இந்து மரபு போதிக்கும் நெறிமுறை( Do’s & Dont’s)

எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் விளக்கிடுவது சரியா ?

கோவில்களில் எலுமிச்சை பழத்தை வெட்டி அதில் விளக்கிடுவது சரியா என்றால் நிச்சயம் அதை தவிர்க்க வேண்டும், இந்து மரபு போதிக்கும் நெறிமுறை அப்படியானது

இந்து புராணங்கள் எலுமிச்சை கனியினை சாகம்பரி தேவியே உருவாக்கினாள் என்கின்றது, சாகம்பரி என்பதற்கு கனிகள் மற்றும் காய்கறிகளால் காப்பவள் என பொருள்

அதாவது நிசும்பன் எனும் அசுரன் பெரும் வரம் வாங்கி அடாதன அத்தனையும் செய்து பஞ்சத்தையும் வருவித்து மக்களுக்கு ஏதும் உண்ண கிடைக்காமல் வதைத்தான், அந்நேரம் அவனை வதைக்க வந்த அன்னை அவனை அழித்து மக்களுக்கு எல்லா வளமும் கிடைக்க வழி செய்தாள்

அவளின் பெரும் ஆற்றல் உணர்ந்த அசுரன் அவளிடம் தன்னையும் மனுகுலத்துக்கு பயன்படுத்தும்படி கேட்டு கொண்டான் அதன்படி அவனை “நிம்பு பலா” எனும் கனியாக இங்கு மக்களால் தெய்வீக கனி என பூஜிக்கபடுவாய் என வரமருளினாள்

அன்றிலிருந்து இந்த கனி ராஜகனி, தெய்வீக கனி என போற்றபடுகின்றது, அன்னைக்கு எலுமிச்சைமாலை சூட்டபடுவது முதல் சூலத்தில் அலங்கரிப்பது வரை அந்த புராணத்தில் இருந்துதான்

இந்த புராணம் சொல்லும் தத்துவம் எளிதானது, அதாவது கனிகளில் உயிருள்ள கனியாக கொண்டாடபடுவதும் நல்ல நேர்மறை சக்தியினை கொடுத்து எதிர்மறை சக்திகளிடமிருந்து ஒரு காவல்தருவதும் இந்த கனி என்பது

இந்த எலுமிச்சை என்பது இந்துமரபில் நம் எண்ணங்களை நல்ல அதிர்வுகளை கடத்தும் சாதனமாகவும் கெட்ட அதிர்வுகளை விலக்கும் கனியாகவும் கொண்டாடபட்டது , இருவர் முக்கிய காரணமாக சந்திக்கும் போது எலுமிச்சை கொடுத்து அதன் முன்னிலையில் பேசுவது மரபாய் இருந்தது

இந்து வழிபாட்டில் சில விஷயங்கள் சூட்சுமமானவை, மலர்கள் அப்படியனாவை பூக்கள்தான் ஒரு பக்தனின் வேண்டுதலை அதிர்வு சக்தியினை எண்ணங்களை கருவறை தெய்வத்திடம் சேர்க்கும், பின் அங்கிருந்து நல்ல அதிர்வுகளை அது எடுத்து பக்தனுக்கு தரும்

இந்துக்கள் வழிபாட்டில் மலர்களுக்கு பெரும் முக்கியத்துவம் இதனால்தான் கொடுக்கபட்டது, அதே காரியத்தைத்தான் எலுமிச்சையும் செய்கின்றது

எலுமிச்சை சக்திமிக்கது அது பக்தனின் எண்ணங்களை கருவறைக்கும், அந்த நல்ல சக்தியினை பக்தனுக்கும் கொண்டு வருகின்றது, கருவறை எலுமிச்சை பிரசாதமாக தரபடுவதும் அதை வீடுகளில் வாகனங்களில் காவலுக்கு வைப்பதும் அதனாலே

அப்படிபட்ட எலுமிச்சையினை உயிர்சக்தி கொண்டதாக கருதவேண்டும், அதை வெட்டி விளக்கிடுதல் கூடாது

யாகத்தில் எலுமிச்சையோ மலர்களோ இட்டு பார்த்திருக்க முடியாது, அப்படி எலுமிச்சையினை கோவிலில் வெட்டி விளக்கேற்றி வைப்பதும் சரியல்ல, அந்த எலுமிச்சையினை பொசுக்குதல் என்பது , தீயில் பொசுக்குதல் என்பது நல்ல பலன்களை கொடுக்காது

