அன்னை மரியாளின் திருவிழா பனிமாதா திருவிழா
அன்னை மரியாளின் திருவிழா ஒன்று கொண்டாடபட்டுகொண்டிருக்கின்றது, பனிமாதா திருவிழா என பெயர், கத்தோலிக்கத்தில் பிரதானம்
பிரிவினைகள் இந்த ஆலயங்களை அனுமதிக்குமா? இல்லை இல்லை இது மோசடி என சபைகள் வாதிடும், அது அவர்கள் நம்பிக்கை. கேட்டால் இயேசு ஒருவர்தான் நமக்காக சிலுவையில் தொங்கினார் என்பார்கள், இல்லையே கூட இருவர் தொங்கினார்கள் என்றால் முறைப்பார்கள்
இயேசு பாடுபட்டு நம்மை மீட்டார் என்பார்கள், பரபாஸ் எனும் கள்ளனையும் விடுதலை செய்தார் என்றால் “அப்பாலே போ சாத்தனே” என ஒரு மாதிரி யூத சாபமிடுவார்கள், சொந்தமாக சாபம் கூட இடதெரியாத கூட்டம் அது.
அவர்களுக்கென்ன ஒரு பைபிள், ஒரு மைக், ஒரு காணிக்கை பெட்டி, எதிர்த்து கை காட்ட சில மாற்று மதம், போதும் முதலீடு முடிந்தது.
எது உருவ வழிபாடு? பைபிளில் மோயீசனும், சாலமோனும், இயேசுவும் வணங்கிய அந்த பெரும் கடவுளுக்கு உருவம் அமைத்தால் அதுதான் உருவ வழிபாடு,
அக்கடவுளை பயங்கர சிலையாகவோ, அல்லது அழகு தெய்வமாகவோ, மிருகமாகவோ, பறவையாகவோ அவ்வ்வளவு ஏன் எம்ஜிஆராக, ரஜினியாக, குஷ்பூவாக, நயந்தாரவாக சிலை வைத்து கொண்டாடினால் அது தான் உருவவழிபாடு, அதாவது எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கு நாமே உருவம் கொடுப்பது, அதனை அவரும் விரும்புவதில்லை
ஆனால் அன்னை மரியாள், இன்னும் புனிதர் பலர் இப்பூமியில் வாழ்ந்தவர்கள், அவர்கள் கடவுள் என யாரும் சொல்ல முடியாது, ஆனால் அவர்கள் கடவுளுக்காக பாடுபட்டவர்கள், வாழ்ந்தவர்கள் எனும் வகையில் அவர்களின் திருவுருவம் ஒரு சொரூபமாக வைக்கபட்டு நினைவுகூறபடுகின்றார்கள், இது எப்படி உருவ வழிபாடு ஆகும்? சொன்னால் சண்டைக்கு வருவார்கள், யூத சாபமிடுவார்கள்.
கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் புனிதர் நிலையினை அடைந்து இன்று தேவாலயங்களில் சொரூபம் நிலையில் உயர்த்தபட்டிருப்பவர்கள் எல்லாம் முதலில் தனக்காய் வாழ்ந்திருக்கமாட்டார்கள், ஏராளமான பாடுகளை அனுபவித்திருப்பார்கள், கவனியுங்கள் வாழும் காலமட்டும் அற்புதங்களை அடுத்தவர்களுக்கு செய்திருப்பார்கள்.
அவர்கள் காசு வாங்கியதாகவோ, கல்லூரி தொடங்கியதாகவோ, தன் வம்சத்தை அம்பானி அளவிற்கு உயர்த்தபாடுபட்டதாகவோ எங்கும் காணமுடியாது,
நிச்சயமாக அடுதத்த மக்களுக்கான தவ வாழ்வு அது.
இதில் மரியாளின் வாழ்வினையே பாருங்கள்
அவள் அன்று 17 வயது யூத கன்னிபெண், தொழுகையில் இருக்கும்போது ஒரு வானதூதன் வந்து, உனக்கொரு மகன் பிறப்பான், உலகை மீட்ப்பான் என சொல்லி மறைகின்றான், அவளும் மறுக்காமல் ஆண்டவரின் அடிமை என்கிறாள்
கவனியுங்கள், பழைய ஏற்பாட்டில் தானாக வந்து சகலரிடம் பேசும் கடவுள், இம்முறை தன் அவதாரம் பிறக்கும்பொழுது ஒரு தூதனை அனுப்புகின்றாரே இது ஏதும் மோசடியாக இருக்குமோ எனும் சந்தேகம் கூட இன்றி இதோ ஆண்டவர் அடிமை என்கிறாள், ஏற்றுகொள்கிறாள்.
