அற்புதமான நடிகனை அவன்போக்கில் நடிக்கவிடுவதுதான் சரி

அந்த ரஜினிகாந்தை நினைத்து பார்த்தால் பரிதாபமே மிஞ்சும் , ஒருநடிகன் இங்கே நிம்மதியாக இருந்துவிடவே கூடாது எனும் சாபம் மிக்கது தமிழ்நாடு

நிச்சயம் ரஜினி சூப்பர்ஸ்டார் ஆவோம் என்றோ , இல்லை அரசியலை ஆட்டுவிப்போம் என்றோ சென்னைக்கு வரவில்லை, சாதாரண சிவாஜிராவ் 1970களில் நடித்து பிழைக்கத்தான் வந்தார்

கருப்பும் கலைந்த முடியும் சரியாக தமிழும் தெரியாத அவன் தொடக்கத்தில் வில்லனா, காமெடியனா, கதாநாயகனா என தெரியாமல் தடுமாறியதெல்லாம் தனி கதை

ராமசந்திரனின் அரசியல் பிரவேசமும் 1980களின் கால கட்டமும் அவனிடமே இருந்த வசீகர ஈர்ப்பும் அவனை சினிமாவில் உச்சத்துக்கு இழுத்து சென்றது

இசையும் கதையும் பாடலும் வசனமும் காட்சியும் தயாரிப்பும் இன்னும் பலவும் அவனுகேற்ற்ப வளைந்து கொடுத்தன‌

அதுவரை சரி, அவன் வேகமாக வெற்றிபடியில் ஏறும்பொழுது முதல் கல்லை எறிந்தவர் ராமசந்திரன்

தான் வந்த வழியில் இன்னொருவன் வரகூடாது என முதல் கல்லை அவர்தான் எறிந்தார்

ஏகபட்ட மிரட்டல்கள் சோதனைகள், ரஜினி வளர கூடாது என்பதில் கவனமாய் இருந்தார் ராம்சந்தர்

1980களில் பலத்த சோதனையினை சந்தித்து ஆமாம் நான் மெண்டல்தான் என பெரும் பழியோடு மீண்டார், நிச்சயம் அவர் அரசியலுக்கு வரவில்லை ஆனால் அஞ்சினார்கள்

ராமசந்திரன் விரட்டினார் ரஜினி ஓடினார்

பின் ஜெயாகாலம் வந்தது, பில்லா படத்தில் என்னை ரஜினிக்கு ஜோடியாக போடுங்கள் என கெஞ்சிய ஜெயா இப்பொழுது ஆடினார்

அடுத்த இன்னிங்க்ஸை தொடங்கினார் ரஜினி , அது எங்கெல்லாமோ சுற்றி மூப்பனாரிடம் ரஜினியினை இழுத்து சென்றது

1996ல் நடந்த தவறு மூப்பனாருக்கு தன் பலம் தெரியாமல் இருந்ததும், ரஜினிக்கும் அப்படி இருந்ததுமே

திமுக அங்கு தேவையற்ற ஆணி, ஆனாலும் உள்ளே புகுந்து பலனை அனுபவித்தது, நிச்சயம் அன்று திமுக இல்லை என்றாலும் மூப்பனார் ரஜினிகூட்டணி சாதித்திருக்கும்

அதன் பின் மூப்பனார் பிரதமராக கூடாது என திமுக சிரித்துகொண்டே கழுத்தறுத்தபின்பு ரஜினி மனதால் அழுதார்

என்னடா அரசியல் இது என்ற வெறுப்பு அவருக்கு மேலோங்கிற்று, துரோகம் என்றால் என புரிய ஆரம்பித்தது

காங்கிரஸின் உட்கட்சியும் அதன் ஒருமாதிரி தன்மையும் புரிய ஆரம்பித்தபின் , தமிழக காங்கிரஸ் திமுகவின் பினாமி என அவர் புரிய ஆரம்பித்தபின் அவருக்கு பாஜக தவிர வேறு வாய்ப்பில்லை எனினும் உள்ளே செல்லவில்லை

துரோகத்தில் சரிந்த மூப்பனார் ஜெயாவிடமே செல்ல மனம் வெறுத்தார் ரஜினி

அதன் பின் வருவோர் போவோர் எல்லாம் ரஜினியினை வம்பிழுத்தனர் ராமதாஸ் அவர் இவர் என ஏராளம், அதை சில சக்திகள் ரசிக்கவும் செய்தன‌

ஆள் அம்பு சேனை வாய்த்தும் அரசியல் என்றால் என்ன என்பதை 1997லே புரிந்த ரஜினி தள்ளி நின்றார், ஆர்வகோளாறில் குதித்த விஜயகாந்த் சிக்கி மாண்டே விட்டார்

ராமசந்திரன் ஜெயா என கடந்த ரஜினி கலைஞர் எனும் மலைபாம்பினை சாதுர்யமாக கையாண்டார்

வெட்டவுமில்லை ஒட்டவுமில்லை மிக சரியாக அவரை கையாண்டார், அரசியல் சாணக்கியனான கருணாநிதியே ரஜினி நிலைப்பாடு தெரியாமல் தலையினை பிய்த்த காலங்கள் உண்டு

ஆனால் மறைமுக தொந்தரவுகள் வந்தன, சமாளித்தார்

கலைஞர் பாஷையில் சொல்வதாக இருந்தால்

ராமசந்திரன் விரட்டினார் ரஜினி ஓடினார், ஜெயா விரட்டினார் ஓடினார் கலைஞர் விரட்டாமல் விரட்டினார்

