அபிராமி அந்தாதி 58

அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்
தருணாம்புயமுலைத் தையல் நல்லாள் தகை சேர் நயனக்
கருணாம்புயமும் வதனாம்புயமும் கராம்புயமும்
சரணாம்புயமும் அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே

இங்கு அம்புயம் என்றால் தாமரை எனும் பொருளை தெரிந்துகொண்டு மேற்கொண்டு காணலாம்

இந்து ஞானமரபில் தாமரை முக்கியமானது, அது ஞானமலராக ஞானம் மலர்வதன் குறியீடாகவே கருதபட்டது, இந்துமதத்தின் எல்லா பிரதான தெய்வங்களையும் அம்மதம் தாமரை மலர்மேல்தான் நிறுத்திற்று, பிரம்மன் முதல் தேவி வரை அது தாமரையில் வைத்து மகிழ்ந்தது

தாமரை என்பது ஞானத்தின் வெளிப்பாடாகவே இந்துமரபில் இருந்தது, இதனாலே ஆலயங்களின் சிலைகள், பலிபீடங்கள், ஓவியங்கள் என எல்லா இடத்திலும் தாமரை இடம்பிடித்தது, தாமரை இல்லா இந்து ஆலய சிற்பமோ ஓவியமோ எதுவுமில்லை அந்த அளவு நீங்கா இடம்பிடித்தது தாமரை

தாமரை பல இதழ்களை கொண்டது, மென்மையானது, குளிர்ச்சியானது, நீரில் இருந்து விலகி நின்று மலர்ந்து நிற்பது, தேனும் நறுமணமும் தருவது, தாமரை மலர்போல் மானிட மனம் ஞானத்தில் மலர வேண்டும் என்பதாலே அந்த மலரை ஞானமலர் என்றார்கள்

வள்ளுவன் கூட “மலர்மிசை ஏகினான்” என தாமரை மலரையே சொன்னான்.

தாமரை எனும் ஞானமலர் அடையாளமில்லாமல் இந்துமதம் இல்லை, அதன் சிற்பம் வழிபாடு தத்துவம் பாடல் என எதுவுமில்லை, எல்லாமே தாமரையினை அடையாளமாக கொண்டவை

இந்த தாமரையினை இந்துமதத்தில் இருந்து பவுத்தம் எடுத்து கொண்டது, இன்றும் பவுத்த நாடுகளின் தாமரை ஞானமலராகவே போற்றபடுகின்றது

தாமரையும் அதன் மேல் அமர்ந்திருக்கின்ற தெய்வங்களை பற்றித்தான் எல்லா புலவரும் பாடினார்கள், எல்லா பாடல்களும் அப்படித்தான் வந்தன‌

மதுரை தமிழ்சங்கம் கூட பொற்றாமரை குளத்தின் அருகில் கூடி தாமரையினை கொண்டாடியது மரபு, ( அந்த மரபில்தான் இந்தியாவின் தேசிய மலராக தாமரை இடம்பிடித்தது)

அன்னை தாமரையில் அமர்ந்திருப்பதால் அவளுக்கு “பத்மாசனா” எனும் நாமம் உண்டு என்பதையும், தாமரை முழுக்க அவள் ஒளி தெரிவதால் அவளை “நளிநீ” என்றும் லலிதா சஹஸ்கரநாமம் சொல்கின்றது.

அந்த சிந்தனையில் பாடலை தொடங்குகின்றார் பட்டர்

“அருணாம்புயத்தும் என் சித்தாம்புயத்தும் அமர்ந்திருக்கும்” என்பது முதல் வரி

அன்னை அருணமான தாமரையில் (அருணம் என்றால் சிகப்பு), செக்க சிவந்த தாமரையில் மட்டும் அல்ல மட்டுமல்ல என் இதய தாமரையிலும் அமர்ந்திருக்கின்றாள் என்கின்றார் பட்டர்

அன்னைக்கு “பக்த மானச ஹம்சிகா”, “ஹிருத்யா”, “ஹிருதயஸ்தா” என பல பெயர்கள் உண்டு என்பது குறிப்பிடதக்கது

இப்படி அன்னை தாமரையில் எழுந்தருளியிருக்கும் அன்னை தன் மனதிலும் எழுந்தருளியிருக்கின்றாள் என்பதை சொல்லும் பட்டர் அடுத்த வரிக்கு வருகின்றார்