இயேசு மனிதனாக அவதிரித்து உலகை மீட்டார் என்றால், அந்த இயேசுவினை பெற்றேடுத்து வளர்க்க படாதபாடு பட்டிருக்கின்றாள் மரியாள்.
அன்றைய யூத சமூகம் கன்னிபெண் குழந்தை சுமந்தால் நடுத்தெருவில் பழிசுமத்தி கொல்லும் கொடூரமுடையது எனினும் உயிருக்கு துணிந்து கடவுளுக்கு பணிகிறாள், ஆயினும் நீதிமான் அவளை மனைவியாக ஏற்கின்றான்.
அதன் பின் நிறைமாத கர்ப்பிணியாக கழுதை மேல் 200 கிமி பயணித்து ஒரு மாட்டு தொழுவத்தில் அனாதையாக, அபலையாக ஒரு தேவகுமாரனை பெறுகிறாள், கவனியுங்கள் அனாதை பிரசவம்.
அதன் பின்னும் சித்திரவதை, அந்த பச்சிளங்குழந்தையினை தூக்கிகொண்டு ஏரோதுக்கு அஞ்சி எகிப்திற்கு ஓடுகின்றாள்,பச்சை உடம்பு எனும் பிரசவ கால வேதனைகளோடு
அந்த அந்நிய தேசத்தில் கைகுழந்தையோடு என்ன பாடுபட்டிருப்பாள்? அதன் பின் இஸ்ரேல் வந்து வறுமையொடு போராடுகின்றாள்
கொஞ்சநாளில் கணவனும் இறந்து விதவையாகி ஒரே மகனுடன் வறுமையில் போராடுகின்றாள், அம்மகனும் 30ம் வயதில் போதிக்க போய், 33ம் வயதில் தாய் கண்முன்னே சிலுவையில் அடித்து கொல்லபடுகின்றான், அதன் பின் அவள் அனாதை, முழு அனாதை
(மரியாளுக்கு ஒரே மகன் என்பதுதான் மூல பைபிள் சொல்லும் செய்தி, மொழிபெயர்ப்பின் போது அவரின் குடும்பத்தார்கள் இயேசுவின் சகோதரர்கள் என தமிழில் மொழிபெயர்ந்தபோது பதியபட்டார்கள் , மற்றபடி யேசு ஒரே மகன் என்பதுதான் உண்மை)
அவள் வாழ்க்கை இதனைத்தான் சொல்கின்றது, காலமெல்லாம் கொடிய துன்பத்தை சுமந்தே அலைந்திருக்கின்றாள், ரத்த கண்ணீர் வடித்திருக்கின்றாள், ஆனால் ஒருவார்த்தை இறைவனை பழித்ததுமில்லை, அவரை தூற்றியதுமில்லை
எப்படிபட்ட குணம் அவளுக்கு? ஒரு திருமண வீட்டில் ஒயின் தீர்ந்துவிடுகின்றது, மகனே இவர்களுக்கு உதவு என்கிறாள, மகனும் தண்ணீரை ஒயினாக மாற்றி ஆச்சரியம் செய்கின்றான், அவளோ உதவிய திருப்தியில் ஒதுங்குகின்றாள்
பணத்திற்கு ஆசைபட்டு வீட்டில் நீரை எல்லாம் மகன் மூலம் ஒயினாக்கி, விற்றுகொண்டு அரண்மனை கட்டினாளா? அல்லது என் மகன் நோய்களை சுமகாக்க இவ்வளவு கட்டணம், பேய்விரட்ட இவ்வளவு கட்டணம் என வசூலித்தாளா? நன்கொடை திரட்டினாளா?
இல்லை, இறைவன் இலவசமாக கொடுத்தார்,நாமும் இலவசமாக கொடுப்போம் எனும் உயர்ந்த சிந்தனையே அவளிடம் ஓங்கி இருந்தது.
ஏன் கத்தோலிக்க திருச்சபை மரியாளை அப்படி உயர்ந்த இடம் கொடுத்து பீடத்தில் வைத்திருக்கிறது என்றால், அவள் கடவுள் அல்ல மாறாக அவளை பார்க்கும்பொழுது கிறிஸ்தவர்கள் சிந்திக்கவேண்டும் என்பதற்காக
துன்பங்கள் வரும்பொழுதெல்லாம் தனக்கு விருப்பமான தேவமாதா பட்ட சிரமங்களை விடவா ஆண்டவன் நமக்கு கொடுத்துவிட்டான் என நிம்மதி கொள்ளவேண்டும் அந்த நிம்மதியில் இறைவனை போற்றவேண்டும் என்பதற்காக
இறைமகன் யேசுவின் அவதார வாழ்க்கையில் அவரின் ஆணிவேராக மரியாள் எப்படி தவவாழ்வு வாழ்ந்திருக்கின்றார் என்பதற்காக
சங்கடங்கள் வந்தாலும் இறைவனுக்காக வாழும் வாழ்வில் மரியாள் ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என்பதர்காக, அவள் எப்படி துயரங்களை தாண்டி வந்தாளோ அப்படி நாமும் தாண்டவேண்டும் என்பதற்காக
அதனால்தான் உலகெல்லாம் அவருக்கு ஆலயங்கள் பெருகின, கிறிஸ்தவர்கள் அந்த தியாகத்தை மறக்கா வண்ணம் நினைவுபடுத்திகொண்டிருக்கின்றார்கள்
வாழும் காலத்திலே மற்றவர்களுக்காக தன் மகனிடம் வேண்டிகொண்ட மரியாள், இன்றும் தன்னை நம்பியோருக்காக இறைவனிடம் மன்றாடுகிறாள் என்பது கிறிஸ்தவர்கள் நம்பிக்கை.
