அபிராமி அந்தாதி : 65

“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம்முன் செய்த தவப்பெரு மாற்குத் தடக்கையும்செம்
முகனும்முந் நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும்உண் டாயதன் றோவல்லி நீசெய்த வல்லபமே.”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள்தரும்

“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்
தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத் தடக்கையும் செம்
முகனும் முந்நான்கிரு மூன்றெனத் தோன்றிய மூதறிவின்
மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே”

இந்த பாடலை புரிந்துகொள்ளும் முன் ஒரு திருவிளையாடலை காண வேண்டும் , அப்பொழுது இப்பாடல் எளிதாக புரியும்

கந்தபுராணத்தின் தொடக்க நிகழ்வு அது

அந்த தட்சன் யாகம் தொடர்பாக எழுந்த சர்ச்சையில் இமயவன் மகளாக பிறக்கின்றாள் அன்னை சக்தி, அவளுக்கு பார்வதி என பெயர்

இங்கே இன்னொரு காட்சி நடந்து கொண்டிருந்தது, சிவன் மகனால் அன்றி தனக்கு மரணமில்லை என வரம் வாங்கிய சூரபத்மன் பெரும் இன்னலை விளைவித்து கொண்டிருந்தான், சிவனோ ஆழ்ந்த தவத்தில் இருந்தார், தவத்தில் இருக்கும் சிவன் எங்கிருந்து இல்லறம் நடத்தி குழந்தை பெறுவது?

இதனால் தேவர்களும் விஷ்ணுவும் மன்மதனை சிவனின் தவம் கலைக்க ஏவினார்கள், மனமதனும் தன் மனைவி ரதியோடு சென்று தன் அஸ்திரங்களை ஏவினான்

தன் தவம் லேசாக அசைவதை உணர்ந்த சிவன் கோபத்தில் கண்களை திறந்தபொழுது மன்மதன் சாம்பலானான், அவன் இல்லா உலகில் உயிர்கள் பெருகாது

இதனால் உலகில் புதிய உயிர்கள் பிறக்காமல் பெரும் குழப்பம் ஏற்பட தேவர்கள் பார்வதியிடம் சரணடைந்தனர், பின் சிவன் பார்வதி திருமணத்தில் ரதியின் வேண்டுதலுக்கு இணங்க மன்மதனை உயிர்பித்த சிவன் அவன் ரதி கண்ணை தவிர யார் கண்ணுக்கும் தெரியமாட்டான் என நிபந்தனை விதித்தார்

அதன் பின் முருகபெருமான் உருவாகி சூரபதம் வதம் நடந்தது எல்லோரும் அறிந்தது

இந்த “காம தகனம்” அதாவது மன்மதனை சிவன் எரித்த விஷயத்தில் இருந்து பாடலை தொடங்குகின்றார் பட்டர்

“ககனமும் வானும் புவனமும் காணவிற் காமன் அங்கம்” என முதல் வரியில் பாடுகின்றார்

ககனம் என்றால் அண்டம், புவனம் என்றால் பூமி, விற்காமன் என்றால் வில் ஏந்திய காமன், காணுதல் என்றால் எல்லோரும் காணுதல்

ஆக அண்டமும் உலகமும் விலே ஏந்திய காமனை காணும்படி

இனி இரண்டாம் வரி “தகனம் முன்செய்த தவப்பெருமாற்குத்” , தகனம் என்றால் எரித்தல், ஆக காமனை எரித்த சிவனுக்கு என பொருள்

அடுத்த வரி “தடக்கையும் செம்முகனும் முந்நான்கிரு மூன்றென” என வரும், அதாவது “தடக்கை முன் நான்கு, செம்முகம் இரு மூன்று” என்பது அதன் விரிபு

“முன்நான்கு” என்றால் பன்னிரண்டு, “இரு மூன்று” என்றால் ஆறு, ஆக 12 கரங்களும் ஆறு முகமும் கொண்ட என பொருள்

அடுத்த வரி “தோன்றிய மூதறிவின் மகனும் உண்டாயதன்றோவல்லி நீசெய்த வல்லபமே” என வரும், அதாவது அப்படி ஆறுமுகமும் பன்னிரண்டு கரமுமாக அந்த அழகான முருகன் தோன்றியதும் வல்லமை மிக்கவளான உன் கருணையே என்பது பொருள்

பாடலின் சுருக்கமான பொருள் இதுதான், “அண்டமும் வானமும் பூமியும் காணும் வண்ணம் கரும்பு வில் ஏந்திய மன்மதனை எரித்த‌ அந்த சிவபெருமானுக்கும் கூட அறிவில் சிறந்த, 12 கைகளும், 6 முகங்களும் கொண்ட அழகிய முருகனை மகனாக பெற சக்தியினை அம்பாள் கொடுத்தாள் அப்படியான வல்லமை கொண்டவள் அன்னை”

இனி பாடலின் பொருளை கொஞ்சம் ஆழமாக காணலாம்

சிவன் மன்மதனை எரிக்கும் பொழுது அவர் தனிமையான நிலையில் இருந்தார், அதாவது அவர் அன்னையினை விட்டு பிரிந்திருந்தார் , அன்னை பார்வதியாக அவதரித்திருந்தார்

