அவசர நிலைமைக்கால கொடுமைகளை மறக்கமுடியுமா?
சோ ராமசாமி தன் போக்கில் எமர்ஜென்ஸியினை கலாய்த்துகொண்டிருந்தார், பத்திரிகை தடை இருந்த காலத்திலும் மகா ரகசியமாக ஆனால் ஆர்வமாக அவரின் துக்ளக் தேடபட்டு மக்களால் வாங்கபட்டது
அதுவும் அத்வாணி, வாஜ்பாய் கைதுசெய்யபட்டபின் சோ ராமசாமியின் தாக்கம் அதிகமாக இருந்தது
கலைஞரோ அட்டகாசமாக ஆடிகொண்டிருந்தார். ஸ்டாலின் உட்பட எல்லோரும் சிறைபட்டிருந்தனர். அந்த மிசா சட்டபடி கைது செய்யபட்டோர் எங்கிருக்கின்றனர், இருக்கின்றார்களா இல்லையா என்பது கூட தெரிவிக்கபடாது
திமுக சார்பாக கைது செய்யபட்டோர் விவரம் கலைஞரிடம் இருந்தது ஆனால் முரசொலியில் எழுதமுடியாது. மத்திய அரசு ஒப்புதல் கொடுத்தபின்பே செய்தி வெளிவந்த காலமது
பார்த்தார் கலைஞர், மலர் வளையம் வாங்கிகொண்டு அண்ணா சமாதி சென்றார், இங்கு வரமுடியாதோர் பட்டியலை வாசிக்கின்றேன், மறுபடியும் சொல்கின்றேன் அவர்களால் வரமுடியவில்லை என அழுத்தி சொல்லிவிட்டு அந்த பெயர்களை வாசித்தார்
அந்த பெயர்கள் மிசாவில் உள்ளே இருந்த பெயர்கள். விஷயம் தமிழகம் முழுக்க தெரிந்தது. இந்திராவே சிரித்துகொண்டார்
கட்சி கூட்டம் நடத்த தடை என்ற நிலையில் கலைஞரின் அரசியல் வேறுவடிவம் எடுத்தது, தொண்டர்கள் காதுகுத்து விழா, முடி எடுப்பு விழா, திருமண விழா , சாவு விழா என தினமும் 10 விழாக்களை நடத்தினர்
அதை எல்லாம் அரசு தடை செய்ய முடியாதல்லவா? அதனால் அங்கு சென்று அட்டகாசமாக அரசியல் பேசிவிட்டு வந்தார் கலைஞர்
திருமண மண்டபங்களையும் , குடும்ப விழா மேடைகளையும் அரசியல் மேடை ஆக்கிகாட்டினார். இந்திரா தலையில் அடித்து கொண்டார்
அந்நிலையிலும் காமராஜரிடம் சென்று நான் ஆட்சி துறக்கின்றேன், நீங்கள் வழிகாட்டுங்கள் நாங்கள் போராடுகின்றோம் என ஆதரவு கேட்கவும் அவர் தயங்கவில்லை
இதுதான் கலைஞர், இதன் பின் அவர் ஆட்சி இதற்காகவே டிஸ்மிஸும் செய்யபட்டது
எந்த காமராஜரை தோற்கடித்தாரோ, அவரிடமே மிசா கொடுமைக்காக சென்று போராட அழைக்கும் அரசியலும் அவரிடம் இருந்தது. கலைஞர் பிறவி அரசியல்வாதி என்பது இதுதான்
இறுதிவரை மிசாவினை எதிர்த்து நின்றார் கலைஞர், அகில
இந்திய அளவில் அவர் மிளிர்ந்து நின்றது இந்த நேரத்தில்தான், தேசமே அவரை அதிசயமாக பார்த்தது
பின்னாளில் இந்தியா முழுக்க மரியாதை ஏற்பட அவரின் அந்த தைரியமான நகர்வே காரணம்.
ஆங்கில பத்திரிக்கையொன்று அட்டைப்படத்தில் கருணாநிதி படத்தைப் போட்டு The man who scared Mrs Ganthi என்று கௌரவப்படுத்தியது.