விளக்கு என்பது ஏற்றபடவும் விதிமுறை உண்டு, தெய்வத்துக்கு ஏற்றபடும் விளக்கு பஞ்சபூத தத்துவமாக இருத்தல் நன்று, அதற்காகவே மண் விளக்கு பயன்படுத்தபடும்

மண்,நீர், நெருப்பு, காற்று , வெளி என எல்லாமும் கலந்த விளக்கு அது

அந்த விளக்கில் நெய், விளக்கெண்ணை, நல்லஎண்ணெய் சிவனுக்கு இலுப்பை எண்ணெய் தாண்டி வேறு எண்ணெய்கள் நல்ல பலனை தராது, அப்படியே விளக்கின் திரியிலும் வெண்மை நிறம் அல்லது மஞ்சள் பூசபட்ட வெண் திரிகள் தவிர வேறு அனுமதி இல்லை

பொதுவாக எலுமிச்சை விளக்கு என்பது அம்மனுக்கு உகந்தது என்றும் ராகு கால பாதிப்புக்கு பரிகாரம் என்றும் சில ஜோதிடர்களால் பரிந்துரைக்கபடுகின்றது, அது சரியானதாக இருக்க முடியாது

இங்கு மண் விளக்கு முக்கியம், சரியான எண்ணெய் முக்கியம் அதைவிட முக்கியம் குறித்த நேரத்தில் வழிபாடுகளை செய்வது

(ஒரு வழிபாட்டில் நேரம் மிக சரியானதாக அமைதல் அவசியம், யூதர்கள் இஸ்லாமியர்கள் இந்த சரியான காலத்தினை தவறவிடமாட்டார்கள், இந்துக்களிடம் இந்த அஜாக்கிரதை உண்டு)

மிக சரியான நேரத்தில் விதிக்கபட்ட காலத்தில் வழிபடுதல் அவசியம், செவ்வரளி பூக்களிட்டு இன்னும் அனுமதிக்கபட்ட மலர்கள் இட்டு தீபமேற்றி பின் அடிபிரதட்சணம் செய்தல் நன்று

ஆம், அடிபிரதட்சனம் என்பது சக்தி வாய்ந்தது, அம்மன் சன்னதியினை சுற்றி அடிமேல் அடிவைத்து நடக்கும் போது அது ஒரு யோகமாகின்றது, மெல்ல அடிவைத்து நடக்கும் போது சிந்தையும் மனமும் உடலும் ஒரு புள்ளிக்குள் வரும், இது நல்ல பலன்களை தரும்

அப்படியே பெண்கள் கால்மடக்கி குனிந்து முன்னந்தலை தரையில் படும்படி வணங்குதல் நன்று, அதன் பின் வழிபடுதல் கூடுதல் நன்மை

இப்படியான முறையில் வழிபட்டால் போதும், அங்கே எலுமிச்சையினை வெட்டி விளக்கு வைத்தல் அவசியமில்லாதது பொசுக்கபடும் எலுமிச்சங்கனி நல்ல பலனை தராது

எலுமிச்சையில் விளக்கு எரிக்க கூடாதே தவிர அதன் சாற்றில் எலுமிச்சை சாதம் நைவேத்தியமாக படைத்து கொடுக்கலாம்

அப்படியே பாசிபயிறு சுண்டலில் வெள்ளரிக்காயினை சீவி இட்டு எலுமிச்சை சாறு கலந்து படைக்கலாம் அது அனுமதிக்கபட்டது

அங்கீகரிக்கட்ட உலோகங்கள், மண் விளக்கு தவிர வேறு விளக்குகள் கோவிலில் ஏற்றபட கூடாது, வெகு சில விதிவிலக்குகள் உண்டு மகா அவசியமில்லாமல் அவற்றை ஏற்றுவதும் சரியல்ல‌

துர்க்கை அம்மனுக்கு இதுதான் ஆகமவிதி சொல்லும் வழிபாட்டு முறை இது சக்திமிக்கது, எலுமிச்சையில் விளக்கேற்றுதல் நம் மரபு அல்ல, அது தவிர்க்க வேண்டியது, நல்ல பலனும் தராதது

