காரடையான்சாவித்திரி அக்கால பாரததித்தில் அசுபதி என்றொரு மன்னன் இருந்தான், அவனுக்கு வாரிசு என ஒரு மகள் இருந்தாள், அழகிலும் அறிவிலும் சிறந்தவளான அவளுக்கு புனிதமான பெயரான சாவித்திரி எனும் பெயர் சூட்டினான், ஆம் சரஸ்வதியின் இன்னொரு பெயர் சாவித்திரி, எது உன்னதமும் உயர்ந்ததும் ஆசீர்வாதமுமானதோ அதற்கு சூட்டும் பெயர் சாவித்திரி அந்த சாவித்திரிக்கு திருமண வயதும் வந்தது, அக்கால இந்து சம்பிரதாயம் பெண்கள் தன் கணவனை தேர்ந்தெடுக்க முழு சுதந்திரம் அளித்தது, தன் பாதுகாவலர் ஆலோசகரான பெரியவரகள் சூழ தானே மணவாளனை தேடி அலைந்தாள் சாவித்திரி தேடி அலைந்தபொழுது ஒரு கானகத்தை அடைந்தாள், இக்காலம் அல்ல அக்காலத்திலே சில வனங்கள் பாதுகாக்கபட்டிருந்தன. அங்கு முனிவர்கள் தவம் செய்வார்கள், வேடவருக்கோ இல்லை உயிர்களை கொடுமை செய்து கொல்பவருக்கோ அனுமதி இல்லை, உயிர்பயமில்லா அக்கானகத்தில் மான்களும் முயல்களும் இன்னும் பல விலங்குகளும் மனிதரின் அருகில் வந்து பயமின்றி உறவாடும் அந்த வனம் வாழ்வில் ஞானத்தை உணர்ந்த ரிஷிகளுக்காகவும் ஞானத்தை தேடும் மானிடருக்காகவுமானது, அதை தாண்டும் எந்த அரசனும் முடி துறந்து வாள் துறந்து சாதாரண உடை அணிந்து அங்கிருக்கும் தலமை முனிவரை கண்டு வணங்கிவிட்டு செல்லுதல் மரபு அப்படித்தான் அங்கிருந்த மகா முனியிடம் ஆசி வாங்க சென்றாள் சாவித்திரி, அங்கே பல நாட்டு மன்னர்கள் வந்து செல்வார்கள் என்பதால் அவளின் சுயம்வர கணக்கும் அதில் இருந்தது நல்லோனை ஞானமும் அறிவும் பக்தியும் இருக்குமிடம் அன்றி எங்கே தேடமுடியும், அவ்வகையில் சாவித்திரியின் கணக்கு மகா சரியானது, அவளுக்கு அதை கணக்கிடும் அளவு அறிவும் இருந்தது சாவித்திரி அங்குதான் அவனை கண்டாள், அழகும் அறிவும் தெளிவும் பக்தியும் நிரம்பிய சீடனாக அவன் அங்கு வலம் வந்தான் அவள் அரசவையின் ராணி என்பதால் பார்த்ததும் உணர்ந்தாள், "இவன் சாமான்யன் அல்ல, ராஜகளையும் அதற்குண்டான ரேகைகளும் உடலெங்கும் படர்ந்திருக்கின்றன" என்றவள் நெடுநேரம் அவனையே நோக்கிகொண்டிருந்தாள் விதி தன் வேலை தொடங்க வேண்டிய நொடியில் அவளுக்கு அவன் மேல் ஈர்ப்பினை ஏற்படுத்திற்று, ஆம் விதிபலன் அன்றி காதல் மலராது வயதான தந்தையினையும் தாயினையும் இப்படி கவனிப்பவன் தன் மனைவியினை எப்படி எல்லாம் கவனிப்பான் என எண்ணியவளுக்கு காதல் கூடிற்று பொதுவாக பெண்கள் விரும்புவது பாதுகாப்பும் அன்புமே, அன்பு ஒன்றே அவர்களை வீழ்த்தும் ஆயுதம், அன்பு கொடுக்கும் காவலே அவர்களுக்கான வாழ்வென கருதுவார்கள், அந்த அன்பை பலமடங்கு திருப்பி கொட்டியும் கொடுப்பார்கள் சத்தியவான் தனக்கு சரியானவன் என்ற அவளின் உறுதி கூடிற்று, நிலைபெற்றும் விட்டது முனிகளுக்கான கானகத்தில் ராஜமுனிக்கு சேவை செய்பவன் நிச்சயம் மகா நல்லவனாக இருக்க வேண்டும் என விசாரித்ததில் மேற்கொண்டு அவளுக்கு உகந்த தகவல் வந்தது அவன் துயுமத்சேனன் எனும் அரசனின் மகன், துயுமத்சேனன் பெரும் அரசன் எனினும் எதிரிசதியால் நாடிழந்து கண் இழந்து அபலையாய் அகதியாய் இந்த கானகத்தில் மனைவியும் குழந்தையோடும் அடைக்கலமானான், ஆம் இங்கு யாரும் வந்து அவனையோ அவன் மகனையோ கொல்லமாட்டார்கள், அதைவிட பாதுகாப்பு இல்லை அந்த சத்தியவானை மணமுடிக்க தனக்கு தடையேதுமில்லை என்பதை உணர்ந்தவள் தந்தையிடம் விஷயத்தை சொல்லிவிட்டு மன்றம் ஏற தயாரானாள் அந்த அசுபதி மன்னன் பலரோடும் கூடி பேசினான், தனக்கு மகளை வாரிசாக அளித்த தேவர்களிடம் அவன் மன்றாடி அனுமதிபெற பிரார்த்தித்தபொழுது நாரதர் தோன்றினார் அவர் வந்த இடம் என்னாகும் கலகமே மிஞ்சும், ஆனால் பின்னாளில் நிச்சயம் நல்லதில் முடியும் நாரதர் வந்த வேலையினை சரியாக செய்தார் "அசுபதி அந்த சத்தியவான் நல்லவன், ஆனால் அவன் கர்ம வினையும் முன்னோர் செய்த பாவமும் அவனை விடாது, இன்னும் ஒரு ஆண்டுதான் அவன் வாழ்வு, யோசித்து மகளை முடிவெடுக்க சொல்" என சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார் இதை கேட்டதும் அசுபதிக்கு வியர்த்துகொட்டிற்று, சாவித்திரியினை அழைத்து விவரத்தை சொல்லி, திருமணத்தை நிறுத்த கெஞ்சினான். எந்த தகப்பனுக்கு தன் மகளை விதவை கோலத்தில் பார்க்க பிடிக்கும்? தந்தை மகள் மேல் கொண்ட பாசம் கொஞ்சமா? சாவித்திரி கொஞ்சமும் அஞ்சவில்லை "ஒருவேளை மணமான பின் இது தெரியவந்தால் என்ன செய்வீர்கள்? அவன் என் கணவன் என பார்த்த நொடியிலே முடிவு செய்துவிட்டேன், இனி இன்னொருவனை மணந்தால் குல அவமானம், இந்து பெண்ணுக்கே