உடனே திமுக வெளிநாட்டு மிஷனெரிகளின் கட்சி என சொல்லவும் காங்கிரசார் தயங்கவில்லை.
அப்படிபட்ட கலைஞர் 1977ல் ஸ்தாபன காங்கிரசுடன் மிசா மீட்டுகொள்ளபட்ட பின் நடந்த தேர்தலில் கூட்டணி வைத்து பிரச்சாரங்களில் இப்படி பேசினார்
மிக சுவாரஸ்யமான பேச்சு அது
அந்த தேர்தல் 1971 பாராளுமன்ற தேர்தல் போல் அல்லாமல் அரசியல் காட்சிகள் தமிழகத்தில் பெரும் காட்சி மாறுதலுடன் நடக்கவிருந்தது.
அப்போது காமராஜரின் சீடர் பா.ராமச்சந்திரன் தமிழக ஜனதாவின் தலைவர்.கிட்டத்தட்ட ஸ்தாபன காங்கிரஸுடன் திமுக கூட்டு என்று தான் சொல்லவேண்டும். இடது கம்யூனிஸ்டுகளும் இந்த கூட்டணியில்.
அப்போது கருணாநிதி திருச்சியில் பா.ராமச்சந்திரன் ஒரே மேடையில் தேர்தல் பிரச்சாரம்.
திருச்சியில் கருணாநிதியின் 1977 பொதுத்தேர்தல் மேடைப்பேச்சு:
“உங்களுக்கு வியப்பாக இருக்கலாம். நான் ராட்டை சின்னத்திற்கு வாக்களியுங்கள் என்று கேட்பதும் பா.ராமச்சந்திரன் உதய சூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று கேட்பதும்உங்களில் அனேகருக்கு வியப்பாக இருக்கலாம்.
வாக்களியுங்கள் என்று கேட்பது மாத்திரமல்ல. நானே பா.ராமச்சந்திரனுக்குத் தான் ராட்டை சின்னத்தில் வாக்களிக்க இருக்கிறேன்.ஆண்டாண்டு காலமாக உதய சூரியன் சின்னத்திலே வாக்களித்து வாக்களித்து பழக்கப்பட்ட இந்த கரம் இப்போது ராட்டை சின்னத்தில் பா.ராமச்சந்திரனுக்கு வாக்களிக்கப்போகிறது. அவர் மாத்திரம் என்னவாம்?(கரகோஷம்)முரசொலி மாறனுக்கு உதயசூரியன் சின்னத்தில் தான் வாக்களிக்கப்போகிறார்.
அவசர நிலைமை பிரகடனம் செய்கிற அளவுக்கு நாட்டிற்கு என்ன ஆபத்து வந்து விட்டது. சீனத்துக்காரன் சீற்றம் கொண்டானா? பாகிஸ்தான்காரன் படையெடுத்தானா?இல்லையே! என்ன அவசியம்?
ஆபத்து எதுவும் இந்தியத் திருநாட்டுக்கு இல்லை.இந்திரா காந்தியின் வீட்டுக்குத்தான்.
அலகாபாத் நீதிமன்றத்திலே ஒரு நீதிபதி.சின்கா அவரது பெயர்.சொந்தக்கையாலேயே தீர்ப்பு எழுதக்கூடிய சுபாவம் கொண்டவர்
அந்த நீதிபதி சொன்னார்”இந்திரா காந்தி தேர்தலில் ஜெயித்தது செல்லாது. அவர் இனி பத்தாண்டு தேர்தலில் நிற்கக்கூடாது.
என்ன சொன்னார். ஓராண்டு ஈராண்டல்ல! பத்தாண்டு தேர்தலில் போட்டியிடக்கூடாது என்றார்.
அதனால் தான் இந்திய நாடு அவசர நிலைமையை எதிர்கொள்ளவேண்டிய துர்பாக்கியம் நேர்ந்து விட்டது. இல்லை என்று மறுக்கமுடியுமா?
அவசர நிலைமைக்கால கொடுமைகளை மறக்கமுடியுமா?
பாராளுமன்றத்திற்கு நடக்கவேண்டிய தேர்தல் ஈராண்டு தள்ளிப்போடப்பட்டது.