வியாழகிழமைகளில் இந்துக்களுக்கு வரும் குழப்பங்கள்

சமீபகாலமாக வியாழகிழமைகளில் இந்துக்களுக்கு வரும் குழப்பங்கள் அல்லது கோவில்களில் அறியாமையால் நடக்கும் விஷயங்களில் ஒன்று குரு பகவானும் தட்சனாமூர்த்தியும் ஒன்று என்பதும், அங்கே கொண்டைகடலை மாலையினை சாற்றி வழிபடலாமா என்பது

இதனை துவக்கி வைத்து பெரும் குழப்பமாக்கியிருப்பது சாட்சாத் தமிழக ஜோதிடர்கள், இந்துக்களுக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை அதிகம் என்பதால் பல பயிர்களிடையே ஏகபட்ட களைகளும் உண்டு

அந்த களைகள்தான் இப்படியான குழப்பங்களை செய்து

முதலில் தெட்சனாமூர்த்திக்கும் குருவுக்குமான வேறுபாட்டை அறிந்து கொள்ளுதல் அவசியம்

தெட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம், சிவனே குருவாக இருந்து ஞானம் வழங்கும் ஞானகுரு வடிவம், அவர் நான்மறைகளோடு அவற்றின் ஆறு அங்கங்களையும் ((அதாவது 1ஜாதகம் 2 கோளம் 3 நிமித்தம் 4 ப்ரஸ்னம், 5 முகூர்த்தம், 6 கணிதம்) சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு மகா ரிஷிகளுக்கே சொல்லி கொடுப்பவர்

65 வகை சிவவடிவங்களில் அவரும் ஒருவர், இவருக்கு ஆதி அந்தம் இல்லை

குரு பகவான் என்பவர் நவகிரகங்களில் ஒருவர், இவர் மானிடர்க்கு அவரர் கர்மவினைபடி பலன்களை அருள்பவர், 5ம் இடத்தில் இருப்பவர், உதயம் அஸ்தமனம் எனும் இரு தன்மைகள் கொண்டவர்

இரு வேறு வேறானவர்கள், ஒருவர் மகா தெய்வம் இன்னொருவர் அவருக்கு கீழே பணிபுரியும் அதிகார தெய்வம்

தட்சனாமூர்த்தி சிவன் சன்னதியின் தென்பக்கம் அமர்ந்திருப்பார், அவர் தெற்கு நோக்கிய தெய்வம், குரு நவகிரக சன்னதிகளில் வடக்கு நோக்கி அமர்ந்திருப்பார்

இருவரும் வேறு வேறு தெய்வங்கள் வேறு வேறு குணாதிசயங்கள்

இங்கே குரு என்பவருக்கு மஞ்சள் நிறம் உகந்தது, கொண்டை கடலை அவருக்கு நைவேத்தியம் , அதனால் அவருக்கு மஞ்சள் நிற ஆடை அணிவிக்கலாம், கொண்டை கடலை படைக்கலாம்

வியாழகிழமை குருவுக்கு உகந்தது, அன்று நெய்தீபம் நல்லது, வேறு தீபங்கள் ஆகமவிதிபடி அவருக்கு உகந்தது அல்ல, தேங்காய் எண்ணெய் அறவே ஆகாது

நல்லெண்ணெய் நல்லது, எந்த எண்ணெய் என்றாலும் மண் விளக்கே நல்லது

குருவுக்கு முல்லைமலர், மஞ்சள் நிற பூக்கள் இட்டு வணங்கலாம்

தெட்சனாமூர்த்தியினை எல்லா கிழமையும் வணங்கலாம்,, அவருக்கு வெண்பட்டு சாத்தி வழிபடலாம் அங்கேயும் நெய்விளக்கு உண்டு

வில்வமாலை,தாமரை என சிவனுக்கு இடபடுவது எல்லாவற்றையும் தெட்சனாமூர்த்திக்கு இட்டு வழிபடுவது நலம்

அதை தாண்டிய ஏதும் அவசியமில்லாதவை, குறிப்பாக கொண்டை கடலை மாலை எல்லாம் இந்துக்கள் வழிபாட்டில் உள்ளது அல்ல‌

சுவாமி விக்ரஹங்கள் எப்போதும் சக்தி உள்ளவை, அவை பல மந்திரங்களால் சக்தி ஊட்டபட்டு அபிஷேக பொருட்களால் தைலங்களால் அடிக்கடி சக்தி நிலை நிறுத்தபடுபவை

