கந்தர் அனுபூதி : 04

கந்தர் அனுபூதி : 04

“வளைபட் டகைம் மாதொடு மக்க ளெனுந்
தளைபட் டழியத் தகுமோ தகுமோ
கிளைபட் டெழுசூ உரமுங் கிரியுந்
தொளைபட் டுருவத் தொடுவே லவனே”

இப்பாடல் கீழ்கண்டவாறு பிரிந்து பொருள் தரும்

“வளைபட்ட கைம் மாதொடு மக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ தகுமோ
கிளைபட்டு எழு சூர் உரமும், கிரியும்,
தொளைபட்டு உருவத் தொடு வேலவனே”

“வளைபட்ட கைம் மாதொடு ” என்பது வளையல் அணிந்த கைகளை உடைய மனைவி எனும் பெண்ணோடு என பொருள்படும், மனைவி எனும் பந்தம் என்பது பொருளாகும்

“மக்கள் எனும்” என்றால் இங்கு மனைவியால் பெற்று வளர்க்கபடும் பிள்ளைகள் என பொருள்

“தளைபட்டு அழியத் தகுமோ” என்றால் பந்தபாசம் எனும் விலங்கில் அகபட்டு அதனிலே உழன்று பாடுபட்டு அழிவது சரியாகுமோ? என்பது அர்த்தம்

“தகுமோ” இது சரியான முறையாகுமோ?

“கிளைபட்டு எழு சூர் உரமும்” என்றால் தன் சுற்றமும் சொந்தமும் பந்ந்தமும் கூடி எழுந்து போருக்கு வந்தவனான சூரனின் அகங்காரமும் கிரவுஞ்ச மலையினையும் என பொருள்

“தொளை பட்டு உருவ” என்றால் துளைத்து ஊடுருவி செல்லும்படியாக என அர்த்தம்

“தொடு வேலவனே” என்றால் வேலை தொடுத்த வேலவனே என பொருள்

ஆக பாடலின் பொருள் சுருக்கம் இதுதான்

“வளையல் அணிந்த மனைவியும் அவள் கொடுத்த பந்தமும் விலங்காக எனக்கு தளையிடபட்டிருக்கின்றது, விலங்கிடபட்டிருக்கின்றது, முருகா உற்றாரும் உறவினரும் கூடி போருக்கு வந்த சூரனையும் அவன் மலையினையுமே பிளந்த வேலை தொடுத்தவன் நீ, அப்படிபட்ட உன்னால் இந்த பந்தபாச விலங்கை உடைக்க முடியாமல் போனால் அது சரியோ?”

இனி பாடலை கொஞ்சம் ஆழமாக நோக்கலாம்

அவலமும் தீரா சிக்கலும் நிம்மதியுமில்லாதது மானிட வாழ்வு, இந்த வாழ்வு ஒரு பெண்ணிடம் இருந்தே தொடங்குகின்றது, பெண்ணிடம் இருந்து பிறக்கும் மனிதனின் வாழ்வின் தொல்லை பிறவியிலே உண்டு,

அந்த தொல்லையினை இன்னொரு பெண்ணை மணந்து இன்னும் தீவிரமாக்குகின்றான் மனிதன், அந்த பெண்ணும் அவளால் அமையும் குடும்பமும் பந்தமும் பாசமுமே

எல்லா உயிரும் பெண்ணிடம் தொடங்கும் உலகில் அப்பிறவியில் வரும் தீரா தொல்லைகளும் அப்பொழுதேதான் பிறக்கின்றன‌

இங்கு வளை கரம் என்பது வளையல் அணிந்த பெண்ணை அதாவது வளைகாப்பு நிகழ்வினை சொல்லி, முழுமைபெற்ற பிண்டமானது பிறக்க தயாராகும்பொழுதே பந்தம் எனும் சங்கில் விலங்கும் இடபடுகின்றது என்பதை சொல்கின்றது