அவமானம், உங்கள் வளர்ப்புக்கும் தாய்க்கும் அவமானம்" அசுபதி மன்னனால் பதில் பேசமுடியவில்லை, அரசன் வாழ்வு என்றுமே நெருப்புமேல் ஆடும் ஊஞ்சல், ஆம் போரில் சாகலாம், சூழ்ச்சியில் சாகலாம், ஏன் உறவுகளே கொல்லலாம். எந்த அரசன் வாழ்வும் தன் மகளின் மாங்கல்யத்துக்கு உத்திரவாதம் அல்ல விதிபடி நடக்கட்டும் என அனுமதி கொடுத்தான் அசுபதியும் சாவித்திரியும் மட்டும் அறிந்த ரகசியத்துடன் திருமணம் மகா விமரிசையாக நடந்தது சாவித்திரி முடி துறந்தாள், நகை துறந்தாள், கந்தல் உடையுடன் கணவனுடன் அதே கானகம் சென்றாள் அந்த அன்பு அவளை குடிசையில் வாழ வைத்தது, விறகு பொறுக்க வைத்தது, காய் கனி கந்த மூலங்களில் சமைக்க வைத்தது, அந்த அன்பு கண் தெரியா மாமனாரையும் வயது முதிர்ந்த மாமியாரையும் கவனிக்க வைத்தது சத்தியவானை சந்தித்த மறு நொடியில் புதிதாய் ஏழையாய் பிறந்தாள் சாவித்திரி, அரசும் கொற்றமும் குடையும் ரதமும் அரண்மனையும் சேடியரும் நொடியில் மறைந்தனர் ஆம், அன்புக்கு அந்த சக்தி உண்டு, தூய்மையான பாசம் எதையும் துறக்க வைக்கும். அது காதல் என்றும் சொல்லலாம் பதிபக்தி என்றும் சொல்லலாம் ஆனால் எந்நிலையிலும் சத்தியவான் ஒருவருடத்தில் இறப்பான் என்பதை அவள் சொல்லவே இல்லை, தனக்குள்ளே மறைத்திருந்தாள். அழுவாள் கண்களை துடைப்பாள் அந்த ஒருவருடத்தில் ஓராயிரம் வருடம் வாழ்ந்த சந்தோஷத்தை கொடுக்க நினைத்து கொடுத்து கொண்டும் இருந்தாள் சத்தியவான் வாழ்வு முடியும் நேரம் வந்தது, அவனின் விதிப்படி அவனை அழைத்து செல்ல வந்தனர் எமனின் தூதர்கள் அவர்கள் வகையில் அவனும் கடமையாளன். கொடுவாள் வெட்டி தண்டனை நிறைவேற்றுபவன், தூக்கு மேடையில் கயிரை சொருகுபவன் போல அவன் கடவுளின் ஊழியன் அவன் பாசம் அன்பு கருணை எல்லாம் பார்க்கமுடியாது, எந்த கதறலுக்கும் அவன் காதை மூடி கொள்ள வேண்டும் தலையின் உறுப்புகளில் ஆச்சரியமானது காது, ஆம் கண்ணுக்கு இமை உண்டு, வாய்க்கு உதடு உண்டு, மூக்குகும் அடைப்பு உண்டு, ஆனால் காதுக்கு பூட்டு இல்லை சக உயிரின் கதறலின் வலிமையினை காது மனதுக்கு கொண்டு செல்ல வேண்டும் அது பூட்டபட கூடாது என்பது கடவுளின் கணக்கு ஆம் கண்ணீரை விட கதறலுக்கு வலி அதிகம் ஆனால் தூதர்கள் அதையும் கடந்துதான் உயிரை கொண்டு செல்ல வேண்டும் என்பது அவனுக்கான விதிப்பு அந்த தூதர்கள் சத்தியவானை நெருங்கினான், தொழுநனை தவிர யாரையும் தொழா சாவித்திரிக்கு அவன் கண்ணில் தெரிந்தான் தூதர்கள் சும்மா வருவானா, அவன் வரும்பொழுது அதற்கேற்ற சூழலும் வருமல்லவா? எமன் காலன் தூதன் என்பார்கள் அல்லவா? அப்படி தூதர்கள் வந்ததும் காலமும் கூடிற்று காட்சிகளும் அரங்கேறின தலை சுற்றுவதாக சொல்லி சாவித்திரி மடியில் சாய்ந்தான் சத்தியவான், அத்தோடு அவன் உயிரை எடுக்க வந்தனர் எமனின் தூதர்கள் ஆனால் சாவித்திரி சத்தியவானை சுற்றி நின்ற அக்கினி அவர்களை உள்ளே விடவில்லை, அவர்கள் எமனை அழைத்தனர் அங்கு வந்தான் எமன் எமன் தேவர்களில் ஒருவன் என்பதால் வழிவிட்டது அக்கினி, பாசத்தை வீசி சத்தியவானின் உயிரை கட்டினான் எமன், ஆம் பாசம் என்றால் கயிறு என்று பொருள் குடும்பம், பிள்ளை, சொத்து, உலகம் என ஒவ்வொரு மனிதனையும் கட்டியிருப்பது கண்ணுக்கு தெரியாத கயிறான பாசம், அதிலிருந்து விடுவித்து இழுத்து செல்வது எமனின் கயிறு சாவித்திரி அலறினாள், துடித்தாள் ஆனால் வழியுண்டா? கானத்து தலமை ரிஷியும் இது விதியம்மா தடுப்பது யார் என அமர்ந்திருந்தனர், பொருள் என்றால் தகப்பன் நொடியில் மீட்டு தருவான், உயிரென்ன்றால் யார் மீட்க முடியும், ஆயினும் தடுத்து அலறி துடித்து நின்றாள் அவள். அழுதவளை கண்ட எமன் தத்துவத்தை சொன்னான் "மகளே, உலகில் முதலில் மரித்த மனிதன் நானே, என் கடமை உயிரினை அழைத்து செல்வது என் கடமை எனக்கு வழிவிடு" தள்ளி நின்றாள் சாவித்திரி, எமன் சத்தியவானோடு நடக்க பின் தொடர்ந்தாள், அவள் வந்து கொண்டே இருக்க எமன் பரிதாபபட்டு கேட்டான் "மகளே எங்கே வருகின்றாய், நீ வரமுடியாத இடம் இது, எல்லா மனிதருக்கும் பொதுவானது, உண்மையினை உணர்ந்து திரும்பி செல்" "இது என் கணவனின் உயிர் மட்டுமல்ல என் உயிரும் அதுதான், அது இருக்குமிடத்தில்தான் நான் இருப்பேன் அது மனைவியாகிய என் உரிமை கடமை" என்றாள் "மகளே இது தெய்வ கணக்கு உனக்கு புரியாது, என்னை பின் தொடராதே இவன் திரும்ப மாட்டான்" என்றான் எமன் "என் உயிரையும் எடுத்து செல் தேவனே, அவர் இல்லா உலகத்தில் நான் இனி இருக்கமுடியாது" என்றாள் சாவித்திரி "மகளே, உனக்கான நேரமும் விதியும் வராதபொழுது