சப்தஸ்தான ஆலயங்கள்

சப்தஸ்தான ஆலயங்கள் 01 : திருவையாறு ஐயாறப்பன் ஆலயம்

“மாதர்ப் பிறைக் கண்ணியானை மலையான் மகளொடும் பாடி,

போதொடு நீர் சுமந்து ஏத்திப் புகுவார் அவர் பின் புகுவேன்,

யாதும் சுவடு படாமல் ஐயாறு அடைகின்ற போது,

காதல் மடப்பிடியோடும் களிறு வருவன கண்டேன்.

கண்டேன், அவர் திருப்பாதம்; கண்டு அறியாதன கண்டேன்”

என அப்பர் பாடிய தலம் இது.

தமிழகச் சிவாலயங்களில் முக்கியமானதும் மிக மிக சூட்சுமமானதுமானது திருவையாறு ஆலயம். மகா தொன்மையானதுமான ஆலயம் தஞ்சை மாவட்டம் திருவையாறு ஐயாறப்பன் சிவாலயம், மகா மகா தொன்மையான இந்த ஆலயம் எல்லா வகையிலும் தனித்துவமானது.

தமிழகத்தில் காசிக்குச் சமமான ஆலயங்கள் பல இருக்கலாம். ஆனால், கயிலாயத்துக்குச் சமமான ஒரே ஒரு ஆலயம் இந்தத் திருவையாறு ஆலயம் ஒன்றே.

இந்த ஆலயம் வசிஷ்ட முனிவர் காலத்திலே இருந்தது, அவர் அப்பக்கம் ஆசிரமம் அமைத்து வழிபட்ட காலங்களிலே இந்த ஆலயம் இருந்தது.

நதிகள் சங்கமிக்கும் இடம் அல்லது பிரியத் தொடங்குமிடம் எப்போதும் சக்திவாய்ந்தவை, திரிவேணி சங்கம் அப்படியானது இதனை பல இடங்களில் காணலாம், அப்படியே ஐந்து நதிகளின் பிறப்பிடமான கயிலாயமும் மாபெரும் புனித ஸ்தலம்.

அப்படியே காவிரி, குடமுருட்டி, வெண்ணாறு, வெட்டாறு, வடவாறு ஆகிய நதிகள் பிரியும் தொடக்கமான இந்தப் புள்ளி சக்திமிக்கது, அங்கே உருவான ஆலயம்தான் இந்தத் திருவையாறு, ஐந்து ஆறுகளின் இடம் என்பதால் ஐயாறு என்றானது, சிவாலயம் இருக்குமிடம் என்பதால் திருவையாறு என்றானது.

இது கயிலாயத்தின் இன்னொரு பிரதி, கயிலாயத்தின் மாற்றான ஒரே ஒரு பிரதி. ஐயாறு எனும் இடத்தின் சிவன் என்பதால் இவர் ஐயாரப்பர் என்றானார்.

இங்குதான் சிவனின் மாபெரும் பக்தனான அந்த நந்தி அவதரித்தார்.

பின்னாளில் கயிலாய காவலராக வந்த நந்தி இங்குதான் சிலேத முனிவரின் மகனாக அவதரித்தார். அவர் பிறக்கும் போது நான்கு கரங்கள் இருந்தன, அதுகண்டு அஞ்சினார் சிலேத முனிவர் காரணம் கரங்கள் நான்கு என்பது தெய்வ அடையாளம்.

இதனால் ஒரு கூடையில் குழந்தையினை எடுத்துச் சென்று ஐயாரப்பர் கோவிலில் இடச் சென்றார், கோவிலில் கூடையினை இறக்கியபோது குழந்தையின் இரு கைகள் மறைந்து இயல்பாக இருந்தது. மகிழ்ந்த சிலேத முனிவர் குழந்தையின் ஜாதகத்தைக் கணித்தார், அது இக்குழந்தை 16 ஆண்டுகளே வாழும் என்பதைச் சொல்லிற்று.

முனிவர் கலங்கிப் போனார். முனிவர்களுக்குக் குழந்தைகள் அருளப்படும் காரணம் அவர்களுக்குப் பின் முனிவர்கள் மக்களுக்கு உரைக்க வேண்டிய போதனைகள், வேத விளக்கங்கள், பிரபஞ்சத்தில் இருந்து பெற்றுக்கொடுக்க வேண்டியது அவர்கள் கடமை, அந்தக் குழந்தைக்கே அற்ப ஆயுள் என்றால் எந்த முனிவர் தாங்குவார்.

அதனால் இந்தக் குழந்தை எனக்கு வேண்டாம் சிவனே அதனை ஏற்றுக் கொள்ளட்டும் எனக் கோவிலிலே விட்டுச் சென்றார், அந்தக் குழந்தை ஜபேசன் எனும் குழந்தையாக அங்குக் கொடுக்கப்பட்டது.

அந்தக் குழந்தையினைத் தங்கள் குழந்தையாகச் சிவனும், அன்னை தர்ம சம்வர்த்தினியும் தத்தெடுத்தனர், ஐந்து வகை பொருட்களால் அதனை அபிஷேகம் செய்தனர்.

கங்கை நீர், சந்திர நீர், அம்மையின் திருமுலைப்பால், காமதேனுவின் வாய்நுரை நீர், ரிஷிகளின் கமண்டல நீர் என ஐந்து நீராலும் அதனை அபிஷேகம் செய்து வைத்தனர்.

குழந்தை தெய்வகுழந்தையாகவே வளர்ந்தது, சிவனைத் தவிர ஏதுமறியாமல் வளர்ந்தது. அந்த ஜபேசன் தன் 16 வயதில் வாழ்வு முடியும் என அறிந்திருந்தபடியால் காவேரியில் கழுத்தளவு நீரில் நின்று பெரும் தவம் இயற்றினார். ஏழுகோடி முறை ருத்திரதவம் செய்தபோது சிவனே சக்தியுடன் தோன்றி வரம் பல அருளினார்.

ஜபேசன் நந்தீசர் என்றானார். அதாவது முடிவில்லா ஆனந்தம் நிறைவு கொண்டவர் என்றானார்.

அம்மையும் அப்பனுமே அவரைத் தன் மகனாகக் கருதி திருமழப்பாடியில் இருந்த வியாக்ரபாதரரின் மகளை திருமணமும் செய்து வைத்தனர்.

அந்த விழாதான் ஏழு ஊர் திருவிழா என ஏழு ஆலயங்களில் கொண்டாடப்படுகின்றது.

இந்த நந்திதான் பெரும் காரியங்களைச் செய்தார்‌.

கயிலாய பரம்பரை என ஒன்றை அன்றே தோற்றுவித்தது, மிகச் சிறியவயதிலே அந்த ஞானபரம்பரையினை உருவாக்கியது, அதனில் இருந்து வந்த மடங்கள்தான் திருவாவடுதுறை ஆதீனங்கள் போன்றவை, இன்னும் பெரும் ஞானமரபை ஏற்படுத்தி கொடுத்துவிட்டு பிறவி முடித்துச் சிவனின் காவலராக நந்தீசர் கயிலாயம் ஏகினார்.

அவரின் தவத்துக்கும் அர்பணிப்புக்கும் பக்திக்குமே சண்டிகேசரை போல் நந்திக்கும் சிவாலயத்தில் மாபெரும் இடம் கிடைத்தது, கயிலாயத்தின் தலைமைக் காவலருமானார், பெரும் ஞான குருவுமானார்.

அப்படி நந்தி பிறந்து வளர்ந்த ஆலயம் இது. சிவாலயமெங்கும் காளைவடிவில் அறியப்படும் நந்தி இங்குதான் வரம் பெற்று முக்தி அடைந்தார்.

அவருக்குக் காளை வடிவம் என்பது ஒரு ஞானத் தத்துவக் குறியீடு, மக்களுக்குக் காளையின் தன்மைகளைச் சொல்லி கீழ்நிலையில் இருந்து தெய்வநிலைக்கு உயரச்சொல்லும் குறியீடு அன்றி வேறல்ல‌.

அப்படி நந்தியம்பெருமான் பிறந்து வழிபட்டு கயிலாயத்தை அடைந்து அழியா இடம்பெற்ற ஆலயம் இது.

இந்த ஆலயத்தின் மிகப் பெரிய அடையாளம் நிறைய உண்டு. ஒருமுறை அங்கு வழிபாடுகளைச் செய்த அர்ச்சகருக்கு காசிக்கு செல்லும் ஆசை வந்தது, விரைவாக சென்று வந்துவிடலாம் எனக் காசிக்குச் சென்றார், ஆனால் அரச உத்தரவு வாங்கவில்லை.

ஆனால், அரசன் திடீர் சோதனைக்கு வந்தான், கடுமையான சட்டதிட்டங்களைக் கொண்ட அவன் தனக்குத் தெரியாமல் ஏதும் நடந்தால் தொலைத்தேவிடுவான், அங்கே அர்ச்சகர் காசி சென்றிருந்ததால் எல்லோரும் அச்சத்தில் இருந்தனர், இனி அர்ச்சகர் கதி அதோகதி என அஞ்சினர்.

அரசன் வரும்போது அங்கே அதே அர்ச்சகர் பூஜை செய்து கொண்டிருந்தார் அரசனும் மகிழ்ந்து தன் போக்கில் கிளம்பினான். மறுநாள் காசிக்குச் சென்ற அர்ச்சகர் வரும்போதுதான் பெரும் வியப்பு ஏற்பட்டது. ஆம். சிவனே அங்கு அர்ச்சகராக வந்திருந்தார்.

காசிக்குத் தன் அடியான் சென்றபோது அவரே இந்த கயிலாயத் தலத்திற்கு வந்திருந்தார். சிவன் காசி கயிலாயம் என இரண்டையும் விருப்பத் தலமாக கொண்டிருப்பது எல்லோரும் அறிந்தது, இதுவும் ஒரு கயிலாயம் என்பதால் ஆச்சரியம் ஏதுமில்லை.

அப்படியான இந்த தலமேதான் அப்பர் சுவாமிகளுக்கும் கயிலாயத்தை காட்டிற்று. அப்பர் சுவாமிகள் தன் முதிர்ந்த வயதில் காசிக்கு சென்று கயிலாயம் செல்லத் தட்டுத் தடுமாறிச் சென்றார். அவரின் சிரமம் கண்ட இறைவன் ஒரு முனிவர் வடிவில் வந்து, பாதையின் சிரமங்களைச் சொல்லி திரும்பி செல்லக் கூறினார்.

உடலை உறையவைக்கும் கொடும்பனி, பெரிய மலைபள்ளதாக்கு, பாறைகள் நிரம்பிய வழிகள் இன்னும் திடீரென பெருகும் வெள்ளம், அபாய விலங்குகள் என நிறைந்த அந்த வழி ஆபத்தானது என்றார்.

ஆனால், என்ன ஆனாலும் சிவனைப் பார்க்காமல் கயிலாயத்தைப் பார்க்காமல் திரும்பமாட்டேன் என அடம்பிடித்த அப்பர் சுவாமிகளை அருகில் இருக்கும் குளத்தில் மூழ்கி எழச் சொன்னார் அந்த முனிவர்.

அப்பர் சுவாமிகள் நீரில் மூழ்கி எழும்போது தான் திருவையாறில் இருப்பதைக் கண்டார், புன்னகைத்த சிவன் அவருக்குக் கயிலாய காட்சியும் காட்டி அருளினார்.

கயிலாய பனிமலை, சிவகணங்கள், தேவர்கள், ரிஷிகள் என எல்லாரும் புடைசூழ அமர்ந்து சடாமுடியில் கங்கையும் நிலவும் கொண்டு நின்ற‌ சிவனை, அவர் அருகே அம்மையினைப் போற்றி கொண்டே இருக்கும் அந்தத் திருக்கயிலாய காட்சியினை அப்படியே காட்டினார்.

ஆம்.‌ இதுவே கயிலாயம் இங்கு சிவன் இருக்கும் போது இமயமலைக்குத் தேடிச் செல்வது ஏன் என்பது அப்பருக்கே சிவபெருமான் சொல்லி விளக்கிய தலபெருமை.

இந்த ஆலயம் அப்படியே சிவனும் பார்வதியும் கயிலாயத்தில் வாழ்வதை சொல்லும் தத்துவம். அன்னை எப்படிச் சிவனுக்கு உகந்த மனைவியாய் இல்லறத்தை நடத்துகின்றாள், அறங்களும் தர்மமும் செய்தபடி பெரும் சிறப்போடு நடத்துகின்றாள் என்பதையும் சொல்லும் ஆலயம்.

அவளுக்குத் தர்ம சம்வர்த்தினி எனப் பெயர், அதன் இன்னொரு பெயர் அறம் வளர்த்த நாயகி. இந்தத் தலம் சக்தி பீடங்காளில் 51ஆம் சக்தி பீடமாகவும் அறியப்படுகின்றது.

ஒரு குடும்பம் எப்படி இருக்கவேண்டும் என்பதைச் சிவனும் பார்வதியும் போதித்த இடம் இது, அதையேதான் வசிஷ்ட முனிவரும் அருந்ததியும் பெற்றுக்கொண்டார்கள்.

பூலோக பெண்களுள் சிறந்தவள், மங்கையரில் மகராசி என கொண்டாடப்படுபவள் அருந்ததி, அப்படி ஒரு தர்ம வாழ்வு அவளுடையது.

அவள் கீழ்சாதி பெண் ஆனால் தன் பதிவிரதையால் பெரும் இடம் பெற்றாள், வசிஷ்டருடன் நிழல்போல் ஒட்டிக்கொண்டு எல்லா அறமும் காத்தாள், அவள் கொடுத்த சக்தியாலேதான் வசிஷ்டர் பெரும் இடம் உயர்ந்தார்.

எவ்வளவோ சாதுர்யமாக அறமாக தர்மமாக நின்று இல்லறம் செய்த அந்த ரிஷிபத்தினியின் புகழ் கொஞ்சமல்ல‌.

புராணம் முழுக்க நிரம்பி கிடக்கும் பெருமை அவளுடையது, அப்படி ஒரு வாழ்வினை அவள் வாழ்ந்தாள் அதனாலே வானத்தில் நட்சத்திரமுமானாள்.

இன்றும் என்றும் இந்துமரபில் மணமக்களைத் திருமண மேடையில் அருந்ததியினைக் காணச் சொல்வது மரபு, ஒவ்வொரு பெண்ணும் அவள்போல் வாழவேண்டும் என்பது அதன் போதனை.

அப்படியான அருந்ததி எல்லா வரங்களையும் குணங்களையும் இந்த ஆலயத்தில்தான் பெற்றுக்கொண்டாள்.

ராமபிரானுக்கே குருவாக இருந்து அந்த ராமனை தர்மத்தி சிறந்தவனாக உருவாக்கிய வசிஷ்டர் தனக்கான ஞானதர்மத்தை இந்த ஆலயத்திலேதான் பெற்றுகொண்டார்

எது தர்மமோ அதனை நிரம்ப தரும் ஆலயம் இது

இந்த ஆலயம் ஒரு குடும்பம் எப்படி வாழவேண்டும் எனும் லௌகீக தத்துவத்தையும், அதே நேரம் பிரபஞ்சத்தில் இருந்து உருவாகிவரும் ஆன்மா தர்மப்படி வாழவேண்டும் என்பதையும் சொல்லும் தாத்பரியம் கொண்ட ஆலயம்.

ஆத்மாவின் அடிப்படை குணம் தர்மம், நல்ல விதிகளுடன் நல்ல ஆச்சாரங்களுடன் சிறப்பான விதிகள் வகுத்து நல்லொழுக்கம், நல்மரபு நல்ல வழக்கத்தில் அது வளரவேண்டும், சுயநலமின்றி தான் எனும் சிந்தையின்றி இந்த உலகமக்கள் நலன், அதை ஆளும் பரம்பொருளின் சேவை என அந்த ஆத்மா வளரவேண்டும்.

அந்த ஆத்மா இறைவனால் தத்தெடுக்கப்படும் ஆத்மாவாகின்றது. அதற்கான முக்தியினை அந்தப் பரம்பொருளே தருவார் என்பதைச் சொல்கின்றது.

இந்த ஆலயம் மகா சூட்சுமமானது. கயிலாயம் எப்படி இருக்குமோ அதே சாயலில் அதே அமைப்பில் உருவான ஆலயம் இது. வசிஷ்டர் முதலான மகரிஷிகள் பெரும் ரிஷிகள் ஹிமாலயத்தில் கயிலாய அமைப்பு உள்ளே எப்படி இருக்குமோ அப்படி மிக நுணுக்கமாக பார்த்து உருவாக்கிய அமைப்பு.

அதனாலே அது கயிலாயத்தின் பிரதி, கயிலாயத்தின் பின்பக்கம் சிவனின் முடி விரிந்து கிடப்பதால் அந்த சன்னதியினை சுற்ற அனுமதி இல்லை, அதே பாரம்பரியம் இங்கும் பின்பற்றப்படுகின்றது.

உள்ளே பின்பக்கம் இருள் சூழ்ந்த அந்த வித்தியாசமான அமைப்பு அப்படியே கயிலாய சாயல், இந்த அமைப்பில் இன்னொரு ஆலயம் எங்குமில்லை.

அந்த அளவு மகா பெரிய ரிஷிகளால் சப்த ரிஷிகளால் மானுடர் கயிலாயத்தை காணும்படி உருவாக்கபட்ட ஆலயம் இது.

சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் 7 நிலைகளையுடைய இராஜகோபுரமும், 5 பிரகாரங்களும் உள்ள ஒரு பெரிய கோவில் இது. மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய முச்சிறப்பும் உடைய தலமும் இதுவே.

முதல் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள தக்ஷிணாமூர்த்தி மிகச் சிறப்புடையது. இரண்டாம் பிரகாரத்தில் சோமஸ்கந்தருக்கு தனி ஆலயம் உள்ளது. அருகில் உள்ள ஜப்பேசுரமண்டபத்தில் பஞ்சபூதலிங்கங்களும், சப்தமாதர்களும், ஆதிவிநாயகரும், நவக்கிரகங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

இச்சுற்றில் விநாயகர், சுப்பிரமணியர், சோமச்கந்தர், தட்சிணாமூர்த்தி, நடராஜர் ஆகிய திருவுருவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. மூன்றாம் பிரகாரத்தில் கிழக்கிலும் தெற்கிலும் இருகோபுரங்கள் உள்ளன.

நான்காம் பிரகாரத்தில் சூரியபுஷ்கரணி தீர்த்தமும், அப்பர் கைலாயக் காட்சி கண்ட வடகைலாயம் அமைந்துள்ளன.

இச்சுற்றின் 4 புறமும் கோபுரங்கள் இருக்கின்றன. ஐந்தாம் பிரகாரத்தில் கிழக்கு நோக்கிய ஐயாரப்பன் சந்நிதியும் திரிபுரசுந்தரி சந்நிதியும் இருக்கிறது. சுவாமி சந்நிதியிலும், அம்பாள் சந்நிதியிலும் தனித்தனியாக இராஜகோபுரங்கள் உள்ளன.

இறைவனுக்கும், இறைவிக்கும் கிழக்கு நோக்கியவாறு உள்ள சந்நிதிகளைக் கொண்டு தனித்தனி கோவில்கள் உள்ளன. மூலவர் ஐயாரப்பர் ஒரு சுயம்பு லிங்கமாகும். இந்த லிங்கம் மணலால் உருவான‌ லிங்கம் ஆகையால் அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக‌ லிங்கத் திருமேனிக்குப் புனுகுச் சட்டம் மட்டுமே சாத்தப்பெறும்.

இங்குள்ள தட்சிணாமூர்த்தி ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்று அழைக்கப்படுகிறார். இங்குள்ள தட்சிணாமூர்த்தி யின் பாதத்தின் கீழே கூர்மம் (ஆமையின் உருவம்) அமைந்திருப்பது ஒரு சிறப்பம்சம்.

சுவாமி பிரகாரத்தில் உள்ள தட்சிணாமூர்த்தியைப் பெருமாள் வழிபட்டு நலம்பெற்றார், அந்த‌ பெருமாள் வழிபட்ட தட்சிணாமூர்த்தி இங்கு மட்டும்தான் உள்ளார். ஆதலால் இவர் ஸ்ரீஹரிகுருசிவயோக தட்சிணாமூர்த்தி என்று போற்றப்படுகின்றார்.

வலது கரங்களில் கபாலம் அபய முத்திரையும் இடது கரங்களில் சூலம் வேதச்சுவடிகள் தாங்கியும் தட்சிணாமூர்த்தி காட்சி தருகிறார். மகாவிஷ்ணுவுக்கு குருவாக இருந்து தட்சிணாமூர்த்தி வேதங்களை உபதேசித்த ஒப்பற்ற திருத்தலம் இது.

திருவீழிமிசையில் கண் மலரிட்டு அர்ச்சனை செய்து ஸ்ரீசக்கரத்தைப் பெற்ற திருமால் வேதங்களின் பெருமைகளை உணர்ந்து இந்தத் தலத்துக்கு வந்து தட்சிணாமூர்த்தியிடம் உபதேசம் பெற்றார் என்று தலபுராணம் கூறுகிறது.

குருவாக நின்று சிவன் போதித்ததால் இது குரு ஸ்தலம் என்று போற்றப்படுகிறது. இந்தத் தட்சணாமூர்த்தி ஆமைமேல் நிற்பதும் பெரும் தத்துவம், சித்தர்கள் சொன்ன ஞானத்தத்துவம்.

(கடலில் வசிக்கும் ஆமை கரைக்கு வந்து மணலில் முட்டையிட்டு மறைத்து வைக்கும், சூரிய ஒளியில் ஏற்படும் மிதமான சூட்டில் மணலே அந்த ஆமை முட்டைகளை அடைகாப்பது போல் காக்கும்.

தாய் ஆமை முட்டையிட்டபின் அதனை மறப்பதில்லை. அதன் நினைவெல்லாம் முட்டைகள் மேலே இருக்கும், சரியாகக் குஞ்சுகள் முட்டையில் இருந்து வெளிவந்தபின் தாயினை நோக்கிச் செல்லும்.

சிருஷ்டிகர்த்தா செய்யும் நுணுக்கமான விளையாட்டு இது, தன் நினைவு ஒன்றாலே கடலில் இருந்தும் கரையில் இருக்கும் குஞ்சுகளை மனதால் தொடர்பு கொண்டு மனதால் தன்னை நோக்கி இழுத்துவரும் சக்தி ஆமைக்கு உண்டு.

இன்றுவரை எந்த விஞ்ஞானியும் விளக்கமுடியா தொடர்பு இது.

இந்த ஆத்மா அப்படி பரம்பொருள் இட்ட மாய முட்டைக்குள் இருக்கும் ஆத்மாவாக‌ அவனிடம் இருந்து பிரிந்து இந்த உடல் எனும் கடற்கரையில் இருக்கின்றது, பரம்பொருள் நம்மை தேடுகின்றான் முட்டையில் இருந்து ஆமை குஞ்சு வெளிவந்து தன் தாயினை அதன் தேடல்படி சென்று அடைவது போல மாயமுட்டையில் இருந்து ஆத்மா வெளிவந்து தன்னைத் தேடும் பரம்பொருளை அடையவேண்டும்.

