கின்றது என்பதே அவருக்கு குழப்பமாக இருந்தது. சிவன் ஏன் இப்படிச் சோதிக்கின்றார் என மிக மிக கவலையுற்றவர் அப்படியே உறங்கிவிட்டார், அன்று அவர் உண்ணவில்லை, உண்ண எதுவுமில்லை.

அன்று அவர் கனவில் வந்த சிவன் சொன்னார், “என் அருமை பாணபத்திரனே, அனுதினமும் நாம் உனக்குப் பொருள் கொடுத்து வந்தோம், அது பாண்டிய மன்னன் கருவூலத்தின் பொன், உனக்குத் தரவேண்டியதை அவன் செய்யவில்லை என்பதால் நாமே செய்தோம்.

ஆனால், இப்போது அந்தக் கருவூலத்தில் நெருக்கடி உண்டாயிற்று, இதற்கும் மேல் குறைந்தால் அப்பாவி அதிகாரிகள் பாதிக்கப்படுவார்கள்.

அதனால் நான் உனக்கு மாற்று ஏற்பாடு செய்துள்ளேன்.

நான் உனக்கு ஒரு ஓலைத் தருவேன், அதை எடுத்துக்கொண்டு எம் அடியாரான சேரமன்னனைக் காணச் செல்வாய், அவன் சேரநாட்டு திருவஞ்சைக்களத்திலே இருப்பான், அவனிடம் இந்தக் கடிதத்தைக் காட்டினால் உனக்கு வேண்டியன செய்வான்” எனச் சொல்லி மறைந்தார், பாணபத்திரர் எழுந்துபார்த்தால் ஒரு ஓலை அவர் அருகே கிடந்தது, அதைப் படித்துப் பார்த்தார் பாணபத்திரர்.

“மதிமலி புரிசை மாடக் கூடற்
பதிமிசை நிலவு பால்நிற வரிச்சிற
கன்னம் பயில்பொழில் ஆல வாயில்
மன்னிய சிவன்யான் மொழிதரு மாற்றம்
பருவக் கொண்மூப் படியெனப் பாவலர்க்
குரிமையின் உரிமையின் உதவி ஒளிதிகழ்
குருமா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச்
செருமா உகைக்குஞ் சேரலன் காண்க
பண்பா லியாழ்பயில் பாண பத்திரன்
தன்போல் என்பால் அன்பன் தன்பால்
காண்பது கருதிப் போந்தனன்
மாண்பொருள் கொடுத்து வரவிடுப் பதுவே”

( பாடலின் பொருள் இதுதான்

“நான்மாடக்கூடல் எனும் மாடங்கள் நிறைந்ததும், சந்திரகுலப் பாண்டியர்களின் சின்னம் வாசலில் பொறிக்கப்பட்ட பெரிய மதிலை கொண்டதும், பால்போன்ற அழகிய அன்னங்கள் உலாவும் தடாகங்களைக் கொண்டதுமான திருஆலவாய் எனும் பதியில் எக்காலமும் வீற்றிருக்கும் சிவனாகிய நான் தெரிவிப்பது என்னவென்றால்,

கார்கால மேகத்தினைப் போல உன்னிடம் வரும் புலவர்க்கு மன உவகையோடு அவர்களுக்கு ஏற்றபடி பொருள்களை அளித்து அழகாக விளங்குகின்றவனும் நல்ல நிறமுடைய உயர்ந்த இரத்தினங்கள் ஒளிவீசுகின்ற விரிந்த கொற்றக் குடையின் கீழிருந்து யுத்தத்தில் யானையை நடத்துகின்றவனுமான சேர மன்னனே நீ இதனைப் பார்ப்பாயாக.

சிறந்த பண் அமைந்த யாழினை வாசிக்கும் பாணபத்திரன் என்னும் பெயருடையவன் உன்னைப் போல என்பால் பக்தியுடையவன். உன்னைப் பார்க்க எண்ணி வருகின்றான். அவனுக்கு வளமான செல்வத்தை கொடுத்து இங்கே வரும்படி அனுப்பவும்”)

என எழுதியிருந்தது. அதனைக் கண்ட பாணபத்திரர் சிலிர்த்துப் போனார், ஆனந்தத்தில் அழுதார், ஆலவாயன் சந்நிதிக்கு ஒடிச் சென்று அற்புதமாகப் பாடி பாடி நன்றி சொன்னார்.

காலமெல்லாம் சிவனைப் பாடிய தனக்கு சிவனே அழகானப் பாடலோடு சேரமன்னனுக்கு நிருபம் எனும் கடிதம் தந்ததை நினைத்து நினைத்து சிவனுக்கு நன்றி சொன்னார்.

ஆலவாயன் சந்நிதியின் திருநீற்றினை எடுத்துக் கொண்டு சேரமன்னனைக் காண அந்தக் கடிதத்தோடு சென்றார், மன்னனுக்கு கொடுக்க அவரிடம் வேறு எதுவுமில்லை.

திருவஞ்சைக்களத்தை தலைநகராகக் கொண்டு சேரநாட்டை ஆட்சி செய்த மன்னன் சேரமான் பெருமான், இவர்தான் நாயன்மார்களில் ஒருவர், கழறிற்றறிவார் நாயனார் என்பவர் இவர்தான்.

மிகச் சிறந்த சிவபக்தரான நாயனார் சேரர்குலம் என்பதால் சேரமான் பெருமான் என்றானார், இவருக்குப் பறவைகள், விலங்குகள் மொழி தெரியும் என்பதால் கழறிற்றறிவார் நாயனார் என்றானார்.

அனுதினமும் பூஜையில் சிவனின் சிலம்பொலி கேட்டபின்னர்தான் தன் பணியினை ஆரம்பிப்பார். எவ்வளவுக்கு சிவபக்தன் என்றால் வெண்ணிற உவர்மண்ணை ஒரு சலவைத் தொழிலாளி தன் தலையில் சுமந்து் செல்லும் போது அதில் கசிந்த மண் அவன் முகம் உடலெல்லாம் சிந்திய கோலத்தைக் கண்டு, இது சிவனடியார் கோலம் அல்லவா? எனத் தன் யானையில் இருந்து இறங்கி அவனை வணங்கும் அளவு அதி தீவிரமான பக்தி கொண்டவர்.

எல்லாமும் எங்கேயும் சிவனாகவே கண்ட பெரும் பக்தி அவருடையது.

(இவர் ஒரு நாள் சிவனின் சிலம்பொலி கேட்காமல் தவிக்க, பின் சிலம்பொலி தாமதமாக ஒலிக்க அப்போது ஏன் தாமதம் என இவர் கேட்க, எம் அடியார் திருவாரூர் சுந்தரர் என்னைப் பாடினான் அதைக் கேட்டுவிட்டு வரத் தாமதமாயிற்று என்றார் சிவன்.

சிவனையே கட்டிவைத்த அடியார் யார் எனச் சுந்தரரை காண திருவாரூர் வந்தார் இந்த நாயனார், பின் இருவரும் நண்பர்களாகி, இந்த நாயனாரை காண திருவஞ்சைக்களம் சென்ற சுந்தரர் அங்கே இருந்துதான் இந்திரனின் யானையில் கயிலாயம் ஏகினார்.

அவருடன் தன் பறக்கும் குதிரையில் இந்த சேரமான் கயிலாயம் அடைந்து அங்குப் பாடியதுதான் “திருக்கைலாய ஞான உலா”

அப்படிப்பட்ட மன்னனை காணச் சென்றார் பாணபத்திரர், இவர் சென்றது அவர் சுந்தரரை அறிந்திராத காலங்கள்.

திருவஞ்சைக்களத்தை அடைந்த பாணபத்திரர், மறுநாள் திருவஞ்சைக்களத்தின் சிவனான காளத்தீஸ்வரரை வணங்கிவிட்டு மன்னனை காணும்படியாக ஒரு தண்ணீர் பந்தலில் ஓய்வெடுத்தார்.

சல்லிக்காசு மடியில் இல்லை, மன்னனுக்கு திருநீறும் சிவன் கொடுத்த ஓலையுமே இருந்தது. அன்னசாலைகள் யாசகச் சாலைகள் எனச் சிவனால் அற்புதமாக நடத்தப்பட்டு அங்குக் கொண்டு சேர்க்கப்பட்டார்.

அதே நேரம் மன்னன் சேரமான் பெருமான் கனவில் தோன்றிய சிவன், “சேரமானே நாமே மதுரையில் வாழும் சித்தன். எமதுஅடியார் ஒருவருக்கு உதவி வேண்டி உம்மிடம் கடிதத்தோடு அனுப்பியுள்ளோம், அவனுக்கு இயன்ற உதவி செய்க” எனச் சொல்லி மறைந்தார்.

மன்னன் அதிகாலையிலே எழுந்தான், சிவனே தன்னிடம் வந்து சொன்ன அந்தப் பக்தன் யார்? எனக் காணத் துடித்தான், அவ்வளவுக்கு புண்ணியம் செய்த பக்தன் யார் என அரண்மனைக்கு ஓடினான்.

அங்கே பாண்டிய தேசத்தில் இருந்து யாரும் வரவில்லை எனப் பதில் வந்ததால் தன் வீரர்களுக்கு கட்டளையிட்டான், யாரேனும் பாண்டிய நாட்டில் இருந்து சிவனடியாராக வந்திருந்தால் உடனே தெரியப்படுத்தும்படிச் சொன்னான்.

வீரர்கள் நகரெங்கும் தேடி கடைசியில் தண்ணீர் பந்தலில் இருந்த பாணபத்திரனை அடையாளம் கண்டார்கள், உடனே மன்னனுக்குத் தெரியப் படுத்தினார்கள்.

மன்னன் தானே அவரைத் தேடி ஒடினான், நாடாளும் மன்னன் ஒருவன் தன்னைச் சந்திக்க வந்ததும் மிக அஞ்சி தலைமேல் கைவைத்து வணங்கினார் பாணபத்திரர்.

ஆனால், மன்னன் கண்ணீருடன் அவர் பாதம் பணிந்தான், சிவனே உமக்கு ஓலை கொடுத்தான் என்றால் எவ்வளவு பெரிய பாக்கியசாலி நீர் என அவர் பாதம் கட்டிக்கொண்டான்.

பாணபத்திரர் நடுநடுங்கிப்போனார், மன்னனுக்கு எப்படி இது தெரிந்தது? என அப்படியே அதிர்ந்து போனார்.

காரணம், இந்தக் கடிதம் சிவன் எழுதினார் என்பதை யார் நம்புவார்கள்? அரசக்கடிதம் என்றால் அரச முத்திரை இருக்கும், பெரிய தனவான்கள் என்றால் வியாபார லச்சினை இருக்கும், இந்தக் கடிதத்தில் என்ன இருக்கும்? யார் இதனை நம்புவார்கள் என மிகுந்த கலக்கம் கொண்டிருந்தார்.

அப்படிப்பட்டவர் மன்னனே தன்னை வந்து வணங்கி சிவன் ஓலை கொடுத்த சம்பவத்தை சொல்கின்றார் என்றால், அவரே சாட்சியாக வந்திருக்கின்றார் என்றால், நான் எப்படியான பாக்கியசாலி என எண்ணி எண்ணி பார்த்தார், அவரின் கண்களிலும் நீர் வந்தது.

மன்னன் அவர் கரத்தைப் பிடித்தான், இந்த கரத்திலா சிவன் ஓலை தந்தார் என அவர் கரங்களைத் தன் மேல் வைத்துப் பணிந்தான், பாணபத்திரர் மதுரையில் இருந்து கொண்டுவந்த திருநீற்றினை அவனுக்கு வழங்கினார், அதனைப் பெரும் பணிவோடு பெற்றுக்கொண்டான் மன்னன்.

மன்னர் மாபெரும் உணர்ச்சியில் இருந்தார், சிவனே தன் அடியாரை தன்னிடம் அனுப்பினார், அவ்வளவு பாக்கியசாலி இவர் என உருக்கமாக இருந்தார்.

அவர் கையில் இருந்த சிவன் எழுதிய ஓலையினைக் கண்களில் ஒற்றிக்கொண்டார், மண்டியிட்டுப் படித்து மகிழ்ந்தார்.

சிவனே எழுதியதா, எம்பெருமானே எமக்கு எழுதியதா என மகிழ்ந்து மருவி, கசிந்து அழுதார். அந்த ஓலையினை உற்றுப் பார்த்தார். ஒரு காளையின் லட்சினை இருந்ததைக் கண்டு மீண்டும் வானம் பார்த்து அழுதார்.

அதன்பின் அந்தப் பாணபத்திரன் கால்களைத் தானே கழுவினார்.

ஊர் அரண்டது, மன்னனின் அமைச்சர்கள், தளபதிகள் என எல்லோரும் அதிர்ந்து பார்த்தார்கள், ஆயிரம் சேவகர்கள் மன்னன் காலை கழுவத் தயாரான நேரம் மன்னர் அவர் காலை கழுவினார்.

எல்லோரும் வாயடைத்து காரணம் கேட்டபோது சொன்னார் “இது எம்மைத் தேடி சிவனால் அனுப்பப்பட்டவரின் கால்கள்” எனச் சொல்லி அந்தப் பாதபூஜையினை மனப்பூர்வமாகச் செய்தார்.

அதன்பின் மனனின் பட்டத்து யானை வந்தது, அம்பாரி முன் பொன்னால் ஆன ஒரு பீடம் இருந்தது. அந்தப் பீடத்தில் அந்த ஓலை வைக்கப்பட்டது.

மன்னரின் பட்டத்து யானையில் பாணபத்திரர் அமரவைக்கப்பட்டார், திருவஞ்சைக்களத்தின் நான்கு வீதிகளிலும் பவனியாகக் கொண்டு செல்லப்பட்டார், மன்னன் மக்களோடு நடந்துவந்தான்.

பட்டத்து யானையில் ஒருவர் அமர்கின்றார் என்றால் அவர் மன்னன் எனப் பொருள்.

அதாவது, அன்று அவர் மன்னன் என அறிவிக்கப்பட்டார், அந்த மரியாதையில் அவர் திருவஞ்சைக் களம் ஆலயத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே காளத்தீஸ்வரை கண்டு மனமார வணங்கினார்.

கண்களில் நீர் வழிய வணங்கினார், மன்னர் சில கருவிகளை கொடுத்து பாடச் சொன்னான், மதுரையில் பாடியது போல் பாடச் சொன்னான். அவரும் உருக்கமாகப் பாடினார்.

மன்னன் உள்பட எல்லோரும் உருக்கமாகக் கேட்டு மகிழ்ந்தார்கள்.

மன்னன் அவரை அரண்மனைக்கு அழைத்துச் சென்றான், தன் பூஜை அறையினைக் காட்டி மகிழ்ந்தான், சிவனே தன் அரண்மனைக்கு வந்தது போல் மகிழ்ந்தான்.

தன் கருவூலத்தை திறந்து காட்டி பாணபத்திரர்க்கு எவ்வளவு வேண்டுமோ அவ்வளவுக்கு அள்ளிச் செல்லச் சொன்னான், முழுவதும் அள்ளிச் செல்லச் சொன்னான், இன்னும் நாட்டின் எல்லாச் செல்வமும் சேர்த்து எடுத்துச் சொல்லி பணிந்தான்.

பாணபத்திரர் பேராசைப்படவில்லை, பெரிய பெரிய செல்வமெல்லாம் கேட்கவில்லை, தனக்கு எது தேவையோ அவ்வளவு கொஞ்சமாக எடுத்துக் கொண்டார்.

மன்னன் விடவில்லை, அள்ளி அள்ளி மூட்டையாகக் கட்டினான், அவரை சிலநாள் தங்கியிருக்கச் சொன்னான். அவரைத் தன் மாளிகையில் தங்க வைத்துக் கொண்டாடினான், அனுதினமும் பூஜையும் பாடலுமாக அவர் அரசனுக்கும் மேல் கொண்டாடப்பட்டார்.

சில நாட்கள் கழித்து பாணபத்திரர் மதுரை திரும்ப விரும்பினார், மன்னன் அவரை பிரிய மனமில்லாமல் தேசத்தின் எல்லை வரை வந்து அனுப்பினான், யானைகளில் பெரும் செல்வத்தை அவர் பின்னால் அனுப்பிவைத்தான்.

சிவன் எழுதிய ஓலையினை மட்டும் தன் செல்வத்தில் பெரும் செல்வமாக தங்கப்பேழையில் வைத்துப் பாதுகாத்தான்.

பெரும் செல்வத்தோடு மதுரைக்குத் திரும்பிய பின் பாணபத்திரர் புகழ் எங்கும் பரவியது. ஆனாலும், மன்னன் அவரைப் பெரிதும் கவனியாது இருந்தான்.

இது ஏதோ மோசடி என்பது போல் இருந்தான், தன்னை மீறி அயல் தேச மன்னனிடம் அவர் கையேந்தி நின்றது அவனுக்கு சிவன் செயலாகத் தெரியவில்லை, சந்தேகம் கொண்டு மனதோடு வைத்துக்கொண்டான்.

பாணபத்திரர் தன் பணியினை வழக்கம் போல் செய்தார், மதுரை ஆலயத்தில் தன் பாடல் பணியினைக் கொஞ்சமும் சிக்கலின்றி செய்தார். அவரைக் கண்டுகொள்ளாத மன்னனுக்கு தன் பக்தன் யார் எனக் காட்ட முடிவெடுத்தார் எம்பெருமான்.

அவர் வழக்கமாக பாட அதிகாலை செல்லும் போது பெரும் மழை திடீரென கொட்டிற்று , மிக மிக கடுமையான மழை அது, ஆனாலும் அந்த மழைக்கு கொஞ்சமும் கலங்காமல் நனைந்தபடிச் சென்றார் பாணபத்திரர்.

அதிகாலையில் கடும் குளிரை அனுப்பினார் சிவன்.

மழையில் நனைந்த உடல் கடும் குளிரைத் தாங்கமுடியாமல் விரைத்துப் போனது, விரலைக் கூட அசைக்க முடியாமல் தடுமாறினார்.

நடுங்கிய உடலோடு செயல்பட முடியாக் கைகளோடு நின்றாலும், மூச்சை உள்வாங்கி நிறுத்திப் பாட ஆரம்பித்தார், குளிர்ந்த தரை அவரை இன்னும் பாடாய்ப் படுத்திற்று.

தன் இயலாமையிலும் தன் சக்தியெல்லாம் திரட்டி அவர் பாடியபோது பகவானுக்கு கருணை உண்டாயிற்று.

அவர் முன் தன் தேவியோடு வந்தவர் “பாணபத்திரா இந்தப் பலகை மேல் நின்று பாடு” என அவருக்கு ஒரு தாமரைவடிவ பலகையினை மாணிக்கத்தால் இழைக்கப்பட்ட பலகையினை வழங்கினார்.

அதன் மேல் நின்று பாணபத்திரர் பாடினார், அவரின் குளிரும் நடுக்கமும் காணாமல் போனது, பாடலை இன்னும் இன்னும் உற்சாகமாகப் பாடினார்.

நடந்தது பெரும் அதிசயம் என்பதால் மன்னனே அவரை மாணிக்கப்பலகையோடு அவைக்கு வரச்சொன்னான், அவரை உலகம் அறிய பாராட்டி பெரும் பரிசுகளெல்லாம் வழங்கி கௌரவவித்தான்.

பாணபத்திரரும் அதன்பின் எந்த நெருக்கடியுமின்றி சிவனுக்கான பணியினை காலமெல்லாம் செய்து முடித்து கயிலாயம் அடைந்தார்.

இதுதான் பாணபத்திரனுக்கு சிவபெருமான் முடங்கல் எனும் நிருபம் தந்த படலம் மற்றும் பலகையிட்ட படலம்.

இங்கே ஆழகவனிக்க வேண்டியது அந்தப் பாணபத்திரன் சிவனிடம் தன் வறுமையினை வாய்விட்டு சொல்லவே இல்லை, கடினமான வறுமை வந்தாலும் சிவனை பழிக்கவுமில்லை, எதுவும் வேண்டவுமில்லை.

மாறாக, தன் சிவபணியினை மட்டும் செய்தார், அதைச் சரியாக செய்தார், சிவனே வந்து அவருக்கு சரியான வழியினைக் காட்டினார்.

சிவனே அவருக்குப் படியளந்தார், அவரைக் கைவிடவுமில்லை உரிய நேரம் அவருக்குப் பெரும் அங்கீகாரத்தை செய்தார்.

சிவனுக்கு செய்யவேண்டியதை செய்யுங்கள், உங்கள் நிலைமையினை அவர் நீங்கள் சொல்லாமலே புரிந்து கொள்வார், உங்களை அவர் மிக மிக அணுக்கமாக கண்காணிக்கின்றார்.

எக்காலமும் கைவிடாமல் உங்களைக் காத்து வருவார்.

இந்தத் திருவிளையாடல் சொல்லும் மிக முக்கியமான போதனை மனிதர் முன் மதிப்பு தேடாதீர்கள், மனிதர் முன் எதையுமே தேடாதீர்கள், சிவன் முன்னால் நின்று உங்கள் கடமையினை மட்டும் செய்யுங்கள்.

பாண்டிய மன்னன் முன் பாணபத்திரர் பெருமை தேடவில்லை, அங்கீகாரம் தேடவில்லை, மன்னன் முன் சென்று எதையும் எதிர்பார்க்கவில்லை.

மாறாக, யார் அவரைக் கொண்டாடுவார்களோ, யார் அவரைப் புரிந்து கொள்வார்களோ, யாருக்கு அவர் அருமை தெரியுமோ அவர்களிடம் கொண்டு சேர்த்தார்.

அந்த மன்னன் அவரை ஒரு அரசனாக்கி கொண்டாடினார், தன் கருவூலம் அனைத்தும் கொடுத்தார், பணிந்து நின்றார்.

அந்த அளவு சரியான ஒருவரிடம் தன் பக்தனை கொண்டு சேர்த்தார்.

இதுதான் முக்கிய போதனை. மனிதர் முன் உங்கள் பெருமையினைத் தேடாதீர்கள், அங்கீகாரத்தைத் தேடாதீர்கள். அதை உரிய நேரம் சிவனே தருவார், சரியான இடத்தில் அந்த அங்கீகாரத்தைத் தருவார்.

கடைசியில் பாண்டிய மன்னனின் கர்வத்தை அடக்கி அவனாலே பாணபத்திரரை கொண்டாடவைத்தார் சிவன்.

ஆம். யார் உங்களைப் புறக்கணிப்பார்களோ அவர்களே உங்களை ஏற்றுக்கொள்ளும்படி சிவன் பெரும் அற்புதம் செய்வார்.

சிவனை எக்காலமும் நம்பி நில்லுங்கள்; எதுவும் வேண்டாமல் எதையும் எதிர்பாராமல் உங்கள் பணியினை மட்டும் செய்யுங்கள்; எங்கு உங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கவேண்டுமோ, எங்கிருந்து உங்களுக்கு உதவி வேண்டுமோ, அந்தப் பொருத்தமான இடத்தை சிவனே காட்டி உங்களுக்கு அற்புதம் செய்வார். இது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் : 25பழி அஞ்சின படலம்.

இராஜசேகர பாண்டியன் சிவபதம் அடைந்தபின் குலோத்துங்கன் மன்னனாகப் பாண்டிய நாட்டை ஆண்டு வந்தான். அவனுக்கு நிறைய மனைவியரும், குமாரர்களும் இருந்தார்கள். அவர்களில் அனந்தகுணன் என்பவன் பெரும் சாஸ்திரமும், அறமும், தர்மமும் அறிந்தவனாக இருந்தான்.

அவனை அவையில் முன்னிருக்க வைத்து நல்ல ஆட்சியினை நடத்திக்கொண்டிருந்தான் குலோத்துங்கன். நீதி தவறாத மன்னன், பழியினைத் தொடாத மன்னன் என அவனுக்குப் பெரும் பெயர் இருந்தது.

மாபெரும் சிவபக்தனான அவன் அன்றாடம் ஆலவாயனை தொழுது வணங்கி பணியினைச் செய்வதை வழமையாகக் கொண்டிருந்தான். சிவனின் பிரதிநிதியாக மதுரையினை ஆண்டு அவன் சார்பாக தீர்ப்பு வழங்குவதே தன் கடமை என்பதையும் மிக முக்கியமாகக் கொண்டிருந்தான்.

அவனுக்கு சிவன் ஒரு சோதனை வைத்தார். எப்போதும் பழியில்லாத் தீர்ப்பு, உண்மையான தீர்ப்பு கொடுப்பவனை சரியாகச் சோதிப்பார் சிவன்.

அந்தக் காட்சிதான் இந்தத் திருவிளையாடல்.

அந்தக் குலோத்துங்கன் ஆட்சியில் மதுரை நோக்கி திருப்பத்தூரில் இருந்து வந்தான் ஒர் அந்தணன். தன் மனைவி மற்றும் கைக்குழந்தையோடு பயணமாக‌ வந்தவன் வரும் வழியில் ஒரு பெரிய மரத்தடியில் ஓய்வுக்காகத் தங்கினான்.

அவன் மதுரை வரும் வழியில் சில மாட்டுவண்டியோட்டிகளிடம் உதவி பெற்று வந்தவன், இந்தப் புதிய வழியில் சிக்கிக் கொண்டான்.

அவன் மனைவி மிகுந்த தாகத்தில் வாட அவளுக்கு நீர் தேடிச் சென்றான் அந்தணன். தொலைவில் பசுமையான காட்சி தென்பட்டதால் அங்கு நீர் கட்டாயம் இருக்கும் என எண்ணி தன் கைக்குடுவையினை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

அவன் வருமளவும் ஓய்வெடுக்க எண்ணிய அவன் மனைவி குழந்தையினை அருகில் கிடத்திவிட்டுப் படுத்திருந்தாள்.

அப்போதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது.

மரத்தின் நெருக்கமான கிளைகள் இடையே உச்சியில் ஒரு அம்பு சிக்கி இருந்தது. காற்று வீசும் போது அந்த அம்பு மெல்ல மெல்ல நழுவிக் கீழ்நோக்கி வந்தது.

மரக்குச்சியில் கூர்மையான இரும்பு முனை பொருத்தப்பட்ட அந்த அம்பு தலைகீழாக எளிதில் திரும்பியது. திரும்பிய அம்பு மிக வேகமாக அந்தப் பெண்ணின் வயிற்றில் சொருகியது.

அவள் கணவன் தொலைவே சென்றிருந்ததால் அவள் அழைத்து அலறியதை அவன் கேட்கவில்லை. அந்த அம்பின் வீரியத்தால் அது அடி வயிற்றில் துளைத்திருந்தது. அவள் அப்படியே இறந்து போனாள்.

அவளின் சத்தம் கேட்டு அருகில் இருந்த வேடன் ஒருவன் வந்து அவளைக் கண்டான். அவள் இறந்துவிட்டதையும், அவள் அருகில் ஒரு குழந்தை கிடப்பதையும் கண்டு செய்வதறியாது நின்றான்.

அந்நேரம் பார்த்து அந்தணன் நீர்குடுவையோடு வந்துவிட்டான்.

இங்கே மனைவி வயிற்றில் அம்பு, சுற்றி ரத்தம், அப்பக்கம் வேடன் எனக் கண்டவன் “என் மனைவியினைக் கொன்றுவிட்டாயே, பாவி” எனக் கத்தினான்.

வேடன் அதிர்ந்து சொன்னான், “ஐயா, நான் கொல்லவில்லை. இந்தப் பெண்ணின் சத்தம் கேட்டுத்தான் வந்தேன்” என்றான்.

“அடேய் பாதகா, அதேதான் நீ எங்கோ மறைவில் இருந்து இவள் மேல் அம்பு எய்திருக்கின்றாய், உன் கையில் வில், அவள் உடலில் அம்பு என்றால் யார் எய்திருக்க முடியும்?

உன்னை விடமாட்டேன், இது என்ன நாடு? இங்கே ஆள்பவன் எவன்? அவன் முன்னால் உன்னை நிறுத்துவேன் எனச் சத்தமிட்டான்.

வேடனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

அந்தணன் ஓலமிட்டு அழுதான். ஆர்ப்பரித்தான். மனைவி சடலத்தை மடியில் போட்டுக் கதறினான், தலையில் அடித்துக் கொண்டு அழுதான்.

வேடனுக்கு அது கண்டு பரிதாபம் வந்தது. ஆனால், அந்த அம்பினை அவன் எய்தவில்லை என்பதால் தன் நிலையினை விளக்கிச் சொல்ல வழியின்றி நின்றான்.

அவ்வழி வந்தோர் நிலைமையினைக் கண்டனர். வேடன் தான் அம்பினை எய்தவில்லை என மறுத்தான், அந்தணனோ இவனே சம்பவ இடத்தில் இருந்தவன், இவனின்றி யாராக இருக்க முடியும் என வாதிட்டான்.

வந்தவர்களும் குழம்பினார்கள்.

அந்தணன் சொன்னான், “நான் பாண்டிய நாட்டுக்கு அதிதி. அப்படி வந்தவன் இப்படி தவிக்கின்றேன் என்றால் யார் உங்கள் மன்னன்?

அவனே எனக்கு நீதிவழங்கட்டும், நான் சாமனியன் அல்ல, வேதம் அறிந்த தவசி, சாபமிட்டால் அது பலிக்கும். இப்போதே உங்கள் நாட்டுக்கு சாபமிட என்னால் முடியும். ஆனால்‍, ஒருவன் செய்த தவறுக்கு ஒரு நாடு அழிந்துவிடக் கூடாது எனப் பொறுக்கின்றேன்.

ஆனால், இவனை விடமுடியாது, இவன் என் மனைவியினைக் கொன்ற பாவி, செய்ததை செய்துவிட்டு இன்னும் ஒப்புக்கொள்ளாப் பெரும் பாவி, இவனுக்கு தண்டனை கொடுப்பதே என் கொதிப்பை அடக்கும் விஷயம்.

வாருங்கள் உங்கள் மன்னனிடம் செல்லலாம்” என ஒரு வண்டியில் மனைவி சடலத்தை அப்படியே அம்போடு கிடத்தி, ஒரு பக்கம் மகனை சுமந்து அரசவைக்குச் சென்றான். வேடனும் இதர மக்களும் உடன் வந்தார்கள்.

வழக்கு குலோத்துங்க பாண்டியன் முன்னால் ஆரம்பமாயிற்று.

அந்தணன் சொன்னான், “அரசே என் மனைவியினை மரத்தடியில் தங்கவைத்துவிட்டு நான் நீர் எடுக்கச் சென்றேன், வந்து பார்த்தால் என் மனைவி வயிற்றில் அம்பு பட்டு செத்துக்கிடக்கின்றாள், அருகில் இவன் நிற்கின்றான்.

இவனே கொலைகாரன், இவன் ஏதோ உள்நோக்கத்துடன் கொன்றிருக்கின்றான், இவனை நீங்கள் விடவே கூடாது, எனக்கு நீதி வேண்டும்” எனக் கதறினான்.

மன்னன் வேடனைக் கண்டான். அவனோ, “மன்னா, நான் அந்த அம்பை எய்தவே இல்லை, பெண்ணின் அலறல் சத்தம் கேட்டே ஓடிவந்தேன்” என்றான்.

