அவர்கள் தமிழர்கள் என கிளம்புவர்கள் என்ன ரகம்?

இந்தியாவில் பயிற்சி பெற்ற போராளிகுழுக்கள் ஒவ்வொன்றிற்கும் ஒருவித சிறப்பு பயிற்சிக்களை அளித்திருந்தது இந்தியா, அதாவது டாங்கி படை எதிர்ப்பு ஒன்றிற்கு, கப்பல் படை எதிர்ப்பு ஒன்றிற்கு, கண்ணிவெடி நடவடிக்கைகளுக்கு ஒன்று என கொடுத்திருந்தது

எல்லா குழுக்களும் களத்தில் இருந்தவரை சிங்கள ராணுவம் வடக்கில் நடமாட கூட முடியவில்லை, காரணம் பல குழுக்கள் பலமுனை தாக்குதல்கள், சிங்களம் சுத்தமாக தளர்ந்திருந்தது.

இனி தமிழருக்கு ஏதும் உரிமை கொடுக்காமல் சாத்தியமில்லை என சிங்கள உச்சபீடம் கதறிகொண்டிருந்தது.

ஆனால் சக குழுக்களை, அதாவது தன்னிடம் இல்லா பயிற்சிகள் அவர்களிடம் இருக்கிறது என்பதற்காகவே போட்டு தள்ளினர் புலிகள், பத்மநாபா குழு மட்டும் பாதிக்கபட்ட போராளிகளை ஓரளவு காப்பாற்றியது,

கொஞ்சம் ஒதுங்கியும் இருந்தது, அவர்களிலும் ஏராளமானோர் காலி, புலிகள் அவர்களை தடை செய்தும் விட்டனர்.

4 மாடும் ஒரு சிங்கமும் கதை 2ம் வகுப்பில் படித்திருக்கலாம், அதே நிலைதான், இது சரியான நேரம் புலிகள் மட்டும்தான் , காப்பாற்ற யாருமில்லை என களமிறங்கிய சிங்களம் அதிரடியாக ஈழத்தை சுற்றியது, ஆப்ரேஷன் லிபரேஷன் என பெயரும் சூட்டியது, பிரிட்டன் காலத்திற்கு பின் இலங்கை செய்த முதல் யுத்தம் அதுதான்.

சரியாக 32 ஆண்டுகளுக்கு முன்பு இதே காலகட்டத்தில் ஈழம் எரிந்துகொண்டிருந்தது, அதாவது இஸ்ரேலிய வழிகாட்டலில் மிக அற்புதமான யுத்த வியூகத்தில் சிக்கியது புலிகள், இன்றுவரை இலங்கையில் தீட்டபட்ட யுத்த வியூகத்தில் தலைசிறந்த வியூகம் அது, இஸ்ரேலிய ராணுவ மூளை கொடுத்த திட்டம், செய்வதறியாது திகைத்தனர் புலிகள்.

எங்கும் அழுகுரல் உணவில்லை, மருந்தில்லை, மக்கள் கடும் அவதி அதுவும் வடமராட்சி பகுதி முள்ளிவாய்க்காலாக மாற இருந்தது.

காரணம் அதேதான் மக்களை சுற்றிவைத்துவிட்டு நடுவில் அமர்ந்துகொள்ளும் யுத்திதான், ஆனால் இஸ்ரேலிய பயிற்சி கடுமையாக இருந்தது, மக்களை பற்றி கவலையில்லை, புலிகள் இருக்க கூடாது, 2 நாட்களில் பிரபாகரன் துடைக்கபடும் நிலை.

அப்பொழுதுதான் ராஜிவ் உத்தரவில் இந்திய ராணுவ விமானம் ஐ.நாவின் உத்தரவு கூட பெறாமல் உணவு வீசிற்று, அம்மக்கள் காக்கபட்டனர், இன்னும் முற்றுகை நீடித்தால் அடுத்து குண்டுவீச்சுதான் என மிரட்ட அலறிகொண்டு ஓடியது சிங்களபடை, வழிகாட்டிய இஸ்ரேலோ இதனை எதிர்பார்க்கவில்லை, கழன்றது

அது நடந்தது இதே ஜூன் 4.

