ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம் …
மகள் பரதநாட்டிய வகுப்பிற்கு செல்ல தொடங்கிவிட்டாள், அந்த வகுப்புக்கு செல்வதற்கு முன் ஒரு ஸ்லோகம் சொல்லி சொல்லி பார்த்துகொண்டிருந்தாள், “டீச்சர் இத படிச்சிட்டு வர் சொல்லிருக்காங்கப்பா” என சொல்லிகொண்டே இருந்தாள், இப்படியாக
ஆங்கிகம் புவனம் யஸ்ய வாசிகம்
ஸர்வ வான்மயம் ஆஹார்யம் சந்திர
தாராதி தம் நுமஹ் சாத்விகம்
சிவம்
“இதற்கு என்னம்மா அர்த்தம்?” என கேட்டால் அவளுக்கு சொல்ல தெரியவில்லை, “சொல்லணுமாம்பா ஆடுறதுக்கு முன்னாடி சொல்லணுமாம்” என சொல்லிவிட்டு சென்றுவிட்டாள்
அதன் அர்த்தம் என என விசாரித்து பார்த்தால் “உலகத்தை உடம்பாகவும் பேசும் பாஷைகள் யாவற்றையும் ஒரே பாஷையாகவும் சந்திர நட்சத்திரங்களை ஆபரணங்களாகவும் அணிந்துள்ள சாந்த ரூபமான சிவனை வணங்குகிறோம்” என்ற பொருளில் வருகின்றது
நடராஜர் நடனத்திற்கு அதிபதி, அவரை இப்படி வணங்கிவிட்டு ஆடவேண்டும் என்பது சாஸ்திர விதியாக இருக்கலாம்
பைபிளின் சங்கீதங்களில் இதே சாயலில் ஒரு பாடல் உண்டு, தாவீது அரசர் இந்த சாயலில் பாடுவார், அவர் இறைவன் முன்னால் ஆடிய காட்சிகளும் பைபிளில் உண்டு
அடிக்கடி இந்த சுலோகத்தை சொல்லிகொண்டிருக்கின்றாள் மகள்
“”அருள் நிறைந்த மரியே”, “பரலோகத்தில் இருக்கும் எங்கள் பிதாவே..” என்ற வார்த்தைகள் ஒலிக்கும் வீட்டில் இப்பொழுது “சாத்விகம் சிவம் ” என்ற வார்த்தையும் சேர்ந்து ஒலிக்கின்றது, நன்றாகத்தான் இருக்கின்றது
இதன் அர்த்தத்தை அவளுக்கு சொல்லிகொடுக்க வேண்டும் எல்லா மதங்களையும் படித்து, மதித்து அவள் வளரட்டும்..