அய்யகோ, பாஜக கொடுமை பாரீர்னு புலம்புவார்…

அய்யகோ இனி பாஜக தமிழகத்தை புறவாசல் வழியாக ஆளும், பலர் கவலை அச்சம்

தமிழகம் ஒரு வித்தியாசமான மாநிலம், இந்தியாவின் மற்ற மாநிலங்களை போன்றது அல்ல‌

1970களில் அது திமுகவின் விஸ்வரூபத்தில் சிக்கி இருந்தது, காமராஜர் கக்கன் போன்றவர்களை கூட தூக்கி எறிந்த விஸ்வரூப வெற்றி அது

அதன் பின் கொஞ்ச நாளையிலே அது உடைக்கபட்டதும் அதன் பின் டெல்லியின் கைப்பாவையாக ஒரு கட்சி ஆனது முதல் தமிழகத்தில் டெல்லி ஆதிக்கமே நடந்தது

திமுகவும் பின் டெல்லி கூட்டணிக்கே பாராளுமன்ற தேர்தலில் தவம் இருந்தது

அதாவது திராவிட கொள்கை தமிழகத்தில் ஆண்டது அண்ணா முதல்வராக இருந்த கொஞ்ச காலமும், எம்ஜிஆர் கிளம்பும் முன் கலைஞர் முதல்வராக இருந்த அந்த 2 ஆண்டு காலமுமே

மொத்தம் 3 ஆண்டுகள்தான் டெல்லி கட்டுபாடு இல்லா திராவிட ஆட்சி தமிழகத்தில் நடந்தது

அதன்பின் நடந்தெதெல்லாம் தேசிய கட்சியின் மறைமுக ஆட்சியே

அது அணுவுலை, கச்சதீவு, படைத்தளம், இன்னபிற சிக்கல்களில் அழகாய் தெரிந்தது

முகப்பில் அதிமுகவினை வைத்துகொண்டே தான் ஈழபிரச்சினையினை இந்தியா கையாண்டது, தனிநாடு அமைக்கும் நோக்கமெல்லாம் அதற்கு இல்லை

ஏதோ செய்ய நினைத்து எதுவோ நடந்து, பின் அமைதிபடையினை அனுப்பும்பொழுதும் அதிமுக எம்ஜிஆர் அமைதியாகத்தான் இருந்தார்

கூடங்குள அணுவுலை எதிர்ப்பிலும் ஜெ அதனைத்தான் செய்தார், 90களுக்கு பின் கலைஞர் எத்தனையோ இடங்களில் மத்திய அரசிற்கு கட்டுபட்டுதான் இருந்தார், உதாரணம் 2009 ஈழ சம்பவம்

ஆக எந்த தமிழக முதலமைச்சரும் டெல்லியினை எதிர்க்கமாட்டார்கள், அதுதான் மறைமுகமாக ஆளும்

இந்த பாஜக தன் கொள்கைகளை வலியபுகுத்தும் என சிலர் சொல்லிகொண்டிருக்கின்றான்

கட்டாய மதமாற்ற சட்டம், ஆலயங்களில் உயிர்பலி, சிறுபான்மையினர் கல்வி நிலையம் என எல்லா பிஜேபி கொள்கைகளையும் ஜெயலலிதா பரிட்சித்து பார்த்த தமிழகம் இது

அவர் அதில் கையினை சுட்டுகொண்டது கண்கூடு

அப்படி பாஜக வருமானால் அதனை மக்கள் விரட்டபோவது நிச்சயம்

நாட்டு நிர்வாகம் வேறு, கட்சிகள் கொள்கை வேறு, மக்கள் மன எதார்த்தம் வேறு

இங்கு எந்த திராவிட கட்சிகளும் தமிழக நலனை காக்கவுமில்லை, அதற்காக போராடவுமில்லை என்பதுதான் தமிழக நிலை

மத்திய அரசில் பங்குபெற்றிருக்கும் போது காவேரி பிரச்சினையினை பற்றி அறவே பேசாத திமுக தான் அதன் பின் குதித்துகொண்டிருக்கும்

37 எம்பிக்கள் இருந்தும் பாராளுமன்றத்தில் அமைதியாக இருக்கும் அதிமுகதான் இங்கு குட்டிகரணம் அடிக்கும்

இதில் தேசிய கட்சிகள் தலையெடுப்பது தவறு என சொல்லமுடியாது

கன்னடம் , ஆந்திரா, கேரளா தேசிய கட்சிகள் ஆளும் மாநிலமே அவர்கள் மாநில நலன் என்ன குறைந்துவிட்டது? ஒன்றுமில்லை

தமிழகத்தை தேசிய கட்சிகள் மறைமுகமாக ஆள தொடங்கி கிட்டதட்ட 45 வருடங்கள் ஆகிவிட்டன‌

எம்ஜிஆர் கட்சியினை யார் உருவாக்கினார்கள் என்பது மர்மம் அல்ல அந்த டிஎஸ்பி மோகன் தாஸே பல இடங்களில் சொல்லிவிட்டார்

சில இடங்களில் எம்ஜிஆர் மீறி செல்லும்பொழுது இந்திராவின் பார்வை அன்றே ஜெயா மீது விழுந்து டெல்லியில் அவரை விருந்துக்கு அழைத்ததெல்லாம் சாதாரண விஷயமா? அதன் பின் ஜெயா எம்ஜிஆரால் விரட்டபட்டதெல்லாம் என்ன வகை?