அம்மக்களுக்காகத்தான் களமிறங்கியது இந்தியா, புலிகளால் ஒரு காலமும் இலங்கை ரானுவத்தை வெற்றிகொள்ள‌ முடியாது, ஆனால் இதனால் மக்கள் செத்துகொண்டே இருப்பார்கள் என்றுதான், அம்மக்கள் கொல்லபடாமல் இருப்பார்கள் என்றுதான் ஒப்பந்தமும் ஆனது அமைதிபடை அனுப்பியது.

அன்று ஒரு சிங்கள கடற்படை வீரன் ராஜிவினை கொல்லமுயன்றதும் இதற்காகத்தான், வெற்றியினை தடுத்தற்காகத்தான்.

ஆனால் அதன்பின் அமைதிபடையினை புலிகள் சீண்டியதும், அது அவமானத்தில் வெளியேறியதும், ஒப்பந்தம் கிழித்தெறிபட்டதும், புலிகளும் சிங்களனும் சேர்ந்துகொண்டதும் வரலாற்றின் கருப்புபக்கங்கள்.

பின் 22 ஆண்டுகள் கழித்து முள்ளிவாய்க்காலில் அதே முற்றுகை, அதே வெளிநாட்டு தொடர்புடன் இலங்கை எடுத்தது.

அன்று ஜெயவர்த்தனே, அதுலத்முதலி, விமலரத்னே என்றால் பின்ன்னாளில் மகிந்த,கோத்தபாய, பொன்சேகா கூட்டணி, அதே தமிழக அப்பாவி மக்கள் நடுவில் புலிகள், அதே அழுகை, அதே கதறல்

ஆனால் காப்பாற்ற ராஜிவும் இல்லை, அமைதிபடையாக அவமான அனுபவபட்ட இந்திய ராணுவவிமானங்கள் அங்கு செல்ல தயாராகவுமில்லை, நடக்க கூடாதது எல்லாம் நடந்தது.

அதனை பின்பு ஒரு சிங்கள அமைச்சர் சொன்னார் ” அன்றே பிரபாகரனை முடித்திருப்போம், இந்திய ராஜிவின் தலையீட்டினால் அது முடியவில்லை, பின்னாளில் இந்தியா அவ்வாறன தவறை தனது கசப்பான அனுபவம் மூலம் திருத்திகொண்டதால் இங்கு தீவிரவாதம் தடுக்கபட்டது”

அவர் சொல்லவருவது புரியவேண்டியவர்களுக்கு புரியும், வடமராட்சி முற்றுகை நினைவுநாளில் சிங்களன் ராஜிவினை நினைவு கூறுவான்.

அதே ராஜிவினை நிச்சயம் முள்ளிவாய்க்காலின் இறுதி நொடியில் அவர்களும் நினைவு கூர்ந்திருப்பார்கள்.

அந்த முள்ளிவாய்க்கால் அபலை மக்களின் நினைவு வரும்போதெல்லாம் , அம்மக்களுக்காக உலகையே எதிர்க்க துணிந்த ராஜிவின் நினைவு வருவதை தடுக்க முடியவில்லை.

முள்ளிவாய்க்கால் படுகொலைக்காக இந்தியாவினை யாராவது திட்டிகொண்டிருக்கின்றார்கள் என்றால் அவர்களுக்கு வடமராட்சி சம்பவமும், ஈழபோராட்ட உண்மை முகமும் அறவே தெரியவில்லை என பொருள்.

இவ்வளவு நடந்தபின்னும் அந்த ராஜிவ் கொலையாளிகளை விடுவி, அவர்கள் தமிழர்கள் என கிளம்புவர்கள் என்ன ரகம்? என்பதை நீங்களே முடிவுசெய்துகொள்ளுங்கள்