இந்துக்கள் மரபில் ஆமை மகா முக்கிய அடையாளம், பகவானின் அவதாரம் முதல் பல இடங்களில் ஆமையினை இந்துக்கள் காட்ட இந்த நுணுக்கமான ஞான போதனையும் உண்டு.

“ஊமைக் கிணற்றகத்துள்ளே உறைவதோர்

ஆமையின் உள்ளே யழுவைகள் ஐந்துள

வாய்மையினுள்ளே வழுவா தொடுங்குமேல்

ஆமையின் மேலுமோ ராயிரத் தாண்டே”

எனத் தன் பாடலில் சொல்கின்றார். உயிர்களில் நீண்ட ஆயுள் கொண்டது ஆமை அப்படி ஒருவன் ஐம்புலன்களை அடக்கினால் நீண்டகாலம் வாழலாமென திருமூலர் சொல்கின்றார்.

“விளங்கிடு முந்நூற்று முப்பத்தோ டொருபான்

தனங்கொளிரட்டிய தாறு நடந்தால்

வணங்கிடு ஆமைம்மலம் வாயுவெழுந்து

விளங்கிடு மவ்வழி தத்துவ நின்றே”

என்பதும் திருமூலர் பாடல். அதாவது ஆமை நிமிடத்துக்கு மூன்றுமுறைதான் சுவாசிக்கும், அப்படி மானுடனும் தன் மூச்சுப்பயிற்சியினை அதிகரித்து மூச்சுவிடும் நேரத்தை குறைத்தால் நீண்டு வாழலாம் அவனுக்கு யோகமும் சித்தியாகும் என்கின்றார் திருமூலர்.

எந்த விலங்குக்கும் இல்லா வகையில் ஆமை தொலைவில் இருக்கும் தன் குஞ்சுகளை மனதால் கட்டுப்படுத்துகின்றது அதற்கு அப்படி ஒரு பிரபஞ்ச சக்தி கிடைத்திருக்கின்றது.

ஆமை 3 நிமிடத்துக்கு ஒருமுறை மூச்சுவிடும் படி அதன் சுவாசம் இருப்பதால் அந்தச் சக்தி சாத்தியமாகின்றது, மூச்சுக் குறைய குறைய சில சக்திகள் பெருகும், மூச்சு குறைந்தால் ஆயுள் கூடும், மூச்சுக் குறைந்தால் பிரபஞ்ச ஆற்றலும் அதன் மூலம் பலவிஷயங்களை அறிந்து உணரும் சக்தி பெருகும்.

மூச்சுக் குறைத்துவிடும் ஆமைக்கு அந்த சக்தி உண்டு, அது பல விஷயங்களைத் தானே உணரும், அதனால் கடல்வழி கண்டறிய முடியும், கடலில் நீரோட்டம் உணரமுடியும், பல்லாயிரம் மைல் இருந்தாலும் தன் குஞ்சுகளை வழிநடத்த முடியும்.

அப்படி தான் எங்கிருந்தாலும் பக்தர்களைக் காப்பேன் எனச் சொல்லாமல் சொல்கின்றார் சிவபெருமான்)

ஆலயத்தின் தென்கோபுர வாசலில் உள்ள ஆட்கொண்டார் சந்நிதி மிகவும் முக்கியமானது. எப்போதும் குங்கிலியம் இங்கு மணந்து கொண்டே இருக்கும். பக்தர்கள் இங்குள்ள குண்டத்தில் குங்கிலியம் அர்ப்பணிப்பார்கள்.

சிவபெருமான் சுசரிதன் என்ற சிறுவனை எமனிடமிருந்து காப்பாற்றிய சமயம் எடுத்த உருவமே ஆட்கொண்டார் வடிவம் அதனால் இவரை வணங்கி விட்டு கோவிலுக்குச் செல்வது ஒரு மரபு. இவரை வணங்கினால் எமபயம் நீங்கும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

சுந்தரரும், சேரமான் பெருமானும் திருவையாறு வரும் போது காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. கலங்கி அக்கரையில் நின்ற சுந்தரர் பதிகம் பாடினார்கள்.

அதைக் கேட்ட விநாயகர் இக்கரையில் இருந்த விநாயகர் “ஓர‌ம் ஓர‌ம்” என்று குரல் கொடுத்துக் காவிரியில் வெள்ளப் பெருக்கைக் கட்டுப்படுத்தி அவரை அழைத்து வந்ததால் இங்குள்ள விநாயகர் ஓர‌லமிட்ட விநாயகர் என்று அழைக்கப்படுகிறார், இப்போது அது மருவி “ஓலமிட்ட விநாயகர்” என்றாகிவிட்டார்.

தேவாரம் பாடப்பெற்ற தலங்களில் இது 51ஆம் ஆலயம், அப்பர், சம்பந்தர், சுந்தரர் என எல்லோரும் பாடிய தலம் இது. இல்லறத் தத்துவத்தை விளக்கும் ஆலயம் என்பதால் அங்கு எல்லா நாட்களும் நன்னாளே என்பது தாத்பரியம். அதன்படி அஷ்டமி திதியில் இரவு நேரத்தில் அம்பாளுக்குத் திருக்கல்யாணம் நடத்தப்படுகிறது.

இத்தலத்தில் இறைவி இடக்கரம் இடுப்பில் ஊன்றியுள்ளபடியும் மேல் இரு கரங்களில் சங்கு சக்கரம் போன்றவையுடன் காணப்படுவதால் இத்தலத்தில் அம்பிகை மஹாவிஷ்ணு ஸ்வரூபத்தில் தோற்றமளிக்கிறாள். எனவே அம்பாள் மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறாள். ஆதலால் திருவையாறு எல்லைக் குட்பட்ட இடங்களில் பெருமாளுக்கு கோயில்களே கிடையாது.

பொருள் தேடி பெருமாளைப் பணிய அவசியமில்லை அதை அன்னையே தருவாள் என்பதால் அவளே இங்கு விஷ்ணுவாக மகாலஷ்மி வடிவமாக அருள்பாலிக்கின்றாள்.

இத்தலத்தில் முருகப்பெருமான் வில் வேல் அம்பு ஆகிய படைக்கலங்களுடன் வில்லேந்திய வேலவனாகத் தனுசுசுப்ரமணியம் என்ற பெயருடன் விளஙகுகிறார்.

இவர் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களும் கொண்டு நின்ற திருக்கோலத்தில் பின்புறம் மயில் விளங்கக் காட்சி தருகின்றார். மயிலின் முகம் தெற்கு நோக்கி உள்ளது. அருகில் இருபுறமும் தேவியர் எழுந்தருளியுள்ளனர்.

இந்தப் பிரமாண்ட ஆலயத்தில் ஐயாறப்பர் கோயில், தென் கயிலைக் கோயில், லோகமாதேவீச்சரம் என்று மூன்று கோயில்கள் உள்ளன.

இந்த ஐயாரப்பர் சந்நிதிதான் பழமையானது. பின்னாளில் லோகமாதேவீச்சரம் எனும் வடகயிலாயம் இராஜராஜசோழன் மனைவி வானமாதேவியால் கட்டப்பட்டது, அதுதான் அப்பர் கண்ட கயிலாயத்தைக் காட்டுவது.

வானமாதேவியின் பெயரால் அது லோகமாதேவீச்சரம் என அழைக்கப்படுகின்றது.

தென் கயிலாய சந்நிதி இராஜராஜசோழனுக்கு மிகப் பொருத்தமான துணையான பஞ்சமன்மாதேவியால் கட்டப்பட்டது.

சோழர்களின் பொற்காலத்தில் பெரிதாகக் கொண்டாடப்பட்ட அருள்மிக்க ஆலயம் அது.

இத்தலத்திலுள்ள வடகயிலாயம் தென்கயிலாயம் ஆகிய இரு சந்நிதிகள் முக்கியமானவை. இக்கோவிலின் மூன்றாம் பிரகாரத்தின் வடப்புறம் லோக மாதேவீச்சரம் என்ற கற்கோவில் உள்ளது. இது வட கைலாயம் எனப்படும்.

இந்த ஆலயத்தில் இந்திரன், மகாலட்சுமி எனப் பலர் வந்து வழிபட்டிருக்கின்றார்கள்.

நாயன்மார்களான சேரமான் பெருமாள் நாயனார், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் போன்றோரும் சித்தர்களில் பட்டினத்தார் போன்றோரும், அருணகிரிநாதர் போன்றோரும் வந்து வழிபட்ட ஆலயம் இது.

இந்தத் திருவையாறு சொல்லும் மிகப்பெரிய தத்துவம் சப்தங்களால் இயங்கும் பிரபஞ்சம் இது என்பது, வேதங்களின் சப்தமே இந்தப் பிரபஞ்சத்தை இயக்குகின்றது என்பது.

அதனாலே இங்குப் பெரும் அதிசயம் ஒன்று அந்தக் காலத்தில் இருந்து உண்டு, சப்தங்களின் அருமையினை, சப்தங்கள் எவ்வளவு நுணுக்ககமானவை என்பதைச் சொல்லும்படி உண்டு.

எப்படிக் கயிலாய மலை முன் நின்று “சிவ சிவா” எனக் கத்தினால் அது மலை முழுக்க எதிரொலிக்குமோ அப்படி இந்த ஆலயத்தின் வெளிபிரகாரத்தில் ஒரு இடத்தில் நின்று “ஐயாறப்பா” என அழைத்தால் அது ஏழுமுறை திருப்பிக் கேட்கும்.

இதனை எந்த விஞ்ஞானியும் ஆய்வு செய்து கண்டறிய முடியவில்லை, இன்றும் என்றும் அந்த அதிசயம் உண்டு.

கயிலாயத்தின் அம்சம் இங்கும் அப்படி உண்டு.

கயிலாயத்தில் கோவில் கொண்டவளில் ஒருத்தி தசமாஹாவித்யா எனும் காளிவடிவம், இவள் கலைகளின் அரசி, எல்லாக் கலையும் அருள்வாள்.

அவளின் அம்சம் இராமபிரானுக்கும் உண்டு. இராமரின் பிறப்பில் கயிலாயத் தொடர்புகளும் உண்டு.

அந்தத் திருவையாற்றில்தான் இராம நாமம் பாடி பாடியே தெய்வநிலையினை அடைந்தார் அந்தத் தியாகராஜர் எனும் சங்கீத பெரும் சூரியன்.

ஆம். இந்த ஆலயம் கயிலாயத்துடன் முழுக்க தொடர்புடையது, அங்குச் சென்று வழிபட்டால் கயிலாயம் சென்ற முழுப்பலனும் கிடைக்கும்.

இது ஆன்மீகமாகக் கயிலாயப் பலன்களைத் தரும், குடும்பத்துடன் வழிபடும் போது பெரும் ஞான போதனைகளை நல்ல வரங்களைத் தரும்.

இது சிவனுக்கு மட்டுமல்ல, அன்னைக்கும் 51ஆம் சக்திபீடமாக உள்ளதால் அவள் அறம்வளர்க்கும் நாயகியாகவும் உள்ளதால் தம்பதியர் இங்கு வழிபடுவது நல்லது, குடும்பப் பெண்கள் குடும்பத் தலைவியர் வழிபட்டால் இல்லறம் சிறக்கும்.

இங்குச் சிவனும் சக்தியும் எல்லா ஆத்மாக்களுக்கும் தாயும் தந்தையுமாக நின்று அருள் வழங்குகின்றார்கள், தங்களை அண்டுவோரை அவர்களே தங்கள் பிள்ளைகளாக வரிந்து எல்லா வரமும் தருகின்றார்கள்.

அதனால் ஒரு குடும்பம், ஒரு தம்பதியர் தவிர்க்கவே கூடாத ஆலயம் இது.

சப்தஸ்தானங்களில் முக்கியமான முதல் ஆலயம் தான தர்மம், அறமே ஒரு ஆத்மாவுக்கு அடிப்படை என்பதை அன்னை வடிவிலும், அருந்ததி வடிவிலும் போதிக்கின்றது, ஆன்மீகமாகவும் லௌகீகமாகவும் போதிக்கின்றது.

ஞான மார்க்கத்தில் அறமும், கர்மமார்க்கம் எனும் இல்லற மார்க்கத்தில் தர்மமும் மகாமுக்கியம் அதுவே முக்திக்கான வழி என்பதைப் போதிக்கின்றது.

சப்தஸ்தான ஆலயங்கள் ஒரு ஆத்மா எப்படி சிவநிலையினை அடைவது என்பதைப் போதிக்கும் ஆலயங்கள். அவ்வகையில் இந்த முதல் ஆலயம் ஆத்ம தத்துவத்தை இருவழிகளிலும் போதித்து தான தர்மமும் அறமும் எவ்வளவு முக்கியம் என்பதைச் சொல்லி, அப்படித் தன்னிடம் அடைக்கலாகும் ஆத்மாவினை அன்னையும் ஒவ்வொரு படிநிலையாக உயர்த்தி வருவார்கள் என்பதைச் சொல்வது.

அந்தப் பரிபூரண நிலைதான் நந்தியின் திருமண நிலை, அந்தத் திருமணத்தில் சம்பந்தப்பட்ட ஒவ்வொரு ஆலயமும் ஞானப்படிநிலைகளை விளக்கும் ஆலயங்கள், சிவனை அண்டி நின்றால் தர்மமும் அறமும் வசிஷ்டர் அருந்ததி போல் காத்தால், வசிஷ்டரும் அருந்ததியும் போல் இணைந்து சிவநினைவில் பிரியாமல் நின்றால் ஒரு அது அடுத்தப் படிநிலைக்கு நகரும். ஒவ்வொரு படிநிலையாக உயர்ந்து அருந்ததி போல் ஒளிவீசும் என்பதைச் சொல்கின்றது.

அதை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.

இந்த ஆலயத்துக்குச் சென்று நெய்விலக்கிட்டு சிவனையும் அன்னையினையும் மனதார வணங்கி, நந்தியினை வணங்கி வசிஷ்டர் அருந்ததி நினைவாக வணங்கி, அப்படியே அப்பர்சுவாமி உள்ளிட்டோரை நினைந்து வணங்கி, உங்கள் கோரிக்கையினை வைத்து வெளிப்பிரகாரம் வந்து “ஐயாரப்பா” என அழையுங்கள்.

கயிலாயத்தில் நின்றுகொண்டிருக்கின்றோம் என்பதை உணர்ந்து அழையுங்கள்.

அது ஏழுமுறை எதிரொலித்து வரும்போது உங்கள் எல்லாப் பிரச்சினையும் இன்னலும் இடரும் அகலும், உங்கள் வாழ்வு அடுத்த படிநிலைக்கு மாறும் இது சத்தியம்.

“அன்னமலி பொழில்புடைசூழ் ஐயாற்றெம்

பெருமானை அந்தண்காழி

மன்னியசீர் மறைநாவன் வளர்ஞான

சம்பந்தன் மருவுபாடல்

இன்னிசையா லிவைபத்தும் இசையுங்கால்

ஈசனடி யேத்துவார்கள்

தன்னிசையோ டமருலகில் தவநெறிசென்

றெய்துவார் தாழாதன்றே.”

சப்தஸ்தான ஆலயங்கள் 02 : திருவேதிக்குடி வேதபுரீஸ்வரர் ஆலயம்

திருவையாற்றில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சாலையில் வீரசிங்கன்பேட்டை வழியாகத் தென்கிழக்கே 4 கல் தொலைவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.

இந்த ஆலயத்தின் வரலாறு புராணக் காலத்திற்கும் முன் தொடங்குகின்றது. வேதங்களைச் சோமுகாசுரன் எனும் அசுரன் ஒருவன் பறித்துக்கொண்டு கடலடியில் ஒளிந்துகொண்டான். அவனைக் கடலுக்குள் சென்று வீழ்த்தி வேதங்களை மீட்டு வந்தார் விஷ்ணு பகவான்.

வேதங்களே உலகின் படைப்புக்கும் இயக்கத்துக்கும் ஆதாரம் என அறிந்த அசுரன் தானும் படைப்புத் தொழிலை மேற்கொள்ள துணிந்து அதைத் திருடினான், பெருமாள் அதனை மீட்டு வந்தார்.

அப்படி மீட்கப்பட்ட வேதங்கள் அசுரன் கையில் இருந்த தீட்டுப் போக சிவனை வந்து வழிபட்ட ஆலயம் இது, அங்கே சிவன் வேதங்களுக்குச் செவிசாய்த்த தலம் என்பதால் இன்னும் அவர் இடப்பக்கம் சரிந்தே, அதாவது வேதங்களின் பாடல்களுக்குச் செவிமடுத்ததைக் காட்டியபடியே அருள்பாலிக்கின்றார்.

பிரம்மனும் வந்து வழிபட்டு வேதங்களை மீளப் பெற்று படைப்புத்தொழிலை மேற்கொண்டான், அவனுக்கும் வரமருளிய ஆலயம் இது.

சப்தஸ்தான தலத்தின் இரண்டாம் ஆலயமான இங்கிருந்துதான் நந்தி திருமணத்துக்கு வேதியர்கள் சென்றார்கள், இந்தத் தலம்தான் அன்று மிகச்சிறந்த வேதபாடசாலைகளையும், சிறந்த வேதம் ஓதுவார்களையும் கொண்டிருந்தது, அதனால் நந்தி சுயம்பிரபை திருமணத்துக்கு ஐயாரப்பர் இங்கிருந்தே வேதியர்களை அழைத்தார்.

இங்கு வேதங்கள் செழிக்க முதல் காரணம் அவை சிவனை வழிபட்டு நின்ற இடம், இரண்டாம் காரணம் அத்ரி மகரிஷி.

அத்ரி மஹரிஷி ஆசிரமம் அமைத்து தங்கிய இடம் இது, சப்த ரிஷிகளில் அத்ரி மகரிஷிக்குரிய இடம் சிறப்பானது.

பிரம்மனின் மகனான அத்ரி மகரிஷி தர்மத்தை எக்காலமும் காக்கும் மிகச்சிறந்த உறுதியினைக் கொண்டிருந்தவர், அவரின் தவமும் போதனையும் எக்காலமும் சுயதர்மமும் அதைக் காக்கும் வைராக்கியமும் கொண்டிருப்பதைப் போதித்தன‌.

அத்ரி மகரிஷியின் மனைவிதான் அனுசுயை, இவர்களின் புதல்வர்கள்தான் தத்தாத்ரேயர், சந்திரன் மற்றும் துர்வாசர்.

இந்த அனுசுயையின் பெருமை எல்லோரும் அறிந்தது, மிகச்சிறந்த கற்பரசி, மங்கையர்க்கு அரசி எனப் போற்றப்பட்ட அந்தப் பெண்மணியினைச் சோதிக்கும் பொருட்டு சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மூவரும் முனிவர் வேடத்தில் அவள் குடிலை அடைந்தார்கள்.

வழக்கமாக முனிவர்களுக்கு பணிவிடை செய்யும் அனுசுயை அவர்களுக்கும் உணவுப்பரிமாற முயன்றாள், அப்போது மூவரும் அவள் ஆடையின்றி உணவுப்பரிமாறினால்தான் ஏற்போம் என நிபந்தனையிட்டார்கள், முனிவர்கள் சொல்வதைச் செய்யாவிட்டால் சாபம் வரும் அதைச் செய்தால் அவளின் பதிவிரதை தர்மத்துக்குக் களங்கம் ஏற்படும்.

அனுசுயை கொஞ்சமும் அசரவில்லை, மூவரையும் பச்சிளம் குழந்தைகளாக தன் தவசக்தியில் மாற்றி உணவளித்தாள், கள்ளம் கபடமில்லாக் குழந்தைகளுக்கு ஒரு தாய் உணவளிப்பது போல் அவர்கள் கேட்டுக்கொண்டபடி தன் கடமையினைச் செய்தாள்.

பின் மூவரையும் மறுபடி இயல்பாக்கினாள் அவர்கள் அவளைப் பணிந்து நின்றார்கள். அவர்கள் அருளாலே மூத்தமகன் தத்தாத்ரேயர் பிறந்தார், அவர் மூன்று தெய்வங்களின் தன்மையும் ஆற்றலும் ஒருங்கே அமைந்தது இப்படித்தான்.

அந்த அனுசுயை எல்லா உயிர்க்குமான தாயாய் இருந்தாள். ஒருமுறை பூமியில் பெரும் வறட்சி ஏற்பட்டு எல்லா உயிர்களும் வாடியபோது கங்கையினை வரவழைத்து காத்தவள் அவளே.

ஒருமுறை பெண் ஒருத்திக்கு முனிவர் ஒருவர் “விடிந்தால் விதவையாவாய்” என இரவில் சாபம் கொடுக்க, அஞ்சிய அப்பெண் அனுசுயையினைச் சரணடைந்தாள், அனுசுயை இப்பெண்ணுக்கு காவல் வரும்வரை விடியாமலே போகட்டும் எனக் கட்டளையிட்டாள்.

அடுத்த 10 நாட்களுக்கு சூரியன் வரவில்லை, எல்லாத் தேவர்களும் அஞ்சி ஓடிவந்து அனுசுயை முன் நின்றார்கள், பின் சம்பந்தபட்ட முனிவர் வந்து தன் சாபத்தைத் திரும்பப் பெற்றபின் சூரியன் வந்தது, அப்பெண்ணின் மாங்கல்யம் நிலைத்தது.

இப்படி ஏகப்பட்ட அற்புதங்களைத் தன் கற்பின் மேன்மையால் சுதர்மத்தால் செய்தவள் அனுசூயை.

அத்ரிமகரிஷி தர்மத்தினைக் காக்கும் போராட்ட வலிமையினை, எக்காலத்திலும் கலங்காத உறுதியினைத் தவவலிமையில் பெற்றிருந்தவர். அதைக் கொண்டு எல்லா உயிர்க்கும் நீதி சொல்லி வாழவைத்தவர்.

நீதி ஒன்றையே தர்மமாகச் செய்தவர்.

சூரியனை ராகு விழுங்கியபோது சூரியனை மீட்டு, ராகுவால் கண் இழந்த அவனுக்கு வெளிச்சம் எனும் கண்ணைக் கொடுத்தவர் அவரேதான்.

இப்படியான அத்ரி மகரிஷி அனுசுயை தம்பதிகள் போற்றிய அறமும் பிறர்க்கு வழிகாட்டி போதித்த தர்ம வைராக்கிய வாழ்வும் மகா பிரசித்தியானது.

இவர்களிடம்தான் இராமனும் சீதையும் இலட்சுமணனும் வனவாசகாலத்தில் வந்து சேர்ந்தார்கள், இருவருக்கும் பல போதனைகளைச் சாதனாக்களைச் சொல்லிக் கொடுத்தனர் இருவரும்.

இராமருக்குத் தர்மத்தின் விதிகளை அதைக் காக்கும் பெரும் போதனையினை வழங்கியவர் அத்ரி முனிவரே,

வாழ்க்கையின் சிக்கல்களையும், அசாதாரண சூழலைச் சந்திக்கும் போது எப்படிச சமாளிக்க வேண்டும் என்பதற்கான உபதேசங்களையும் அவரே வழங்கினார்.