அருணகிரியார் அதை சொல்லி புலம்புகின்றார், இங்கு அவர் தன்னை மட்டும் முன்னிறுத்திபாடவில்லை மானிட ஆன்மாவின் சாட்சியாக , ஒட்டுமொத்த மனுகுலத்தின் குரலாக பாடுகின்றார்

இந்த பந்தபாச வலையிலே, நிரந்தரமில்லாத சிறிதுகால வாழ்வில் மொத்தமும் இந்த பந்த பாச வினையிலே நாங்கள் கட்டுண்டு கிடப்பது உனக்கு சரியோ முருகா என் கேள்வி எழுப்புகின்றார்

கிடைத்தற்கரிய மானிட பிறப்பில் முக்தி அடைய ஞானத்தை தேடாமல் பந்த பாசத்துல் மானிடனும் அவன் ஆத்மாவும் சிக்கியிருப்பதை சொல்லி புலம்புகின்றார் அருணகிரியார்

ஆத்மா மாயையில் அறியாமையில் சிக்கியிருக்கும் நேரம் , அது மீளமுடியா பந்தபாச மயக்கத்தில் லயித்து அற்ப மானிட உறவுகளே நிலையானது என நம்பி அதனிலே மூழ்கி உண்மை பொருளை அறியாமல் நிலையானதும் மாறாததுமான முக்தி நிலையினை தேடாமல் இப்படி அகபப்ட்டு கிடப்பது சரியா

சரியில்லை என்கின்றார் அருணகிரியார்

சொந்தம் பந்தம் என கைவிலங்கு கால்விலங்கினை போட்டு கொண்டு அதுவே சுகம் என மாயையில் மானிட மனம் சிக்கிகிடப்பது தகுதியானது அல்ல,அது முறை அல்ல என சொல்லும் அருணகிரியார் அப்படியே முருகன் மேல் சாடுகின்றார்

“முருகா, அந்த ஆன்மா சிக்கிகிடப்பது தன் நோக்கம் பிறவிகடமையினை மறந்து மாயை சங்கியில் சிக்கி கிடப்பது சரியல்லதான், ஆனால் நீ செய்வது மட்டும் சரியா?

நீ எப்படிபட்டவன் பெருமானே?

சொந்தங்கள் கூடி வாழ்ந்து, சொந்தபந்தங்களுக்காகவே போருக்கு வந்த சூரபத்மனின் நெஞ்சை உடுருவி அவன் பந்த பாசங்களை அகற்றிய வேலினை தொடுத்தவன் அல்லவா? அப்படியே அவனை உன்னோடு அணைத்தும் கொண்டவன் அல்லவா? அப்படிபட்ட நீயா ஆத்மா இப்படி பந்த பாசங்களில் சிக்கியிருக்கும் போது காக்க வராமல் இருப்பது?

இது முறையா? இது தகுமா முருகா? சூரனின் பாச பந்த சங்கிலிகளையெ நெஞ்சில் துளையிட்டு வெளியேற்றிய நீ, அவனை சூழ்ந்திருந்த பெரும் பந்தமான மலைகளையெல்லாம் சுக்கு நூறாக உடைத்த நீ, இந்த அற்ப மானிடரின் ஆத்மாவினை மாய பந்தத்தில் இருந்து மீட்க வரகூடாதா?” என மருகுகின்றார்

இப்பாடலில் அனுபூதி நிலை என்பது எப்பொழுது வரும் என்றால் பந்த பாசங்களை கடந்து முருகனிடம் சரணடைந்தால் முழு ஞான நிலை வரும், முழுமையான என்கின்றார்

இங்கு ஒரு கேள்வி எழலாம்,

அப்படியானால் திருமணம் செய்ய கூடாதா? எல்லோரும் சன்னியாசியாகிவிட்டால் எப்படி உலகம் இயங்கும்? கர்மவினைகளை ஆத்மா எப்படி கழிக்கும் என்பது

இங்கு அருணகிரியார் சொல்வது இல்லறத்தில் இருந்து செய்யும் கர்ம யோகம், துறவறத்தில இருந்து செய்யும் ஞான யோகத்தை சொல்லாமல் இல்லறத்தில் இருந்து செய்யும் கர்ம யோகம் பக்தி யோகத்தை குறிக்கின்றார்