வேளாங்கண்ணி மாதா, பரலோக மாதா, ஆரோக்ய மாதா, பூண்டி மாதா, சந்தண மாதா, தஸ்நேவிஸ் மாதா என ஏகபட்ட மாதாக்கள் உண்டு.
ஒரே மாதாதான், பல்வேறு பெயர்களில் அறியபடுகின்றார்
பாத்திமா மற்றும் லூர்து, வேளாங்கண்ணி ஊர்களில் காட்சி கொடுத்ததால் அந்த ஊர் மாதாவாகிவிட்டார்
அது என்ன தஸ்நேவிஸ்??
3ம் நூற்றாண்டில் அன்றைய ரோமாபுரியில் கிறிஸ்தவம் பரவிக்கொண்டிருந்தது, மாதா பக்தியும் பரவியது. அங்கு ஜாண் என்பவர் மனைவியோடு வசித்தார், குழந்தை பாக்கியமில்லை
மாதாவிடம் வேண்டிகொண்டவருக்கு அன்றே காட்சி அருளபட்டது, “எஸ்கலின் மலையில் ஒரு இடத்தில் பனிபெய்திருக்கும் அங்கே எனக்கு ஆலயம் கட்டு, உன் வம்சம் செழிக்கும்” என சொல்லி சென்றார் தேவதாய்
7 குன்றுகளின் நகரம் என ரோமை சொல்வார்கள், அதில் ஒரு குன்றான எஸ்கலின் குன்றிற்கு ஓடி சென்றார் ஜாண், பனியே இல்லா அந்த காலத்தில் ஒரிடத்தில் மட்டும் பனிகொட்டி கிடந்தது
அது ஆகஸ்டு 5ம், நாள். அதன்பின் அவருக்கு ஆலயம் கட்டபட்டது, அற்புதம் நிகழ்ந்தது. அத்தம்பதியரும் குழந்தை வரம் பெற்று வாழ்வாங்கு வாழ்ந்தனர்
இந்த மாதா பனி மாதா (Lady of Snow) என அழைக்கபட்டார், பனிமாதா என்பது போர்ததுகீஸ் மொழியில் தஸ்நேவிஸ் மாதா என்றானது. (போர்ச்சுகல் மொழியில் பனி என்றால் தஸ்நேவிஸ்),
தஸ்நேவிஸ் மாதா என்பதும் பனிமாதாவே , மொழி மட்டும்தான் குழப்பம்
செயிண்ட் எனும் வார்த்தை போர்த்துகீசிய மொழியில் சாந்தா என வரும், அப்படி செயின்ட் குரூஸ் சாந்தா குரூஸ் ஆனது, செயிண்ட் தோம் என்பது சாந்தோம் ஆனது
செயின்ட் மேரி என்பதும் சாந்தா மேரி ஆனது, தமிழர் சந்தண மாதாவாக மாற்றிவிட்டனர், மற்றபடி மாதாவிற்கும் சந்தணத்திற்கும் சம்பந்தமில்லை
இந்தியாவில் போர்த்துகீசியரோடு தஸ்நேவிஸ்மாதாவும், பாத்திமா மாதாவும் பிரெஞ்ச்காரரோடு லூர்து மாதாவும், பிரிட்டிசாரோடு பனிமாதாவும் வந்தனர்.
