அந்த சங்கருக்கு ஆழ்ந்த அஞ்சலி

Image may contain: 2 people, people standing
Image may contain: 1 person, standing
 

வீரமும் காதலும் நிரம்பியது தமிழன் வாழ்வு. சங்க இலக்கியம் எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன‌

இந்திய கலாச்சாரம் காதலுக்கு எதிரானதா? நிச்சயம் இல்லை பண்டைய இந்தியா காதலை வாழ்வின் ஒரு அங்கமாகவே வைத்திருந்தது

அதனால்தான் அதன் அழியா காவியங்களில் எல்லாம் காதலுகொரு இடமிருந்தது, அது ராமாயணம் ஆனாலும் சரி, சாகுந்தலை போன்ற காவியமானாலும் சரி. காதல் அதில் கலந்திருந்தது

மீராவின் காதலும், ஆண்டாளின் காதலும் , பக்தி மிஞ்சிய விஷயங்கள் என‌ கருதபட்டது. சந்தேகமிருப்பின் வைரமுத்துவிடமோ ஜீயரிடமோ கேட்கலாம்

அந்த மரபில் வந்ததால்தான் இன்றுவரை இந்தியாவின் எல்லா மொழி திரைபடங்களிலும் காதல் ஒரு தவிர்க்கமுடியா விஷயமாகின்றது

பண்டைய இலக்கியங்களை விடுங்கள். இந்திய கலாச்சாரத்தின் ஆணிவேர் இந்துமதம்

அதன் தெய்வங்களை கவனியுங்கள். அவை காதல் செய்யும் கசிந்துருகும், உருகி தவிக்கும், போரிட்டு மாலை சூடும்

மணவாழ்வினை வெறுக்கும் பிள்ளையார், ஆஞ்சநேயர் போன்ற சாமிகள் கூட காதலை சேர்த்து வைக்கும்.

இந்துமதம் வாழ்வின் எல்லா உணர்வுகளையும் கடவுளில் காணும் மதம், மற்ற எந்த மதத்திற்கும் இல்லா சிறப்பு அது

காதல் மனைவி இல்லா வாழ்வு முழுமையடையாது என்பதால்தான் முக்கிய தெய்வமெல்லாம் மனையாளோடு வீற்றிருக்கின்றது

ராமனின் ஒரே காதலை போற்றிய இந்துமதம், கண்ணனின் பல திருமணங்களையும் ஏற்றது.

இப்படியாக காதல் எனும் மானிட வாழ்வின் அங்கம் இந்தியர்களின் மதத்திலும் கலாச்சாரத்திலும் பெரும் இடம் பிடித்திருந்தது. இசை, பக்தி, சிற்பம், ஓவியம் என கலைகளில் எல்லாம் அதனை கொண்டாடினார்கள்

வீடுவிட்டு காடு சென்ற முனிவர்களுக்குமே காதல் வந்தது, அவர்களும் துறவில் காதலை ஒரு அங்கமாக்கினார்கள். புராணம் சொல்கின்றது

அற்புதமான காதல்களை சொன்ன இந்துமதம், தவறான காதலின் விளைவுகளையும் சொல்ல தவரவில்லை

இந்திரன் அகலிகை , சந்திரன் தாரா , வாலி , ராவணன் கதை எல்லாம் அதன் விளைவுகளை சொல்லி எச்சரித்தன‌

இந்திய கலாச்சாரம் என்பது இதுதான் ,

இந்த மரபில்தான் அழியா காவியமான தாஜ்மஹால் நிலைபெற்றது. ஷாஜகான் ஆப்கானிய வாரிசாக இருக்கலாம் ஆனால் அவன் சுவாசித்தது இந்திய காற்று. அக்காற்றில் கலந்திருந்த காதல் அவன் ரத்ததிலும் கலந்தது.

தமிழகம் இன்னும் சாலசிறந்திருதது அகம், புறம் என வாழ்வினை பிரித்தபொழுது அகம் முழுக்க காதலையே சொல்லிற்று

வள்ளுவன் ஒருபடி மேலே சென்று இன்பத்து பால் என்றொரு பிரிவினையே பாடினான்

இன்னும் நளவெண்பா முதல் எத்தனையோ அற்புதமான காதல் காவியங்கள் எல்லாம் தமிழில் கொண்டாடபட்டன, கம்பராமாயணம் இன்றளவும் கொண்டாட காரணம் காதலுக்கு கம்பன் சொன்ன வரிகளாலேதான்

காதலை இன்றும் உயர்வாக பார்க்கும் தமிழ் சமூகமிது,

அந்த சமூகத்தில்தான் சாதி பெயரால் கொலைகள் நடந்து காதல் ஜோடிகள் கதறவிடபட்டன‌

இவனோடு இவளோடுதான் வாழ்வேன் என மனதார விரும்பிய ஜோடிகளை பிரிக்க யாருக்கும் உரிமை இல்லை, அது அவர்கள் வாழ்வு

