அந்த அழகு பெட்டகம் இனி இல்லை…

இன்றோடு கிட்டதட்ட 40 நாள் ஆகின்றது, கண்களை மூடும்பொழுதெல்லாம் அந்நினைவு வந்து சில சொட்டு கண்ணீரை சிந்த வைத்துவிடுகின்றது

இவ்வளவு நாளும் சூரியனுக்கு கீழ் நாம் கடந்து போன நாட்களில் , சந்தித்த மிக பெரும் கருப்பு நாட்களில் அதுவும் ஒன்று.

அவள் நான் தூக்கி வளர்த்த பெண் குழந்தை. மிக நன்றாகவே வளர்க்கபட்டாள், ஒரு வார்த்தை அவளை குறை சொல்ல முடியாது.

அவள் இருக்கும் இடமும் தெரியாது, பேசும் குரலும் கேட்காது, தெய்வங்கள் நம்மோடு அமர்ந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருப்பாள். அப்படி ஒரு பிறவி வெகு அபூர்வம்.

பத்தாம் வகுப்பில் பள்ளியில் முதலிடமும், 12ம் வகுப்பில் 1185 மதிப்பெண்களும் பெற்றிருந்தாள், மருத்துவம் அவளுக்கு விருப்பமான படிப்பல்ல, ரத்தம் அது இது என சொல்லி அவளின் இளகிய மனதில் இன்னும் பயம் கூடியிருந்தது

பொறியல் முடித்து சிடிஎஸ் எனும் பன்னாட்டு நிறுவணத்தில் வேலைக்கு தேர்வாகியும் இருந்தாள், அதனிடையே வங்கி பணிக்கு தயாரிப்பும் செய்துகொண்டிருந்தாள்

கடந்த ஜனவரியில் நான் பார்த்தபொழுது , குழந்தையில் சிரித்த அதே சிரிப்புத்தான், அந்த கள்ளம் கபடமில்லாத அதே சிரிப்புடன் பேசிகொண்டிருந்தாள்

எந்த சிக்கலும் அவளுக்கு இருப்பதாக தோன்றவில்லை

கடந்த மாதம் வந்த செய்தி, அப்படியே நெஞ்சில் சம்மட்டியால் தாக்கிற்று.

ஆம் அவள் தற்கொலை செய்துகொண்டாளாம்

ஏன்? எதற்கு? அவளா? எப்படி? என்றெல்லாம் ஆயிரம் கேள்விகள் நொடிக்குள் எழுந்து தீரா சோகத்தில் தள்ளின‌

அந்த அழகு பெட்டகம் இனி இல்லை, அந்த புன்சிரிப்பு தவிர ஏதும் அறியா முகம் இனி இல்லை

சிறுவயதில் இருந்து நான் “அரிசி மூட்டை” என அழைத்த அந்த செல்லமகள் இனி இல்லை

நினைத்தாலே நெஞ்சம் நடுங்குகின்றது. ஒவ்வொரு முறையும் ஜனவரிக்கு ஊருக்கு செல்லும்பொழுது இருக்கும் அந்த மகிழ்ச்சி இப்பொழுது இல்லை

அந்த தெருவில் இனி நடக்கும் பொழுது, அந்த வீட்டை இனி கடக்கும்பொழுது என் நெஞ்சம் நிச்சயம் வெடித்துவிடும். நிச்சயம் வெடித்து அழாமல் அந்த இடத்தினை கடந்து போக முடியாது

அதனை நினைக்கையிலே பெரும் இருள் நெஞ்சை கவ்விகொள்கின்றது, செல்லாதே உன்னால் தாங்க முடியாது என உள்மனம் எச்சரிக்கின்றது, , ஊருக்கே போக வேண்டாம் என்றே நினைக்கின்றேன்

என்ன நடந்தது? ஒன்றும் தெரியவில்லை.

இந்த சோகத்தோடு சில தகவல்களை படிக்கும்பொழுது அதிர்ச்சி அளிக்கின்றது, உலகெல்லாம் இப்படி பதின்வயது பருவத்தார் அதிகம் தற்கொலை செய்கின்றார்கள் என்கின்றது ஆய்வு

ஏன் என்றால் பல காரணங்கள், பல்லாயிரம் காலமாக மிக அமைதியாக, கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்த மானிட வாழ்வை கடந்த 80 ஆண்டுகள் வேகமாக மாற்றிவிட்டன, அதுவும் கடைசி 20 வருடங்கள் எல்லாம் மகா வேகம்

எல்லோரும் ஆளுக்கொரு எந்திரத்தோடு பழகிகொண்டிருக்கின்றோம், மனிதர்களை விட்டுவிட்டு கம்பியூட்டர், போன் , டிவி , மெஷின் என எந்திரங்களோடே பழகிகொண்டிருக்கின்றோம்.