உன் உயிரை என்னால் இழுத்து செல்லமுடியாது, நீ என்னை பின் தொடராதே" என்றான் எமன் அவளோ அவன் பின்னாலே சென்றாள், அவளின் உறுதியில் அதிசயித்த எமன் மறுபடியும் சொன்னான் "மகளே என் கடமை இது, நானாக இவனின் உயிரை எடுத்து எனக்கொன்றும் ஆகபோவதில்லை, படைப்பின் நோக்கத்தை இயக்கும் பரமனின் கட்டளைபடி நான் ஒரு வேலைக்காரன், என்னை தொடர்வதால் உனக்கொன்றும் நடக்காது, கண்ணீரும் கதறலும் எதையும் மாற்றாது, திரும்பி போ" சாவித்திரி சொன்னாள் "அவர் உயிர் இருக்குமிடத்தில்தான் என் உயிரும் இருக்கும், அன்பின் பிணைப்பு அது, அதை யாராலும் உடைக்க முடியாது, என் உயிருடன் என் உடல் கூட வருகின்றது, நான் என்ன செய்வேன்?" மெல்ல புன்னகைத்த எமன் "மகளே ஒருவரம் கேள், ஆனால் இவனை மட்டும் கேட்காதே அவன் திரும்ப முடியாது". சாவித்திரி தனக்காக கேட்கவில்லை அப்பொழுதும் கணவனின் நோக்கத்திற்காக கேட்டாள் "என் மாமனாரின் கண்பார்வை திரும்ப வேண்டும், அவர் ராஜ்யம் அவருக்கு கிடைக்க வேண்டும்" தேவர்களில் ஒருவனாகிய எமன் அதற்கு மகிழ்ந்து வரமளித்தான், "உனக்கு ஏதும் கேட்காமல் உன் கணவனின் குடும்ப கஷ்டம் உன் கஷ்டமாக நினைத்து வேண்டியதற்கு இரங்கி அந்த வரத்தை அளித்தோம், நீ போகலாம்" என்றான் அவளோ தொடர்ந்து வந்தாள் "மகளே சொல்வதை கேள், மானிடர்கள் எம்மோடு வரமுடியாது, வாழ்வின் அனைத்து கர்மாக்களையும் அனுபவித்து, விதியினை முடித்த அனுபவத்தோடே வரமுடியும் நீ கிளம்பு" என்றான் "தேவனே, என் வாழ்வும் விதியும் அவரன்றி வேறு யார், நான் வேறு எங்கு செல்வேன்" என்றாள் சாவித்திரி "அவன் நரகத்துக்கு போனால் அங்கும் போவாயோ? முடியாதல்லவா திரும்பி செல்" என்றான் எமன் "அவருக்கு விதிக்கபடுவது நரகமானாலும் எனக்கென்ன தயக்கம், அவர் இருக்குமிடமே எனக்கு சொர்க்கம் அல்லவா?" அந்த பதிலே அதிசயித்த எமன் "மகளே இன்னொரு வரம் கேள், ஆனால் இவனை மட்டும் கேட்காதே, இறந்தவன் திரும்ப முடியாது" "எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும், அவர்கள் மாமனாரின் ராஜ்யத்தை ஆளவேண்டும்" இவ்வளவுதானே மகளே, உன் பூரண அன்பிற்காய் அதை அருளினோம் , இனி எம் தேவலோக கடமையில் குறுக்கிடாதே, மங்கலம் உனக்கு உண்டாகட்டும்" என நகர்தான் எமன் அவ்வளவுதான், அவன் முன்னால் சென்று மறித்து நின்றாள் நின்றாள் சாவித்திரி "மானிடபெண்ணே, இனி எம்மால் பொறுக்கமுடியாது. அழுது புரண்டாலும் உலகே அழிந்தாலும் இறந்தோர் எழமாட்டர். எம் வழியினை தடுப்பது படைப்பின் சக்கரத்தை நிறுத்துவதற்கு சமம், சூரியனை கட்டி வைப்பாயோ, நிலவை மறைப்பாயோ, திரும்பி செல் "தேவனே என்னை மன்னித்து கொள்ளுங்கள், வரம் கொடுத்தது நீங்கள், கொடுத்த வாக்குபடி வரத்தை கொடுங்கள்" "எல்லாம் கொடுத்தாயிற்றே பெண்ணே, இனி என்ன?" "ம்ம், தேவனே எனக்கு வாரிசுகள் கணவனன்றி எப்படி வருவார்கள்? கணவனை தவிர வேறு யாரையும் மனதாலும் என்னால் நினைக்க முடியாது, என் கணவன் திரும்பி வருவதே உம் வாக்கு நிறைவேற ஒரே வழி , கொடுத்த வாக்கை காப்பாற்றமுடியாவிட்டால் உம் தேவர் பகுதியே பறிக்கபட்டு, சாபத்து நிலை அடைவீர் மறக்க வேண்டாம்.." கையறு நிலையில் நின்றான் எமன், அவனுக்கு அவன் வரத்தையும் காக்க வேண்டும் அந்த உயிரையும் கொண்டு செல்ல வேண்டும். இது முடியாது என்பது விளங்கிற்று தன் கடமையில் இருந்து அவசரபட்டு தவறி வாக்கு கொடுத்துவிட்டோமோ என் அஞ்சினான், தயங்கினான், இனி தான் நகரமுடியாது என்பது தெரிந்து மேல் உலகுக்கு தன் நிலை அறிவித்தான் அன்னை சக்தி தோன்றினாள், ஒரு பெண்ணின் பாசம் கணவனுக்கு வாழ்வாகும், தெய்வத்தின் விதியினை மீறி அவனின் ஆயுளை கூட்டுமளவு, விதியினையே மாற்றுமளவு அதற்கு சக்தி உண்டு என உலகுக்கு சொல்லும் வாழ்வு இவளது என ஆசீர்வதித்தாள் எமனும் சத்தியவானை விடுவித்து திரும்பி சென்றான் அன்று பங்குனியும் மாசியும் கூடும் மாலை , அப்பொழுதுதான் சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்டெடுத்தாள் கார் என்றால் அரிசி, அந்த அரிசிமாவில் அடை செய்து தன் விரதத்தை முடித்து அன்னைக்கு படைத்து அவள் உண்டாள், கார் அடை எனும் பெயர் வந்தது இப்படித்தான் சாவித்திரி கதையினை படித்து அன்று நோன்பிருந்து அன்னை காமாட்சியினை வழிபட்டால் அவளின் கணவனுக்கு ஒரு கெடுதலும் நிகராது என்பது ஐதீகம் காரடையான் நோன்பு இதற்காகத்தான் கொண்டாடபடுகின்றது இந்த நோன்பு சொல்லும் தத்துவம் இதுதான், அன்பு தூய்மையான அன்பும் அதில் இருக்கும் உறுதியான உண்மையும் விதியினையும் வெல்லும் வாசுகி