சாட்சி யாருமில்லாத சம்பவம் என்பதால் சபை சலசலத்தது. பாண்டியனுக்கு என்ன செய்வது எனப் புரியவில்லை, மன்னன் தன் மகன் அந்தகுணனை நோக்கினான்.

அந்தகுணன் பெண்ணின் சடலத்தைக் கண்டான். அந்த அம்பு நேராக வயிற்றை தாக்கியிருந்தது. அப்படியானால் நேருக்கு நேராக நின்றுதான் எய்திருக்க வேண்டும், இவனோ தன் மனைவியினை படுக்கவைத்துவிட்டு சென்றதாகச் சொல்கின்றான்.

இன்னும் பெண்ணின் கழுத்தில் உடலில் நகைகள் அப்படியே கிடக்கின்றன, எதுவும் கொள்ளை போகவில்லை. ஆக, வேடனுக்கு உள்நோக்கம் எதுவுமில்லை.

அவன் உண்மையிலே அவளைக் கொன்றிருந்தால் அங்கு வர அவசியமில்லை. அதுவும் இந்த அந்தணனைக் கண்டவுடன் ஓடியிருக்கலாம். இப்படி அகப்பட அவசியமில்லை” எனப் பலவாறு சிந்தித்தான்.

ஆனால், அதற்காக வேடனை விடுதலை செய்யமுடியாது. அநீதியாக வேடுவனை விடுத்தான் பாண்டியன் எனும் பழிச் சொல்லை, தீரா அவச்சொல்லை ஏற்க அவன் தயாராக இல்லை.

இதனால் குழப்பம் அதிகமானது.

அந்தணனோ தன் துருப்புச் சீட்டை வீசினான், ” மன்னா, நான் வேதம் அறிந்த தவசி, நான் சபித்தால் உன் நாடு தாங்காது.

இதோ என் மனைவி பிணம், இதோ அவள் வயிற்றில் அம்பு, அவனிடம் வில். இன்னும் ஏன் தயக்கம்? இது தர்மமா? அறமா? சிவன் வாழும் ஊருக்குள் இந்த அநியாயம் சரியா? உன் நாடு வாழுமா?”

இவன் கொடியவன், அனுதினமும் உயிர்களைக் கொல்பவன், அப்படி இவனுக்கு கொலை என்பது எளிதானது, இரக்கமில்லாத் தொழில் இவனுடையது, அவனன்றி இதனை யார் செய்திருக்க முடியும்?” என ஆத்திரத்தில் பேசினான்.

மன்னன் வாய்திறந்தான்.

“அந்தணரே, எங்கள் நாட்டில் ஒரு சுமங்கலி இப்படி பலியானதற்கு நாங்கள் உங்களை விட வருந்துகின்றோம், முதலில் செய்யவேண்டியது அவளின் இறுதிகாரியம்.

அதைச் செய்துவிட்டு அதைத் தொடர்ந்த பரிகாரங்களைச் செய்துவிட்டு, சில நாளில் முடிவினை அறிவிக்கின்றேன். சடலத்தை வைத்துக் கொண்டே தீர்ப்பிடுவதும் வழக்காடுவதும் சரியல்ல” என்றான்.

அந்தணனும் ஒப்புக்கொண்டான். வேடன் சிறையில் அடைக்கப்பட்டான். அப்பெண்ணின் சடலம் தகனம் செய்யப்பட்டது, கைக்குழந்தையுடன் அந்தணனும் மதுரையில் அரச உத்தரவில் தங்கினான்.

மன்னனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை, அவன் தனியே வேடனைப் பிடித்து மிரட்டினான். வேடனோ தான் அப்பாவி எனக் கதறிக் காலில் விழுந்தான்.

தான் ஒரு பாவமும் அறியாதவன் என்றும், தனக்கும் குடும்பம் உண்டு, தான் இதைச் செய்யவில்லை, அவள் அலறல் கேட்டே அவளைக் காக்கச் சென்றேன், இப்படிச் சிக்கிவிட்டேன் எனச் சொன்னான்.

மன்னனுக்கு என்ன செய்வது எனத் தெரியவில்லை.

ஒரு பக்கம் நீதிகேட்கும் அந்தணன், அவனுக்குரிய நியாயத்தை கொடுக்காவிட்டால் பெரும் சாபம் நிச்சயம், இன்னொரு பக்கமோ வேடன் தான் அப்பாவி என அழுகின்றான்.

தான் அன்று எடுத்துச் சென்ற அம்புகள் இத்தனைதான், அத்தனையும் இதோ முன்னால் இருக்கின்றது, அந்த அம்பு எங்கிருந்து யார் தொடுத்தார்கள் எனத் தெரியாது எனக் கலங்குகின்றான்.

அப்படித் தவறுதலாக குறிவைக்க அவசியமுமில்லை, நான் அதைச் செய்யவில்லை என மறுதலிக்கின்றான், கழுத்தில் கத்தி வைத்தாலும் பழி ஏற்க மறுக்கின்றான்.

குற்றமில்லாதவனை தண்டித்தால் அதுவும் பாவம், பெரும்பாவம். அவன் சந்ததிக்கு செய்யும் மகா பாவம்.

குலோத்துங்க சோழன் குழம்பினான், அவன் மகன் அவனுக்கோர் ஆலோசனைச் சொன்னான்.

“தந்தையே இந்த வழக்கு விசித்திரமானது அல்ல. குழப்பமானது. அந்தணன் குற்றம்சாட்டுவது அவன் தரப்பில் சரியானது, அதே நேரம் வேடுவன் சொல்வதிலும் நியாயமிருக்கின்றது.

இங்கு நடந்தது என்ன என்பதை கண்டோரும் இல்லை, வேடனும் காணவில்லை, அந்தணனும் காணவில்லை.

நடந்ததை இறைவனே அறிவான். அதனால் இந்த வழக்கினை நாம் சிவனிடமே ஒப்படைத்துவிடுவோம், அவரே நீதிவழங்கட்டும்” என்றான்.

மன்னன் குலோத்துங்கன் அதை ஏற்று நேரே ஆலவாயன் சந்நிதி சென்றான், அங்கு பூஜித்துப் பணிந்து மன்றாடினான்.

“சிவபெருமானே, நாம் உம்முடைய பிரதிநிதியாக ஆள்பவன், இங்கு எல்லாமே உமது ஆட்சி. இந்த வழக்கின் தன்மை எனக்குப் பெரும் குழப்பம் தருகின்றது.

நான் ஒரு தீர்ப்பை சொல்லி நாளையே பழியான தீர்ப்பை சொன்னான் மன்னன் எனும் அவப்பெயர் எனக்கு வேண்டாம். எம்பெருமானே, நீரே முக்காலமும் அறிந்தவர், எல்லாமும் அறிந்தவர், அதனால் நீரே இந்த வழக்கில் தீர்ப்பு சொல்வீராக”

என் ஆட்சியில் களங்கம் ஏற்படாதவாறு எனக்கு அருள் செய், இது உன் ஆட்சி” என மன்றாடினான்.

எல்லாம் அறிந்த சிவன் அவனுக்கு அசரீரியாய் ஒலித்தார்.

“மன்னா இன்றிவு செட்டித் தெருவில் ஒரு திருமணம் நடக்கும், அங்கே நீ அந்தணனோடு போ , வழக்கில் விடை கிடைக்கும்” எனச் சொன்னார்.

மன்னன் மாறுவேடத்தில் அந்த அந்தணனோடு கிளம்பினான். அந்தணன் தன் பணியாளுடன் வந்திருக்கின்றான் என்பதால் திருமண வீட்டில் யாரும் சந்தேகிக்கவில்லை.

செட்டித் தெரு என்பது சாமனியம் அல்ல, பெரும் தனவான்கள் வாழுமிடம் என்பதால் செட்டிகள் திருமணம் அரச வீட்டு திருமணம் போல் நடக்கும், ஏகப்பட்ட அந்தணர்கள் வரும் இடம் என்பதால் இங்கு யாரும் சந்தேகிக்கவில்லை.

சிவன் சொன்னார் வந்துவிட்டோம், இனி என்ன நடந்தாலும் அவர்பாடு என அந்தணரை தன் பக்கம் அமர்த்தி அமர்ந்திருந்தான் மன்னன்.

“வழக்கு நடக்கும் நேரம் இங்கே ஏன் என்னை அழைத்து வந்தீர்? ஆனாலும் உம்மை நம்பி வந்தேன்” எனச் சொல்லி சலிப்போடு அமர்ந்திருந்தான் அந்தணன்.

மன்னனுக்கு உள்ளூர பயம் இருந்தாலும் சிவனை முழுமையாக நம்பி “சிவனே” எனச் சொல்லி அமர்ந்திருந்தான்.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

எமனின் தூதர்கள் இருவர் அங்கே தோன்றினார்கள், அவர்கள் இவர்கள் இருவரின் கண்களுக்கு மட்டும் தெரிந்தார்கள், வேறுயாரும் அவர்களைக் காணமுடியவில்லை.

மன்னன் கேட்டான்.

“அந்தணரே இரு தேவலோகத் தூதர்கள் இங்கே நிற்பது தெரிகின்றதா?

ஆமாம். கையில் கயிறுடன் இருவர் நிற்கின்றார்கள்.

ஆம். தெரிகின்றதல்லவா நல்லது.

அவர்கள் ஏதோ பேசுகின்றார்கள் மன்னா, கேட்போம்”

இருவரும் ஆச்சரியம் மின்னியபடி அவர்கள் பேசுவதைக் கேட்க காதுகளைத் தீட்டினார்கள்.

அந்த வானலோகத்தவரில் ஒருவன் சொன்னான், “இந்த மணமகனின் உயிரை நாம் எப்படி எடுக்கப் போகின்றோம், மற்ற இடம் என்றால் எதையாவது செய்து இவன் விதியினை முடிப்போம், இங்கே மணமேடை அல்லவா? ஆயுதமில்லாமல் நோயில்லாமல் எப்படி இவனைக் கொல்வது? ஆனால், இவன் விதி முடிந்துவிட்டது. உயிரை எடுத்துவா என எமன் அனுப்பிய நிலையில் நாம் என்ன செய்வது?”

இன்னொருவன் பதில் சொன்னான்.

“இதென்ன கேள்வி, அந்த மரத்தடியில் படுத்திருந்த அந்தணன் மனைவி விதி முடிந்தபோது எப்படி அவள் உயிரை எடுத்தோம்? நாகத்தை அனுப்பினோமா இல்லை மரத்தை சரித்தோமா?

மரத்தின் இலைகள் மேல் சிக்கியிருந்த அம்பை தட்டிவிட்டோம் அல்லவா? அப்படி இங்கும் எதையாவது செய்யலாம், இந்த வீட்டில் புதிதாய் கன்றை ஈன்ற பசு ஒன்று உள்ளது, அந்தப் பசுவினை கொண்டு ஏதும் செய்யலாம்.

அந்த அந்தணன் மனைவி கர்ம வினைப்படி அவளுக்கு அம்பு, இவனுக்கு பசு, இதெல்லாம் விதிக்கப்பட்டது” எனச் பேசிக் கொண்டார்கள்.

ஆக, தன் மனைவி விதி முடிந்துதான் அவள் சென்றிருக்கின்றாள், வேடன் கொல்லவில்லை என்பது அந்தணனுக்கு தெரிந்தது.

மன்னனும் பெரும் நிம்மதி பெருமூச்சுவிட்டான்.

தங்களுக்கான விடை கிடைத்ததும் இருவரும் எழவில்லை. மாறாக, என்ன நடக்கின்றது எனப் பார்க்க அமர்ந்திருந்தார்கள்.

கெட்டிமேள ஒலி பிரமாண்டமாக எழுந்தபோது அந்த ஆரவாரத்தில் பசு தன் கயிற்றை அறுத்துக் கொண்டு அலைபாய்ந்து கூட்டத்துக்குள் வந்தது, மன்னனும் அந்தணனும் நடுங்கிப் போனார்கள்.

வெறிபிடித்தது போல் அங்குமிங்கும் ஓடிய பசு தன் கொம்பால் மணமகனை குத்திக் கிளறி காலால் மிதித்துப் போட்டுவிட்டு ஓடியது. அவன் அங்கேயே மரித்தான்.

மணவீடு பிணவீடாகி போக எல்லோரும் கலைந்தார்கள். மன்னனும் அரண்மனைக்கு அந்தணனோடு வந்தான்.

அந்தணன் எதுவும் பேசவில்லை. எமலோக தூதர்களே சாட்சி சொன்னபின் அவன் என்ன செய்யமுடியும்?

மன்னன் சொன்னான், “சிவனே இங்குத் தீர்ப்பு சொல்லிவிட்டதால் நான் சொல்ல ஒன்றுமில்லை, எம் நாட்டில் நீர் வருந்துவதை எம்மால் காணமுடியாது.

நிறைய பொன்னும் பொருளும் தருகின்றோம், நீர் வேறு ஒரு பெண்ணை மணந்து மனமார வாழும்” எனச் சொல்லி அனுப்பினான்.

அந்தணனும் அதைப் பெற்றுக் கொண்டு தன் குழந்தையோடு தன் தேசம் திரும்பினான்.

மறுநாள் அவை கூடிற்று. அந்தணன் வரவில்லை என்பதால் வேடன் விடுவிக்கப்பட்டான். அவனும் ஆலவாய் நாதனை வழிபட்டு நன்றி சொல்லி தன் இடம் சென்றான்.

மன்னன் பெரும் பழியில் இருந்து தன்னை காத்த, அரசன் பழியினை தன் பழியாக எண்ணி தன்னை விடுவித்த சிவனை எண்ணி பெரும் நன்றி சொல்லி துதித்துக் கொண்டே இருந்தான்.

இதுதான் பழி அஞ்சின படலம். பாண்டியனுக்கு பழிவராமல் சிவனே காத்து நின்ற படலம்.

இந்தத் திருவிளையாடல் ஒவ்வொருவரின் வாழ்வின் கர்ம வினையினைச் சொல்கின்றது. கர்ம வினைக் காரணமாக, வல்விதி காரணமாக மானுடர் சிக்கிக்கொள்ளும் கொடும் நிலையினைச் சொல்கின்றது.

விதி பொல்லாதது. அது மிகத் தவறான இடங்களில் தன் சக்திபடி ஒருவனை சிக்கவைத்துவிடும்.

நீங்கள் சிக்கினீர்கள் என்றால், இல்லாத பெரும்பழிக்கு ஆளானீர்கள் என்றால், அஞ்சவேண்டாம். கதற வேண்டாம். ஆலவாயனை நினைந்து பணியுங்கள். உங்கள் கர்ம வினை தீர்ந்து பழி விலகும்.

எல்லாக் கர்மவினைப் பழியும் சிவன் அகற்றித் தருவார். அதுதான் இந்தத் திருவிளையாடல் சொல்லும் தத்துவம்.

அதே நேரம் யாரையும் அவசரத்தில் தீர்ப்பிடாதீர்கள், இதுதான் குற்றம் இவர்தான் குற்றவாளி என எந்த இடத்திலும் சொல்லாதீர்கள்.

நடந்தது, நடக்க இருப்பது, நடப்பது என எல்லாமும் அறிந்த சிவனிடம் சகலத்தையும் ஒப்படையுங்கள், மிக முக்கிய குழப்பங்களை அவனிடமே தெரிவியுங்கள்.

எங்கு உங்களுக்கு பழிவரும் என அஞ்சுகின்றீர்களோ, அல்லது காரணமில்லாமல் பழிசுமத்தப்பட்டுவிடுவோம் என அஞ்சுகின்றீர்களோ அப்போது ஆலவாய் நாதனை எண்ணுங்கள்.

எல்லாமும் கர்மவினைப்படி நடக்கும் வாழ்வு இது, அவரவர் வாழ்வு அவரவர் கர்மம் என்பதை உணர்ந்து யாரையும் பழிக்காமல் எதையும் பழிக்காமல் எல்லாவற்றையும் சிவனிடம் விட்டுவிடுங்கள்.

இந்த உலகில் நீங்கள் வெறும் பார்வையாளர் என்பதையும், யாருடைய கர்மாவினையும் நீங்கள் மாற்றமுடியாது என்பதையும் ஒருவன் செய்தவினை எப்படியும் அவனை சீண்டும் எனபதையும் நினைவில் கொள்ளுங்கள்.

அந்த அந்தணன் மனைவிக்கு அம்பும், செட்டிவீட்டு மணமகனுக்கு மாடும் அவரவர் கர்மவினை. அதைத் தடுக்க யாராலும் முடியவில்லை.

அப்படி யாரோ ஒருவரின் கர்மவினைக்கு நீங்கள் பொறுப்பல்ல என்பதையும், அதை காட்டி பழிவந்தால் இறைவனே அதைத் துடைப்பார் என்பதையும் நினைத்து நிம்மதி கொள்ளுங்கள்.

எந்தப் பெரும்பழி என்றாலும், எந்தப் பெரும் குழப்பம் என்றாலும், அந்த ஆலவாய் சிவன் நிம்மதி தருவார். மனசாந்தி தருவார்.

இங்கே மன்னன் அவரை அண்டி நீதி கேட்டான். அவனும் நிம்மதி பெற்றான். மனம் கொதித்த அந்தணனும் நிம்மதி பெற்றான்.

ஒருபாவமும் அறியா அந்த வேடுவனும் நிம்மதி பெற்றான்.

ஆம். பழியில் இருந்து தப்பிப்பது என்பது நிம்மதி. உண்மையினை அறிதல் என்பதும் நிம்மதி.

நீங்கள் எந்த நெருக்கடியில் இருந்தாலும், எந்தப் பெரும் பழியில் தேவையற்று சிக்கிக் கிடந்தாலும் ஆலவாயனை நாடுங்கள், பெரும் நிம்மதி கிடைக்கும்.

இங்கு மன்னனும் பழிக்கு அஞ்சினான், வேடனும் பழிக்கு அஞ்சினான், அவர்களுக்கு சிவன் விடுதலை அளித்தார். பழி விலக்கினார்.

அப்பெண் ஏன் இங்குவந்து அந்த மரத்தடியில் படுத்திருக்கவேண்டும் என்பதை செட்டி தெருவிலே அது அவள் கர்மா என ஏற்றும் கொண்டான் அந்தணன்.

இப்படி எல்லா உண்மையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் உங்களுக்கு வாய்க்கும்.

ஒவ்வொரு மனிதனும் ஆயிரமாயிரம் பழிகளை எதிர்கொள்ளும் வாழ்வு இது. அங்கே கர்மவினை பழிகள், அர்த்தமில்லாப் பழிகள் என ஏராளம் உண்டு.

அதில் சிக்கித் தவிப்போர், பெரும் பழிசுமப்போர், வம்பு வழக்கு என சிக்கிக் கிடப்போர், ஏன் வெளி சொல்லமுடியா நிலையில் மனதால் புழுங்கித்தவிப்போர் என யாராயினும் அந்த ஆலவாய் சிவனை அண்டுங்கள்.

அவர் உங்களுக்கு ஆச்சரியமான விடுதலையும், பெரும் நிம்மதியும் பழிநீக்கித் தருவார். இது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் : 26 பன்றிக்கு பால் கொடுத்த படலம்.

அப்போது மதுரையினை இராஜராஜ பாண்டியன் ஆண்டுக்கொண்டிருந்தான். ஆனால், இந்தத் திருவிளையாடலுக்கானத் தொடக்கம் அவன் காலத்துக்கு முன்பே நடந்திருந்தது.

மதுரை எனும் மகா தொன்மையான பூமியின் வரலாறு, மூல தெய்வங்களும் அவற்றைத் தேடிய அடியார்களும் அவர்கள் மூலமாக பரம்பொருள் செய்து போதித்த தத்துவ காட்சிகளுடன் பின்னிப் பிணைந்தது. அவை இரண்டும் பிரிக்க முடியாதது.

சிவன் தேர்ந்துகொண்ட பாண்டிய நாட்டின் ஒவ்வொரு அங்குல காலமும் அவரின் பரிபூரண அருளையும், அந்த அருளை தன் திருவிளையாடலில் காட்டி எல்லா மக்களுக்கும் காட்டிய காட்சிகளைச் சொல்பவை.

அவ்வாறு இந்தக் காட்சியானது தேவர்களின் குரு பிரகஸ்பதி தவமிருந்த காட்சியில் இருந்து தொடங்குகின்றது.

மதுரைக்கு மேற்கே உள்ள ஓரு வனத்தில் குரு பிரகஸ்பதி தவமிருந்ததால் அந்த இடம் “குரு இருந்த துறை” என்றாயிற்று.

இன்று அது குருவித்துறை எனத் திரிந்துவிட்டாலும், அங்கிருக்கும் குருவின் தலம், குருவுக்கான கோவில், அங்கே குரு பிரகஸ்பதி தவம் இருந்தார்கள் என்பதன் சாட்சியாக நிற்கின்றது.

அந்த இடத்தில் தான் தேவர்களின் குரு பிரகஸ்பதி கடும் தவம் இருந்தார். சிவனை நோக்கித் தவமிருந்தார்.

அதே நேர்ம் அப்பக்கம் 12 மகன்களுடன் ஒரு வேளாளன் வாழ்ந்து வந்தான், அவன் பெயர் சுகலன், அவன் மனைவி சுகலை.

இந்த சுகலனுக்கு குழந்தை பாக்கியமில்லை என்பதால் ஆலவாய் சிவனிடம் மன்றாடினான். தன் விளைபொருட்களுடன் சென்று வணங்குவான். இவ்வளவு நிலம் இவ்வளவு விளைச்சல் கொடுத்த நீ எனக்காக வாரிசினைத் தரமாட்டாயா? எனக்கு பின் இந்த நிலமெல்லாம் யாருக்கு? எனக் கலங்கி நிற்பான்.

இப்படி அங்கே சென்று அவன் விடாபிடியாக வணங்கியதன் பலனாக அவனுக்கு 12 ஆண் பிள்ளைகள் பிறந்தனர்.

மனிதனின் சுபாவம் வித்தியாசமானது. ஒரு விஷயம் கிடைக்கும் வரை அதற்காக ஏங்கி எந்தத் தியாகமும் செய்பவன், அது கையில் கிடைத்ததும் மாறிவிடுவான். கிடைத்தன் மேல் பற்றுக்கொண்டு அது வந்த வழியினை மறந்தே விடுவான்.

இந்தச் சுகலனும், சுகலையும் புத்திர பாசத்தில் மயங்கி சிவனை மெல்ல மறந்தனர். அதே நேரம் அவர்களின் அதிகமான புத்திர பாசம் பிள்ளைகள் செய்த முறைகெட்ட செயலை எல்லாம் கண்டிக்காமல் விட்டது.

பாசம் எப்போதும் பயங்கரமானது. அங்கே அர்த்தமற்று மயங்கிவிடும் பெற்றோரின் பிள்ளைகள் திசைமாறிவிடுவார்கள். மகாபாரத திருதராஷ்டிராரின் மகன்கள் பெரும் உதாரணம்.

பெற்றோரின் கண்டிப்பு இல்லாததால் 12 பேரும் எல்லா வம்புகளையும் வளர்த்தார்கள். 12 பேர் கூடி நிற்பதால் எதையும் செய்யலாம் எனும் இறுமாப்புடன் வளர்ந்தார்கள். அவர்களைக் கண்டு மக்கள் அச்சமடைய ஆரம்பித்தனர்.

இது இன்னும் இவர்களுக்கு உற்சாகமாகி அனைத்து துஷ்ட குணங்களையும் கொண்டவர்களாக மாறினார்கள்.

அதே நேரம் சுகலனும் சுகலையும் காலமாகிவிட இவர்களுக்கு இருந்த கொஞ்ச தடையும் நீங்கிற்று.

குடியானவர்களான இவர்கள் வேளாண் தொழிலை மறந்தார்கள். விளைவித்து எல்லா மக்களுக்கும் பசியாற்றும் கடமையினை, உழவு தொழிலால் எல்லா உயிர்க்கும் பசியாற்றும் பெரும் வம்ச கடமையினை முற்றிலும் மறந்தார்கள்.

வேளாண் தொழில் மானுடர்க்கு மட்டுமல்ல ஆடுமாடுகள், பறவைகள், பூச்சி புழுக்கள் என பல்லாயிரம் உயிர்க்கு உணவூட்டும் தொழில். அதை மறந்தவர்கள், எல்லா உயிர்க்கும் துன்பம் விளைவிக்கும் வேடுவர்களோடு கூடி வேட்டை தொழிலுக்குச் சென்று உயிர்களை வதைத்தார்கள்.

இந்த துஷ்டர்களால் காட்டிலும் நாட்டிலும் எல்லா உயிர்களும் படாதபாடுபட்டன. காட்டில் பெரும் வேட்டையினைச் செய்து வந்தனர். அர்த்தமற்ற வகையிலும் முறையற்ற வகையிலும் விலங்கு பறவைகளை கொன்று முழு கொடியவர்களாக மாறி இருந்தனர்.

அப்படி இவர்கள் கானகத்தில் சுற்றும் போது இந்த குருவிருந்த துறை பக்கம் அமர்ந்து தவம் செய்த பிரகஸ்பதியினைச் சீண்டினார்கள். தங்கள் புஜபலத்தின் முன்னால் ஒரு சாது நிற்கமுடியாது என நையாண்டி செய்து அவரைப் பரிகசித்தார்கள்.

“இதோ பார் ஒருவன் தவமிருக்கின்றானாம்” எனச் சூழ்ந்தவர்கள் அவர் தலைமுடியினை இழுத்தார்கள், தாடியினை இழுத்தார்கள்.

அவர் அசையவில்லை என்பதால் நகன்றார்கள். ஆனாலும், வன்மம் தீராமல் கல்லெறிந்தார்கள், பெரும் பரிகாசம் செய்தார்கள். இன்னும் பலவும் எறிந்து தொல்லை கொடுத்தார்கள்.

அவர் அப்போதும் அசையாமல் இருக்க அதை அவமானமாக உணர்ந்தார்கள். அதனால், அவர் தலைமுடியினை வெட்டி எடுக்க முனைந்தார்கள்.

முனிவர் அப்போது கண் திறந்தார். தன் தவவலிமையினால் இவர்கள் யார் என அறிந்து கொண்டவர் பெரும் சாபம் கொடுத்தார்.

“வேளாண் தொழிலை மறந்து உலகுக்குப் பசியாற்றாமல் வேடுவரோடு திரிந்து உயிர்களை கொல்லும் துஷ்டர்களே, என் தவத்துக்கு இடையூறு செய்ததால் இனி காட்டுப் பன்றியாக பிறக்கக் கடவீர்கள்” எனச் சபித்தார்.

அந்நேரம் அவர்கள் கையில் இருந்த ஆயுதங்கள் மறைந்தன. அவர்கள் வலு குறைந்தது. தேகம் உடனே மெலிந்தது. அந்த‌ பன்னிரெண்டு பேரும் அப்போது மிக‌ அஞ்சினார்கள். ஏதோ பெரிய மகானிடம் விளையாடிவிட்டோம் என உணர்ந்தவர்கள், அவர் காலடியில் பணிந்து மன்னிப்பு கோரினார்கள்.

“ஏதோ அந்நியர் என நினைத்து விளையாடிவிட்டோம், எங்களை மன்னித்து பழையபடி வலுவாக்குங்கள். சாபத்தை திரும்ப பெறுங்கள்” எனக் கெஞ்சினார்கள்.

முனிவர் மனமிரங்கி சொன்னார், “என் போன்ற தவசிகள் மனம் சிவனில் கலந்தது. அதனால், அவரேதான் இனி உங்களைக் காக்க வேண்டும்.

நீங்கள் பன்றிகளாக பிறக்கும் போது ஈசனே உங்களுக்குப் பாலூட்டுவார். அப்போது உங்கள் சாபம் நீங்கும்” எனச் சொல்லி அனுப்பினார்.

அப்படியே அவர்கள் 12 பேரும் அடுத்த பிறப்புக்கு ஏதுவாகப் பிறவி முடித்தார்கள். ஒவ்வொருவராக நோய், விலங்கு தாக்குதல், பாம்புக்கடி, சண்டை எனப் பல வகையில் முடிந்து போனார்கள்.

இது ஒருபுறம் இருக்க புலத்திய முனிவர் இன்னொரு இடத்தில் தவமிருந்து கொண்டிருந்தார். அப்போது விச்சாதனன் எனும் கந்தர்வன் அப்பக்கம் வந்தான், கந்தர்கள் இசைபாடுவதில் வல்லவர்கள்.

அவனுக்கு இவரைக் கண்டதும் ஒரு பரிகாசம் ஏற்பட்டது. என்ன மானுடன் இவர்? தவமிருந்து இறைவனை காண முயற்சிக்கின்றாரா? கந்தர்வர்களின் சக்தி அறியாதவர் போலிருக்கின்றது.

நாங்கள் பாடினால் ஈசனே வருவார், இதோ இப்போதே பாடி என் இசையால் ஈசனை வரவழைக்கின்றேன். அற்ப மானுடன் ஆண்டாண்டு காலம் செய்யும் தவத்தைவிட கந்தர்வனின் ஒரு நொடி இசை வல்லது எனக் காட்டுகின்றேன் எனச் சொல்லி யாழ் இசைக்கத் தொடங்ங்கினான்.

அவன் புலத்திய முனிவரை வம்புக்கு இழுத்து தன் திறமையினைக் காட்ட ஆணவத்துடன் பாடியபோது முனிவரின் தவம் கலைந்தது, அவர் ஆத்திரத்தில் சொன்னார்.

“நீ இதே பூமியில் அலங்கோலமாக கத்தும் பன்றியாகப் போ” எனச் சபித்தார். முனிவர் சக்திமிக்கவர் என்பதை அறிந்த கந்தர்வன் தலைகுனிந்து மன்னிப்பு கோரி கேட்டான்.

“என்னைச் சபித்துவிட்டீர்கள், இனி அது நடக்கும். அதே நேரம் நான் என் உலகம் செல்லும் சாபநிவர்த்தியும் சொல்லுங்கள்” எனக் கெஞ்சினான்.

புலத்திய முனிவர் மனமிரங்கி, “எந்த சிவனை வணங்க நீ ஆலவாய் நாதன் ஆலயம் வந்தாயோ, அதே சிவனின் பக்தன் ஒருவனால் உன் சாபம் நீங்கும். அவன் உன் பன்றிப் பிறவியினை முடித்து வைப்பான். அதன்பின் நீ உன் உலகம் செல்வாய்” என அவனுக்கு விமோசனம் சொன்னார்.

அந்த சாபப்படி அவன் குருவிருந்த துறை பக்கம் பெரும் பலமிக்க ஆண் பன்றியாகப் பிறந்தான். காட்டுப் பன்றிகளின் தலைமையாக அவன் வலிமை மாற்றிற்று. அவனின் வலிமை கண்டு பல பெண் பன்றிகள் மயங்கின, அவற்றில் ஒன்றோடு கூடினான். அவைகள் 12 பன்றிக்குட்டிகள் ஈன்றன‌.

இவை 12 குட்டிகளும் அந்த பிரகஸ்பதியின் சாபத்தால் பிறந்த 12 சகோதரர்கள்.

இவை பிறந்திருந்த நேரம் பாண்டிய நாட்டில் ஒரு சிக்கல் உருவாகியிருந்தது. அது காட்டு விலங்குகளின் பெரும் தொந்தரவுகள்.

