அகநானூறு : 03
நாதா
மேனகையே வா
என்ன செய்கின்றீர்கள் நாதா
அருணகிரி நாதரின் கந்தர் அனுபூதி வாசிக்கின்றேன், வா இருவரும் சேர்ந்து அந்த இனிமையான ஆன்மீக சாற்றினை பருகலாம் வா
நாதா, நான் கன்னியாகுமரி வரை சென்றுவரட்டுமா?
ஏன் கண்ணே? செவ்வாழை பழம் வாங்க போகின்றாயா? உன்னை விடவா அது சிகப்பானது?
இல்லை நாதா, அங்குதான் ஒருத்தி காதலனுக்கு பழச்சாற்றில் விஷம் வைத்து கொன்றாளாம், கொஞ்சம் அவளிடம் ஆலோசனை கேட்காலம் என்றுதான்..
அப்படியா, சரி வா நாம் அகநானூறு படிக்கலாம், வா அன்பே
நாதா.. இதைத்தானே எதிர்பார்த்தேன்.. வந்தேன்
கண்ணே, பாலோடு தேன் சேர்வதும் கனியோடு மதுசேர்வதும் உன்னோடு சேர்ந்து அகநானூறு படிப்பதும் சுகமல்லவா?
எந்த பாடல் சுவாமி?
3ம் பாடல் கண்ணே, இதோ படிக்கலாம், இதனை எழுதியவர் எயினந்தை மகனார் இளங்கீரனார் எனும் புலவர், இது பாலை நிலத்தினை காட்டும் பாலை தினை பாடல் மேனகையே
படியுங்கள் சுவாமி
வா கண்ணே கரங்கள் கோர்த்து கொண்டே நம் நான்கு விழிகளால் படிக்கலாம்..
“இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஒமைக் காண்பின் பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை, ஈன்று இளைப்பட்ட,
கொடுவாய்ப் பேடைக்கு அல்கிரை தரீஇய
மான்றுவேட்டு எழுந்த செஞ்செவி எருவை
வான்தோய் சிமைய விறல்வரைக் கவாஅன்,
துளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி,
ஒண்செங் குருதி உவற்றியுண்டு அருந்துபு;
புலவுப்புலி துறந்த கவவுக்கழிக் கடுமுடை
கொள்ளை மாந்தரின் – ஆனாது கவரும்
புல்லிலை மராஅத்த அகன்சேண் அத்தம்,
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின்நின்று துரக்கும் நெஞ்சம் நின்வாய்
வாய்போற் பொய்ம்மொழி எவ்வமென் களைமா
கவிரிதழ் அன்ன காண்பின் செவ்வாய்
அந்தீங் கிளவி, ஆயிழை மடந்தை
கொடுங் குழைக்கு அமர்த்த நோக்கம்
நெடுஞ்சேண் ஆரிடை விலங்கும் ஞான்றே”
விளக்கி சொல்லுங்கள் நாதா
நாயகன் பாலை நிலத்துவழி செல்கின்றான், அப்பொழுது ஓமை மரங்கள் நிறைந்திருக்கின்றன, அந்த ஓமை மரங்களின் மேல் இருக்கும் கரும் பட்டை ஆற்றின் கழிமுகங்களில் காணும் முதலையின் தோல் போல இருக்கின்றதாம், மரபட்டையினை முதலையின் தோலுக்கு உவமையாக சொல்கின்றார் புலவர்
ஓமை மரம் என்றால்?
பாலை நிலத்தில் வாழையா வளரும் கண்ணே, முள் மரமாகத்தான் இருக்கும், ஓமை என்றால் நம் கருவேல மரமேதான்
நாதா, முதலைக்கும் வாயில் பல் இருக்கும் அதன் மேல் சவாரி செய்வர் யாருமில்லை, அப்படியே இந்த மரத்திலும் முள் இருக்கும் அல்லவா, அங்கு ஏறிசெல்வாரும் யாருமிலர், என்ன அழகான உவமை சாமி அடுத்து சொல்லுங்கள்
அந்த ஓமை மரங்களின் உச்சியில் செம்பருந்து கூடுகட்டியிருக்கின்றதாம், அது தன் குஞ்சுகளுக்கு இரை தேடி செல்லும் காட்சியினை சொல்கின்றார்
எப்படி?