“தருணாம்புயமுலைத் தையல் நல்லாள்” என்கின்றார், தருணம் என்றால் பருவம் என பொருள், அன்னை இளமையான தனங்களை தாமரை மொட்டுபோல் கொண்டிருப்பதாக அவளின் மார்பினை சொல்கின்றார் பட்டர்

அன்னை உலகிற்கே தாயானவள் ஆனால் இளமையானவள் என சொல்லும் பட்டர், அன்னையின் தனம் ஞானதாமரை மொட்டு என்பதை குறிப்பால் சொல்லி “தையல் நல்லாள்” என்கின்றார்

அன்னைக்கு “தையல் நாயகி” என ஒரு பெயர் உண்டு, இந்த பெயர் “பாலா” என்றும் வடமொழியில் வரும்

“தையல்” என்றால் தைப்பது அல்ல, தையல் எனும் வார்த்தைக்கு அலங்காரமிக்க எனும் பொருள் வரும், அன்னை அலங்கார நாயகி என சொல்கின்றார் பட்டர், இளமையான மார்பின் மேல் அலங்காரம் செய்திருக்கும் கோலத்தில் காட்சி தருபவள் எனும் பட்டர், அவளை “நல்லாள்” என்கின்றார், அதாவது அன்னை நன்மை மட்டுமே செய்பவள் அவளுக்கு தீமை செய்ய தெரியாது, அவள் அன்னை என்பதால் நல்லதே மட்டும் செய்யும் “நல்லாள்” என்கின்றார்

அதே வரியில் தொடர்கின்றார்

“தகை சேர் நயனக் கருணாம்புயமும்” என்கின்றார் பட்டார்

நயனம் என்றால் கண், தகைசேர் நயனம் என்றால் அழகாக பொருந்திய கண்கள் என பொருள். அந்த கண்கள் கருணை நிறைந்த தாமரை போல் இருக்கின்றது என்கின்றார் பட்டர்

அன்னைக்கு “பத்ம நயனா” என ஒரு நாமம் உண்டு, சஹஸ்கரநாமம் அதை சொல்கின்றது

தாமரை மலரில் தேன் உண்டு அல்லவா? அன்னையின் கண்கள் தாமரையாக தெரியும்பொழுது அந்த கண்களில் இரக்கமும் அன்பும் கருணையும் பட்டருக்கு தேனாக தெரிகின்றது, அந்த காட்சியில் உருகி பாடுகின்றார்

அடுத்து “வதனாம்புயமும்” என்கின்றார்

வதனம் என்றால் முகம், அந்த முகமே தாமரை போல் மின்னுகின்றதாம், அன்னைக்கு “தரேஸ்மேரமுகாம்யுஜா” என்றொரு நாமமும் உண்டு என்பது குறிப்பிடதக்கது , பெரிய தாமரை போன்ற முகம் கொண்டவள் என பொருள்

பட்டர் எவ்வளவுக்கு அன்னையினை நோக்குகின்றார் என்றால், தன் மனதில் அவளை வைத்து தள்ளி நின்று பார்க்கின்றார் பின் நெருங்கி வந்து பார்க்கின்றார், ஓடி ஓடி வந்து பார்க்கின்றார்

தொலைவில் இருந்து பார்க்கும் பொழுது அவள் தாமரையில் அமர்ந்திருக்கின்றாளாம், அருகில் வந்து பார்த்தால் அவள் தனங்களே தாமரையாம், இன்னும் நெருங்கி வந்தால் அவள் கண்களே தாமரையாம்

கொஞ்சம் பின் அடி எடுத்து வைத்து பார்த்தால் அவள் முகமே தாமரையாம்

அடுத்து “கராம்புயமும் சரணாம்புயமும்ம்” என்கின்றார்

இப்படியெல்லாம் அன்னையினை பார்த்துவரும் பட்டர் அபய முத்திரையுடன் அவள் அபயமளிக்கும் கரங்களை பற்றி கொண்டு உருகுகின்றார், அவளுக்கு அவள் கரங்கள் தாமரை போல் தெரிகின்றன, அக்கரங்களும் தாமரை என்கின்றார்,

அதற்கு மேல் பட்டரால் தாங்க முடியவில்லை, அன்னையின் பாதங்களில் வீழ்ந்து சரணடைகின்றார், அந்த பாதமும் தாமரையாக தெரிகின்றது, தாமரை பாதங்களில் சரணடைந்தேன் என்பதை “சரணாம்புயம்” என்கின்றார்

