அரசியலில் உதயநிதி ஸ்டாலின்…
அதிமுகவின் பிண்ணணி சக்திகளாக இருந்த மன்னார்குடி குடும்பம் முன்கள அரசியலுக்கு வருவதில் ஆச்சரியமில்லை, ஆனால் என்ன அனுபவம் அல்லது எத்தனை தேர்தலை நடத்திய தகுதி இருக்கின்றது என உதயநிதி ஸ்டாலின் கட்சிக்குள் ஒரு மாதிரி வருவதுதான் புரியவில்லை
அரசியலில் வாரிசுகள் தவிர்க்கமுடியாதது சந்தேகமில்லை, ஆனால் ஸ்டாலினே இன்னும் தன்னை நிரூபிக்கவில்லை. கலைஞரின் மகன் என்ற தகுதியில் வந்து நிற்கும் அவர் இன்னும் எங்காவது தன்னை மிக தகுதியானவர் என நிருபித்துவிட்டார் என சொல்லமுடியுமா?
ஆட்சியினை கலைக்கமுடியவில்லை, ஆர்.கே நகரில் டெப்பாசிட் என்ன ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும்.
நிச்சயம் ஸ்டாலின் தடுமாறுகின்றார் அல்லது பதுங்குகின்றார்.
வலுவான கூட்டணி அமைத்து இந்த பழனிச்சாமி அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வியூகம் கூட அவரிடம் இல்லை, நன்றாக தெரிகின்றது.
அவரே அல்லாடும்பொழுது இவரை முன்னிறுத்துவது எப்படி சரியாகும்? ஸ்டாலின் தன்னை நிரூபித்து முதல்வர் ஆன பின் செய்ய வேண்டிய காரியம் இது
கலைஞர் குடும்பமும் பெரிது, அவரின் எல்லா மகன்களுக்கும் மகள்களுக்கும் மகன்கள் உண்டு, எல்லோரும் களத்தில் வந்தால் உட்குடும்ப தேர்தல் ஆகிவிடும்
கலைஞர் மிக பக்குவமானவ அரசியல்வாதி, கடைசி வரை ஸ்டாலினை அறிவிக்கவே இல்லை ஆனால் அதே நேரம் ஸ்டாலின் அடுத்த தலைவர் என பேச்சு வருவதை விரும்பினார். ஸ்டாலின் எல்லை மீறினால் அழகிரி, கனிமொழி என செக் வைக்க அவரிடம் பல விஷயங்கள் இருந்தன
ஸ்டாலினிடம் இது எதுவுமே இல்லை, அரசியல் என்பது யாரை எப்படி தள்ளும் என்பது புரியாது. இப்போதைக்கு உதயநிதியினை ஓரமாக விளையாட சொல்வது திமுகவிற்கு நல்லது.
ஏற்கனவே மு,க முத்து ரசிகர்மன்றம் நடத்தி அவரை மூலையிலே தள்ளிவிட்ட வரலாறெல்லாம் திமுகவில் உண்டு என்பது வரலாறு.
முக முத்து ரசிகர் மன்றங்கள் யாரை குறிவைத்தன, அவரிடம் எப்படி தோற்று ஓடின என்பதெல்லாம் வரலாறு, உதயநிதி ஸ்டாலினின் மன்றங்கள் யாரை சீண்டுகின்றன என்பது உங்களுக்கே தெரிந்திருக்கும்
கலைஞருக்கு குடும்ப பாசம் உண்டு, ஆனால் எங்கு கட்டுபடுத்தவேண்டுமோ அங்கு கட்டுபடுத்துவார். ஸ்டாலினிடம் கட்சி கொடுத்தால் மறுநிமிடம் அவர் குடும்பத்தார் எல்லாம் வருவர், அதனை தடுக்க ஸ்டாலினால் முடியாது என்பது கலைஞருக்கு தெரிந்திருக்கலாம்
அதனால் முடிந்தமட்டும் அந்த பொறுப்பினை கலைஞரே சுமந்திருக்கலாம், நடக்கும் சம்பவங்கள் அதனைத்தான் சொல்கின்றன.
திமுக அதன் சோதனை காலத்தை வலுவில் இழுத்துகொண்டிருகின்றது, இவை எல்லாம் தேர்தலில் வென்று ஆட்சிக்கு வந்தபின் செய்யவேண்டிய விஷயங்கள்
வெற்றிபெறுமுன்னே மகுடம் சூட்ட முயல்வது உட்பகை காரியங்களை வலுவாக்கி கட்சியினையே நிலைகுலைய செய்யும்
தாய் முதலில் பாயட்டும் , கன்று அதன் பின் பாயட்டும். தாயும் கன்றும் ஒரே பாய்ச்சலில் எப்படி தாண்ட முடியும்?