தர்மத்தை நிலைநிறுத்தும் அவசியம் அந்த வழிமுறை எல்லாமும் போதித்தார்.

சீதைக்கு அனுசுயை போதித்தது கொஞ்சமல்ல, சீதையின் முழுப் போராட்டகுணத்துக்கும் வித்திட்டது அனுசுயைதான்.

சீதைக்கு வாழ்க்கையில் ஒழுக்கம் மற்றும் நேர்மையின் மகத்துவத்தை விளக்கிச் சொல்லி, நெருக்கடியான நேரத்தில் நம்பிக்கையாய் இருப்பது என்பதைச் சொல்லிக்கொடுத்தது அனுசுயை, அவள் வழிகாட்டுதலின் கீழ், சீதை பதினைந்து நாள் விரதம் நிறைவேற்றினாள்.

இந்த விரதம்தான் அவள் வாழ்வில் சந்தித்த எல்லா நெருக்கடிகளையும் சமாளிக்கும் பலத்தைக் கொடுத்தது.

ஒருவகையில் இராமனுக்கும் சீதைக்கும் வர இருந்த நெருக்கடிகளை முன்பே உணர்ந்து, அது தர்மம் நிலைக்க இவர்கள் சந்திக்கும் போராட்டம் என்பதை உணர்ந்து அதனை எதிர்கொள்ள பலம் கொடுத்தவர்களே அத்ரி மகரிஷியும், அனுசுயையும் தான்.

இவர்கள் பிரபஞ்சத்துக்கும் மானிடருக்குமான இணைப்புகளைத் தங்கள் தவம் மூலம் நிறைவேற்றி கொடுப்பவர்கள், இந்த இணைப்புத்தான் இராமனுக்கு எப்போது எந்த உதவி வேண்டுமோ அப்படிக் கிடைக்கச் செய்தது.

ஆம். வேதங்கள் ஒருமானுடனைப் பிரபஞ்சத்தோடு இணைக்கும், பிரபஞ்சத்தோடு இணைந்த வாழ்வு எந்த குறையுமில்லாப் பெருவாழ்வு.

நந்தி திருமணத்துக்கு வேதியர்கள் இங்கிருந்து வந்தார்கள் என்பது அவர்கள் வேதம் ஓதி நந்தியினை இந்த பிரபஞ்சத்தோடு இணைத்து வைத்தார்கள் எனும் பெரும் தத்துவத்தைச் சொல்வது, நந்தி கயிலாயத்திலும் சிவன் முன்பும் பெரும் இடம் பெற இதுவும் ஒரு காரணம்.

ஆம். இந்த ஆலயத்தின் தாத்பரியம் அது. இங்கு வழிபட்டால் நம் கர்மத்தை செய்யும்படி பிரபஞ்சத்தோடு மனம் இணையும், பிரபஞ்சத்திலிருந்து கர்மாவினை செய்ய பெரும் வழி வரும்.

இராமனுக்கும் சீதைக்கும் இங்கு போதனைக் கொடுக்கப்பட்டது, நந்தி திருமணத்துக்கு வேதம் ஓதப்பட்டது என்பது சொல்வது வெகு எளிதான தத்துவம்.

அதாவது, திருமணம் என்பதும் கர்மா, ஒருவன் தன் வாழ்வினைச் சரியாக வாழ்ந்து தன் கர்மத்தைச் செய்ய நல்ல வாழ்க்கை துணை அவசியம். அதைத் தருவதும், வாழ்க்கை துணையின் சிக்கல்களை நீக்கித் தருவதும் இந்த ஆலயம்.

இதனாலே இது லௌகீகமாகத் திருமண வரவும் ஆன்மீகமாகக் கர்கம் செய்ய , சரியான தர்ம வழியில் கர்மம் செய்ய பிரபஞ்ச பெரும் அருளைத் தரும் தலமாகவும் விளங்குகின்றது.

அதனைத் தன் தேவாரப்பாடலில் சொல்கின்றார் சம்பந்தர். ஆம். தேவாரம் பாடப்பெற்ற தலங்களில் இது 14ஆம் தலம், சம்பந்த பெருமான் பாடுகின்றார்.

“உன்னியிரு போதுமடி பேணுமடி யார்தமிட ரொல்கவருளித்

துன்னியொரு நால்வருட னானிழ லிருந்ததுணை வன்றனிடமாம்

கன்னியரொ டாடவர்கண் மாமணம் விரும்பியரு மங்கலமிக

மின்னியலு நுண்ணிடைநன் மங்கையரியற்றுபதி வேதிகுடியே”

காலை, மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய

துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான். தன்னையடைந்த சனகர், சனந்தனர், சனாதனர், சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன்.

அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன். அவன் உறைவிடம் கன்னியர்களும்,

ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய

மகளிர்கள் வாழும் திருவேதிக்குடி என்னும் திருத்தலமாகும் எனப் பாடுகின்றார்.

அதாவது, இங்கு வேண்டினால் நல்ல வாழ்க்கைத்துணை கிடைக்கும் என்பது அவர் வாக்கு.

ஆம். இந்தத் தலத்தில் வணங்கி “உன்னியிரு போதுமடி பேணுமடி ” எனும் பதிகத்தை பாடி விளக்கேற்றி வணங்கினால் திருமணம் விரைவில் நடக்கும்.

இந்தத் தலம் அந்த வரத்தை தரும். அதற்கு சோழமன்னன் கல்வெட்டே சாட்சி.

சோழமன்னன் தன் மகள் மங்கையர்கரசிக்கு நெடுநாளாக திருமணமாகாத குறையினைக் கொண்டிருந்தான், தன் மகளோடு இந்த ஆலயத்துக்கு வந்து வணங்கியபின் அவளின் திருமணம் சிறப்பாக நடந்தது.

இந்தப் பெரும் நன்றிக்காக அவன் செதுக்கிவைத்த கல்வெட்டு இன்றும் அங்குச் சான்றாக உண்டு.

(சில தரவுகளின் படி இவர்தான் நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்கரசி நாயனார் என்பது உண்டு, மதுரையின் கூன்பாண்டியன் மனைவியாக நின்று சைவம் காத்து, சமணத்தினை வேரறுத்த அந்த மங்கையர்கரசி நாயனார் எனச் சில வாதங்கள் உண்டு.

இதற்குப் பெரும் ஆதாரமில்லை என்றாலும் இங்கே திருமண வரம்பெற்ற அந்த மங்கையர்கரசி, நாயன்மார்களில் ஒருவரான மங்கையர்கரசியாக நிச்சயம் இருக்கவாய்ப்பு அதிகம்.)

கோயில் எதிரிலுள்ள திருக்குளம் இங்கு வேத தீர்த்தம், வேதங்கள் நீராடி சுத்தமான தீர்த்தம் அது. கிழக்கு நோக்கியுள்ள இந்தக் கோயிலில் மூன்று நிலைகளுடன் கூடிய இராஜகோபுரம் நுழைவாயிலில் உண்டு.

இந்தத் தலத்தின் முக்கியமான அம்மன் சன்னதி தெற்கு நோக்கியுள்ளது. இந்தக் கோயிலில் நுழைந்ததும் இடதுபுறமுள்ள மகா மண்டபத்தில் வேத விநாயகர் எழுந்தருளியுள்ளார். இவருக்கு வேதம் கேட்ட விநாயகர் எனப் பெயர்.

சிரசை ஒரு புறமாகச் சாய்த்துக் காதைச் சற்று உயர்த்தி வேதம் கேட்கும் பாவனையில் கணபதி அமர்ந்துள்ளார்.

வேதங்கள் வழிபட்ட தலம் இது என்பது பிள்லையார் அமர்ந்திருக்கும் தோற்றத்திலே தெரிகின்றது.

இங்குள்ள அர்த்தநாரீஸ்வரர் வித்தியாசமான வடிவினைக் கொண்டிருப்பார். அதாவது. பொதுவாக அர்த்தநாரீஸ்வரர் என்றால் சிவன் வலது புறமும், அம்மன் இடது புறமும் இருப்பார்கள் இது நியதி, ஆனால் இங்கு அம்மன் வலது புறமும் சிவன் இடதுபுறமும் இணைந்த கோலத்தில் காட்சியளிப்பர்.

அதன் பொருள் இங்கு அன்னையே சிவன், சிவனே சக்தி. கர்மவினையினைச் செய்ய வாழ்க்கை துணையே முழு ஆதாரம் என்பதை சூசகமாகச் சொல்லும் தத்துவம் இது.

வேதங்கள், பிரம்மன், சூரியன், இந்திரன், மகாவிஷ்ணு உள்ளிட்டோர் வழிபட்ட தலம் இது. இன்னும் வியாசரும் சில காலம் தங்கியிருந்த தலம் அது.

வேதங்களைத் தொகுத்தவர் வியாசர் எனும் வகையில் அவரும் இங்கு. வழிபட்டிருக்கின்றார், இந்த வேதபுரீஸ்வரரை வணங்கித்தான் அவருக்கும் வேதங்களைத் தொகுக்கும் வல்லமை பெறமுடிந்தது.

இந்தத் திருக்கோயில் பிரகாரத்தைச் சுற்றி 108 சிவ லிங்கங்கள் வரிசையாக அமைந்துள்ளன. அதனால் இந்தத் தலத்தை ஒரு முறை வலம் வந்து தரிசனம் செய்தால் 108 சிவாலயங்களைத் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

சூரியனை ராகு விழுங்கியபோது அத்ரி மகரிஷிதான் அதனை மீட்டெடுத்தார், சூரியன் ராகுவின் விஷத்தால் ஒளியிழந்து போனநிலையில் அவர்தான் ஒளியினைத் திரும்பக் கொடுத்தார்.

அதனால் சூரியன் வந்து வழிபட்ட தலம் இது. இன்றும் ஒவ்வோர் ஆண்டும் பங்குனி மாதம் 13, 15 ஆம் தேதிகளில் சூரிய பகவான் தன் பொற் கிரணங்களால் வேதபுரீஸ்வரரை அர்ச்சிக்கும் அதிசயம் நடக்கும்.

இத்தலத்தில் வாழும் உயிரினங்கள் யாவும் இணை பிரியாமல் வாழ்கின்றன எனத் தனது பதிகத்தில் பாடுகிறார் சுந்தர பெருமான்.

இந்த ஆலயத்தைத்தான் வள்ளலாரும் தன் கலிவெண்பாவில் “ஆற்றல் இலாத் தீது இக்குடி என்று செப்பப்படார் மருவும் வேதிக்குடி இன்ப வெள்ளமே” என்று போற்றி உள்ளார்.

புராதனமான இந்த ஆலயத்தினைச் சோழர்கள் கட்டி எழுப்பினார்கள். முதலாம் ஆதித்த சோழன் காலக்கோயிலான இக்கோயிலின் கல்வெட்டில், சுவாமி “வேதிக்குடி மகாதேவர் ” என்றும், “பரகேசரி சதுர்வேதி மங்கலத்து மகாதேவர் ” என்றும் கொண்டாடப்படுகின்றார்.

சோழர், பல்லவர், பாண்டியர் என எல்லோரும் மாறி மாறி திருப்பணி செய்த இந்த ஆலயத்தில் பின்னாளில் மராட்டியரும், நாயக்கரும் திருப்பணி செய்தனர்.

இங்குள்ள அம்பிகை அப்படியே அனுசுயையின் சாயல், அவளுக்கு எல்லா வரமும் கொடுத்தவள் இந்த அன்னை, ஒரு குலப்பெண் குடும்பப்பெண் எப்படி தர்மம் காத்து வாழவேண்டும் என்பதற்கு அனுசுயை எக்காலமும் உதாரணம்.

சீதையின் ஞானத்தாய் அவளே.

அந்த அனுசுயைக்கு வரம் அருளி மங்கையரில் அரசியராய் வாழவைத்ததால் இவள் மங்கையர்கரசி என்றானார், அதே வாழ்வினைத் தன்னை அண்டிவரும் ஒவ்வொரு பெண்ணுக்கும் அவர் வழங்குகின்றார்.

இந்த அன்னை ஆடி, தை மாத வெள்ளியன்று சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சி தருவாள். மாங்கல்ய தோஷம் உள்ள பெண்கள் நிவர்த்திக்காக, இவளுக்கு மஞ்சள் புடவை, தாலி அணிவித்து வழிபடுகிறார்கள்.

செவ்வாய் தோஷத்தால் திருமணத்தடையுள்ளவர்கள் இங்குள்ள சுப்ரமணியருக்கு அபிஷேகம் செய்து வேண்டிக் கொள்கின்றனர். இவர் அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்றவர். பிரகாரத்தில் லட்சுமி நாராயணர் இருக்கிறார். அருகில் ஆஞ்சநேயர் வணங்கியபடி கிரீடம் இல்லாமல் இருக்கிறார்.

(அருணகிரிநாதர் தமது திருப்புகழில் ‘ஏழு திருப்பதி’ என்று பாடியுள்ளதால் இத்தலமும் திருப்புகழ் தலமாகும், அவர் பாடிய பாடல்களில் இந்த ஆலயமும் உண்டு.)

இந்த ஆலயம் பிரம்மன் வழிபட்ட ஆலயம் என்பதால், வேதங்கள் வழிபட்ட ஆலயம் என்பதால் இங்கு வழிபட்டால் நல்ல கல்வி ஞானம் உருவாகும், பெரும் அறிவும் தெளிவும் வாய்க்கும்.

கல்வி கற்கும் பருவத்தின் மாணவர்கள் இங்கு வழிபடுதல் சாலச் சிறந்தது.

அப்படியே திருமணத் தடை அகற்றி தரும் ஆலயம் இது, நந்திக்கே திருமணம் செய்விக்க வேதியர்களைத் தந்து தடைநீக்கிய இந்தத் தலம், சோழ மன்னன் மகளுக்கு நல்வாழ்வு தந்தது போல் ஏகப்பட்ட பெண்களுக்கு நல்வாழ்வு தந்த ஆலயமிது.

திருமணமாகாதவர்கள் சம்பந்த பெருமான் தந்த “உன்னியிரு போதுமடி” எனும் பதிகத்தைப் பாடினால் நிச்சயம் நல்ல வாழ்க்கை துணை அமையும்.

இங்கு வழிபட்டால் திருமண வாழ்வில் குடும்ப வாழ்வில் சிக்கல் இருந்தால் தீரும். தம்பதிகளுக்குள் நல்ல உறவு இன்னும் இன்னும் இறுக்கமாகி நல்ல பாசபந்த புரிதலுடன் இணைப்பு ஏற்படும்.

அப்படியே நல்ல ஞான குழந்தைகளை அத்தலம் தரும், தாத்தாத்ரேயர் உள்ளிட்ட நல்ல மகன்கள் அப்படித்தான் அத்ரி முனிவருக்கு கிடைத்தார்கள், ராமனுக்கும் அருமையான புத்திரன்கள் கிடைத்தார்கள்

இந்த அத்ரி அனுசுயை தத்துவம் அவர்கள் இராமனுக்கும் சீதைக்கும் போதித்த தத்துவம், அப்படியே நந்தி திருமணத்துக்கு இங்கிருந்து வேதியர்கள் சென்ற தத்துவமெல்லாம் விளக்குவது ஒன்றுதான்.

அது ஒரு ஆத்மா கர்மம் செய்ய பிறக்கின்றது அது தன் கர்மத்தை தனியே செய்யமுடியாது சில துணைகள் அவசியம். அந்தத் துணைகள் சரியாக அமைதலும் எல்லா நிலையிலும் எல்லாச் சிக்கலிலும் தர்மத்தையும் அறத்தையும் போராடிக் காக்கும் வைராக்கியம் கொண்டதும் எந்த நிலையிலும் வீழாமல் சரியாமல் நின்று சாதிக்கும் போராட்ட குணம் கொண்டதாக, உறுதி கொண்டதாகவும் இருத்தல் அவசியம்.

அந்தப் பலத்தை அத்ரி முனிவருக்கு அனுசுயையாக, அனுசுயைக்கு அத்ரி முனிவராக கொடுத்த இந்த ஆலயம், இராமனுக்கும் சீதைக்கும் முறையே நல்ல போதனைகளைக் கொடுத்து பலமாக்கிற்று.

அப்படியே நந்தி தன் கர்மாவினைச் செய்ய நல்ல பலமான சரியான துணையினை அதுவே கொடுத்தது.

வேதங்கள் என்பது அறத்தை தர்மத்தைக் காப்பவை, வேத நெறி என்பது அறப்போதனை. தர்மபோதனை.

அதைச் சரியாக கற்ற அத்ரி முனிவர் சூரியனையே காத்து உலகை வாழ வைத்தார். அனுசுயை கங்கையினை வரவழைத்து உலகைக் காத்தாள். பெண் ஒருத்திக்காக சூரியனையே எழாமல் நிறுத்திவைத்தாள்.

இந்தச் சக்திதான் சீதையினை அசோகவனத்தில் தாங்கிற்று, இந்தத் தர்மசக்திதான் இராவணனை அழித்து தர்மத்தை நிறுத்திற்று, நல்லோரை வாழவைத்தது.

இராமனைத் தன் கர்மத்தைச் சரியாகச் செய்யவைத்தது, வேதங்கள் வழிபட்ட இந்த ஆலயத்தின் அருள் அப்படி.

ஆம். வேதங்கள்தான் அறவழி தர்மவழி வாழ்வினைத் தரும் அதனாலே இந்துக்கள் எல்லா இடங்களிலும் வேதங்கள் வழி வழிபாடுகளைச் செய்வார்கள். வேதங்கள்தான் பிரபஞ்சத்துக்கும் மானுடர்க்கும் இணைப்பினைத் தரும், அந்த இணைப்பில்தான் ஒருமானுடனைப் பிரபஞ்சம் சரியாக நடத்தும்.

அத்ரி மகரிஷியும், அனுசுயையும் அப்படித்தான் பிரபஞ்சத்தில் கலந்தார்கள், நந்தி கலந்தார், இராமனுக்கு எங்கிருந்தோ பிரபஞ்ச பெரும் உதவிகள் அப்படியே கிடைத்தன‌.

வேதங்கள் வழிபட்ட இந்தத் திருவேதிக்குடியில் வழிபடுவோர் ஆத்மா தர்ம அறநெறியில் நிலைக்கும், எல்லாச் சோதனைகளையும் தாண்டி நிலைக்கும். அது பிரபஞ்சத்திலும் கலக்கும், அப்போது இந்தப் பிரபஞ்சமே அவர்களுக்கு வழிகாட்டும்.

ஆம். இந்த ஆலயம் ஒரு மானுடன் பிரபஞ்சத்தோடு இணையும் திறவுகோல், அங்கே சென்று நுழைபவனுக்கு எல்லா நலனும் கைகூடும். இது சத்தியம்.

சப்தஸ்தான தலங்கள் 03 : திருச்சோற்றுத்துறை ஓதனேஸ்வரர் ஆலயம்

” செப்ப நெஞ்சே நெறிகொள் சிற்றின்பம்

துப்ப னென்னா தருளே துணையாக

ஒப்ப ரொப்பர் பெருமான் ஒளிவெண்ணீற்

றப்பர் சோற்றுத் துறைசென் றடைவோமே”

என தேவாரத்தில் போற்றபட்ட தலம் இது

இந்த ஆலயம் தஞ்சாவூரில் இருந்து 13 கி.மீ. தொலைவிலும், திருக்கண்டியூர் சிவஸ்தலத்தில் இருந்து 4 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது, திருவையாற்றின் ஏழூர் திருவிழா நடக்கும் ஆலயங்களில் மூன்றாம் ஆலயம் இது

இந்த ஆலயத்தின் வரலாறு ஆங்கிரச முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது, அவர்களின் சந்ததிகளில் ஒருவரான கௌதமர் இங்கு ஆசிரமம் அமைத்து சிவனை வழிபட்டு வந்தார்

இந்த ஆலயத்து சிவன் ஓதனேஸ்வரர் என பெயர் பெற்றது அன்னதானம் நடந்த அற்புதத்தின்போது , அந்த சம்பவமே இந்த ஆலயத்தின் பெருமையினை உலகறிய செய்தது

ஒரு காலத்தில் கடும் வறட்சி இப்பக்கம் ஏற்பட்டது, காவேரி வறண்டு போனது கிணறுகளெல்லாம் பொய்த்து போயின, மக்களும் அவர்களை நம்பிவாழும் கால்நடைகளும் பெரிதும் தவித்து போயின, அவைகளில் பல மடிந்தன‌

இந்த பெரும் துயர் நிலையினை கண்டு அங்கு வாழ்ந்த சிவனடியாரான அருளாளனும் அவர் மனைவியும் தவித்துபோனார்கள், எல்லா உயிர்களும் தப்பி பிழைக்க சிவனிடம் விடாமல் மன்றாடினார்கள்

கடும் வறட்சியின் நடுவே திடீரென பெரும் மழை பெய்ய ஆற்று கால்வாய்களில் நீர் பெருகி ஊர் மூழ்கியது

அருளாளர் இன்னும் அரண்டு பொனார், கடும் வறட்சியில் திடீர் வெள்ளம் என்றால் உயிர்கள் எப்படி தவித்துபோகும் என்பதை உணர்ந்தவர் சிவன் முன் கதறினார், அவரின் வேண்டுதல் கேட்ட சிவன் இறங்கி வந்தார்

அப்போது ஒரு பாத்திரம் வெள்ளநீரில் மிதந்தது, “அருளாளா இதோ அட்சய பாத்திரம், அள்ள அள்ள உணவு தரும் அட்சய பாத்திரம் இதை கொண்டு எல்லா உயிர்களுக்கும் உணவளிப்பாய்” என ஒரு அசரீரி ஒலித்தது

அருளாளர் அதை எடுத்து கண்களில் ஒற்றிகொண்டார், அந்த பாத்திரம் எவ்வளவு வேண்டுமானாலும் உணவு வழங்கி கொண்டே இருந்தது அந்த அட்சய பாத்திரத்தால் அந்தன் ஊரின் பஞ்சம் மட்டுமல்ல அதை சுற்றியிருந்த எல்லோரின் வறுமையும் தீர்ந்தது

இப்படி அன்னமிட்ட சிவன் அவர், ஓதனம் என்றால் உணவு என பொருள், போஜனம் எனும் சமஸ்கிருத வார்த்தையின் தமிழ் பதம் அது. எல்லா உயிர்க்கும் உணவளித்ததால் அவர் “ஓதனேஸ்வரர்” என்றானார்

அவரோடு சேர்த்து உணவளித்த அன்னை “அன்னபூரணி” என்றானாள்

ஆம், காசியினை போலவே சிவனும் அன்னையும் அன்னம் படியளக்கும் தாய் தந்தையாக அருள்பாலிக்கும் ஆலயம் அது, காசிக்கு அடுத்து அன்னபூரணி அமர்ந்திருக்கும் தலம் இது

இந்த தலத்தில் இருந்துதான் திருமழப்பாடியில் நடந்த நந்தி திருமணத்துக்கு சோறு சென்றது, திருமணத்தின் முக்கிய அம்சமான உணவு இந்த தலத்தில் இருந்துதான் சென்றது அதனால் இது “திருசோற்றுதுறை” என்றானது