காடு எவ்வளவுக்கு பலமோ அவ்வளவுக்குச் சோதனையுமானது. காடுகளை அண்மித்திருக்கும் விவசாய நிலங்களில் உணவுக்காகவும், நீருக்காகவும் வரும் காட்டு விலங்குகள் தொல்லை எப்போதும் அதிகம்.

காடுகளில் எப்போதும் எங்கும் நீர் கிடைக்காது. இதனால், அவை பல நேரம் நீர் தேடி வரும், சில விலங்குகள் உணவுத் தேடி வரும்.

அப்படி வரும் விலங்குகளில் காட்டுப்பன்றிகள் முக்கியமானவை.

இவை நிலத்தை கிளறி உண்பவை என்பதால் அவை வயலுக்குள் வந்துவிட்டால் உழுதுபோட்டது போல் ஆக்கிவிடும். கிழங்கு, வாழை பயிர்கள் என்றால் அவைகளுக்கு கொண்டாட்டம். அடியாழம் வரை அகழ்ந்தெடுத்துவிடும். சேதம் அதிகம்.

மற்ற விலங்குகளை விரட்டுதல் கொஞ்சம் எளிது. யானை நெருப்புக்கு அஞ்சும், இல்லை பழக்கிய யானைகளை நிறுத்தலாம். இதர விலங்குகள் விரட்டினால் ஓடும்.

ஆனால், இந்த காட்டுப்பன்றிகள் மோசமானவை, விரட்டினால் ஓடுவது போல் ஓடி சட்டென திரும்பி வரும். அதுவும் ஒரே நேரம் பல்லாயிரமாக திரண்டு ஒற்றுமையாக வரும்.

யானைக் கூட்டம் போல் அவைகளும் ஒரு தலைவனுக்கு கட்டுப்படும். இவை பலம் மிக்கவை. சிங்கங்களே இவற்றைக் கண்டு அஞ்சும். பலமான முன்கொம்பும், மிக ஆவேசமான தாக்குதலும் அவற்றின் பெரும் பலம்

இப்படியான காட்டுப்பன்றிகள் தொல்லையும், இதர விலங்குகள் தொல்லையும் அதிகமானதால் மக்கள் பாண்டிய மன்னனிடம் புகார் செய்தார்கள்.

எல்லா வகையிலும் மக்களை காக்க வேண்டியது அரசனின் பணி. ஆபத்தான வெளிதேச மன்னன் மட்டுமல்ல உள்நாட்டு விலங்குகளிடமிருந்தும் மக்களை அவர்கள் தொழிலை காக்க வேண்டியது அவன் பணி.

இதனால் மன்னன் தன் பரிவாரங்களோடு கானகம் சென்றான்.

அவன் வீரர்கள் முகாமிட்டு கொண்டார்கள். பெரும் ஆரவாரமாக டமாரத்தோடு விலங்குகளை சுற்றி வளைத்து கலைத்து ஒழிக்க ஆரம்பித்தார்கள்.

எல்லா விலங்குகளும் சிதறி ஓடின. அவற்றை ஈட்டி, அம்புகள், தீபந்தம் , தடி எனக் கொண்டு கொன்றுக் கொண்டிருந்தார்கள். மறைவிடத்தில் இருந்து எல்லா விலங்குகளும் அலறி அடித்து ஓடின‌.

அப்படி ஒரு பன்றி தன் தலைவனை தேடி வந்தது. பாண்டிய மன்னன் படையோடு வந்து எல்லோரையும் ஒழிப்பது பற்றி ஓலமிட்டது.

அதைக் கேட்டு தலைமை பன்றி கொதித்தது. உடனே மன்னனைக் கொல்ல கிளம்பிற்று.

அதை தடுத்தது 12 பன்றிக்குட்டிகளுக்கும் பால் கொடுத்துக் கொண்டிருந்த தாய்பன்றி. ஆனால், அந்த தலைவன் பன்றி மீறிச் சென்றது.

தாய்பன்றி கெஞ்சியது. “வந்திருப்பது மன்னன், அதுவும் பெரும் படையோடு வந்திருப்பான். இந்நேரம் நாம் எதிர்தாக்குதல் நடத்தினால் நமக்கே அழிவு, இந்த பச்சிளம் குட்டிகளோடு நாம் எங்கு செல்ல முடியும்” எனச் சொல்லிப் பார்த்தது.

ஆனால், தலைவன் பன்றி மறுத்தது. “இனத்துக்கு ஒரு ஆபத்து எனும் போது தலைவன் எப்படி ஓளியமுடியும், இந்த மானிடர்களை விரட்டி அடித்தால்தான் நம் இனம் வாழமுடியும்” எனச் சொல்லி உறுமிக் கொண்டு கிளம்பியது.

அந்த உறுமலைக் கேட்டு எல்லாப் பன்றிகளும் ஒன்றாயின. தன் கணவன் என்னாவானோ என அஞ்சிய மனைவி பன்றியும் குட்டிகளை விட்டுவிட்டு அவன் பின்னால் ஓடியது.

குழுவாக விலங்குகளின் பாஷைகள் அவைகளுக்குள் சரியான தொடர்பை ஏற்படுத்தும். அப்படி யானைக் கூட்டம், நரிக் கூட்டம், ஓநாய் கூட்டமெல்லாம் ஒரு ஒழுங்கான நடவடிக்கைக்கு பழக்கப்பட்டவை.

இந்தப் பன்றி கூட்டமும் அப்படி ஒரு கூட்டு நடவடிக்கைக்குள் எளிதாக வரும். அதனால், அவை சரியாகத் தலைவன் சொன்னபடி பாண்டிய படைகளை வளைத்தன‌.

அவை ஓடிச் சென்று குதிரைகளின் காலை தட்டிவிட்டன. நிலை குலைந்த குதிரைகளில் இருந்து வீரர்கள் வீழ்ந்தார்கள். அவர்களை தங்கள் முகக் கொம்பினால் முட்டிக் கிழித்தன பன்றிகள்.

வெகு மூர்க்கமாக அவைகள் தாக்குவதைக் கண்டு அரசன் வியூகத்தை மாற்றினான். அவைகள் மேல் முதலில் அம்பு தாக்குதல், அவை ரத்தம் சிந்தி பலவீனமான பின் அடித்துக் கொல்லுதல் என அடிக்க ஆரம்பித்தான்.

மன்னனுக்கு துணையாக வேடுவர்களும் வந்தார்கள்.

ஆங்காங்கே மரத்தில் ஏறியபடியும் இன்னும் சுற்றி வளைத்து தாக்கி, பள்ளங்களில் விழவைத்து தாக்கி, பன்றிகளை அம்பால் அடித்து, ஈட்டியால் எறிந்து ஒழித்துக் கொண்டிருந்தது பாண்டிய படை.

ஒரு கட்டத்தில் நிலைமை பாண்டிய மன்னனுக்குச் சாதகமானது.

உடலில் அம்புகள் தைத்திருந்தாலும் களத்தை நோட்டமிட்டபடியே போராடியது தலைவன் பன்றி, அது அரசனே அங்கு தலைவன் என்பதை கணித்துக் கொண்டது.

அதே நேரம் பன்றிகள் நிறைய கொல்லப்பட தாய்பன்றி தன் குட்டிகளை நினைத்து கவலை கொண்டபடி தலைவனிடம் சொன்னது.

“நம்மவர்கள் நிறையபேர் இறந்துவிட்டார்கள். பலர் படுகாயத்துடன் வீழ்கின்றார்கள். நாம் திரும்பிச் சென்றுவிடலாம், நம் குட்டிகள் நிலையினை எண்ணுங்கள்” எனக் கெஞ்சியது.

மூர்க்கமாக நின்றுகொண்டிருந்த ஆண்பன்றி சொன்னது, “இரு சிங்கங்க‌ள் ஒரு ஆற்றங்கரையில் நின்றால் கூட ஒரு காட்டுப்பன்றி அஞ்சாமல் சென்று நீர் குடிக்கும். ஆனால், ஒரு பன்றி நிற்குமிடத்தில் ஒரு சிங்கம் கூட வராது.

அப்படியான பலம் கொண்ட நாம் திரும்பிச் செல்வதா?” என உறுமி மறுத்து மன்னனைக் குறிவைத்தது.

மன்னன் மேல் அது ஆவேசமாகப் பாய்ந்தது. மன்னன் நிலை குலைந்தான் ஆனாலும் சுதாரித்தான். மிகச் சாதுர்யமாகச் சமாளித்தான். ஆனாலும், பன்றி தாக்குதல் உக்கிரமானது.

மன்னன் தளபதி சாருச்சரன் என்பவன் பன்றியின் மேல் அம்புகளும் ஈட்டியும் எறிய உத்தரவிட்டான். சேனை சுற்றி நின்று அடிக்க பன்றி நிலைகுலைந்தது, அதனை உலக்கையால் அடித்துக் கொன்றான் மன்னன்.

தன் கணவன் கொல்லப்பட்டதை கண்ட பெண்பன்றி ஆவேசமாக மன்னன் மேல் பாய்ந்தது. அதைக் கண்ட சாருச்சரன் உடனே முன்வந்து நின்றான். அவனைக் கொல்ல முயன்றது பெண் பன்றி.

சண்டை உக்கிரமானது. அவனைப் பெரிதாக காயப்படுத்தி கொல்லப் பார்த்தது. அதைக் கண்ட மன்னன் பெண் பன்றியினை உலக்கையால் அடித்துக் கொன்றான். எனினும், கடும் காயம்பட்ட சாருச்சரன் அங்கே உயிர்விட்டான்.

மன்னன் தன் வேட்டையினை முடித்தான்.

அந்த ஆண்பன்றி உடல் வீழ்ந்த இடம் மலைபோல் ஆனது. காந்தர்வன் உருமாறி தன் சாபம் தீர்ந்து சிவனை வணங்கிவிட்டு தன் உலகம் சென்றான்.

(இந்த இடம் பன்றிமலை என இன்றும் உண்டு.‌ திண்டுக்கல் பக்கம் அமர்ந்திருக்கும் அந்த பகுதியில் தவம் செய்தால் எளிதில் முக்தி நிலை வாய்க்கும்.

பன்றிமலை சுவாமிகள் எனும் பெரும் மகான் அங்கிருந்துதான் உருவானார். இன்னும் பலர் அப்படி ஞானம் பெற்றது கண்கூடு.)

இந்த 12 பன்றிக்குட்டிகளும் அனாதைகளாயின. தாயும், தகப்பனும் இன்னும் ஏகப்பட்ட பன்றிகளும் கொல்லப்பட்ட நிலையில் அவை பாலுக்கு அலைந்து அழுது நெஞ்சு வறண்டன‌.

ஈசன் எல்லா உயிர்க்கும் படியளப்பவர் அல்லவா? இந்த பன்றிக் குட்டிகளை கண்டு மனமிறங்கி தானே தாய்பன்றியாக உருமாறி வந்து அவைகளுக்குப் பாலூட்டினார்.

பன்றிகள் பரமன் முலை சுவைத்து பசியாறின. சிவனே பாலூட்டியதால் அவை சாபம் நீங்கி மானிட உருவாயின. ஆனால், முகம் மட்டும் பன்றி போல் இருந்தது.

ஞானப்பால் குடித்ததால் அவை பெரிய புத்திமான்களுமாயினர். பெரும் அறிவும் ஞானமும் கொண்டு காட்டில் அமர்ந்திருந்தனர்.

பகவானின் இந்தக் காரியம் பற்றி அன்னையே கேட்டாள், “கொடியதும் விலங்குகளில் இழிதானதுமான பன்றிக்குட்டிகளுக்கே பால் தரும் அளவு கருணை கொண்டவர் நீங்கள், இப்படியும் ஒரு கருணையா?” என்றாள்.

சிவபெருமான் சொன்னார், “தேவி, வேதங்களும் சாஸ்திரங்களும் சொன்னதை நீ மறந்தாயோ. நாம் எல்லா உயிர்க்கும் பொதுவானவர். எல்லா உயிரையும் ஒன்றாகவே கருதுகின்றோம். உயர்ந்த உயிர் தாழ்ந்த உயிர் என எமக்கு எதுவுமில்லை.

பசியால் வாடிய தாயில்லாப் பன்றிகுட்டிகளுக்கு பாலூட்டி அறிவும் தெளிவும் கொடுத்தோம். அவர்கள் இப்போது கல்விக் கேள்விகளில் சிறந்து நிற்கின்றார்கள். இனி நல்ல வழி காட்டுவோம்” என்றார்.

அப்படியே பாண்டிய மன்னன் கனவில் தோன்றி, “மன்னவ, பன்றி மலையில் கல்வி ஞானத்தில் அறிவிற் சிறந்த 12 பேர் உண்டு. அவர்களை உன் அவையில் சேர்த்தால் பெரும் பலம் உனக்குக் கிடைக்கும்” என்றார்.

மன்னனும் அவர்களைத் தேடிச் சென்று அழைத்து வந்து தன் அவையில் வைத்துக் கொண்டான். தங்கள் ஆழ்ந்த அறிவால் அவர்களும் மன்னனுக்குப் பெரும் ஆலோசகர்களாக இருந்தார்கள்.

தங்கள் பெரும் அறிவால் அரசனை எப்படி நடத்தவேண்டுமோ அப்படி நடத்தினார்கள். அவனை நெருங்கவுமில்லை, விலகவுமில்லை. ஆனால், துரோகிகள், வஞ்சகர்கள், சுயநலக்காரர்கள் நெருங்காதவாறு கவனித்துக் கொண்டார்கள். எல்லாம் நலமாயிற்று.

அவர்களால் பாண்டிய நாடு பெரும் அறிவும், புகழும், செல்வமும் அடைந்தது. அதன் புகழும் மன்னன் புகழும் எல்லா திக்கும் ஓங்கி ஒலித்தது.

இதுதான் பன்றிகுட்டிகளுக்கு சிவன் பாலூட்டிய திருவிளையாடல் மற்றும் அவர்களை மந்திரிகள் ஆக்கிய திருவிளையாடல்.

இந்தத் தத்துவம் ஆழமானது. பல போதனைகளைச் சொல்வது. முதலில் சிவன் முன்னால் எல்லா உயிர்களும் சமம், அந்த மகாசக்தி உயிர்களில் பாகுபாடு பார்ப்பதில்லை.

இழிந்தது, சிறந்தது எனும் பாகுபாடெல்லாம் அதற்கு இல்லை. எல்லாம் கடந்த ஞானத் தாய் நிலையில் இருப்பவர் சிவன். அவர் கருணைக்கும், அன்புக்கும் எல்லையே இல்லை.

எந்த எல்லைக்கும் செல்லும் மாபெரும் அன்பு அவருடையது.

அந்தச சுகலன் சிவனிடமே பிள்ளை வரம் வாங்கினான். பின், அவர்களைச சரியாக வளர்க்காமலும், சிவனை மறந்தும் போனான்.

ஆனால், சிவன் தான் கொடுத்த வரத்தை மறக்கவில்லை. சரியாக அவர்களை ஜென்மம் தாண்டியும் அழைத்து வந்து காத்துக் கொண்டார்.

ஆணவம் சிவனுக்கு ஆகாது. அதனாலே காந்தர்வனின் ஆணவத்தை அவரே அடக்கினார். அவனைப் புலத்தியரின் சாபம் ஆணவம் நீங்க வைத்தது.

மானிடரை விட தான் சக்திமிக்கவன், பெரியவன் என அவன் நினைந்து தன்னை பெரிதாக நினைந்ததே அவன் பெற்ற சாபத்துக்கு காரணம்.

அந்த ஆணவமே அவனை ‘உர் உர்’ எனும் உறுமும் பன்றியாக, காட்டின் கொடிய இழிந்த பிறப்பாக மாற்றி பின் சிவனருளால் சாபம் நீங்கிச் சென்றான்.

அந்த 12 பேரையும் குரு பிரகஸ்பதி சபித்தார் என்பது ஒரு காட்சி என்றாலும், வேளாண் தொழிலை மறந்து அவர்கள் வேட்டுவ வாழ்க்கை வந்தவர்கள் என்றாலும், அங்கே மாபெரும் மானிட தத்துவம் போதிக்கப்படுகின்றது.

எத்தனையோ உயிர்கள் வாழும் உலகில் மனிதனும் பன்றியுமே மண்ணை கிளறி வாழும்படி படைக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒப்புமை அப்படி.

அந்தப பன்றி நிலை என்பது அடிமட்ட நிலை, அவல நிலை. மானுடன் தன் அஜாக்கிரதையாலும், மாயையாலும் பன்றி நிலைக்கு செல்கின்றான், வீழ்கின்றான்.

ஆனாலும், சிவம் எனும் அந்த மகாசக்தி தேடிவந்து அவனைத் தன்னோடு சேர்க்கின்றது.

மானுடன் எங்கு விலகிச் சென்றாலும் அவன் தன்னை சேர்ந்தவன் எனும் வகையில் சிவம் தன்னோடு சேர்க்கின்றது.

எந்த இழிநிலையில் அவன் தன்னை மறந்து, தான் யாரெனத் தெரியாமல் மாயையில் வீழ்ந்துக் கிடந்தாலும் உரிய நேரம் சிவமே வந்து உங்களை ஆட்கொள்ளும் என்பது திருவிளையாடலின் பொருள்.

உலகில் இழிவான நிலை என யாருக்குமில்லை. ஆதரவற்ற நிலை என யாருக்கும் எக்காலமும் இல்லை. எவ்வளவு கீழான நிலையில் ஒருவன் இருந்தாலும், யாருமற்ற நிலையில் இருந்தாலும்,
எந்த அறியாமை இருளில் கிடந்தாலும், எதிர்காலம் தெரியா நிலையில் கிடந்தாலும் பரமன் அவனை கைவிடமாட்டார் என்பது இந்தக் காட்சியின் போதனை.

காட்டில் தனியாகக் கிடந்த 12 பன்றிக்குட்டிகளுக்கே தாயாகி வந்து காத்த அந்த தயாளன், இழிந்த பன்றிகளுக்கே ஞானப்பால் கொடுத்து பெரும் ஞானவான்களாக்கிய சிவன் உங்களைக் கைவிடமாட்டார்.

இழிந்த பன்றி நிலையில் இருந்து மன்னனுக்கு ஆலோசனைச் சொல்லும் நிலையான ஞானநிலைக்கு அவைகளை உயர்த்தினார் சிவம் என்பதும், காந்தர்வன் உடல் பன்றிமலையாக மாறி அவன் சாபவிமோசனம் பெற்றான் என்பதும் சாதாரணம் அல்ல‌.

சிவன் அருள் பெற்றால் எந்த இழிநிலையில் கிடப்பவனும் ஞானம் பெற்று முக்தி அடையலாம் என்பதும், எந்தக் கீழான பாவியும் பெரும் இடம் அடையலாம் எனபதும் சொல்லப்படும் தத்துவம்.

காந்தர்வன் பன்றிமலையாக மாறினான் என்பதும், பெரிய போராட்டம் போராடி அவன் பிறவி முடித்தான் என்பதும் எல்லாம் நன்மைக்கே என்பதை சொல்லும் தத்துவம்.

உங்கள் நிலை பன்றிக்குட்டி போல் இழிவானதாக கீழ்நிலையாக இருக்கட்டும், உலகமே வெறுக்கும் அவல நிலையாக இருக்கட்டும், உங்கள் வாழ்வு பெரும் போராட்டமாக வலியும் வேதனையும் மிக்கதாக இருக்கட்டும்.

ஆனால், சிவனை முழுமையாக நம்புங்கள். அவரைச் சரணடையுங்கள். ஆலவாய் நாதனிடம் முழுக்கச் சரணடையுங்கள். உங்களை அவர் தன்னோடு சேர்த்து உயர்த்துவார்.

உங்களை அவர் ஜென்ம ஜென்மமாக, தலைமுறை தலைமுறையாக காத்து வருவார். இப்பிறப்பில் உங்கள் விதிப்படி சில விஷயம் நடக்கவிலை என்றாலும், பின்னாளில் அடுத்தடுத்த பிறப்பில், அடுத்தடுத்த தலைமுறையில் உங்களை நிச்சயம் கைபிடித்து கரையேற்றி பெரும் வாழ்வுதந்து தன்னோடு சேர்த்துக் கொள்வார். இது சத்தியம். முக்கால சத்தியம்.

திருவிளையாடல் புராணம் 27 : மடுவில் மடிந்த‌ சோழன்.

அப்போது பாண்டிய நாட்டை சுந்தரேச பாதசேகரன் எனும் பாண்டிய மன்னன் ஆண்டுக்கொண்டிருந்தான். இவன் பிரசித்தியான இராஜேந்திர பாண்டியனின் வாரிசில் வந்தவன்.

இராஜேந்திர பாண்டியனுக்குப் பின் இராஜ ஈசன், இராஜ கம்பீரன், பாண்டி வங்கீச தீபன், புரந்தர ஜித்தன், பாண்டிய வங்கீச பாதகன் எனப் பலர் வந்தார்கள். அவ்வழியில் வங்கீச பாதகன் மகனாக வந்தவன் சுந்தரேச பாதசேகரன்.

இந்த மன்னன் பெரும் அறிவாளி, பராக்கிரமசாலி. அத்தனைக்கும் மேல் சிவபாத சேகரன் எனும் அளவு மிகத் தீவிரமான சிவபக்தன். அன்றாடம் காலை ஆலவாயன் சந்நிதிக்குச் சென்று பெரும் பூஜைகளைச் செய்யாமல் காலை உணவருந்தமாட்டான்.

பொற்றாமரைக் குளத்தில் நீராடி ஒரு அடியாராகச் சிவனை வணங்கிவிட்டு காரியங்களைத் தொடங்குவது அவன் வழமை.

மதுரையினை விட்டு வெளியே தங்கும் அவசியம் இருந்தால் தன்னோடு எடுத்துச் செல்லும் லிங்கத்துக்குப் பூஜை செய்து ஆலவாயனை நமஸ்கரிப்பான்.

பக்தி போலவே ஆட்சியிலும் சிறந்து விளங்கினான். இவனின் பெரும் ஆற்றல் எதிரிகளை ஒழித்து அடக்கியது.

ஒரு நாடு நாடாக இருக்க பாதுகாப்பாக இருக்க அக்கம்பக்கம் எதிரிகளை அடக்கி வைத்தல் அவசியம். இல்லையேல் கப்பம் எனக் கறந்து எடுப்பார்கள். நாட்டின் செல்வமெல்லாம் அந்நியருக்குப் கப்பம் எனச் சென்றுவிடும். மக்கள் படாதபாடுபடுவார்கள்.

பலமான தேசமாக இல்லாவிட்டால் எல்லா வகையிலும் அந்நியருக்கும், அவர்கள் நிபந்தனைக்கும் கட்டுப்பட்டு தேசம் பாழாகும். தேசம் பலவீனமாகும் என்றால் மக்களின் உழைப்பும், செல்வமும் அந்நியரிடம் பறிபோகும். நாட்டின் மக்கள் ஏழ்மையிலும் வறுமையிலும் உழலவேண்டும்.

அரசியலில் பாலபாடம் ஒரு அரசன் தன் மக்களையும் நாட்டையும் காக்க வலுவான நிலையில் இருந்து எதிரிகளை அடக்கி வைப்பது.

இந்தச் சுந்தரேச பாதசேகரன் அதில் கவனமாக இருந்தான். வலுவான படையுடன் எதிரிகள் அனைவரையும் அடக்கினான். அவனின் பலத்த சேனையின் முன்னால் சேர சோழ தேசங்களும், இதரக் குட்டி தேசங்களும் முழுக்கப் பணிந்தன‌.

எதிரிகளை முழுக்க ஒடுக்கியபின் மன்னன் சிந்தித்தான். காரணம், எதிரி பலமில்லா நிலையில் பெரிய சேனையினைப் பராமரிப்பது தேவையற்ற செயல்போல் அவனுக்குத் தோன்றிற்று.

சேனை என்றால் செலவு அதிகம். ஒவ்வொரு நாளும் சம்பளம், யானை குதிரை பராமரிப்புகள், அவற்றுக்கு மாற்றாக புதியனவற்றை வாங்குதல், பழக்குதல், கொல்லன் பட்டறை, வீரர்கள் பராமரிப்பு, தங்குமிடம், உணவு, ஆயுதம், உடை எனச் செலவு மிக மிக அதிகம்.

இதனால் சேனையின் அளவைக் குறைத்தான். அப்படி குறைக்கப்பட்டதால் மிஞ்சிய நிதியினைச் சிவாலங்களுக்குச் செலவிட்டான்.

நாடு முழுக்க ஏகப்பட்ட சிவாலயங்களை எழுப்பினான். மதுரை ஆலயத்தைப் பெரிதாக்கினான். எல்லா வகையிலும் அதனை மேம்படுத்தினான்.

அக்கம் பக்கம் தேசங்களில் இருந்துவரும் கப்பப்பணம் முதல் பல வகையான வருமானங்களில் பெரும் பகுதியினை சிவ தொண்டுக்கே செலவழித்தான். கோவில்கள், திருப்பணிகள், அடியார்கள் என அள்ளி அள்ளி கொடுத்தான்.

போர்கள் இல்லாத தேசம், எதிரிகள் தொந்தரவு இல்லாத் தேசம் நிச்சயம் பெருவாழ்வு வாழும். அப்படி அந்த நாட்டை அவன் வளமான நாடாக்கினான். எல்லாமே சிவனின் அருள் என நம்பி நின்றான், சிவனும் அவனுக்கு எப்போதும் அருள்புரிந்தே வந்தார்.

சேனையினைச் சுருக்கியதால் கிடைத்த பெரும் பணமெல்லாம் சிவனுக்கே சிவதொண்டுக்கே சென்றுகொண்டிருந்தது. மன்னன் மனம் முழுக்கச் சிவபணியே நிறைந்திருந்தது.

சுந்தரபாதசேகரன் போர்களிலும், இதர காரியங்களிலும் கவனமின்றி முழுக்கச் சிவபணியில் இருந்ததால் அவனின் எல்லா வகை காவல் படைகளும் சுருக்கப்பட்டன. உளவுத்துறை உள்பட‌.

இதனை முழுக்கப் பயன்படுத்தி சோழமன்னன் ஒருவன் தன் கோட்டைக்குள் பெரும் பலமாக வளர்ந்தான். அவனுக்கு எப்போதும் இருந்த சோழமன்னர்களின் அதே வன்மம் இருந்தது.

சோழருக்கும், பாண்டியருக்கும் இடையே இருந்த சர்ச்சை ஜென்ம ஜென்மானது. சோழர்க்கு எப்போதும் பாண்டிய நாட்டின் மலைவளம், தமிழ்ச்சங்கம் இன்னும் பிரசித்தியான முத்துவிளையும் கடற்கரைகள் என ஒரு கண் இருந்தது.

ஐவகை நிலமும், மலையும், அருவியும், செழிப்பும், வளமும், கலையும் கொண்டிருந்த பாண்டிய பூமி அவர்களின் கனவாகவே எப்போதும் இருந்தது.

காவேரி தவிர வேறு வளம் இல்லாத சோழர்கள் பாண்டிய தேசத்தை எப்போதும் கண்காணித்தபடியே இருப்பார்கள். பாண்டிய மன்னனும் சேனையும் பலவீனமாகத் தெரிந்தால் உடனே பாய்வார்கள்.

அப்படி அப்போதும் ஒரு சோழமன்னன் சிந்தித்தான், அவன் பெரும் வீரன், நுணுக்கமான அறிவாளி, எல்லாக் கலைகளையும் கற்றுத் தேர்ந்தவன்.

அவனுக்கு “ஆயிரம் பரிக்கு ஓர் சேவகன்” எனும் பெயரும் இருந்தது. அதன் அர்த்தம் ஆயிரம் குதிரைகளைக் கொண்ட படையினைத் தனி ஆளாக எதிர்ப்பவன் என்பது.

அப்படியான பாராக்கிரமசாலி பெரும் படையுடன் பாண்டிய தேசம் மேல் பாய்ந்தான். பாண்டிய தேச எல்லையில் நின்று கொண்டு வழக்கமான போர்க்கால சம்பிரதாயங்களை செய்தான்.

பாண்டிய தேச எல்லையில் சில தாக்குதலை செய்வதும், பாண்டிய மன்னனை முதலில் பேச அழைப்பது என அட்டகாசத்தை ஆரம்பித்தான்.

மன்னனின் இராஜதந்திரிகள் பேசச் சென்றார்கள். அவனோ போருக்கு வந்திருப்பதாகவும், முடிந்தால் பாண்டிய மன்னன் தன்னோடு மோதி வெல்லட்டும் எனச் சவால்விட்டான்.

பாண்டிய சேனையினை விட பல மடங்கு பலம் கொண்ட தன் சேனை மேலும், தன் பலத்தின் மேலும் அவன் கொண்டிருந்த நம்பிக்கை அப்படி பேச வைத்தது.

பாண்டிய தரப்பினர் பேசிப் பார்த்தனர். கப்பம் கட்டக் கூட இறங்கிவந்தனர். ஆனால், சோழனோ பாண்டிய தேசத்தை ஆக்கிரமிக்கும் திட்டத்தில் இருந்ததால் எதையுமே காதில் வாங்கவில்லை.

கடைசியில் போர் என முடிவாயிற்று.

சுந்தரேச பாண்டியன் அதிர்ந்து போனான். காரணம், பகை ஒழித்துவிட்டோம் இனி சிவபணியே பிரதானம் எனச் சிவபணி செய்துகொண்டிருந்தவன் எதிர்பாரா யுத்த நெருக்கடியால் நிலை கலங்கினான்.

காரணம், சோழனின் படை மிகப் பெரிதாக இருந்தது. பாண்டிய சேனையோ சிறியது. அதுவும், பெரும் பயிற்சி இல்லாதது. இனி படைதிரட்டி எல்லோருக்கும் பயிற்சி கொடுத்து, யானை குதிரையெல்லாம் பெருக்கி மோத அவகாசமில்லை.

தான் வசமாகச் சிக்கிவிட்டதையும், தன் நிலை அறிந்து சோழன் சுதாரித்ததையும் அறிந்த பாண்டியன் கலங்கினான். அவனின் ஒரே அடைக்கலமான ஆலவாயன் சந்நிதிக்கு ஓடினான்.

பெரிய கோபுரங்களைச் சிவனுக்குக் கட்டி, பெரும் விலை உயர்ந்த ஆபரணங்களைச் சூட்டி அழகுபார்த்த சிவனிடம் ஓடினான். மூச்சிரைக்க ஓடியவன் அப்படியே விழுந்தான்.

பின் கண்களில் நீர்பெருகச் சொன்னான், “எம்பெருமனே, நான் இந்நாட்டின் அரசன், இம்மக்களையும் இந்த ஆலயத்தையும் காக்கும் பொறுப்பு எனக்கேதான் உண்டு.

ஆனால், நான் அஜாக்கிரதையாக இருந்துவிட்டேன். பகையினை ஒழித்துவிட்டேன் என இறுமாந்திருந்தேன். இனி எனக்குப் பகைவன் இல்லை என நானாக நினைத்து சேனைகளைக் கலைத்துவிட்டேன். அது இன்று பெரும் ஆபத்தாய் கண்முன் நிற்கின்றது.