சிவன் மன்மதனை உயிர்ப்பித்தது, பார்வதியுடனான மணகோலத்தில் என்றாகும் பொழுது சிவன் பார்வதியினை மனைவியாக ஏற்றுகொண்ட நிகழ்வாகின்றது

அதாவது மன்மதன் இல்லாமல் காதலோ, மயக்கமோ, இன்னொரு பெண்ணிடம் மயங்கும் நிலை யாருக்குமே வராது எனும் நிலையிலும் பார்வதியிடம் சிவன் மயங்கி திருமணம் செய்திருக்கின்றார் என்றால் அன்னையின் சக்தி எப்படி இருந்திருக்க வேண்டும்

மன்மதன் இன்றி உலகம் இல்லை, ஆசை மயக்கம் இல்லை அதனால் உறவுகள் இல்லை, ஜனனம் இல்லை எனும் நிலையிலும் அன்னையிடம் சிவன் மயங்கினார் என்றால் அன்னையின் சக்தி என்ன?

அவளை ” காமதாயினி, காமரூபினி” என லலிதா சமகஸ்ரநாமம் ஏன் சொல்கின்றது என்றால், அன்னை எல்லா உயிர்களின் தொடக்கமுமானவள், அதனால் ஆதிபரம்பொருளான சிவனை தன்னகத்தே இழுத்து கொண்டு எல்லா உயிர்களின் தொடக்கத்தையும் ஏற்படுத்தினாள்

காமதேவன் எனும் மன்மதன் இன்றி அவளால் சிவனை தனவசபடுத்த முயன்றதென்றால் அவளின் சக்தி என்ன? ஆனானபட்ட சிவனே தவத்தில் தடுமாறினாலும் பின் மன்மதனையே எரிக்கும் அளவு கடுமையான்வர் அல்லவா?

அந்த சிவனையே தன் வசம் இழுத்தால் அன்னையின் சக்தி என்ன? என வியக்கும் பட்டர் இன்னும் சொல்கின்றார்

அந்த அணங்கதேவன் எனும் மன்மதனுக்கு உயிர் கொடுத்ததும் முழுக்க சிவன் அல்ல, அந்த மன்மதனை சிவன் உயிர்ப்பிக்கும் பொழுது சிவனில் பாதியாக அன்னையும் இருந்தாள்

ஆக அன்னைதான் மன்மதனை உயிர்பிக்க வைத்து இந்த உலகம் மறுபடியும் இயங்க வழி செய்தவள்

ஆம், அவளே மூல சக்தியாகவும் தொடர்ந்து உயிர்கள் பலுகி உலகம் இயங்க வழி செய்தவளுமாக இருக்கின்றாள் என வியக்கும் பட்டர் அடுத்து முருகபெருமான் அவதாரத்துக்கு வருகின்றார்

முருகபெருமான் சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து பிறந்த நெருப்பு பொறிகளால் உருவானவர் என்பது புராண செய்தி, ஆனால் முழுக்க சிவன் என சொல்லமுடியாதபடி அன்னை அவரில் பாதியாகின்றாள்

அன்னையினை மணந்தபின்புதான் சிவனில் இருந்து முருகன் பிறந்தான், அன்னை சிவனில் பாதியாக உண்டு என்பதால் அது இருவரும் கலந்து பெற்ற குழந்தையாகின்றது

அந்த முருகன் சிவனின் ஐந்துமுகமும் அன்னையின் ஒருமுகமும் கொண்டு ஆறுமுகமாகவும், சிவனின் பத்து கரங்கள் மற்றும் அன்னையின் இரு கரங்கள் சாயல் கொண்டு 12 கரங்களோடும் பிறந்தான் என்கின்றார் பட்டர்

சிவனுக்கு ஐந்து முகமும் 10 கரமும் உண்டு என்கின்றது புராணம்

சிவன் ஐந்து பூத வடிவம் மட்டுமல்ல, ஐந்து தொழில் செய்பவர் மட்டுமல்ல அந்த ஐந்து உருவங்களை ஒன்றாக கொண்டு ஐந்து முகமும் 10 கரங்களும் கொண்டவர்

அவரின் படைக்கும் தொழிலின் முகம் சதியோஜாதம் இது மேற்கு நோக்கி இருக்கும், அவரின் காக்கும் தொழிலின் முகம் வாமதேவம் இது வடக்கு நோக்கி இருக்கும், அவரின் அழிக்கும் தொழிலின் முகம் அகோகரம் இது தெற்கு நோக்கி இருக்கும், அவரின் மறைத்தல் தொழிலின் முகம் தத்புருஷம் இது கிழக்கு நோக்கி இருக்கும்

அவரின் அருளல் முகம் ஈசானம் இது மேல் நோக்கி இருக்கும்

இப்படி ஐந்து முகங்களை கொண்டவர் சிவன், அப்படியே 10 கரங்களும் இதனால் உண்டு

சிவன் பத்து கரங்கள் கொண்ட வடிவில் ஆடும் தாண்டவ நடனமே இதற்கு சாட்சி, அது ஆனந்த தாண்டவம் என்றும் அழைக்கபடும்

முருகன் இந்த 10 கரம் கூடுதலாக அன்னையின் இரு கரம் கொண்டும், ஐந்து முகம் கூடுதலாக அன்னையின் முகமும் கொண்டு பிறந்தவன் எனும் பட்டர் இன்னும் சொல்கின்றார்

அதுவும் முருகன் எப்படியான குழந்தை?