இந்த சிவன் கடும் வறட்சியிலும் பெரும் வெள்ளத்திலும் மக்களை தொலைக்காமல் காத்தவர் என்பதால் “தொலையா செல்வநாதர்” என்றும் அழைக்கபடுகின்றார், அன்னை “தொலையா செல்வி” என பெயர்பெற்றாள்

இந்த அன்னபூரண ஆலயம் தான் நந்தி திருமணத்துக்கு எல்லா உணவுகளையும் அனுப்பிற்று, இந்த தத்துவம் ஒருவரியில் உணவு படைத்தது என கடந்து செல்லமுடியாதது

ஒரு திருமணத்தில் உணவு முக்கியமானது, அந்த திருமண விழாவின் நிறைவு விருந்து சாப்பாட்டில்தான் நிறைவு பெறுகின்றது, ஒரு முழுமையும் மகிழ்வும் திருப்தியும் அங்கேதான் கிடைக்கின்றது

ஆம், முழு நிறைவும் திருப்தியும் மகிழ்வும் தரும் ஆலயம் இது, ஒவ்வொருவருக்கும் தன்னளவில் நிறைவினை தரும் தலம் இது

இந்த தத்துவம் இன்னும் ஆழமானது

சோறு என்பது ஒருவன் பசிதீர்க்கும் விஷயம், அன்னமயமான உடல் இது அன்னமின்றி அது இயங்காது, மானிட உடல் கர்கம் கழிக்க ஒரு ஆத்மா தங்கியிருக்கும் இடம், அது இயங்க இயங்கத்தான் கர்மத்தை ஒரு ஆத்மா முழுமையாக கழிக்கமுடியும்

அந்த கர்மவினை தீர உடல் முக்கியம், உடல் இயங்க அன்னம் மிக மிக முக்கியம்

ஒருவனை அவனளவில் அவ்வப்போது நிறைவடைய செய்து, மகிழ்ச்சி அடைய செய்து அவன் கர்மத்தை விடாமல் செய்ய வரமருளும் ஆலயம் இது

ஒரு ஆத்மா தன் கர்மாவினை முழுமையாக செய்துமுடிக்க அதற்கு பக்கமலமான எல்லா விஷயங்களையும் தரும் ஆலயம் இந்த திருசோற்றுத்துறை ஆலயம்

சோற்றுக்கு ஒரு ஆலயமா என பகுதறிவில் கேள்வி கேட்பதல்ல இங்கு விஷயம், அதன் தாத்பரியம் அதாவது சோறு என்பதன் தாத்பரியம் மிகுந்த ஞானமானது

சோறு என்றால் அது ஒரு பொருள் அல்ல, சோறு என்பது ஒரு நிலை அதாவது பக்குவட்ட நிலை. உண்பதற்கு தயாரான பக்குவத்துக்கு வந்துவிட்ட அரிசியினை சோறு என்கின்றோம், அது அரிசி பக்குவமாக வெந்த நிலை என்பதையே குறிக்கும்

பழந்தமிழரிடம் சோறு எனும் வார்த்தை பக்குவபட்டதை அல்லது மென்மையாகிவிட்டதை குறிக்கும், தமிழரிடம் அரிசி சாதத்துக்கு அடிசில் எனும் பெயர்தான் இருந்ததே தவிர சோறு எனும் வார்த்தை இல்லை

“நெய்பட அடிசில்” என சொல்லும் வரியும் “அக்கார அடிசில்” என சொல்லும் வரியும் இங்கே சோற்றுக்கு அடிசில் எனும் பெயர் இருந்ததைத்தான் சொல்கின்றன‌

ஆம் சோறு என்பது அரிசிசோற்றை மட்டும் குறிக்கும் என்பதும் தவறான வாதமாகும், அடிசில் என்பதுதான் சரியான வாதமாகும்

அது அன்னம் போல் வெண்மை நிறத்துக்கு வருவதால் அன்னம் என்றும் அழைக்கபட்டது

நெல்லுச்சோறு, கம்பஞ்சோறு, வரகு சோறு மூங்கில் சோறு என எல்லா தானியனங்களின் பக்குவபட்ட நிலையே சோறு

மென்மையான பகுதி, அல்லது பக்குவமான நிலை சோறு எனப்படும் என்பதற்கு சோற்றுகற்றாழை சிறந்த உதாரணம்

ஆம், கற்றாளையில் சோற்றுகற்றாழை, யானை கற்றாழை என பலவகை உண்டு. சோற்று கற்றாளையின் உட்பகுதி சோறு போல மென்மையானது என்பதால் அது சோற்றுகற்றாழை என்றாயிற்று

இன்னும் கிராமங்களின் வார்த்தைகளில் கூட பனைமரத்தின் மென்மையான பகுதி பனஞ்சோறு என்று அழைக்கபடும் வார்த்தை சோறு என்பது அரிசி சாதம் அல்ல, அது மென்மையான பதநிலை என்பதை சொல்கின்றது

இன்னும் அவர்களிடம் இதை விளக்கும் வாக்கியம் உண்டு “ஆத்துக்குள் நின்ற் அரோகரகா அரோகரா என கத்தினாலும் சோற்றில் உண்டாம் சுகம்” என்பது சித்தர் வாக்கு

இது “அகத்துக்குள் இருந்து அரோகரோ என கத்தினாலும் சோற்றுக்குள் உண்டாம் சுகம்” என்ற வரியின் திரிபு

அகம் என்றால் வீடு அல்லது இறைவன் இருக்கும் ஆலயத்தில் நின்று அரோகரா என சொல்லி

கொண்டிருந்தாலும், மனம் ஒரு பக்குவ நிலை அதாவது சோறு போன்ற பதநிலையினை அடைந்தால்தான் நிம்மதி கிட்டும் என்பதே சித்தர் சொன்ன பொருள்

ஆம், சோறு என்பது அரிசியினை பொங்கிவைக்கும் விஷயம் அல்ல, சோறு என்றால் பதம் என பொருள்

சாறு, சேறு, சோறு என மூன்றும் தொடர்புடைய வார்த்தைகள், சாறு என்றால் நீர், சேறு என்றால் கூழ், சோறு என்றால் மிருதுவான திரவநிலை, மிதமான பக்குவம்

ஆம் அந்த சரியான பக்குவ நிலைதான் “சோறு”

இன்னும் கொஞ்சம் ஆழமாக செல்லலாம்

சமஸ்கிருததில் சாதம் என்றால் அது மூலபொருள்

“சாத்” என்பது பரம்பொருளை குறிக்கும் ஒரு வார்த்தை. சாத்வீகம், சாக்தம் என்பதெல்லாம் அதன் சாயலான பொருளே, சாத்+அம் என்பது ஒரு பக்குவ நிலையினை குறிக்கும் வார்த்தை

ப்ரசாத் அல்லது பிரசாதம் என்பது இறைவனுக்கு இடும் படையலாயிற்று, இன்றும் கோவில்களில் கொடுக்கும் பிரசாதம் என்பதன் பொருள் “இறைவனுக்கு படைக்கபட்டது” என்பதே

ஆம், சாதம் என்பது அரிசி சோற்றை குறிக்கும் என்பது தவறான வார்த்தை. சாத்துதல், படைத்தல் எனும் பொருளில் வரும் வார்த்தை அது, இன்றும் வைணவர்கள் இறைவனுக்கு சாற்றிய அமுதமான அடிசிலை இறைவனுக்கு “சாற்றிச் சொன்ன அமுது’ என்பதாக ‘சாத்தமுது’ என தமிழில் சொல்வார்கள்

சாத்திய அமுது என்பது திரிந்து சாதம் ஆகியிருக்க சில வாய்ப்புகள் உண்டு

இதனால் ஆழ சிந்தித்தால் இன்னும் விஷயம் விளங்கும்

ஏன் எத்தனையோ தானியங்கள் இருந்தபொழுது சோறு படைத்தார்கள்? இரு விஷயம் முக்கியமானது, முதலில் அரிசி அன்று அபூர்வ பொருள் அதிகம் விளையாது, அன்றாட உணவில் கம்பும் கூழும் உண்டே தவிர அரிசி அதிகம் இல்லை, அந்த நாள் இறைவனுக்கு சாத்துதல் எனும் பெயரில் மக்களெல்லாம் வயிறாற உண்ண வைக்க நோக்கம் இருந்தது

வெண்மை நிறத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த இந்துமதம் உடை, திருநீறு போல அரிசி அன்னமே வெண்மையாக இருப்பதை கண்டது, ஆம் அரிசி அன்னம் போல் மனம் வெண்மையாக இருக்க வேண்டும் என்பதும் தத்துவம்

இரண்டாவது கண்டிப்பாக பச்சரிதான் வைப்பார்கள், காரணம் அவித்த நெல் முளைக்காது அதாவது அதில் உயிர் இல்லை, அதை அவித்தால் இறந்ததை அவித்ததாகின்றது, உயிர் இல்லாததை இறைவனுக்கு படைக்காமல் பச்சரிசி எனும் அவிக்காத அரிசியினை முதல் பொங்கலாக படையலாக இட்டார்கள்

சோறு எனும் நிலைக்கு அரிசி பக்குவபட்டு மானிடருக்கு பயனாவது போல, மனம் பக்குவபட்டு மானிடருக்கும் இறைவனுக்கும் மனிதன் பயனுற வாழவேண்டும், பக்குவபடா அரிசி பசியாற்ற உதவாது பக்குவபடா மனித மனம் இறைவனை அடையாது

இதுதான் சிவலிங்கத்துக்கு அன்னம் சாற்றும் தத்துவம்

இந்த தத்துவத்தைத்தான் ஒரு ஆன்மா பக்குவநிலையினை அடையும் வரும் தரும் ஆலயம் இது என்பதைத்தான் திருச்சோற்றுதுறை என சொல்லி வைத்தார்கள் இந்துக்கள்

கிழக்கு நோக்கிய வாசலுடன் இந்த ஆலயம் குடமுருட்டியாற்றின் கரையில் அமைந்துள்ளது. முகப்பு வாயிலின் மேற்புறத்தில் சுதையாலான சிவனும், பார்வதியும் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி காட்சி அளிக்கின்றனர்.

முன் வாசலை கடந்து உள்ளே சென்றால் விசாலமான கிழக்கு வெளிப் பிரகாரம் உள்ளது. இந்த வாயிலுக்கு நேரே உட்பிரகாரத்திற்குச் செல்லும் வாயில் உள்ளது. இந்த வாயிலுக்கு முன் பலிபீடமும், நந்தி மண்டபமும் உள்ளன. இங்கு கொடிமரம் இல்லை.

கருவறை, மற்றும் உட்பிரகாரமும் நான்கு புறமும் மதிற்சுவருடன் அமைந்துள்ளது. வெளிப் பிரகாரங்கள் நான்கு புறமும் விசாலமாக உள்ளன.

இரண்டாவது நுழைவாயில் வழியே உள்ளே நுழைந்தால் அடுத்துள்ள பெரிய மண்டபத்தில் வலதுபுறம் நடராஜ சபை உள்ளது. இந்த மண்டபப் பகுதியிலிருந்து நேரே மூலவர் சந்நிதிக்குள் நுழைந்து விடலாம். தெற்காக கிழக்குப் பார்த்தபடி மகாவிஷ்ணு. அடுத்து, அர்த்த மண்டப நுழைவு வாயிலில் பெரிய ஆறுமுகப் பெருமான் மூர்த்தம் உள்ளது.

இத்தலத்திற்குச் சிறப்பு தரும் மூர்த்தியான இவர் தனிக்கோயிலில் காட்சி தருகிறார்.

அடுத்து இருபுறமும் கௌதமர் சிலையும் அவர் வழிபட்ட காட்சி செதுக்கப்பட்ட சிலையும் உள்ளது. அதிகார நந்தியை வணங்கிவிட்டு உள்ளே நுழைந்தால், மகாமண்டபமும், அர்த்த மண்டபமும் தாண்டி, உள்ளே நோக்கினால் அருள்மிகு சோற்றுத்துறைநாதர் எனும் தொலையாச் செல்வர் கிழக்கு நோக்கி சுயம்பு மூர்த்தியாக லிங்க உருவில் அருட்காட்சி தருகிறார்.

இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தனிக் கோயிலாக அம்பாள் சந்நிதி கிழக்குப் நோக்கி அமைந்துள்ளது அங்கே மூலஸ்தானத்தில் நின்ற கோலத்தில் ஒப்பிலாம்பிக காட்சி தருகிறார்

அம்பாள் ஒப்பிலா நாயகி அன்னபூரணி என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

இக்கோயிலில் சுவாமி, அம்பாள் இருவரும் கிழக்கு நோக்கியே தரிசனம் தருகின்றனர். இவர்களுக்கு இடையில் முருகப்பெருமான் மயில்மீது சுமார் 5 அடி உயரமுடன் காட்சி அளிக்கின்றார். அதனால் இது ‘சோமாஸ்கந்த தலம்’ என்று போற்றப்படுகிறது

சிவனிடம் அட்சய பாத்திரம் வாங்கிய அருளாளன் என்னும் அந்தணனும், அவனது மனைவியும் சிவபெருமானை நோக்கி மண்டியிட்ட நிலையில் தவம் செய்யும் திருவுருவங்கள் மூலவரின் கருவறைக்கு வெளியே இடப்புறம் உள்ளது.

பிரம்மா, விஷ்ணு, இந்திரன், கவுதம முனிவர், சூரியன் ஆகியோர் வழிபட்டுள்ள சிறப்பைப் பெற்றது இத்தலம் இது

இந்த தலம் தேவாரம் பாடபெற்ற தலம்

வள்ளல் பெருமான் தாம் பாடி அருளிய விண்ணப்பக் கலிவெண்பாவில ” கொண்டு இயல்பின் வேற்றுத் துறையுள் விரவாதவர் புகழும் சோற்றுத்துறையுள் சுக வளமே” என பாடிய தலம் இது

சப்தஸ்தான தலங்கள் ஒவ்வொன்றும் ஒரு சப்த ரிஷி தத்துவத்தை சொல்பவை இங்கு அந்த தத்துவம் கௌதம முனிவர் வாழ்வில் இருந்து வருகின்றது

கவுதம முனிவர் இங்கு ஆசிரமம் கட்டி வழிபட்டவர், அதனாலே அவரின் சிலை அவர் சிவனைவழிபடும் சிலை இந்த ஆலயத்தில் உண்டு

கவுதம முனிவருக்கு “அட்ச பாதர்” எனும் பெயரும் உண்டு “நியாய சூத்திரம்” எனும் தர்க்கவியல் நூல் இவரால் எழுதபட்டது, உலகில் எல்லா தர்க்க தத்துவ முறைகளுக்கும் அடிப்படை நூல் இதுதான்

“அட்ச” “அட்சய” என்றால் வளர்தல் என பொருள், ஒரு விஷயத்தை அல்லது தத்துவ விவாதத்தை வளர வைத்து அதில் உள்ள நீதியினை அதில் உள்ள உண்மையினை கொண்டுவருவதே “நியாய சூத்திர” நூலின் ஒரு வரி விளக்கம்

தர்க்கத்தில் அவர் வல்லவராய் இருந்தார், இதனால் அவர் பெரும் ஞானமும் அறிவும் நிரம்ப பெற்ற மகா ஞானியாக கொண்டாடபட்டார்

அவர் இந்த தலத்தில் நிற்க காரணம் இரண்டு

முதலாவது தர்க்கம் என்பது எப்படி எல்லா விவாதங்களும் விவாதிக்கபட்டு கடைசியில் உண்மை பொருள் உணர முடிவடைகின்றதோ அப்படி எல்லா உணவும் உண்ட ஒரு உயிர் நிறைவினை அடைகின்றது

உணவு என்பது இங்கு அன்றாடம் உண்ணும் உணவு மட்டுமல்ல, எல்லா ஆசாபாசங்களுக்குமான நிறைவு, பாசபந்தம், செல்வம், பூலோக வாழ்வு என ஏகபட்ட ஆத்மருசிகளின் நிறைவு

எல்லாம் விவாதித்து அது மெய்பொருளை உணர்வதில் முடிவதை போல, எல்லா சுக துக்கங்களையும் ருசித்த ஆத்மா பரம்பொருளே நிலையானது என்பதை உணர்ந்து அங்கே நிறைவடைய வேண்டும் என்பது முதல் தத்துவம்

அவர் அங்கு போதிக்கும் அவரின் தர்க்க போதனை தத்துவம் அதுதான், சோறு என்பது ஒரு பதநிலை பக்குவநிலை என்பது போல ஆத்மா ஒரு பக்குவநிலைக்கு வர பல நிலைகளை கடக்க வேண்டும் எனும் போதனை அவர் தருகின்றார்

இரண்டாம் நிலை லவுகீகமானது

கௌதமர் மனைவி அகலிகை கதை எல்லோரும் அறிந்தது, அவள் அழகில் மயங்கிய இந்திரன் அதிகாலை கோழிபோல் கூவ முனிவர் விடிந்துவிட்டது என குடிலை விட்டு அகல, அங்கு புகுந்த இந்திரன் அவளை எடுத்துகொண்டான்

ஆனால் இதை பின்பு அறிந்த முனிவர் இந்திரன் உடலெல்லாம் கண்ணாக போகும்படியும், அகலிகை கல்லாக போகும்படியும் சபித்தார், பின் ராமன் கால்பட்டு அகலிலை உயிர்த்தாள்

இங்கு அகலிகை நிச்சயம் தவறினாள், வந்தது முனிவன் இல்லை என தெரியும், அனுதினமும் கோழி கூவ செல்லும் முனிவர் விடிந்தபின்புதான் திரும்புவார் என்பதையும் அறிந்தவள் வந்தவன் கணவன் அல்ல என அறிந்தும் இடம் கொடுத்தாள்

அந்த தவற்றை அவள் செய்ததால் கல்லாய் கிடந்து பெரும் இன்னல் அடைந்தாள்

ஆம், இங்கே கவுதம முனிவர் அகல்யா கதை சொல்லபடுவது மிக மிக நுணுக்கமானது , ஆன்மீகமாகவும் லவுகீகமாகவும் போதிப்பது

ஆன்மீகமாக ஒரு ஆத்மா எப்போதும் தன் கர்மாவில் தன் கடமையில் கவனமாக இருத்தல் வேண்டும், இது பர்ம்பொருளை அடையவேண்டிய ஆத்மா, பரம்பொருளுக்கான ஆத்மா அதனை இந்திரனின் மாயை போன்ற மாயையில் தொலைத்துவிட கூடாது என்பது முதல் போதனை

இரண்டாவது இல்லறத்தில் ஒரு தம்பதியர் எப்படி இருக்க வேண்டும் என்பது, ஒரு குலப்பெண் எக்காலத்திலும் சரியாக இருந்து அறம் செய்ய வேண்டும் என்பது

ஆம், இல்லறத்தின் மிக முக்கிய விஷயம் அன்னம் சமைத்தலும் தானம் செய்தலும். இதனாலே தேவி சிவன் கொடுத்த இருபடி நெல்லில் இல்லறம் நடத்தியவள் என குல பெண்களுக்கு இந்துமதம் போதித்தது

ஒரு குடும்பம் செய்யவேண்டிய பெரும் தானம் அன்னதானம், இது இந்துக்களின் வாழ்வியலாய் இருந்தது, பல நுணுக்கங்களை கொண்டிருந்தது

முன்பே சொன்னபடி உடல் என்பது கர்மம் கழிக்க ஆன்மா தங்குமிடம், அந்த உடலுக்கு ஒரு உதவியினை அன்னம் என செய்யும் போது அந்த ஆத்மாவுக்குரிய கர்மாவினை செய்ய உதவி செய்தல் ஆகின்றது

அங்கே கர்மா கழிக்க உதவும் போது உதபுவர் கர்மாவும் கழிகின்றது

இதனாலே அன்னதானம் தானத்தில் சிறந்தது என்றார்கள், இதனால் அன்று பிச்சைக்காரர் இல்லை, வழிபோக்கர்க்கு உணவு விடுதி இல்லை, அடியார்களுக்கு எந்த சிக்கமுமில்லை

எல்லோரும் நலமாய் இருந்தார்கள், அக்காலமும் சமூகமும் அழகாய் பொலிவாய் இருந்தது, எல்லாம் எல்லார்க்கும் கிடைத்தது, பசி ஒழியுமிடம் எல்லா துயரும் ஒழியும்

ஆனால் இன்று எல்லாமே உணவகம் என பணமயம் , வியாபாரம் ஆகிவிட்டதால் எல்லாமே மாறிவிட்டது இந்த அறம் ஒழிந்துவிட்டது கலிகாலத்தின் மிகபெரிய கொடுமை இது

எனினும் அன்னதானம் என்பது எல்லா யுகத்திலும் கர்மம் கழிப்பதும் புண்ணியம் தரும் விஷயமாகவும் இருந்தது , இல்லறத்தில் அன்னதானமிடுதல் நல்ல புண்ணியம் தரும், பெண்மை பெண்ணாக அதர்குரிய இலக்கணத்தில் நின்று கர்மம் செய்வது போதிக்கபட்டது

அகலிகைக்கு பெண்ணுரிமை இல்லையா? அவளுக்கான இன்பத்தை அவள் தேட கூடாதா என பெண்ணிய கேள்விகள் இங்கு எழலாம்

இங்கு சில உரிமைகள் எல்லைக்குட்பட்டவை அந்த எல்லை மீறும் போது அடிப்படை தர்மம், அடிப்படை இயக்கம் குலைகின்றது

பெண் என்பவள் குலம் காக்க, அறம் காக்க படைக்கபட்ட படைப்பு, அவளுக்கு எப்போதும் எல்லா உரிமையும் உண்டு, ஆனால் பெண்ணியம் என அவள் திசைமாறும் போது அவள் சுயநலவாதியாகின்றாள்

சுயநலவாதியாகிவிட்ட பெண் முழுக்க தன் இன்பம், தன் தொழில் , தன் வாழ்வு என தன் ஒருத்தியினை பற்றியே சிந்திக்கின்றாள் அங்கே முழுக்க அவ்ள் பெண்ணியம் சுயநலமாகிவிடுகின்றது

ஒரு ஆண் சுயநலமாய் இருந்தால் கூட பூமி தாங்கும், ஆனால் பெண் ஒருத்தி சுயாலமாய் தனக்கான இன்பத்தில் மட்டும் கருத்தாய் இருந்தால் உலகம் தாங்காது

அங்கே அவளுக்கான அடிப்படை தர்மம் அடிபட்டு போகின்றது, படைக்கபட்ட காரணத்தையே அவள் மறந்துவிடுகின்றாள் அது மிகபெரிய கர்மவினையினை கொண்டுவந்து அவள் பிறப்பும் நாசமாகி அடுத்த பிறப்பும் சிக்கலாகிஅந்த ஆத்மா தீரா துயரில் விழுகின்றது

இதனை தவிர்க்கத்தான் குடும்ப விதிகளுக்கு பெண் கட்டுபட்டு அறகாரியம் செய்து பெரும் நல்ல கர்மவினை சேர்க்க இந்துமதம் வழிகாட்டிற்று

கவுதமர் அகலிகை கதையில் ஆசைக்கு இடம் கொடுத்தல் பெண்ணுக்கு ஆபத்து என்பதை சொல்லி காட்டிற்று

இப்படி ஏகபட்ட தத்துவங்களை ஆன்மீகமாக லவுகீகமாக போதிக்கும் தலம் திருச்சோற்றுதுறை தலம்

அங்கு சென்று வழிபட்டால் ஒரு ஆத்மாவுக்கு முழு திருப்தி முழு நிறைவு கிடைக்கும் , நிறைவுற்ற அந்த ஆத்மா அந்த நிறைவினை இன்னொரு ஆத்மாவுக்கு கொடுக்கும் பகிர்ந்து கொள்ளும்

ஆம் திருச்சோற்றுதுறை நாதர் எல்லோருக்கும் நிறைவு தருவார்

சிவனிடம் இருந்து எல்லாம் பெற்று , எல்லோருக்கும் தானம் செய் என்பதை சொல்லும் தலம் இது, திருமண வீடு என்பது தானமிட்டு தானம் பெறுதல் என்பதை காட்டி, வாழ்வு என்பதும் ஆத்ம ஈடேற்றம் என்பதும் தானம் செய்து தானம் பெற்று உயர்வது என்பதையும் தெளிவாக சொல்லும் தலம் அது

அந்த ஆலயத்தில் சென்று வேண்டுங்கள் , உங்களுக்கு எது நிறைவு தருமோ, எதை நீங்கள் இந்த உலகுக்கு அந்த நிறைவில் தருவீர்களோ, எது உங்கள் கர்மத்தின் நிறைவோ, எது உங்களால் இந்த உலகுக்கு கொடுக்கபட வேண்டுமோ அதை நிரம்ப தரும் ஆலயம் இது

பெரும் குறை வாழ்வில் இருந்தால், தீரா சிக்கல் இருந்தால் , கர்மவினையின் பெரும் தாக்கம் இருந்தால் இந்த ஆலயத்தில் அன்னதானம் செய்யுங்கள், அரிசி அன்னமாக உருமாறுதல் போல, பலர் பசியினை அது போக்குதல் போல அந்நேரம் உங்களிலும் மாற்றம் வரும், எல்லா கர்மவினையும் சரியாகும் உங்கள் வாழ்வும் ஆத்மபடி நிலையும் உருமாறி அடுத்த கட்டத்துக்கு உயரும் இது சத்தியம்

“கோது சாற்றித் திரிவார் அமண்குண்டர்

ஓதும் ஓத்தை யுணரா தெழுநெஞ்சே

நீதி நின்று நினைவார் வேடமாம்

ஆதி சோற்றுத் துறைசென் றடைவோமே.