மேல்நாட்டில் பாருங்கள் 10 வயதை கடந்துவிட்டால் பிள்ளைகள் கொஞ்சம் கொஞ்சமாக பெற்றோரை விட்டு விலகுகின்றன, கடலுக்குள் படகினை கவனமாக இறக்குவது போல் இறக்கி 21 வயதில் இனி உன் வாழ்வு என விலகிவிடுகின்றார்கள்

நமக்குள்ள வாழ்வை நாம் வாழ்ந்துவிட்டோம், இனி அவர்களுக்கான உலகில் அவை நீந்தட்டும் என விட்டுவிடுகின்றார்கள்

அந்த பறவை தனியே பறக்கின்றது, வாழ்விற்கான விஷயங்களை தேடுகின்றது. அப்படியே தனக்கான மிக சிறந்த துணையினை தேடிகொண்டு வாழ்வினை தொடங்குகின்றது

பெற்றோரை எதற்கும் எதிர்பாரா ஜோடிகள் அவர்களுக்கு சுமையில்லை, விரும்பிய வாழ்வினை பிள்ளைகள் வாழ்வதில் பெற்றோருக்கும் சிக்கல் இல்லை

இதனால்தான் மேல்நாடுகளில் எதற்கெல்லாமோ நடக்கும் கொலைகள் காதலில் நடப்பதில்லை

இதில் முதலில் தெளிவாக எதில் இருக்கின்றார்கள் என்றால் பெண் என்பவள் சொத்து அல்ல, குலப்பெருமை அல்ல‌

அவளும் ஒரு உயிர் அவளுக்கும் ஆன்மா உண்டு, அவளுக்கும் ஆசை உண்டு என்பதை மதிக்கின்றனர். இந்த அடிப்படை புரிதல்தான் அங்கு பல சிக்கல்களை சந்திக்காமல் தடுக்கின்றது

இங்கு அப்படி அல்ல பெண் என்பவள் சொத்து. கிட்டதட்ட மாடு போல. அவளின் உரிமையினை தந்தையிடம் இருந்து கணவன் என்பவளிடம் மாற்றிகொடுப்பார்கள். அதனை வண்டி சுமக்க கழுத்தை ஓடிவந்து நீட்டும் மாட்டினை போல் அப்பெண் ஏற்றுகொள்ள வேண்டும்

மீறி தனக்கு பிடிக்கவில்லை என்றோ, தன் வாழ்விற்கான ஆசைகளை அவள் சொல்லிவிட்டாள் என்றோ நிலமை வந்துவிட்டால் வெடிக்கும் விஷயம்

ஏன்?

அப்படி பெண்ணுக்கான உரிமையினை கொடுத்துவிட்டால் அவர்களை மதிக்கமாட்டார்களாம், குடும்பத்தார் உறவு எல்லாம் ஒதுக்கி வைக்குமாம். இது வேறு சாதி என்றால் கொலையும் விழும்

தன் மகள் தனக்கான வாழ்வினை தேடிகொள்வதில் இவர்கள் மதிப்பு எங்கணம் குறையும் என்பதுதான் தெரியவில்லை, மதிப்பு என்பது பெண்ணை வளர்ப்பதிலா?

அவள் என்ன வீட்டு மாடா?

தோட்டவேலைக்கு மாட்டை வளர்ப்பது போலவா பெண்ணையும் வளர்க்க வேண்டும்? இதில் என்ன பெருமை?

அக்காலத்தில் கூட்டுகுடும்பம் உண்டு, முழுக்க விவசாயம். அதாவது குடும்பத்தார் எல்லோரும் மொத்தமாக உழைப்பர். குடுமபத்தை மீறி சென்று ஒருவன் வாழ்வது முடியாத விஷயம்

இன்று அப்படியா? ஆயிரம் வேலைகள், ஆயிரம் வாய்ப்புகள் இதில் பங்காளி என்ன? சாதி என்ன? ஒன்றும் யார் வாழ்வினையும் தடுக்க முடியாது, இன்றுள்ள சூழல் அப்படி

ஆனால் இக்காலத்திலும் யாருக்கோ பயந்து சொந்தங்களை பகைத்து வாழமுடியாது என்பதெல்லாம் அபத்தம், அதற்காக கொலை வரை செல்வதெல்லாம் முட்டாள்தனம்

காதல் எல்லோருக்கும் வரும், வராவிட்டால் அவன் மன நோயாளி

அக்காதல் சங்கருக்கும் வந்தது, இளவரசனுக்கும் வந்தது. திவ்யாவிற்கும் வந்தது, கவுசல்யாவிற்கும் வந்தது

ஆனால் சாதி வந்து தடுத்தது. தமிழகத்தின் சாதி வெறிக்கு அக்குடும்பங்கள் காவு வாங்கபட்டன‌

இளவரசனும், திவ்யாவின் தந்தையும் அந்த வெறிக்கு பலியாகினர்

சங்கர் கொல்லபட்டான், கவுசல்யாவின் தந்தை தூக்கு மேடையில் நிற்கின்றார்.