இப்படியாக தாமரை வடிவங்களை தன்மைகளை அன்னையில் காண்கின்றார், கடைசியில் “அல்லால் கண்டிலேன் ஒரு தஞ்சமுமே” என முடிக்கின்றார்

அதாவது இப்படிபட்ட அன்னையினை விட ஒரு தஞ்சமும் அடைக்கலமும் நான் எங்கும் காணவில்லை என மருவி அவளிடமே சரணடைகின்றார்

இப்படி நேரடியாக பொருள் கொண்டாலும் இப்பாடல் யோகத்தின் பெரும் ரகசியங்களை விளக்குகின்றது, யோகம் ஒன்றையே வழிபாடாக பல வகைகளில் சொன்ன மதம் தாமரையினை ஏன் குறித்தது என்றால் காரணம் இல்லாமல் இல்லை

உடலின் சக்கரங்கள் மொட்டுபோல் குவிந்து குண்டலம் போல் இருக்கும் இயல்புடயவை, இவை விரிந்தால் பெரும் ஞான பேரானந்த நிலை ஏற்படும் , இந்த பேரானந்தத்துக்கு மனிதனை கொண்டு செல்வதுதான் இந்துமத அடிப்படை போதனை

அதன் வழிபாடும் பூஜையும் தெய்வீக கோலமும் எல்லாமும் இந்த பெரும் இன்பத்துக்கு ஒருவனை இழுப்பதே

அந்த பெரும் இன்ப நிலையினை ஒருவன் எட்டிவிட்டால் அவன் மனம் வேறு எந்த விஷயத்திலும் இன்பத்திலும் மயங்காது, அவன் கர்மாவினை கலங்காமல் செய்து மயங்காமல் செய்து முக்தி அடைவான், அகங்காரமும் ஆர்பாட்டமும் அவனைவிட்டு அகலும் என்பதுதான் இந்து வழிபாட்டின் நோக்கம்

அவ்வகையில் ஒவ்வொரு உடலில் இருக்கும் ஆறு சக்கரங்களையும் இயங்க வைப்பதுதான் அதன் ஆதார தர்மம்

அவ்வகையில் இப்பாடல் குண்டலிசக்தியினை எழுப்பும் பெரும் தத்துவத்தை சொல்கின்றது, அதனை அந்த ஆறு சக்கரங்களின் வடிவினையும் அதன் அமைப்பையும் கொண்டு பார்க்கலாம்

முதல் சக்கரம் மூலாதாரம், இது முதுகெலும்பு முடியும் இடத்தில் இடுப்பு பகுதியின் முடிவில் அமைந்திருக்கும், இது நான்கு இதழை கொண்ட தாமரைபோன்ற வடிவில் இருக்கும் இதன் நிறம் பச்சை, இங்கு எழுந்தருளியிருப்பவர் விநாயகபெருமான் அவரோடு இருப்பவர் வல்லப தேவி

இரண்டாம் சக்கரம் சுவாதிஸ்தானம், மூலாதாரத்தில் இருந்து இரு விரல் அளவு மேலே அமைந்திருக்கும், இது ஆறிதழ் தாமரை, பொன்னிறமான இந்த சக்கரத்தில் அமர்ந்திருப்பது பிரம்மனும் சரஸ்வதியும்.

மூன்றாம் சக்கரம் மணிபூரகம், இது சுவாதிஸ்தானத்தில் இருந்து எட்டுவிரல் அளவு மேலே அமைந்திருப்பது, பத்து இத்ழ்களை கொண்ட தாமரை இது பளிங்கு நிறமானது இங்கு மகாவிஷ்ணுவும் மகா லஷ்மியும் அமர்ந்திருப்பார்கள்

நான்காம் சக்கரம் அனாதகம் , இது மணிபூரகத்தில் இருந்து 10 விரற்கடை மேல் உள்ளது 12 இதழ்கொண்ட இந்த அக்னி நிறத்து தாமரையில் ருத்திரனும் பார்வதியும் அமர்ந்திருப்பார்கள்