அந்தண் சோற்றுத் துறைஎம் ஆதியைச்

சிந்தை செய்ம்மின் அடியா ராயினீர்

சந்தம் பரவு ஞான சம்பந்தன்

வந்த வாறே புனைதல் வழிபாடே.”

சப்தஸ்தான ஆலயங்கள் 04 : திருப்பழனம் ஆபத்சகாயர் ஆலயம்.

“மேவித்து நின்று விளைந்தன வெந்துயர் துக்கமெல்லாம்

ஆவித்து நின்று கழிந்தன அல்லல் அவையறுப்பான்

பாவித்த பாவனை நீயறி வாய்பழ னத்தரசே

கூவித்துக் கொள்ளுந் தனையடி யேனைக் குறிக்கொள்வதே”

எனத் தேவாரத்தில் பாடப்பெற்ற தலம் இது. அப்பர், சம்பந்தர் எனப் பலர் வந்து பாடிய தலம் இது. தேவாரம் பாடப்பெற்ற கோவிலில் 50ஆம் ஆலயம் இது.

இந்த ஆலய வரலாறு கௌசிக முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது. கௌசிகர் என்றால் விசுவாமித்திரரின் இயற்பெயர் என்பதால் அவருக்கும் கௌசிக முனி எனப் பெயர் உண்டு.

ஆனால், இந்தக் கௌசிக முனி வேறு, இவர் சப்த ரிஷிகளில் ஒருவராய் காசிபர் வசிஷ்டரோடு வலம் வந்தவர், இவரின் மனைவிதான் அருந்ததி. அனுசூயா போல் போற்றப்படும் கற்புக்கரசி சைபை.

சைபையின் இன்னொரு பெயர் நளாயினி, இந்த நளாயினிதான் கணவனைத் தாசிவீட்டுக்குச் சுமந்து சென்றவள். அப்படிச் சுமக்கபட்டவர்தான் இந்தக் கௌசிக முனி, இவருக்கு மௌத்கல்ய மகரிஷி எனும் பெயரும் உண்டு.

அது அவரின் ஸ்தீரிலோலத்தால் அல்ல, கட்டுக்கடங்காத காமத்தால் அல்ல. ஒருமுறை கற்பரசி யார் எனப் பெரும் போட்டி வந்தபோது நாரதர் இந்த நளாயியினைக் கைகாட்டினார், அவளை மனைவியாக அடைந்தவர் இந்த கௌசிகர். அவள் எப்படியானவள் என்பதை உலகுக்குக் காட்டவே அவர் அப்படி மனைவியினைச் சோதனையில் வைத்தார்.

அந்தச் சோதனையில்தான் மாண்டவ்ய முனிவரின் சாபத்தில் சிக்கினாள் நளாயினி. அந்தச் சாபம் சூரியன் உதிக்கும் போது கணவன் இருக்கமாட்டான் என்பது. நளாயினியின் கற்பு உண்மையானால் சூரியன் நான் சொல்லும் வரை உதிக்கக் கூடாது என அனுசூயா கட்டளையிட 10 நாட்களாக சூரியன் உதிக்கவில்லை.

அதன்பின் தேவர்களெல்லாம் வந்து நளாயினியின் பரிசுத்தமான பதிவிரதை தன்மையினை வணங்கி அவள் உலக உத்தமி எனக் கௌசிகரிடம் ஒப்புக்கொண்டனர்.

அப்படிக் கணவனுக்காக எதையும் செய்யத்துணிந்து சூரியனையே உதிக்காமல் செய்த மனைவியினைப் பெற்றவர் இந்தக் கௌசிகர்.

இவர் மாபெரும் மகரிஷி. ஆனால், மக்கள்மேல் மகா அன்பு கொண்டவர். பாற்கடல் கடைந்து அமிர்தம் வந்தபோது தேவர்களும் மகரிரிஷிகளுக்குமே பங்கிட்டு கொடுக்கபட்டது, மானுடர்க்கு இல்லை.

பூலோகத்துக்கு அமிர்தம் வரவில்லை.

பூலோக மக்களும் நல்ல பலன் பெறவேண்டும் பூமிக்கும் அமிர்தம் வேண்டும் எனத் தனக்கு கொடுக்கப்பட்ட அமிர்தத்தை இந்தத் தலத்துக்கு கொண்டுவந்தார் கௌசிகர். அதனைத் தேடி அசுரர்கள் வந்தார்கள். அந்த அசுரர்களைச் சிவன் ஐயனார் காளி என்பவரைக் கொண்டு அழித்துப்போட்டார்.

பின் நாரத முனியின் ஆலோசனைப்படி அந்த அமிர்தம் கொண்டு சிவனுக்கு அபிஷேகம் செய்தார். அதாவது, அமிர்தத்தால் அபிஷேகம் செய்யப்பட்ட இந்தச் சிவனை தரிசிக்கும் எல்லோரும் அமிர்தம் உண்ட பலனைப் பெறுவார்கள் என நாரதர் உரைக்க அந்தக் காரியத்தை முனிவர் செய்தார்.

அன்றிலிருந்து இந்த லிங்கம் “அமிர்த லிங்கம்” என்றாயிற்று. இதிலிருந்துதான் இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது.

இந்த ஆலயத்தின் இன்னொரு பெரும் சாட்சி சுசரிதன் எனும் சிறுவன். அவன் பெற்றோரை இழந்தவன். சிறுவயதிலே சிவாலயம் தோறும் சென்று தொழுது கிடைத்ததை உண்டுவாழ்ந்து வந்தான். அப்படியானவன் கனவில் வந்த எமன் “இன்னும் ஐந்து நாட்களில் நீ இறப்பாய், என்னிடமிருந்து தப்பமுடியாது” என மிரட்டினான்.

அஞ்சிய சிறுவன் இந்த அமிர்த லிங்கத்தை திருப்பழனத்தில் சரணடைந்தான். சிவன் அவனுக்குத் திருவையாற்றில் சென்று வழிபடச் சொன்னார். அப்படியே அவன் திருவையாறு சென்றான். அவனை அங்கு ஆட்கொண்ட சிவன் பெரும் ஞானம் அளித்து பெரும் நிலைக்கு உயர்த்தி எமனை விரட்டி ஆட்கொண்டார்.

அவர் ஆட்கொண்டேஸ்வரர் எனத் திருவையாற்று சன்னதியில் இன்றும் உண்டு.

அப்படி அவனுக்கு உரிய நேரம் ஆபத்தில் உதவியதால் இந்தச் சிவன் “ஆபத்சகாயர்” எனப் பெயர்பெற்றார்.

இந்த ஆலயத்தில் அப்பர் சுவாமிகள் தங்கி வழிபடும் போதுதான் அப்பூதி அடிகளார் தன் பெயரில் செய்த அத்தனை திருப்பணிகளையும் கேட்டு அவரைக் காணச் சென்றார்.

இப்படிப் பல சிறப்புகளைப் பெற்ற ஆலயம் இது. நந்திக்கு திருமழப்பாடியில் திருமணம் நடந்தபோது வாழை கனியும், மரமும் இலையும் இன்னும் தோரண வாழைகளும் இங்கிருந்துதான் சென்றன‌.

அந்த ஊர் அப்படி வாழைமரங்கள் நிரம்பியது “கதலிவனம்” என அதற்குப் பெயர். நந்தி திருமணத்துக்குப் பழம் கொடுத்ததால் இது “திருப்பழனம்” என்றுமாயிற்று.

கௌசிக முனிவர் நளாயினியுடன் தங்கி இருந்து சிவனை வழிபட்ட இடம் இதுதான்.

இந்த ஆலயத்தில் பங்குனி புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா வெளிச்சம் சுவாமியின் மேல்படுகிறது.

இக்காலகட்டங்களில் சூரியனின் நகர்வை பொறுத்து சந்திரனின் நகர்வும் மாறிவருவதை அறிந்து செய்யப்பட்ட ஏற்பாடு இது. அதாவது. தட்சாயணம் உத்ராயணம் என ஊசல் போல் அங்குமிங்கும் நகரும் சூரியன் இந்தக் காலகட்டங்களில் நடு புள்ளிக்கு வரும்.

அதற்கு ஏற்ப நிலாவின் அசைவும் இருக்கும் அதை கணித்து செய்யப்பட்ட ஞானமான ஏற்பாடு இது.

இங்கு அம்பாள் பெரியநாயகி. ஆபத்சகாயர் சன்னிதிக்குச் சற்று முன்பாகவே சிறிய மண்டபத்தில் இந்நாயகி அருள் பாலிக்கிறார்.

இந்த ஆலயத்துக்கு பழமையான இராஜகோபுரம் மூன்று நிலைகளையுடையது. கொடிமரம் இல்லை. இங்கு பலிபீடம் நந்தி உண்டு.

வெளிச்சுற்றில் விநாயகர் சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளது.

முன் மண்டபத்தில் விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடப்பக்கம் பிரகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும் பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராஜர் சபையும், பைரவர், நவக்கிரகமும் உண்டு.

கோஷ்ட மூர்த்தங்களில் மேல் தளத்தில் கிழக்கே சிவன் மற்றும் பார்வதி நின்ற நிலையிலும், தெற்கே வீணாதர தக்ஷிணாமூர்த்தி நின்ற நிலையிலும் மேற்கு திசையில் அண்ணாமலையார் நின்ற நிலையிலும் வடக்கே பிரம்மா நின்ற நிலையிலும் உள்ளனர்.

அர்த்த மண்டபத்தில் தென்திசை நோக்கி அதிகார நந்தி கூப்பிய கரத்துடன் உடைவாளுடன் உள்ளார்.

சுவாமி சன்னிதிக்குப் பின்புறம் பிரகாரத்தில் சுப்பிரமணியர் இருக்கவேண்டிய இடத்தில் வேணுகோபாலர் குழலுடன் இருக்கிறார்.

இங்குச் சந்திரன், குபேரன், விஷ்ணு, லட்சுமி ஆகியோர் வழிபட்டதலம் இது. இன்னும் பல ரிஷிகளும் தேவர்களும் வந்து வழிபட்ட இடம் இது. அமிர்தம் களவாட வந்த அசுரர்கள் தோற்று ஓடிய இடமும் இதுதான்.

பசுக்களுக்கு உணவளிக்காமல் தன் குருவிடம் சிக்கிய தர்மசர்மா எனும் அந்தணன் நா(யா)க போகும்படி சாபம்பெற்றான், அவன் மீண்டும் தன் உருவம் பெற்ற தலம் இதுதான்.

பெருமாளும் மகாலட்சுமியும் வந்து வழிபட்டு நலம்பெற்ற தலம் என்பதால் இதனை “ஸ்ரீபிரஸ்தானபுரி” என்றும் அழைப்பார்கள்.

ஆதித்த சோழன் முதல் இராஜராஜ சோழன் வரை ஏகப்பட்ட சோழமன்னர்கள் திருப்பணி செய்த தலம் இது. பின் நாயக்கர்களும் செய்திருக்கின்றார்கள்.

இங்கிருக்கும் தட்சணாமூர்த்தி வித்தியாசமானவர். காண்போரை வசீகரிப்பவர். அங்கே சனகாதியருக்குப் பதிலாக சப்த ரிஷிகள் வரிசையாக அமர்ந்து தவத்தில் ஆழும் கோலம் அழகானது.

அதன் அருகே பசு லிங்கத்திற்கு பால் சொரியும் புடைப்புச் சிற்பமும், பசுவின் அருகே முனிவர் கண் மூடி அமர்ந்து தவம் புரியும் காட்சியும் அழகானது.

அப்பூதி அடிகளார் அப்பர் முன் நிற்கும் சிறபமும், இன்னும் அஷ்டதிக் பாலகர்களோடு நின்று விஷ்ணு சிவனை வணங்கும் காட்சி அபூர்வமனது.

உட்பிராகாரத்திற்குள்ளேயே அம்பாள் கல்யாணி திருமண கோலத்தில் காட்சி தருகிறாள். அதுவும் ஆவுடையாரின் மீது நின்ற கோலம் பார்ப்பதற்கு அபூர்வமானது. அதே நேரம் தனிச் சந்நதியிலும் இத்தலத்தின் மூலநாயகி வீற்றிருக்கிறாள்.

இந்த ஆலயத்தின் தலவிருட்சம் வாழைமரம் என்றும், இது நந்தி திருமணத்துக்கு வாழைப்பழம் கொடுத்தது எனும் வகையிலும் பல தத்துவங்களைப் போதிக்கின்றது.

அப்படியே கௌசிகர் நளாயினி வாழ்வு நிறைய தத்துவங்களைப் போதிக்கின்றது.

அதாவது, ஒரு இல்லறம் என்பது பெண்ணின் கையில் உள்ளது. அவள் தன் கணவனை எப்படிப் போற்றிக் கொண்டாடுகின்றாள் எவ்வளவுக்கு பொறுப்பு எடுத்து குடும்பமே கர்மா, கணவனே தெய்வம் எனக் கொண்டாடுகின்றாள் என்பதை பொறுத்து அந்த வீடு வாழும்.

நளாயினி சோதிக்கப்பட்டாள். அந்தச் சோதனையில் தேவலோகமே வந்து அவள் கற்பரசி எனச் சாட்சி சொன்னது. அருமையான மனைவியினைப் பெற்ற கௌசிக முனிவர் அவள் பலத்தில் சப்த ரிஷி என்றானார்.

நல்ல மனைவியினை அடைவது வரம் அதனை இந்த ஆலயம் வழங்கும்.

கௌசிகமுனி தான் பெற்ற அமிர்தத்தை மக்களுக்கு கொடுக்க முனைந்தார், மக்கள் மேல் பெரும் அன்புடன் அதை அள்ளிக் கொடுக்க முயன்றார். பின் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து, மக்கள் நல்வரம் பெற அதனை “அமிர்த லிங்கம்” என ஸ்தாபித்தார்.

இந்த தன்னலமற்ற அன்புதான், தன்னலமற்ற தியாகம்தான் வாழை என அந்த மரத்தோடு தொடர்புபட்டது.

வாழையின் ஒவ்வொரு பாகமும் பயன்படும், தான் வளர வளர இலையாக இன்னும் பலவாக பலன் கொடுத்துவரும் வாழை ஒரு கட்டத்தில் பக்ககன்றுகள் வளரும் போது அது தன் வாரிசுகளை விட்டுவிட்டு தான் குலைதள்ளி எல்லோருக்கும் கனிகொடுத்துவிட்டு மடியும்.

ஒரு மனிதன் தன் காலமெல்லாம் பிறர்க்கு பலன் கொடுத்து வாழவேண்டும். தன் சந்ததிகளையும் பலன் கொடுக்கும்படி உருவாக்க வேண்டும், அவன் முக்தி எனும் கனியினை அடையவேண்டும், கனிந்த ஞானப் பெருநிலையோடு அவன் இறைவனில் கலக்க வேண்டும், அவனின் அந்திம கால பெருஞான நிலை எல்லா மக்களுக்கும் ஞானப்பசி போக்கும் கனியாய் இருத்தல் வேண்டும் என்பதைச் சொல்லும் தத்துவம் வாழை தத்துவம்.

இதனாலேதான் இந்துக்களின் மணவிழாவில் வாழை தனி இடம் பெற்றது, வரவேற்பு முதல் பந்திவரை அது கட்டாயம் இருந்தது.

ஒரு மனிதன் தனக்காக அல்லாமல் எல்லா மக்களுக்குமான பெருவாழ்வு தியாக வாழ்வு வாழவேண்டும் என்பதை சொல்லும் தத்துவத்தை இந்த திருப்பழனம் போதிக்கின்றது.

நந்தி திருமணத்துக்கு இங்கிருந்து வாழைக்கனி சென்றது என ஒருவரியில் கடந்துவிடும் தத்துமல்ல இது.

இது ஒரு குடும்பம் எப்படி வாழையடி வாழையாக தழைத்து வாழும்போதும் வாழ்வு முடியும் போதும் பிறர்க்கு பெரும் பயன் கொடுத்து வாழ்தல் வேண்டும் என்பதைப் போதிப்பது.

அதனாலே பூமிக்கு அமிர்தம் வேண்டும் எனும் கௌசிக முனிவரையும் அவருக்கே பதிவிரதையாய் வாழ்ந்து அவரின் எல்லாக் கர்மாவிலும் உடன் இருந்த, எல்லாத் தியாகத்திலும் உடன் இருந்த நளாயினையினையும் அங்கே காட்சிக்கு வைத்தது இந்த ஆலயம்.

அப்பூதி அடிகள் தன் வாழ்வினைச் சிவனடியாராக பிறர்க்கு வாழ்ந்தவர், அன்னதானம் தண்ணீர்பந்தல் என எல்லாமும் அவர் மக்களுக்காக செய்தார். அதனை தன் குரு அப்பர் சுவாமிகள் பெயரில் செய்தார்.

பின்னாளில் அவருக்குப் பெரும் ஆபத்துவரும் போது சிவன் அவரைக் காத்தார்.

இங்கு அந்தச் சிறுவன் முதல் அப்பூதி அடிகள் மகன் வரை எமனிடம் இருந்து தப்பிய கதையும் நோக்க வேண்டும், அது தர்மம் செய்வோர் குடும்பத்தை தன்னை அண்டிய குடும்பத்தை சிவன் காப்பார் என்பது.

திருப்பழனம் ஆலயம் அந்த வரத்தை தரும்.

இந்த ஆலயத்தில் ஞானம் தேடுவோர் வணங்கினால் வாழைக் குலை தள்ளுதல் போல பெரும் ஞானம் அவர்களுக்கு வாய்க்கும். அவர்கள் இறைநிலை அடைந்து அந்த ஞானமிர்தத்தை எல்லோருக்கும் வழங்குவார்கள்.

திருமணத்துக்குக் காத்திருப்போர் இங்கு வணங்கினால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும்.

அங்கு சந்திர சூரிய இயக்கம் துல்லியமாக காட்டபடுவதும் தத்துவமே, கணவன் மனைவி புரிதலும் அவர்கள் நகர்வும் எவ்வளவுக்கு ஒருவரை ஒரு புரிந்து சரியாக நடக்க வேண்டும் என்பதை அழகுற சொல்கின்றது

தம்பதிகள் இங்கு வணங்கினால் இல்லறம் சிறக்கும். ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து உலகுக்கே வழிகாட்டும் தம்பதியராய் வாழ்வார்கள். அங்குச் சோதனை வந்தாலும் பின்னாளில் அது அவர்களின் உன்னத வாழ்வை சிறப்பினை உலகுக்குச் சொல்வதாக அமையும்.

நல்ல சந்ததிகளைத் தரும் ஆலயம் இது, பிள்ளைவரம் கட்டாயம் உண்டு.

யாராக இருந்தாலும் இங்கு வணங்கினால் அமிர்த லிங்கம் அவர்களுக்கு நல்வாழ்வை ஆரோக்கிய வாழ்வினை நீண்ட நிம்மதியான வாழ்வினைத் தருவார்.

இந்த ஆலயம் வாழைபோல் எல்லோருக்கும் பயனுள்ள வாழ்வைத் தரும் ஆலயம் இது. இங்கு வணங்கினால் ஒரு குடும்பம் தானும் வாழ்ந்து நன்னிலை அடைந்து வாழையடி வாழையாக பெரும் வாழ்வினை உலகம் பயனுற வாழும்.

இந்த ஆலயத்துக்குச் செல்லும் போது ஒரு வாழைக்குலையினை வைத்து வேண்டுங்கள். நல்ல வாழைத் தாரினை வைத்து அந்த ஆபத்சகாயரிடம் வேண்டுங்கள். அந்த அமிர்த லிங்கம் உங்கள் எல்லாப் பிரச்சினை தடைகள் எல்லாம் தீர்த்து, எல்லாச் சாபமும் மாற்றி வாழையடி வாழையாக உங்களை வம்சம் வம்சமாக வாழவைப்பார்.

குடும்ப பிரச்சினைகள் அதிகமாய் இருந்தால் ஒரு வாழைக்குலையுடன் சென்று சுத்தமான நெய்யில் விளக்கேற்றி இந்தச் சிவனிடம் முறையிடுங்கள். அந்தச் சிவன் எல்லாத் தடையும் நீக்கி உங்கள் குலம் வாழ வைப்பார், வாழை கன்றுபோல் வாழவைப்பார், வம்சம் வம்சமாக வாழவைப்பார். இது சத்தியம்

சப்தஸ்தான ஆலயங்கள் 05 : திருப்பூந்துருத்தி புஷ்பவனேஸ்வரர் ஆலயம்.

