அம்மா விதைக்கப்பட்டார்…
https://youtu.be/_-FevnkOIyk
எதற்கு வைரமுத்து இன்று கவிதை எழுதினார்? அன்றே இருவரில் அற்புதமாக எழுதிவிட்டார்
“எள்ளின் நுனி அளவும் இப்போது கசப்பில்லை
புல்லின் நுனி அளவும் இப்போது பகையில்லை
மரணத்தை போல மனம் வெறுக்க மருந்தில்லை”
இதோ அடக்கம் செய்ய கொண்டு செல்கின்றார்கள்
அந்த ரோஜாப்பூ முகம் நிரந்தரமாக மண்மூடும் நேரம்
ஆயிரம் சர்ச்சைகள் அவர் மீது இருந்தாலும் மனம் வெடித்து கிளம்பும் கண்ணீரை மறைக்க முடியவில்லை
எம்ஜிஆர் புதைக்கபடும்பொழுது டிவியில் பார்த்த கலைஞர் தான் குலுங்கி அழுததாக சொன்னார், அதாவது கொஞ்சகால பகையினை அந்த கடைசி நொடி இல்லாமல் செய்துவிட்டது
நிதர்சனமான உண்மை
ஜெயலலிதா மீது எள் நுனி அளவும் கசப்பில்லா நேரம்
அந்த விழியும், அந்த அதிகார குரலும், அந்த மிடுக்கும், முகத்தில் எங்கும் எப்போதும் உணர்ச்சி காட்டாத அமைதியான முகமும் அவருக்கே சாத்தியம்
எத்தனையோ இடரினை கடந்த அவர், எங்கும் கண்ணீர் விட்டதாக பார்க்க முடியாது
ஆனால் இன்று எல்லோரையும் கண்கலங்க வைத்து வங்க கடல் நோக்கி கிளம்புகின்றார்
செல்லுங்கள் தாயே, ஒரு நட்பிற்காக எதனை எல்லாமோ இழந்த கர்ணணனும் நீங்களும் வேறல்ல
இம்மாநிலத்தை நீங்கள் ஆண்ட 16 ஆண்டு காலமும் அமைதியாக நடத்தினீர்கள், பெரும் சர்ச்சைகள் என ஏதுமில்லை
மன்னார்குடி சர்ச்சை தவிர உங்கள் மீது பெரும் சர்ச்சை இல்லை, பதிந்த பல வழக்குகளில் பெரும்பாலும் போலி என நீதிமன்றமே சொல்லிவிட்டது
இம்மாநிலத்தை நல்ல விதமாக ஆண்டுவிட்டு, விண் ஆள செல்லும் உங்களை கண்ணீரோடு அனுப்புகின்றோம்
தனிமையாக போராடி போராடி களைத்துவிட்ட நீங்கள் இனியாவது ஓய்வெடுங்கள்
காலம் எல்லாவற்றையும் நிர்ணயிக்கின்றது, அதுவே நடத்துகின்றது
ஒரு ஆன்மா இந்த உலகில் வந்து வாழ்ந்து, தமிழரோடு கலந்து, எங்களை எல்லாம் ஆண்டு, எல்லோரையும் அழவைத்து பரமனிடமே திரும்பவேண்டும் என்ற விதி மிக சரியாக நிறைவேறிற்று.
விண்ணிலிருந்து வந்தது விண்ணிற்கும் மண்ணில் இருந்து வந்தது மண்ணிற்கே திரும்பவேண்டும் என்பது விதி.
கொடுக்கபட்ட காலம் முடிந்த பின் ஒரு நொடி கூட கூட்ட அனுமதிக்காதது அந்த கொடும் காலம்
அந்த காலத்தினால் வந்து காலமுமாகி வரலாறும் ஆகிவிட்டீர்கள்.
இறுதியாக ரோஜா முகத்தை பார்த்துவிட்டோம், இனி காணவே முடியா முகத்தை இறுதியாக கண்டுவிட்டோம்
துயில் கொள்ளுங்கள் தாயே, அமைதியாக துயில் கொள்ளுங்கள்
உங்கள் காதோரம் இனி தினமும் கேட்கும் வங்க கடல் அலை ஓசை போல , உங்கள் குரலும் எங்கள் காதோரம் கேட்டுகொண்டே இருக்கும்
உங்கள் நினைவு மனதில் வாழ்ந்துகொண்டே இருக்கும்