அதாவது இல்லறத்தில் இருந்தபடி அந்த பந்த பாசத்தை தாமரை இலையில் நீர்போல ஒட்டாமல் கடந்து முருகனில் ஆனமாவினை கரைத்து வாழ்வதே அனுபூதி நிலை என்கின்றார்

பந்தம் பொல்லாதது, பாசம் கடுமையானது அதனில் வீழ்ந்த மனம் ஞானத்தையோ இறைசிந்தனையினையோ நாடாது, அப்படி நாடாத மனம் முக்தி அடையாது

அப்படி சொந்த பந்த மயக்கத்தில் அர்ஜூனன் தடுமாறும்பொழுதுதான் கீதை உரைத்து காத்தான் கண்ணன், இந்த பாடல் அந்த கீதாசாரமே

இந்தபாசங்களில் மயங்காமல் , பெண் வழி உறவும் பந்தமும் கொடுக்கும் நிலையற்ற உறவில் மயங்காமல் கர்மத்தை தொலைக்கும் கடமையினை செய்தபடி, எந்த பந்தத்திலும் ஒட்டி இறைவனை மறக்காத மனதுடன் அவன் நினைவில் வாழ்ந்து மானிட லவுகீகத்தில் ஒட்டாமல் அவனுடன் கலக்க வேண்டும், சிந்தையால் நினைவால் கலக்க வேண்டும் என்பதுதான் அனுபூதி நிலை என்கின்றார் அருணகிரியார்

வாழ்க்கை தொல்லை மிக்கது, அது தீயினை போல தீரா பசி கொண்டது, காணல் நீர் போல ஒவ்வொரு கட்டத்திலும் மாயையாய் மானிட மனதை ஆசையிலும் பாச பந்தத்திலும் சிக்கி இழுத்து செல்வது. தாய் தந்தை என தொடங்கும் உறவு சகோதரன் சகோதரிஎன வளர்ந்து பின் பிள்ளைகள் பேரபிள்ளைகள் என காட்டி ஒவ்வொரு படியிலும் ஆராயிரம் சிக்கலை கொண்டது

அந்த வாழ்வு நிம்மதியாக எழவும் விடாது வாழவும் விடாது தூங்கவும் விடாது, பந்த பாசத்தில் மூழ்கிய ஒவ்வொருவனுக்கும் அவனவன் இயல்பில் ஆயிரமாயிரம் பிரச்சினைகள்

பிள்ளை இருப்பவனுக்கு பிரச்சினை என்றால் பிள்ளை இல்லாதவனுக்கு அதை நினைந்தே பெரும் கவலை

மானிட லவுகீக வாழ்வு எக்காலமும் சிக்கல் கொண்டது, அதனில் நிறைவு இல்லை அதன் நிறைவெல்லாம் தேடும் சந்தோஷமும் ஆனந்தமுமெல்லாம் முருகனை சரணடைவதில் உள்ளது, சொந்த பந்தங்களுக்காக அளவுக்குமீறி பாடுபட்டு வாழ்வதில் அல்ல, அது முடிவில்லா தொல்லைக்கே வழிவகுக்கும், கடமையினை கர்மமாக செய்து முருகனை மனதால் சரணடைந்தால் எல்லா நிறைவும் வரும் என்கின்றார் அருணகிரியார்

இங்கு “சுப்பிரமணிய புஜங்கம்” எனும் வடமொழியில் அமைந்த பாடலில் ஒன்றை நினைவு கூறலாம்

ஆதிசங்கரர் அருளிய அருள்நூல்களில் “சுப்பிரமணிய புஜங்கம்” எனும் நூலும் ஒன்று, முழுக்க முழுக்க முருகபெருமானின் புகழ்பாடும் நூல் அது

அதனில் ஒரு பாடல் இப்படி வரும்

“களத்ரம் ஸுதா பந்துவர்க பசுர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா
யஜந்தோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரந்தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார”