அந்த ஓமை மரத்தின் உச்சியில் வளைந்த அலகுகளை கொண்ட பெண் செம்பருந்து தன் குஞ்சுகளோடு பசியில் தவித்திருக்கின்றதாம், அதனை காண பொறுக்காத ஆண்பருந்து வேட்டையாட கிளம்புகின்றதாம்
ம்ம் சொல்லுங்கள் சுவாமி..
தன் பேடைக்கும் குஞ்சுகளுக்கும் உணவூட்ட எழும் அந்த பருந்து அந்த உயர்ந்த மலையின் மேல் பறக்கின்றது
நாதா “துளங்குநடை மரையா” என்றால்?
மெல்ல நடக்கும் மானின் நடையினை சொல்வது கண்ணே, நீ நடப்பதும் அதே நடைதான்
ம்ம்ம்.. படியுங்கள் நாதா..
அப்பொழுது பெரிய வரிபுலி ஒன்று மரையா எனும் மானை மலை சரிவில் வேட்டையாடுவதை காண்கின்றது, அந்த மரையா மான் பெரியது, புலியோடு மோதும் தன்மை கொண்டது, ஆனாலும் அந்த மானை தன் வலபக்கம் வீழ்த்தி போடுகின்றது புலி
ஏன் நாதா வலபக்கம் வீழ்த்திற்று?
புலிக்கு ஒரு குணம் உண்டு, தன் வேட்டையில் அது எதிரியின் கழுத்தில் பாய்ந்து கடித்து பலமாக ஆட்டி வீழ்ந்த்தும் அப்பொழுது அந்த இரையானது இடபக்கம் வீழ்ந்தால்உண்ணாது தொடாது, தன் வலபக்கம் வீழ்வதைத்தான் உண்ணும், அதன் இயல்பு அது
அப்படியா சுவாமி?
ஆம், அதுதான் புலி. அப்படி தன் இடபக்கம் வீழ்ந்த அந்த மானின் குருதியினை உறிஞ்சிவிட்டு கொஞ்சம் உண்டுவிட்டு கிளம்பிவிட்டது, அந்த மானை இந்த பருந்து கொத்தி இரையினை அள்ளி தன் குஞ்சுக்கும் பேடைக்கும் ஊட்ட கிளம்புகின்றது, அது எப்படி வேகத்தில் கிளம்புகின்றதாம் என்றால் கொள்ளையர்கள் கொள்ளை பொருளுடன் வேகமாக செல்வார்கள் அல்லவா அப்படி இருந்ததாம்
அழகான உவமை சுவாமி…
அப்படியான காட்சிகளை கொண்ட பெரும் காடும் அது, அந்த காட்டுவழியாக கடந்து செல்கின்றான் தலைவன், அப்படி பருந்து தன் பேடைக்கு இரையூட்டுவதை காணும் பொழுது தன் நிலையினையும் நினைக்கின்றான்
என்ன சுவாமி?
அவனுக்கும் ஒரு காதலி உண்டு, அவளுக்கு பொருள் தேடித்தான் அவன் கிளம்புகின்றான். அவன் யுத்த வீரனாக ஏதும் சேனையில் சேர்ந்து போராடி கூலிபெற்று வரும் தொழிலை கொண்டவன், அப்படி செல்பவன் இந்த பருந்துபோல தன் நிலையும் ஆகிவிட்டதை உணர்ந்து கலங்குகின்றான்
ஆண்கள் பாவம்தான் சுவாமி
ஆம் மேனகையே, ஆண்கள் நிலை அப்படித்தான், இனியவது புரிந்துகொள்
என் அளவு உங்களை யார் புரிந்துகொள்வார் நாதா? படியுங்கள்
அவன் ஏன் செல்கின்றானாம் என்றால் தன் நாயகிக்கு நலல் அணிகலன்கள் வாங்கி கொடுக்க வேண்டும் என அவன் மனம் சொல்கின்றதாம், அந்த நெஞ்சத்தின் ஆசையினை நிறைவேற்றத்தான் செல்கின்றானாம்
எவ்வளவு பாசம் கண்டீர்களா சுவாமி?
காதல் என்பதே பாசத்தின் உச்சம்தானே கண்மணியே, அவளுக்காக அந்த பெரும் பாலை வழியாக செல்லும் அவன் தன் நெஞ்சத்தோடு இவை எல்லாவற்றையும் பேசியபடியே நடக்கின்றான், இன்னும் சொல்கின்றான்
என்ன சொல்கின்றான் சுவாமி?