அதுவும் பதின்மவயது பிள்ளைகள் பெரும் சிக்கலை எதிர்கொள்கின்றார்கள். புரிந்தும் புரியாத வயதில் படிப்பு, தேர்வு, பெற்றோர் கட்டுபாடு, நண்பர்கள் என அவர்கள் மனம் பல குழப்பங்களை சந்திக்கின்றன‌

மனம் அதற்குரிய தேவையினை நிறைவேற்றவில்லை, அதனை தெரிந்துகொள்ள யாரும் விரும்பவில்லை என்ற நிலையில், இனி என்ன இருக்கின்றது எனும் வெறுப்பில் இப்படி எல்லாம் நடப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன‌

அதுவும் பெண்கள் இளகிய மனம் கொண்டவர்கள் வேறு.

அந்த தற்கொலை புள்ளிவிவரத்தில் இந்தபெண்ணும் சேர்ந்துகொண்டாள் என்பதுதான் எம் வாழ்நாளின் மிக பெரும் சோகங்களில் ஒன்று.

அப்பொழுது அவளுக்கு 7 வயதாகியிருந்தது, ஒரு கிறிஸ்மஸ் தினத்தன்று அவள் வீட்டருகே வெடி வெடித்துவிட்டோம். நள்ளிரவு வேறு அது சர்ச்சையானது

இருநாள் கழித்து மழலையில் கேட்டாள், “எங்க வீட்ல வெடி வச்சது நீங்கதானண்ணே..நான் பயந்துட்டேன்”, அந்த மழலை குரல் மறக்க முடியாதது

அவள் இப்படி ஒருநாள் நெஞ்சத்தில் வெடிவைப்பாள் என யார் எதிர்பார்த்திருக்க முடியும்?

அவளை பற்றி பெரும் எதிர்பார்ப்பு இருந்தது, அந்த சிறிய ஊரில் இருந்து பெரும் உயரத்திற்கு செல்வாள் என எதிர்பார்க்க பட்ட நேரத்தில் அவள் நீங்கா துயிலுக்கு சென்றுவிட்டாள்

எந்த அவசரத்தில் இந்த முடிவினை எடுத்தாளோ தெரியாது, ஆனால் தன் தாயினை நினைத்திருக்கலாம்

தாயோடு ஒட்டி செல்லும் குட்டி மானாக அவள் சென்ற காட்சிகள் நினைவுக்கு வருகின்றன. எங்கு அவள் தாய் நின்றாலும் வாழைகன்றாக அவளும் ஒட்டியே நிற்பாள்

இவை எல்லாம் சேர்ந்து நெஞ்சை கனக்க செய்கின்றன, அந்த ஊருக்கு செல்ல மனம் மறுக்கின்றது.

நாற்பது நாளும் தினசரி அவளுக்காக பிரார்த்துவிட்டேன், அது கண்ணீருடனே தொடங்கிற்று, கண்ணீருடனே முடிந்திற்று.

அற்ப மானிட பிறவி செய்யகூடிய உச்சபட்சம் அதுதான்.

அழவைத்த தெய்வம், அக்குடும்பத்திற்கு ஆறுதலை கொடுக்கட்டும்.

அந்த கொடிய நாளில் யாரிடமும் பேசவில்லை, ஓரிரு நாட்கள் கழித்து ஒருவர் போனில் சொன்னார்

“தேவ மாதா செத்துகிடந்தது போல இருந்துய்யா அந்த முகம்”

தெய்வங்கள் அந்நொடி மரித்திருக்க வேண்டும், இல்லாவிட்டால் இப்படியெல்லாம் ஏன் நடக்க போகின்றது.

வந்தது எல்லாம் செல்லும், சென்றது எல்லாம் திரும்பும் என்பதுதான் உலக தத்துவம்

அவசரமாக சென்றவள், அவசரமாகவே திரும்ப வரட்டும். அவளுக்காக காத்திருக்கின்றோம்

நம்பிக்கை இருக்கின்றது, நிச்சயம் ஓர்நாள் அவள் மறுபடி பிறப்பாள்.

அதுவரை இந்தவலி வலித்துகொண்டே இருக்கட்டும்.