ஆனால், எம்பெருமானே சேனையினைக் கலைத்து சேமித்த பணத்தை நான் உனக்குத்தானே கொடுத்தேன். உன் பணிக்கும் இந்த ஆலயத்துக்கும்தானே கொடுத்தேன். அப்படியானால் நீர்தானே இப்போது எங்களைக் காக்கவேண்டும்.

பேரரசனுக்கு கப்பம் கட்டும் சிற்றரசனுக்கு ஆபத்து என்றால் அந்தப் பேரரசன் அல்லவா காக்கக் கடமைபட்டவன். இங்கே நான் உமக்குக் கப்பம் கட்டிய நிலையில் நீர்தானே எங்களைக் காக்கக் கடமைப்பட்டவர்?

எங்களுக்கு வேறு யார் உண்டு எம்பெருமானே” எனக் கலங்கினான். அப்போது ஒரு அசரீரி ஒலித்தது.

“பாண்டியா, கலங்காதே உன்னிடம் இருக்கும் படையோடு போருக்குச் செல், வெற்றி உனக்கே” என்றது.

பாண்டியன் அகமகிழ்ந்து, தண்டனிட்டு வீழ்ந்து சிவனுக்கு நன்றி சொல்லிவிட்டு அரண்மனைத் திரும்பினான். இருக்கும் படைகளுடன் போர்முரசுடனும், பெரும் சங்கொலியுடனும் கோட்டைக் கதவு திறக்கப்பட்டது.

முன்கள வீரர்களுடன் ஒரு வீரனும் சேர்ந்து கொண்டான், அவன் கண்கள் சிங்கத்தின் கண்கள் போல் சிவந்திருந்தன, அதில் போர் ஆவேசம் இருந்தது. கருநிறத்தவனான அவன் பெரும் மீசையினை முறுக்கிவிட்டிருந்தான், கழுத்தில் முத்து மாலை அணிந்திருந்தான்.

காதினில் யானைத் தந்தத்தால் செய்யப்பட்ட குண்டலம் இருந்தது. அப்படியே தந்தத்தினால் செய்யப்பட்ட வளை ஒன்று கையில் கிடந்தது .

பெரும் உயரமும் ஆஜானுபாகுவான தோற்றமும் கொண்டவன் தலைப்பாகை அணிந்திருந்தான். அதன் மேல் மயிலிறகும் இருந்தது.

பார்க்கவே மிக தேஜசான அதே நேரம் கம்பீரமாக இருந்த அவன் இடுப்பில் வாள் தொங்கிற்று. அவனோ கைகளில் ஈட்டி பிடித்திருந்தான்.

அவன் குதிரை முன்னணி தாக்குதல் பிரிவோடு சேர்ந்து கொண்டது. பாண்டிய மன்னன் வேப்பம்பூ மாலை சூடி பின்னால் பாதுகாப்பில் இருந்தான். நெற்றியில் ஆலவாயன் திருநீறு இருந்தது.

சோழ மன்னன் ஆத்திப்பூ சூடி வந்தான். பின்னால் நின்று அவன் படைகளுக்குக் கட்டளை பிறப்பித்தான்.

பாண்டிய சேனை சிறிய குளம்போல் நிற்க, சோழர் சேனை பெரிய கடல் போல் விரிந்திருந்தது.

ஆயினும், பருந்தை தாக்கும் கரிக்குருவி போல பாண்டிய சேனை துணிச்சலாக மோதிற்று. அதுவும் அந்தப் புதிய வீரனின் தாக்குதல் உக்கிரமாய் இருந்தது.

சோழப்படைகளின் முன் அரணை அவன் தகர்த்தான். வலுவான முன் அரண் தகர்ந்த நிலையில் பாண்டியப் படைகள் உள் சென்று தாக்கத் தொடங்கின‌.

தன் கட்டளைப்படி பாண்டியப் படைகளைச் சோழப்படைகள் சுற்றிவளைக்கும் என எதிர்பார்த்த சோழன் அதிர்ந்தான். அவனின் வலுவான முன் அரண் உடைக்கப்படும் என அவன் எதிர்பார்க்கவில்லை.

உடனே அவனே களத்துக்கு வந்து அந்த உடைப்பை சரி செய்ய முனைந்தான். அப்போதுதான் இந்த உடைப்பினைச் செய்தது அந்த வீரன் எனக் கண்டான்.

அவனைக் கண்டவன் குழம்பினான். காரணம், அவன் பாண்டிய தேசத்து சாயலில் இல்லை.

சோழன் கேட்டான். அவன் பதில் சொன்னான்,

“யார் நீ, இந்த மண்ணைச் சேர்ந்தவன் போல் தெரியவில்லையே? ஏதும் அடுத்த நாட்டுக்காரனா? கூட்டணிக்காக வந்தாயா?

எல்லா நாடும் என் நாடே, இங்கு பாண்டியனுக்கு உதவி தேவைப்பட்டது வந்தேன்.

பார்த்தால் பெரும் வீரனாகத் தெரிகின்றாய், எவ்வளவு பணம் வேண்டும் என்னிடம் வாங்கி இப்பக்கம் வந்துவிடு.

போர் செய்ய வந்தவனிடம் பேரம் பேசுவது வீரனுக்கு அவமானம்”

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த சோழன் சொன்னான்.

“என்ன சொன்னாய்? நான் ஆயிரம் குதிரைக்கோர் சேவகன் எனும் பெயர் பெற்றவன். ஆயிரம் குதிரைப்படை வீரர்களைத் தனியாகச் சமாளிப்பவன், என்னிடம் விளையாடாதே”

வீரன் நகைத்தபடி சொன்னான்.

“நீ ஆயிரம் குதிரை வீரர்களைத்தான் சமாளிப்பாய், நானோ எத்தனை ஆயிரம் வீரர்கள் என எண்ணிக்கை இல்லாத வீரர்களையும் சமாளிப்பேன்” எனச் சொல்லி “இதோ பார்” எனக காட்டினான்.

அவனின் தாக்குதலில் சோழப் படை திணறியது. இரு கைகளாலும் வேல் வீசினான். அது பலரைத் துளைத்தது. ஒரே வாள்வீச்சில் பலரைச் சரித்தான்.

பெரும் சூறாவளியாய் அவன் களத்தில் தாக்கினான். சோழர்படை நிலை குலைந்தது. பாண்டியப் படைகள் ஆச்சரியத்தில் மூழ்கின‌.

“இந்த வீரன் யார்? எனப் பாண்டியத் தளபதிகள் மெய்மறந்தனர். விஷயம் அறிந்து களத்துக்கு வந்த பாண்டிய மன்னன் ஆனந்த அதிர்ச்சி அடைந்தான்.

சோழப்படைகள் பின்வாங்க ஆரம்பித்தன. அந்த வீரன் அவர்களை விரட்டினான். அவர்கள் ஓட ஓட பாண்டியப்படைகள் விரட்டி அடிக்க விரைந்தன‌.

பாண்டிய மன்னன் சோழர்களை விடாமல் அடித்துப் பிடிக்க முன்னேறியபோது அந்த வீரன் மன்னனைக் கண்டான். மன்னன் மிக மகிழ்ந்து ஏதோ சொல்ல முயன்றபோது ஒரு புன்னகை சிந்தியவன் அப்படியே மறைந்து போனான்.

வந்தது சிவனே என அறிந்த பாண்டியன் “சிவனே.. என்னை காத்த தெய்வமே, ஆலவாயனே” என அங்கே வணங்கினான். அவன் சேனை சோழரைத் துரத்திச் சென்றதால் அவனும் சேனைகளுடன் விரைந்தான்.

ஆர்ப்பரிக்கும் குதிரைகள், பிளிறும் யானைகளுடன் பின் தொடரும் பாண்டியச் சேனையினைத் திரும்பிப் பார்த்தான் சோழன்.

அங்கே அந்த வீரனைக் காணவில்லை, நான்கு பக்கமும் அவனைச் சோழன் தேடினான். காணவில்லை.

அவன் இல்லாப் பாண்டிய படைகளுடன் மோத தன் சேனையினைத் திருப்பினான் சோழன், சண்டை மறுபடி வலுத்தது.

இம்முறை பாண்டியச்சேனைகள் திணறின. சோழன் புன்னகைத்தான். அவனின் படைகள் ஆவேசமாய் தாக்கத் தொடங்க பாண்டியர் நிலை மோசமாயிற்று.

பாண்டிய மன்னன் யுத்தம் புரிந்தபடியே சிவனைத் தேடினான். “முக்கிய கட்டத்தில் என்னைக் கைவிடாதேயும் சிவனே” எனக் கெஞ்சினான்.

முன்பு வந்த சிவன் இப்போது எங்கே எனக் குழம்பினான். எப்படியும் சிவன் வருவான் என நம்பி நின்றான்.

ஆனால், சிவன் வரவில்லை. பாண்டியச் சேனையினை அழிக்கத் தொடங்கியிருந்தது சோழர் பெரும்படை.

இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்பதால் பாண்டிய வீரர்களும் தளபதிகளும் மன்னனை அவசரசமாக மதுரைக்கோட்டைக்குள் கொண்டுவிட முயன்றார்கள்.

அவர்கள் சோழச்சேனையினை எதிர்க்கொண்டு மன்னனைத் திரும்பிப் போகச் சொன்னார்கள்.

மன்னன் வேகமாகத் திரும்பி ஓடும்போது, சோழ மன்னன் அவனைக் கண்டு பின்னால் துரத்தினான்.

பாண்டிய மன்னன் வேகமாகத் குதிரையினைத் செலுத்தியபோது வழியில் இருந்த மடு எனும் பெரிய பள்ளத்தினில் வீழ்ந்தான். சகதியில் மூழ்கி எழுந்தான். நீர் தேங்கிய அப்பள்ளம் ஒரு மணல் திட்டின் அடுத்து இருந்ததால் கவனித்தல் சிரமம்.

பாண்டியன் வீழ்ந்ததும் அவனை விரட்டி வந்த சோழனும் அதே மடுவில் வீழ்ந்தான். ஆனால், அவன் வீழ்ந்த இடத்தில் பெரிய கல் நீருக்குள் இருந்தது, அதில் தலைமோதிய சோழன் அங்கேயே இறந்தான்.

சோழன் இறந்தான் என்றதும் பாண்டியப் படைகள் உற்சாகம் அடைந்தன, பாண்டியக் கொடி உயர பிடிக்கப்பட்டது.

அது கண்டு சோழர்படை கலங்கித் திரும்பி ஓடத் தொடங்கின. அவற்றைப் பாண்டியப் படைகள் துவம்சம் செய்து விரட்டி ஒழித்தன‌.

இதனால் சோழநாடும் சுந்தரேச பாண்டியன் வசமாயிற்று. நாட்டின் வருமானம் இன்னும் பன்மடங்கு பெருகிற்று.

ஆபத்து நீங்கிய பாண்டிய மன்னன் இந்த வெற்றி ஆலவாய் சிவனால் வந்தது என்பதை உணர்ந்து ஆலயத் திருப்பணிகளை இன்னும் இன்னும் நிரம்பச் செய்தான். சோழநாட்டிலும் அவனின் திருப்பணிகள் பெருகின‌.

ஏகப்பட்ட ஆலயமும், சிவபணியும், சிவனடியார் பணியும் செய்த பாண்டியன், தன் முதிர்ந்தவயதில் அடியார் கோலத்தில் சிவபாதம் அடைந்தான்.

இதுதான் மடுவில் மடிந்த‌ சோழன் திருவிளையாடல்.

இந்தத் திருவிளையாடல் ஆழமான தத்துவத்தை போதிக்கின்றது. வாழ்வில் ஒவ்வொருவரும் செய்யவேண்டிய மகா முக்கிய கடமையினைப் போதிக்கின்றது.

சூரியனை நம்பி சுற்றும் பூமி போல, மரத்தினை நம்பி கூடுகட்டி வாழும் பறவை போல, இறைவனை முழுக்க நம்பியிருக்க வேண்டிய வாழ்வு மானுடன் வாழ்வு.

அங்கே சிவன் மேல் முழு நம்பிக்கை கொண்டு அவரை முழுக்கப் பற்றி அவருக்கான காரியங்களைச் செய்தால், சிவபணியினை நாம் செய்தால் நம் காவலை வாழ்வை இறைவன் பார்த்துக்கொள்வார், எக்காரணம் கொண்டும் கைவிடமாட்டார்.

இங்கே சுந்தரேச பாண்டியன் தன் சேனைக்கான செலவைக் குறைத்து சிவபணி செய்தார். மனமார முழு மனதோடு செய்தார். ஒரு மன்னனாக அவர் சேனையினைத்தான் பலப்படுத்தவேண்டும்.

ஆனால், சிவனே பேரரசன் எல்லாம் அவன் பார்த்துக்கொள்வான் எனத் தன் சேனைக்குச் செய்யவேண்டிய கடமையினை அவர் சிவனுக்கே செய்தார்.

சோழனோ தன் பலத்தை தன் சேனையினை நம்பினான். தன்னை மட்டும் நம்பி போர் தொடுத்தான்.

சிவன் உரிய நேரம் தன்னை நம்பிய பக்தனை தானே வந்து காத்தார். தன்னை நம்பியவனை அவர் கைவிடவில்லை.

ஆனால், சோதித்தார். தன் ஆலயத்தில் அசரீரியாக வாக்கு கொடுத்தாலும், தானே வந்து போரிட்டு தைரியம் கொடுத்தாலும் கடைசி வரை சோதித்தார்.

அங்கே ஒரு இடத்திலும் பாண்டியன் சிவநிந்தனை செய்யவில்லை, சிவனை பழிக்கவில்லை. கடைசியிலும், தான் தோற்கும் நிலை வந்தபோதும அவன் சிவனை நொந்துகொள்ளவில்லை.

அதைத்தான் சிவன் காத்தும் தந்தார். தன்னை நம்பிய பக்தனை அற்புதமாக வழிநடத்தி எதிரியினைச் சரியான இடத்தில் ஒழித்துக் கட்டினார்.

ஆம். சிவனை முழுக்க நம்பும் ஒருவனை அவர் கைவிடுவதில்லை. அவனுக்கான யுத்தத்தை அவரே செய்து சரியான வழியில் அவனைக் காக்கின்றார்.

தன் பக்தனின் யுத்தம் அவருடையது.

எதிரியின் பலம், பலவீனம், அவன் விதி, அவன் சாவு, எங்கே எப்படி என முழுக்க அறிந்தவர் அவர் ஒருவரே. அதனால், சரியாக அவனை அழைத்துச் சென்று விதிப்படி முடித்து பக்தனை அவரே காப்பார்.

சிவனை நம்புவோர் தலைக்குனிவதில்லை என்பதை சொல்லும் திருவிளையாடல் இது. சிவனை நம்புவோர்க்கு
பலன் இரட்டிப்பானது, இருமடங்கு நன்மையாகப் பலன் கிடைக்கும் என்பதைச் சொல்லும் போதனை இது.

மானிட வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒரு யுத்தம் உண்டு. வாழ்வே ஒரு யுத்தம்.

தொழில், உடல் ஆரோக்கியம், கடன், குடும்பம், எதிரிகள் என ஏதோ ஒருவடிவில் ஒவ்வொருவரும் யுத்தம் செய்து கொண்டிருக்கின்றோம்.

இங்கே மானுடர் செய்யும் தவறு சிவனை முழுக்க மறந்துவிட்டு அப்படி ஒருவர் இருப்பதையே தள்ளிவைத்துவிட்டு கோவிலையும் பக்தியினையும் வெறும் அலங்காரப் பொழுதுபோக்கு சம்பிரதாயமாக்கிவிட்டு தான் மட்டும் முயற்சிப்பது.

அதுதான் தவறு. வாழ்வின் போராட்டத்தில் சிவனையும் சேர்த்துக் கொண்டால் முழுவெற்றி எனப் போதிக்கும் படலம் இது.

சிவனுக்கரிய காரியங்களை நீங்கள் செய்துவிட்டு போராட்டம் தொடங்கினால் அதுவெற்றியாகும்.

சிவனுக்குரிய தொண்டுகளைச் செய்தால் மருந்துகளுடன் மருத்துவர்களுடன் நடக்கும் போர் வெற்றியாகும். கடன்சுமை, எதிரிகள், தொழில் எனச் செய்யும் போர் வெற்றியாகும். வட்டி கணக்கோ இதர பெரும்சுமைகளோ சிவன் கருணையால் இல்லாம்ல போகும்.

சிவனுக்குச் செய்யும் எல்லாமும் ஏதோ ஒருவழியில் உங்களைக் காக்கும், குலம் வாழும்.

அதனால் எல்லாச் செயல்களைச் செய்யுமுன்பும் அதில் ஒரு பங்கை சிவனுக்கு வையுங்கள், அதன் அளவு பெரிதா சிறிதா என்பதல்ல‌.

சிவனுக்கு என்ன முடியுமோ உங்களால் என்ன செய்யமுடியுமோ அதைச் செய்யுங்கள். சிவபணியினை உங்கள் வாழ்வின் அங்கமாக வையுங்கள், அது பணமோ பொருளோ உங்கள் நேரமோ உழைப்போ எதுவாகவும் இருக்கட்டும்.

சிவனுக்கும் நேரம் ஒதுக்குங்கள். சிவனை முதன்மையாக வையுங்கள். எல்லா விஷயத்திலும் சிவன் முதலாவதாகவும்‍ உங்கள் இதர லௌகீகங்கள் இரண்டாவதுமாக இருந்தால் உங்களின் எல்லாப் போராட்டமும் வெற்றியாகும், எல்லா ஆபத்தும் நீங்கும்.

தன் பக்தனைச் சிவன் சோதிப்பார் கைவிடமாட்டார். சிவன் எப்போதும் நன்றியுள்ளவர். தன் பக்தனைக் கையில் வைத்துத் தாங்குபவர். அவனின் பக்தியினைக் சோதிக்க அவர் தன் பக்தனை வீழ்த்தியது போல் நாடகமாடுவார்.

ஆனால், அவனை எழுப்பி உயர்த்திவிட்டு அவன் எதிரியினை முழுக்க அழித்தேவிடுவார்.

உத்தமமான பக்தனுக்குச் சோதனைவரும். அவன் வீழ்ந்ததுபோல் தெரியும் ஆனால் சிவன் வீழவிடமாட்டார். அவனைக் கைதூக்கி விட்டு தன் சாட்சியாய் வாழவைப்பார் என்பதுதான் இந்தத் திருவிளையாடலின் தாத்பரியம்.

அதனால் எல்லாக் காரியத்திலும் சிவனை முன்னிறுத்தி சிவகாரியங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவரை நம்பி நில்லுங்கள். ஆபத்திலும் இதர பெரிய சிக்கலிலும் கலங்காதீர்கள். இறுதி வெற்றியினைப் பெரும் வெற்றியாகச் சிவனே கொடுப்பார்.

ஆன்மீகத்திலும் இதுவே பலன். உன்னதமான பக்தன் சிவவாழ்வில் பல சோதனைகளால் சறுக்குவது போல் தெரிந்தாலும் மாயைகளுடனான அவன் யுத்தத்தை சிவனே செய்வார். உரிய காலத்தில் அவனுக்குப் பெரும் வெற்றி வழங்குவார்.

அதனால் எல்லாக் காரியத்திலும் ஆலவாயனை முன்னிறுத்தி அவன் காரியத்தினை முதலில் செய்து உங்கள் காரியங்களை அவனை நம்பிச் செய்யுங்கள். எல்லாப் போராட்டமும் ஆபத்தும் அவனால் முறியயடிக்கப்பட்டு பன்மடங்கு வெற்றியுடன் அது உங்களை வாழவைக்கும். அந்த மதுரை ஆலவாயனை நீங்கள் பற்றிக்கொண்டால் அவன் உங்களை எல்லாக் காலத்திலும் எல்லா ஆபத்தும் நீங்கி எல்லாச் சோதனையும் தாண்டி வாழவைப்பான்‌. இது முக்கால சத்தியம்.

திருவிளையாடல் புராணம் 28 : வெள்ளியம்பலத் திருக்கூத்தாடிய படலம்.

சொக்கநாதர் மீனாட்சி திருமணம் நடந்தபின் சிவபெருமான் எல்லா முனிவர்களையும் உணவு உண்ண அழைத்தார். எல்லோரும் ஆர்வமாய்க் கிளம்பியபோது பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரர் எனும் புலிக்கால் முனிவரும் மிகத் தயங்கினார்கள்.

சிவன் அவர்களின் நோக்கம் அறிந்தவர் என்றாலும் அவர்கள் வாயினாலே உண்மையினை அறிதல் வேண்டிக் காரணம் கேட்டார்.

அவர்கள் சொன்னார்கள், “பெருமானே, உங்கள் மணக்கோலம் கண்ட எமக்கு உங்கள் நாட்டியக் கோலமும் காணும் பேராவல் எழுந்துள்ளது, அதைக் காணாமல் உண்ண மனமில்லை, மன்னியுங்கள். நாங்கள் தில்லைக்குச் சென்று அந்த நாட்டியக் கோலத்தை தரிசிக்க இருக்கின்றோம்” என்றார்கள்.

கருணையுள்ள சிவன் அவர்களை நோக்கினார், தன் அடியார்களைப் பசியோடு அனுப்ப அவர் விரும்பவில்லை. எல்லா அடியாரும் உண்ணும் நேரம் இவர்கள் தன் நாட்டியத்துக்காகப் பசி பொறுக்கவும் அவர் அனுமதிக்கவில்லை.

அவர் அவர்கள் விருப்பம் நிறைவேறும்படி போதித்தார்.

‘எம் அடியார்களே, உங்கள் விருப்பம் தில்லையில் அல்ல இங்கே நிறைவேறும், அதற்கு முன் சில விஷயங்களை அறிந்து கொள்வீர்களாக‌.

உலகமாகிய விராட புருஷனுக்கு இதயம் தில்லை சிதம்பரம் ஆலயம்.

மூலதாரம் திருவாரூர் ஆலயம், சுவாதிஷ்டானம் திருவானைக்காவல் ஆலயம், மணிப்பூரகம் திருவண்ணாமலை ஆலயம், அனாதகம் விருத்தாச்சலம் ஆலயம், விசுத்தி திருக்காளத்தி ஆலயம்.

ஆக்ஞா காசிதலம், கைலாயம் துரிய சக்கரம் என்பது சூட்சும இரகசியம்.

உடலில் ஏழு சக்கரக்களுக்குமான யோக‌ ரகசியங்கள் இவை. இந்தத் தலங்கள் அந்தச் சக்கரங்களைத் துலக்கும்.

இவற்றில் மதுரையம்பதி என்பது துவாதசாந்த ஆலயம். அதாவது, தலைக்கு மேல் 12 அங்குலம் தாண்டி நிற்கும் சக்கரமான சக்கரத்துகுரியது” எனச் சொல்லி முடித்தார்.

அப்போது பெரும் வெளிச்சம் மின்னல் போல் உண்டாயிற்று. அந்தப் பிரகாசத்தின் நடுவே மாணிக்க மேடை ஒன்று கண்ணைப் பறிக்கும் ஒளியுடன் அமைந்தது.

அதன் நடுவில் சிவன் கோடிச் சூரியன்கள் ஒளியுடன் நடனமாடினார். அந்த அற்புதமான திருநடனக் காட்சியினை முனிவர்கள் அனைவரும் காணத் தொடங்கினார்கள்.

சிவகணங்கள் வாத்தியங்களை முழங்கின; நந்தி தேவர் மத்தளம் வாசித்தார்; நாரதர் தன் தம்புருவினை வாசித்தார்.

விஷ்ணு இடக்கை எனும் கருவியினை வாசித்தார்; நான்முகம் யாழ் மீட்டினான்; சரஸ்வதி தேவி ஸ்ருதி கூட்டினாள்; தேவர்கள் வந்து பூதூவி மகிழ்ந்தனர்.

கடல் போன்ற நிறத்துடன் உடலும் செந்நிறத் தீ போன்ற கேசமும் கொண்ட முயலகன் விழி பிதுங்க உடல் பிதுங்க கீழே கிடக்க அவன் மேல் ஒரு காலில் நின்று பத்து கரங்களுடனும் அவற்றில் உடுக்கை, நெருப்பு என ஏந்தி நின்று ஆடினார் பெருமான்.

அன்னை உமாதேவி அருகிருந்து அதைக் கண்டுகொண்டிருந்தாள்”

முனிவர்கள் அதைக் கண்டு பெரும் உவகைக் கொண்டார்கள். அவர் பாதம் பணிந்து நெஞ்சுருகி நன்றி சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் ஆனந்தத்துக்கு எல்லையும் இல்லை; அளவும் இல்லை.

அப்படியான நிலையில் நின்றிருந்தவர்களிடம் சிவன் கேட்டார்… “என் அடியார்களே, என்ன வரம் வேண்டும் கேளுங்கள், இந்தக் கோலத்தில் நாம் தருவோம்”

முனிவர்கள் கேட்டார்கள், “எம்பெருமானே, எங்களுக்கு எந்தக் கோலத்தில் நீர் காட்சி தந்தீரோ அதே அருள்கோலத்தில் இங்கு வரும் மக்களுக்கெல்லாம் நீர் காட்சி அருள வேண்டும், அதுவே எம் விருப்பம்” என உருகி நின்றார்கள்.

சிவபெருமானும் அவர்கள் கேட்டதை அருளினார். அதுவே மதுரையில் வெள்ளி அம்பலமாக உருவானது.

வெள்ளிச்சபை என அந்த இரண்டாம் சபை இப்படி உருவாயிற்று‌.

இன்று ஆலயத்தினுள் வெள்ளியம்பலனாகச் சிவன் இருக்கும் இடம் அல்ல அது, சிவன் நடனமாடிக் காட்சி கொடுத்த தலம் வேறு இடத்தில் உண்டு.

இகாபீஷ்ட பிராநாயகர் ஆலயம் என அதற்குப் பெயர். அந்த சமஸ்கிருத வார்த்தைக்கு “இம்மையில் மறுமை தருவார் ஆலயம்” எனப் பொருள். தேவி மத்தியபுர நாயகி என்பதால் அவள் நடுவூர் நாயகி என அழைக்கப்படுகின்றாள்.

அங்குதான் இந்தத் திருகாட்சி நடந்ததாகப் புராண செய்திகள் தெரிவிக்கின்றன. பின்னாளைய மதுரையின் மாற்றங்கள், அழிவுகள், படையெடுப்பு காலங்களுக்குப் பின் மதுரை மீண்ட போது அந்த வெள்ளியம்பலம் மீனாட்சி அம்மன் ஆலயத்துக்குள் நிறுவப்பட்டது.

ஆம். வெள்ளியம்பலம் என இன்று நிற்கும் அந்த இரண்டாம் சபை, பஞ்சசபைகளில் இரண்டாம் சபை இப்படி சிவானால் உருவானது.

மதுரை ஆலவாயன் ஆலயம் எவ்வளவு சிறப்புமிக்க ஆலயம் என்பதை கந்த புராணம் கூறுகின்றது.
கந்த புராணம் என்பது முருகப்பெருமான் அவதரித்தார் சூரனைக் கொன்றார் என்பதோடு முடிந்துவிடுவது அல்ல, புராணங்களிலே மகா பெரியது அதுதான்.

குமார சங்கீதை, சூத சங்கீதை, பிரம்ம சங்கீதை, விஷ்ணு சங்கீதை, சங்கர சங்கீதை, சூரிய சங்கீதை எனப் பல பிரிவுகளைக் கொண்டது.

சங்கர சங்கீதை என்பது சிவபெருமான் தேவி முன் சொன்ன போதனையாகும். அதனைத் தாயின் மடியில் இருந்த முருகப்பெருமான் கேட்டு அதை அகத்தியருக்கு மொழிந்தார்.

அதனால் அது அகத்திய சங்கீதை என்றுமாயிற்று.

இந்த அகத்திய சங்கீதைதான் ஆலவாய் நாதன் ஆலயத்தின் சிறப்பை அழகாக எடுத்துரைக்கின்றது. ஏகப்பட்ட நூல்கள் அதைச் சொன்னாலும் அகத்திய சங்கீதை சொல்லும் நுணுக்கம் ஆழமானது.

அது சொல்கின்றது.

பாண்டிய நாட்டின் முகம் எனச் சொல்லப்படும் இடம் மதுரை. அந்த மதுரையில் அன்னையின் யோக பீடமாக, உமாதேவியின் பீடமாக அமைத்திருப்பது இந்த ஆலயம்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் எனும் மூவகையிலும் மகா உயர்ந்த ஆலயம் இது. திருவாலவாய்க்கு ஒப்பான ஒரு தலமும், பொற்றாமரை தடாகத்துக்கு நிகரான ஒரு தீர்த்தமும், சோம சுந்தர பெருமான் எனும் சிவலிங்கம் போல் ஒரு மூர்த்தியும் மூவுலகில் இல்லை.

கையாலம், கேதாரம், திருசைலம், கோகர்ணம், திருக்காளத்தி, திருவாலங்காடு, காஞ்சி, திருவண்ணாமலை, விருத்தாச்சலம், சிதம்பரம், திருவெண்காடு, திருவாரூர், வேதாரண்யம், மதுரை, இராமேஸ்வரம், திருநெல்வேலி என மகா முக்கியமான சிவாலயங்கள் மொத்தம் பதினாறு.

இதில் காசி, சிதம்பரம், திருக்காளத்தி, மதுரை என நான்கு மகாசிறந்த தலம்.

இந்த நான்கில் முதன்மையானது மதுரை ஆலவாய் நாதன் ஆலயம். காசியில் இறந்தால் முக்தி, சிதம்பரம் தரிசித்தால் முக்தி, திருக்காளத்தியில் பணிந்தால் முக்தி, மதுரை எனும் பெயரைக் கேட்டாலே முக்தி.
சிவபெருமான் முதன் முதலில் படைத்து குடியேறிய தலம் என மதுரை ஆலவாய் நாதன் ஆலயமே அறியப்படுகின்றது.

அஸ்வமேத யாகம் முதல் எல்லா யாகங்களையும் செய்த பலனும், எல்லாக் கொடைகள் செய்த பலனும், புண்ணிய நதிகள் அனைத்திலும் நீராடிய பலனும் இங்கு தரிசித்தால் கிடைக்கும்.

என்ன பாதகம் செய்திருந்தாலும் அது இங்கே தீரும் எனும் அளவு பரிகாரத் தலம். மற்ற 15 தலங்களில் ஒருமாதம் இருந்த விரத பலனை இங்கு ஒரே நாளில் அடையலாம்.

இங்குக் கடைபிடிகக்கப்படும் ஒரு அஷ்டமி விரதம் மற்ற ஆலயங்களில் ஆறுமாதம் செய்யப்படும் விரத பலனைத் தரும். மற்ற ஆலயங்களில் ஒரு வருடம் காக்கப்படும் விரத பலன் மதுரையில் ஒரே ஒரு சிவராத்திரி விரத பலனாகக் கிடைத்துவிடும்.

அந்தப் பொற்றாமரை தீர்த்தம் சிவனால் உருவாக்கப்பட்டது. ஆதி தீர்த்தம் ஞான தீர்த்தம் என அதற்குப் பெயர். பின்னாளில் பொற்றாமரை தீர்த்தமாயிற்று. அங்கு நீராடினால் தன் வினை, முன்னோர் வினை என எல்லாச் சாபங்களும் கர்மங்களும் நீங்கும்.