அது ஞான குழந்தை, பிரம்மனுக்கே வேதமும் தகப்பனுக்கே ஞானமும் சொன்ன தெய்வம், யாராலும் அழிக்க முடியாத சூரனை வீழ்த்தி அவனுக்கும் அருள்பாலித்து அகந்தை அழித்து அந்த சூரனுக்கும் ஞானம் கொடுத்து வேலும் மயிலுமாக தன்னோடு சேர்த்து கொண்ட அதி உன்னத குழந்தை

அப்படியான குழந்தையினை ஒரு சன்னியாச கோல யோகி பெற்றெடுக்க முடியுமா? ஆனால் அன்னையின் அருளால் அவளின் கடாட்சத்தால் மட்டுமே சிவனுக்கு அந்த ஞானபண்டிதனின் தகப்பன் எனும் தகுதி கிடைத்தது

உலகறிய அண்டமும் லோகமும் அறிய மன்மதனை எரித்தவர் சிவன், அந்த சன்னியாச கோல சிவன் எப்படி தந்தையாகி ஞானமான அழகான குழந்தையினை பெற்றெடுக்க முடியும்?

அந்த அதிசயத்தை செய்தவள் அன்னை, அவள் அதிசயமான சக்தி கொண்ட நாயகி

முருகன் எனும் குஹனுக்கு அன்னையானதால் அவள் குஹாம்பா குஹஜன்பபூ என்றெல்லாம் அழைக்க்கபடுகின்றாள்

மன்மதனை எரித்த சிவனையே தன் வசபடுத்தி, மன்மதன் இல்லா காலத்திலே சிவன் மனதில் தன்னை நிறுத்தி அப்படியே மன்மதனையும் உயிர்பிக்க வைத்தவள் அவள்

சிவன் எனும் யோகிக்கு மகா சக்தியுள்ள மகனை உருவாக காரணமானவளும், உலகம் மறுபடி இயங்கௌம் அசுரகூட்டம் ஒழியவும் தொடக்கமானவள் அன்னை

அப்படிபட்ட அன்னையின் சக்திபற்றி வியந்து பாடுகின்றார் பட்டர்

ஒரு வகையில் இது லலிதாசரஸ்கர நாமத்தில் வரும் பாடலின் தழுவல்

“ஹர நேத்ராக்னி சந்தக்த காம சஞ்சீவ நௌஷதி
ஸ்ரீமத் வாக்பவ கூடைக ஸ்வரூப முக பங்கஜா
கண்டாத கடிபர்யந்த மத்ய கூட ஸ்வரூபிணி
ஷக்தி கூடைகதாபன்ன கட்யதோ பாக தாரிணீ”

சிவன் நெற்றிக்கண் நெருப்பினால் எரித்த மன்மதனை உயிர்த்தெழுப்பியவள் என இதன் பொருள் அமையும், மேற்கொண்டு அன்னையின் புகழையெல்லாம் கூறும் ஸ்லோகம் இது

“காம சஞ்சீவ நௌஷதி” என அன்னை புகழபடுபவள், அந்த அன்னையின் பெருமை அப்படியானது, உலக உயிர்களின் தொடக்கமாகவும் அது தடைபடாமல் நடக்க அன்னை எல்லா வழியும் செய்து உலக உயிர்களின் தாயாக லோக மாதாவாக கனிந்த அன்போடு உலகை இயக்கி கொண்டிருக்கின்றாள் என்பதைத்தான் இப்பாடலில் சொல்கின்றார் பட்டர்

அன்னையே மன்மதனை எரித்த சிவனையே உன் வசம் ஈர்த்து அவனுக்கும் வாழ்வு கொடுத்தவளே, சிவனை ஞான பண்டிதனின் தகப்பாக்கியவளே, சிவனில் பாதி நீ அல்லோ? உன் மகனின் ஞானமாக விளங்குவதும் நீயல்லோ, முருகபெருமானின் ஞான முகம் என்பது அவனின் ஞானத்துவ மாட்சியமையெல்லாம் உன் அருள் அல்லோ என உருகின்றார் பட்டர்

அன்னை உலக உயிர்களின் தாய், அவள் அழகும் இரக்கமும் அன்பும் கருணையும் கொண்டவள், எல்லா ஞானத்திலும் சிறந்த ஞானம் அவளிடமே உண்டு, அவள் ஞானத்துக்கும் மூலம் என அன்னையின் புகழையெல்லாம் பாடி பாடி மருகுகின்றார் பட்டர்