பாராளுமன்ற தேர்தலை ஈராண்டு தள்ளிப்போடப்பட்டது சர்வாதிகாரமல்லவாம்.அப்படி ஈராண்டு தள்ளிப்போட்ட தேர்தலை இன்று ஓராண்டிலேயே அறிவித்தது சர்வாதிகாரமல்லவாம்.நம்ப வேண்டுமாம். எதிர்பார்க்கிறார்கள், நம்ப சொல்கின்றார்கள்
திடீரென்று தேர்தலை அறிவித்ததே மிகப்பெரிய ஜனநாயகச்செயல் என்று இன்று வாதிக்கப்படுகிறது.
இந்த அம்மையார் நான் முதல்வராக இருக்கும்போது அவசரநிலைமையை அறிவிக்கிறார்.காமராஜர் நீங்கலாக தேசத்தலைவர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.பத்திரிக்கை சுதந்திரம் பறிக்கப்படுகிறது. நான் பெருந்தலைவர் காமராஜரை அவர் வீட்டுக்கு சென்று பார்த்தேன். அவர் விம்மி அழுதார். என்னைப் பார்த்து “தேசம் போச்சு..தேசம் போச்சு..தேசம் போச்சு..” என்று மும்முறை கூறினார்.
நான் காமராஜரை எதிர்த்து நேருக்கு நேர் அரசியல் செய்தவன்.அரசியல் எதிரி.ஆனால் காமராஜரின் முதுகில் குத்தியவன் அல்லவே. சி.சுப்ரமண்யம் கால காலமாக காமராஜருக்கு துரோகம் செய்தவர்.
ஆர்.வெங்கட்ராமன் காங்கிரசில் காமராஜரின் முதுகில் குத்தியவர்.
கருணாநிதி ஓட்டு கேட்டு வரலாமா? என்று கேட்கிறார்கள். நான் நீதிமன்றத்தால் இந்திரா காந்தி போல தண்டிக்கப்பட்டவனா?இந்திராகாந்தி அலகாபாத் உயர் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்.
தண்டிக்கப்பட்ட இந்திரா காந்தி ஓட்டு கேட்டு வரலாம். ஆனால் கண்டிக்கப்படாத கருணாநிதி வரக்கூடாதா”
காலத்திற்கும் நிலைத்து நிற்கும் பேச்சுக்களை அன்று பேசினார்
பின்னர் ராமசந்திரனின் அழிச்சாட்டியத்தில் இந்திரா கலைஞருடன் கூட்டணி வைக்கும்பொழுது நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக என சொல்லவும் செய்தார்
கலைஞர் உங்களை எப்படி எல்லாம் திட்டினார், அவருடன் கூட்டணியா என காங்கிரசார் நெளிந்தபொழுது “கலைஞர் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் உறுதியாக இருப்பார், அவரை நம்பலாம்” என அமைதியாக சொன்னார் இந்திரா
அந்த மிசா காலங்களை அட்டகாசமாக தாண்டி, தன் மகன் சிறையில் கொடுமைபடுத்தபட்டபின்பும் காங்கிரசோடு அரசியல் செய்து கட்சிக்கு எது தேவையோ அதனை செய்தவர் கலைஞர்
மிசா காலம் என்றால் கலைஞர் அதை எதிர்த்து ஆடிய ரசனையான காலங்களும் மறக்கமுடியாதது, வலிகளை தாங்கிகொண்டே எல்லோரையும் சிரிக்க வைத்தே அக்கொடிய காலங்களை கடந்தார்
அசாத்திய மனிதர் அவர்
1976ல் முரசொலியில் மிசா பற்றி எழுதினார், அது தடைசெய்யபட்டது
திராவிட கொள்கை எழுதினார் தடுக்கபட்டது, அண்ணாவின் பேச்சு , சிந்தனைகளை எழுதினார், அரசு வெளியிடவில்லை
அடுத்த நாள் முரசொலி இப்படி செய்தியுடன் வந்தது
“வெண்டக்காய் உடலுக்கு மிக நல்லது, ரஷ்யாவிலிருந்து திரும்பிய ஆதிலட்சுமி தகவல்”