அபிராமி அந்தாதி : 45

அபிராமி அந்தாதி : 45

“தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது துணிந்து இச்சையே
பண்டு செய்தார் உளரோ இலரோ அப்பரிசு அடியேன்
கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ
மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே”

‍பட்டர் தொடர்ந்து பாடுகின்றார் முதல் வரியினை “தொண்டு செய்யாது தொண்டு செய்யாது நின் பாதம் தொழாது” என தொடங்குகின்றார்

பட்டர் பல விஷயங்களை கவனிக்கின்றார், பெரும் ஞான சித்தி அடைந்தவர்கள் ஆகம விதிபடி மாலை தொடுப்பதில்லை பூஜை பொருளுடன் பூஜை செய்வதில்லை அவர்கள் பெரும் ஞான நிலை அடைந்தது எப்படிஎன அவருக்கு ஒரு சந்தேகம் எழுகின்றது

ஒரு பக்தன் அன்னையினை விழுந்து விழுந்து வணங்குகின்றான், அனுதினமும் அவளை ஆராதிக்கின்றான் மாலை சூடி பாடுகின்றான், ஆச்சாரம் விரதமெல்லாம் மேற்கொள்கின்றான், அங்கபிரதட்சனம் முதல் எல்லா வழிபாடுகளையும் செய்கின்றான்

ஆனால் அவனுக்கு கிடைக்காத ஞானமும் அருளும், ஒன்றுமே செய்யாதவருக்க்கு கிடைப்பது எப்படி? என சிந்திக்கின்றார்

அவர் நினைவில் சண்டேஸ்வர நாயனாரோ, இல்லை கண்ணப்ப நாயனாரோ, சுந்தரரோ வந்திருக்கலாம், இல்லை திருமூலர் போன்ற மகா ஞானிகள் வந்தார்கள்

அமாவாசையில் நிலாவினை கொண்டுவந்த காட்சி கவி காளிதாசன் வாழ்வில் உண்டு , வேலூரில் வாழ்ந்த ரத்னகேட தீட்சிதர் என்பவர் வாழ்விலும் உண்டு

தான் அம்பாளுக்கு பெரும் பணிவிடை செய்ததால் அவள் தன்னை அமாவாசை அன்று நிலாவினை வரவைத்து காத்திருக்கலாம் இவர்கள் அப்படியா செய்தார்கள் என பட்டருக்கு சந்தேகம் எழுந்தது

ஆக அன்னையே வழிபாடும் பூஜையும் அடியார் தொண்டும் செய்யாமலே ஒருவனால் உன் அருளை பெறமுடியுமா என கேட்கும் பட்டர், அடுத்த வரிக்கு வருகின்றார்

“துணிந்து இச்சையே பண்டு செய்தார் உளரோ இலரோ” என்கின்றார்

உனக்கான பணிவிடை செய்யாமல் மிக தைரியமாக தங்கள் விரும்பிய வழிபாட்டை செய்தவர்கள் அக்காலத்தில் இருந்தார்களோ இப்பவும் இருக்கின்றார்களோ என தனக்கு தெரியாது என்கின்றார் பட்டர்

அதாவது ஆகம விதிபடி அன்னையினை வணங்காமல் அவர்களுக்கு தெரிந்த வழியில் வணங்கினார்கள் அல்லவா? அதைத்தான் சொல்கின்றார் பட்டர்

அதனை சொன்ன பட்டர் அடுத்த வரிக்கு வருகின்றார்

“அப்பரிசு அடியேன் கண்டு செய்தால் அது கைதவமோ அன்றிச் செய்தவமோ” என்கின்றார், அதாவது அவர்களெல்லாம் உன் தொண்டு செய்யாமலே பெரும் சக்தியுடன் பெரும் ஞானத்துடன் வலம் வரும்பொழுது நானும் அதை செய்தால் என்ன? எனும் பட்டர் தொடர்கின்றார்

“மிண்டு செய்தாலும் பொறுக்கை நன்றே பின் வெறுக்கை அன்றே” என்கின்றார்

அன்னையே நான் எப்படி இருந்தாலும் அதாவது உன் தொண்டை செய்து வழிபட்டாலும் இல்லை அவர்கள் வழியில் சும்மா இருந்து வழிபட்டாலும் நீ என்னை வெறுக்க கூடாது என வேண்டிகொள்கின்றார்