கதை, அனுசுயா கதை எல்லாம் இந்த தத்துவமே பெண்ணின் தூய்மையான உண்மையான அன்புமுன் பிரபஞ்சமும் அதன் விதியுமே மண்டியிடும் , அந்த அன்பு அதிசயங்களை நிகழ்த்திகாட்டும் சாவித்திரி வாழ்வில் அது நிகழ்த்தி காட்டியதைத்தான் காரடையான் நோன்பு என கொண்டாடுகின்றார்கள் இந்து பெண்கள் வடமாநிலத்தில் இவ்விழா பல மாநிலங்களிலும் சுமங்கலி பெண்கள் நோன்பிருக்கும் நாள் ‘கர்வா சவுத்’ என கொண்டாடபடுகின்றது தென்னகத்தில் இந்நாளில் இந்து பெண்கள் காமாட்சி அம்மன் படம் வைத்து நெய் விளக்கேற்றி பூரண கும்பம் வைப்பார்கள், அதில் தேங்காய், பூ, மாலை சாத்தி பட்டுத்துணி சுற்றி மஞ்சள் சரட்டில் (கயிறு) பசுமஞ்சள், பூ இணைத்து அதன் மீது வைப்பார்கள் இந்த கும்பத்தில் வந்து அருளுமாறு காமாட்சி அம்மனை வழிபட்டு, விரதத்தை முடிப்பார்கள். பின்னர் மஞ்சள் சரடு அணிவார்கள். பின் தீர்க்க சுமங்கலிகளாக இருக்கும் வயதான பெண்களை வணங்கி அவர்கள் கையால் சரடு அணிவது கூடுதல் சிறப்பாகும் இந்நாளுக்கான அடை செய்து, நல் வெண்ணெய் எடுத்து அதை சிவனுக்கும் பார்வதிக்கும் படைத்து ‘உருகாத வெண்ணையும், ஓரடையும் நூற்றேன். மறுக்காமல் எனக்கு மாங்கல்யம் தா’ என்று பிரார்த்தித்து கணவர் மற்றும் பெரியோர்களிடம் ஆசி பெற்று நோன்பை முடிப்பார்கள் ‘மாசிக் கயிறு பாசி படியும்’ என்பார்கள். அதாவது, காரடையான் நோன்பு இருந்து அணிந்துகொள்கிற மஞ்சள் சரடானது பாசி படிகிற அளவுக்கு பழையதானாலும்கூட, கழுத்திலேயே நிலைத்திருக்கும். பெண்கள் தீர்க்க சுமங்கலியாக இருப்பார்கள் என்பது அசைக்க முடியா நம்பிக்கை குடும்பத்திற்கு பெண்களே ஆதாரம், அதுவும் மனைவி ஸ்தானமே மகா மகா முக்கியமானது, அந்த மங்கையர்கள் பங்குனி பிறக்கும் நேரம் இந்த நோன்பை நூற்று, அந்நேரம் சாவித்திரி கதையும் படித்து தேவியின் எல்லா அருளையும் பெறட்டும் சத்தியவான் சாவித்திரி கதை ராமாயணம் மகாபாரதம் போலவே இந்நாட்டின் பெரும் அடையாளமாக இருந்தது அன்று சினிமா இல்லை, டிவி இல்லை எதுவுமில்லை கோவில்களில் இந்த கதை போதிக்கபட்டது, தெரு கூத்துக்களிலும் இதர கலைகளிலும் சொல்லபட்டது ராமாயணம் மகாபாரதம் போலவே இந்துமதம் பரவியிருந்த இடத்திலெல்லாம் இருந்தது, அங்கெல்லாம் மனைவியின் உறுதியின் அடையாளமாக போதிக்கபட்டது நவராத்திரி உட்பட இதர கொண்ட்டாங்களில் இந்நாட்டின் எல்லா மூலை முடுக்கிலும் சாவித்திரி கதையும் சொல்லபட்டது இன்று காலங்கள் மாறிவிட்டன, டிவியும் சினிமாவும் கண்ட கருமாந்திரங்களை எல்லாம் போதித்து கலாச்சாரத்தையும் இன்னும் பலவற்றையும் மாற்றி திணிக்கின்றன அந்த நுனிமரத்து பறவைகள் எதையும் செய்யட்டும் சாவித்திரி கதையும் அந்த நோன்பும் இம்மாபெரும் மரத்தின் வேர்களில் ஒன்று, இந்துமதம் போதிக்கும் அன்பே கடவுள், சத்தியமே தெய்வம் எனும் பெரும் வேர்களில் ஒன்று இத்தேசமும் இந்துமதமும் அம்மத மங்கையரும் இருக்குமட்டும் அது உலகில் எக்காலமும் நிலைபெற்று மனைவி அன்பின் மகத்துவத்தை அதற்கு இருக்கும் சக்தியினை சொல்லிகொண்டே இருக்கும் அதில் கண்ணுக்கு தெரியாத சாவித்திரிக்கள் தங்கள் அன்பினாலும் அது கொடுக்கும் சத்தியத்தின் உறுதியிலும், அன்பையே தெய்வமாய் கொண்டு தங்கள் கணவனை எல்லா ஆபத்திலும் மீட்டு காத்து கொண்டே இருப்பார்கள்.. அந்த அன்புக்கு தெய்வமும் பிரபஞ்சமும் எக்காலமும் தலைவணங்கி கொண்டே இருக்கும்
காரடையான்சாவித்திரி வழிபாட்டினை நாளை இந்து மக்கள் கொண்டாட தயாராகும் நேரமிது, அது காரடையான் நோன்பு என்றும் சத்தியவான் சாவித்திரி கதையின் வழி வந்த வழிபாட்டு ஏற்பாடு என்றும் கொண்டாடப்படுகின்றது. சத்தியவான் சாவித்திரி கதைக்கு முன்பே சாவித்திரி வழிபாடு உண்டு. சாவித்திரி என்பவள் மகா சக்திவாய்ந்த தெய்வம். அந்த தெய்வத்தின் அம்சமாக தோன்றி சாவித்திரி தேவியின் மகாத்மியம் பற்றியும், அவளை வழிபட வேண்டிய அவசியத்தை சொல்லவும் வந்தவள் சாவித்திரி, சத்யவான் மணந்த அந்த சாவித்திரி. ஆம். அவள் சாவித்திரி தேவியின் அம்சம், அவள் பிறப்பு அதனை சொல்கின்றது, அந்த வரலாற்றில்தான் இந்த விழாவின் தத்துவமே அடங்கியிருக்கின்றது. மத்திர தேசம் என்ற நாட்டை ஆண்டு வந்த அசுவபதி என்ற ராஜாவிற்கு குழந்தை இல்லை. அவர் தன் கவலையினை நாரதரிடம் சொன்னார். ஒரு நாள் நாரதர் அங்கு வந்த போது, அவரிடம் தன் குறையை சொல்ல, நாரதர் சாவித்திரி தேவியை நினைத்து பூஜை, ஹோமங்கள் செய்தால் வழி பிறக்கும் என்று சொல்லி மறைந்தார். அசுவபதி மன்னனும் அப்படியே சாவித்திரி