அற்புத நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள் !!!
நண்பர்களுக்கு ஒரு நாளாம்,
இந்த தேதியில்தான் உலகில் நட்பு வந்தது போலவும் அதற்கு முன்பு நண்பர்களே உலகில் இல்லை என்றும், எனவே அதனை கொண்டாட, அட்டைகள், கயிறுகள்,டாஸ்மாக் இன்னும் என்ன கருமங்களுக்கெல்லாம் செலவழித்தால்தான் அது நண்பர்கள் தினமாம்.
இந்திய உலகிற்கு கொடுத்த காவியங்களையும், அக்காவியம் குறிக்கும் பாத்திரங்களையும் பாருங்கள், ஏதாவது ஒன்று நட்பு இல்லாமல் இருக்கின்றது என காட்டுங்கள், அப்படி ஒரு காவியமும், வரலாறும் இல்லை, அலெக்ஸாண்டர் வாழ்வினை தவிர
ஆம் தனக்கு பின் சாம்ராஜ்யத்தை தன் நண்பர்களுக்கே அவன் விட்டு சென்றான், நட்பில் அவன் அப்படி உயர்ந்து நின்றான்
நட்பிற்காக ஒரு அதிகாரத்தினையே அமைத்து அதனை வாழ்வின் தவிர்க்க இயலா அங்கமாக்கினார் வள்ளுவர்.
நட்பிற்கு பாரத பூமியும், தமிழ் கலாச்சாரமும் கொடுத்த பெருமைகள் அப்படி,
ராமனும் குகனும், கண்ணனும் குலேசனும், என இந்தியர் கொண்டாடும் ஆண்டவனின் அவதாரங்களே நட்பின் வலிமையை உணர்த்தும்.
இந்திய புராணங்கள் என்றல்ல, இயேசு கிறிஸ்துவிற்கும் புனித பீட்டருக்கும் இருந்த நட்பு உலகறிந்தது.
தமிழில் கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் நட்பு, முகம் கூட பார்க்காமல் மலர்ந்து , இறுதியில் ஒன்றாய் உயிர்விடும் அளவுக்கு சென்றது.
பாரதத்தில் கொடுமையான துரியோதனுக்கு பலமே அவனுக்கும், மாசு இல்லாத கர்ணனுக்கும் இருந்த உயர்வான நட்பு,
அசோகவனத்தில் சீதைக்கும் கூட திரிசடையின் நட்பே ஆறுதல்.
இன்னும் எத்தனையோ விதமான நட்புகளை உலகிற்கு சொன்னது தமிழினம்,
அவதாரங்களுக்கும், மன்னருக்கும், பெரும் பொல்லாதவர்களும் கூட நண்பர்கள் இன்றி வாழ்ந்ததில்லை என்பதை சொல்லும் கலாச்சாரம் நம்முடையது.
அந்த கால தமிழனை விடுங்கள், இன்றைய தமிழகம் ஆளும் தலைவர்களை பாருங்கள், அது 65 ஆண்டு கால வரலாறு கொண்ட நட்போ அல்லது 30 ஆண்டுகால நட்போ, தனது நண்பரை சற்றும் விட்டுகொடுக்காத நட்பினை சர்வ உலகத்திற்கும் தெரிவிக்கும் மாநிலம் இது.
எத்தனை நெருக்கடிகள், எவ்வள்வு சிரமங்கள் அதையும் தாண்டி நட்பிற்கோர் இலக்கணமாய் இன்றும் தொடரும் நட்புக்கள் அவை.
கலைஞர் அண்ணா நட்பு தமிழகத்தை வாழவைத்தது, ஜெயா சசிகலா நட்பினை பற்றி நீங்களே முடிவு செய்யலாம். சில நட்புகள் அப்படி அமைந்திருக்க கூடாதவை
மாபெரும் ஞானிகளுக்கும் நட்பிருந்தது, தலைவர்களுக்கும் இருந்தது, ஒரு காலத்தில் 3 மாநிலத்தினை அச்சுறுத்திய வீரப்பனுக்கும் உயிர்கொடுக்கும் நண்பர்கள் இருந்தார்கள், ஆட்டோ சங்கருக்கும் பெரும் நட்பு வட்டம் இருந்தது.
