அந்த அபிராமி என்பவள்
அந்த அபிராமி என்பவள் மாபெரும் பாதக செயலை செய்திருக்கின்றாள் என நெஞ்சார உணர்ந்த பின்னும் பெரியாரிஸ்டுகள், பெண்ணுரிமை போராளிகள் எல்லாம் அவளுக்கு வக்கலாத்து வாங்க கிளம்பிவிட்டார்கள்
பெண்ணுரிமை என்பது பெற்ற குழந்தையினை கொல்வது என சொன்னவன் எவன்?
சிலர் ஒருபடி மேலே போய் நல்லதங்காள் குழந்தைகளை கொன்றுவிட்டு தெய்வம் ஆகவில்லையா என கூக்குரல் வேறு
நல்லதங்காள் கணவன் இல்லா நிலையில் , உறவுகள் கைவிட்ட நிலையில் வாழவழியற்ற நிலையில் குழந்தைகளை கொன்று தானும் செத்தாள்
அடுத்த வீட்டுகாரனுடன் ஓடி செல்ல அவள் கொல்லவில்லை
ஆளாளுக்கு அவள் மன உரிமை என்ன? மன நிலை என்ன? வாழ்வில் அவளுக்கான இடத்தை கணவன் கொடுத்தானா? என சீறிகேட்கின்றார்கள்
அட பதர்களா? அவன் செய்த தவறு என்ன? ஆண் என்பவன் யார்?
இது வேகமான உலகம் , பொருளாதார சிக்கலில் பின்னி எடுக்கும் வாழ்க்கை இது. ஒவ்வொருவனுக்கும் குடும்பத்திற்காக பணத்தின் பின்னால் ஓடிகொண்டே இருக்கும் தேவையும் அவசியமும் இருக்கின்றது
அவனும் அந்த விதிக்கு தப்பமுடியுமா? அந்த அப்பாவி கணவனும் ஓடினான்
யாருக்காக ஓடினான்? அவனுக்கா?
அவனுக்கே தேவை 3 வேளை உணவும், படுக்க ஒரு அறையும் அதற்காகவா இரவெல்லாம் உழைத்தான்
தன்னை நம்பி வந்த அவளுக்காக, அந்த குழந்தைகளுக்காக அவன் ஓடி ஓடி உழைத்திருக்கின்றான்
அலுவலகம் என்பது சுகமாக வந்து போகும் விஷயமா? கொடுக்கும் ஒவ்வொரு காசுக்கும் ஒவ்வொரு நரம்பினை முறுக்குவார்கள்
உடலால் பாதி மனதால் மீதி என செத்து செத்தே ஒவ்வொருவனும் சம்பாதிக்கின்றான்
மகிழ்வோடு வேலைக்கு செல்பவன் ஒருவனை காட்டுங்கள், நிச்சயம் முடியாது
அந்த ஓடி ஓடி களைக்கும்பொழுதெல்லாம் குடும்பமும் அந்த குழந்தைகள் எதிர்காலமுமே அவன் கண்முன்னால் வரும், மறுபடி ஓட வைக்கும்
அந்த குடும்பமே அவன் நிம்மதி, அவன் உழைப்பின் மொத்த கனவும் எதிர்ப்பார்ப்பும் அதுவே
அவனவன் மனைவியினை முதுகில் மிதித்து வேலைக்கு போ என விரட்டும் உலகில் அவளை வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துகொள் என சுதந்திரமாக விட்டிருக்கின்றான்
அவளின் மேக் அப்பிலும் உடையிலும் , ஸ்டைலாக வந்திறங்கும் இருசக்கர வாகனதிலுமே அது தெரிகின்றது
அவளுக்காக அவ்வளவு உழைத்திருக்கின்றான்
அவன் அவள்மேலும் குடும்பம் மேலும் கொண்ட பாசத்தினால் கொடுத்த சுதந்திரம் அது, அதற்கான மரியாதை அவளுக்கு புரியவில்லை விளங்கவில்லை
வேலை இல்லாத மனித மனத்தில் சாத்தான் புகுந்துவிடும் என்பது அவள்விஷயத்தில் சரியாயிற்று
குடும்பம் என்பது எவ்வளவு முக்கியம் என்பதும் புரியவில்லை, எவ்வளவோ சிக்கலில் ஒவ்வொருவரும் தவிக்கும் உலகில் தனக்கு கிடைத்த அருமையான வாழ்வினை அவள் உணரவில்லை
கணவன் வெளிநாட்டிலும் மனைவி தனியாகவும் போராடும் குடும்பம் எத்தனை?