தேவியினை நினைந்து பெரும் யாகம் செய்தபோது அந்த அக்னி குண்டத்திலிருந்து, ஜெகத்ஜோதியாய் சாவித்திரி தேவி எழுந்தாள், எழுந்தவள் சொன்னாள், "மன்னா, உன் யாகத்தின் பலனாய் பிரம்மதேவன் அனுப்பியதால் நான் இங்கு வந்தேன். நீ செய்த தவத்திற்கு பலனாக நானே கன்னிகையாய் வந்து அவதரிப்பேன்" என்று சாவித்திரி தேவி சொல்லி மறைந்தாள். அப்படி பிறந்த மகளுக்குத்தான் சாவித்திரி எனப் பெயர் சூட்டினான் அசுவபதி மன்னன், இவள்தான் பின் சத்தியவானை மணந்து அவனை எமனிடம் இருந்து மீட்டாள். அதாவது சாவித்திரி சாதாரணப் பெண் அல்ல, அவள் சாவித்திரி அம்மனின் அம்சம், ஆனால் ஒவ்வொருவரும் ஏன் சாவித்திரியினை பிரார்த்திக்க வேண்டும் என்ற காரணத்தை சொல்ல அந்த நாடகத்தை நடத்தினாள். ஆம். சாவித்திரி தேவியே வந்து தன் சக்தியினை சொல்ல யமனை வென்று நாடகம் நடத்தி மக்களுக்கு வழிகாட்டிச் சென்றாள். அந்த வழிபாட்டை சொல்வதுதான் இந்த காரடையான் நோன்பு எனும் சாவித்திரி வழிபாடு. யார் சாவித்திரி தேவி? இதனை புரிந்துகொள்ள இந்துக்களின் ஆதார தொன்மத்துக்கு செல்லவேண்டும் , ஆதி தத்துவத்துக்கு செல்ல வேண்டும். பராசக்தியானது எப்போதுமே தன் செயலை செய்ய பல வடிவங்களாக பிரியும், அந்த மூலசக்தி பெரும்பாலும் ஏழாகத்தான் பிரியும். ஏழு உலகம், ஏழு வானம், ஏழு மண்டலம், ஏழு ரிஷிகள், ஏழு கிரகங்கள் என அதன் தன்மைகள் ஏழு ஏழாகத்தான் பிரியும். சூரிய ஒளி கூட ஏழு நிறமாக பிரிவதை அவதானிக்கலாம், அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உண்டு எனும் வகையில் மானிட உடலின் ஆதார தாதுக்கள் ஏழு. இந்த ஆதார தத்துவத்தின் படிதான் இந்துவேதம் சொல்கின்றது, ஆதி பராசக்தி ஏழுவடிவமாக பிரிகின்றது. அப்படி பிரியும் சக்தி ஏழு முக்கிய தேவிகளாக மாறுகின்றது. ஷியாமளா (மீனாட்சி), காமாட்சி, விசாலாட்சி, ராஜ ராஜேஸ்வரி, மகாலட்சுமி, பார்வதி மற்றும் சாவித்திரி என ஏழு தேவியர். ஆம். இந்த ஏழு தேவியரில் மகா முக்கியமானவள்தான் சாவித்திரி. இந்த சாவித்திரியின் மூன்று அம்சம்தான் வாக்தேவி, காயத்திரி, சரஸ்வதி என மூன்று தேவியர். ஆம். இதனாலே சாவித்திரி மூன்று முகத்தோடு அமைக்கப்பட்டாள், இந்த மூன்று முகத்தால்தான் மூன்று பிடரியினை கொண்டவள் எனப் முப்பிடாரி என்றும் ஆனாள். தமிழகத்தில் முப்பிடாரி என அழைக்கப்படுவது இந்த சாவித்திரி தேவிதான், கம்பன் இப்படியான மூன்று முகம் கொண்ட சிலையினைத்தான் கலைமகளாக வணங்கினான். காயம் என்றால் மேனி, உடலில் ஒளியாக விளங்குபவள் உடலுக்கு நலம் தருபவள், வாக் என்றால் பேசும் வல்லமை தருபவள், சரஸ் என்றால் தொடர்ச்சி (சரம்) தொடர்ந்து இயங்கும் வழிகளை, வேதங்களை தருபவள், அது இயங்கும் சக்திகளை கலைகளை தருபவள் என்றும் மூன்று சக்தியினை கொண்டவள். இவளுக்கான மந்திரம் சாவித்திரி மந்திரம், அது அபார சக்தி மிக்கது என்பதாலே அது சுருக்கப்பட்டு காயத்திரி மந்திரம் என்றானது. இன்று சொல்லப்படும் காயத்ரி மந்திரம் சாவித்திரிக்கான மந்திரத்தின் ஒரு சிறுபகுதிதான், அதுவே அபார சக்தி மிக்கது. இப்படி மூன்று நிலைகளில் நின்று அருள் வழங்குபவள் சாவித்திரி தேவி, இந்த தேவியின் மகா பெரும் ஒளியினை லௌகீகமாகவும் ஆன்மிக வடிவிலும் வழங்குவது. ஒளி இருக்கும் இடத்தில் இருள் நில்லாது, அப்படி ஞானம் இருக்கும் இடத்தில் அறியாமையும் பயமும் இராது. சாவித்திரி பற்றி மத்ஸ்ய புராணம் சொல்கின்றது "'பிரம்மா அடுத்ததாக தனது மாசற்ற பொருளிலிருந்து ஒரு பெண்ணை உருவாக்கினார், அவர் சத்ரூப, சாவித்திரி, சரஸ்வதி, காயத்ரி என்ற பெயர்களில் கொண்டாடப்படுகிறார். வராக புராணம் சொல்கின்றது "அன்னை சரஸ்வதி காயத்ரி, சரஸ்வதி, மகேஸ்வரி (தாய் பார்வதியின் பெயர்களில் ஒன்று) மற்றும் சாவித்திரி என்றும் அழைக்கப்படுகிறார். கல்வியின் தெய்வமாக ஆண்டுக்கு ஒருமுறை அன்னையை வழிபடுவது வழக்கம்." இந்த சாவித்திரி ஒளியின் அம்சம், எல்லா ஒளிக்கும் அவளே மூலம், அவள் எப்படியான ஒளிதத்துவம் கொண்டவள் என்பதை அவளுக்கான புராணம் சொல்கின்றது. ஆம். சாவித்தி தேவிக்கு ஒரு உபநிஷிதம் உண்டு, "சாவித்ரியூபனிஷாத்" என அதற்குப் பெயர். இன்றும் ஆங்காங்கு அதன் படிவங்கள் ஏடுகள் உண்டு. அதுதான் சாவித்திரி பற்றி தெளிவாக சொல்கின்றது. அந்த மகா சக்தி ஆணாகவும் பெண்ணாகவும் பிரிகின்றது, அந்த சேர்க்கையில்தான் இந்த உலகம் இயங்குகின்றது எல்லாவற்றுக்கும் மூலம் அந்த சாவித்திரி என்பதை உபநிஷதம் சொல்கின்றது. அந்த பேரோளியின் ஆண்வடிவத்தை அது "சாவித்ர்" என்றது. அது