காரணம் மானிட வாழ்வில் நட்பு ஒரு தவிர்க்க இயலாத அங்கம்.
தமிழர் நட்பிற்கு கொடுத்த கொளரவமும், இந்திய பாரம்பரியம் கொடுத்த பெரும் மரியாதையும், உலகில் எந்த நாடும், எந்த இனமும் கொடுத்தது இல்லை, கொடுக்கபோவதும் இல்லை
அப்படிபட்ட தமிழகத்தில் இப்பொழுது எமக்கும் முகநூலில் ஏகபட்ட நண்பர்கள் இருக்கின்றார்கள்
பலர் மவுனமாக கண்காணிக்கின்றார்கள், சிலர் ஹாய் என சொல்லிவிட்டு பார்த்துகொண்டே இருக்கின்றார்கள், சிலர் உரிமையாக உள்பெட்டிக்கு வருகின்றார்கள்
சிலரோ இன்னுமா எழுதவில்லை, எழுதுகின்றாயா இல்லை வீட்டில் குண்டு வீசட்டுமா என கேட்கும் அளவு உரிமையாகிவிட்டார்கள்
மிக சிலர் அவர்கள் வீட்டில் ஒருவனாகவே நினைக்கின்றார்கள், அந்த அளவு உதவுகின்றார்கள். ஓடோடி வருகின்றார்கள்
கேவலம் சொத்துக்காக உறவுகளால் வெறுக்கபட்டும், சூழலால் தனியாக வளர்ந்துவிட்ட ஒருவனுக்கு, அதுவும் தொலைதூரத்தில் இனம்பிரிந்து மண்பிரிந்து வாழும் ஒருவனுக்காக இத்தனை நண்பர்கள் இருப்பது ஆச்சரியம்
நாம் அவர்களுக்காக துரும்பினை கிள்ளி போடவில்லை என்றாலும் எனக்காக மலையினை புரட்ட அவர்கள் தயாராக இருக்கின்றார்கள் என்பது மகிழ்ச்சி
ஆண்டவன் எனக்கு செய்திருக்கும் மிகபெரும் கருணை இது, ஆபத்தில் எல்லாம், சில தேவைகளில் எல்லாம் இவர்கள் உருவில் அந்த ஆண்டவனையே காண்கின்றேன்
முகநூலில் கிடைத்திருக்கும் நண்பர்கள் அவ்வளவு அற்புதமானவர்கள்
அவர்களில் குகன் போன்றவர்கள் உண்டு, சடையப்ப வள்ளல் போன்றவர்களும் உண்டு, கர்ணன் போன்றவர்களும் உண்டு, கன்ணன் போன்றவர்களும் உண்டு.
நான் நிச்சயம் கம்பன், ராமனும் அல்ல, ஆனால் குசேலன்
உங்களுக்கெல்லாம் என்ன கைமாறு செய்ய போகின்றேன தெரியவில்லை, அதை நினைக்கும்பொழுதே கடன்பட்ட நெஞ்சம் போல் நெஞ்சம் கலங்குகின்றது
எனக்கு எழுத்து வரும் என நான் நினைத்ததில்லை, எழுதுவதாக நினைத்ததுமில்லை
எதையோ எழுத தொடங்கினால் அது கழுத்தை பிடித்து எங்கோ இழுத்து சென்று எங்கோ முடித்துவிடுகின்றது, எப்படி இழுத்து செல்கின்றது என எனக்கு தெரியவே இல்லை
எழுதி கொண்டே இருந்தேன், திரும்பி பார்த்தால் ஏராளமான நன்பர்கள் நிற்கின்றார்கள் இது அந்த ஆண்டவன் கருணை
அந்த அற்புத நண்பர்கள் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துக்கள்
உங்கள் அனைவருக்காகவும் பிரார்த்தித்துகொள்வதை விட நான் என்ன செய்ய முடியும்?
முடிந்தவரை ஒவ்வொரு நொடியும் அதனைத்தான் செய்துகொண்டிருக்கின்றேன்