அங்கே பூமாலை, வஸ்திரம், தங்கம் உள்ளிட்ட அனுமதிகக்கபட்ட உலோகங்கள் தாண்டி எதுவும் சூட்ட அனுமதி இல்லை, இந்துமரபு அதை அனுமதிப்பதில்லை

கொண்டை கடலை மூளைபலம் கொடுப்பது, மூளை சரியாக சிந்தித்தால் எல்லா தெளிவும் அறிவும் வரும், குருவின் அருள் தானே அங்கு வரும், நல்ல சிந்தனை சக்தியினை தருவது அதனால் அதனை குருபகவான் முன்னால் விநியோக்க சொன்னார்களே தவிர அவருக்கு மாலையாக சூட்ட சொல்லவில்லை

குருவுக்கே அருள் கொடுக்கும் அளவு மானிடர்கள் சிந்திப்பது எல்லாம் ஜோதிடர் மகிமை

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு அருகில் உள்ள ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில், தஞ்சைக்கு வெகு அருகில் உள்ள திட்டை வசிஷ்டேசுவரர் ஆலயம். ஆகியவை குருவின் தலங்கள், இங்கு குருபகவானுக்கு தனி சன்னதிகள் உள்ளன.

அப்படியே மதுரை அருகே குருவிருந்த துறை (இப்போது குருவிதுறை) குருவுக்கான தலம்

திருசெந்தூர் முருகபெருமானும் குருவடிவமாகவே கருதபடுகின்றார், அதே நேரம் சுவாமிமலை முருகன் தெட்சனாமூர்த்தியின் அம்சம்

கோவில்களில் நவகிரஹங்களில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் குருவுக்கு மஞ்சள் வஸ்திரம் சாற்றி, கொண்டை கடலை படைத்து வழிபடலாம்

குருவினை வழிபட்டால் நல்ல அறிவு வரும், பொருள் வரும் இன்னும் அதை காக்கும் வழிஎல்லாமே வரும் , குருவின் அருள் இருந்தால்தான் ஒரு ஜாதகம் சிறக்கும்

இதனால் குரு அருள் பெறவேண்டியவர்கள் பரிகாரம் வேண்டுபவர்கள் அவரை வழிபடலாம்

தட்சனாமூர்த்தியினை ஞானம் தேடி வழிபடலாம், லவுகீக தேவைகள் தாண்டி ஞானம் பெற்று மானிட வாழ்வு தாண்டிய நிலைக்கு செல்ல வழிபடலாம்

தட்சினாமூர்த்திக்கான தலங்களில் எப்போதும் மதுரை சொக்கநாதர் ஆலயம் முக்கியமானது, சிவன் தட்சினாமூர்த்தி கோலம் கொண்ட இடமே அதுதான் அங்கு வழிபடுதல் நன்று

அப்படியே புதுக்கோட்டைகீரனூர் சாலையில் உள்ள‌ திருவேங்கைவாசலில் உள்ள தலம் முக்கியமானது, அங்கு தட்சிணாமூர்த்தி அபய வர ஹஸ்தங்களுடன், ஒரு கரத்தில் ருத்திராட்சமும் மற்றொரு கரத்தில் சர்ப்பமும் ஏந்தி காட்சி தருகிறார்.

மகாவிஷ்ணுவுக்குக் குருவாக இருந்து ஸ்ரீ தட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம், திருவையாறு ஸ்ரீ பஞ்சநதீஸ்வரர் திருக்கோயிலும் முக்கியமானது

ஆக குரு வேறு, தட்சனாமூர்த்தி வேறு என்பதை அறிந்து, வியாழகிழமையில் குருவிற்கு மஞ்சளாடை அணிந்து கொண்டைகடலை படைத்து விளக்கேற்றி வழிபடுதல் நன்று, கொண்டைகடலை மாலை சரியானது அல்ல‌

தட்சனாமூர்த்தியினை எல்லா நாளும் வழிபடலாம் அவருக்கு வெண்பட்டு சாற்றி விளக்கேற்றி புஷ்பமிட்டு ஞானம் வேண்டி பெறலாம் , அங்கு கொண்டை கடலையோ மாலையோ அவசியமில்லை அதை தவிர்ப்பது நல்லது

ஆனால் கொண்டை கடலையினை விநியோகிப்பது எங்கும் எல்லா ஆலயத்திலும் புண்ணியம், அதை குரு சன்னதியில் செய்தால் கோடி நன்மை