அக்னி (நெருப்பு,), வருணன் (நீர்), வாயு (காற்று), யாகம், இடி, சூரியன், சந்திரன், மனம், ஆண் தன்மை எனப் பிரிகின்றது. அந்த சக்தியின் பெண் வடிவம் நிலம் , நீர், காற்று , வேதம், விண்வெளி, மின்னல், பேச்சு, நட்சத்திர்ம, சப்தம் (பேச்சு), பெண் தன்மை எனும் உயிர்தன்மை என வடிவம் பெறும். இந்த "சாவித்ர்" எனும் வடிவங்களும் "சாவித்ரி" எனும் பெண் வடிவங்களும் இணைந்துதான் இந்த உலகை படைக்கின்றன. ஒவ்வொரு உயிரையும் படைக்கின்றன எனப்தை அந்த உபநிடதம் சொல்கின்றது. அதாவது ஒரு பேரோளிதான் சாவித்திரி அவளில் இருந்தே எல்லாம் பிரிந்து தோன்றிற்று , அந்த சாவித்திரியினை வணங்கிப்போற்றுவதே எல்லாம் பெற்றுக்கொள்ளும் வழி என சாவித்திரி உபநிஷதம் சொல்கின்றது. இந்த சாவித்திரி உபநிஷதம் சொல்லும் ஸ்லோகம்தான் இன்று காயத்ரி மந்திரமாக மாறிவிட்டது, மூல ஸ்லோகம் இந்த உபநிஷதமே. விசுவாமித்திரர் இங்கிருந்துதான் அந்த மந்திரத்தை பெற்று மக்களுக்கு தந்தார், அதாவது அவர் காலத்திலே இந்த வழிபாடு இருந்தது. சத்தியவான் சாவித்திரி கதை என்பது எமனிடம் இருந்து ஒரு பக்திமிக்க மனைவி கணவனை மீட்டாள் என சொல்லப்பட்டாலும் அதன் மறைபொருள் மகா மகாப் பெரிது. சாவித்திரி எதனையும் இங்கே இறக்கவிடமாட்டாள் மறுபடி மறுபடி அவளால் படைப்புக்கள் உயிர்கள் தோன்றிகொண்டே இருக்கும், இழந்ததை அவள் மீண்டும் உருவாக்கி தருவாள் என்பதே அதன் மூல தத்துவம். யானைக்குரிய உணவை எறும்பு சாப்பிட முடியாது, மகா ஞானியருக்குரிய ஞானம் ஒரு மனிதனுக்குள் வந்துவிட முடியாது. அதனால் லௌகீக மாந்தருக்கு இந்த வழிபாட்டின் மகத்துவம் புரியும் படி சத்தியவான் சாவித்திரி கதை வாழ்க்கை தத்துவமாக அப்படியே பாடமாக சொல்லப்பட்டது. சாவித்திரி அந்த மூல சாவித்திரி தேவியினை வணங்கினாள். அதனால் அவள் என்னென்ன பெற்றாள் என்பதை சொன்னது. அவள் தைரியம் பெற்றாள், வாக்கு சாதுர்யம் பெற்றாள், அறிவைப் பெற்றாள், தன் கடமை என்னவென உணர்ந்தாள், எமனையே நேரில் நின்று வாதாடி வெல்லும் ஞானத்தை, வைராக்கியத்தை பெற்றாள். ஆம். ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்கவேண்டிய குணம் இது, குடும்பப்பெண் என்பவள் சாதாரணம் அல்ல, அவள்தான் குலத்தை குடும்பத்தை தாங்கி நிற்பவள். வீட்டின் காவல் தெய்வமே அவள்தான். அப்பெண் எப்படியான அறிவினை கொண்டிருக்க வேண்டும், அதனை வழிபாட்டில் எப்படி பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதையே சாவித்திரி கதையில் இந்துக்கள் சுட்டிக்காட்டினார்கள். அந்த அருளை, வாக்கு சாதுர்யம், உடல் நலம், அறிவு , தெய்வீக ஞானத்தை கொண்டவளாக பெண் இருத்தல் வேண்டும் அப்படி இருக்கும் பட்சத்தில் அவளால் குலம் தழைக்கும் என்றார்கள். சாவித்திரியால் சத்தியவான் மட்டும் மீளவில்லை, அவனைப் பெற்றோர் மீண்டார்கள், அவர்களால் நாடு மீண்டது, மக்கள் எல்லோரும் மறுவாழ்வு பெற்றார்கள். ஒரு அறிவுள்ள பெண், ஞானமும் தைரியமும் கொண்ட பெண் எமனையும் வென்று தன் கடமை செய்து எல்லோரையும் வாழவைப்பாள், அப்படியான அறிவினை ஒளியினை சாவித்திரி தேவி தருவாள் என்றார்கள். ஆம். சாவித்திரி என்றால் ஒளி. அதைத்தான் ஆதிசங்கரர் தன் சௌந்தர்ய லஹரியில் பாடினார். "சவுந்தர்ய லஹரியில் ஒரு அழகான, ஆழமான பாடல் உண்டு. "தடில்லேகாதந்வீம் தபன சசி வைச்வாநர மயீம் நிஷண்ணாம் ஷண்ணாமப்யுபரி கமலானாம் தவ கலாம் மஹாபத்மாடவ்யாம் ம்ருதித-மலமாயேன மனஸா மஹாந்த: பச்யன்தோ தததி பரமாஹ்லாத-லஹரீம்" என்பது அப்பாடல். இதன் பொருள் இப்படி வரும். "தடித் லேகா தந்வீம்" அதாவது மின்னல் கொடி போல் நீண்ட உருவமும், சூக்ஷ்மமான ஜ்யோதிர்மயமாயும், நொடிப்பொழுது பக்தனுக்கு ப்ரகாசித்து மறைபவளாயும், "தபன சசி வைச்வாநர மயீம்" அதாவது சூரியன், சந்த்ரன், அக்னி வடிவமாயும், "நிஷண்ணாம்" அதாவது நிலை பெறுவதுமான, "ஷண்ணாம்" அதாவது ஷண் எனும் ஆறு, "கமலானாம் அபி" ஆதார சக்கரங்களுக்கும், "உபரி" மேலே "மஹாபத்மாடவ்யாம்" என்றால் ஆயிரம் தளங்களுடைய தாமரையில், "ம்ருதித" என்றால் நாசம் செய்யப்பட்ட, "மல மாயேன" என்றால் காமக்ரோதாதி மலங்கள், “மனஸா" என்றால் மனதால் "மஹாந்த" என்றால் ஞானிகள், "பச்யன்தோ" என்றால் பார்ப்பவர்களாக, "தததி" என்றால் அனுபவிக்கிறார்கள், "பரமாஹ்லாத லஹரீம்" என்றால் அலை அலையாக வரும் அளவுகடந்த ஆனந்தத்தை எனப் பொருள். அதாவது, மின்னல் கொடி போல் நீண்ட உருவமும், சூக்ஷ்மமான ஜ்யோதிர்மயமாயும், நொடிப்பொழுது பக்தனுக்கு ப்ரகாசித்து மறைபவளாயும், சூரியன், சந்த்ரன், அக்னி