“என் மனைவியும் பிள்ளைகளும் என் சொந்தமும் பந்தமும் என்னை சுற்றியிருப்போர் அனைவரும், என் வீட்டில் உள்ள எல்லாமும் உன் பக்தியில் நான் நிலைத்திருக்கும்படி உன்னை வணங்குபவர்களாகவும், உன்னை துதிப்பவர்களாகவும், உன்னில் கலந்தவர்களாகவே இருக்க வருமருள்வாய் முருகா” என்பது ஸ்லோகத்தின் பொருள்

ஸ்லோகங்கள் எப்பொழுதும் மறைபொருளை கொண்டவை

இந்த ஸ்லோகத்தின் மறைபொருள் என்னவென்றால் முருகா, “என் மனைவிக்கும், என் பிள்ளைகளுக்கும் என் சொந்தங்களுக்கும், என்னை சுற்றியுள்ளோருக்கும் நான் செய்யும் கடமை எல்லாம் உன் நினைவில் பக்தியாக செய்யும்படி, உன் நினைவில் கலந்தே என் கர்மத்தை கழிக்கும்படி அருள் செய்வாய்

என் ஒவ்வொரு கர்மாவும் பந்த பாசத்தால் அல்ல, இதனை செய்து கடந்தால் உன்னை அடையலாம் எனும் ஞானத்தில், உன்னை அடைவதற்காக இப்பிறவியில் இதனையெல்லாம் கடக்கின்றேன் எனும் மெய்யறிவில் செய்ய அருள்புரிவாய், இங்கு நான் செய்யும் ஒவ்வொரு காரியமும் உனக்கு அர்பணிக்கபட்டது” என்பதே

கீதையில் கண்ணன் சொல்லும் அந்த வரி “அர்ஜூனா எல்லாவற்றையும் என்னிடம் ஒப்படைப்பதே யோகத்தில் சிறந்த யோகம்” எனும் வரி இங்கு முருகன் பெயரால் சொல்லபடுகின்றது

துறவறம், இல்லறம் என இரண்டுமே அறம், அந்த இல்லறத்தை இறைவனின் நினைவில் அவனுக்கான வாழ்வாக கருதி வரும் இன்பத்தையும் துன்பத்தையும் அர்பணித்தால் , எல்லா வாழ்வியல் நிலைகளையும் அவனிடமே சமர்பித்தால் அவனுக்கொரு வேலைகாரனை போல நின்று கர்மத்தை செய்தால் ஞானநிலை வாய்க்கும், பந்த பாசங்களில் மூழ்கா பெருஞானம் கிடைக்கும் என்பதுதான் இந்த பாடலின் பொருள்

சரி, இங்கு ஏன் சூரனையும் அவன் மலைகளையும் அவனை வீழ்த்திய வேலாயுதத்தையும் சொல்கின்றார் அருணாகிரியார்?

சூரன் மிகபெரிய பக்திமான், பிரம்மன் சிவன் என எல்லோரையும் தன் உச்சபட்ச பக்தியால் வரவைத்து வரம் வாங்கிய பக்திமான்

ஆனால் சொந்தங்களால் அவன் வாழ்வு சீரழிந்தது, அஜமுகி எனும் சகோதரிக்காக அவன் யுத்தம் தொடங்க அது தம்பிகள் மகன்கள் என நீண்டு அவனையும் வீழ்த்தியது

அசுரர்களின் பெரும் பலத்தையும் தவத்தையும் பந்தபாசம் எனும் விலங்கு வீழ்த்திவிடும் என்பதற்கு சூரன் பெரும் உதாரணம்

முருகபெருமான் அவனின் மாயையினை அகற்றியபின் அவன் தன்னிலை உணர்ந்தான், அப்படி உணர்ந்தவனைத்தான் சேவலாகவும் மயிலாகவும் மாற்றி தன்னோடு சேர்த்துகொண்டார் முருகபெருமான்

