அத்தியாவசிய தேவைக்கு அமைதி

“அற்ற குளத்து அறுநீர் பறவை போல்..” என்பார்கள்

அது சென்னையில் வசிக்கும் வெளியூர் மக்களுக்கும் பொருந்தும் போலிருக்கின்றது

சென்னையில் நீரில்லாமல் வாழமுடியாது, அதனால் கிளம்புகின்றோம் எனசொல்லும் குரல் அதிகரிக்கின்றது

இவ்வளவுநாளும் வாழ்ந்த ஊராயிற்றே, சோறும் நீரும் அங்கீகாரமும் இன்னும் என்னவெல்லாம் கொடுத்த மண் ஆயிற்றே எனும் நன்றி கொஞ்சமுமில்லை

நிச்சயம் அந்த 60 லட்சம் பேரும் சேர்ந்து களமிறங்கினால் ஆடாத அரசும் ஆடும், பேசாத தலமையும் பேசும்

பிழைக்கத்தான் வந்தோம், ஒழுங்காக அமைதியாக பிழைப்போம், முடியாவிட்டால் ஓடுவோம் எனும் ஒருவித சுயநல கூட்டம் அங்கு பெருகிவிட்டது

இது கண்டிக்கதக்கது

எங்கு வாழ்ந்தாலும் வாழும் மண்ணுக்கு விசுவாசமாக இருத்தல் வேண்டும், அதுதான் மானிட குணம்

மாறாக நீரில்லை இதோ பறக்க போகின்றோம் என்பது பறவை குணம்

விவேகானந்தர் ஒரு கிளிகதை சொல்வார்

ஒரு மரத்தில் கிளி இருந்தது, அந்த மரத்தை அது மிகவும் 
நேசித்தது, அதை சோதிக்க எண்ணிய கடவுள் வறட்சியினை கொடுத்தான்

அந்த மரம் உதிர தொடங்கியது, எல்லா பறவைகளும் பறக்க தொடங்கின. அக்கிளி செல்லவில்லை

பட்டுவிட்ட மரத்தின் கிளையில் சாகும் தருவாயில் அந்த கிளி தவிக்க அதன் முன் கடவுள் வந்தார்

கிளியே, பயனற்ற இந்த மரத்தைவிட்டுவிட்டு எல்லா பறவையும் பறக்க நீ மட்டும் ஏன் இங்கேயே சாக கிடக்கின்றாய் என கேட்டார்

அந்த கிளி சொன்னது

“அய்யா, நான் இந்த மரத்தின் கூட்டில்தான் பிறந்தேன், இந்த மரபொந்துகளில்தான் மழையிலும் இடியிலும் காக்கபட்டேன்

இந்த மரத்தின் கனிகளே எனக்கு பசியாற்றியது, இம்மரமே எனக்கு வாழ்வும் அடைக்கலமும் கொடுத்தது

ஏதோ கெட்ட நேரம் அதன் நிலை அப்படியாகிவிட்டது, அதற்காக அதை விட்டு நீங்கமுடியுமா?

நல்ல நிலமையில் இருக்கும்பொழுது ஒருவனை அண்டிவிட்டு அவன் நிலை மாறினால் அவனை நீங்குதல் சரியா? தர்மமா? இல்லை அல்லவா? அதனால் செத்தாலும் இந்த மரத்தோடு சாவேன்.. என சொல்லி மயங்கியது கிளி

தட்டி எழுப்பிய கடவுள் சொன்னான், இவ்வளவு நல்ல மனம் கொண்ட உனக்கு என்ன வரம் வேண்டும் கேள்

கிளி சொன்னது, எனக்கு ஒன்றும் வேண்டாம் இந்த மரத்தை மட்டும் பழையபடி பசுமையாக்கு, அது பசுமையானால் ஆயிரம் பறவைகள் வாழும், பல்லாயிரம் உயிர்கள் வாழும்

நான் ஒருவன் வாழ்ந்து என்னாக போகின்றது, எனக்கு வாழ்வு கொடுத்த இந்த மரம் வாழ்ந்தால் என்னை போல பல்லாயிரம் பறவைகள் வாழும், நீ கடவுளானால் அதை செய்

கடவுள் கிளியின் வேண்டுதலுக்கு செவிசாய்த்தான், நன்றியுள்ள கிளியால் அம்மரம் செழித்தது”

அந்த கிளி கதையில் வரும் கிளி போல அல்லவா நல்லவர்கள் மனம் இருத்தல் வேண்டும்?

சோறு போட்ட பூமியினை அது வறண்டுவிட்டது என்பதற்காக கிளம்புவர்களை எந்த பூமியும் நிச்சயம் ஏற்காது

சென்னை குடியேற்ற நகரம் என்பதாலோ என்னவோ அவர்களிடம் ஒற்றுமை இல்லை, ஒன்றுபட்ட மனம் இல்லை

ஏதோ சந்தை கூட்டத்தில் வந்த மந்தை போல ஆளாளுக்கு ஒரு பிணைப்பின்றி இருக்கின்றார்கள்

இந்நிலை மாற வேண்டும், எந்த மண் ஆயினும் வாழும் இடத்தில் ஒரு பிணைப்பும் ஒரு பாசமும் வேண்டும்

சென்னைக்கு என்ன அணுகுண்டு மிரட்டல் வந்ததா? இல்லை சீன ராணுவம் வந்ததா? இல்லை பாகிஸ்தான் ஏவுகனைகள் தாக்கியதா?

இல்லை நீர் சிக்கல்

மொத்த சென்னையும் நெருக்கடி கொடுத்தால் அரசுகள் ஓடிவந்து குனியும்

அதனை விடுத்து வளமான சென்னையில் வாழ்வோம் என்பதும், வறண்ட சென்னையில் இருந்து கிளம்புவோம் என்பதும் சரியல்ல‌

எருமை மாடுகள்தான் குளத்தில் இம்மாதிரி செய்யும், அறிவுடை மானிடர் செய்யவே கூடாது

சோறு போட்ட பூமியினை காக்க முயல வேண்டுமே தவிர அதற்கொரு சோதனை என்றால் விட்டுவிட்டு ஓடுவது மானிட தர்மம் அல்ல..

அது நன்றியும் அல்ல‌

மக்கள் ஒன்றாகட்டும், குரல்கள் எழும்பட்டும், அதற்கு அரசுகள் களமிறங்கும். அவை சுணங்கினால் நிச்சயம் ஆண்டவன் களமிறங்கி வருவான்

பல்லாயிரம் மக்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அந்த மாநகரம் எனும் பெருமரம் மறுபடி புத்துயிர் பெறட்டும், அதற்கு அதன் ஒவ்வொரு கிளியும் பிரார்த்திக்கட்டும்

ஆக ஜல்லிகட்டுக்கு பொங்கிய சென்னை, அத்தியாவசிய தேவைக்கு அமைதி காக்கின்றது என்றால், அந்த ஜல்லிகட்டுபோராட்டம் ஏதோ அரசியலுக்காக உருவாக்கபட்டிருப்பது புரிகின்றது