ஐந்தாம் சக்கரம் விசுத்தி இது அனாதகத்தின் மேல் 10 விரற்கடை அளவில் அமைந்துள்ளது, இது கருமை நிறமானது பதினாறு இதழ்களை கொண்ட இந்த சக்கரத்தில் மகேஸ்வரனும் மகேஸ்வரியும் அமர்ந்திருப்பார்கள்

ஆறாம் சக்கரம் ஆக்ஞை இது விசுத்தியில் இருந்து 10 விரற்கடை அளவ் மேலே உள்ளது இது மேக நிறமானது 12 இதழ்களை கொண்ட இந்த தாமரையில் சதாசிவமும் மனோன்மணியும் எழுந்திருப்பார்கள்

கடைசி சக்கரம் தலைக்கு மேலே இருப்பது துரிய சக்கரம், இது உடலோடு ஒட்டியிராது மாறாக பூத உடலைதாண்டி ஸ்தூல உடலில் அமைந்திருக்கும் மனித சிரஸில் இருந்து 4 விரற்கடை உயரத்தில் அந்தரத்தில் இருக்கும்

(இந்த சக்கரத்தையும் மானிட சிரஸையும் இணைப்பதுதான் கிரீடம் அணியும்முறையாயிற்று, அரசனுக்கு ஏன் கிரீடம் என்றால் ராஜகுரு அல்லது ரிஷிகள் இந்த புள்ளியினைஆராயந்து அது தொடர்புபடும் வகையில் மகுடம் சூட்டுவார்கள், பாரத கிரீடம் சூடும் மரபு இப்படி வந்ததே

இதனால்தான் ரிஷிகளும் ஆசாரியர்களுமே மகுடம் சூட்டும் சடங்கை செய்தார்கள், அந்த சகஸ்ரக சக்கரம் துலங்கிய மன்னன் ஞானமாய் நல்லாட்சி தருவான் எனும் சூட்சுமம் அதனில் இருந்தது)

ஆம், ஆயிரம் இதழுடைய சக்கரம் இது, இந்த சக்கரம் ஜோதி ஒளிகொண்டது பரம்பொருள் அல்லது ஆதிசக்தி வீற்றிருக்கும் இடம் இது

ஆக இந்த ஆறு சக்கரமும் அதனோடு சேர்ந்து துரிய சக்கரமும் துலங்குவதே முழு ஞான நிலை, இந்த நிலையினை எட்ட எல்லா சக்கரங்களும் அதாவது எல்லா தாமரையும் விரிய வேண்டும்

இந்த ஏழு சக்கரங்களிலும் அன்னை இருப்பதை காணலாம்

அன்னை தாமரையில் வீற்றிருப்பாள் என்பதன் மறைபொருள் இதுதான், எல்லா சக்கரங்களிலும் அன்னை சக்தியாக இருக்கின்றாள், அந்த சக்கரங்களை இயக்கி உச்சியின் ஆயிரம் இதழ்கொண்ட தாமரையின மலர செய்தால் முழு ஞானம் கிட்டும்

ஆக இந்த பாடலில் அன்னையினை தாமரை நாயகியாக பட்டர் வரிந்து பாடுவதெல்லாம் இந்த உடலின் சக்கரங்களில் அவள் சக்தியாய் இருப்பதையும், யோகத்தின் மூலம் தியானத்தின் மூலம் அவளை சரணடைந்தால் அந்த தாமரை விரியும் என்பதையும் அதனால் பெரும் பேரானந்தமும் ஞானமும் ஏற்படும் என்பதைத்தான் சொல்கின்றார்

அன்னை எல்லா சக்கர தாமரைகளிலும் அமர்ந்திருக்கின்றாள், அவளை தியானித்து சக்கரங்களை துலக்கினால் பெரும் பேரானந்தம், அதை தவிர ஏதும் தேவையில்லா பெரும் ஆனந்தம் கிட்டும் அந்த பெரும் ஆனந்தமே ஞான நிலை என்பது பட்டர் சொல்லும் போதனை

தாமரையில் அமர்ந்திருக்கும் தாமரை நாயகி, இதய கமலத்திலும் இன்னும் எல்லா சக்தி கமலத்திலும் இருக்கின்றாள், தியானத்தால் அவளை சரணடைந்தால் பெரும் ஞானமும் யோகமும் அவளால் அருளபடும், அந்த சரணாகதியினை விட பெரும் பாக்கியம் ஏதுமில்லை என்பது பாடல் சொல்லும் ஞான மறைபொருள்