ஒரு 200 ரூபாய் சம்பாதிக்க முடியாதா என கணவனும் மனைவியும் தெருதெருவாக அலைந்து உழைக்கும் குடும்பங்கள் இதே சென்னையில் எத்தனை?
ஒரு குழந்தைக்காக கோவில்களிலும், கருத்தரிப்பு நிலையங்களிலும் கண்ணீரோடு காத்திருக்கும் தம்பதியர் எத்தனை ஆயிரம்
நோயிலும் நொடியிலும் இன்னும் பல சிக்கல்களிலும் இருந்து வெளிவரமுடியாமல் தவிக்கும் குடும்பம் எத்தனை ஆயிரம்?
உடல் நலம் குன்றிய தன் குழந்தைக்காக மனதில் கண்ணீரும் அக்குழந்தை முன் புன்னகையுமாக நம்பிக்கையுடன் போராடும் தாய்மார்கள் எத்தனை?
பலருக்கு கிடைக்கா ஆசீர்வாதம் அவளுக்கு கிடைத்திருக்கின்றது, அவள் உணரவில்லை
பறவைகளில் கூட ஆண்பறவை இரைதேட செல்லும்பொழுது பெண்பறவை கூடை பார்த்துகொள்ளும் என்ற நம்பிக்கையிலேதான் பறக்கின்றது
அந்த நம்பிக்கையினை இந்த அப்பாவி கணவனும் கொண்டிருந்ததில் ஆச்சரியமில்லை
ஆனால் கருநாகம் ஒன்று வந்து அக்குஞ்சுகளை கொல்ல சொல்லி அந்த பெண்பறவையினை தூக்கி செல்லும் என கனவிலும் நினைப்பானா?
எல்லா உயிரிலும் பெண் படைப்பின் மிகபெரும் பலம் தாய்மை
கோழி கூட பருந்தை கண்டால் குஞ்சுகளை செட்டையில் அடைத்து சீறும், கிளி கூட்டம் கூட தன் வீட்டருகில் பாம்பை கண்டால் அலறும்
பூனை கூட அதன் குட்டியினை தொட்டால் புலியாக பாயும்
விலங்குகளுக்கு கூட இருக்கும் உணர்ச்சி இந்த சண்டாளிக்கு இல்லை என்பதுதான் பெரும் அதிசயம்
எந்த வீட்டில் சிக்கல் இல்லை? எந்த வீட்டில் சண்டை இல்லை, கதவில்லா வீடு இருந்தாலும் இருக்குமே தவிர சண்டையில்லா வீடு இல்லை
குடும்பம் என்பது அப்படித்தான், சண்டையே இல்லாவிட்டால் சில பிணங்கள் வாழ்வதாக அர்த்தம் இல்லை போலியாக நடிக்கின்றார்கள் என அர்த்தம்
ஆனால் சண்டைகள் முடியும், பாசம் தொடரும் இப்படி கலந்தே செல்வதே வாழ்வு
கணவன் மேல் உள்ள கோபத்தை குழந்தைகளை கொன்று காட்டுகின்றேன் என பெண்ணுரிமையில் கிளம்பினால் சுடுகாடுகள் எல்லாம் அந்த குழந்தை பிணங்களாலே நிரம்பி இருக்கும்
எது பெண் உரிமை? எது பெரியாரிசம்?