சிவனின் தலைமுடியின் கங்கை நீர் துளியால் உருவான தீர்த்தம் என்பதால் எக்காலமும் அது புனிதமானது, எல்லா வினையும் தீர்த்து புனிதமளிப்பது.

அந்தச் சோமசுந்தர பெருமான் நாமத்தைக் கேட்டாலே பிறவி வினை நீங்கும். தரிசித்த மாத்திரம் 100 பிறவி பிணி நீங்கும். அங்கு பயணம் செய்யத் தொடங்கினாலே கர்மவினையெல்லாம் கழியும்.

அங்கு ஒரு மலர் சாற்றினால் நூறு பொன்னால் ஆன மலர்களால் பகவான் ஏற்றுக்கொள்வார். அங்கு ருத்ர மந்திரம் ஜெபித்தால் இராஜசூய யாகம் செய்த பலன் கிட்டும்.

அங்கு அபிஷேகம் செய்தால் கோடிப் பலன் உண்டு. தூபமிட்டால் பெரும் புண்ணியம் யுகம் தாண்டிவரும். சிவாலயங்களில் தலை சிறந்ததும் பூலோக கயிலாயமும், பிரார்த்தனை உடனே பலன் கொடுக்கும் இடமும் அதுதான்.

தலம், தீர்த்தம், மூர்த்தி என மூன்றிலும் சிறந்தது அந்த ஆலவாய் நாதன் ஆலயமே”

இப்படி அந்த ஆலவாய் நாதனின் பெருமை கந்த புராணத்தில் சொல்லப்பட்டு அகத்திய சங்கீதையில் எல்லோருக்கும் உரைக்கப்பட்டிருக்கின்றது.

யுகங்களைத் தாண்டியதும் ஆதியிலே முதலில் சிவனால் உருவாக்கப்பட்டதுமான அந்த சிவாலயம் பிரம்மன், விஷ்ணு எனப் பெரிய தெய்வங்களாலும், இந்திரன் முதலான தேவர்களாலும் வணங்கப்பட்டது.

அகத்தியர் முதல் எல்லா ரிஷிகளும் வணங்கினார்கள். பின், நாயன்மார்கள் வணங்கினார்கள். காலமெல்லாம் அது காக்கப்பட்டே வந்தது.

சமணத்தால் அது அழிய இருந்தபோது திருஞான சம்பந்த பெருமான் அதாவது முருகப்பெருமானின் அவதாரமென கருதப்படும் சம்பந்த பெருமான் அதை மீட்டெடுத்தார்.

காலம் தோறும் அது தன்னைக் காட்டி தன் சக்தியினைக் காட்டியே வந்தது. சுல்தான்கள் ஆட்சியில் கல்யானை கரும்பு தின்ன அவன் அலறி ஒடிய சம்பவம் நடந்தது.

பின் குமரகுருபரரை காசிக்கு அனுப்பி காசி ஆலயத்தை அவ்வாலயமே மீட்டது. அன்னைச் சிறுமியாக வந்து குமரகுருபரருக்கு முத்துமாலை அணிவித்த நிகழ்வு அப்போதுதான் நடந்தது.

அன்னையின் அருள் எக்காலமும் அங்கு உண்டு. சிவன் அந்தச் சக்தியின் மூலமாக பரிணமிக்கின்றார்.

இந்த மகா சிறப்பு மிக்க மதுரையில்தான் வெள்ளி அம்பலம் எனும் சபை, வெள்ளிச் சபை அமைந்துள்ளது.
எல்லாச் சிவாலயம் போலவே இங்கும் முன்பு வெள்ளிச் சபை ஆலயம் விட்டு தொலைவில்தான் இருந்தது. மாபெரும் காலம் கொண்ட இந்தத் தலத்தில் ஏகப்பட்ட மாறுதல்கள் வந்தன. அழிவதும் பின் எழுவதுமாக இருந்ததால் அதன் அமைப்பு அடிக்கடி மாறிற்று.

இன்றிருக்கும் ஆலயம் போல் அன்று அது இல்லை. இந்த திருவிளையாடல் இம்மையில் மறுமை தருவார் ஆலயத்தில் நடந்தது.

அது மேலமாசி வீதியில் உண்டு.

இன்று அதன் நினைவாக வெள்ளியம்பல வீதி என்றொரு வீதி மட்டுமே எஞ்சி இருக்கின்றது.

இப்போது ஆலவாய் நாதன் சந்நிதிக்குச் செல்லும்வழியில் இருக்கும் வெள்ளியம்பலம் அப்படி வந்ததே. ஆனால், அது ஆதியில் அமைந்திருந்த இடம் இம்மையில் மறுமை தருவார் ஆலயம்.

இப்போது மதுரை ஆலயத்தினுள்ளே அந்த வெள்ளியம்பலம் அமைக்கப்பட்டு, அங்கேதான் வெள்ளிச் சபை என அது வணங்கப்படுகின்றது.

இந்த வெள்ளிச்சபையின் தாத்பரியம் என்ன? ஏன் வெள்ளி என்பதைச் சொல்லி வைத்தார்கள்?
சித்திரம் எனும் ஓவியம், அதை அடுத்து தாமிரம், அதை அடுத்து வெள்ளி என அடுத்தகட்டத்தை குறிப்பால் சொன்னார்கள் ஞானியர்.

அதாவது, மூன்றாம் படிநிலை இது என்பதைச் தெளிவாகச் சொன்னார்கள்.

வெள்ளி என்பது சுக்கிரனுக்குரிய உலோகம் என்பது ஜாதகம். இந்துக்களின் ஜாதகமெல்லாம் ஞானக்குறியீடு என்பதால் சுக்கிரன் என்பது படைப்பின் மூலமாகின்றது.

அதனாலே மானுடக் குலத்தின் மூலத்தை சுக்கிலம் என்றார்கள்.

ஆம். இந்தச் சபை படைப்பு தத்துவத்தைக் குறிப்பது. அதனாலே பஞ்ச சபைகளில் இது மட்டும் தனக்கு ஈடாக மீனாட்சி எனும் சக்தி வடிவத்தைத் தன்னோடு பிரசித்தியாக அமைத்து பின்னாளில் ஆலவாய் நாதன் எனும் பெயரே பின்னடைந்து அது மீனாட்சி ஆலயமாகவே நிலைத்தது.

இதன் பொருள் சிவனும் சக்தியும் சேர்ந்துதான் படைப்பை செய்கின்றார்கள். சிவன் இல்லையேல் சக்தியில்லை, சக்தி இல்லையேல் சிவமில்லை.

இருவரும் சேர்ந்து செய்வதே படைப்புத் தொழில், அந்தப் படைப்புத் தொழிலின் தத்துவத்தை சொல்லி நிற்கும் சபை இது.

அணு முதல் மானிட பிண்டம் வரை இந்தத் தத்துவம் உண்டு. அசையும் சக்தி ஒன்று அசையா பெரும் சக்தி ஒன்று இந்த இரண்டையும் தாங்கும் வெளி ஒன்று.

இங்கிருந்துதான் படைப்பு தொடங்குகின்றது.

அணுக்கரு இணைவு அல்லது பிளவில் என்ன நடக்கின்றது? ஒரு அணுவினை ஏதோ ஒன்று நியூட்ரான் எனத் தாக்க கரு பிளந்து பிரமாண்ட சக்தி தோன்றுகின்றது. இது அணுவெடிப்பு.

இரு அணுக்கள் இணையும் போது புது அணு தோன்றுகின்றது என்கின்றது விஞ்ஞானம்.

அப்படியே ஆணின் சுக்கிலமும் பெண்ணின் சுரோணிதமும் சேரும் போது அங்கே உயிர் படைக்கப் படுகின்றது.

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் அணுவுக்குள் இருக்கும் இயக்கம் மானுடன் சுக்கிலத்திலும் உண்டு. இன்னும் வானத்துப் பிரபஞ்சங்களிலும் உண்டு.

பிரபஞ்சவியல் என்ன சொல்கின்றது?

ஒரு சக்தி இந்தக் கோள்களை இயக்குகின்றது. எல்லாம் பெருவெடிப்பில் இருந்து தோன்றின. ஒன்றில் இருந்து ஒன்று தோன்றிற்று. கடைசியில் எல்லாம் ஒரு இடத்தில் கருந்துளையில் சங்கமித்து ஒரே பெரிய தொகுப்பாகும், அது சூனியநிலை.

பின், அதிலிருந்து பெருவெடிப்பு ஏற்பட்டு எல்லாம் மீண்டும் தோன்றும். அந்தப் பெரும் பிண்டத்தை ஒரு சக்தி உடைத்து போட்டு இயக்குகின்றது, அதனாலே பிரபஞ்சம் இயங்குகின்றது.

இந்த இயக்கு சக்தியினைத் தேவியாகவும், அசையாச் சக்தியினை சிவமாகவும் சொல்லி இந்த இரு சக்திகள் இணைவாலே உலகத்தில் எல்லாமே படைக்கப்பட்டு இயக்கப்படுகின்றது எனச் சொன்ன மதம் இந்துமதம்.
அந்தத் தத்துவம்தான் இங்கே வெள்ளி அம்பலமாகச் சிவனை நிறுத்தியிருக்கின்றது.

இங்குதான் பதஞ்சலி முனிவருக்கு சிவன் நடனக் கோலம் காட்டினார். வெள்ளியாக ஜொலித்து ஆடிக் காட்டினார்.

“அடியாரெம்பொருட்டு வெள்ளியம்பாலத்தாடல் போற்றி
பொடிபடிந் தடந்தோள் போற்றி
கடியவிழ் மலர் பொன் கூந்தல் கயல்விழி பாக போற்றி
நெய்தற் பரமானந்த நிருத்தனே போற்றி”

எனப் அவர் பாடிய காட்சி அதுதான்.

(இப்போது இடது காலில் சிவன் நின்று ஆடும் காட்சி இன்னொரு பக்தனுக்காக நடத்திய திருவிளையாடல். அதனைப் பின்னால் காணலாம் )

ஆம். மற்ற தலங்களில் வலதுகாலை ஊன்றி இடதுகாலை தூக்கி நிற்கும் பெருமான், இங்குமட்டும் இடதுகாலை ஊன்றி வலதுகாலை உயர்த்தி நிற்பார்.

முதலாவது, இறைவன் அர்த்த நாரீஸ்வரர். ஒரு பக்கம் பெண்ணுக்குக் கொடுத்தவர். அது இடப்பாகம். இடதுபாகம் காட்டி ஆடிய கோலத்தில் நின்று மாறி வலதுகாலை உயர்த்தியது என்பது ஆண் பெண் சக்தி, தானும் அன்னையும் இணைந்து நிற்கும் சக்தியே படைப்புக் கோலம் என்பதைக் காட்டுவது.

ஆண் படைப்புக்கு மூலம், பெண் படைப்பின் காரணம் என்பதைக் காட்டுவது.

இன்னொரு காட்சி யோகமயமானது.

இடபக்க மூச்சை சந்திரக்கலை என்றும் வடபக்க மூச்சை சூரியக் கலை என்றும் சொல்வது யோக மரபு. இந்த இரு மூச்சும் கலந்தால்தான் சுழுமுனை நாடி துலங்கி சக்கரங்களைத் துலக்கி ஞானநிலை நோக்கி இயக்கும்
இந்தச் சூரியக்கலை சந்திரக்கலை மூச்சு தத்துவத்தை இங்கே சூசகமாகக் காலை மாற்றி நின்று இரு மூச்சு தத்துவத்தை சூரிய கலை சந்திரகலையோடு கூடி சுழுமுனை நாடி துலங்கும் இரகசியத்தைப் போதிக்கின்றார் எம்பெருமான்.

யோகத்தில் சிறக்கும் ஒருவன் புது மனிதனாகின்றான். புது படைப்பாகின்றான் என்பது இதன் தத்துவம்.

ஆம். இந்தப் படைப்பு தத்துவத்தைச் சொல்வதே இந்த ஆலயம். உலகம் சிவனாலும் அன்னையாலும் படைக்கப்பட்டு இயக்கப்படுகின்றது என்பதைச் சொல்லும் இந்தச் சபை, அப்படியே இங்கு வந்து வழிபடுபவன் புதுப் படைப்பாகின்றான் என்பதையும் சொல்கின்றது.

இப்போது அகத்திய சங்கீதை சொல்லும் போதனையினைக் காணுங்கள் இரண்டும் அப்படியே பொருந்துவதை அறியலாம்.

ஆம். இது படைப்பை அருளும் ஆலயம், புதுவாழ்வும் புது இயக்கமும் தரும் அற்புத ஆலயம், அந்தத் தாத்பரியம்தான் வெள்ளி அம்பலமாக நிற்கின்றது.

வெள்ளி என்பது சுத்தமான ஒன்றைக் குறிப்பது. எது நல்லது எது தள்ளவேண்டியது என்பதன் அறிகுறியாக வெளியினைத்தான் சொல்வார்கள்.

வெள்ளி என்றால் பவித்திரம் என்பார்கள், மகா தூய்மையானதைக் குறிப்பது வெள்ளி.

தூய்மையானது எல்லாமே வெள்ளி நிறம் அல்லது வெண்ணிறம். பனிச்சிகரம், மேகம், வெள்ளொளி, என எல்லாமும் வெண்ணிறம் கொண்டது.

படைக்கும் பொருள் எல்லாமும் தொடக்கத்தில் தூய்மையானது. இயற்கையின் தத்துவம் அது. மழை முதல் மனிதன் வரை எல்லாமே தொடக்கத்தில் பரிசுத்தமானது.

இந்த ஆலயம் படைப்பின் தத்துவத்தைச் சொல்கின்றது. வாழ்வில் என்ன மாசுபட்டாலும் கர்மவினையால் சரிந்துபோனாலும் இந்தச் சபையில் வணங்கினால் மீண்டும் புதுப்படைப்பாக மாறுவான் என்பதைச் சொல்கின்றது.
ஆன்மீக நிலையில் மறுபடி பிறப்பதை, அதாவது சித்திரம் தாமிரம் தாண்டி உறுதியாகி மறுபிறப்பு மறுவாழ்வு பெறுவதைச் சொல்லும் கோலம் இது.

சிவனின் ஐந்து முகங்களில் ஒன்றான சத்யோஜாதா முகத்தைக் காட்டும் தத்துவம் இது. இதுதான் படைப்புக்குச் சொல்லப்படும் முகம்.

இங்கே சிவபெருமான் சந்தியா தாண்டவம் ஆடுகின்றார். சந்தியா என்றால் சந்திப்பொழுது எனப் பொருள். இரு பொழுதுகள் இணையும் தருணத்தை சந்திப் பொழுது என்பார்கள்.

இரு தெருக்கள் இணைந்தால் சந்தி, இருவர் ஒருவரை ஒருவர் பார்த்தால் சந்திப்பு.

அப்படி சந்தியா நடனம் என்பது இரு சக்தி இணையும் நடனம், இரு சக்திகள் இணையும் போது அங்கே புதுப் படைப்பொன்று நிகழும்.

சாந்தி முகூர்த்தம் எனும் பெயரின் மூலம் சந்தி முகூர்த்தம் என்பதே.

சந்தியா நடனத்தின் தத்துவம் இதுதான். படைப்புக்கான இயக்கம் அது. அதைத்தான் வெள்ளி அம்பலத்தில் சொல்கின்றார் சிவன்.

ஆன்மீக மொழியில் ஒருவன் புதுப்படைப்பாக பிறந்துவிட்டான் என்பதைச் சொல்லும் அடையாளம் அது. இந்தத் தலம் எல்லா வகை அருளையும் அருளும். முதலாவது, எல்லாப் படைப்பையும் தரும். அது உயிர்சார்ந்த உடல் சார்ந்த விஷயம் என்றாலும் கிடைக்கும்.

முக்கியமாகக் கலைகள், கவிகள் இன்னும் இதரப் படைப்புத் திறன்களை வளர்க்கும். அந்த ஆலயத்தில்தான் அழியாத் தமிழ்ச் சங்கமும் இலக்கியங்களும் எல்லாமும் வளர்ந்தன‌.

இன்றும் அற்புதமான கல் காவியமாக எழுந்து நிற்பது மதுரை ஆலயம்தான்.

ஒளவையார், கபிலர், நக்கீரர், வள்ளுவர் எனக் காலத்தால் அசைக்கமுடியாப் படைப்புக்களெல்லாம் அங்கிருந்தான் வந்தன‌.

எல்லா வகை படைப்புக்களும் தரும் சபை அது.

அப்படியே ஆன்மீக வாழ்வில் பெரும் பெரும் திருப்பம் தந்து ஒருவனை அற்புதமான யோகியாக்கும் முழு அடியாராக்கும் ஆலயமும் அதுதான்.

நின்றசீர் நெடுமாறன் எனும் கூன் பாண்டியன் முதல் ஏகப்பட்ட அடியார்களைச் சொல்லமுடியும்.
இப்படிப் படைப்பினைத் தரும் ஆலயம், எல்லா வகையிலும் உங்களை புதுபடைப்பாகத் தரும் ஆலயம் அது. அந்த வெள்ளிச்சபையில் சிவபெருமான் இடதுகாலை தூக்கிப் படைப்பின் தத்துவம், யோகத் தத்துவமாகக் காட்சியளிகின்றார்.

மதுரை ஆலயம் செல்வோர் அங்கு அந்த வெள்ளிச்சபை நாதனை வணங்கத் தவறாதீர்கள். ஒரு நொடி நின்று அந்த அற்புதக் காட்சியினைத் தரிசியுங்கள்.

உங்கள் கர்மவினையெல்லாம் அற்றுப்போய் புதுபடைப்பாவீர்கள். எந்த நோக்கத்துக்காய் இந்த பூமிக்கு வந்தீர்களோ அந்த நோக்கம், அந்தச் செயலைச் செய்யும் படைப்புத்திறன் உங்களுக்குத் துலங்கும். யோகங்களில் மனம் சென்றால் இந்த ஆலயம் புதுப்படைப்பாய் உங்களை மாற்றி ஆன்மீக நிலையில் புதுப்படைப்பை கொடுக்கும்.

அந்த வெள்ளிச்சபை என்பது படைத்தலை சொல்வது. அங்கு நீங்கள் தரிசிக்கும் போது “இன்று புதிதாய்ப் பிறந்தோம்” எனும் நிலைக்கு உங்களை உயர்த்துவது.

மகா முக்கியமாக, எது நல்லதோ அதை அது தரும், எது பவித்திரமோ எது சுத்தமானதோ அதை உங்களுக்குக் கொடுக்கும்.

யோகத்தில் எட்டாம் சக்கரம் எனும் உச்ச சக்கரம் துலங்கும் போது, உடலுக்கு வெளியே உள்ள சக்கரம் துலங்கும் போது ஒருவன் இறைநிலைக்குச் செல்கின்றான். அவன் உடல் வெள்ளிபோல் துலங்கும், அவனின் சூட்சும உடல் வெண்ணிறத்தில் பிரகாசிக்கும் என்பதைச் சொல்லி அந்த வரத்தை தரும் ஆலயம் இது.

துவாத சாந்தம் என்றால் இரண்டற கலத்தல் எனப் பொருள். இறைவனோடு இரண்டறக் கலக்க வைக்கும் நிலையில் அந்தச் சக்கரத்தை துலக்கித் தரும் ஆலயம் இது.

அந்த ஆலவாய் நாதன் ஆலயம் சென்று அந்த வெள்ளி அம்பலத்தானை வணங்கும் போது புதுப் படைப்பாக நீங்கள் மாறுவீர்கள். அதன் பின் நீங்கள் தொட்டதெல்லாம் பன்மடங்கு துலங்கும். இது சத்தியம்.

“ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி
கண்ணார் அமுதக் கடலே போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி”

திருவிளையாடல் புராணம் 29 : கனவிலே தோன்றிய கருணாகரன்.

சிவபெருமானுக்கும் மீனாட்சி எனும் தடாதகை பிராட்டியாருக்கும் மணமாகி, மதுரையினை மீனாட்சி ஆட்சி செய்த காலங்களில் அவர்கள் மகனாகப் பிறந்தவன் உக்கிரபாண்டியன்.

பெண், அரசியாக முதலில் ஆட்சி செய்தது மதுரையில்தான். அதுவும் இறைவியே பெண்ணாக வந்து பெண்ணால் ஆளமுடியும் எனக் காட்டி நல்லாட்சி நடத்தினாள். பெண்விடுதலையினை அல்ல பெண்ணை முதலில் அரசியாக்கி நாடாள வைத்ததும் இந்துமதமே.

அப்படியான மீனாட்சி உக்கிரபாண்டியன் எனும் மகனை சிவனருளால் பெற்றெடுத்தாள். அவனுக்கு மணம் செய்விக்கும் காலம் வந்தது.

அன்னை மீனாட்சியும் சுந்தரபாண்டியனாக வந்திருந்த சிவபெருமானும் உக்கிரபாண்டியனுக்கு தாங்கள் மணம் செய்துவிப்பதை விட ஒரு அரசனுக்கான பெண்ணை அந்த அரசனே தேடட்டும் என எண்ணி அவனிடமே விட்டுவிட்டார்கள், அதில் ஒரு திருவிளையாடலும் இருந்தது.

உக்கிரபாண்டியனுக்கோ மணம் செய்து கொள்வதுபற்றி யோசிக்கவில்லை. அவனுக்கு ஆட்சியும் அதன் நுணுக்கமும் இன்னும் இன்னும் நல்லாட்சிக் கொடுப்பது எப்படி என்பது பற்றியும், சிவபக்தியிலுமே கவனம் செலுத்தி வந்தான்.

ஒரு கட்டத்தில் எல்லாத் தரப்பிடம் இருந்தும் இளவரசனுக்கு மனைவி வேண்டும், ஆட்சிக்கு எதிர்கால அரசி வேண்டும், அரச வாரிசுகள் வேண்டும் எனும் நெருக்கடி அதிகரிக்க அவன் சிந்தித்தான்.

நேராக ஆலவாய நாதன் சந்நிதிக்குச் சென்றவன் அவரிடமே முறையிட்டான்.

“இறைவா, இந்த மதுரையினை உமது பிரதியாக ஆள்பவன் நான், உன்னைத் தவிர ஏதும் அறியேன். நான் யார் என்பதையும் எதற்காக இங்கு வந்தேன் அரசனானேன் என்பதையும் நீரே அறிவீர்.

எனக்கான எல்லாவற்றையும் தந்த நீர், எனக்கான பெண்ணையும் கொடுத்தருளும், உம்மையன்றி சரியான பெண்ணை கொடுக்க யாரால் முடியும்?” எனச் சொல்லி வணங்கினான்.

நேராக அவைக்கு வந்தவன் சுந்தரபாண்டியனும், மீனாட்சியும் இன்னும் அவையோர்களெல்லாம் இருந்த அவையில் சொன்னான்.

“நான் சிவனிடமே எல்லாம் ஒப்படைத்திருக்கின்றேன். இனி அவர் விருப்பபடி நடக்கட்டும்”

சுந்தரபாண்டியனும் மீனாட்சியும் சொன்னார்கள், “இது அடுத்த பட்டத்து ராணிக்கான தேர்வு , இந்த நாட்டை யார் ஆளவேண்டுமோ அந்த மன்னனின் பட்டத்து அரசிக்கான தேர்வு.

இதனால் சிவனருளால் அவையோர்களும், மதி நிறைந்த மந்திரிகளும் பெரியோரும் அப்படி ஒரு பெண்ணைக் கண்டறிந்து இளவரசியாக்குங்கள்” என்றார்கள்.

சுந்தரபாண்டியன் தன் அவையோரிடத்தில் தெளிவாகச் சொன்னார்.

“ஆன்றோர்களே, நீங்கள் அறியாததல்ல, நாடாளும் மன்னனுக்குப் பழுதில்லாததும் எல்லா வகையில் நிறைவானவைகளையே கொடுத்தல் வேண்டும்.

இங்கு மன்னனுக்கு அரண்மனை, அரியாசனம் முதல் பட்டத்து யானை எப்படி இருக்கவேண்டும் என்பது வரை விதிகள் இலட்சண சாஸ்திரங்கள் உண்டு.

இவை வெறும் அழகுக்காக அல்ல, ஆயிரமாயிரம் புரிந்து கொள்ளமுடியாச் சூட்சுமங்களைக் கொண்ட விஷயம் இது.

அதனால் அரசனுக்குரிய பெண்களைத் தேர்ந்தெடுக்கவும் சில விதிகளை நாம் சொல்வோம்.

எந்தப் பெண் அதிக நீளமோ, அதிகக் குறுகலோ இல்லாமலும், நுனி பிளவாமலும் கருவண்டைப் போன்று கருமையோடும் இயற்கை மணத்தோடும் உடைய அழகான கூந்தலைக் கொண்டிருப்பாளோ அவள் கணவன் பெரும் செல்வங்களை அடைவான்.

எந்தப் பெண்ணின் தலை யானையின் மத்தகம் போலத் திரண்டு உயர்ந்து அமைந்திருக்குமோ அவள் கணவன் நீண்ட ஆயுளுடன் விளங்குவான்.

ஒரு பெண்ணுக்கு நெற்றி சீராக இருத்தல் வேண்டும். நெற்றியில் முடி இருத்தல் கூடாது, நரம்புகள் வெளித்தெரியக் கூடாது, எட்டாம் நாள் நிலாவினைப் போல அது பளபளப்பாக தசைப்பற்றோடு ஜொலிக்க வேண்டும். அப்படியான பெண்ணின் கணவன் நோயின்றி வாழ்வான்.

பெண்ணின் இமைகள் அடர்த்தியாக கருமயிர் நிறைந்தபடி அமைந்திருக்கும் கண்களைப் பெற்றவளின் கணவன் வாழ்வில் இன்பங்களை அடைவான்.

வில்லென‌ வளைத்த புருவங்களும், எள்ளுப் பூப்போன்ற நாசியும். கீழே தாழ்ந்தபடி சுழிகளை கொண்டும் கொஞ்சம் முன் தள்ளி அமைந்திருக்கும் காதுகளைக் கொண்ட பெண்ணை மனைவியாக்கியவன் நன்மைகள் பல அடைவான்.

கோவைப்பழம் போல் சிவந்த இதழ்களையும், கண்ணாடி போன்ற அழகான கன்னங்களையும் உடையவள் தன் கணவனிடம் மிகுந்த‌ அன்புடன் இருப்பாள்.

வரிசையோ இடைவெளியின்றி நெருக்கமாகவும் ஒழுங்காகவும் பால்போன்ற வெண்மையான பிரகாசத்தோடு கூடிய பற்களைக் கொண்டவள் எப்போதும் மகிழ்ந்திருப்பாள். அப்படியானவளை மணக்கும் கணவனும் எப்போதும் மிகுந்த மகிழ்வும் நிம்மதியும் தன்னம்பிக்கையும் கொண்டிருப்பான்.

தடிப்பாக இல்லாமல் மென்மையான சிவந்த மூக்கை கொண்டவளுக்கு அவள் விரும்பிய செல்வமெல்லாம் சேரும், அவளின் கணவன் பாக்கியவான்.

அழகான தசைகளைக் கொண்டதாய்ப் பூசினாற்போல் வட்டமாக அமைந்த மோவாயும், சங்கு போன்று மூன்று ரேகைகளுடன் விளங்கும் கழுத்தையும்,எடுப்பான உயர்ந்த நெஞ்சையும்,எலும்புத் தெரியாத வகையில் மூங்கிலைப் போன்ற தோள்களும், நீண்டு உருண்டு சிறுத்த கைகளையும் கொண்டவளிடம் செல்வமும் இன்பமும் நிலைத்து நிற்கும்.

செந்நிறமான உள்ளங்கைகளையும், வட்டமாக உயர்ந்து விளங்கும் மார்பகங்களையும், மெலிந்த வயிறும் ஆழ்ந்த நாபியும் உடையவள் அழிவற்ற செல்வத்தை அடைவாள்.

சிறுத்து தளர்ந்த இடையும், வாழைத் தண்டைப் போன்ற தொடைகளையும், எலும்பு தெரியாமல் சதையால் மூடப்பட்ட‌ வட்டமான முழங்கால்களையும் உடையவள் பல நன்மைகளைப் பெற்று வாழ்வாள்.

சிறுத்த கணைக்காலும், திரண்டு உயர்ந்த புறங்காலும் பிறைச் சந்திரனைப் போன்ற கூடிய விரல்களும், மென்மையான உள்ளங்கால்களையும் நகங்களோடு பெற்றவள் சகல சுகங்களையும் அடைவாள்.

மாந்தளிர் போல சிவந்து பொன் நிறம் பெற்று வியர்வை அரும்பாத மேனியினை அடைவாள். மாந்தளிர் திரண்ட செல்வத்துக்கு அதிபதியாவாள்”

சுந்தரபாண்டியன் சொன்ன குறிப்புப்படி அமைச்சர்கள் கவனமாக அரசனுக்கேற்ற பெண்ணைத் தேடினார்கள். அவர்கள் எல்லா இலட்சணமும் கொண்ட பெண்ணைக் கண்டடைந்தார்கள். ஆனால், அந்தப் பெண் இருந்த இடம் கொஞ்சம் பொருந்தாதது.

அதாவது, பாண்டியர்கள் சந்திர குலம், அவர்கள் கண்ட பெண் சூரிய குலத்தின் வம்சமாக இருந்தாள். அதாவது சோழ வம்சத்து தொடர்ச்சியாக மணவூரில் ஆட்சி செய்த சோமசேகரன் மகள் காந்திமதி என்பவளாக இருந்தாள்.

சோமசேகரன் தான் சூரியகுலம் என்பதால் சந்திர குலத்திற்கு பெண் கொடுக்கத் தயங்கினான், அதே தயக்கம் இருந்தது.

ஆனால், சர்வ லட்சணமும் பொருந்திய அப்பெண்ணை விடவும் மனமில்லை‌.

அமைச்சர்கள் சுந்தரபாண்டியனிடமும் மீனாட்சியிடமும் சொன்னார்கள். அவர்களோ ஒரு புன்னகையுடன் உங்கள் எதிர்கால அரசனுக்காய் நீங்கள் செய்யவேண்டியதை செய்யுங்கள், இது அவையின் பொறுப்பு எனச் சொல்லிவிட்டார்கள்.

சமதி அல்லது சமிதி என அந்த அவைக்குப் பெயர். சில இடங்களில் அது சுமதி என்றும் உண்டு. இந்த அவையோர் தங்களுக்குள் மிகுந்த ஆலோசனைச் செய்தனர்.

சோமசேகரன் நமக்கு நிச்சயம் பெண் தரமாட்டான் ஆனால் சர்வ இலட்சணமும் பொருந்திய அப்பெண்ணை விடவும் கூடாது என யோசித்தவர்கள் கடைசியில் ஆலவாயன் சன்னதிக்கே சென்றார்கள்.

“எம்பெருமானே, இந்த பாண்டியநாடு உம்முடையது. அதை உமது பிரதிநிதியாக ஆளும் எமது மன்னர்க்கு மனைவி வேண்டி சோமசேகரன் மகளைக் கண்டோம், அவளைவிட பொருத்தமானவளை இனி காணமுடியாது.

