அண்ணாமலை திரைப்படம் வந்து 25 ஆண்டுகள் கடந்தது

Image may contain: 3 people, text

“அண்ணாமலை” படம் வந்து நேற்றோடு 25 ஆண்டுகள் முடிந்தததாக ரஜினியின் ரசிகர்கள் சொல்லிகொண்டிருந்தனர்

ரஜினிக்கு பெரும் புகழ் சேர்த்தபடம் அது சந்தேகமில்லை, ஆனால் உண்மையில் அது ஒரு பெண்ணிய படம். பெண் போராட்ட படம், பாழ்பட்ட தமிழகத்தில் அது ரஜினியின் வியாபார வெற்றிபடமானது

அதன் குறியீடுகள் மிக நுட்பமாக கவனிக்கதக்கவை.

அந்த படத்தின் கதை என்னவென்றால், நவநாகரீக இளம்பெண் ஒருத்தி ஒரு அப்பாவி பால்காரனை காதலால் மணம் செய்து கொள்கின்றாள். அவன் குடிசையில் தயக்கமின்றி வாழ்கின்றாள்.

மாடும் பாலுமாக சுற்றிகொண்டிருந்த அவள் கணவன் நண்பனால் ஏமாற்றபட்டு நடுதெருவிற்கு வந்தபின்னால் அவனோடு இருந்து அவனின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு அவனை தொழிலதிபர் ஆக்கி அவன் சவாலில் வெல்ல வைக்கின்றாள் என்பதுதான் கதை

அந்த இளம்பெண்ணை சுற்றித்தான் கதை களம், அவள் பெரும் படிப்பு படித்தவள் ஆனால் ஒரு அப்பாவியினை காதலித்த பாவத்திற்காக அவனோடு மாடு மேய்கின்றாள், பால் கறக்கின்றாள், சாணி அள்ளுகின்றாள், வறட்டி தட்டுகின்றாள், பால் கோவா கிண்டுகின்றாள்

அதுவல்லாமல் தன் மகள் எதிரியின் மகனை காதலிக்கின்றாள் என்றவுடன் அந்த பால்கார கணவன் பக்கமே நிற்கின்றாள்

அவன் ஊதிதள்ளும் சிகரெட்டில் அவளின் உழைப்பும் இருக்கின்றது, ஆனால் கொஞ்சமும் அந்த காசு புகையாய் போவதில் அவள் கவலையடவில்லை, கண்டிக்கவில்லை.

அவனின் மகிழ்சி அவளுக்கு அவ்வளவு முக்கியம்

கணவனின் சவால் போராட்டத்தில் கனவில் மட்டுமே பழம் நினைவுகளுடன் தன்னை சமாதானபடுத்துகின்றாள், கனவிலே சைக்கிள் ஓட்டி மகிழ்கின்றாள். அதாவது தன் பணக்கார கணவன் அந்த அப்பாவி பால்காரனாகவே அவள் மனதில் இருக்கின்றான் அந்த அளவு நேசிக்கின்றாள்

இப்படியாக அப்பெண்ணின் பாத்திரத்தை சுற்றியே கதை நகர்கின்றது.

ஒரு இடத்திலும் கூட “ஏண்டா சனியனே, அந்த பத்திரத்தில் கையெழுத்தினை படித்துவிட்டு போடு என சொன்னேனே, கேட்டியா முட்டாளே..” என அப்பெண் சொல்லவே இல்லை

அப்படி கண்ணகி, சீதை, என பல இதிகாச பாத்திரங்களின் சாயலாக அப்பெண்ணின் கதாபாத்திரம் அமைக்கபட்டிருந்தது

படத்தில் பார்த்து சிரிக்க, அழ, உருக, இறுதியில் நீ வென்றுவிட்டாய் அம்மா என கைகொடுக்க ஒரு கதாபாத்திரம் உண்டென்றால் அந்த கதாநாயகி பாத்திரமே

இந்த பால்காரன் வேடத்தில் ரஜினி என்பவர் நடித்திருந்தார், நிச்சயமாக அது ராமராஜனுக்கு பொருத்தமான வேடம் அவர்தான் நடித்திருக்க வேண்டும்,

ராஜ்கிரன் கூட நடித்திருக்கலாம் ஆனால் ரஜினிக்கு கொடுத்துவிட்டார்கள்

அந்த கதையினை தாங்கி நிற்கும் இளம்பெண் வேடத்தில் தலைவி குஷ்பு பின்னியிருந்தார். அவரை தவிர யாரும் அந்த கனமான வேடத்தை சுமக்க முடியாது.