பின் வேளாங்கண்ணியில் மாதா வந்து அமர்ந்தபின் போர்த்துகீசியரும் வந்து அவரை வேளாங்கண்ணி மாதா ஆக்கிவிட்டார், ஆனால் தமிழக மக்கள் அவருக்கு வைத்த பெயர் ஆரோக்ய மாதா
தென்னகத்தில் பனிமாதாவிற்கு இரண்டு பிரசித்தி பெற்ற ஆலயம் உண்டு, ஒன்று தூத்துகுடி இன்னொன்று தெற்கு கள்ளிகுளம்
இதில் தூத்துகுடி முதலானது அன்றே போர்த்துகீசியர் கடற்கரை மக்களுக்கு கடற்கொள்ளையரிடம் இருந்து பாதுகாப்பு அளித்து அவர்களை தங்களில் ஒருவராக மாற்றியதில் இருந்து அந்த ஆலய வரலாறு தொடங்கிற்று
கள்ளிகுளம் காலத்தால் பிந்தியது ஆனால் சிறப்பானது அந்த ஊரில் மாதா காட்சி கொடுத்த வரலாறு உண்டு, அந்த ஆலயம் கட்ட மாதாவே பனிபெய்ததாகவும் வரலாறுகள் உண்டு
சிறிய ஊர்தான் ஆனால் மிக உயரமான கோபுரத்தை 140 ஆண்டுகளுக்கு முன்பே கட்டியிருக்கின்றார்கள், இன்று இது தமிழகத்தின் மிக உயர்ந்த கோபுரம் என சவால் விடுகின்றார்கள், திருச்செந்தூர் நாசரேத் ஊரின் கோபுரமும் மிக உயரமானது
இதில் எது மிக உயரம் என்பது இருவரும் அளக்கவேண்டிய விஷயம், நாம் பனிமாதா ஆலயத்திற்கு வரலாம்
கள்ளிகுளம் மலையில்தான் மாதா காட்சி கொடுத்தார் என்பார்கள். அங்கு சிறிய ஆலயம் உண்டு, அந்த பொத்தை அவ்வூருக்கு அழகு, இக்காலகட்டத்தில் ஒரு விஷயம் புரிகின்றது. மலை உச்சியில் கோவில் இல்லாவிட்டால் பல மலைகள் இன்று கல்குவாரி என உடைக்கபட்டிருக்கும்
பல மலைகளை கோயில்கள்தான் காத்து வருகின்றன
ஒரு ஊருக்கு கோவில் அழகு என்பதும், கோயில் இல்லா ஊரில் குடியிருக்கவேண்டா என்பதும் நிதர்சனமான உண்மை
முன்பொரு காலம் ஆசிரியர் சேவியர் சற்குணம் என்பவரிடம் பேசும்பொழுது சொல்வார். (சற்குணம்
நடிகர் கரிகாலனின் தந்தை, மிக சிறந்த பேச்சாளர், அவர் பெரும் பேச்சாளர், ஒருமுறை எம்ஜிஆர் மேடையில் பேசும்பொழுது எம்ஜிஆர் தன் மோதிரத்தையே கழற்றி அவருக்கு போட்டு அழகுபார்த்தார்)
அவர் சொன்னார்
“அன்னைக்கே எங்க ஊர்காரன் எப்படி கட்டியிருக்கான் பாத்தியளா? இனி கோடி கோடியா கொட்டினாலும் அப்படி ஒரு ஆலயம் கட்ட முடியும்ணு நினைக்கிறியளா? கனவிலும் நடக்காது
தஞ்சாவூருக்கு ஒரு கோயில்னா , எங்களுக்கும் ஒண்ணு இருக்கு பாத்தியளா..
.கோயில்தான் இரண்டு ஊருக்குமே பெருமை”
உண்மையில் அந்த ஆலயம் அவ்வளவு அழகு, அது பிரான்ஸ் கட்டகலை அழகு அது, கூடவே போர்த்துகீசிய சாயலும் தெரியும்.
அவ்வாலயம் எல்லா மக்களுக்குமானது, மனமுருகி யார் வேண்டி கேட்டாலும் மரியாள் அவர்களுக்காக இறைவனிடம் மன்றாடுவார் என்பது நம்பிக்கை, அப்படி யாரும் செல்லலாம், வணங்கலாம். மனிதர் எனும் ஒற்றை தகுதி போதும்
மனதார நினைத்தால் அவரே வந்து ஆசீர்வதிப்பார், அவள் இரக்கமுள்ளவள்,இது என் தேவை என பணிந்து நின்றவர்களுக்கு அவள் இல்லை என சொன்னதே இல்லை, காரணம் அவள் உலக மக்களுக்கெல்லாம் தாயாக தன்னை கருதுபவள்.
அந்த மரியாளின் திருவிழாவினை கொண்டாடும் அவ்வாலயத்தின் பக்தர்களுக்கு திருவிழா நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்.
“மரியாளே பெண்களுக்குள் ஆசீர்வதிக்கபட்டவர் நீரே” எனும் வானதூதரின் வார்த்தையும், “எல்லா தலைமுறையும் என்னை பேறுடையாள் என போற்றுமே” என்ற மரியாளின் பதிலும் முக்காலமும் உண்மையானவை