கணவன் ஆதிக்கம் செலுத்தினாலோ இல்லை அடக்குமுறை செய்தாலோ இல்லை சம்பாதிக்காவிட்டாலோ கொடுமை புரிந்தாலோ போடா டேய் என் பிள்ளைகளை நான் தனியே வளர்த்து காட்டுகின்றேன் என சவால் விட்டு வளர்த்து காட்டுவாளே அவளே பாரதியாரும் பெரியாரும் கண்ட பெண்
மாறாக கணவன் மாடுபோல உழைத்துகொண்டிருக்க, அதை எல்லாம் சட்டை செய்யாமல் குழந்தைகளை கொன்றுவிட்டு அடுத்தவனுடன் ஓடுவது பெரியாரிசம் அல்ல பேயிசம்
எல்லா பெண்ணிடமும் குழப்பம் உண்டு, எல்லா பெண்களுக்கும் இரு மனது உண்டு சந்தேகமில்லை
அவள் தன் குழந்தைகளுக்காக மனதை மாற்றி இருக்க வேண்டும் இல்லை பெரியவர்களிடம் பேசியிருக்க வேண்டும்
மாறாக பிரியாணிகடைக்காரனிடம் ஆறுதல் தேடியதும், அந்த சண்டாளன் அதை பயன்படுத்தி அக்குருவி கூட்டை கலைத்து போட்டதும் விதி அல்லது மயங்கிவிட்ட மதி
அன்றே சொன்னான் கண்ணதாசன் “தேகம் துடித்தால் மிஞ்சுவது கண்ணீரே”
இப்பொழுது அதுதான் மிஞ்சி இருக்கின்றது
இந்த சண்டாளி சூர்ப்பநகை வடிவாள் என அவ்வை சொன்னவளை ஏறேடுத்து பார்க்கவும் மனவில்லை
ஓடியதும் ஓடினாள் அக்குழந்தைகளை விட்டு ஓடியிருந்தால் அவைகளும் இப்பூமியில் வாழ்ந்திருக்கும், அனாதையாகவோ இல்லை தந்தையுடனோ வாழ்ந்திருக்கும்
ஆனால் அவனை கதற வைக்க வேண்டும் என்ற வன்மத்தில் அக்குழந்தைகளை கொன்றிருக்கின்றாள் என்றால் அவன் அக்குழந்தைகள் மேல் எவ்வளவு பாசம் வைத்திருப்பான் என்பதை நமக்கே புரிந்து கொள்ள முடிகின்றது
பாசங்களில் பொல்லாதது புத்திர பாசம், துரோகங்களில் பொல்லாதது மனைவியின் துரோகம்
அந்த துரதிருஷ்டசாலிக்கு இரண்டுமே அமைந்துவிட்டதுதான் சோகம்
அவன் செய்த தவறென்ன? குடும்பத்திற்காக ஓடி ஓடி உழைத்ததும், இவள் செய்த தவறுகளை குழந்தைகளுக்காக பொறுத்ததுமே அவன் செய்த தவறு
அவனுக்கு ஆழ்ந்த இரங்கல்களும் ஆறுதல்களும்
நிச்சயம் அவன் ஒரு தவறும் செய்யவில்லை, அவனை பிடித்த பெரும் பீடை அவன் குழந்தைகளோடு சென்றுவிட்டது
அவனுக்காகவும் அக்குழந்தைகளுக்காகவும் அழுவோம், நாம் அழுகின்றோம்
கருநாக பாம்பு தன் குட்டியினை விழுங்குவது போல அவள் விழுங்கி இருகின்றாள் சண்டாளி, மனமே இல்லாதவளுக்கு ஏது பெண்ணுரிமை?