வடிவமாயும், ஆறு ஆதார சக்கரங்களுக்கும் மேலே ஆயிரம் தளங்களுடைய தாமரையில் நிலை பெறுவதுமான, உன்னுடைய இந்த 'சாதா' என்ற கலையை, காமக்ரோதாதி மலங்களை மனதால் நாசம் செய்யப்பட்ட ஞானிகள் அலை அலையாக வரும் அளவுகடந்த ஆனந்தத்தை பார்ப்பவர்களாக அனுபவிக்கிறார்கள் எனப் பொருள். அன்னை ஒளிவடிவமானவள், ஞானியரின் ஞானியாளவனள் என அவர் சொல்கின்றார். லலிதா சஹஸ்ர நாமம் அன்னைக்கு பல பெயர்களைச் சொல்கின்றது. அவளை "த்ரிகண்டேஷி” என்கின்றது. அதாவது அன்னை சந்திர, சூரிய, அக்னி என்ற மூன்று கண்டங்களுக்கும் ஈஸ்வரி என்கின்றது. "பக்த ஹார்த தமோ பேத பானுமத் பானு சந்ததி" எனச் சொல்கின்றது. அதாவது பக்தர்களிடத்தில் கொண்ட அளப்பரிய பரிவினால், அவர்கள் மனத்தில் படிந்திருக்கும் அறியாமை எனும் இருளை தனது சூரியக்கதிர் போன்ற பிரகாசத்தால் அகலச்செய்பவள் எனப் பொருள். அவளை "மித்ர ரூபிணி" என்கின்றது. அதாவது சூரிய வடிவானவள் அன்னை எனச் சொல்கின்றது. அவளை "பகாராத்யா" என்கின்றது. அதாவது சூரிய மண்டலத்தில் ஆராதிக்கத்தக்கவள் எனப் பொருள். இன்னும் ஆழமாகச் சொல்லவேண்டும் என்றால், அன்னை ஒளியாக இருக்கின்றாள். அது ஞானத்தின் ஒளி, அந்த ஒளிதான் எல்லா உலக லௌகீக ஒளியாகவும், ஞான ஒளியாகவும் பிரகாசிக்கின்றது அந்த ஒளிதான் உடலின் சக்கரங்களின் ஒளியாக மறைந்திருக்கின்றது. அதை தியானத்தில் துலக்கினால், ஆறு சக்கரங்களும் துலங்கி, உச்ச சக்கரம் துலங்கும். அப்போது தலையினைச் சுற்றி ஒளிவட்டம் வருவது போல் பெரும் ஞானம் வாய்க்கும். அன்னை எல்லா ஒளிக்கும் அதிபதி. ஞானம் எனும் பேரொளி, ஞானச்சுடருக்கும், அறிவுச்சுடருக்கும் அவளே அதிபதி. அவளை வேண்டினால் ஒளி துலங்கும், ஆன்ம ஒளி பிரகாசிக்கும். அது எல்லா நலன்களையும் தரும். இந்த ஒளியின் அருளை வேண்டித்தான், இந்த அருளை வேண்டித்தான் பெண்கள் நோன்பிருக்கும் நாள் காரடையான் நோன்பு. குடும்பப் பெண்களின் கடமையும் பொறுப்பும் அதிகம், அவர்கள்தான் வீட்டின் மதிப்பை காப்பவர்கள், அவர்களாலேதான் ஒரு வீடு பெரும் உயரமும் மதிப்பும் அடையும் அப்படியான பெண்கள் அறிவும் ஞானமும் மிக்கவர்களாக இருந்து, தங்களை காத்து தன் குடும்பம், கணவன், குலம் என எல்லாம் காக்க அந்த மகா சக்தியான சாவித்திரியினை வழிபடச் சொன்னார்கள். அதுதான் சாவித்திரி விரதத்தின் தாத்பரியம். அவ்வகையில் ஒவ்வொரு பெண்ணும் தன் குடும்பத்துக்காக தன் குலம் தழைக்க அதற்கான ஞானமும் அறிவும் தனக்கு கிடைக்க வேண்டும் நாளே சாவித்திரி விரதம். அதனை ஏன் மாசி முடிந்து பங்குனி தொடங்கும் காலத்தில் வைத்தார்கள்? மாசி முடிந்து பங்குனி தொடங்கும் காலம் மெல்லிய பனியும் கடும் வெயிலும் கலந்த காலம். இக்காலத்தில் பல வகையான நோய்கள் பரவும் ஆண்கள் இக்காலகட்டத்தில்தான் பொருளீட்ட வேண்டி வெயிலில் பல இடங்களுக்கு அலையத் தொடங்குவார்கள், வெயிலில் உழைப்போ இல்லை பயணமோ தொழிநிமித்தம் மேற்கொள்வார்கள். கணவனே வீட்டின் உயிர்நாடி என்பதால் நோய் வராமலும் இதர ஆபத்துவராமலும் கணவனை காத்து தர பெண்கள் உருக்கமாக வழிபடுவார்கள். தங்கள் தாலிசரடை காத்து தர மன்றாடுவார்கள். சாவித்திரி தேவி எல்லா ஒளிக்கும் ஆதாரமாய் இருப்பதால் சூரிய ஒளியால் வரும் எல்லா விஷயங்களில் இருந்தும் கணவனுக்கு காவல் வேண்டும், வெப்ப நோய்கள் இதர பருவகால சிக்கல்கள் இல்லாமல் காக்க வேண்டும் என மன்றாடுவார்கள். கணவன் மகா சிரமபட்டு ஈட்டும் பொருளைக் கொட்டும் பொருளை சரியான முறையில் செலவு செய்து குடும்பம் காக்கும் ஞானத்தை அறிவை தேடி மன்றாடுவார்கள். அன்னை ஞானம் தருபவள், அன்னை அறிவின் ஒளியானவள். அந்த சாவித்திரி தேவி தன் குலம் காக்கும் அறிவினை, குடும்பம் காக்கும் பெரும் ஞான ஒளியினை தரவேண்டும் அகிலத்தை காக்கும் அவள் தனக்கும் அந்த அறிவினை, வார்த்தை சிறப்பை, பெரும் ஞானத்தை தரவேண்டும் என மன்றாடுவார்கள். அவர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் கொடுக்கும் விதமாகவே சத்தியவான் சாவித்திரி கதையும் நினைவு கூறப்படும். அந்த சாவித்திரி எவ்வளவு தைரியமாக அறிவாக ஞானமாக வைராக்கியமாக விடாமல் போராடி, சென்றால் திரும்வே திரும்பாது, எமன் என்றால் ஒருவழிபாதை என்பதை மாற்றி கணவன் உயிரை மீட்டு வந்தளோ அதை ஒவ்வொரு பெண்ணும் தெரிந்து உத்வேகம் கொள்ள அந்த கதை கூறப்படும். ஒரு பெண்ணுக்கு சாவித்திரி தேவியின் அருள் இருந்தால் போதும், அதுமட்டும் போதும் எல்லா அசாத்திய சாகசங்களையும் அவளால் அன்னை அருளில் செய்து குலம் காக்க