அதாவது சொந்தபந்த மாயைகளை விலக்காத எவனுக்கும் முக்தி இல்லை நிறைவான ஆனந்தமும் ஞானமுமில்லை

சூரன் தன்னை சுற்றி தன் தம்பிகளையும் மகனையும் காவலுக்கு வைத்து அவர்கள் மேல் உயிரே வைத்திருந்தான், தன் தவமும் வாழ்வும் வரமும் அவர்களை காக்க வாழவைக்க என நம்பினான். அந்த காவல்தான் கிரவுஞ்ச மலையாக, தாரகனாக, சிங்கமுகனாக வந்தது

இவை ஆணவம், கண்மம், மாயை எனும் மூன்று வடிவங்களின் சாயல்கள்

பந்தம் பாசமும் சாதாரணம் அல்ல, அதனில் வீழும் ஆன்மா வஞ்சகம், பேராசை, குரோதம், காமம், அகங்காரம், ஆர்பாட்டம், இறுமாப்பு, ஆணவம் என தன் குட்டிகளையும் பந்தங்களையும் பெருக்கி கொண்டே செல்லும் சூரபத்மன் அபப்டித்தான் எல்லா துர்குணங்களால் நிரம்பியிருந்தான் சூரபத்மன்

முருகபெருமான் தன் வேலால் அவை ஒவ்வொன்றாக துண்டித்து சூரனை தன் வயபடுத்தினார் என்பது, முருகன் தன் ஞானத்தால் மாயைகளை களைந்து சூரனை தன்னோடு சேர்த்துகொண்டார் என்பதே, அந்த காட்சியின் தத்துவவடிவம் அதுதான்

சூரபத்மன் என்பவன் மாய‌ அகந்தையின் குறியீடு. கிரவுஞ்ச மலை என்பது கர்ம பிறப்பு

எவ்வாறு மலையும், அசுரனும் கந்தப் பெருமானின் வேலால் மட்டுமே அழிக்கப்பட இயலுமோ, அவ்வாறே கர்மமும், அறியாமையும் ஞானத்தால் மட்டுமே அழிக்கப்பட இயலும்.

அருணகிரியார் அந்த காட்சியினைத்தான் மருகி உருகி நினைந்து நினைந்து கேட்கின்றார்

“பெண்கள் வழியாக வரும் பிறப்பில் எல்லா துன்பமும் தொல்லையும் கலந்திருக்கின்றன முருகா, சூரனுக்கு ஞானவேல் வடிவில் பந்த பாசங்களை அறுத்து ஞானம் கொடுத்த முருகா, எனக்கும் அந்த ஞானத்தை அருள்வாய் பாசவினைகளில் இருந்து நான் அறுபட்டு மாயை களைந்து உன்னில் கலக்கும் அந்த அனுபூதி நிலையினை தருவாய்

எப்பிறப்பில் எந்நிலையில் இருந்தாலும் பாச பந்தங்களை தாண்டி பரம்பொருளுடன் ஆத்மார்த்தமாக கலப்பதே அனுபூதி எனும் நிறைவான நிலை, அந்த நிலையினை அடைய முருகபெருமானின் அருள் வேண்டும், அந்த அருளே நிறைவான பேரானந்தமான முழுமையான அமைதியும் நிம்மதியும் தரும்

நிறைவும் சந்தோஷமும் ஒருகாலமும் பாசமும் பந்தமும் தராது, அவை காணல் நீர் போன்ற்வை, முழுமையான பேரனாந்தம் இறைவனை சரணடைந்து முருகனின் ஞானத்தில் கரைவதில் இருக்கின்றது என இப்பாடலில் சொல்கின்றார் அருணகிரியார்

கந்த சஷ்டி கவசத்தில் “பாச வினைகள் பற்றது நீங்கி, உன் பதம் பெறவே உன் அருளாக” எனும் வரி வரும் அல்லவா? அந்த வரிக்கான விளக்கமும் அதனால் அடையும் அனுபூதிநிலையுமே இந்த பாடலின் பொருள்