ஆடிபெருக்கு என்பது தமிழரின் நன்றிதெரிவிக்கும் விழா

Image may contain: 3 people, people smiling, outdoor and water

தமிழகத்து கலை அடையாளங்கள், அழியா வரலாறுகள், இச்சமூகம் வாழ்வாங்கு வாழந்த அடையாளம் எல்லாம் காவேரியால் வந்தது

அன்றைய தமிழகத்தின் பெரும் அடையாளம் காவேரி, தமிழும் கலையும் இசையும் அதன் கரையிலேதான் செழித்து வளர்ந்தது.

அப்படியே பின்னாளில் அதன் கரையில் நாடாக இசை, கரை நாடாக இசை என உருவான அந்த இசை கர்நாடக இசை என மருவி, ஏதோ மும்மூர்த்திகள் திருவையாறில் கண்டெடுத்தாக மாறியும் போயிற்று

உலகின் முதல் நாகரீக நகரங்களில் ஒன்றான கடலுள் மூழ்கிய பூம்புகார் அதன் கரையிலேதான் உருவானது

இன்னும் ஏராளமான பெருமைகள் அதன் கரையிலே உருவாயின, ஒன்றல்ல இரண்டல்ல சொன்னால் பெருமை தாங்காது.

சிலப்பதிகாரம், தஞ்சை பெரிய கோயில், திருவையாறு கர்நாடக இசை போன்ற அழியா கலைகள் ஒரு எடுத்துகாட்டே தவிர இன்னும் ஏராளம் உண்டு

அந்த காவேரியில் இன்றைய ஆடிபெருக்கு மகா விஷேசமாக கொண்டாடபடும், அன்றைய காலங்களில் மிக சரியாக ஆடி மாதம் அது பெருக்கெடுத்து ஓடியிருக்கின்றது, அன்று கன்னடத்தில் அணைகள் இல்லை, தமிழகத்தின் அதன் துணையாறுகளான அமராவதி, பவானி, நொய்யலிலும் அணைகள் இல்லை,

எப்படி பெருக்கெடுத்து வந்திருக்கும் காவேரி, நினைத்தாலே இனிகத்தான் செய்கிறது, அப்படியும் ஒரு காலம் இருந்திருக்குன்றது.

கல்லணை அந்த வெள்ளபெருக்கில் கட்டபட்டதுதான் ஆச்சரியம், எப்படிபட்ட நுட்பம் என இன்றுவரை தெரியாது, எல்லாமே அனுமானம்.

அந்த கல்லணை மூலம் அக்கால சோழநாடே செழித்தது, செழித்தது என்றால் முப்போகம் தவறாமல் விளைந்தது, எல்லா வகை நெல்லும் அங்கே விளைந்தது என்கின்றார்கள்.

வருடமெல்லாம் ஓடினாலும் இந்த ஆடிமாதம் அது புதுவெள்ளத்தோடு வரும், அதனை வணங்கி வரவேற்றிருக்கின்றார்கள்

உண்மையில் காவேரி வற்றாத ஆறெல்லாம் அல்ல, ஆடியில் அது பொங்கி இருக்கின்றது மற்ற காலங்களில் ஏதோ ஓடியிருக்கின்றது

அக்காலத்திலே ஆடியில்தான் புதுவெள்ளம் பொங்கி இருக்கின்றது, இன்று ஆடியில் மட்டும் தமிழக பக்கம் வருமாறு அதன் நிலை மாறிற்று

ஆடியில் பொங்கி வரும், அந்த பெருக்கெடுத்த காவேரியினைத்தான் பூ தூவி வணங்கிவிட்டு விதைக்க சென்றிருக்கின்றார்கள், நன்றியோடு

அந்த புதுவெள்ள காவேரியினை தன் அன்னையாகவே நினைத்து வணங்கி இருக்கின்றார்கள், பெண்கள் தங்கள் தாலிக்கு அந்த அன்னையின் ஆசீர்வாதம் வேண்டி வணங்கி அந்த நீரை தாலியில் தொட்டு வைக்கின்றார்கள்

சிக்கல்களை தாண்டி இவ்வருடம் ஆடிபெருக்கிற்கு காவேரி அதே பழைய உற்சாகத்தோடு வந்தாயிற்று, மகிழ்வான விஷயம்

எல்லா தமிழ் இலக்கியங்களும் காவேரியினை பாடி இருக்கின்றன, வான் பொய்யினும் தான் பொய்யா காவேரி என புறநானூறு சொல்கின்றது,

கம்பன் பல இடங்களில் அதனை எப்படியெல்லாமோ கொண்டாடி இருக்கின்றான், கோசலை நாடு கவேரி நாட்டுக்கு காவேரி கரைக்கு நிகரானது என ஒரே வரியில் அசத்தினான் கம்பன்

சிலப்பதிகாரத்தில்

“உழவர் ஓதை மதகுஓதை
உடைநீர் ஓதை தன்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப‌
நடந்தாய் வாழி காவேரி” என

இளங்கோ அடிகளும் ஆடி பெருக்கினை அழகாக வர்ணிக்கின்றார்.

எகிப்தின் நைல் நதிக்கு கொஞ்சமும் குறையா வரலாற்று பழமை கொண்டது காவேரி, எகிப்தியருக்கு அதன் முக்கியத்துவம் தெரிந்திருக்கின்றது கண்போல் பார்த்துகொள்கின்றார்கள்

தமிழரின் கண்ணுக்கு என்ன தெரிகிறது, எல்லாமே பணமாக தெரிகிறது, காவேரி மண், பிளாட் , மீத்தேன் என நாம் வேறுமாதிரி திரும்பிவிட்டோம் என்ன செய்ய?

அதன் பழமையும், அதன் பெருமையும், அது கொடுத்த கொடைகளையும் சற்று சிந்தித்தால் காவேரி இப்படி ஆயிருக்காது

அந்த காவேரி தமிழனின் அடையாளம், தமிழனை உருவாக்கிய ஆறு, தமிழ் கலைகளை வளரவைத்த ஆறு

அந்த நன்றியோடு ஆடிபெருக்கினை கொண்டாடலாம், காவேரியினை நன்றியோடு வணங்கலாம்

மீண்டு வந்து நடை போடும் காவேரி அன்னை வாழ்க…

அந்த காவேரி அன்னைதான் தங்களுக்கும் தங்கள் பயிருக்கும், ஆடுமாடுகளுக்கும் நீர்வார்ப்பவள் என்ற நன்றி அன்றைய தமிழரிடம் ஓங்கி இருந்திருக்கின்றது

இப்படிபட்ட நன்றியும் நாகரீகமும் உலகில் எந்த இனத்திடம் இருந்தது? தமிழனுக்கு மட்டும் இருந்தது

ஆடிபெருக்கு என்பது தமிழரின் நன்றிதெரிவிக்கும் விழா, தமிழகம் வந்த காவேரி அன்னையினை பூத்தூவி வரவேற்கும் விழா

தமிழரின் பெரும் நன்றிக்கு எடுத்துகாட்டான கலாச்சார விழா

“இந்த பொன்னி என்பவள் தென்னாட்டவர்க்கு
அன்பின் அன்னையடி

இவள் தண்ணீர் என்றொரு ஆடை கட்டிடும்
தேவ மங்கையடி” என்ற வாலியின் நிதர்சன வரிகள் காதோடு கேட்கும் நேரமிது

ஆயிரம் அர்த்தமுள்ள வரிகள் அது.