எல்லா யானையும் பட்டத்து யானை ஆகமுடியாது, எல்லாப் புரவியும் பட்டத்து புரவியும் ஆகாது, அதற்கான லட்சணங்கள் பொருந்திவர வேண்டும். சிலை செய்யவே இலட்சணம் எல்லாம் பொருந்திய கல் அவசியம் எனும் போது, அரசனின் மனைவிக்கு எல்லா அம்சமும் பொருந்த வேண்டும்.

அரசகுல மன்னனுக்கு அரசர் பெண்ணேதான் மணமுடித்தல் வேண்டும். அரச குடும்பத்தை அவள்தான் காக்க முடியும், அரசகுலத்தில் பிறந்து வளர்ந்து பெற்ற பயிற்சியில் அவள் அரசனுக்குத் துணையாக அரசை நடத்த முடியும்.

அதுவும் மீனாட்சியின் மருமகள் என்றால் பெரும் இடம் அல்லவா? பொருத்தமான பெண்ணாகப் பார்க்க வேண்டும் அல்லவா? எம்பெருமானே இந்தச் சிக்கலை உம்மிடமே விட்டுவிடுகின்றோம், நீரே நல்ல முடிவினைச் சொல்லும்” எனப் பணிந்து மன்றாடினார்கள்.

சிவன் அவர்களின் கோரிக்கையினை ஏற்றார். அன்றே சோமசேகரன் கனவில் தோன்றினார்.

“சோமசேகரா, உன் மகள் காந்திமதியினைப் பாண்டிய இளவல் உக்கிரபாண்டியனுக்கு திருமணம் செய்து வைப்பாயாக” என உத்தரவிட்டார்.

அதிகாலை எழுந்த சோமசேகரன் சிவனின் உத்தரவை எண்ணி சிந்தித்துக் கொண்டிருந்தான். அவனின் சிக்கல் வேறாக இருந்தது.

எப்படித் தானே வலியச் சென்று மணம் பேசுவது எனக் குழம்பினான். அதுபற்றி தன் அமைச்சர்களிடம் சொல்லி சிவனின் சித்தம் இது, ஆனால் மதுரை மேலிடம் என்ன நினைக்குமோ என ஆலோசித்தான்.

அமைச்சர்கள் சோமசேகரினிடம் தாங்கள் இதுபற்றி பாண்டியனுடன் பேசுவதாகச் சொல்லிச் சென்றார்கள்.

அங்கே உக்கிரபாண்டியனின் அமைச்சர்கள் இவர்களை வரவேற்று தங்கள் வேண்டுதலை சிவனே நிறைவேற்றி தந்ததை எண்ணி மகிழ்ந்தார்கள்.

அன்றே திருமணம் உறுதியானது.

சோமசேகரன் தன் மகளுடன் பரிவாரங்களுடனும் மதுரை நோக்கிச் சென்றான். அவர்களைச் சுந்தரபாண்டியனும். மீனாட்சியும் நகர வாசலில் எதிர்கொண்டு அழைத்தார்கள், மீனாட்சி தன் மருமகளை வரவேற்றாள்.

எல்லோரும் ஆலவாயன் ஆலயம் சென்றார்கள், நன்றி சொல்லி வணங்கினார்கள்.

சுபமுகூர்த்த நாளில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. அக்கம் பக்கம் அரசர்கள் எல்லோரும் வந்து வாழ்த்தினார்கள். மதுரை பெரும் விழாக்கோலம் பூண்டது.

தேவர்களும் ரிஷிகளும் அரூபியாய் நின்று வாழ்த்தினார்கள். பெரும் கொண்டாட்டத்துடன் ஆசீர்வாதமாய் முடிந்தது.

சுந்தரபாண்டியனும் மீனாட்சியும் சேர்ந்து தம்பதியரை வாழ்த்தினார்கள். எல்லாம் இனிதே நடந்தது.

பின் சுந்தரபாண்டியன் தன் பொறுப்பையெல்லாம் உக்கிரபாண்டியனிடம் கொடுத்தார். அவனுக்கு முடி சூட்டி வாழ்த்தி சொன்னார்.

“என் மகனே, உன் புகழ் பெரிதாய்ப் பரவும், எல்லா உலகிலும் பரவும். அப்போது இந்திரன், மேருமலை, வருணன் ஆகியோர் உன்னிடம் மோத வருவார்கள். உன்னை வென்று தாங்களே உயர்ந்தவர்கள் எனக் காட்ட வருவார்கள்.

நீ இந்திரனை இந்த வளையினால் முடி சிதற வை, மேருவினைச் செண்டினால் அடித்து வீழ்த்து, வருணனை வேலால் வீழ்த்து” எனச் சொல்லி வளை, செண்டு, வேல் என மூன்றையும் கொடுத்தார்.

பின் செங்கோலை கையில் கொடுத்து ஆட்சியினை முறையாக ஒப்படைத்தார்.

அவரை எல்லோரும் பின் தொடர ஆலவாயன் சன்னதிக்குச் சென்றவர் அப்படியே கரைந்து போனார், அவரோடு மீனாட்சியாக நின்ற தடாதகை பிராட்டியாரும் மறைந்தார்.

சிவனும் பார்வதியுமே தன் பெற்றோர்களாக இருந்தார்கள் என்பதை உணர்ந்து உக்கிரபாண்டியன் பெரும் உவகைக் கொண்டான். அப்படியே அவர்கள் வழியில் நல்லாட்சியினை நடத்தினான். காந்திமதியோடு அவன் செய்த பெரும் ஆட்சி வரலாற்றின் முற்கால பொற்கால ஆட்சியாய் அமைந்தது.

இதுதான் சிவன் உக்கிரபாண்டியனுக்கு காந்திமதியினை மணமுடித்து வைத்த திருவிளையாடல்.

இது பல நுணுக்கமான விஷயங்களைப் போதிக்கின்றது.

முதலில் திருமண வாழ்வு எவ்வளவு முக்கியமானது என்பதைச் சொல்கின்றது. மணவாழ்வு என்பது காதலோ இனிய இல்லறமோ தாம்பத்யமோ சந்ததி பெருக்கி வாழ்வதோ அல்ல‌.

அது கர்மா. இல்லறம் என்பது கர்மப்படி பயணம், அந்தப் பயணத்தில் மிகச் சரியான துணை அவசியம், நல்ல துணை அமைவோர்தான் தன் கர்மத்தை முறையாகச் செய்யமுடியும்.

வாழ்க்கை துணை எனப் பொதுவாகச் சொல்லப்பட்டாலும் கர்மத்தைச் செய்யவைக்கும் துணைதான் மனைவி.

அது இராமனுக்கும் தேவைப்பட்டது, கண்ணனுக்கும், பஞ்சபாண்டவர் என எல்லோருக்கும் அவசியமானது.

ஒருவன் பெற்றுவந்த கர்மத்தை மனைவி மூலமே அவள் பலத்துடனேதான் செய்தாக வேண்டும். இதனாலே திருமணத்துக்கு மிகுந்த பொருத்தம் பார்த்தார்கள் இந்துக்கள். ஜாதகம் குடும்பம் என எல்லாவற்றையும் ஆலோசித்து செய்தது அதனாலே.

இங்கு உக்கிரபாண்டியனும் அமைச்சர்களும் இந்த மகா முக்கிய முடிவினைத் தாங்கள் எடுக்கவில்லை, அவர்கள் எல்லாவற்றையும் சிவனிடமே சொன்னார்கள்.

சிவபெருமான் தானே வந்து அந்த திருமணத்தினைப் பொருத்தமான பெண் மூலம் முடித்துவைத்தார்.

மிக மிக முக்கியமான விஷயத்தை சிவனிடமே விட்டார்கள் அவர்கள். சிவனும் சரியான பெண் யாரோ அவளைத் தன் தேசத்தின் மணமகளாக்கினார்.

ஆம். எதிர்காலம் தெரியா வாழ்வில் என்ன நடக்கும் என அறியாத வாழ்வில் எல்லாவற்றையும் சிவனிடமே விட்டுவிடுதல் நன்று.

மணவாழ்வினைப் பொறுத்தவரையில் சிவனிடமே சரணடைதல் நன்று. எது சரியானதோ எது நிம்மதியும் நல்ல மகிழ்வுடனும் வாழ்க்கை துணையாகச் சரிவருமோ
எது நம்முடைய கர்மத்தை தீர்க்க முழுக்க உடன் வருமோ, எது நமக்கு கடைசிவரை கர்மம் தீர்க்க நிற்குமோ அப்படி ஒரு துணையினை சிவனே தருவார்.

இந்தத் திருவிளையாடல் சொல்லும் மிக நுணுக்கமான விஷயம் பெண்களின் சாமுத்திரிகா இலட்சணமும் அதன் பயனும்.

உடல் என்பது கர்மம் தீர்க்க இறைவன் கொடுக்கும் வடிவம், முன் ஜென்ம சாபம் அல்லது வரம் இன்னபிற விஷயங்களுடன் அந்த ஆத்மா செய்யவேண்டிய கர்மா பொறுத்தே உடல் அமைகின்றது.

நடிப்பு தொழிலுக்கான முகமும் உடல்வாகும் கொண்ட பிறப்பு அங்கே கர்மம் கழிக்கின்றது, விளையாட்டில் கர்மம் கழிக்கவேண்டிய ஆத்மா அதற்கான உடலைப் பெறுகின்றது.

வசீகரமான கலைகள் முதல் இரந்து யாசித்து வாழும் யாசகரின் உடல் வரை அவரவர் கர்மம் தீர்க்க கொடுக்கப்பட்ட உடல்களே.

பிறப்பிலே ஊனம் முதல் இடையில் வரும் நோய்கள் கொண்ட உடல் வரை எல்லாமே கர்மத்தின் தொடர்ச்சியே.

அப்படிப் பெண்களின் உடல் அமைப்பு அவர்களின் கர்மத்தைச் சொல்வது, அது அவளை மட்டுமல்ல அவளுடன் வாழ்பவன் கர்மத்தையும் பாதிக்கும்.

சாமுத்திரிகா இலட்சணப்படி ஒரு பெண் அமைந்திருந்தாள் அவளை மணப்பவன் அவள் கர்மவிதிப்படி பெருவாழ்வு வாழ்வான்.

அவளின் நல்ல கர்மா அவளின் உடலில் சில அடையாளம் மூலம் வெளிப்படுகின்றது, அப்படியான பெண்ணை அடைந்தவன் வாழ்வு சிறக்கும்.

எல்லாக் கற்களும் இரத்தினமாவதில்லை, எல்லா இரத்தினமும் ஜொலிப்பதுமில்லை, எல்லாத் துகளும் முத்துக்கள் ஆவதில்லை, அப்படி முத்தான எல்லா முத்துக்களும் உரிய இடம் சேர்வதுமில்லை.

பல விஷயங்கள் பிறப்பிலே நிர்ணயம் செய்யப்படுகின்றன. கல்லில் கூட சாமி சிலையாக போகும் யோகம் சில கற்களுக்கே உண்டு, ஆலயம் தாங்கி நிற்கும் பாக்கியம் எல்லாக் கல்தூணுக்கும் கிடைப்பதில்லை.

எல்லா யானையும் சுவாமி சுமக்க முடிவதில்லை, கோவில் யானை வேறு காட்டு யானை வேறு.

இறைவனுக்கு ஆபரணமாக வரவும் நவரத்தினங்களுக்கு ஒரு அமைப்பும் தனிபட்ட வரமும் வேண்டி இருக்கின்றது.

இப்படிப் படைப்பிலே சாமுத்திரிகா இலட்சணப்படி சில பெண்கள் வரம்பெற்றவர்கள் சிறப்பு கர்மாக்களை கொண்டவர்கள். அவர்களுடன் கூடிவாழ்பவன் அவர்களின் பூர்வ ஜென்ம பலனில் பங்குபெற்று நல்லபடியாகக் கர்மா கழித்து வாழ்வினை முடிப்பான்.

இப்படியான வரத்தை சிவனே அருள்வார்.

இந்தத் திருவிளையாடலில் சாமுத்திரிகா லட்சணத்தை சுந்தரபாண்டியனாக நின்றிருந்த எம்பெருமானே போதித்தார். எப்படி உருவம் கொண்ட பெண்களுக்கு என்னென்ன பலன் உண்டு என்பதை அவரே சொல்லிக் கொடுத்தார்.

திருவிளையாடல் என்பது சிவன் பக்தர்களுக்கு செய்த சகாயம் மட்டும் அல்ல, பக்தர்களைச் சோதித்து காப்பாற்றி கரை சேர்த்த நாடகம் அல்ல, மதுரை ஆலயம் தன் வீடு எனக் காட்டிய நிரூபணம் மட்டுமல்ல‌.

அங்கே பல இரகசியங்களை சிவன் சொல்லிக் கொடுத்தார், வாழ்வுக்கு பலம் கொடுக்கும் பிரபஞ்ச இரகசியங்களைச் சொல்லிக் கொடுத்தார்.

நவரத்தின வகைகள் அவற்றின் பலன்களை ஒரு நாடகத்தில் விளக்கினார்; வேதங்களின் இரகசியத்தை இன்னொரு திருவிளையாடலில் சொன்னார்; குதிரைகளின் நுணுக்கமும் பயனும் வகையும் அவற்றால் வரும் நன்மை தீமையினை இன்னொரு ஆடலில் சொன்னார்.

அப்படி எப்படிப்பட்ட பெண்களை மனைவியாகக் கொள்ள வேண்டும், எந்த உருவில் இருக்கும் பெண் என்னென்ன பலன்களை அடைவாள் என்பதை இந்தத் திருவிளையாடலில் சொன்னார்.

இந்தப் பிரபஞ்சத்தில் எவ்வளவோ இரகசியங்கள் கொட்டிக் கிடக்கின்றன, எவ்வளவோ ஆற்றல்கள் மறைந்திருக்கின்றன.

அவற்றை அந்த இரகசியங்களை சிவன் சொல்லித்தந்த இடம் திருவிளையாடலில் நிரம்ப உண்டு. அப்படிப் பெண்களின் கர்மாவினை அவர்களின் அமைப்பு மூலம் சொல்லித் தந்த இடம் இது.

அதையும் தாண்டி இல்லற‌ வாழ்வு என்பது கர்மம் கழிப்பது. அந்த கர்மத்தைக் கழிக்கும் வாழ்க்கை துணயினை சிவனிடமே கேட்டு அவரிடம் இருந்து பெற்றுக்கொள்வதே சாலச் சிறந்தது என்பது இந்த திருவிளையாடலின் போதனை.

மதுரை ஆலயம் எல்லா வகையிலும் பிரசித்தியானது. அங்கே உங்களுக்கான நல்ல வாழ்க்கை துணையினைக் கேளுங்கள், மனமார சிவனிடமே கேளுங்கள், அந்த ஆலவாய் நாதனிடம் கேளுங்கள்.

நீங்களே ஒன்றைத் தேடி செல்வதை விட சிவனிடம் எது நமக்குப் பொருத்தமோ அதைத் தரச்சொல்லி சரணடைவது மிக மிக சரியானது.

உங்கள் குடும்பத்தில் மகன், மகள் என வரன் தேடலாம், பேரன் பேத்திகளுக்குத் தேடலாம், அது மகா முக்கிய கடமைகளில் ஒன்று.

அந்தக் கடமையினை நீங்களே சொந்த அறிவில் சொந்த முயற்சியில் செய்யாமல் நல்லதோ கெட்டதோ மதுரை ஆலவாயனிடம் சொல்லுங்கள், நன்மை ஒன்றே அவர் தருவார்.

சொக்கன் மீனாட்சி போல, உக்கிரபாண்டியன் காந்திமதி போல உங்கள் வம்சமும் நல்ல துணைகளுடன் இனிதே வாழ்ந்து கர்மம் கழிக்கும். அவர்களின் பூலோக வாழ்வே சொர்க்கமாகும். அவர்கள் ஆலவாயனுக்குச் சாட்சியாய் இருப்பார்கள். அந்த வரத்தை மதுரை ஆலயம் தரும். இது சத்தியம்.

திருவிளையாடல் புராணம் 30 : அரவம் காட்டிய நகர எல்லை.

மதுரையம்பதி என்பது யுகங்களைக் கடந்து நிற்பது. கயிலாயம், காசியினை விட பழமையானது. ஊழிக்காலத்தினைத் தாண்டி நிற்பது. அதாவது, இந்த உலகில் ஊழித்தாண்டவம் தாண்டி, யுகங்களைத் தாண்டி நிற்பது அதுவே. சிவன் தனக்குப் பிடித்தமான ஆலயத்தை, தான் வசிக்கும் சந்நிதியினை எக்காலமும் எல்லா அழிவிலும் இருந்தே காத்து வருகின்றார் என்பதைச் சொல்லும் திருவிளையாடல் இது.

மதுரையினை ஆண்ட சுகுண‌ பாண்டியன் சிவபதமடைந்த பிறகு, சித்திர விரதன், சித்திரபூஷணன், சித்திர துவஜன், சித்திரவர்மன், சித்திரசேனன், சித்திரவிக்கிரமன், இராஜமார்த்தாண்டன் ராஜசூடாணி.

இராஜசார்த்தூலன், துவிஜ ரஜலோ தான், ஆயோதனப்பிரவீணன், இராஜகுஞ்சரன், இராஜ பயங்கிர‌ரன், உக்கிரசேனன், சத்துருஞ்சயன், வீமரதன், வீமபரா பிரமன், பிரதாபமார்த்தாண்டன், விக்கிரமகஞ்சுகன், சமரகோலாகரன், அதுலவிக்கிரமன், அதுல கீர்த்தி என இருபத்திரண்டு மன்னர்கள் தலைமுறை தலைமுறையாய் சீரும் சிறப்புமாக ஆண்டனர்.

(இந்தக் காலக்கட்டத்தில் மானிட ஆயுளும் வாழ்வும் உருவமும் வேறுவகையாய் இருந்தது. மிக உயரமான மானுடர்கள் பல நூறு வருட காலம் வாழும் ஆயுள் பெற்றவர்கள் இன்னும் இப்போதைய மானுட குலத்துக்கு இல்லாத சில சக்திகளைக் கொண்டிருந்தவர்கள் அவர்கள்.

மானிட வாழ்வு அதிகம் 120 வருடம் எனச் சுருங்கி இன்னும் பல சரிவுகளை அது கண்டது. கலியுகத்திலே அன்றி அந்த யுகங்களின் வாழ்வு நீண்டிருந்தது. இதனால் இந்தக் கணக்கு பல்லாயிரம் வருடங்களைக் கொண்டது)

அதுலகீர்த்தியின் மகன் கீர்த்திபூஷணன் அரசாண்ட காலத்தில் பெரிய ஊழிப்பிரளயம் ஏற்பட்டது. இந்தப் பிரபஞ்சத்தைக் காக்கும் மகா சக்தி ஏதோ ஒரு காரணத்துக்காக இந்த உலகைச் சுத்தப்படுத்தி மீண்டும் ஸ்தாபிக்கும், அதன் காரணம் யாரும் அறிந்திருக்க முடியாது.

மானுடர் தங்கள் இல்லத்தை அடிக்கடி பழுதுப்பார்த்து கழுவிச் சுத்தப்படுத்தி வண்ணமிட்டு புதுப்பொலிவினைக் கொடுத்து மகிழ்வதை போல, இடையர்கள் மாட்டுத் தொழுவத்தை அடிக்கடி சுத்தப்படுத்துவது போல, விவசாயி தன் நிலம் அறுவடை முடிந்ததும் பயிர் பலனளித்ததும் மீண்டும் உழுது புதிய பயிரை வைப்பது போல இந்தப் பிரபஞ்சம் பூமியினைச் சுத்தப்படுத்தும். சில நேரம் மாற்றி அமைக்கும்.

இது அந்தப் பரமன் ஒருவனே அறிந்த இரகசியம். பூமியில் சில விஷயங்கள் எல்லை மீறிச் செல்லும் போது சில பாரங்களோ சுமைகளோ அதிகரிக்கும் போது, எதிர்காலக் கணக்குகள் செய்யப்படும்போது அல்லது ஏதோ ஒரு கணக்கு நிறைவடையும் போது அந்தப் பிரளயத்தை பிரபஞ்சம் செய்து எல்லாவற்றையும் அழித்து மீண்டும் படைக்கத் தொடங்கும்.

அப்படி ஊழிக்காலம் ஏற்பட்டு உலகம் அழியத்தொடங்கிற்று. ஏழு பெரிய சமுத்திரங்களும் பொங்கின; அடியாழ ஊற்றுக்கள் வெளிபட்டுப் பாய்ந்தன; நீரினால் இந்த உலகம் மூழ்கி அழிந்து போனது.

ஏழு சமுத்திரங்கள் பொங்கியதாலும் பூமியின் மேல்பாகம் அசைந்து பெரும் ஊற்றுக்கள் வந்ததாலும் பூமியின் தோற்றமே பல இடங்களில் மாறிப்போனது.

லாவன சமுத்திரம், இக்சு சமுத்திரம், சுர சமுத்திரம், சர்பி சமுத்திரம், தகி சமுத்திரம், ஸீர சமுத்திரம், சுத்தோதக சமுத்திரம் எனும் ஏழு கடல்களும் பொங்கி உலகை மூழ்கடித்தன‌.

உலகமே அழிந்துபோன அந்நேரம் மதுரையம்பதி அழிவில் இருந்து தப்பியது. ஆனால், மானுடரும் எல்லா உயிர்களும் படைப்புக்களும் அழிந்து போயின. பூமியினை வெள்ளம் மூடிய அக்காலங்களில் இந்த மதுரை ஆலயத்தைத் தவிர எல்லாமும் அழிந்து போயின. பெரும் வெள்ளம் வற்றியபோது பூமி மாறி இருந்தது.

ஆனால், இந்த ஆலய சந்நிதி மாறவில்லை. பொற்றாமரைக் குளம் மாறவில்லை. சிவன் தன் இல்லத்தை அப்படியே வைத்திருந்தார்.

அந்த அழிவு சக்திப்படி உலகை அழித்த இறையனார் பின் தன் சித்தப்படி படைப்புத் தொழிலைச் செய்தார், முன்பு போல் உலகைப் படைத்தார்.

எல்லா உயிர்களையும் மானுடர்களையும் உருவாக்கினார். அப்படியே அக்னியில் இருந்து சேர குலம், சூரியனில் இருந்து சோழர் குலம், சந்திரனில் இருந்து பாண்டிய குலத்தை தோற்றுவித்தார்.

அந்தப் பாண்டிய குல மன்னனாக வங்கிசேகர பாண்டியன் தோன்றினான். அவன் அந்தக் கோவில் யுகங்களுக்கு முன்பானது, சிவனின் தனி இஷ்டமானது என்பதை அறிந்து தன் நகரை அந்த ஆலயத்தைச் சுற்றி உருவாக்கினான்.

அவனின் நல்லாட்சியில் எல்லா வளமும் பெருகிற்று. வளம் பெருகியதால் எங்கிருந்தெல்லாமோ வந்து மக்கள் பெருகினார்கள். அரசனுக்கு நகரை விரிவாக்கம் செய்து எல்லையிட்டு மதில் கட்டும் அவசியம் வந்தது.

மன்னன் யோசித்தான்.

இது தன் பூமி அல்ல, தான் உருவாக்கிய பூமி அல்ல. இது சிவனின் பூமி. அவர் சார்பாக முன்னோர்கள் ஆண்ட பூமி, தனக்கு இங்கு வாழவும் ஆளவும் வாய்ப்புக் கொடுக்கபட்டதேயன்றி இங்கு எதையும் மாற்றும் உரிமை இல்லை என்பதை உணர்ந்தான்.

அவன் முன்னோர்கள் கண்ட மதுரையின் எல்லையினை அறிய விரும்பினான், சிவன் இந்த மதுரையின் மன்னர் எனும் வகையில் எல்லை அவர் இட வேண்டியதே.

இன்னொன்று சில சாஸ்திர விதிகள் படி மதில்களும் நகரமும் சில சரியான அமைப்புக்களைக் கொண்டிருக்க வேண்டும், அது வாஸ்து எனப் பின்னாளில் அழைக்கப்பட்டாலும் எக்காலமும் அந்த உண்மை உண்டு.

வீடு கட்டுவது போல நகருக்கு எல்லையிட்டு மதில் எழுப்புவதும் சரியான அளவில் சரியான விகிதத்தில் அமைதல் வேண்டும், அது சரியாக இருந்தால்தான் தலைநகரம் சரியாகக் காவலாக வாழும்.

அது வாழ்ந்தால் மன்னன் வாழ்வான், மன்னன் வாழ நாடுவாழும், இந்தச் சாஸ்திர அளவுகள் முக்கியம். மிகச் சரியான அளவில் அந்த எல்லையும் சுவரும் சரியான அளவுகளுடன் அமைதல் வேண்டும், நில அளவும் சில கோண விகிதங்களும் முக்கியம்.

அப்படி அமையப்பெற்றால் அந்நகர் வாழும் இல்லையேல் குழப்பம், வன்முறை, போர், தீரா நோய், இனம்புரியா கலகம் என அது நிம்மதி இழக்கும், இந்துக்கள் கண்ட உண்மை இது.

இதனால் சோமசுந்தர பெருமான் ஆலயம் சென்றவன் பணிந்து தொழுது சொன்னான்.

“எம்பெருமானே, இந்த மதுரையினைப் பெரிதாக்க விரும்புகின்றேன். ஆனால், பழைய மதுரையினை நான் அறியேன், அதன் அகல நீளமெல்லாம் நான் அறியேன்.

இது உமது மண் எனும் வகையில் நீர் எல்லாமும் அறிந்தவர், காலம் காலமாக அறிந்தவர். நானோ ஏதும் அறியாத அற்ப மானுடன். அதனால் நீரே எம் முன்னோர்க்கு நீர் இட்ட எல்லைகளைக் காட்டித் தருவீராக. நான் இங்கு வெறும் தற்காலிக அரசன் நீரோ இந்த மண்ணின் நிரந்தரமான பேரரசன்.

இம்மக்களை காக்கும் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. அவர்கள் பெருத்துவிட்டார்கள் இனி நகரை பெரிதாக்கி மதில்கட்டி இவர்களைக் காக்க வேண்டும்.

பரம்பொருளே, எனக்கு இந்த மதுரையின் எல்லைத் தெரியவேண்டும், அப்படியே நல்ல அமைப்பில் சரியான வாஸ்துவில் இந்தச் சுவர் அமைந்து நகருக்குச் சுபிட்சமும் அமைதியும் செழுமையும் பெருக வேண்டும்.

அதனால் உமது ஆட்சி நடக்கும் இம்மதுரையின் எல்லையினை எமக்குக் காட்டித் தருவீராக” என மன்றாடினான்.

அப்போது சிவன் ஒரு சித்தர் வடிவில் அங்கே தோன்றினார். அரையாடை அணிந்திருந்தவர் தலையில் ஜடாமுடி தொங்கிக் கொண்டிருந்தது. வெண் தாடி கழுத்துவரை இருந்தது. உடலெல்லாம் திருநீறு மிளிர்ந்து கொண்டிருந்தது.

கழுத்தில் கையில் நாகங்கள் நிரம்ப இருந்தது.

மன்னர் முன் வந்து நின்றார் சித்தர். மன்னன் அவரை வணங்கினான். அவனோடு மன்னர்களின் பரிவாரமும் வணங்கிற்று.

சித்தர் அவனிடம் சொன்னார், “மன்னா, இந்த நாகம் பழைய எல்லையினை உனக்குக் காட்டும், அது சுருண்டு கிடக்கும் இடம் மூலைகளாகும், அது நீண்டுக் கிடக்குமிடம் உன் வாசல்களை அமைப்பாய்.

இந்த ஆலகால விஷத்தை வாயில் கொண்ட நாகம் உனக்கு வழிகாட்டும்” எனச் சொல்லி கையில் இருந்த நாகத்தை இறக்கிவிட்டார்.

நாகம் வேகமாக தென்கிழக்கு பக்கமாக நகர்ந்தது, மன்னன் தன் பரிவாரங்களுடன் பின் தொடர்ந்தான்.

முன்னேறிய நாகம் ஒரு இடத்தில் சுருண்டு கிடந்தது, கொஞ்ச நேரம் அப்படியே கிடந்தது. அது சுருண்ட இடத்தில் தடையம் இருந்தது, அது தெற்கு நோக்கி நகர்ந்தது, மன்னன் ஒரு கல்லை அங்கு வைத்தான்.

தெற்கு நோக்கி சென்ற நாகம் ஒரு இடத்தில் நீண்டுக் கிடந்தது அதன் நீண்ட தடம் அப்படியே அழுத்திப் பதிந்தது, பின் அது மேலும் தெற்கே சென்று சுருண்டுக் கிடந்து மூலையினை அடையாளம் காட்டியது.

மன்னன் பதிபக்தியாய் பின்சென்றான், அவன் பரிவாரங்கள் இன்னும் பக்தியாய்ச் சென்றன‌.

இப்படி நான்கு மூலைக்கும் நாகம் அடையாளம் காட்டிய பின் அந்தச் சித்தரை அடைந்தது, அவர் கரங்களை நீட்ட அது அவர் கரங்களில் சுருண்டுக் கொண்டது.

உடலெல்லாம் நாகங்கள் நெளிய அந்தச் சித்தர் சொன்னார், “மன்னா, இதோ உனக்கு இந்நகரின் எல்லைகள் இந்த நாகத்தால் காட்டப்பட்டது, ஆலம் எனும் விஷத்தை வாயில் கொண்டதால் இதனை ஆலவாயன் பட்டணம் என இதற்குப் பெயரிடுவாய்” என உத்தரவிட்டார்.

மன்னன் பணிந்து அதனை ஏற்றுக்கொண்டான், சித்தர் கை உயர்த்தி அவனை ஆசீர்வதித்தார். அவருடன் இருந்து நாகங்களும் அவனை வாழ்த்தின‌.

மன்னன் நாகம் குறித்த எல்லைகளின் படி பெரிய மதில்களைக் கட்டினான். வாசல்களை கட்டினான். அழகான தோரணமும் எழில் மிகு வாசல்களும் கொண்ட பட்டணமாக அது ஜொலித்தது.

நாகத்தைச் சொந்த நிலத்தில் கண்டால் நல்லது எனும் இந்துக்களின் பாரம்பரிய நம்பிக்கை இங்கிருந்தே உருவானது. இன்றும் சொந்த நிலத்தில் நாகத்தைக் காண்பது நல்ல ஐஸ்வர்யத்தின் அடையாளம்.

இந்த நகரம் “ஆலவாய் பட்டணம்” என இந்திரனின் அமராவதி போல் மிக வளமனாதாய் இருந்தது, குபேரனின் அளகாபுரி போல் செல்வமிக்கதாய் திகழ்ந்தது.

வங்கிசேகர பாண்டியன் சிவனின் அருளில் நல்லாட்சி நடத்தினான். அவன் பெயரும் கீர்த்தியும் நாட்டின் செல்வமும் ஐஸ்வர்யமும் மென்மேலும் பெருகி எல்லாத் திசையும் எட்டிற்று.

இதுதான் அரவம் காட்டிய நகர எல்லை.