மிஸ்டர் வைகோ 100 ராணுவத்திற்கு சமம் என இந்திரா சொல்லிவிட்டு கலைஞரை நோக்கி புன்னகைக்க என்ன அவசியம்? கலைஞர் வைகோ லடாய் அன்றே தொடங்கியது

ஆக அரசியல் என்பது இப்படியான ஆடுகளம்தான், இதுமாதிரியான காட்சிகள் நிறைய நடக்கும்

இது 46 ஆண்டுகளாக ஆடும் ஆட்டம்

ஜெயா மிக கட்டுபாடாக கட்சியினை நடத்தினார், கலைஞருக்கு இந்த வித்தைகள், எதிர்ப்புகள் எல்லாம் அத்துபடி.

அதனால் அந்த கட்சிகள் இதுகாலம் நின்றன‌

அன்று திமுகவிற்கு வந்த சோதனைகளை கலைஞர் காத்தார், அதிமுகவின் பிளவு ஜே எனும் அசாத்திய பெண்மணி அதே நேரம் சில பின்புலங்களை கொண்டவரால் காப்பாற்றபட்டது

இன்று நிச்சயம் அதிமுகவிற்கு சோதனை காலம், தலைவியில்லா மந்தையினை கொத்தி குதற பலர் தயாராகத்தான் இருப்பார்கள்

அரசியல் அப்படித்தான்

இதில் புதிதாக பாஜக படையெடுத்து வருகின்றதாம், தமிழர்கள் எல்லாம் ஒன்றாக திரளவேண்டுமாம்

எப்பொழுது திரண்டிருக்க வேண்டும்?

இந்த சினிமாக்காரனை நம்பி நாங்கள் செல்லமாட்டோம் என திரண்டிருக்க வேண்டும், நடக்கவில்லை. அதனால்தான் அது மூலமாகத்தான் தேசிய கட்சிகள் மறைமுக ஆதிக்கம் பெற்றன‌

கலைஞரும் வேறு வழியின்றி சரண்டர் ஆனார்.

பிராமண பிஜேபி, இந்துத்வா பிஜேபி என பொங்குபவர்களுக்கு பொதுவாக இப்படி சொல்லலாம்

பெரியார் பெரும் நெருப்பினை பற்ற வைத்தார், ரெட்டை மலை சீனிவாசன், பட்டுகோட்டை அழகிரி, அண்ணா, கலைஞர், நெடுஞ்செழியன் என பெரும் போராளி கூட்டம் அவர் உருவாக்கியது

திராவிட கட்சிகள் என்ன உருவாக்கின?

இப்பக்கம் எம்ஜிஆர், ஜெயா இவர்களின் தொடர்ச்சியாக‌ பன்னீர்செல்வம், சசிகலா, நடராஜன், திவாகரன், விவேக், பாஸ்கரன், சுதாகரன்

அப்பக்கம் கலைஞரின் தொடர்ச்சியாக ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, மாறன் பிரதர்ஸ், அழகிரி, தயாநிதி இன்னும் ஏராளம்

வைகோ தனியாக சுற்றி ஒரு மாதிரி ஆகிவிட்டார், அரசியலே இல்லை அதில் வாரிசும் இல்லை, சயனைடு கடிக்கும் நிலை

இதில் பெரியாரின் உண்மையான போராட்ட வாரிசு எங்கிருக்கின்றது?

தவறு நம்மிடமே இருக்கின்றது

பெரியார் ஏற்றிவைத்த பெருநெருப்பினை சினிமா மூலம் ஊற்றி அணைத்த தந்திர வித்தையில் நாம் ஏமாந்துவிட்டோம்

பெரியாரின் வாரிசுகளை வளர்க்காமல் சினிமா, சுயநல கும்பலை வளர்த்துவிட்டோம்

பின் காங்கிரஸ் என்ன? பாஜக என்ன? பாகிஸ்தானே தமிழகத்திற்கு வரத்தான் செய்யும்

இதனை எல்லாம் ஒரு பயலும் பேசமாட்டான்

சும்மா அய்யகோ பாஜக கொடுமை பாரீர்னு தொடங்குவான்