“நில்லாத நீர்சடைமேல் நிற்பித் தானை

நினையாவென் நெஞ்சை நினைவித் தானைக்

கல்லா தனவெல்லாங் கற்பித் தானைக்

காணா தனவெல்லாங் காட்டி னானைச்

சொல்லா தனவெல்லாஞ் சொல்லி யென்னைத்

தொடர்ந்திங் கடியேனை யாளாக் கொண்டு

பொல்லாவென் நேர்ய்தீர்த்த புனிதன் தன்னைப்

புண்ணியனைப் பூந்துருத்திக் கண்டேன் நானே”

எனத் தேவாரத்தில் சொல்லப்பட்ட தலம் இது.

தஞ்சாவூரில் இருந்து 10 கல் தொலைவில் உள்ள ஆலயம் இந்தத் திருப்பூந்துருத்தி. காவேரி, குடமுருட்டி என இரு ஆறுகளுக்கு இடையில் இந்த இடம் மேடாக துருத்திக்கொண்டிருப்பதால் இப்பெயர் வந்தது.

இந்த ஆலயத்தின் வரலாறு சப்தரிஷிகளில் ஒருவரான காசிப முனிவர் காலத்தில் இருந்து தொடங்குகின்றது. சப்த ரிஷிகளில் ஒருவரான அவர் இங்குதான் ஆசிரமம் அமைத்துத் தங்கி வழிபட்டு வந்தார்.

அவருக்குப் பதிமூன்று புண்ணிய தீர்த்தங்களில் நீராடும் ஆசை இருந்தது. ஆனால், இவை எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்க வேண்டும் எனத் தவமிருந்தார். அவரின் தவத்துக்கு சிவன் இறங்கினார்.

அதன்படி இந்தப் பதிமூன்று புண்ணிய தீர்த்தங்களும் ஒரே இடமாக இந்த ஆலய தீர்தத்தில் கிடைத்தது. ஆடி அமாவாசை அன்று இங்கு அவருக்காக தீர்த்தம் சிவனருளால் பொங்கிற்று, அந்தத் தீர்த்தம் இன்றும் அங்கு காசிப தீர்த்தமாக உண்டு.

காசிப முனிவர் என்பவர் பிரஜாபதிகளில் ஒருவர். அவரின் குலமே மானுட குலத்திற்கு முன்னோர்கள்.

மானுட குலம் மட்டுமல்ல அசுர குலம், தேவர் குலம், நாக குலம் என எல்லாமே அவரில் இருந்து உருவானது. சூரபத்மன், இரணியன் என எல்லாரும் அவர் குலமே, மானுடர்க்கு காசிப கோத்ரம் முக்கியமானது.

அதாவது குல முதல்வர் அவர்தான்.

இப்படிப்பட்ட முனிவர் வணங்கி தீர்த்தம் பெற்ற தலமிது. இந்திரன் கௌதமரின் சாபத்தால் தன் உடலெல்லாம் கண்ணாக மாறி அவமானப்பட்ட சாபம் இங்குதான் தீர்ந்தது. பூக்களை இட்டு அந்தச் சிவனை வணங்க அவனுக்கு நலம் கிடைத்தது.

இந்திரனைத் தொடர்ந்து எல்லாத் தேவர்களும் இங்கு வந்து மலர்கள் இட்டு சிவனை வணங்கி நலம் பெற்றார்கள். சாபம் தீர்த்தார்கள். அப்படி மலர்களால் வணங்கப்பட்ட சிவன் புஷ்பவனேஸ்வரர் என்றானார்.

இந்த ஆலயத்தில் அப்பர் பெருமான் நந்தவனம் அமைத்துப் பணி செய்தார். கயிலாயம் காணச் சென்ற அவர் திருவையாற்று குளத்தில் இருந்து வெளிவந்தபின் இங்குதான் சிவனைப் பாடி திருப்பணி செய்து தங்கியிருந்தார். அவரின் மடம் அங்கு அமைந்திருந்தது.

மதுரைச் சென்று சமணரை வீழ்த்தி திரும்பிய சம்பந்த பெருமானைப் பல்லக்கில் சுமந்த அப்பர் அவரைச் சந்தித்தது இங்குதான்.

அப்பர் சுவாமிகளின் பாதம்பட்ட மகா புனிதமான கோவிலுக்குள் என் பாதம் பதிக்கமாட்டேன் என சம்பந்த பெருமான் வெளியில் இருந்து சிவனை நோக்க அப்போது நந்தி விலகி நின்றது.

சம்பந்தருக்காக விலகிய நந்தி இன்னும் அப்படியே அங்கு நிலை கொண்டிருக்கின்றது.

சம்பந்தர், அப்பர் என இருவர் வாழ்விலும் மிக மிகப் பெரிய தாக்கம் கொடுத்த இந்த ஆலயம் தேவாரம் பாடப்பட்ட தலமாகவும் உண்டு.

ஒன்பதாம் திருமுறையில் திருவிசைப்பா பாடிய காடவன் நம்பி இங்குதான் அவதரித்தார்.

இந்த ஆலயத்தில்தான் தேவர்கள் பலரும் இந்தப் பிரபஞ்சத்தின் நாத ஒலி எப்படி ஒலிக்கும் எனக் கேட்டபோது தட்சிணாமூர்த்தி வீணையுடன் வந்து அந்த நாதத்தை எல்லோருக்கும் ஒலிக்கும்படி செய்தார்.

இதனாலே அவர் வீணையுடன் இப்போதும் காட்சியளிகின்றார், தட்சணாமூர்த்தி வீணையுடன் காட்சியளிக்கும் ஒரே தலம் இதுதான்.

இப்படிப் பெரும் ஆச்சரியமான பின்னணியும் இன்னும் மிக மிகத் தொன்மையான இந்தத் தலத்தில் இருந்துதான் நந்தி திருமணத்துக்கு பூக்கள் அனுப்பப்பட்டன, எல்லா வகை மலர்களும் இங்கிருந்தான் அனுப்பப்பட்டன‌.

நந்தி தன் திருமணம் முடிந்து வந்து வழிபட்ட ஏழுதலங்களில் இதுவும் ஒன்று. இந்தப் புஷ்பவனேஸ்வரர் தன் திருமணத்துக்கு மலர்கள் தந்ததால் அவருக்கு நன்றி சொல்ல வந்து நந்தி பணிந்த தலம் இது.

இந்த ஆலயம் மலர்களின் தத்துவத்தை குறிக்கும் ஞானத் தாத்பரிய ஆலயம். இந்துக்களின் வழிபாட்டில் தீபம், தூபம், புஷ்பம் என மூன்றும் முக்கியமானது.

பூ என்பது இல்லாமல் பூஜை இல்லை என்பது எல்லா இந்துக்களும் அறிந்த ஒன்று, பூவின் முக்கியத்தும் கொண்டதே பூஜை, பூஜித்தல் என்பதே பூவினை அடிப்படையாகக் கொண்டது.

சிவனின் சன்னதியில் பஞ்சபூதங்களைக் குறிக்கும் ஐந்து பொருட்கள் கட்டாயம் இருந்தாகவேண்டும் என்பது விதி.

நெருப்பு தத்துவத்தின் தீபம், வாயு தத்துவத்தின் தூபம், நில தத்துவத்தை குறிக்கும் சந்தனம், நீர் தத்துமான நீர் மற்றும் ஆகாய தத்துவத்தைக் குறிக்கும் பூ எனும் ஐந்தும் மகா அவசியம்.

பூக்கள் வழிபாட்டில் எவ்வளவு முக்கியம் என்பதை எறிபத்த நாயனார் வரலாற்றிலும், செருதுணை நாயனார் வரலாற்றிலும் நிறைய பார்த்திருக்கின்றோம். இப்பொழுதும் அதைச் சற்று நினைவுப்படுத்தி கொள்ளலாம்.

பூ என்பது வெறும் நறுமணத்துகானது எனச் சொல்லிவிட்டு நகரமுடியாதபடி சூட்சும விஷயங்கள் ஏராளம் கொண்டது பூ அலங்கார ஏற்பாடு.

முதலில் இதற்கான தொடக்கத்தில் இருந்து அந்த ஏற்பாட்டின் மூலத்தை நோக்க வேண்டும்.

இந்துமரபில் தாவரங்களுக்குத் தனி இடம் உண்டு. தரையில் வேரூன்றி மண்ணில் இருந்து நீரினால் சக்தி எடுத்து ஆகாயம் நோக்கி வளரும் மரங்களும் செடிகளும் கொடிகளும் பிரபஞ்ச சக்தியினை அதிகம் ஈர்ப்பவை.

அதுவும் குறிப்பிட்ட மரங்களுக்கு அந்தச் சக்தி மிக அதிகம்.

இதனாலே மகான்களும் ரிஷிகளும் குறிப்பிட்ட மரத்தின் அடியில் அமர்ந்திருப்பார்கள். அங்கே ஞானமும் பெற்றிருப்பார்கள்.

மக்கள் மரத்தின் அருகாமையில் வரும் பொருட்டே ஆலயங்களை அங்கே தொடங்கினார்கள், மரத்தை சுற்றி வந்து வழிபட வழிவகைகளையும் செய்தார்கள்.

மரத்தைச் சுற்றி வரவேண்டும் என்பதற்காக அதன் அடியில் தெய்வ விக்ரகங்களை வைத்து அதன்மேல் நம்பிக்கை கொண்டு மக்கள் சுற்றிவர மிக ஞானமான ஏற்பாடுகளைச் செய்தார்கள்.

ஒவ்வொரு ஆலயத்திலும் தல விருட்சம் என ஒன்றை வைத்தார்களே ஏன்? அதைச் சுற்றி சுற்றி வழிபட சொன்னார்களே ஏன்? இதனாலே.

வேப்பமரம், அரசமரம் முதல் பல மரங்கள் ஒவ்வொரு ஆலயத்திலும் கட்டாயம் இருந்தாக வேண்டும் என்ற தத்துவம் இதனாலே. ஆம். மரங்களுக்குப் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் சக்தி உண்டு.

கொடிமரம் என்பதே முன்பு ஒரு மரமாகத்தான் இருந்தது, அதன் உச்சியில் ஆலயக்கொடியினை கட்டி வைத்தார்கள், பின்பே கம்பம் நடும் முறை வந்தது. ஆயினும் அப்பெயர் கொடிமரம் என நிலைத்துவிட்டது.

ஆம். மரங்கள் முதலான தாவரவகைகள் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்கும் எனும் அதி உன்னத ரகசியம் அன்றைய ஞான சமூகத்துக்குத் தெரிந்ததால் அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தார்கள்.

கொடிமரம் முதல் ஆலய தலவிருட்சம் என மரத்தடியில்தான் வேண்டுதலை வைக்க வேண்டும் என்ற ஐதீகமும் நம்பிக்கையும் இன்றளவும் உண்டு.

அது பிரபஞ்ச இறைசக்திக்கு இம்மரங்களே பிரார்த்தனையினைக் கொண்டு செல்லும் எனும் நம்பிக்கையின் வடிவம் அன்றி வேறல்ல‌.

பிள்ளையார் முதல் அம்மன், சாஸ்தா வரை மரத்தடியில் இருக்கும் காரணம் இதுதான். மரத்தின் அருகே நின்று பிரார்த்தித்தலும், அப்படியே ஆகமவிதி அடங்கிய கர்ப்பகிரக வாசலில் நின்று பிரார்த்திப்பதும் இறைசக்தி எனும் பிரபஞ்ச சக்திபெறும் எளியவழிகள் என அக்கால மகான்கள் தங்கள் ஞானத்தால் சொல்லி வைத்தார்கள்.

இதில் சக்தி மிக்க மரங்கள், செடிகள், கொடிகள், நீரில் வளரும் தாவரங்கள் என ஒவ்வொன்றாய் அடையாளம் கண்டு எதெல்லாம் பிரபஞ்ச சக்தியினை ஈர்க்குமோ அவற்றின் மலர்களை இறைவனுக்குப் படைக்கச் சொன்னார்கள்.

தாவரங்களின் பூக்கள் மட்டுமல்ல, அவற்றின் இலைகளும் விதைகளும் விளைச்சலும் சக்தி ஈர்ப்பு பொருளாய் விளங்கின‌.

வில்வம் முதல் எருக்கு வரை 27 இலைகளை வழிபாட்டுக்கு உரியது எனச் சொன்னார்கள், இது போக எந்தெந்த பழங்களைப் படைக்கலாம் எனப் பட்டியலிட்டார்கள்.

இன்னும் ஆழமாகச் சென்று தானியங்களை நைவேத்தியம் என்றும் கோபுர கலசத்தின் சக்தி பொருட்களாகவும் வைத்தார்கள்.

கழுத்தில் போடும் ருத்ராக்ஷம், துளசிமணி, தாமரை மணி மாலை வரை எல்லாம் தாவர வகைகளே.

ஆம். தாவரங்களும் அவை கொடுக்கும் சக்திகளையும் மிக அழகாகத் தெரிந்து அவற்றைப் பூஜையில் சரியாகப் பயன்படுத்தி பலன்பெற வழிசெய்த மதம் இந்துமதம்.

இதனால் மரங்களும் நந்தவனங்களும் செடிகளும் குளங்களில் செடிகளும் இந்து ஆலயங்களைச் சுற்றி இருந்தன. இது பௌதீக முறையில் குளிர்ச்சியினைக் கொடுத்ததுமன்றி சூட்சும முறையிலும் பல விஷயங்களைச் செய்தன.

ஆம். கர்ப்பகிரகம் என்பது தெய்வத்தின் தனிப்பெரும் சக்தி நிரம்பும் இடமாக பிரபஞ்ச சக்தி ததும்பும் இடமாக பல நுணுக்கமான விஷயங்களால் ஏற்படுத்தப்பட்ட ஒன்று.

அந்தக் கர்ப்பகிரகத்திற்கு ஒரு பக்தன் தன் வேண்டுதலை மலர் மூலமாக சொல்லவேண்டும் என்றார்கள் ரிஷிகள். ஆம். மலர்கள் தாவரங்களின் மொத்த தன்மையினையும் கொண்டிருப்பதால் அவற்றுக்கு பிரார்த்தனைகளை ஏந்திச் செல்லும் சக்தி உண்டு.

மனதின் அதிர்வுகளும் அலைகளும் யாராலும் காணமுடியாதவை. சூட்சுமமானவை. அதைச் சம்பந்தப்பட்ட ஒருவன் மட்டுமே உணரமுடியும்.

அப்படியே மலரின் வாசனையும் சூட்சுமமானது உயிர்சக்தி கொண்ட நாசி மட்டுமே உணரமுடியும் ஒருவிதமான சக்தி வடிவம் அது.

அந்த மலரே பக்தனின் எண்ணத்தை தன்னில் எடுத்துக் கர்ப்பகிரகத்தில் சேர்க்கின்றது. இதனால்தான் மலர் கொண்டு ஆலயம் செல்லவேண்டும் என்றார்கள். மலர் தூவி இறைவனை வணங்க வேண்டும் என்றார்கள் மூதாதையரான ஞானியர்கள்.

அப்படியே கர்ப்பகிரகத்தில் இருந்து எடுக்கப்படும் மலர்கள் பிரபஞ்ச சக்தியினைத் திரும்பக் கொண்டுவரும்.

இதையே பிரசாதம் எனச் சொல்லி கண்களிலும் முகத்திலும் ஒற்றிக்கொள்ள செய்து தலையில் சூடச் சொன்னார்கள். ஆம். அதில் பல நற்சக்திகள் இறங்கிவரும்.

இதனாலே கோவிலில் தெய்வத்துக்கு சாற்றிய பூவை கீழே வீசக்கூடாது என்றார்கள், கோவிலின் பூ வீட்டில் வைக்கப்பட்டது இதனாலே.

கருகிவிட்ட மலர்களைக் கூட ஆற்றில்தான் போட வற்புறுத்தினார்கள். யார்காலிலும் அது மிதிபடக் கூடாது என்பதில் கவனமாய் இருந்தார்கள்.

தெய்வத்துக்கு மட்டுமா மாலையிட்டார்கள்?

அரசனையும் உயர்ந்தோரையும் காணும் பொழுதும் மாலையோடும் பூக்களோடும் சென்றார்கள். பூக்கள் உளவியல் ரீதியாக தங்கள் கோரிக்கைகளைக் கொண்டு செல்லும் என்ற தத்துவம் இருந்தது.

மணமக்களை மாலைமாற்ற சொன்னார்களே ஏன்? ஆணும் பெண்ணும் தங்கள் மனதின் ஓட்டங்களை மாற்றி கொள்கின்றார்கள் என்பதை குறிப்பால் சொன்னார்கள், கையில் மலர் ஏந்தி தன் இணைக்கு மாலையிடுவது தன் மனதினை கொடுப்பது என்பதைச் செய்தார்கள்.

மணம் செய்விக்கப்பட்டது என அந்த மாலைமாற்றல் நிகழ்வே திருமணம் என்றாயிற்று. ஆம். மணம் மிக்க மலர்களை தங்கள் மனதின் சிந்தனையில் நனைத்துப் பரிமாறும் ஏற்பாடாகவே அது இருந்தது.

இன்றும் காதலை வெளிபடுத்த பூ கொடுப்பது இதன் தத்துவமே.

(அமங்கல காரியங்களில் கூட மலர் பயன்படும், துக்கத்தால் நிரம்பிய இதய வலிகளை மனதின் குமுறலை அந்த மலர் ஏந்தி செல்லும் ஏற்பாடு. )

எங்கெல்லாம் மனம் சம்பந்தபட்ட வாழ்த்தும் பிரார்த்தனையும் கோரிக்கையும் உண்டோ அங்கெல்லாம் மலரை முன்னுறுத்தினார்கள் முன்னோர்கள்.

இதனாலே வழிபாட்டில் பூ என்பது மிக மிக இன்றிமையாததாகவும் தவிர்க்க முடியாததாகவும் இருந்தது.

பூ என்பது முதிர்ச்சியினைக் குறிப்பது. வாசனை மிக்க மலர்களில் பூக்கள் காய்ப்பதில்லை. அந்த செடியின் அல்லது மலரின் ஆகச் சிறந்த முதிர்ச்சியே அந்த மலர்கள்.

இதனாலே அந்தப் பக்குவ நிலையே நம் ஆன்மாவும் அடைந்திருக்கின்றது என்பதாகவும் மலர்ந்த மலர்கள் இறைவனை அடைவது போல ஆன்மா இறைவனை அடையவேண்டும் எனும் தத்துவக் குறியீடும் அதில் இருந்தது.

பூ என்பது பக்குவப்பட்ட நிலை, பக்குவமான ஆன்மாவினை அது குறிப்பால் சொல்லிற்று.

இறைவனுக்கு பூஜைக்கு பயன்பட சில மலர்களை இந்துமதம் அனுமதித்தது. அவற்றின் தன்மை. மணம் சூட்சும சக்தியின் ஈர்ப்புத் தன்மை என்பதைக் கொண்டு அவை வகைப்படுத்தப்பட்டன‌.

மலர்களைக் கொய்து சாற்றுவதில் உடல்நலமும் மனநலமும் இன்னும் பலவும் காக்கப்பட்டது.

மணம் என்பது கண்ணுக்குத் தெரியாதே அன்றி அதன் விளைவுகள் மானிட மனதிலும் குணத்திலும் பலத்த விளைவுகளை ஏற்படுத்தும்.

விஷக்காற்றும் மணமும் உயிரைக் கொல்லும் அளவு ஆபத்தானவை. சிலவகை மணங்கள் எரிச்சலும் குழப்ப உணர்வையும் கொடுக்கக் கூடியவை.

சில உள்ளுறுப்புகளுக்கு ஆபத்தை விளைவிப்பவை, இரத்த ஓட்டத்தில் மாறுபாட்டை செய்து பல குழப்பங்களுக்கு வழி கோலுபவை.

இதனால் மனித மனதுக்குப் புத்துணர்ச்சியும் நல் பயன்களும் நல்ல ஹார்மோன்களை உற்பத்தி செய்யும் மணங்களைக் கொடுக்கும் பூக்களையுமே அந்த ஞானசமூகமான இந்து சமூகம் அங்கீகரித்திருந்தது.

எல்லாத் தாவரங்களும் பிரபஞ்ச சக்தியினை ஈர்ப்பவை என்றாலும் சில வகை பூக்களே மானிடனுக்கு நன்மை செய்வது என்பதையும் இறைவனின் கர்ப்பகிரகத்துக்குப் பிரார்த்தனைகளை எடுத்துச் சென்று சக்தியினைத் திரும்ப எடுத்துவரும் சக்தி கொண்டது என்பதையும் கண்டார்கள்.

அந்த மலர்களின் இனிய மணத்தில் மனம் ஒருமைப்பட்டு இறை சன்னதியில் மானிட மனம் ஒருவித தியான நிலைக்கு செல்வதையும் உணர்ந்து மலர் கட்டாயம் எனச் சொல்லியிருந்தார்கள்.

இதனாலே மலர்கள் இன்றி இந்துக்கள் வழிபாடு ஒரு காலமும் இல்லை.

இங்கே பூக்கள் அனுப்பபட்டன என்பது ஆத்ம தத்துவம், ஒரு பெண் பூப்பெய்தினாள் என்பது அவள் பக்குவாகிவிட்டாள் என்பதை சொல்வது, விளைச்சலையும் பூ என்பார்கள், பூ என்பது முதிர்ந்த நிலை.

பூட்டன், பூட்டி என்பதெல்லாம் அந்த முதிர்ந்த நிலையே.

ஆன்மா எப்போதும் இறைநிலையில் முதிர்ந்திருக்க வேண்டும், பக்குவான நிலையில் மலர்ந்த நிலையில் இருத்தல் வேண்டும் என்பதைப் பூக்களால் சொன்னார்கள் இந்துக்கள்.

இந்த ஆலயத்துக்கு காசிப முனிவர் சம்பந்தப்படுவதும், பூக்கள் சம்பந்தப்படுவதும் ஒரு இல்லற தத்துவத்தைச் சொல்கின்றது.

காசிபரின் வழி வழியாய் வந்த குலமிது. அப்படியே மலர்கள் வம்சம் வம்சமாய் வருகின்றன‌.

எத்தனையோ வம்சம் மாறினாலும் எத்தனையோ வருடங்கள் யுகங்கள் மாறினாலும் பூக்களின் வடிவமும் மணமும் மாறவில்லை. எல்லாப் பூக்களும் கால காலமாக அதே வாசம் கொண்டிருக்கின்றன‌.

ஒரு செடி ஓய்ந்து போனாலும் அடுத்தச் செடி அதே மணத்தில் அதே அழகில் பூக்களை கொடுக்கின்றது எப்படி?

உருவத்தால் அல்ல இயக்கத்தால் அல்ல அங்கே மூலம் ஒன்றாய் இருக்கின்றது, அந்த மூல சக்திதான் காலம் காலமாய் பூக்களில் வருகின்றது, செடிகள் மாறி மாறி பிறந்தாலும் அந்த பூக்களின் மணமாய் அழகாய் இருப்பது மூல சக்தியே.