இப்பாடலின் பொருள் இலகுவானதுதான், நேரடியாக புரிந்துகொள்ள கூடியதுதான்

“உன் கோவிலுக்கே வராமல் , பூஜையோ வழிபாடோ செய்யாமல் பலர் உன் அருள் பெற்றிருக்கின்றார்களே. அவர்கள் விரும்பிய வழியெல்லாம் சென்றும் நீ அருள் புரிகின்றாயே, நானும் அப்படி செல்லட்டுமா? சொல். நான் அப்படி சென்றாலும் நீ என்னை வெறுக்க கூடாதம்மா” என்பதே பொருள்

மேலோட்டமாக பார்த்தால் இப்பாடல் உனக்கு தொண்டு செய்யாத சரபோஜி மன்னர் எப்படி செல்வம் பெற்றார், எங்கோ வீற்றிருக்கும் தவமுனிகள் ஆலய தொண்டே செய்யாமல் எப்படி சக்திபெற்றார் என்பதையும் பாடி பட்டர் புலம்புவது போல தோன்றும்

ஆனால் பட்டர் அந்த பொருளில் பாடவில்ல்லை முழுக்க அறிந்த ஞானத்தில் சொல்கின்றார்

ஒரு உதாரணம் சொல்லவேண்டுமென்றால் நிறைய செல்வம் சேர்த்துவிட்டவனுக்கு புதிதாக தேட அவசியமில்லை ஆனால் அவனை புதிதாக பார்ப்பவனுக்கு இவனிடம் எப்படி இவ்வளவு வந்தது என தோன்றும்

கல்லூரி மாணவனை காணும் முதல் வகுப்பு மாணவன் இவன் ஏன் தன் பாடங்களை படிப்பதில்லை என தோன்றும்

அதாவது எல்லாம் கடந்துவிட்ட ஒருவரை கண்டு புதிதாக வருபவர்கள் திகைப்புடனே பார்ப்பார்கள் இது உலக இயல்பு

அதைத்தான் இங்கு ஆறுதலாய் அன்னையினை நோக்கி சொல்கின்றார் பட்டர்

அன்னையே அவர்கள் இப்பிறவியில் செய்யாவிட்டாலும் ஏதோ ஒரு பிறவியில் நிரம்ப உனக்கு உழைத்திருப்பார்கள் அது இப்பிறவியில் அவர்களுக்கு வாய்த்திருக்கின்றது என ஆறுதல் அடைகின்றார்

ஆம், அன்னையின் அருள் பெறுவதற்கு இந்த ஜென்ம தொண்டுமட்டும் அல்ல போனஜென்ம தொடர்ச்சியும் உண்டு என்கின்றார் பட்டர்.

கர்மயோகம் , பக்தியோகம், ஞானயோகம் என மூன்று வழிகள் உண்டல்லவா. அதனில் பக்தியோகத்தில் இருக்கும் பட்டர் மற்ற இரு யோகங்களிலும் அன்னையினை அருளை பெறமுடியும் என சுட்டிகாட்டுகின்றார்

பக்தியோகம் என்பது ஆலயபணிகளும் தொண்டுகளும் பூஜைகளும் செய்வது, கர்ம யோகம் என்பது கர்மம் எனும் லவுகீக வாழ்வில் இருந்துகொண்டே அன்னையினை ஆராதிப்பது

இந்த ஞானமார்க்கம் என்பது ரிஷிகள் யோகிகள் செல்லும் வழி, நிஷ்டையிலே அவர்கள் எல்லாம் பெற்றுகொள்வார்கள்

ஞானமார்க்கம், பக்திமார்க்கம், யோக மார்க்கம் என எந்த வழியில் அன்னையினை தொழுதாலும் பலன் உண்டு, இப்பிறவியில் இல்லை என்றாலும் நிச்சயம் இன்னொரு பிறவியில் பலன் உண்டு என்பது பட்டர் சொல்லும் தத்துவம்

பக்திமார்க்கத்தில் அன்னையினை அனுதினமும் வழிபட்டு அவளை அவ்வகையில் வணங்காமல் செல்வமும் வாழ்வும் பெற்ற்வர்களை பார்த்து வியந்து அன்னை மேல் அவநம்பிக்கை கொள்ள கூடாது, அவர்களெல்லாம் ஏதோ ஒரு வழியில் என்றோ அன்னையினை வணங்கியவர்கள் அல்லது கர்ம ஞான வழியில் அன்னை அருளை பெற்றவர்களாக இருப்பார்கள்

அதனால் நாம் கடமை எதுவாயினும் அதன்வழி அன்னைக்கு தொண்டும் பக்தியும் செலுத்திவந்தால் உரிய நேரத்தில் அல்லது உரிய பிறவியில் அவள் நிச்சயம் கைகொடுப்பாள் என்பது பாடலின் பொருள்