இதே காதல் கேரளாவிலும் அகிலா எனும் பெண்ணுக்கு வந்தது, அவள் ஹதியா என மாறியதால் மதம் அவளை காத்தது

ஆம் மதம்மாறினாள் என்பதற்காக அவள் காதல் காக்கபட்டதே அன்றி அவளுக்காய் அவள் காதலுக்காய் அல்ல‌

மதம் காதலுக்கு குறுக்கே வந்தால் மாறலாம். ஆனால் ஒரே மதமாயினும் சாதி குறுக்கே வந்தால் எங்கிருந்து மாறுவது?
ஒருகாலமும் முடியாது

யூத மதம் பிறப்பால் வருவது, இன்னொருவன் தான் யூதனாக மாறிவிட்டதாக சொல்லமுடியாது அவ்வளவு இறுக்கம் வாய்ந்த சமூகம் அது

ஆனால் அவர்கள் பெண்கள் காதலில் விழுந்தால் கூட இவ்வளவு கொடூர வெறிக்கு செல்லமாட்டார்கள், காரணம் அறிவு இருக்கும் இனம் அது

எந்த விஷயத்திலும் எது எல்லை என ஒன்றிருக்கின்றது, ஆனால் இந்த சாதிவெறியில் அது கொலைதான் எல்லை என்றிருப்பதுதான் கொடுமை.

வாழவேண்டிய 4 குடும்பங்கள் அழிந்தது இதனால்தான்

சாதி பெருமை, ஊர் பேச்சு, சொந்த பந்த அபிமானம், கவுரவம் எல்லாம் சேர்ந்து சாதித்தது என்னவென்றால் இப்படி குடும்பங்கள் அழிந்தது

இவை எதையும் உருவாக்காது மாறாக அடித்து கொல்லும் என்பதே இது உணர்த்தும் உண்மௌ

சாதி கொடுமை காதலில் புகுந்தால் என்னாகும் என்பதற்கு இளவரசன், சங்கரின் கல்லறை சாட்சியாய் நிற்கின்றது.

விஞ்ஞான யுகத்திலும் மாடுபோல பெண்களை சொத்தாகவே நினைக்கின்றனர் என்பதற்கு நினைவாய் கவுசல்யா நிற்கின்றார்

கவுசல்யா இனி காலம் உள்ள அளவும் சாதி கொடுமை அடையாளம்

முதுகுளத்தூர் கலவரம் , கீழவெண்மணி கொடூரம் போல கவுசல்யா தனி ஒரு அடையாளம், மாபெரும் கொடுமையின் வடு. அது தீராது

இன்னொரு சங்கர் சாக கூடாது, கவுசல்யா உருவாக கூடாது என்பதை தமிழகம் தோறும் எப்படி அடுத்த தலைமுறைக்கு போதிக்கின்றார்கள் தெரியுமா?

சாதி ஒழியுங்கள் என்றல்ல, மாறாக சாதிமாறி காதலித்தால் இப்படித்தான் ஒழிவீர்கள் என மிரட்டி போதிக்கபடுகின்றார்கள்

நடந்த கொடூரத்தைவிட மிக கொடுமையான விஷயம் இதுதான், இந்த மிரட்டல்தான்

இக்கொடுமையிலிருந்து வருங்கால தலைமுறையினை காக்க வேண்டிய பொறுப்பு எல்லோருக்கும் இருக்கின்றது

எந்த போராட்டத்திற்கும் ஒரு அடையாளம் வேண்டும், ஆவணகொலைக்கு எதிரான அடையாளமாக கவுசல்யா ஆகிவிட்டார்

இன்னொரு சங்கர் இறக்காதவாறு இச்சமூகம் திருந்தட்டும், ஆனால் அதற்கு நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என்பது உண்மை

செத்துபோன சங்கரையும், துடிக்கும் கவுசல்யாவினையும் நமக்கு தெரியும்

ஆனால் மனதார செத்த ஏராளமான சங்கரும், அனுதினமும் துடிக்கும் வெளிதெரியா கவுசல்யாக்களும் இங்கு ஏராளம் உண்டு

அவர்களை போன்றவர்களின் பாதிப்புகளே இனி வருங்காலத்தை மாற்றும்

ஒவ்வொரு அடியாக எடுத்துவைத்தால் நிச்சயம் ஒரு நாளில் இச்சமூகம் மீளும்

அதற்கு முதல் அடி எடுத்து கொடுத்த சங்கரின் நினைவு நாள் இன்று.

காதலுக்காக , சாதிமாறி காதலித்த ஒரே பாவத்திற்காக உயிரைவிட்ட அந்த சங்கருக்கு ஆழ்ந்த அஞ்சலி