காசிபர் குலம் காலம் காலமாக வருவதும் அப்படித்தான். தேவர்களாக இன்னும் பல உலக சக்திகளாக அவை வருவது அப்படியே.

இந்தத் தத்துவமெல்லாம் சொல்வது ஒன்றுதான்.

எப்படித் தலைமுறை மாறி வந்தாலும் பூக்கள் தன் இயல்பில் இருக்கின்றதோ அப்படி மானுடரும் தலைமுறை தாண்டினாலும் தங்கள் தர்மத்தில் குல வழக்கத்தில் சரியாக இருக்கவேண்டும் என்பது.

இந்து சமூகத்தில் ஒவ்வொரு குலமும் ஒவ்வொரு காலமும் இந்த ஆலயத்துக்கும் சமூகத்துக்கும் ஏதோ ஒரு பங்களிப்பை ஒரு அறக்காரியத்தை செய்தே வந்திருக்கின்றது.

அது வேதம் ஓதுவது முதல் மாலை தொடுத்தல், சிலைவடித்தல் என ஏதோ ஒன்றாக இருக்கலாம்.

மலர்களில் பல வகையான மணம் வருவது போல அங்கும் பல வகையான பணிகளைச் செய்திருக்கலாம். அதைக் காலம் காலமாக சேவையாக தர்மமாக செய்தல் நன்று.

மல்லிகை காலம் காலமாக மல்லிகை என்பது போல, பிச்சிப்பூ காலம் காலமாக பிச்சிப்பூ என்பது போல ஒவ்வொரு குலத்துக்கும் ஒரு தர்மம் ஒரு கடமை ஒரு குலவழி கடமை உண்டு, தர்மம் உண்டு.

அதனை ஒவ்வொரு குடும்பமும் குலமும் காத்துவருதல் கட்டாயம், இதைத்தான் இந்த வரத்தை அந்த ஆலயம் இல்லறத்தவர்க்கு வழங்கும்.

ஆன்மீக யோக சாதனையில் அந்த ஆலயம் பூ எனும் முதிர்நிலையினைப் பக்குவத்தை வழங்கும்.

இக்கோவிலின் இராஜ கோபுரம் ஐந்து நிலைகளுடன் கிழக்கு நோக்கியுள்ளது. கோபுர வாயில் வழியே உள்ளே நுழைந்ததும் பஞ்சமூர்த்தி மண்டபம் உள்ளது. கொடிமரம் இல்லை. பலிபீடமும், நந்தி மண்டபம் மட்டும் உள்ளன.

நந்தி மண்டபத்திலுள்ள பெரிய நந்தி சற்றே பள்ளத்தில் இறைவன் சந்நிதிக்கு நேராக இல்லாமல் விலகியுள்ளது, சம்பந்தருக்காக விலகிய நந்தி அப்படியே நிலைகொண்டுவிட்டது.

வெளிப் பிரகாரத்தில் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. இரண்டாவது உள்வாயிலைத் தாண்டியதும் வசந்த மண்டபம். கொடிமரம், பலிபீடம் உள்ளன. இங்கும் நந்தி சந்நிதி விட்டு விலகியவாறு உள்ளது.

சுவாமி சந்நிதிக்குத் தென்புறம் சோமாஸ்கந்த மண்டபமும் அடுத்து நடராச சபையுமுள்ளது. உள் பிராகாரத்தில் விநாயகர், சப்தமாதர்கள், நால்வர் சந்நிதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தென்கயிலையும் வடபுறத்தில் வடகயிலையுமாகிய கோயில்கள் விளங்குகின்றன.

மகா மண்டபம், அர்த்த மண்டபம் கடந்து கருவறையில் மூலவர் புஷ்பவன நாதர் எழுந்தருளியுள்ளார். கோஷ்ட மூர்த்தங்களில் தட்சிணாமூர்த்தி வீணையுடன் அமர்ந்திருக்கின்றார்.

மேற்கு கோஷ்டத்தில் அர்த்தநாரீஸ்வரர் உள்ளார். மகிடனையழித்த பாவத்தைப்போக்க ஒற்றைக் காலில் நின்று தவம் செய்யும் துர்க்கையும், அமர்ந்த கோலத்தில் அப்பர்பெருமானும், அருகில் பரவை நாச்சியார், சங்கிலி நாச்சியார் ஆகிய இரு மனைவியருடன் சுந்தரர் இருக்கும் உருவங்கள் உள்ளன.

பிரகாரத்தில் விநாயகர், முருகர், சோமாஸ்கந்தர், நடராஜர் சபை, சப்த மாதர்கள், நால்வர், தென்கயிலை, வடகயிலை, வீணாதர தட்சிணாமூர்த்தி, துர்க்கை, அப்பர் சுவாமிகள், பூந்துருத்தி காடவநம்பி முதலிய சந்நிதிகள் உள்ளன.

கோயிலுக்கு வெளியே அப்பர் அமைத்த திருமடம் உள்ளது.

இந்த ஆலயம் நல்ல பக்குவம் தரும், நல்ல முதிர்ச்சி தரும், தம்பதிகள் வழிபட்டால் நல்ல ஒற்றுமையும் தெளிவான மனநிலையும் கிடைக்கும்.

அங்குச் சென்று புஷ்பவனேஸ்வரரை மலர்களிட்டு வணங்கினால் எல்லாத் தடைகளும் அகலும். வாழ்வு சிறக்கும்.

திருவையாற்று பக்கம் செல்லும் போது இந்த ஆலயத்தின் சிவனுக்கு மலர்களிட்டு தேவாரம் பாடி வணங்கி நில்லுங்கள், அதன் பின் மனம் போல் உங்கள் வாழ்வு மணக்கும், சம்பந்தருக்கு விலகிய நந்தி போல் துன்பமெல்லாம் விலகி எல்லாமே சிறக்கும். இது சத்தியம்.

“மறுத்தானை மலைகோத்தங் கெடுத்தான் தன்னை

மணிமுடியோ டிருபதுதோள் நெரியக் காலால்

இறுத்தானை யெழுநரம்பி னிசைகேட் டானை

யெண்டிசைக்கும் கண்ணானான் சிரமே லொன்றை

அறுத்தானை யமரர்களுக் கமுதீந் தானை

யாவர்க்குந் தாங்கொணா நஞ்ச முண்டு

பொறுத்தானைப் புண்ணியனைப் புனிதன் தன்னைப்

பொய்யிலியைப் பூந்துருத்திக் கண்டேன் நானே”

சப்தஸ்தான ஆலயங்கள் 06 : திருநெய்த்தானம் நெய்யாடியப்பர் ஆலயம்

“மையாடிய கண்டன்மலை

மகள்பாகம துடையான்

கையாடிய கேடில்கரி

யுரிமூடிய வொருவன்

செய்யாடிய குவளைம்மலர்

நயனத்தவ ளோடும்

நெய்யாடிய பெருமானிடம்

நெய்த்தானமெ னீரே”

என தேவாரத்தில் சம்பந்தரால் பாடபட்ட ஆலயம் இது, தேவார தலங்களில் 52ம் தலமாக அறியபடும் இத்தலம், திருவையாறிலிருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் வழியில் அமைந்துள்ளது, இது தில்லைஸ்தானம் என்றும் அறியபடுகின்றது.

இந்த ஆலயத்தின் வரலாறு பன்னெடுங்காலத்துக்கு முன்பு தொடங்குகின்றது, அப்போது மேய்சலுக்கு செல்லும் பசுக்களில் ஒன்று அடிக்கடி தனியே சென்று ஓரிடத்தில் பால் சொரிந்து வந்தது, இதனை சந்தேகித்த மாடுமேய்ப்பவன் அந்த இடத்தில் கலயம் ஒன்றை வைத்து நடப்பதை கவனிக்க ஆரம்பித்தான்

ஒருநாள் பசு வழக்கம் போல் சென்று பால் சொரிந்தது, இடையன் வேகமாக சென்று அந்த பாலை எடுக்க சென்றான், அங்கே சென்று பாலை கண்டவன் அதிசயித்து போனான், அது முழுக்க நெய்யாக இருந்தது

அதே நேரம் அந்த பசு மறைந்தும் போனது, இடையன் கண்முன்னே மறைந்தது

அச்சமுற்ற இடையன் நடந்ததை ஊருக்குள் வந்து சொன்னன், வியந்துபோன மக்கள் அந்த இடத்தை காண சென்றார்கள் , பசு தினமும் பால் சொரிவதாக சொன்ன இடத்தில் தோண்டிபார்த்தார்கள்

விஷயமறிந்து அக்கால சோழமன்னும் விரைந்து வந்தான், தோண்டிய இடத்தில் ஒரு சுயம்பு லிங்க்ம் இருந்தது, விழுந்து வணங்கிய மக்கள் அந்த நெய்யாலே அந்த லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தார்கள், வந்த பசு காமதேனு என அறிந்து கொண்டார்கள், மன்னன் ஆலயம் கட்டி கொடுத்தான் இதிலிருந்து இந்த ஆலய வரலாறு தொடங்குகின்றது.

இந்த ஆலயத்தில் இருந்துதான் திருவையாறு நந்தி திருமணத்துக்கு நெய் குடம் குடமாய் அனுப்பபட்டது, யாகத்துக்கும் இதர விஷயங்களுக்கு நெய் இங்கிருந்தே சென்றது

அதனாலே இந்த இடம் தெய்தானம் என்றானது , திருநெய்தானம் என பக்தியாய் மாறிபோனது, காமதேனுவே வந்து நெய்கொடுத்து சென்ற சிவன் என்பதால் அவர் நெய்யாடியப்பர் என்றானார்

பிருகு முனிவர் இங்கு ஆசிரமம் அமைத்து இந்த சிவனை வழிபட்டார்

இந்த தலம் காமதேனு, காசியபரிஷி, சரஸ்வதி என பலர் வழிபட்டிருக்கின்றார்கள், சோழர் காலத்தில் மிக முக்கிய ஆலயமாக இது இருந்தது

பவுத்த சமண குழப்பங்களில் சிக்கிய இந்த ஆலயத்தை செம்பியன் மாதேவியும் ராஜராஜ சோழனும் மீட்டெடுத்தார்கள், ராஜராஜசோழனின் பட்டத்துராணி லோகமாதேவி இந்த ஆலயத்தின்மேல் தனி பக்தி கொண்டிருந்தாள்

காலத்தால் தடைபட்ட சப்தஸ்தான ஏழூர் ஊர்வலத்தை அவள்தான் மீள தொடங்கிவைத்தாள், அவள் மீட்டெடுத்த விழாதான் இப்போது சப்தஸ்தான ஏழூர் திருவிழா என கொண்டாடபடுகின்றது

சோழர், பல்லவர் தாண்டி இலங்கை சிங்கள மன்னர்களும் இக்கோவிலை கொண்டாடியிருக்கின்றார்கள், அதில் கயவாகு எனும் மன்னன் இந்த ஆலயத்தை வழிபட்டு அங்கு செய்த திருப்பணிகளெல்லாம் கல்வெட்டாக உண்டு

வள்ளல் பெருமான் தாம் பாடிய விண்ணப்பக் கலிவெண்பாவில், “பொய் அகற்றி மெய்த்தானம் நின்றோர் வெளித்தானம் மேவு, திரு நெய்த்தானத்து உள் அமர்ந்த நித்தியமே” என்று போற்றி உள்ளார்

இங்கு முருகபெருமான் சன்னதியும் உண்டு, அருணகிரிநாதர் தன் திருபுகழில் இந்த முருகனை பாடியிருக்கின்றார்

“சிகரப் பாரக் கிரியுறை குறமகள்

கலசத் தாமத் தனகிரி தழுவிய

திருநெய்த் தானத் துறைபவ சுரபதி ” என்பது அவரின் வரி

கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரம் வழியாக உள்ளே நுழைந்தவுடன் விசாலமான வெளிப் பிரகாரம் இருக்கிறது. இராஜகோபுரத்திற்கு நேரே உள்ள கொடிமரம், பலிபீடம், நந்தியைத் தாண்டி உள் வாயில் வழியாகச் சென்றால் மூலவர் நெய்யாடியப்பர் சந்நிதி ஆலயத்தின் உட்பிரகாரத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

உள் பிரகாரம் சுற்றி வலம் வரும்போது சூரியன், ஆதிவிநாயகர், சனி பகவான், சரஸ்வதி, மகாலட்சுமி, காலபைரவர், சந்திரன், ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன.

கோஷ்ட மூர்த்தங்களாகத் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, ஆகியோர் காட்சி அளிக்கின்றனர். தட்சினாமூர்த்தி இங்கு நின்ற திருக்கோலத்தில் காட்சி தருகிறார்.

கருவறையில் மூலவர் நெய்யாடியப்பர் சற்றே ஒல்லியான மற்றும் உயரமான லிங்கத் திருமேனியுடன் நமக்குக் காட்சி தருகிறார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார். சிவனுக்கு நெய்யால் அபிஷேகம் ஆன பின்பு வெந்நீர் அபிஷேகம் நடப்பது வழமை

இந்த ஆலயம் பிருகு முனிவரால் வணங்கபட்டது, ரிஷிகளில் அவர் முக்கியமானவர்

இந்த பிருகு முனிவர் பிரம்மனின் மகன்களில் ஒருவர், இவர் ஜோதிடம் முதல் ஆயுர்வேதம் வரை எல்லா கலைகளுக்கும் பிதாமகன், அவரின் “ஜோதிட சம்ஹிதா” எனும் நூல்தான் ஜோதிட அரிச்சுவடி

இந்த முனிவர் பிரம்மனுக்கும் சிவனுக்குமே சாபம் கொடுத்தவர், இன்னும் திருமால் நெஞ்சில் ஓங்கி மிதிக்கும் அளவு தவவலிமை கொண்டவர்

இவரின் வாழ்வில் ஏகபட்ட அற்புதங்கள் தவத்தினால் செய்த அதிசயங்கள் உண்டு, இவர்தான் சிவபெருமான் மகனிடம் உபதேசம் பெறவும் காரணம்

ஒருமுறை கடும் தவத்தில் இறங்கினார் முனிவர் , தன் தவத்தை யாரேனும் கலைத்தால் அவனுக்கு முக்கியமான விஷயம் மறந்துவிடட்டும் என சாபமிட்டு அவர் தவத்தில் மூழ்கினார்

அவர் தவத்தை அவரின் சாபம் அறிந்து யாரும் கலைக்கவில்லை ஆனால் கடும் தவத்தில் அவர் உடலில் இருந்து அக்னி பெரும் வெம்மையாய் எல்லோரையும் வருத்திற்று, அவரின் சிரசில் இருந்து தவத்தின் உச்சியில் அப்படி ஒரு அக்னி எழுந்தது

தேவர்கள் சிவனிடம் அடைக்கலமானார்கள் காரணம் முனிவரின் சாபம் பற்றி எல்லோரும் அறிந்திருந்தார்கள்

அக்னியின் வெம்மையில் இருந்து எல்லோரையும் காக்க சிவனே அந்த முனிவரின் தலையினை தொட்டார் அந்நேரம் முனிவரின் தவம் முடிந்தது, அக்னி அணைந்தது ஆனால் சாபம் சிவனை வாட்ட தொடங்கியது எல்லாம் அவருக்கு மறந்தது

பின் முருகபெருமானே அவருக்கு சுவாமிமலையில் மந்திரங்களை ஓதி குழந்தைசுவாமியாக நின்றார், சிவன் தன் நிலையினை மீளபெற்றார்

இந்த பிருகுமுனிவரின் வாழ்வின் காட்சிததான் திருநெய்தான ஆலயத்தின் தாத்பரியத்தை சொல்கின்றது

பிருகு முனிவர் தன்னை வருத்தி தவமிருந்தார், மிக கடுமையான தவத்தில் அவர் தன்னை வருத்தி நின்றபோது சிவமே வந்தார், பின் சிவனுக்கு ஒரு சிக்கல் வந்து தன்னிலை மறந்தார் அவருக்கு முருகபெருமான் இழந்த ஞானத்தை திரும்ப கொடுத்தார்

அதாவது கவனிக்கவேண்டிய விஷயம் உருமாற்றம், பிருகு முனிவர் தன்னிலையில் இருந்து பெரும் இடம் அடைந்தார், சிவன் அதற்கு உதவினார், அவரின் உருமாற்றம் முருகபெருமானால் சரிசெய்யபட்டது

அதாவது ஒரு நிலையில் இருந்து இன்னொரு நிலைக்கு மாறி அழியா இடம் பெறுவது, பிருகு முனிவர் மானிட நிலையில் இருந்து அக்னி நிலைக்கு மாறினார், அந்நிலையில் அவர் பரிசுத்தமானார் அவரின் சாபமெல்லாம் சிவன் வாங்கி அவர் கர்மத்தை சிவன் வாங்கி அவரை அழியா நிலை ஞானியாக்கினார்

இதுதான் இந்த தத்துவம்தான், தன் நிலையில் இருந்து மேலான நிலைக்கு செல்லும் பெரும் ஞானத்தை தரும் ஆலயம் இது

நெய் என்பது வெறும் எரிபொருள் அல்ல, மணமிக்க எண்ணெய் அல்ல, அது பவித்திரமானது சுத்தமானது, பாலில் மறைந்திருக்கும் அந்த பவித்திரம் பெரும் பாடுபட்டு பல நிலைகளை கடந்து அடைகின்றது

பாலில்தான் நெய் உண்டு ஆனால் மறைந்திருக்கும், பாலை அப்படியே விட்டால் அது வீணாகிவிடும் அதை பக்குவப்டுத்தி தயிராக்கி தயிரை கடைந்து வெண்ணையாக்கினால் நெய் கிடைக்கும்

அப்படி தன்னை பக்குவபத்தி , தன் மனதை பக்குவபடுத்தி கடைந்தால் இறைவனை அடையலாம், இறை நிலையினை உணரலாம் மனம் பவித்திரமாகும் என்பதைத்தான் இந்த ஆலயம் போதிக்கின்றது

பாற்கடல் கடைந்து அமுதம் வந்தது என்பது வெறும் புராண கதை அல்ல, அமிர்தம் கடையும் போது நஞ்சு வந்தது அதை சிவன் உண்டார் என்பதும் வெறும் செய்தி அல்ல‌

மனம் எனும் கடலை கடைந்தால் இறை அமுதம் எனும் நெய் வரும், ஆனால் அதற்கு முன் பெரும் விஷம் வரும் அதை தன் கர்மத்தை பெரும் தடையினை தீவினைகளை சிவனிடம் விட்டுவிட வேண்டும் அதன்பின் நல்லன எல்லாம் வரும் என்பதே அதன் ஆழ்ந்த தாத்பரியம்

மனம் எனும் கடலை இறை சிந்தனை எனும் மத்தால் மூச்சு எனும் நாகத்தால் மனதை கடைந்து இறைவனை அடைதல் வேண்டும்

பிருகு முனிவர் அதைத்தான் செய்தார் ஆனால் அவரும் ஆபத்தில் சிக்கினார் அதை சிவனே ஏற்று அவரை காத்தார், கிட்டதட்ட இது ஆலம் உண்ட காட்சிக்கு சமம்

பிருகுமுனிவர் தவமும் அதைத்தான் சொல்கின்றது

நெய் என்பது பாலில் மறைந்திருப்பது, அது தயிர் வெண்ணெய் தாண்டி நெய் என வந்தபின் அந்த பக்குவநிலைக்கு வந்தபின் மீண்டும் பாலாகாது

பால் என்பது கெட்டுவிடும், தயிரும் வீணாகும் ஆனால் அதையெல்லாம் தாண்டி அது நெய்யாகிவிட்டால் அது கெடாது, நீண்டநாள் பலன்கொடுக்கும்

அப்படி ஒரு ஆத்மா பல கட்டங்களை பெரும்பாடுபட்டு தாண்டிவிட்டால் அது இறைநிலை அடையும், ஒரு ஆத்மாவுக்குள் இறைவன் உண்டு, பாலுக்குள் நெய்போல் உண்டு அதை தேடி அடையவேண்டும் எனும் தாத்பரியத்தை சொல்லும் தலம் இது

அதைத்தான் அப்பர் பாடினார்

“விறகில் தீயினன் பாலில் படுநெய்போல்

மறைய நின்றுளன் மாமணிச் சோதியன்

உறவு கோல் நட்டு உணர்வு கயிற்றினால் முறுக

வாங்கிக் கடையமுன் நிற்குமே’

ஒளவை தன் ஞானகுறளில் சொல்கின்றாள்

“பாலின்க ணெய்போற் பரந்தெங்கு நிற்குமே

நூலின்க ணீச னுழைந்து”

பாலுக்குள் நெய்யானது எமது கண்களுக்குத் தெரியாதவாறு கலந்திருப்பதுபோல எல்லா உயிரினங்களிலும் சிவன் கலந்திருக்கிறான்.

“கரும்பினிற் கட்டியுங் காய்பாலி னெய்யும்

இரும்புண்ட நீரு மியல்பு”

கரும்புக்குள் உள்ள தித்திப்பான சுவைபோல சிவம் உடலினுள் கலந்துள்ளது. நன்கு காச்சிய பாலில் வெளிவரும் நெய்போல யோகப்பயிற்சிகள், தியானங்கள் செய்து மனதை ஒருநிலைப்படுத்த மனம் ஒடுங்கி சிவனை அறியும் ஆற்றல் வரும், அப்போது பழுக்கக்காச்சிய இரும்பின்மீது நீரை ஊற்ற அந்த நீரானது அந்த இரும்பின் வெப்பத்தைத் தணித்து காணாமல்ப் போவதுபோல பக்குவப்பட்ட ஆன்மாவானது சிவனுடன் கலக்கும்.