ஓடினார் ஓடினார் ரஜினி சிங்கப்பூர் மருத்துவமனை வரை ஓடினார்

அதன் பின் திரும்பி வந்தார்

இப்பொழுது திமுகவினர் அவரை குறிவைத்து அடிக்கின்றனர், பாஜக அனுதாபி என்பதால் அவரே அடுத்த ஆபத்து என அலறுகின்றனர்

ரஜினியினை பாஜக பக்கம் தள்ளியது யாரென்றால் இவர்கள்தான்

அன்றே நல்லவர் மூப்பனாரை பிரதமராக்கியிருந்தால் ரஜினிக்கு ஏன் இந்த வெறுப்பு வரபோகின்றது

தங்களுக்கு பிடித்தமாதிரி ரஜினிஎனும் காளைக்கு சிலர் மூக்கணாங்கயிறு போட பார்த்தார்கள், யானை என்றாலும் அடக்கியிருப்பார்கள்

அடக்கி தங்களுக்கு வண்டி இழுக்க, தங்களை சுமக்க வைத்திருப்பார்கள்

ரஜினி எனும் டைனோசரை என்ன செய்வது என அவர்களுக்கும் தெரியவில்லை பாவம்

ஆக 42 வருடமாக எதிர்ப்பு எதிர்ப்பு என ஒன்றை மட்டுமே சந்தித்து வரும் துரதிருஷ்டமான நிலை ரஜினிக்கு

அவர் வெளியில் வரவும் முடியாது, வந்தாலும் குற்றம், வந்து பேசினாலும் குற்றம்,பேசாவிட்டால் அதை விட குற்றம்

விரட்டும் அரசியல்வாதி ஒருபக்கம்

அரசியலுக்கு வா என அழைக்கும் ரசிகன் ஒருபக்கம்

இதில் யாரை பகைக்க என தெரியா ரஜினி வருவேன் ஆனால் வரமாட்டேன் என ஒருமாதிரி விலகி செல்கின்றார்

ஆன்மீகத்திலும் தியானத்திலும் தனக்கான அமைதியினை தேடுகின்றார்

நிச்சயம அவர் யாருக்கும் எதிரி அல்ல அப்படி நினைப்பவரும் அல்ல‌

தன் தொழிலான நடிப்பு, நிம்மதி தேடி நிறைவான ஆன்மீகம் இதை தவிர ஏதும் அவர் தேடுபவரும் அல்ல‌

அவரின் வழியில் சென்றுகொண்டிருக்கின்றார்

அவரின் பலத்தை பார்த்துவிட்டவர்கள் அவரை மடக்கி போடவும் அல்லது விரட்டி அடிக்கவும் படாதபாடு பட்டுகொண்டிருக்கின்றார்கள்

1980களில் இருந்தே இது குறித்து நீண்ட அனுபவம் கொண்ட ரஜினி தனக்கே உரித்தான சாதுர்யத்தில் எல்லாம் கடந்து செல்கின்றார்

நிச்சயம் அவரால் அதிமுக பக்கம் செல்லமுடியாது, ஹேஸ்யங்கள் இருக்கலாம் உன்னை மிரட்டிய ராம்சந்தர் ஜெயாவின் நாற்காலியில் நீ அமர்ந்து பழிவாங்கு என சில ஆலோசனைகள் வரலாம்

ஆனால் அவர் செல்லமாட்டார்

திமுக கேட்கவே வேண்டாம், முக ஸ்டாலினுக்கு ஆதரவு என்றால் ரஜினி பேரன் கூட அவரிடம் விளையாட செல்லமாட்டான், அது பா. ரஞ்சித் படத்தினை விட கொடும் முடிவு

அவர் செல்லமாட்டார், ஆனால் வா என்ற இழுப்பும் மிரட்டலும் ஒரு பக்கமும், வராதே .. வந்தால் என எச்சரிக்கையும் அலறலும் இன்னொரு பக்கமும் கேட்டுகொண்டே இருக்கும்

தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டாராக இருப்பது ஒருபக்கம் எரியும் தீ, மேலே வட்டமிடும் கழுகு, ஒருபக்கம் ஓநாய், இன்னொரு பக்கம் முதலை கூட்டம், கொஞ்சம் கவனம் தப்பினால் அடித்த்து தூக்கும் புலிகூட்டம், நீர் என கைவைத்தால் உள்ளே ஓளிந்திருக்கும் முதலைகூட்டம் நடுவில் பயணிப்பது போன்றது.

ஒவ்வொரு நொடியும் ஒருவித நெருக்கடியிலேதான் கழியும்

நிம்மதி என்பதும் நிரந்தர மகிழ்ச்சி என்பதும் ஒருகாலமுமில்லை.

உலக‌ நடிகர்கள் வாழ்விலே சபிக்கபட்ட வாழ்க்கை தமிழ்நாட்டில் சூப்பர்ஸ்டாராக இருப்பது.

தமிழக சூப்பர்ஸ்டாராக இருப்பது எவ்வளவு பெரும் சிரமம் என்பது ரஜினியின் ஆழ்மனம் ஒன்றுக்குத்தான் தெரியும்

அந்த அற்புதமான நடிகனை அவன்போக்கில் நடிக்கவிடுவதுதான் சரி

வைடூரியம் என்பது பலவகைகளில் மின்னகூடியது, அதனை திருப்ப திருப்ப பலமாதிரி ஒளிரும், அதை பார்த்து ரசிக்கலாம்

மாறாக நீதான் ஓளிகொடுக்க வேண்டும் எண்ணெய் விளக்குக்கு பதிலாக தொங்கு என்பதெல்லாம் சரி அல்ல‌

அந்த வைடூரியம் எவ்வளவோ சிக்கலுக்கு இடையில்தான் மின்னுகின்றது, இன்னும் மின்னட்டும்

அதை தெருவிளக்கு ஆக்கிவிடாதீர்கள்