காதலில் விழுவது, அவன் பால்காரன் என ஏமாற்றம் அடைந்தாலும் தமிழர் பண்பாட்டுபடி அவனே கணவன் என ஏற்று கொள்வது, மாட்டு பண்ணையில் கஷ்டபடுவது, மாமியாரை மதிப்பது, கணவனின் லட்சியம் நிறைவேற உழைப்பது என அத்தனை வேடங்களிலும் பின்னி இருந்தார்

அதுவும் கிளைமேக்ஸில் கணவன் தன் சவாலில் வென்றுவிட்ட பின்னாலும், நண்பனின் சொத்துக்களை ஒப்படைக்கும்பொழுது அவனின் நல்ல‌ குணத்தையும் அவன் வென்றுவிட்ட கர்வத்தையும் அப்படியே தன் முகத்தில் காட்டும் போது மிக சிறந்த நடிப்பினை கொடுத்திருந்தார்.

பராசக்தி நாகாம்பாளுக்கு பின் தமிழகம் கண்ட அற்புத நடிப்பு அது

விருது கொடுக்க வேண்டிய நடிப்பு, ஆனால் பாவி உலகம் கொடுக்கவில்லை.

நிச்சயம் அது குஷ்பு படம், பல காட்சிகள் அவரை சுற்றி இன்னும் வைத்திருக்க வேண்டும், அவர் மாட்டுபண்ணையில் கஷ்டபடும் காட்சி, குழந்தை வளர்க்க சிரமபடும் காட்சி எல்லாம் டைரக்டர் காட்டவில்லை.

அந்த பாவத்திற்கு பின்னால் பாபா படத்தில் மொத்தமாக வாங்கி கட்டினார் சுரேஷ் கிருஷ்ணா, பின் ஆண்டவன் என ஒருவன் இருக்கின்றான் அல்லவா? விடுவானா?

இந்த படத்தின் பெண் பாத்திரம் பேசபட்டிருக்க வேண்டும் ஆனால் படக்குழு சதி செய்தது, பின்னாளில் கேரள இயக்குநர் அத்தவறை திருத்தி கஸ்தூரிமான் என படமாக எடுத்திருந்தார், அப்படம் விருதுகளை வென்றது

(ஒரு பெண்ணிய கதை இப்படி சிதைக்கபட்டது பற்றி எந்த பெண்ணும், ஏன் பெண்ணுரிமை போராளிகளும் வாய் திறக்கவே இல்லை

ஏன் என்றால் பூரா பொறாமை பிடிச்சவளுக, பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்பது இதுதான்)

நண்பனால் ஏமாற்றபட்டு தெருவுக்கு வந்த ஒரு பைத்தியகார பால்காரனை, ஒரு பெண் எப்படி தேவதையாக வந்து தாங்கி அவனை வெற்றிபெற செய்தாள் என்பதுதான் படத்தின் மைய‌ கதை.

அண்ணாமலை படத்தில் ஒரு பாடலில் இஸ்ரேலிய மோஷே தயான் ஸ்டைலில் ஒற்றை கண்ணோடு வந்து நிற்பார் ரஜினி கொஞ்சமும் ஒட்டவில்லை

ஆனால் வெள்ளை ஆடையில் குஷ்பு வந்தபொழுது சாட்சாத் யூத பெண்களின் தெய்வீக அழகு தெரிந்தது

ரஜினி ரசிகர்கள் ஒருபக்கம் அண்ணாமலை வந்து 25 ஆண்டுகள் கொண்டாடுகின்றார்கள், உண்மையில் அவர்களுக்கு உரிமையே இல்லை

முழு உரிமையும் குஷ்பு ரசிகர்களுக்கே இருக்கின்றது.

காரணம் தலைவி இல்லை என்றால் அண்ணாமலை அன்றே காலியாகி இல்லை “காலா”வாகி இருக்கும்

அதனால் சங்கமும் அந்த 25ம் ஆண்டுவிழாவினை உற்சாகமாக கொண்டாடுகின்றது, ரஜினி ரசிகர்கள் யாரும் இருந்தால் சேர்ந்து கொள்ளலாம் ஆட்சேபனை இல்லை.