நெஞ்சமே, இந்த பருந்து இரையூட்டும் காட்சியினை கண்டு ஏன் சஞ்சலபடுகின்றாய், இந்த பருந்து தன் பேடைக்கு இரையூட்டுவதை கண்டு நீயும் அவளை நினைகின்றாயோ, ஆம் அவள் நினைவு வருகின்றதே என அவன் துடிக்கின்றான் மேனகையே
“பெரும் புலம்புற்ற நெஞ்சமொடு பல நினைந்து”, “உள்ளுதொறும் கவிழும் நெஞ்சமொடு” “நோய் மலி நெஞ்சமோடு இனையல் தோழி” “அழி படர் உழக்கும் அவல நெஞ்சத்து” எனும் வரிகளெலாம் சொல்வது இதுதான் கண்ணே
நாதா…
அவள் முகம் நினைவுக்கு வந்து அரற்றுகின்றான், அவள் எப்படி இருப்பாளாம் என்றால் கல்யாண முருங்கை மரத்து பூவின் இதழ்போல சிவந்த இதழை கொண்டிருப்பாளாம், இனிக்க பேசுவாளாம், மிக நிதானமாக தேர்ந்தெடுத்த ஆபரணங்களை அணிந்த மடந்தையாம். அணிகலன்கள் அணியபெற்று வளைந்திருக்கும் காதுகளை அடுத்த அழகான கண்களின் பார்வை இப்பொழுது அவனை நினைவால் குத்துகின்றதாம்
நாதா எனக்கு கண்ணீர் வருகின்றது
மேனகையே, அவரவர் வாழ்வில் விதி இப்படியெல்லாம் ஆட்டிவைக்கும், கோவலன் காலத்தில் இருந்து இது மானிட சாபம், சிலருக்கு விதி அப்படி வாய்த்துவிடும் ஆனாலும் இந்த அழகான இதழும், காதும் கண்களும் உன்னை அப்படியே பிரதிபலிக்கின்றதை கண்டாயா? இல்லை உன்னைவிட இது ஒன்றும் அழகில்லை,அந்த கல்யாண முருங்கை பூ கூட உன் இதழ் அருகே வரமுடியாது கிளியே
நாதா, எனக்கு மகிழ்ச்சி கூடுகின்றது, சென்னை மழையாக கொட்டுகின்றது, பாடல் முடிந்ததா நாதா
இதோ முடிந்துவிடும், என் மனமே காணும் காட்சியிலெல்லாம் அவள் அழகான முகமும் பேச்சும் நினைவுக்கு வந்தால் நான் எப்படி மேற்கொண்டு செல்லமுடியும்? சென்று பொருளீட்டி அவளுக்கு நகை வாங்கமுடியும், அதனால் நீ அமைதியாகு என சொல்லி தன் மனதை ஆற்றுபடுத்தி தொடர்ந்து நடக்கின்றான்
ஆம் மேனகையே , ““தலைவிக்கு அழகிய அணிகலன்கள் வாங்க வேண்டாமா? தயங்காது செல்” என ஒரு அறிவு சொல்கின்றது, “எவ்வளவு கடினமான பாதையைக் கடந்து செல்லவேண்டும் தெரியுமா?’ என மனம் மருகுகின்றது”டைக்கு உணவு கொணர, ஆண் பருந்து படும் பாட்டைப் பார். இனியும் என்ன தயக்கம், புறப்படு. தலைவியை மகிழ்விக்க நகை வாங்க வேண்டாமா?” என அறிவு சொல்கின்றது. ” இல்லை, நெஞ்சே நீ கூறுவது பொய். தலைவி உறுதியாக மகிழமாட்டாள். மாறாக, நிழலில்லாத மரா மரத்தின் அடியில்
நீ ஓய்வெடுக்க நிற்கும்போது, உன்னைப் பிரிந்ததினால் வாடும் தலைவியின் ஏக்கப் பார்வையே உன்னை வழிமறிக்கும்” என மனம் சொல்கின்றது
அறிவுக்கும் மனதுக்கும், நினைவுக்கும் நிஜத்துக்கும் இடையே அவன் போராடுகின்றான்
பாவம் அல்லவா நாதா?
ஆம், அவளுக்காக அவள் மேல் கொண்ட அன்புக்காக அவளை பிரிய மனமில்லாமல் பிரிந்து தன் மனதை கல்லாக்கி பாலை நிலம் வழியாக செல்கின்றான்
நாதா
சொல் என் கனியே
உங்களுக்கு என்ன புரிந்தது?