அந்த அப்பாவி கணவன் இந்த துயர காலத்தை கடந்து செல்லட்டும்
வாழ்விழந்த ஏதாவது ஒரு பெண் அவனை வருங்காலத்தில் ஏற்றுகொண்டால் அதுதான் பெரியாரும் பாரதியும் சொன்ன பெண் உரிமை
அப்படி ஒரு வாழ்வு அவனுக்கு பின்னாளில் அமையட்டும், இந்த கருகிவிட்ட மொட்டுக்கள் மீண்டும் மலரட்டும்
சிறையில் இருக்கும் அவள் இதை பார்த்து பார்த்து சாகட்டும், அதை விட அவளுக்கு தண்டனை கொடுக்க முடியாது.
“பெண் புத்தி பின் புத்தி” என்பார்கள், புத்தியே இல்லாத இவள் அந்த பெண் வரிசையில் வரமாட்டாள்
முன்பெல்லாம் கூட்டு குடும்பம் இருந்தது, ஒவ்வொருவரும் எல்லோரையும் கவனித்துகொண்டே இருப்பார்கள், இம்மாதிரியான விஷயங்கள் நடக்க வாய்ப்பில்லை
இப்பொழுதோ தனித்துவிட்ட காலங்கள், போதா குறைக்கு பழகவும் பார்த்து கெடவும் ஏகபட்ட விஷயங்கள்
இதற்கெல்லாம் நல்லோர் தொடர்பும், ஆன்மீகத்தில் மனதை செலுத்துதலின்றி தீர்வில்லை
முன்னோர் ஏராளம் சொல்லி வைத்தனர், “ஆணுக்கு ஒன்று என்றால் கூட குடும்பம் நிற்கும், பெண் அகலகால் வைத்தால் குடும்பம் தாங்காது”
இதை எல்லாம் அவள் மண்டையில் உரைகும்படி சொல்லி கொடுக்க யாருமில்லை
வாழ்வில் வரும் நெருக்கடிகளை வென்றுகாட்டுவதே பென் உரிமை , பெண் விடுதலை எனப்படுமே தவிர கணவனை பழிவாங்க குழந்தையினை கொல்லுதல் என்பது கொடூர குற்றம் என்ற வரிசையில் வரும்
மிருகம் கூட செய்யாத பாதகம் இது
இதற்கு வக்கலாத்து வாங்குபவர்கள் பெரியாரையோ, அம்பேத்கரையோ படித்தவர்களாக இருக்க முடியாது
ஆட்டோ சங்கர், சந்தண வீரப்பன்
, பூலன் தேவி, பிரபாகரன் போன்ற அயோக்கியர்களை பின் தொடர்பாகவே இருப்பார்கள்
குடும்பத்தை நேசித்து அதற்காக உழைத்து அதனாலே நொறுங்கி கிடக்கும் அந்த மனிதனுக்கு ஆறுதல்கள், அந்த பிஞ்சு குழந்தைகளுக்கு கண்ணீர் அஞ்சலிகள்
அவனின் பொறுப்பான உழைப்பே அவனை காப்பாற்றியும் இருக்கின்றது, இல்லாவிட்டால் அந்த சண்டாளி இவனையும் கொன்றிருப்பாள்
அந்த குடும்பத்திற்காக அவன் செய்த தியாகத்தை உணர்ந்த தெய்வம் அவனைமட்டும் காப்பாற்றி தீராசோகத்து சாட்சியாக நிறுத்திற்று
அவன் வாழட்டும், எங்கிருந்தாலும் வாழட்டும். துளியும் அவன் மேல் தவறு இல்லை அதனால் பழியுமில்லை
பாரதத்தில் பாண்டவர் மகன்களை வஞ்சகமாக கொன்ற அஸ்வத்தாமன் இன்னும் நிம்மதியின்றி அலைவதாக சொல்கின்றது பாரதம்
இந்த சூர்ப்பநகைக்கும் ஒரு காலமும் இனி நிம்மதி இல்லை. இப்பெரும்பழி எப்பிறப்பிலும் தீராது