அபிராமி அந்தாதி : 53
“சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்
பென்னம்பெரிய முலையும் முத்தாரமும் பிச்சி மொய்த்த
கன்னங்கரிய குழலும் கண் மூன்றும் கருத்தில் வைத்துத்
தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே”
தன் முந்தையபாடலில் அன்னையின் அடியார்கள் அடுத்தபிறவியில் அரசர்களாக பிறப்பார்கள் என சொன்னார் அல்லவா, அப்படி சொல்லிவிட்டு அன்னையின் பக்தியில் மறுபடியும் மூழ்குகின்றார், அன்னையின் திருமேனியினை கண்முன் தியானிக்கின்றார், அப்படி தியானித்தவர் அன்னையின் பொலிவான தோற்றம் பற்றி மேற்கண்டபாடலை பாடுகின்றார்
பாடலை கொஞ்சம் ஆழமாக காணலாம்
அன்னையின் தோற்றத்தை அவளின் இடுப்பிலிருந்து காண்கின்றார் பட்டர் “சின்னஞ்சிறிய மருங்கினில் சாத்திய செய்யபட்டும்” என தொடங்குகின்றார்
அதாவது அன்னையின் இடுப்பு மிக மிக ஒடுங்கி இருக்கின்றதாம், அந்த ஒடுங்கிய இடுப்பை “சின்னஞ்சிறிய மருங்கினில்” என்கின்றார், அந்த இடுப்பில் செம்பட்டு எனும் அழகான பட்டாடை உடுத்தபட்டிருக்கின்றது அதையும் குறித்து “சாத்திய செம்ப்பட்டும்” என்கின்றார்
அன்னையின் இடை சிறியது, அது எவ்வளவு சிறியது என்றால் ரோம கொடிகளை கொண்டுதான் இது இடை என அறியபடும்படி சிறியது என்கின்றது லலிதா சஹஸ்கரநாமம்
“லக்ஷ்யரோம- லதா-தாரதா- ஸமுன்னேய-மத்யமா” என லலிதா சஹஸ்கரநாமத்தில் ஒரு வரி உண்டு அதன் பொருள் ரோமகொடி போல மெல்லிய இடை கொண்டவளே என்பதாகும்
அதே சஹஸ்கர நாமம் “அருணாருண-கௌஸும்ப-வஸ்த்ர-பாஸ்வத்” என்கின்றது அதன் பொருள் இடையில் செம்பட்டை அணிந்தவளே என்பதாகும்
ஆம் சஹஸ்ரநாமம் சொல்லும் வரிகளை இப்படி தன் மொழியில் பாடும் பட்டர் தொடர்கின்றார், சற்று கண்களை மேல்நோக்கி பார்க்கின்றார்
“பென்னம்பெரிய முலையும் முத்தாரமும்” என அடுத்தவரிக்கு வருகின்றார், அன்னைக்கு இடுப்புதான் சிறியதே தவிர தனங்கள் பெரியவை எனும் பட்டர் அந்த தனங்கள் மேல் அழகான முத்துமாலைகள் அழகூட்டுவதையும் மறக்காமல் சொல்கின்றார்
இந்த இடத்தில் ஒரு ஞானமான விஷயத்தை நோக்க வேண்டும், சாமான்யருடைய பார்வையில் இருந்து விலகி ஞானியின் கண்ணில் நோக்க வேண்டும்
பட்டர் அன்னையின் இடுப்பையும் தனத்தையும் பார்த்து பாடுவது ஞானநிலையினால பாடல்
எல்லா உயிர்களும் அன்னையிடம் இருந்தே தோன்றுகின்ற்ன, அன்னையே எல்லா உயிருக்கும் தாய் எனும் நிலையில் இந்த சிறிய வயிற்றில் இருந்து எல்லா உயிர்களையும் பெற்று என்னையும் பெற்றவளே என உருகுகின்றார் பட்டர்
செம்பட்டு என்பது ரத்தத்தை குறிக்கும் நிறம்
ரத்த உயிர்களெல்லாம் தாயின் வயிற்றில் கருவாகி வருவதுபோல அன்னையின் சிறிய வயிற்றில் இருந்து வந்த உயிர்களே உலக உயிர்கள் தானும் அதனில் ஒருவன் என உணர்கின்றார்
அன்னை குழந்தைக்கு பாலூட்டுவது போல உலக உயிர்க்கெல்லாம் உணவும் ஞானமும் தருபவள் அன்னை , அவ்வகையில்தான் ஞானபாலை தரும் தாயாகத்தான் அவர் அன்னையின் தனங்களை காண்கின்றார்
பின் இன்னும் கண்களை மேலே எழுப்புகின்றார், அங்கு காணும் காட்சியினை அடுத்து படிக்கின்றார்
“பிச்சி மொய்த்த கன்னங்கரிய குழலும் கண் மூன்றும்” என்கின்றார்
அன்னை தன் சிரசில் பிச்சிப்பூ சூடியிருக்கின்றாள் என்பதை காண்கின்றார், அப்படியே அன்னையின் மூன்று கண்களையும் காண்கின்றார்