இந்தத் திருவிளையாடல் நாகம் வந்து எல்லைகளைக் காட்டியது, சிவனே வந்து தன் மண்ணில் பக்தனுக்கு எல்லையினை அடையாளம் காட்டினார் என்பதோடு முடிவது அல்ல‌.

ஆழ்ந்த தத்துவங்களைப் போதிப்பது.

முதலாவது, இங்கு எல்லாமே தோன்றி மறையும், மறைந்து தோன்றும். சிவன் ஒருவரே நிரந்தரமானவர் என்பதை முதலிலே சொல்கின்றது.

மற்ற எல்லாமே அவரில் தோன்றி அவரிலே ஒடுங்கி அவரிலே மீண்டும் தோன்றுகின்றது. இந்த அலகிலா விளையாட்டு காலம் காலமாய் நடக்கின்றது.

சிவன் எக்காலமும் நிலைத்திருப்பவர், அப்படியே அவரின் மதுரையம்பதி ஆலயமும் யுகங்களைத் தாண்டி நின்று அருளாசி வழங்குகின்றது, எக்காலமும் எல்லா யுகத்திலும் மதுரை உண்டு.

அந்தச் சொக்கனின் ஆலயம் அக்காலம் இக்காலம் வருங்காலம் என எக்காலமும் நின்று எல்லா மக்களுக்கும் ஆசி வழங்கும். அங்கே என்ன கேட்டாலும் எப்போது கேட்டாலும் அவரை நம்பிக் கேட்டால் கிடைக்கும்.

இந்த ஆலயத்தில் மன்னன் நின்று தன் குறையினைச் சொன்னான். அவனுக்குத் தன் வம்சம் தெரியாது, மூதாதையர் தெரியாது, இந்த மதுரையின் முந்தையவடிவம் தெரியாது.

அவன் தன் பராகிரமத்தில் ஒன்றை செய்யவிரும்பாமல் பழையதை மீட்டுத் தரும்படி சிவனிடமே சென்றான், சிவனும் அவனுக்கு இழந்ததைக் கொடுத்தார்.

ஆம். இந்த ஆலயம் எதை இழந்தோமோ அதைத் திரும்பக் கொடுக்கும்.

காலம் எதை உங்களிடம் இருந்து பறித்ததோ அதைத் திரும்ப கொடுக்கும் ஆலயம் இது. நிறைவாய் இறை சித்தப்படி கொடுக்கும் ஆலயம் இது. நம்பினால் அந்த அதிசயம் உங்கள் வாழ்விலும் நடக்கும்.

ஆன்மீக வாழ்வில் இந்தத் திருவிளையாடல் ஒரு சூட்சுமான போதனை, மிக மிக நுணுக்கமான பாடம்.

ஒரு ஆத்மா மறுபிறப்பு எடுக்கும் போது அதற்கு எல்லாமும் மறந்துவிடுகின்றது, கர்மவினை காரணமாக அது புதிய பிறப்பெடுக்கும் போது அது குழம்பி நிற்கின்றது.

ஏற்கனவே வாழ்ந்த உலகுக்குப் புதிதாக வரும்போது எல்லாமே அதற்கு மறந்து வழி தெரியாமல் திசை தெரியாமல் எங்கு முடிப்பது எங்குத் தொடங்குவது எனத் தடுமாறுகின்றது.

எந்த ஆத்மா அப்படித் தடுமாறி சிவனை அடையுமோ அங்கே அதற்கு அருள் கிடைக்கும்.

குண்டலினி எனும் பாம்பு எழும்போது, சிவனை நினைத்து வழிபட்டு யோகத்தில் நிலைக்கும் போது குண்டலினி நாகம் எழுந்து அவன் யார் எனக் காட்டும்.

முந்தைய வாழ்வின் நிலையினைச் சொல்லி பலனைச் சொல்லி, இந்த பிறப்பில் அவன் எல்லை எது? எதுவரை அவன் இப்போதைய கர்மா என எல்லாமும் எல்லையிட்டுக் காட்டி அவன் வாழ்வினை திட்டமிட்டுக் கொடுக்கும்.

அவன் கர்மத்தின் எல்லைக்குள் அவனை வழிநடத்தும்.

யோகத்தில் சிவனோடு கலப்பவன் உள்ளே குண்டலினி எனும் நாகம் எழுந்து அவனுக்கு வழிகாட்டி இறைவன்பால் சேர்க்கும். எந்த கர்மத்தால் அவன் பலவற்றை இழந்தானோ, அந்த ஜீவாத்மா பரமாத்மாவினை அடையமுடியாமல் போனதோ அதைத் தீர்க்கும் வழி சொல்லி அது அவனை இறைவனை அடையும் வழியினைச் சொல்லும்.

இழந்த கயிலாயத்தை முக்திநிலையினை அது மீட்டுக் கொடுக்கும்.

ஆம். சிவனை அண்டினால் எல்லாம் மறந்து கலங்கும் ஆத்மாவுக்கு குண்டலினி எனும் நாகம் ஆன்மீக வாழ்வில் வழிகாட்டும் என்பதை உரக்கச் சொல்லும் திருவிளையாடல் இது.

மதுரை ஆலயத்தில் சொக்கனை வழிபடும் போது, ஆலவாய் நாதனிடம் வழிபடும் போது லௌகீகமாய் என்ன இழந்தீர்களோ அதைத் திரும்ப பெறுவீர்கள், எப்போதோ எப்பிறப்பிலோ இறந்ததை மீளப் பெறுவீர்கள், சிவனே அதற்கு வழிகாட்டி வருவார்.

அப்படியே ஆன்மீக வாழ்வில் ஆத்மா தான் யார் எனத் தெரியாமல், எங்கு எப்படி வாழ்வது? தன் எல்லை எது? தான் யார் எனத் தெரியாமல் தவிக்கும் நிலையில் குண்டலினி நாகத்தை எழுப்பி சிவனே அந்த ஆத்மாவினை யோக நிலையில் நடத்திவருவார். இது சத்தியம்.

அப்படித்தான் அந்த ஆலயத்தில் இருந்து எவ்வளவோ அடியார்கள், ஞானிகள், பெரும் பெரும் சிவனடியார்கள் வந்தார்கள். தங்களை உணர்ந்தார்கள். இன்னும் நாயன்மார்கள் வந்தார்கள், இக்காலத்தில் குமரகுருபரர் முதல் பலர் வந்து உதித்தார்கள், அதன் சக்தி எக்காலமும் அப்படியானது.

திருவிளையாடல் புராணம் 31 : கணையில் பெயர் பொறித்த படலம்

வங்கி சேகரன் மதுரையில் கோட்டைக்கட்டி, சிவனின் நாகம் காட்டிய எல்லைப்படி கோட்டைக்கட்டி பெருவாழ்வு வாழ்ந்தான். ஒரு மன்னன் பெரும் செல்வத்தோடு வாழும் போது எதிரிகள் பெருகுவது இயல்பு.

அப்படி பாண்டியனுக்குச் சோழன் விக்ரமன் என்பவன் எழுந்தான். அவனுக்கு மதுரையின் பெரும் செல்வத்தைக் கொள்ளையிட்டுச் செல்வம் கொழிக்கும் நாட்டில் தன் ஆட்சியினை நிறுவும் ஆசை எழுந்தது‌.

ஊழிக்காலம் முடிந்து மானுட இனம் புதிதாக எல்லாம் உருவாக்கிய காலத்திலும் அந்த அடிப்படை மனம் மாறவில்லை, அந்தக் குணம் மாறாது.

ஆசையும் மயக்கமும் அது செய்யவைக்கும் காரியங்களும் எக்காலமும் உண்டு, மானுட இனம் உள்ளவரை உண்டு.

அதனால் அரசுகள், அதிகாரப் போட்டிகள், போர்கள் எல்லாம் மானுடம் உள்ளவரை உண்டு.

செல்வமிகு நாட்டைக் கொள்ளையிடச் சக்தி கொண்டவன் முயல்வதும், அவனால் முடியாவிட்டால் கொள்ளையில் பங்கு என ஆசைக்காட்டி சிலரை அழைத்துவருவதும் எக்காலமும் உள்ள வழமை.

அப்படி விக்ரம சோழன், பாண்டிய நாட்டைக் கொள்ளையிட பெரும் அணிதிரட்டினான். அவன் படையில் வடநாட்டு மன்னர்கள் இணைந்தார்கள், பெரிய படையாக அது கடல் போல் நின்றது.

சோழன் தெற்கு நோக்கி நகர்ந்தான், அவன் பெரும் படையும் கடல் அலை போல் ஆர்ப்பரித்து முன்னே வந்து கொண்டிருந்தது.

பெரும் படை திடீரென சூறாவளிபோல் வருவதினைக் கண்ட வங்கிய சேகரன் அஞ்சினான், அவன் யுத்தத்தை எதிர்பார்க்கவுமில்லை, அதற்கான தயாரிப்பிலுமில்லை.

ஒரு வலுவான சேனை உருவாக சில மாதங்களாவது ஆகும். வீரர்களைத் திரட்டி பயிற்சி அளித்து குதிரைகள், யானைகள் வாங்கி அவற்றைப் பழக்கி இன்னும் ஆயுதம் செய்வது, படைகளுக்குத் தேவையான பொருட்களை உணவு வரை ஏற்பாடு செய்வது என்பது பெரும் காலம் எடுக்கும் காரியம்.

இதனால் அவன் மிக அஞ்சினான். இருக்கும் படையினைக் கொண்டு வெல்வது என்பது முடியாது. கோட்டை இருப்பதால் கொஞ்ச காலம் தாக்குப்பிடிக்கலாம். ஆனால் கோட்டை வீழ்ந்தாலோ, முற்றுகை தளர்ந்தாலோ ஒன்றும் செய்துவிட முடியாது.

தன்னால் இனி மக்களையும் தன்னையும் காக்கமுடியாது என அஞ்சியவன் ஓடிச்சென்று ஆலவாயன் சன்னதியில் சரணடைந்தான்.

“எம்பெருமானே, எதிர்பாரா ஆபத்தில் சிக்கிக் கொண்டேன், எதிரிகளின் நோக்கம் அறியாமல் அவர்களை உளவு பார்த்துதயாராகாமல் இங்குக் கோட்டை கட்டுவதிலே கவனமாகிவிட்டேன்.

ஆனால், நான் செய்த தவறை எதிரிகள் செய்யாமல் கூடிவிட்டார்கள். என் பலவீனம் அறிந்து ஒன்று சேர்ந்து நிற்கின்றார்கள், நான் இப்போது என்ன செய்வேன்?

எம்பெருமானே நீரே இனி இந்த ஆலவாய் பட்டணத்தையும் அதன் மக்களையும் காக்கவேண்டும்” எனப் பணிந்தான்.

அப்போது ஒரு அசரீரி கேட்டது, “மன்னா கலங்காதே, தைரியமாக யுத்தத்துக்குச் செல்வாய். வெற்றி உனக்கே, யுத்தம் என்னுடையது” என்றது.

அந்தச் செய்தி கேட்டதும் மரணப்படுக்கையில் கிடப்பவனுக்கு மருந்து கிடைத்து அதனால் நலம் பெற்றவன் போல் எழுந்தான் பாண்டியன்.

அவனிட்ம இருக்கும் சேனையினைத் தயார் செய்தான். அவனும் தயாரானான். ஆலவாயன் சந்நிதியில் வணங்கிய அவன் சேனை “ஆலவாயன் நம்மோடு” எனச் சொன்னபடி களத்துக்கு வந்தது.

அங்குப் பெரும் போர் மூண்டது. பாண்டியனின் கனத்த யானைகள் பிளிறியபடி முன்னேறின. குதிரைகள் கனைத்தபடி புகுந்தன‌.

பாண்டிய மறவர்படை தீரம் காட்டிற்று, இரு படைகளும் இரு மேகம் போல் மோதிக்கொண்டு கலக்கத் தொடங்கின‌.

ஆனால், சோழன் கடுமையான தயாரிப்பில் வந்திருந்தான். அந்த விக்ரமசோழனின் ஆணைக்குக் கட்டுப்பட்ட வடதேச படைகள் பல வியூகங்களில் தாக்கின‌.

அந்தத் தாக்குதலில் பன்முனை தாக்குதலில் பாண்டியன் தடுமாறினான். அவன் தடுமாற்றம் கண்ட சோழன் இன்னும் வேகமாக தாக்கினான்.

சோழப்படைகளின் பெரும் தாக்குதலில் பாண்டிய படைகள் திகைத்தன. அதுவரை தாக்கிய பாண்டிய படைகள் பின் தற்காப்பில் ஈடுபட்டன‌.

மின்னல் போல் பாயும் ஈட்டிகள் ஒருபக்கம், மழைபோல் பொழியும் அம்புகள் இன்னொருபக்கம், புகுந்து வளைத்து அடிக்கும் சோழ குதிரைகளின் வியூகம் ஒருபக்கம் எனப் பாண்டியன் திகைத்தான்.

யுத்தம் சோழர்பக்கம் சாய்ந்தது. சிவன் வாக்குப்படி நம்பிக்கையாய் போரிட்ட பாண்டியனுக்கு வெற்றி விலகிச் சென்றுகொண்டே இருந்தது.

இனியும் களத்தில் நின்றால் பாண்டியன் உயிருக்கே ஆபத்து என்பதால் அவனைத் தளபதிகள் பின்வாங்கச் சொன்னார்கள்.

அவன் மறுத்தான், “சிவனே.. ஆலவாயா..என்னை ஏன் கைவிட்டாய்” என அலறினான். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

தளபதிகள் அவனை வேகமாக பாதுகாத்து கோட்டைக்குள் அனுப்பும்படி வேகமாக பின்வாங்கினார்கள், கோட்டை நோக்கி விரைந்தார்கள்.

கடும் காவலோடு பாண்டியன் கோட்டைக்குள் போக முயல்வதை கண்ட சோழன் அதைத் தடுக்க பெரும் படைகளை ஏவினான். எனினும், அதை முறியடித்து பாண்டியபடை கோட்டையினை நெருங்கிற்று.

பாண்டியன் மிகச் சோர்ந்து போனான். கோட்டைக்குள் அவன் சென்றுவிட்டால் அடுத்து சோழனின் முற்றுகை, அதைத் தொடர்ந்து நிச்சயம் படுதோல்வி எனக் காட்சி மாறிவிடும்.

கோட்டை அருகே வந்தவன் திரும்பிப் பார்த்தான். அங்கே பாண்டிய கொடி வீழ்ந்து சோழ கொடி எழுந்து கொண்டிருந்தது.

“ஆலவாயா .. உன் வாக்கும் பொய்யோ, நீயும் பொய் உரைப்பாயோ” என அவன் மாபெரும் குரலில் கத்தில் அலறி கலங்கி நின்றான்.

இனி போராட என்ன உண்டு என அவன் சோர்ந்து வாளை கீழே விட்டு குதிரையிலே கவிழ்ந்து கொண்டான்.

சோழன் வெற்றி சங்கு ஊதினான், சோழ சேனை பெரும் ஆரவாரம் செய்தது.

சோர்ந்துபோன பாண்டியர் பக்கம் அவர்கள் கோட்டை கதவு திறக்க தயாரானது, அந்நேரம்தான் அந்த அதிசயம் நடந்தது.

பாண்டியர் கோட்டை கதவு திறந்த நேரம் சோழர்களும் வேகமாக உள்ளே வர முயன்று சீறினர். திறந்த கதவு வழியாக புகுந்துவிடும் அல்லது கோட்டை வாசலை கைப்பற்றும் வேகம் இருந்தது.

பயிற்றுவிக்கபட்ட சோழப்படை குதிரைகள் தடைகளைத் தாண்டி அசத்தின, பாண்டியர் இன்னும் திகைத்துக் கலங்கினார்கள்.

அந்நேரம் அரசன் அருகில் ஒரு வீரன் வந்தான், அவன் கையில் வில்லும் முதுகில் அம்புகளும் இருந்தன, ஆறடி உயரமும் தலையில் கொண்டையும் நெற்றியில் திருநீறும் அணிந்திருந்தான்.

போருக்கான கவசத்தில் பெயருக்கு ஏதோ அணிந்திருந்தான்.

அவன் தன் வில்லின் நாணை தட்டினான், அந்த ஓசை இடிபோல் இருந்தது, பாண்டியன் திரும்பிப் பார்த்தான். சோழபடைகள் ஏதோ இடி எனத் திகைத்தன‌.

அவன் தன் வில்லில் பாணத்தை பூட்டி ஏவினான், அது பலவாய் பிரிந்து சென்று சோழப் படையினைத் தாக்கியது.

முதலில் அதனை யாரும் நம்பவில்லை, சரியாக பார்க்கவும் முடியவில்லை. அடுத்த அஸ்திரத்தை அவன் ஏவும்போதுதான் திகைத்துப் போனார்கள்.

அவன் ஏவும் கணை ஒரே நேரத்தில் பலரைக் கொன்றது, ஒரே வில்லில் ஏகப்பட்ட அம்புகளை ஏவும் வித்தைகாரனோ என அவனை நோக்கினார்கள்.

அவனோ மின்னலிலும் வேகமாக எய்து கொண்டிருந்தான். அதைக் கவனமாகப் பார்த்தபோது நடுங்கிப் போனார்கள். கையில் இருந்த ஆயுதங்களை விட்டு ஒடுங்கி நின்றார்கள்.

காரணம், அது அவர்கள் என்றல்ல, யாருமே அதுவரை ஏன் இன்றுவரை காணாத அதிசயம்.

ஆம். அவனின் ஒரு அம்பு பல அம்புகளாகப் பிரிந்தது. பிரிந்தவையும் நேராகச் செல்லாமல் பாம்பு போல் வளைந்து தாக்கிற்று.

இந்தத் தாக்குதலை யாராலும் சமாளிக்க முடியாது என அஞ்சியவர்களை நோக்கி சோழன் வந்தான், வந்தவன் அந்த அம்புகளில் ஒன்றை தனக்குத் தரும்படி கேட்டான்.

வீழ்ந்து கிடந்த வீரனின் உடலில் இருந்த அம்பு ஒன்றை எடுத்து அவனிடம் கொடுத்தார்கள். பொதுவாக ஒரு ஆயுதத்தில் அந்த நாட்டின் லட்சினை இருக்க வேண்டும் என்பது அந்நாளைய விதி

போரில் பயன்படும் ஆயுதத்தில் அந்தந்த நாட்டு லட்சினை இருக்கும்.

இவ்வகை ஆயுதம் பாண்டியநாட்டை சார்ந்ததாய் இராது எனச் சந்தேகம் கொண்ட சோழன் அதை உற்று நோக்கினான், அந்த அம்பிலே சுந்தரேசன் என எழுதியிருந்தது.

சுந்தரேசன் என்பவன் எந்த நாட்டு மன்னன் என முதலில் யோசித்தவன் திகைத்தான். குழம்பினான். பின் கண்களை மூடி சிந்தித்தபோது அவனும் சிவபக்தன் என்பதால் திடுக்கிட்டான்.

இப்போது அந்த வீரனைக் கண்டான், அவன் ஒரு மர்மப் புன்னகை கண்டது இவனுக்கு விளங்கிற்று.

அவன் யுத்தத்தை உடனே நிறுத்தச் சொன்னான். ஆனால், கண்ட காட்சியினை வாய்விட்டு சொல்ல மனமில்லாமல் நின்றான், சொன்னால் யாரும் நம்பப்போவதுமில்லை என்பது போல் நின்றான்.

அவன் போரை நிறுத்தச் சொன்னான், உடனே நிறுத்தச் சொன்னான்.

ஆனால், அவனோடு வந்த இதர அரசர்கள் மறுத்தனர், பாண்டியன் பின்வாங்கியிருக்கும் இந்நேரம் அவனை விடக் கூடாது எனப் பாய்ந்தார்கள், சோழனோ செய்வதறியாது நின்றான்.

அவர்கள் முன்னேறி வரும் போது அந்த வீரன் தன் கணைகளை இன்னும் வேகமாக்கினான். ஒரே ஆறு கிளைகளாய் பிரிவது போல் அவன் கணைகள் பிரிந்தன. அதுவும் பெரும் காட்டாறு அருவியாய்க் கொட்டிச் சிதறுவது போல் அவனின் அம்புகள் பாய்ந்தன‌.

ஒரே அம்பு நூறாய் ஆயிரமாய்ப் பிரிந்தது. ஒரே அம்பு பலவாய்ப் பிரிந்து ஈட்டி போல் யானைகள் மேல் பாய்ந்தன‌.

வீரர்கள் சரிந்தார்கள், யானைகள் பிளிறிச் சரிந்தன, குதிரைகள் விழுந்தன‌.

எங்கும் யாராலும் அம்புகளைத் தடுக்க முடியவில்லை. எங்கிருந்து வருகின்றது என்பது கூடத் தெரியவில்லை. கேடயத்தைக் கொண்டு முழுக்க மூடி சுவருக்குள் அமர்ந்தது போல் அமர்ந்தாலும் அவை தலைக்கு மேல் வந்து விழுந்தது.

இனியும் தாக்குப்பிடிக்க முடியாது என்பதை அறிந்து பகைவர்கள் ஓடத் துவங்கினார்கள். அந்தக் களமே வீழ்ந்த வீரர்கள், விலங்குகள் ரத்தம் குடல் சதையாக கிடந்தது. நரிகளும் கழுகுகளும் சூழத் தொடங்கின‌.

எதிரிப்படைகள் ஓடின. சோழனும் அந்த மண்ணை தொட்டு வணங்கிவிட்டு ஓடினான், அவன் யாரிடமும் எதுவும் பேசாமல் அமைதியாய் சிலைபோல் சென்றான்.

அவன் முன்னால் சுந்தரேசன் எனப் பெயர் பொறிக்கப்பட்ட அம்பு வைக்கபட்டிருந்தது. அதைப் பார்த்துக் கொண்டே சென்றான் விக்ரம சோழன்.

பாண்டிய சேனை வெற்றி சங்கை ஊதிற்று, மன்னன் வெற்றிப்பெற்றதால் வாகை பூ சூட்டப்பட்டு மாலையிடப்பட்டது. எங்கும் பெரும் ஆரவாரமும் மகிழ்வும் வந்தன‌.

மன்னனோ அந்த வீரனைத் தேடினான், அவன் தன் வில்லின் நாணைக் கழற்றி கொண்டிருப்பதை கண்டான், தன் வீரர்கள் புடைசூழச் சென்றவன் “வீரனே நீ யார்? எங்கிருந்து இந்த அரிய கலையினை கற்றாய், யார் உன் குரு?

நீ வா, உன்னை என் அரண்மனையில் கௌரவிக்கின்றேன்” என அழைத்தான்.

வீரனோ மெல்லச் சிரித்தான். பின், சத்தமாய் சிரித்தான். பின், உற்சாகமாய் சிரித்தவன், “மன்னா சற்று நேரத்துக்கு முன் என்ன சொன்னாய்” எனச் சொல்லிவிட்டு மறைந்தே போனான், சட்டென மறைந்தான்.

மன்னனுக்கு வந்தது யார் என விளங்கிற்று, அவசரமாய் ஆலவாயன் சந்நிதி நோக்கி ஓடினான்.

“சிவனே, நான் பின்வாங்கும் போது உன்னை நோக்கி அபச்சாரமாய் பேசியது பெரும்தவறு, என் தெய்வமே நான் உம்மை நம்பாமல் நான் அபச்சாரமாய் பேசிவிட்டேன், என்னை மன்னித்துவிடு” எனக் கதறினான்.

அங்கே ஒரு ஒளி தோன்றி மறைந்தது. எல்லோரும் கரம் குவித்து வணங்கி நின்றனர். மன்னன் நா தழுதழுக்க இறைவனைப் பணிந்து நின்றான். பின் பெரும் விழா எடுத்தான்.

அதன்பின் எந்த ஆபத்துமின்றி அவன் பெரும் பலத்துடன் எதிரிகள் அச்சுறுத்தல் இன்றி ஆட்சி செய்து சிவனைக் கொண்டாடினான்.

இதுதான் சிவன் கணையில் பெயர் பொறித்த படலம், சிவன் தன்னை நம்பியவரை எப்படியும் காப்பார் என்பதும், எந்நிலையிலும் அவர்களைக் கைவிடமாட்டார் என்பதும் இந்தத் திருவிளையாடலில் நிரூபிக்கப் பட்டது.

வங்கிய சேகரன் சிவனைத் தவிர எதையும் சிந்திக்கவில்லை, அவன் மனமும் செயலும் சிவனாகவே இருந்தார். நகர எல்லை தெரியா நிலையில் சிவனை அழைத்த அவனே, சோழன் பெரும் ஆபத்தாக வரும்போதும் சிவனை அழைத்தான்.

சிவன் அவனுக்கு நல்வாக்கு சொன்னார்.

ஆனால், அவன் ஒரு சோதனை வந்தவுடன் சிவனை நம்பவில்லை. தன்னை கைவிட்டதாக எண்ணி நொந்தான், சிவன் தன்னை கைவிட்டுவிட்டார் என நம்பிக்கையற்று சொன்னான்.

பின், சிவனே வந்து அவனுக்காக ஆச்சரியமாக போரிட்டு அவனைக் காத்தபின்பே மீண்டும் மன்னிப்பு கேட்டு நம்ப தொடங்கி பணிந்தான்.

சிவன் எனும் பெரும் தெய்வம் எல்லாக் காலத்திலும் எல்லா நிலையிலும் தன் இயல்பில் மாறாதவராய் இருக்கின்றார். ஆனால், பக்தனின் மானுட மனம் தடுமாறும். அது அலைபாயும்.

அது நம்பிக்கை அவநம்பிக்கை என மாறி மாறி ஊசலாடுகின்றது, நிலையாய் நிற்பதில்லை.

ஆனால், சிவன் தன் பக்தனை மறப்பதில்லை. தன் வாக்கையும் பொய்க்கவிடுவதில்லை.

இங்கே சோழன் மானுடபலம் எல்லாம் திரட்டி வந்தான், மானுட ரீதியாக அவனே பெரும் பலசாலியாக நின்றான். அவனிடம் மானுட பலத்தில் பாண்டியன் தோற்றான்.

ஆனால், தெய்வபலம் இறங்கிவந்து அவனைக் காத்தது, தன் சக்தி என்ன என்பதை மானுட பலத்துக்கு அப்பால் சிவன் காட்டினார்.

சிவனை நம்புவோர் ஒரு காலமும் கெட்டுப்போவதில்லை, அவன் பகைவர் வெவ்லது இல்லை. நம்பியவருக்கு சோதனை வரும் அப்படியே எதிரிக்கு கிடைப்பது தற்காலிக வெற்றியே, நிரந்தர வெற்றி சிவனுக்கும் அவரை முழுக்க நம்புவோர்க்கே என்பதை சொல்லும் திருவிளையாடல் இது.

தன் பக்தர்களோடு சிவன் விளையாடுவாரே தவிர அவர்களைக் கைவிடமாட்டார் என்பதைச் சொல்லும் காட்சி இது.

எதிரிகள் யாராகவும் இருக்கட்டும், அவர்கள் மிக மிக பலமானவர்களாக சக்திவாய்ந்தவர்களாக இருக்கட்டும். உங்களால் மோதி வெல்லமுடியாதவர்களாகவே இருக்கட்டும்.

கவலை கொள்ளாதீர்கள். இந்த ஆலவாயனை நம்பி நில்லுங்கள். எதிரி யாராக இருந்தாலும் அவர் அடக்கித் தருவார். உங்களைக் காப்பார், நீங்கள் செய்யவேண்டிய ஒரே காரியம் எந்நிலையிலும் நம்பிக்கையாய் காத்திருப்பது, அந்த நம்பிக்கை உங்களைக் காக்கும்.

தன்னை நம்பியவன் இடையில் அவநம்பிக்கை கொண்டாலும் தன் வாக்குக்காய் அவனை காக்க வந்த சிவன், தன்னை நம்பும் பக்தனைக் கைவிடுவாரா என்ன?

லௌகீக வாழ்வில் சிவனை முழுக்க நம்பும் போது உங்கள் பிரச்சினைகளை ஆச்சரியமான முறையில் சிவன் தீர்த்துத் தருவார். எது உங்கள் பலவீனமோ அது பலமாய் பன்மடங்கு பெருகி உங்களைக் காக்கும்.

ஆன்மீகமாய் இது அற்புதமான பொருளைத் தரும். சிவனை நீங்கள் தேடும்போது மாயை பல வடிவில் வரும், மாயைகள் பெரும் பெரும் படையாய் வரும், அந்நேரம் பல இடங்களில் மனம் வீழலாம் தடுமாறலாம். பெரும் தோல்வி போன்ற சூழல் வரலாம்.

அந்நேரம் சிவனில் நிலைத்திருங்கள். உங்கள் தவம் மேலும் மேலும் பலமாகும். அற்புதமான முறையில் மாயைகளை வென்று ஞானம் அடைவீர்கள், மாய எதிரிகளை மாய வடிவில் சிவனே நின்று வீழ்த்துவார், மாயங்களை வெல்வதாலே அவர் மாயாண்டி என வணங்கவும்படுகின்றார்.

தன்னை நம்புவோரின் வேண்டுதலுக்காக எல்லா மாயங்களையும் செய்பவர் அந்தச் சிவன். அவரை முழுக்க நம்புங்கள். நம்பமுடியா அதிசயம் செய்து அவர் உங்களைக் காத்து முழு வெற்றி தந்து எக்காலமும் காப்பார். இது சத்தியம்.

திருவிளையாடல் 32 : கால் மாற்றி ஆடிய படலம்.

அது மதுரையினை விக்ரம பாண்டியனின் மகன் இராஜசேகர பாண்டியன் ஆட்சி செய்துகொண்டிருந்த காலம். ஆட்சி, போர், நிர்வாகம் தாண்டி நுணுக்கமான‌ கலைகளிலும் தேர்ச்சி பெற்றிருந்த அவன் சீரும் சிறப்புமாக ஆட்சி செய்து கொண்டிருந்தான்.

அவன் சிவபக்தன். முழு அடியாரான சிவபக்தன் ஆலவாய் நாதனை மிகுந்து போற்றி நின்ற பூரண பக்தன். அப்படியானவன் கலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தான். அந்தக் கலைகளை அவன் போற்றி நிற்க காரணம் சிவனை அந்த கலைகளில் சிவனைப் போற்றி வழிபடலாம் என்பது.

அந்த இராஜசேகர பாண்டியன் எவ்வளவுக்கு நீர் நிலைகளைப் பெருக்கி விளைச்சலை அதிகரித்தானோ, எவ்வளவுக்கு முத்துக்கள் வளம், பாண்டிய நாட்டின் மலைவளத்தை காத்தானோ, எப்படி மக்களுக்கு ஒரு குறை இன்றி ஆட்சி செய்தானோ, எப்படி தமிழ் வளர்த்து சிவனைப் போற்ற வழி செய்தானோ அவ்வளவுக்கு கோவில்கள் எழுப்புவதிலும் அங்கு எல்லாக் கலைகளை வளர்ப்பதிலும் சரியாக இருந்தான்.

அவன் வெறும் மன்னன் மட்டுமல்ல அவனே பாடல் இயற்றுவான், பாடுவான், இசை அமைப்பான், இசையின் எல்லா நுணுக்கங்களையும் அறிந்திருந்ததால் அவன் பாடல் இனிமையாக இருந்தது.