பாலை வன மலை எப்படி இருக்கும் என்பது புரிந்தது, ஆண் பருந்து இரைதேடி செல்லும் என்பது புரிந்தது, புலி வலபக்கம் விழுந்தால்தான் உண்ணும் என்பதும் தெரிந்தது, புலி இல்லாவிட்டால் அக்காட்டில் பருந்துக்கு உணவில்லை என்பதும் தெரிந்தது, கருவேலமரங்கள் அன்றே இருந்ததும் பாலையில் வளர்ந்ததும் புரிகின்றது
இன்னொன்றும் புரிகின்றது
என்ன நாதா?
இந்த தலைவன் கடலை ஒட்டிய பாலை நிலத்தில் நடக்கின்றான், அங்கிருக்கும் பருந்துகள் மீனை தின்று வாழ்பவைதான் ஆனாலும் பேடைக்காக அது தொலைவில் இருக்கும் மலைக்கு சென்று இரையெடுத்து வருகின்றது, தன்னை போல அதுவும் அலைகின்றது என நினைந்து கொள்கின்றான், கடல் பாலை என்பதால் கொள்ளையரை கண்ட அனுபவமும் அவனுக்கு இருந்திருக்கின்றது, இன்னும் உண்டு மேனகையே
சொல்லுங்கள் சுவாமி
“புல் இலை மராஅத்த அகன்” என்ற வரி, மரா மரங்களை சொல்வது, அவை கடலோரத்தை ஒட்டிய பாலை, ஆற்றங்கரையினை ஒட்டிய பாலையில் வளரும், இந்த மராமரத்தில் இருந்த வேடனே வால்மிகி, அவனுக்கு மரா எனும் நாமத்தை ஒரு ரிஷி தொடர்ந்து உச்சரிக்க சொல்லித்தான் அவன் மரா மரா என சொல்லி சொல்லிஅது ராம ராம என மாறி அவன் ஞானம்பெற்று ராமாயணமே எழுதினானாம்
இதெல்லாம் புரிந்த உங்களுக்கு பெண் மனம் புரியவில்லையா நாதா?
புரிகின்றது, அவன் எவ்வளவு மனம் சஞ்சலபட்டு அழுகின்றான் பாவம், அவளுக்கு இது புரியாமலா இருந்திருக்கும்? ஆனாலும் நகைக்காக அவனை இப்படிபட்ட காடு வழியாக செல்ல விட்டிருக்கின்றாளே அவள், பெண்கள் அப்படித்தான், சும்மாவா இவ்வளவு நகைகடைகள் நிரம்பி வழிகின்றன
அதனால் என்ன சுவாமி, அவசரத்துக்கு நகைகளை விற்கவும் செய்யலாம் இதெல்லாம் பாதுகாப்பான முதலீடுதான்
ஆமாம் ஆமாம், இப்பாடல் இப்படி பாலை நிலத்து காட்சி, பாசம், பிரிவு, ஏக்கம், வாழ்வின் நிலை, விதி என எல்லாம் சொல்கின்றது
நாதா
சொல் கனியமுதே
உங்களுக்கு இப்படியெல்லாம் தோன்றுகின்றதா?
நான் ஏன் காட்டுவழி பாலை நிலத்துக்கு செல்லவேண்டும் கண்ணே?
இல்லை நாதா, எனக்கு அழகான நகைகள் வாங்கிதர ஆசை இல்லையா?
உனக்குத்தான் அழகான நகைகள் இருக்கின்றதே, நகைகளை விட அழகாக நீயே இருக்கும் பொழுது ஏன் செயற்கை கண்மணியே?
ஒரு வளையல்?
உன் முழங்கை வளைவின் அழகுக்கு வளையல் ஈடாகுமா செல்லமே?
ஒரு கம்மல்?
அந்த செவ்வாழை பூவின் மடல் போன்ற காதுக்கு என்ன குறையென்று அணிகலன் சூட்டவேண்டும்? குறை இருந்தால்தானே மறைக்க அலங்காரம் வேண்டும்
ஒரு மோதிரம்?
அந்த அழகான விரலின் மினுமினுப்பினை மோதிரம் மறைக்கலாமா கண்ணே
நாதா…
சொல் கண்ணே அடுத்த பாடலை படித்து அகத்தில் கரைவோமா?
நான் கன்னியாகுமரி வரை சென்றுவந்தபின் கரையலாம் சுவாமி…..”