பாலை பதமாக்கி நெய் எடுப்பது போல் மனதை பதமாக்கி இறைநிலையினை அடைவாய் என்பதை சொல்லும் தாத்பரியம் இது

லவுகீகமாக பெரும் தத்துவத்தினை இது சொல்லும், ஒரு குடும்பமமானது என்ன சிரமம் பட்டாலும் அடுத்தடுத்த நிலைக்கு உயர்ந்து நெய்போல் பயனுள்ள வாழ்வினை வாழவேண்டும், நெய்தீபம் போல் பெரும் ஒளிகொடுத்து வழிகாட்டி வாழவேண்டும் என்பது இந்த நந்தி திருமணத்தின் தத்துவம்

இல்லறம் என்பது இறைவனை நோக்கி செல்லும் வழி, தொடக்கத்தில் இளமை பின் நடுத்தரம் பின் முதுமை என உருமாறும் வாழ்வில் எப்படி பால் கடைசியில் நெய்யாகின்றதோ அப்படி மனம் இறைநிலையினை அடைதல் வேண்டும் ஈசனோடு கலத்தல் வேண்டும் என்பது பெரும் போதனை

ஆன்மீக வடிவில் பாலில் இருந்து நெய் எடுப்பது போல மனதோடு இருக்கும் இறைவனை பக்குவபட்டு உணரவேண்டும் என்பதை சொல்லும் ஆலயம் இது

இந்த ஆலயம் திருமண தடை நீக்கும், வறுமையினை நீக்கும் இன்னும் பெரும் பலன்களை தரும்

இந்த ஆலயத்துக்கு சென்று சிவனுக்கு நெய் அபிஷேகம் செய்து வழிபடுங்கள், நெய் அபிஷேகம் செய்து நெய் தீபமிட்டு வழிபடுங்கள்

அந்நேரம் உங்கள் எல்லா பிரச்சினையும் மாறும், உங்கள் வீட்டில் எல்லா செல்வமும் பால் போல் பொங்கும், வெண்ணெய் போல் திரளும், நெய்போல் உங்கள் வாழ்வு பெரும் இடம் பெறும், நீங்களும் வாழ்ந்து எல்லோரையும் வாழவைப்பீர்கள், முக்திநிலையும் வாய்க்கும் இது சத்தியம்

“மெய்த்தானத் தகம்படியுள் ஐவர் நின்று

வேண்டிற்றுக் குறைமுடித்து வினைக்குக்கூடாம்

இத்தானத் திருந்திங்ங னுய்வா னெண்ணும்

இதனையொழி இயம்பக்கேள் ஏழை நெஞ்சே

மைத்தான நீள்நயனி பங்கன் வங்கம்

வருதிரைநீர் நஞ்சுண்ட கண்டன் மேய

நெய்த்தான நன்னகரென் றேத்தி நின்று

நினையுமா நினைந்தக்கா லுய்ய லாமே”

சப்தஸ்தான ஆலயங்கள் 07 : திருக்கண்டியூர் பிரம்மகண்டீஸ்வரர் ஆலயம்.

திருவையாறு அருகே கண்டியூர் எனும் ஊரில் அமைந்திருக்கும் ஆலயம், தேவாரம் பாடப்பட்ட 12 ஆம் தலம் இது.

அட்டவீரட்டான தலங்களில் ஒன்றான இது சப்தஸ்தான தலங்களில் முக்கியமான ஒன்று.

“வானவர் தானவர் வைகல் மலர்கொணர்ந் திட்டிறைஞ்சித்

தானவர் மால்பிர மன்னறி யாத தகைமையினான்

ஆனவ னாதிபு ராணனன் றோடிய பன்றியெய்த

கானவ னைக்கண்டி யூரண்ட வாணர் தொழுகின்றதே”

என அப்பர் பெருமான் பாடிய தலம் இது.

சப்தஸ்தான ஆலயங்களில் இது இடம்பெற அந்த நந்தி திருமணத்துக்குக் கண்டி இங்கிருந்துதான் சென்றது, கண்டி அல்லது கெண்டி என்றால் இருவகைப்படும்.

முதலாவது, நகைகள் எனப் பொருள். இரண்டாவது, கண்டி என்றால் நீர் வைத்திருக்கும் பாத்திரம் எனப் பொருள். நீர் கொட்டும் பாத்திரங்களை அப்படி அழைப்பார்கள். நீர் தேக்கங்களுக்கு கண்டிகை எனும் பெயர் வந்தது அப்படித்தான்.

திருமண வீடுகளில் மணப்பெண்ணை கன்னிகாதானம் செய்யும்போது நீர் விடும் பாத்திரத்தை கண்டி என்பார்கள். அம்மாதிரி பொருட்களெல்லாம் இங்கிருந்துதான் சென்றது.

இதனாலே சப்தஸ்தானத்தில் அது முக்கியமாயிற்று.

சாதாதாப முனிவருக்கு காளத்தி செல்லும் வழக்கம் இருந்தது. ஒருமுறை அவர் அங்கு செல்லமுடியாமல் தவித்தவர் மனமுடைந்து இந்த ஆலயத்துக்கு வந்தபோது அங்குச் சிவன் திருக்காளத்தி காட்சியினைக் காட்டியருளினார்.

சதாதாப முனிவர் ஒவ்வொரு பிரதோஷம் நாளிலும் காளஹஸ்திக்கு வருகை தருவார், அவ்வாறு செய்யத் தவறினால் தன்னைத்தானே தீக்குளித்துக்கொள்வதாக சபதம் செய்திருந்தார், ஒரு நாள் கடும் மழைகாரணமாக அவரால் செல்லமுடியவில்லை

மனமுடைந்த அவர் இந்த ஆலய சிவனை வணங்கிவிட்டு தீகுளிக்க முயன்று இப்பக்கம் வந்தபோது சிவன் அவருக்கு காளகஸ்தி காட்சி அளித்து ஆட்கொண்டார், இதனால் முனிவர் வாழ்வு தொடர்ந்தது

ஆம், காளகஸ்திக்கு சமமான தலம் இது

பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவன் கொய்த தலம் இதுதான் அதனாலே அவர் பிரமசிரக் கண்டீஸ்வரர் என்றானார்.

அதனால் பிரமனின் சிரம் கொய்வதற்காக இறைவன் கொண்ட வடுகக் கோலம் ஆலயத்தில் பிரமன் சந்நிதிக்குச் செல்லும் வாயிலில் கதவோரமாகச் சிறிய சிலா ரூபமாகவுள்ளது. இதனால் பிரமஹத்தி தோஷம் நீங்கும் தலமாகவும் சொல்லப்படுகிறது.

இங்குள்ள துவாரபாலகர்களில் ஒருவர் முருகன். விநாயகரின் 7 மூர்த்திகளுடன் விநாயகர் சந்நிதி உள்ளது. இக்கோயிலில் பிரம்மா தனது மனைவி சரஸ்வதியுடன் தனி சந்நிதி கொண்டுள்ளார்.

பூ மாலை ஏந்தி ஜெப மாலை ஏந்தி இருகைகளாலும் இறைவனைத் துதிக்கும் கோலம் அற்புதமானது.

இத்தலத்திற்குச் செல்லும் வழியில் சிவன் பிக்ஷடனர் வடிவில் செதுக்கப்பட்டுள்ளது.

துரோணர் இங்கே வில்வத்தால் பூசை செய்து அஸ்வத்தாமனை மகனாகப் பெற்றார். ஆகவே இது பிள்ளைவரம் தரும் தலம்.

சித்ரவஜன் என்னும் கந்தர்வனுக்கு அவன் மனைவியோடு சேர்த்து தேவலர் என்னும் முனிவர் கொடுத்த சாபப்படி அவன் அரக்கனானான், அவள் பலாசமரம் ஆனாள்.

பின்னாளில் சாதாதாப முனிவர் அங்கே வந்து பலாசமரத்தடியில் மழைக்கு ஒதுங்கினார். அவர் அவர்களை மீட்டு முந்தைய உருவை அளித்தார் எனப் பல சிறப்புக்களைக் கொண்ட ஆலயம் இது.

இக்கோயில் இராஜகோபுரம் ஐந்து நிலைகள் கொண்டது. திருக்கோயில் மேற்குநோக்கி அமைந்துள்ளது. இரண்டாவது கோபுரம் அணுக்கன் திருவாயில் எனப்படுகிறது.

கருவறைக்கு இருபுறமும் துவாரபாலகர்களுக்கு பதிலாக அக்கமாலை ஏந்திய ஞானஸ்கந்தரும் தாமரைமொட்டு மாலை ஏந்திய வீரஸ்கந்தரும் இருக்கிறார்கள். பிரம்மா சந்நிதி அருகே பிராகாரத்தில் அமைந்துள்ள அர்த்தநாரீஸ்வரர் சிற்பம் கலையழகு கொண்டது.

இந்த ஆலயத்தில் கருவறையின் வலப்புறம் நிருபதுங்க பல்லவனின் கல்வெட்டு உள்ளது. சோழன் மதுரைகொண்ட கோப்பரகேசரி வர்மன், முதலாம் இராஜேந்திரசோழன் கல்வெட்டுகள் உள்ளன. கல்வெட்டில், இப்பெருமான், “திருவீரட்டானத்து மகாதேவர்”, “திருக்கண்டியூர் உடைய மகாதேவர்” எனக் குறிக்கப்படுகிறார்.

இந்த ஆலயத்தின் தாத்பரியம் பிரம்மனின் ஒரு தலையினைச் சிவன் கிள்ளியது, நந்தி திருமணத்துக்குக் கண்டி அனுப்பியது என ஒரு முக்கிய நிகழ்வுகளைக் கொண்டது.

அவை இரண்டையும் கொஞ்சம் ஆழமாகக் காணலாம்.

இது சிவன் பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றை அகற்றி அவன் அகந்தையினை அடக்கிய தலம் இது. அந்தக் கோவிலின் சிவன் பெயர் பிரம்மசிரகண்டீஸ்வரர், அதாவது பிரம்மனின் சிரசை கண்டமாக வெட்டியவர் எனப் பொருள்.

பிரம்மன் தலையினைக் கண்டம் செய்த இடமே கண்டியூர் என்றாயிற்று.

இது ஒரு புராணக் கதை, தொன்மையான புராண வரலாறு, இந்துமரபில் எல்லோரும் அறிந்த வரலாறு.

சிவபெருமானுக்கு ஐந்து முகங்கள் உண்டு என்பது ஐதீகம், சத்யோ ஜாதம், வாமதேவம், அகோரம், தற்புருடம், ஈசானம் என ஐந்து.

அதாவது படைத்தல்,காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என ஐந்து தொழில்களைச் சிவன் ஐந்து முகங்கள் மூலம் செய்வார்.

இதனால் ஐந்துமுகம் கொண்டவர் எனச் சிவனுக்குப் பெயர், அது எங்கும் நிலைத்துவிட்டது.

பிரம்மனுக்கு தொடக்கத்தில் ஐந்து முகங்கள் இருந்தன, இதனால் தனக்கும் ஐந்து முகம் உண்டு என்றும், தானும் சிவனும் சமம் எனும் அகங்காரம் கொண்டார் பிரம்மன், இந்த அகங்காரம் பல இடங்களில் அவரால் வெளிப்படுத்தப்பட்டது.

இந்த அகங்காரம் பிரம்மனைத் தனி இறுமாப்பு கொள்ள வைத்தது. யாரையும் அவர் மதிப்பதுமில்லை, ஏறேடுத்துப் பார்ப்பதுமில்லை.

அவருக்கு ஒரு பாடம் புகட்ட விரும்பினார் சிவன்.

அதன்படி ஒரு யாகம் நடத்தினார். அங்கே பிரம்மனும் வந்தார், யாகத்தின் முடிவில் பிரம்மன் சிவனிடம் எல்லாத் திசையில் இருந்தும் தன்னை சிவன் வணங்கி கௌரவிக்கவேண்டும் எனக் கோரினார்.

சிவனும் அப்படி நான்கு திசைகளில் இருந்தும் வணங்கினார், ஐந்தாம் முகத்தை வணங்க திசையினை அவரால் அறியமுடியவில்லை.

சர்வேஸ்வரனால் கூட என் தலையினைத் திசை அறிந்து வணங்கமுடியவில்லை, திசை அறியாத இவர் ஈசனா? என் தலையினைக் கூட வணங்க திணறுகின்றார் எனக் கர்வத்தில் பேசினான் பிரம்மன்.

ஆத்திரமடைந்த சிவனில் இருந்து அவரின் ருத்திரன் வெளிப்பட்டு பிரம்மனின் ஒரு தலையினைக் கொய்தார்.

அதன் பின் நான்கு தலைகளே பிரம்மனுக்கு எஞ்சின, தன் தலை பறிபோனபின் அவர் அகங்காரமும் அவருக்கு அகன்றது.

பிரம்மனின் தலையினைக் கொய்ததால் சிவனுக்குப் பிரம்மஹத்தி தோஷம் உண்டானது, ருத்திரனின் கையில் அந்த மண்டை ஓடு ஒட்டிக் கொண்டது.

பிரம்மனின் அகங்காரத்தைப் போக்க பிரம்மஹத்தி தோஷம் பெற்ற சிவன் பின் யாசகம் பெற்றுவாழும் பிச்சைக்காரனாய் அந்த கபாலத்திலே பிச்சை எடுத்து கபாலீஸ்வரர் எனக் கர்மம் கழித்தார்.

எப்படிப் பாற்கடலில் வந்த நஞ்சினைத் தான் உண்டு உலக உயிர்களைக் காத்தாரோ, அப்படி எல்லோரின் கர்மாவினையும் அவர் ஏற்று ஆண்டியாய்ப் பிச்சைக்காரனாய் அலைந்தார்.

பிரம்மன் என்பவன் ஒவ்வொரு உயிருக்கும் பொறுப்பனாவன் என்பதால் அவன் தலையினை வெட்டினார் என்பது தத்துவரீதியாக மானுட அகங்காரக் கொடிய குணத்தை தன்னில் ஏற்றுக் கழிப்பவர் எனப் பொருளாகின்றது.

சிவன் இந்த மக்கள் மேல் கொண்ட அன்பு அப்படி, அன்பு என்றாலே சிவம், சிவம் என்றால் அன்பு எனச் சொல்லபட்டது இதனால்தான்.

இந்தச் சம்பவம்தான், இந்த வரலாறுதான் திருக்கண்டியூர் ஆலயத்தின் சுருக்கமான போதனை அல்லது புராணக் காட்சி.

இங்குச் சிந்திக்கவேண்டியது நிரம்ப உண்டு.

பிரம்மன் என்பவன் படைப்பின் அதிபதியாக கருதப்படுபவன், படைப்பு என்றால் அது எவ்வகை படைப்பாகவும் இருக்கலாம், பொதுவாக ஒருவெற்றியினை ஒரு அங்கீகாரத்தைக் குறிப்பது.

கலை படைப்பு முதல் பெரும் சாம்ராஜ்யம் படைப்பு வரை எல்லாம் அவ்வரிசையே.

அப்படிப் பெரும் வெற்றி பெறுபவர்களுக்கு ஒரு கர்வம் வரும், ஒரு அகந்தை வரும் அது இயல்பு.

வித்தை கர்வம் முதல் நான் அதிகாரம் மிக்கவன் எனும் ஆட்சி கர்வம் வரை அப்படியானது. அந்தக் கர்வம் ஒருவனை அடுத்தக்கட்டத்துக்கு நகரவிடாது, அடுத்தக்கட்டம் நகராமல் ஞானம் அடையமுடியாது.

ஞானம் அடைய இந்த கர்வமும் மாயையும் உடைதல் அவசியம், நிலையற்ற உலகில் நொடியில் சரியும் வாழ்வில் இதெல்லாம் அர்த்தமில்லாதவை என்பதும் நம்மைவிட வல்லவர் உண்டு வல்ல சக்தி உண்டு நாமெல்லாம் பரம்பொருளின் கைம்பாவைகள் என உணர அந்த கர்வம் உடைதல் அவசியம்.

எல்லாவற்றிலும் ஒரு வெறுமை வரவேண்டும், இதுதான் இவ்வளவுதான் எனும் அதிர்ச்சி வரவேண்டும், நிம்மதி என்பது தேடும் பொருளில் இல்லை அடையும் வெற்றியில் இல்லை அதைத் தாண்டிய வெறுமையில் ஒன்றுமே இல்லை எல்லாம் மாயை எனும் நிலையில் வரவேண்டும்.

அதற்கு கர்வம் அழியவேண்டும்.

அதுகாலம் மனதாலும் நினைவாலும் கட்டப்பட்டிருந்த மாய முகம், நானே சகலமும் நானே எல்லாமும் நான், என், என் சாதனை, என் செல்வாக்கு, என் புகழ் என எல்லாமும் உடையும் போதுதான் அந்த வெறுமை வரும்.

மாயையினை நம்பி இதுதான் நிரந்தரம் என நம்பி, அற்ப மானிட வாழ்வில் ஏதோ கிடைத்துவிட்டது என அகங்காரத்தில் மூழ்கி அதை தக்கவைக்க போராடி அந்த போராட்டத்திலே வீழ்ந்து நிம்மதி இழந்து மகிழ்ச்சி இழந்து, எந்த மகிழ்ச்சி நிம்மதிக்காகப் போராடி அகந்தை கொண்டார்களோ அதைத் தக்கவைக்க அகந்தையில் போராடுவது ஞானமும் தராது. அறிவும் தராது.

இந்த உலகில் இராஜ்ஜியமாகட்டும், விஞ்ஞானமாகட்டும், தொழிலாகட்டும், பணமோ, அதிகாரமோ, செல்வாக்கோ எதுவும் நிரந்தரமில்லை அதற்கு எல்லையுமில்லை.

அகந்தை இருக்கும்வரை, அகங்காரம் இருக்கும்வரை இதில் தேடிக்கொண்டே இருக்க சொல்லுமே தவிர, அடுத்தடுத்து வென்றுகொண்டே இருக்கவேண்டும், நான் யார் என்பதை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும் என மனம் அகங்காரத்தில் போராடுமே தவிர அமைதி கொள்ளாது.

அமைதி இல்லா மனதில் ஆசையும், போராட்டமும், நிம்மதியின்மையும் வருமே தவிர ஞானம் வராது.

அகங்காரம் இருக்கும் வரை அறிவும் தெளிவும் வராது, ஞானமும் வாய்க்காது.

இதனாலே ஒரு மனிதனுக்கு இருக்கக் கூடாத குணம் அகங்காரம் என்றார்கள். அகங்காரத்தால் சக மானுடரை அடக்கலாம், பல சக்திகளை அடக்கலாம் ஆனால் பரம்பொருளிடம் தோற்றே ஆகவேண்டும் என்பதை புராணங்களில் சொன்னார்கள்.

எல்லா இந்து புராணமும் அகங்காரிகளைத் தெய்வம் வந்து ஒழிப்பதையே காட்டும்.

ஆனால், சிவபெருமானோ முருகப்பெருமானோ இங்கே தனித்து நிற்கின்றார்கள், அவர்கள் எந்த அகங்காரியினையும அழிப்பதுமில்லை. கொல்வதுமில்லை.

மாறாக, அவனைத் திருத்தி அகங்காரம் ஒழித்து தன்னோடு சேர்த்துக்கொள்வார்கள்.

அப்படி ஒரு மனிதனின் ஆகாத குணங்களை ஒழித்து ஞானம் தரும் ஆலயம் இந்த திருக்கண்டியூர் ஆலயம்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஏகப்பட்ட முகங்கள் உண்டு, மானிடன் பார்ப்பது ஒரே ஒரு வெளிமுகத்தைத்தான் ஆனால் பல முகங்கள் வெளித்தெரியாமல் உண்டு.

அவனின் பலவகையான குணங்கள் அப்படி. பலமுகங்களாய் வெளித்தெரியாமல் அகங்கரிக்கின்றன‌.

இறைவன் ஒருவனாலேதான் அந்தப் பலமுகங்களைக் காணமுடியும், அங்கே எந்த முகம் அவனுக்கு அகங்காரம் கொடுக்குமோ, எது அவசியமில்லையோ, எது அவனை தவறாய் வழிநடத்துமோ அதனை சிவன் அகற்றிவிடுவார்.

நந்தி திருமணத்தின் நகைகளும் இன்னும் கண்டி எனும் பாத்திரமும் இங்கிருந்துதான் சென்றன. நகை என்பது அணிந்த ஒருவருக்கு சிறப்பைக் தரக்கூடியது. ஒரு நல்ல அந்தஸ்தைக் காட்டக்கூடியது. அவ்வகையில் இத்தலமானது வாழ்வில் நல்ல அந்தஸ்தை செல்வாக்கை தரும்.

ஒரு குடும்பத்துக்கு இது முக்கியமானது, அதனை இந்த ஆலயம் தரும்.

பிரம்மனின் விருப்பமான முகத்தை சிவன் கிள்ளினார் என்பதும், நந்தி மனைவியாக தன் மகளைக் கன்னிகா தானம் செய்ய வியாக்ரபாதரர் நீர் விடும் கண்டிகையினை எடுத்தார் என்பதும் ஆழ்ந்த தத்துவத்தைச் சொல்கின்றன‌.

இந்த உடல் நமக்கானதல்ல, இந்த உறவுகள் நமக்கானது அல்ல எல்லாமே ஒரு கட்டத்தில் பந்தமறுத்து செல்லவேண்டியது, இங்கு எல்லாமே தற்காலிகமானது. இந்தப் பூமியில் நாம் நிரந்தமல்ல சில உறவுகள் தானாக விடைபெறும், சில உறவுகள் மிகுந்த வலியோடு விடைபெறும். அதாவது, இந்த ஆத்மா எப்படியோ ஒருவழியில் நிச்சயம் இந்த உடலை விட்டுச் சிவனோடு இணையும் என்பதைச் சொல்கின்றது.

தகப்பன் வீட்டில் மணப்பெண் வளர்வது போல இந்த ஆத்மா தற்காலிகமாக இங்கு வளர்கின்றது. உரிய நேரம் அது இறைவனை அடைவது நடக்கும் அல்லது இறைவனே வந்து ஈர்த்தும் கொள்வான். இந்த மானுட வாழ்வு மாய தற்காலிகமானது என்பதை போதித்து பெரும் ஞானம் தரும் ஆலயம் இது.

இது காசிப முனி வழிபட்ட ஆலயம், காசிபரின் வாரிசுகளில் பெரும் அசுரர்களும் இருந்தார்கள். பெரும் பக்திமான்களும் இருந்தார்கள். அசுரர்களைத் தெய்வமே வந்து அழித்துப்போட்டது எது குழப்பமோ அது ஆகாதோ அதை இறைசக்தியே அழித்துவிடும்.

இந்த ஆலயம் அந்த வரத்தைத் தரும், வாழ்வு நிலையானது அல்ல எனும் ஞானத்தைத் தரும். எதெல்லாம் நமக்கு ஆகாத குணமோ மனதில் முகமோ அதை முழுக்க களைந்துபோடும். பிரம்மனின் ஆகாத அகங்கார தலையினைக் கிள்ளியது போல் அது கிள்ளி எடுக்கும்.

நம் மனதை இறைவனுக்கு அந்த ஆலயம் தானமாகத் தரும், மானிட பந்தத்தில் இருந்து இறை பந்தத்துக்கு நம்மை அழைத்துச் செல்லும் ஆலயம் இது.

சப்தஸ்தான ஆலயங்களில் முக்கியமான இந்த ஆலயத்துக்குச் சென்று சிவனுக்கு அபிஷேகம் செய்து அந்த நீரினைத் தலையில் தெளித்துக் கொள்ளுங்கள். அபிஷேக நீரை அருந்துங்கள். எல்லா விதமான தடைகளும் எல்லாமும் உங்களைவிட்டு அந்நொடி விலகும். தீர்த்தங்களில் இது விசேஷமானது. இந்த இடத்தில் உங்களின் எல்லாத் தடைகளும் சிக்கலும் காணாமலே போகும். எல்லாத் தடைகளும் அகலும், வாழ்வு பூரணமாகும் இது சத்தியம்.

“வினவினேன்அறி யாமையில்லுரை

செய்ம்மினீரருள் வேண்டுவீர்

கனைவிலார்புனற் காவிரிக்கரை

மேயகண்டியூர் வீரட்டன்

தனமுனேதனக் கின்மையோதம

ராயினாரண்ட மாளத்தான்

வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ்

வையமாப்பலி தேர்ந்ததே”