முடியும் என போதித்தார்கள். சாவித்திரி தேவியினை ஒவ்வொரு பெண்ணும் வழிபடும் அவசியத்தை சொன்னார்கள். ஆம். ஆண்களுக்கு காயத்ரி அவசியம் என்ற இதுமதம் பெண்களுக்கு சாவித்திரி தேவியின் வழிபாடு மிக மிக அவசியம் என்றது. சாவித்திரி தேவியினை வழிபட்டு பெரும் வரங்களை வாங்கி அறிவொளி அடைந்து குடும்பம் கொண்டவன் குலம் காக்கச் சொன்னது. இதனால் ஒவ்வொரு குடும்பப்பெண்ணும் இந்த வழிபாட்டை செய்தல் அவசியம். சாவித்திரி என்பது எங்கோ வடநாட்டில் இந்துக்கள் கொண்டாடுவது அல்ல, தமிழக இந்துக்களுக்கு அந்நியமும் அல்ல. கிராமங்களில் "மகாமாயீ" எனப்படும் ஆதிபராசக்தியினை "மகமாயி" என வணங்குவதை போல அவள் கிராமங்களில் உண்டு. "பேச்சி அம்மன்" என வணங்கப்படுபவள் அவளே, வாக் தேவதையின் அம்சமே பேச்சி அம்மன். சாவித்திரி தேவி மூன்று முகங்களை கொண்டவள். அவள் முப்பிடாரி அம்மன் என்றும், மூன்றுமுக அம்மன் என்றும் பல வகைகளில் வணங்கப்படுகின்றாள். அவள்தான் சாவித்திரி. அவளை மனமார வணங்கினால் குடும்ப பெண்களுக்கு எல்லா நலனும் அறிவும் ஒளியும் வரும், சிந்தை தெளிவாகும், கடமை விளங்கும், பெரும் ஞானம் வாய்க்கும் அவர்களால் குடும்பம் தழைக்கும். அன்று காரடையான் நோன்பு என்பதால் அடை செய்துதான் வழிபடவேண்டிய அவசியம் இல்லை, கார் என்றால் அரிசி அடை என்றால் அதில் செய்த பலகாரம். நாம் முன்பே பார்த்தது போல் சாவித்திரி நில தத்துவம், ஒளிதத்துவம், அந்த தத்துவத்தை சொல்லத்தான் நிலமும் ஒளியும் சேர்ந்து விளைவிக்கும் அரிசியினை அடை செய்து படைத்தார்கள். அது ஒரு தத்வார்த்தம், அப்படி தானும் தன் கணவமும் சேர்ந்து, எப்படி ஒரே சக்தி ஆணாகவும் பெண்ணாகவும் "சாவித்ர்" என்றும் "சாவித்ரி" என்றும் பிரிந்து சேர்ந்து உலகை படைக்கின்றதோ அப்படி அன்னையே நீ என்னில் இருக்கின்றாய் அவரில் இருக்கின்றாய் இங்கு வாழ்வது நீ, இந்த அரிசி படைக்கப்பட்டது போல நாங்களும் இந்த உலகம் வாழ பல விஷயங்களை படைத்து கொடுக்கவேண்டும், அதற்கு நீ அருள்புரிவாய் என மூல தெய்வத்தை வேண்டும் தத்வார்த்தம். அந்த அடை செய்யத்தெரிந்தால் நல்லது. இல்லையேல் பழம் வெற்றிலைபாக்கு மாலைசாற்றி விளக்கேற்றி தூபமிட்டு அவளை வழிபட்டு விரதம் முடித்தால் போதும். சாவித்திரி நோன்பு என்பது குடும்பம் காக்க, குலம் காக்க குலப்பெண்கள் ஞானத்தின் அறிவின் ஊற்றான மூல ஓளியான சாவித்திரி தேவியினை வணங்கும் நாள், விரதமிருந்து வணங்கும் நாள். அவள் சாவித்திரி, துர்க்கை, பாவை, முப்பிடாரி என இந்தியாவில் பல இடங்களில் பல்வேறு விதமாக அழைக்கபாபட்டாலும் மூலம் ஒன்றே. அந்த மூலஞானப் பரம்பொருளை இந்துப்பெண்கள் முறையாக வணங்கட்டும், நாள்தோறும் அவளை வணங்கினாலும் நாளை சிறப்பாக வணங்கட்டும். அவர்களுக்கு அந்த சத்தியவான் மனைவி சாவித்திரிக்கு கொடுத்தது போல் ஞானமும் அறிவும் தெளிவும் வாதமும் தைரியமும் கொடுத்து காத்து வழிநடத்திய தேவி சாவித்திரி தன்னை வழிபடும் ஒவ்வொரு இந்துப்பெண்ணுக்கும் அந்த பெரும் ஞானத்தை ஒளியினை கொடுக்கட்டும். குலப்பெண் காக்க குடும்பம் காக்கப்படும், குடும்பம் காக்கப்பட ஊர் காக்கப்படும், ஊர் காக்கபாபட்டால் நாடே காக்கப்படும். இந்தநாட்டின் ஆதாரம் குடும்பங்கள், அந்த குடும்பத்தின் இயக்கம் பெண், அந்தப்பெண், தன்னிடம் வேண்டி நிற்கும் அந்தப் பெண்ணை அன்னை சாவித்திரி முழுமையும் ஆசீர்வதித்து ஒளிவழங்கட்டும். பெண்கள் அறிவும் தெளிவும் பெற பெற குடும்பம் தழைத்தோங்கும், குடும்பம் தழைக்க நாடே சிறக்கும். அதற்கு அன்னை சாவித்திரி வழிகாட்டி வரட்டும் சாவித்திரி ஸ்லோகம் "நமோ தேவ்யை மஹாதேவ்யை லோகமாத்ரே நமோ நம: | சிவாயை சிவரூபிண்யை பக்தாபீஷ்டப்ரதா பவ II காமாக்ஷி காஞ்சி நிலயே மம மாங்கள்ய வ்ருத்தயே | நமஸ்கரோமி தேவேசி மஹ்யம் குரு தயாம் சிவே II (என்று சொல்லி நமஸ்காரம் செய்ய வேண்டும்.) காமாக்ஷி காம வ்ருத்யர்த்தம் மம மாங்கள்ய ஸித்தயே I உபாயனம் ப்ரதாஸ்யாமி ததாமோகம் வரம் மம II தோரம் க்ருஹ்ணாமி ஸுபகே ஸஹாரித்ரம் தராம்யஹம் | பர்த்துராயுஷ்ய ஸித்யர்த்தம் ஸுப்ரீதா பவ ஸர்வதா II" "மகா தேவிக்கு நமஸ்காரம் , உலகத்தின் அன்னையே உனக்கு நமஸ்காரம், சிவனின் பத்தினியே சிவரூபமானவளே, பக்தர்களுக்கு வேண்டிய வரம் தருபவளே காமாட்சியே, என்னுடைய மாங்கல்யத்தை காத்து வளர்ப்பாயாக, உன்னை நமஸ்கரீக்கின்றேன் எனக்கு கருணை புரிந்து அருள்வாய் சிவபத்தினியே உருகாத வெண்ணையும் ஓர் அடையும் வைத்தேன், ஒருக்காலும் என் கணவர் பிரியாதிருக்க வரமருள்வாய்"