அந்த விஷயத்தை பேசாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது

ஆளுநரை விமர்சியுங்கள், அவரின் சோதனையினை எதிர்த்து பேசுங்கள் அது வேறு விஷயம்

ஆனால் இப்படி கீழ்தரமாக விமர்சிக்கும்பொழுது அந்த பெண்ணையும் கொஞ்சம் நினைத்துபாருங்கள், செய்திகளுக்காக இங்கிலாந்து இளவரசி டயானாவினையே விரட்டிகொன்ற உலகம் இது, அந்த ஏழைபெண்ணை விடுமா?

எவ்வளவு வறுமையான குடும்பமாக இருந்தால் தென்னங்கீற்றுக்கு பின்னால் நின்று குளித்திருக்க வேண்டும், அந்த வறுமையினையும் அப்பெண்ணின் இயலாமையினையும் இப்படி பகிரங்கமாக சொல்ல வேண்டுமா?

அப்பெண் ஒன்றும் ஜடம் அல்ல, அவளுக்கும் மான அவமானங்கள் உண்டு, அவளுக்கும் ஒரு குடும்பம் உண்டு சுற்றம் உண்டு. அப்பெண்ணின் மனம் என்ன பாடுபட்டுகொண்டிருக்கும்?

கொஞ்சநாளைக்கு அப்பெண் வெளிவர முடியுமா? அவளின் வேலை முதல் பல பொறுப்புக்களை அவள் செய்ய முடியுமா?

அவள் யாராகவும் இருக்கட்டும், ஆனால் இந்த தமிழ்சமூகத்தின் பெண். அவளை பாதுகாக்க வேண்டியதும் அவளின் கண்ணீரை துடைக்க வேண்டியதும் இச்சமுகத்தாரின் கடமை அல்லவா?

பரபரப்புக்கு அப்பெண்ணை இழுத்துவிட்டு அரசியல் செய்வது நிச்சயம் நல்ல விஷயம் அல்ல‌

ஆளுநர் இதற்காகவா அங்கு சென்றிருக்க முடியும்? நிச்சயம் கவனகுறைவால் நடந்துவிட்ட விஷயத்தை இழுத்து அப்பெண்ணை செய்தியாக்குவது ஏற்றுகொள்ளவே முடியா விஷயம்

இதுவும் ஒரு வகை ஈவ் டீசிங், பெண்மையினை கொச்சைபடுத்தும் செயல்.

ஒருபாவமும் செய்யா அப்பெண்ணை நிம்மதியாக இருக்கவிடுவோம், ஆளுநரை கவனித்துகொள்ள ஏராள விஷயங்கள் இன்னும் வரும் அதில்பார்த்துகொள்ளலாம்

இப்போதைக்கு அந்த அபலைபெண்ணின் காயத்திற்கு மருந்திடும் விதமாக அந்த விஷயத்தை பேசாமல் இருப்பது எல்லோருக்கும் நல்லது