ஆம் சிவனின் குடும்பத்தில் எல்லோருக்கும் மூன்று கண்கள் உண்டு, முக்கண்ணன் குடும்பம் என அக்குடும்பத்துக்கு பெயர், அவ்வகையில் அன்னைக்கும் கண்கள் மூன்று
அன்னையினை இதனால் திரிநயனா, திரிலோசனா, திரயம்பகா என இதர பெயர்களிலும் அழைப்பார்கள்
இப்படி அன்னையின் தோற்றத்தை நினைந்து கொண்டே கடைசி வரியினை பாடுகின்றார்
“கருத்தில் வைத்துத் தன்னந்தனியிருப்பார்க்கு இது போலும் தவமில்லையே” என்கின்றார்
அன்னையின் இந்த அழகிய தோற்றத்தை நினைத்து தனித்து அமர்ந்து தியானித்து மகிழ்ந்தால் அதுபோல் தவம் இல்லையே என்கின்றார் பட்டர்
“தன்னந்தனியாயிருப்போர்க்கு” எனும் வார்த்தை கவனிக்கதக்கது
அதாவது அன்னைக்கு கூடி பொங்கலிடலாம் ஆனால் பிரசாதத்தை தனியாகத்தான் உண்ண வேண்டும்,கூடி வழிபடலாம் ஆனால் தனியாகதான் தியானம் செய்ய வேண்டும்
அப்படி தியானிக்கும் பொழுது இந்த கோலத்தைவிட அழகான விஷயம் எது, அன்னையின் திருகோலத்தை தியானிப்பதே பெரும் தவமாகும், அந்த தவத்தின் பலன் அன்னை வழங்கும் ஞானமுக்தியாகும் என பாடலைமுடிக்கின்றார் பட்டர்
இப்பாடல் அன்னையின் தோற்றத்தை குறிப்பதாக பாடபட்டாலும் மறைவாக இப்பாடல் சொல்லும் விஷயம் இரண்டு
முதலாவது விஷயத்தை காணலாம்
ஒன்றுமில்லாதது போல தோன்றும் இடையில் , செம்ம்பட்டு சூழ்ந்த இடையில் என்பது அன்னை ஒன்றுமில்லா இடத்திலிருந்து உயிர்களை படைத்தாள் என்பது, அன்னைக்கு எல்லா உயிர்களும் பிள்ளையே நாமும் அவளின் பிள்ளையே என்பதும்
அன்னைக்கு பெரிய தனங்களும் அதன் மேல் முத்துமாலையும் உண்டு என்பது அன்னை எல்லா உயிர்க்கும் அமுதூட்டி வளர்ப்பவள், ஞானஒளியாய் ஜொலிப்பவள் என்பதை சொல்கின்றது, அன்னை எல்லா உயிரையும் காக்கின்றவள் என்பதும்
அந்த அன்னை தலையில் பிச்சுபூ சூடியவள் அதாவது வேதங்களை தலையில் சூடி மூன்றாம் கண் எனும் ஞான கண்திறந்த மேலான நிலையில் இருப்பவள் நம்மை மூன்றுகண்களால் கண்காணிப்பவள் என்பதும் பொருளாகின்றது
அன்னை நம்மை பெற்றவள், நமக்கு வேண்டிய அமுதும் ஞானமும் தந்து வளர்ப்பவள் எல்லாவற்றுக்கும் மேலாய் மூன்று கண்ணோடு நம்மை காப்பவள், அந்த அன்னையினை நினைந்து தியானித்தால் எல்லா வளமும் ஞானமும் வரும் என்பது முதற்பொருள்
இரண்டாம் பொருள் கொஞ்சம் ஆழமானது
அதாவது வயிற்றில்தான் மூலாதார சக்கரம் அடியில் அமைந்துள்ளது, தியானத்தில் அமரும்பொழுது குண்டலினி சக்தி அங்கிருந்துதான் மேல் நோக்கி எழும்
வயிற்றில் இருந்து எழும் அந்த சக்தி நெஞ்சுக்கு வந்து பின் தலைக்கு வரும், ஆறு சக்கரம் வழியாக வரும், தொடர்ந்து வரும்
உச்சத்துக்கு அந்த சக்தி வரும்பொழுது ஞானம் பெருகி முக்காலமும் அறியும் மூன்றாம் கண் திறக்கும், இந்த நிலையினை அடைந்தவர்கள்தான் ஞானியரும் யோகியரும்
தனித்து அமர்ந்து அன்னையினை வேண்டினால் குண்டலினி சக்தி வயிற்றில் இருந்து எழுந்து நெஞ்சுக்கு வந்து அங்கிருந்து சிரசுக்கு சென்று ஞானக்கணை திறக்கும் என்பதையும் இப்பாடல் சொல்கின்றது
அன்னை எல்லா உயிருக்கும் தாயானவள், எல்லா உயிரையும் காப்பவள், அவள் வேதங்களை தலைக்கு சூடி மூன்று கண்ணோடு அருள் புரிபவள் என்பதை சொல்லும் பட்டர் அப்படியே அன்னையினை நினைந்து தியானித்தால் குண்டலினி சக்தி எழுந்து தலைக்கு சென்று ஞானகண்ணை திறக்கும் நிலையினை அடையலாம் என்பதையும் சூசகமாக போதிக்க்கின்றார்