எல்லாக் கலைகளிலும் வல்ல மன்னன் என அவன் போற்றி கொண்டாடப்பட்டான், அவனின் கலைகளெல்லாம் சிவனை வணங்கவும் போற்றவுமே அடிப்படை காரணமாக இருந்தது.

ஆகமங்கள் அனைத்திலும் அவன் வித்தகனாய் இருந்தான். சாஸ்திரங்கள் அவன் விரல் நுனியில் இருந்தன, எல்லா வித தர்க்கமும் அறிவும் அவனின் நாவில் எதிர்தரப்பின் கேள்விக்காய்க் காத்திருந்தது.

அர்த்த சாஸ்திரம் முதல் எல்லா வகையான சாஸ்திர முறைகளும் அறிந்திருந்தான். மிகப் பெரிய ஞானியாய் எல்லாக் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றிருந்தான்.

அப்படிபட்டவன் புகழ் எல்லாத் திக்கும் பரவியிருந்த போது அவனுக்கு சவால்விடும் அரசன் ஒருவன் சோழ நாட்டில் உருவாகியிருந்தான், அவன் கரிகாலன் எனும் கரிகால் பெருவளத்தான்.

அவன் ஆச்சரியமான வகையில் உருவாகியிருந்தான், அவன் குலத்தை உள்நாட்டு எதிரிகள் அழித்து அவனை கொல்லமுயன்றபோது யாரும் அறியாவகையில் தன் தாய்மாமனோடு தப்பினான். சிறிய வயதிலே தலைமறைவானவன் கரூர் பக்கம் தலைமறைவாய் இருந்து வளர்ந்து பின் உரிய நேரம் காவேரிபூம்பட்டினத்தைக் கைபற்றினான்.

அவனின் பகைவரெல்லாம் குறுநில மன்னரும் சேரரும் இந்த இராஜசேகரனின் தந்தை படைகளும் சேர்ந்தும் அவனை அசைக்கமுடியவில்லை.

அவன் உலகமே வியக்கும் வகையில் உறையூர் அருகே காவேரிக்கு கல்லால் அணைகட்டி அதனை பிரித்து திருப்பி வறண்ட பகுதிகளை செழிக்கவைத்து பெரும் விளைச்சலை உருவாக்கி சோழநாட்டின் பொற்காலத்தைத் தொடங்கியிருந்தான்.

அவனும் சிவபக்தன் அவனின் பெரும் பக்தி திருவானைக்காவல் ஆலயத்தில் இருந்தது. நம் சிலந்தியும் யானையும் சிவனை வழிபட்ட அந்த ஆலயம் சோழர்களின் பிரசித்தியான ஆலயம், அவர்களின் குலதெய்வம் போல மிக முக்கியமானது.

செங்கோட்சோழன் கட்டிவைத்த ஆலய சந்நிதி அது.

அந்த ஆலய ஜம்புலிங்கேஸ்வரர் சோழர்களின் மகா பிரசித்தியான தெய்வம், அந்தத் தலம் நீர்தலம் என்பதால் இன்னும் விரும்பி வழிபட்டார்கள் சோழர்கள்.

நீர்தான் உலகின் ஆதாரம். அது காவேரி எனும் வடிவில் சோழநாட்டை பெரிதாக காத்துக்கொண்டிருந்தது, அதன் எல்லாச் செல்வங்களுக்கும் ஆதாரமாய் இருந்தது, அந்த நீரை எங்களுக்குத் தந்த ஈசன் என அதனை இந்தக் கோவிலில் நீர்தந்த ஜம்புலிங்கேஸ்வரர், நீர்தல நாயகர் எனக் கொண்டாடினார்கள்.

அப்படியாக வந்த சோழ மரபில் அந்தச் சிவன் மேல் பெரும் பக்தி கொண்டிருந்த கரிகாலன் இந்த இராஜசேகர பாண்டியனுக்கு சரிநிகர் சவாலாக விளங்கினான்.

அரசியலில் ஒரு இராஜதந்திரம் உண்டு. அது பெரும் அவசியமில்லாமல் கட்டாய தேவை இல்லாமல் தனக்கு சரிக்கு சமமான எதிரியுடன் மோத கூடாது, அதே நேரம் ஒதுங்கவும் கூடாது, மிக கவனத்துடன் கூடியபடி பகையில் உறவு, உறவில் பகை எனக் கொண்டு செல்லுதல் வேண்டும்.

அப்படி சோழன் தன் அவையின் புலவனை தூதாக மதுரைக்கு அனுப்பினான், அவன் வந்த நோக்கம் அதியமானின் தூதராக முன்பு ஒளவையார் எல்லா வேந்தர்களையும் நுணுக்கமாக எச்சரித்தது போன்றது.

அந்தத் தூதனை வரவேற்று உபசரித்து அவனோடு பேசிக்கொண்டிருந்தான் பாண்டியன், இருவரும் ஒருவரை ஆழம் பார்க்கும் வகையில் வாதங்களைச் செய்தார்கள்.

பாண்டியனின் திறமை மிக ஆழமானது. எல்லாக் கலைகளிலும் தேர்ச்சிப் பெற்றிருக்கின்றான் என்பதை அறிந்து கொண்டான் புலவன், அதே நேரம் கரிகால்சோழனும் அசாத்தியமானவன் என்பது பாண்டியனுக்கும் தெரிந்தது.

வாதத்தின் இறுதியில் தங்கள் மன்னர் ஆடல் கலையில் வல்லவர் எனத் தன் கடைசி அஸ்திரத்தை வீசினான் புலவர், பாண்டியனிடம் இதற்குப் பதில் இல்லை.

சிவன் தாண்டவமாடியது எங்கள் சிதம்பர ஆலயம், ஆடல் கலையினை எம்பெருமானே சோழர்களுக்குத் தந்தார், அவரை ஆடி வணங்கும் எம் மன்னரின் நடனம் அவ்வளவுக்குச் சிலாகிப்பானது, பார்ப்போரை கட்டி இழுத்து அழவைக்கும் வகையில் எம்மன்னர் நடனமிடுவார்.

அதுவும் நிலத்தில் மட்டுமல்ல நீர் நடனத்திலும் அவரை மிஞ்ச முடியாது, நீரில் நடனம் என்பது சோழர்களுக்கான கலை, அங்கே எம்மன்னர் தலை சிறந்தவர் என்றான் புலவன்.

பாண்டியனிடம் பதில் இல்லை சற்று அமைதியானான். ஏற்கனவே கரிகால் சோழனின் மகள் ஆதிமந்தி கதையின் மூலமும் இன்னும் சோழநாட்டின் காவேரியில் நீர் நடனங்கள் பிரசித்தி என்பதும் அவனுக்குத் தெரியும்.

ஆட்டனத்தி ஆதிமந்தியின் காதலும் அந்த நீர்நடனமும் வெகு பிரசித்தி என்பதால் பாண்டியன் யோசித்தான், கரிகாலன் அக்கலையில் சிறந்திருப்பது நிச்சயம் உண்மை.

இது வெறும் நடனம் என நகர்ந்துவிட முடியாது, நடனமே உடலை வலுப்படுத்தும் விளையாட்டினை விட நடனம் முக்கியமானது, அது உடல் பொருள் ஆத்மா ஐம்புலன்கள் என எல்லாவற்றையும் ஒரு புள்ளியில் குவிப்பது.

நடனம் என்பது உடல்பலம் உள்ளபலம் எல்லாம் கொண்டுவரும், ஒரு தெய்வீக யோகத்துக்கு சமம்.

இந்தப் பலத்தை சோழ மன்னனே ஆடிப்பெற்றால் அவனோடு அவன் தேசமும் பெறும், மன்னன் செய்வதை மக்கள் அப்படியே பின்பற்றுவார்கள்.

கரிகால் சோழனே நீர்நடனம் ஆடினால் என்றால் சோழர்களுக்கு அது இயல்பாய்வரும் அங்கிருந்து அற்புதமான வீரர்கள், ஆற்றல் மிகுந்தவர்கள் வருவார்கள், அது பெரும் பலத்தை சோழநாட்டுக்கு கொடுக்கும்.

சேரர்களும் இதில் வித்தகர்கள் ஆட்டனத்தி அப்படித்தான் உருவானான்.

நீர் நடனம் என்பது நாட்டின் காவலும் கூட, இந்தக் கலையில் தேர்ந்துவிட்டால் ஒரு படை ஆற்றை எளிதில் கடக்கும், இன்னும் ஆற்றினை நீர் நிலையினைக் கடக்கும் எதிர்தரப்புக்கும் சவால்விடும்.

எல்லா வகையிலும் மிக மிக முக்கியமான நடனத்தை இனி பாண்டிய மக்களுக்கு சொல்லிக்கொடுத்தல் வேண்டும், அதனால் தானே அதனை கற்கவேண்டும் என முடிவு செய்தான்.

பாண்டிய நாட்டின் மதுரையில் வெள்ளியம்பல சபை உண்டு, அங்கே வெள்ளியில் நடராஜ பெருமான் திருவுருவம் உண்டு, ஆடலுக்கு அவர்தான் அரசர்.

அந்த வெள்ளி அம்பல நாதர் சந்நிதிக்குச் சென்றான் இராஜசேகர பாண்டியன், நாட்டில் இருந்தும் அண்டை தேசங்களில் இருந்தும் வெகுசிறந்த நடன ஆசிரியர்களை வரச்செய்தான்.

நாடாளும் மன்னனுக்கு நடனம் சொல்லிக் கொடுப்பது என்றால் கொடுப்பினை அல்லவா? ஆக சிறந்த ஆசிரியர்கள் வந்தார்கள், மன்னன் அவர்களிடம் மாணவனாக பரதம் பயில ஆரம்பித்தான்.

பரத முனிவர் கொடுத்த அந்த நாட்டியக்கலை நுணுக்கமானது. உடலின் ஒவ்வொரு உறுப்பையும் இயங்க வைப்பது, கை கால்கள் எல்லாம் இடைவிடாமல் இயங்கி கொண்டே இருக்க வைக்கும் கலை அது.

இதனால் அவன் அடிக்கடி களைத்துப் போனான். ஓய்வெடுத்து நடனம் பயலும் அவசியம் வந்தது. வீர விளையாட்டுக்கள் பயிலும் போது வரும் களைப்பு, இந்த பரதம் படிக்கும் போதும் வந்தது பற்றி சிரித்துக் கொண்டான்.

வேகமாக அவன் பரதம் கற்றுக் கொண்டிருந்த அவன், கொஞ்சம் கொஞ்சமாக முழுக்க சிவன் நினைவில் கரைந்தே போனான்.

பரதம் என்பது இசையோடு கூடிய கலை, இசை பாடல்கள் பாடும் போது ஆடவேண்டிய கலை, அந்தப் பாடல்கள் சிவனைத் துதிப்பதாக அவர் பெருமையினைச் சொல்வதாக இருந்ததால் சிவனின் நினைவில் அவன் அடிக்கடி மூழ்கிக் கரைந்து கொண்டே இருந்தான்.

ஒரு கட்டத்தில் எல்லாம் சிவமயமான நிலையில் அவன் சிவனை ஒரு குருவாக கொண்டாடினான், தன் முன் நின்று சிவனே குருவாக தனக்கு பரதம் சொல்லித் தருவதாக கருதி தன் முன் அவனே நிற்பதாகக் கொண்டாடினான்.

நாளுக்கு நாள் அந்த அன்பு பெருகி கொண்டே வந்தது.

அவனுக்கு கடும் பயிற்சி காரணமாகக் கால்வலி வந்தது. மன்னனுக்குக் கால்வலி என்றால் நாடு தாங்குமா? எல்லா வைத்தியர்களும் இராஜவைத்தியன் தலைமையில் கூடிக் காலுக்கு தைலமிட்டு இன்னும் மருந்து கொடுத்து தாங்கிக் கொண்டிருந்தார்கள்.

அவன் அந்த கால்வலியோடு நடராஜரை நோக்கினான், அவர் ஒற்றைக் காலில் நின்றுகொண்டிருந்தார்.

அவன் பரிதவித்துப் போனான், கலங்கிப் போனான். தன்னை ஒரு மன்னன் என மானுடர் கொண்டாடித் தன் வலிக்கு சிகிச்சை அளிக்கும் நேரம் மன்னர்களுக்கு மன்னரும், தன் குருவுமான சிவன் ஒரே காலில் நிற்பது எப்படி என்பது அவனுக்கு வலியாயிற்று.

சிவன்மேல் கொண்ட அன்பால் குருமேல் கொண்ட உன்னதமான ஆத்மார்த்தமான பாசத்தால் அவன் அழுதான்.

“ஓ சிவனே ஒற்றைகாலில் நிற்கின்றீரே இது உமக்கு வலிக்காதா?”

அன்பு எப்போதும் அறிவினைப் பல இடங்களில் அகற்றிவிடும், அதுவும் உளமான பாசமான அன்பு முழுக்க தெய்வத்தை காணும் உருவில் காட்டிவிடும்.

அதுவும் இந்துக்களின் மரபு அதனில் கரை கண்டது.

தெய்வத்திருவுருனை வைத்து அதற்கு பள்ளி எழுப்பி, அபிஷேகம் செய்து, வாசனை திரவியம் பூசி, உடை அணிந்து நகைபூட்டி உணவு படைத்து, தேரில் வைத்து இழுத்து பல்லக்கு சுமந்து, பள்ளியறை அனுப்பி தெய்வத்தை அரசனுக்கு மேல் கொண்டாடும் சமூகம்.

அந்தச் சமூகத்தின் உன்னதமான பக்தனாக அவன் சிவனை நோக்கினான்.

தெய்வத்தின் பள்ளியெழுச்சி முதல் பள்ளியறை பூஜை முதல் எப்படி ஆத்மார்த்தமாகச் செய்வோமோ அப்படித் தெய்வத்தின் நடனக்கோலத்தையும் நாம் காணவேண்டும் எனக் கண்டவன், சிவனுக்கும் கால்வலி வருமே எனக் கலங்கினான்.

தனக்கு வைத்தியர்கள் தந்த தைலத்தை அவர் ஒற்றைகாலில் பூசினான், கண்ணீர் விட்டான், தனக்குத் தந்த மூலிகைகுளிகைகளை அவர் முன் வைத்து வணங்கினான்.

சிவன் அவன் செய்வதை எல்லாம் பார்த்துக் கொண்டே இருந்தார். அவன் அன்பில் கரைந்து கொண்டே இருந்தார்.

அவன் தன் நடனப் பயிற்சியின் போது அவனுக்கு கால்வலி வருவதும் அப்போது தனக்கு தரப்படும் தைலத்தை அவன் சிவனுக்கும் கொடுப்பதும் வாடிக்கையாயிற்று.

அந்நேரம் சிவராத்திரியும் வந்தது.

மன்னன் சோமநாதர் சந்நிதியில் சிவராத்திரி நோன்பையும் வழிபாட்டையும் மேற்கொண்டான். நாலுகால பூஜையினை அங்கே செய்து வழிபட்டவன் நான்காம் கால பூஜை தேவர்களுக்கானது என்பதால் வெள்ளியம்பல நாதனை வழிபட சென்றான்.

இரவெல்லாம் சிவநினைவில் இருந்ததால் அவனுக்கு முழுக்க முழுக்க சிவனே மனதில் சிந்தையில் எண்ணத்தில் நினைவில் எங்குமாக இருந்தார், அந்த நிலையில் அவன் முழுக்க சிவநினைவாகி சொன்னான்.

இனியும் பொறுப்பதில்லை எனப் பக்தியின் உச்சத்தில் சொன்னான்.

“எம்பெருமானே, அவ்வப்போது நடனமாடும் எனக்கே இரு கால்களும் வலிக்கின்றன, ஒரே காலில் நிற்கும் உமக்கு வலிக்காதா.

என் குருவே, என் தகப்பனே, என் அரசனே உம்மால் இதனைத் தாங்கமுடியலாம் ஆனால் என்னால் முடியாது, எனக்காக உமது காலை ஊன்றிக் கொள்ளும்.

இதை நீர் செய்யாவிட்டால் ஒரே காலில் நீர் நிற்கும் கோலத்தை நான் காண சகிக்காமல் செத்தே விடுவேன், என் கண்முன்னே நீர் வதைபடுவதை என்னால் காணமுடியவில்லை” எனச் சொன்னவன் அந்தக் காரியத்தைச் செய்தான்.

தன் வாளை எடுத்து தன் வயிற்றில் பாய்ச்ச முயன்றான், அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

“பாண்டியா” எனும் குரல் கேட்டது, பேரொளி சூழ்ந்து கொண்டது, அங்கே வெள்ளி அம்பல நாதரின் பாதம் மட்டும் தென்பட்டது.

“சிவனே, எம் அரசனே” எனப் பணிந்து வீழ்ந்த பாண்டியன் மெல்ல தலை தூக்கிப் பார்த்தான்.

சிவன் இடதுகாலை ஊன்றி நின்றார், மன்னன் வார்த்தைகள் இல்லா நிலைக்கு பரவசமாகி கையினைக் கூப்பித் தொழுது நின்றான்.

பின் மெல்ல இடதுகாலை மட்டும் ஊன்றி வலதுகாலை மேலே உயர்த்தினார் சிவன்.

அத்தோடு அந்தக் காட்சி மறைந்து சிலை இயல்பு நிலைக்கு வந்தது. ஆம். தன் அடியானுக்காக அவன் தன் மேல் கொண்ட பெரும் பக்தியின் வேண்டுதலுக்காக காலை மாற்றி அருள்புரிந்தார் சிவன்.

இன்றும் இந்தக் கோலத்தில்தான் மதுரையில் வெள்ளியம்பல நாதனாக அவர் அருள்பாலிக்கின்றார், எல்லா நடராஜ சிலைகளில் இருந்து அவர் மாறி அங்கு மட்டும் இடது காலை ஊன்றி வலதுகாலை தூக்கி ஆடும் கோலத்தில் அருள்பாலிக்கின்றார்.

இதுதான் கால்மாற்றி ஆடிய படலம்.

இங்கு ஆழ்ந்து கவனிக்கதக்க விஷயங்கள் சில உண்டு.

முதலாவது, எப்படி தமிழக வரலாறு மறைத்து எழுதப்பட்டது என்பது. முல்லைக்கு தேர் கொடுத்த பாரி, மயிலுக்குப் போர்வை கொடுத்த போகன் போன்றோர் மானுட நேயமும் கொடைத்தன்மையும் கொண்டவர்களாகக் சித்தரிக்கபட்டார்கள்.

இது மடமை என அறிவினால் சொல்லப்பட்டாலும் அவர்களின் இரக்கம் எனும் குணத்தால் அழியா இடம் பெற்றது.

ஆனால், ஒரு பக்தன் தன் அபரிமிதமான பக்தியால் தெய்வ விக்ரகத்தில் இறைவனைக் கண்டு அவருக்குக் கால் வலிக்குமே என அழுத பெரும் வரலாற்றைச் சொல்லமாட்டார்கள்.

இங்கே இந்துக்கள் வரலாறு இப்படித்தான் மறைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தத் திருவிளையாடலில் இறைவன் செய்த காரியங்கள் பல உண்டு. வெளியே இது பக்தனுக்காகக் கால் மாற்றிய படலம் எனச் சொல்லப்பட்டாலும் பின்னணியில் இரு உன்னதமான சிவபக்தர்களின் போர் தவிர்க்கப்பட்டது.

ஆம். கரிகால் சோழன் சாதாரணமானவன் அல்ல, அவன் பாண்டியரை வெல்ல காலம் பார்த்துக்கொண்டிருந்தான், பகையினைக் கொண்டிருந்தான்.

அவன் திருவானைக்கா சிவன் பக்தன், அங்கே தன்னை வழிபட்டவனுக்கு மதுரையில் இருப்பவனும் என் பக்தனே எனக் காட்டினார் சிவன், சிவனே பாண்டியனுக்காக காலை மாற்றி நின்றார் என்றால் அவனிடம் எப்படி மோதுவது எனக் கரிகாலன் ஒதுங்கினான்.

இப்படி தன் அடியார்கள் இருவரும் மோதாமல் சிவன் சமாதானம் அருளினார்.

இங்கே கவனிக்கவேண்டிய விஷயம் பரத கலையின் பலன், அது வெறும் நடனம் அல்ல சிவனைத் தன்னுள் உணரும் யோகம் என்பது.

அதுவரை சிவன் வேறு தான் வேறு எனும் எண்ணம் கொண்டிருந்த பாண்டியன் இந்த நடனத்தை கற்கும் போதே தான் வேறு சிவன் வேறு இல்லை எனும் நிலையினை அடைந்து தன்னைப் போல் சிவனுக்கும் கால் வலிக்கும் எனும் நிலையினை எப்படி அடைந்தான்?

அவன் சிவமாகவே எப்படி பரத கலையால் மாறினான்? ஏன் பரத முனிவர் இந்த நடனத்தைத் தந்தார்? எத்தனையோ நடனங்கள் இருக்க இதனை மட்டும் கோவில்களில் அரங்கேற்றம் செய்தார்கள், இன்றுவரை அக்கலை ஏன் முக்கியமானதாகக் கொண்டாடப்படுகின்றது.

அது எப்படி உருவானது?

அறுபத்து நான்கு கலைகளில் ஒன்றாகக் கருதப்படும் பரதக்கலை, பாரத நாட்டின் தெய்வீகக் கலையாக போற்றப்படுகின்றது. காரணம், ஆரம்ப கால மக்கள் அதிக துயரத்தில் ஆழ்ந்து கிடந்தனர். இந்நிலை மாறி எங்கும் இன்பம் உண்டாகும் வண்ணம், அனைவரும் புரிந்து கொள்ளுமாறு நான்கு வேதங்களில் இருந்து ஒரு பொழுதுபோக்கை உருவாக்குமாறு இந்திரன் பிரம்மாவை வேண்டினார்.

இதற்கமைய இருக்கு வேதத்தில் இருந்து நாட்டியத்தையும், யசூர் வேதத்திலிருந்து அபிநயத்தையும், சாம வேதத்திலிருந்து இசையையும், அதர்வ வேதத்திலிருந்து ரஸத்தினையும் தொகுத்து ஐந்தாம் வேதமாக நாட்டியக்கலையினை படைத்தார்.

பிரம்மா தான் படைத்த நாட்டியக்கலையை முதலில் பரத முனிவருக்கு கற்பித்தார். இதனைப் பரதர் கந்தர்வர்கள், அப்சரஸ் பெண்களுக்கு கற்றுக் கொடுத்தார். பின்னர் கைலயங்கிரியில் சிவன் முன்னிலையில் இப்பெண்கள் நிருத்தம், நிருத்தியம், நாட்டியம் என்பவற்றை ஆடிக்காட்டினர்.

இதனைக் கண்டு மகிழ்ந்த சிவன் தான் இயற்றிய நர்த்தனத்தை நினைவு கூர்ந்து தண்டு முனிவரை அழைத்து அதனை பரதருக்கு கற்றுக் கொடுக்கும்படி கூறினார். தண்டு முனிவரால் எடுத்துச் சொல்லப்பட்டமையால் இது ‘தாண்டவம்’ எனப் பெயர் பெற்றது.

பார்வதி தேவி லாஸ்யம் என்னும் நடனத்தினைப் பாணனின் மகளும், அனுருத்திரனின் மனைவியுமாகிய உசைக்கு கற்றுக்கொடுத்தார். உசை இதனை துவாரகையிலுள்ள இடைச்சேரிப் பெண்களுக்குக் கற்பித்தார். பின் இவர்கள் மூலம் இக்கலை உலகெங்கும் பரவியது.

பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்தது, அவர் ஒரு யோக முனி.

பரதம் என்பது வெறும் நடனமோ, கேளிக்கையோ சந்தோஷ நடனமோ அல்ல. அது ஒரு யோக தத்துவம். ஆடுவோரும் காண்போரும் மனம் ஒன்றி இறைவனை தியானிக்கும் அற்புதமான ஒரு ஞானக்கலை.

பரதம் என்ற சொல், ப – பாவம், ர – பண் [இராகம்], த – தாளம் என்ற மூன்றையும் குறிக்கும். அதாவது, உடல், ஆத்மா, மனம் எனும் மூன்றைறையும் இணைக்கும் கலை அது.

“”கைவழி நயனஞ் செல்லக் கண்வழி மனமும் செல்ல”

மனம் வழி பாவமும் பாவ வழி ரசமும் சேர”

என்பது பரத சாஸ்திரத்தின் அடிப்படை.

அதாவது. கண்ணும் கையும் உடலும் மனமும் ஒரே புள்ளியில் இணைவதே பரதம். இந்தக் கலை பரத முனிவரால் ஏற்படுத்தப்பட்டது, அடிப்படையில் இது யோகாசனம்.

யோகத்தில் 108 நிலைகள் உண்டு. இந்த 108 நிலைகளையும் 108 கர்ணங்கள் எனச் சொல்லி அதனடிப்படையில் உருவான யோக நடனமே பரதம்.

இதை முறையாகச் செய்தால் யோகத்தின் படிநிலை ஒவ்வொன்றாய் துலங்கும், ஒரு கட்டத்தில் யோகத்தின் பலன் முழுமையாய் தெரியும்.

இந்தக் கலை அன்று ஆலயங்களில் மட்டுமே இருந்தது. அரசன் மண்டபத்தில் ஆயிரம் நடனங்கள் ஆடப்பட்டாலும் பரதம் என்பது தெய்வக் கலையாக தெய்வ சந்நிதி முன்னால் மட்டும் ஆடபட்டது.

அது ஆடுவோரையும் பாடுவோரையும் காண்போரையும் தெய்வச் சிந்தனையில் மனதை ஒருமுகப்படுத்தும் சிந்தனையில் செலுத்தும் ஒரு கலையாய் இருந்தது.

அந்தக் கலையில் புராணம் சொன்னார்கள், தெய்வ நிலைகள் சொன்னார்கள், பக்தியும் ஞானமும் போதித்தார்கள்.

அது முழுக்க யோகக் கலை. இந்துக்களின் தனி சொத்து. அது ஒரு வழிபாடு, அது ஒரு அற்புதமான யோகம்.

ஆம். அது யோகம். பரத நாட்டியம் என்பது ஆடுவோரும் அதைக் கவனிப்போரும் தன்னை அறியாமல் மனம் உடல் ஆத்மா என மூன்றும் ஒரு புள்ளியில் இணைவது‌ இந்நிலையில் யோகம் கைகூடும். எப்படி தவம் செய்யும் ஒருவனுக்குச் சக்கரமெல்லாம் துலங்கி பெரும் யோக நிலை வாய்க்குமோ இந்தக் கலையிலும் கைகூடும்.

அதுதான் பரத கலையின் உச்சம். சிவனை அடைதல் தெய்வநிலை அடைதல் என்பதுதான் இங்கும் பாண்டியனுக்கு நடந்தது. சிவன் அவனுக்கு போதித்த உண்மை அதுதான்.

வலதுகாலை சிவன் இடதுகாலுக்கு மாற்றினார் என்பது யோக கலையின் மூச்சு குறியீடு. இடகலை பிங்கலை அதாவது நாசியின் இரு மூச்சுக்கள் வலதுநாடி இடது நாடி எனும் இரு மூச்சுக்களை மாறி மாறி சீர்படுத்தினால் அந்த யோகத்தில் நிலைத்தால் இறைவனை அடையலாம் என்பதும் அங்கு போதிக்கப்பட்டது.

இடகலை நாடி என்பது இடப்பக்கம் வரும் மூச்சு அதுவும் வலப்பக்க மூச்சும் சமப்பட்டால் அங்கே யோகம் சித்தியாகும், அதனை போதிக்கும் தத்துவம் இது.

மகா முக்கியமாகச் சிவனில் பாதி சக்தி, இடபாகம் சக்திக்கானது. சக்தியே என்னை இயக்குகின்றாள், அந்த மகா சக்தியே என்னில் இன்று இயக்குகின்றாள் எனத் தன் பக்தனுக்கு சிவன் சொன்ன போதனை அந்தக் காட்சி.

ஆம். அங்கே அவர் காட்டியது என்னில் பாதி தேவி, இடபாகம் அவளுடையது என்பது.

மீதமுள்ள நான்கு சபைகளிலும் அல்லாமல், எங்கும் அல்லாமல் மதுரையில் அதை நடத்தி என்னில் பாதி சக்தி என்றும் இடதுபாதம் காட்டி இவளே என்னை தாங்குகின்றாள் ஏன் சிவன் சொல்லவேண்டும்?

அது மீனாட்சியின் மண், அன்னை சக்தி ஆளும் மண், அங்கே என்னில் பாதியான தேவி உண்டு, இது அவள் இராஜ்ஜியம் எனச் சொல்லாமல் சொன்னார் சிவன்.

அதனாலேதான் நாளாவட்டத்தில் அந்தக் கால் மாற்றி ஆடிய சிலை, அந்த வெள்ளியம்பல சிலை அந்த ஆலயத்துகுள்ளே வந்தது.

பரதம் என்பது சிவனை அடையும் கலை, அது வெறும் நடனம் அல்ல. அது பொழுதுபோக்கும் விஷயமோ கேளிக்கையோ அல்ல‌.

அது யோகம், முழு யோகம். அந்த யோகத்தில் அந்த நடனத்திலே சிவநிலை அடையலாம் என்பதே இந்தத் திருவிளையாடலின் போதனை.

108 அபிநயங்கள் இன்றும் மதுரை ஆலயத்தில் ஏகப்பட்ட தூண்களில் உண்டு. அவை எல்லாம் உடலுக்கான யோக ஆசன அசைவுகள்.

அதனை முறையாகச் செய்து, முறையாக நடனம் பயின்றால் இறைவனை அடையலாம். இசை போல நடனமும் இறைவனை அடையும் வழி என்பதை இந்தத் திருவிளையாடல் சொல்கின்றது. நடனத்தில் சிறக்க சிதம்பர நடராஜரை வணங்குதல் மரபு.

அப்படியே மதுரை ஆலயத்தில் வணங்கினால் மாபெரும் சிறப்பும் புகழும் கீர்த்தியும் ஞானமும் கிடைக்கும். அது அழியாப் பெரும் புகழைத் தரும் என்பதை இந்தத் கால்மாற்றி ஆடிய படலம் மூலம் சிவன் உலகுக்குச் சொன்னார். நடனம் என்பதை கர்மாவாகக் கொண்டவர்கள் சென்று அங்கு வணங்கினால் பெரும் பலன் நிச்சயம்.

தன்மேல் பெரும் அன்பு கொண்டு தன்னிலே அவனை உணர்ந்து, தன்னில் ஒருவனாக எந்த பக்தன் தன்னை வழிபடுவானோ அவனை சிவன் எக்காலமும் கைவிடுவதில்லை. அவனுக்காக மாபெரும் அதிசயங்களை இறைவன் செய்வார் என்பதை நம்புங்கள். அந்த ஆலவாய் நாதனை உங்களின் குருவாக உங்களின் நண்பனாகக் கொள்ளுங்கள். அந்தச் சிவன் உங்களுக்கு ஆச்சரியங்களை அதிசயங்களை செய்து காப்பார். இது சத்தியம்