ஆடி அமாவாசை

இறந்தவரை நினைவு கூறல் என்பது உலகெங்குமுள்ள‌ எல்லா மதங்களிலும் இனங்களிலும் உள்ள உலக வழக்கம்

அது செவ்விந்தியர், மாயன் தொடங்கி ஜப்பானிய இனம் வரை உண்டு, அது யூத இனத்தில் உண்டு அது கிறிஸ்துவத்தில் கலந்து ஐரோப்பாவில் நவம்பர் 2 என குறிக்கபட்டது

சீனர் போன்ற கிழக்காசிய இனம் 6 மாதத்துக்கு ஒருமுறை அனுசரிக்கும், அன்று முன்னோருக்கு படையல் மட்டுமல்ல சில ஸ்பெஷல் காகிதங்களை எரித்து அந்த புகையினை மேல் அனுப்பி முன்னோருக்கு பணம் அனுப்பும் முறை எல்லாம் உண்டு

இந்த நீத்தார் வழிபாடு உலகெல்லாம் இருந்தாலும் தென்புலத்தார் எனும் தமிழரிடம் அதிகம் இருந்தது, வாழ்வின் மிகபெரும் கடமையாக அதை கருதினர்

அது தமிழர்வாழ்வில் கலந்திருந்ததை புறனாற்று பாடலான “ஆவும், ஆனியற் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன்போற் புதல்வர்ப் பெறாஅ தீரும்,
எம்அம்பு கடிவிடுதும், நுன்அரண் சேர்மின்’ என
அறத்துஆறு நுவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ, வாழிய குடுமி! தங் கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த,
முந்நீர் விழவின், நெடியோன்” என்பது தெளிவாக சொல்கின்ன்றது

வள்ளுவனும் அதை தெளிவாக சொல்கின்றான் இப்படியாக‌

“தென்புலத்தார் தெய்வம் விருந்தொக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை..”

இன்னும் ஏகபட்ட பண்டைய இலக்கியம் மற்றும் நீதி நூல்களில் அதன் அடையாளங்களை காணமுடியும்

அது தமிழரின் அடையாளமாக இருந்தாலும் இந்துக்களின் கலாச்சாராமாக மட்டும் சுருங்கிவிட்டதுதான் சோகம், எனினும் இந்துக்களால் அந்த கலாச்சாரம் தொடர்கின்றது

இன்றைய நாளில் அந்த வழக்கபடி முன்னோர்களை வணங்கி நினைவுகூறுவார்கள், அதை கூர்ந்து கவனித்தால் பல அற்புதமான விஷயம் இருப்பதை காணமுடியும்

அதிகாலை எழுந்து விரதம் இருப்பார்கள், முதலில் காக்கைகு சோறு வார்ப்பார்கள், தங்கள் முன்னோர்களே காக்கை உருவில் வந்ததாக நினைத்து கொள்வார்கள்

காகம் பித்ருக்களின் வடிவம் என்பது அவர்கள் நம்பிக்கை, மனிதனை அண்டிவாழும் பறவை என்பதாலும் கூடி உண்ணும் அப்பறவையில் பல தத்துவங்கள் இருக்கலாம் என்பதாலும் அச்சம்பிரதாயம் ஏற்பட்டிருக்கலாம்

தன் இனத்தை எல்லாம் கூடிஉண்ண செய்யும் அப்பறவையில் தன் இனத்துக்காக உழைத்து சோறிட்ட முன்னோர்களை அவர்கள் கண்டிருக்கலாம்

அதன் பின் முன்னோர்களுக்கு பிடித்த ஆடையினை எடுத்து வைத்து அவர்களுக்கு பிடித்த உணவை சமைத்துவைத்து மறக்காமல் விளக்கேற்றுவார்கள்

எவ்வளவு அருமையான ஏற்பாடு?

முன்னோர்கள் நமக்கு உடை தந்தவர்கள், சுவையான உணவினை பாசமாய் தந்தவர்கள் என நினைவுகூறும் அற்புதமான நன்றிகடன் அது

அதை பார்த்து பார்த்து அதில் மூழ்க செய்யும் நுட்பம் அது, மனமார அதில் கலந்துவிடும் ஏற்பாடு அது

இன்னும் சிலர் முன்னோர்கள் கட்டி வைத்த கட்டங்கள் வீடுகள் அவர்கள் வளர்த்த செடிகொடிகளை எல்லாம் தொட்டு வணங்குவார்களாம், சிலருக்கு அச்சம்பிரதாயம் உண்டென்பார்கள்

ஆம் முன்னோர்கள் விட்டு சென்ற சுவர்களை தொட்டாலே ஒருவித ஏகாந்தமும் நினைவும் வரும்.

அதன் பின் மறக்காமல் நீர் நிலைகளுக்கு செல்வார்கள்

அது ஏரி,குளம், ஆற்றங்கரை அல்லது கடற்கரை என செல்வார்கள்

அங்கு பிண்டம் வைத்து வணங்குவது அவர்கள் நம்பிக்கை எனினும் அதிலுள்ள தத்துவம் அந்த இடத்தில் அவர்கள் முன்னோடு நடமாடி இருப்பார்கள், குளித்திருப்பார்கள்

அந்த குளகரையில் ஒன்றாக உண்டிருப்பார்கள்

அந்த நீர்நிலையில் அவர்கள் கலந்து தங்களோடு இருப்பதாக கருதி அவர்களுக்கும் உணவளிப்பதாக அந்த பிண்டத்தை கரைப்பார்கள்

ஏரியோ குளமோ அவர்கள் முன்னோர் கட்டியதாக இருக்கும், அவர்கள் உழைத்ததாக இருக்கும். ஆறு அவர்கள் வம்சத்துக்கு வாழ்வளித்த இடமாக‌ இருக்கும்

அங்கு செல்வது சால சிறந்தது, நினைவாலயம் அவைகள்

சிலர் கடலுக்கு செல்வார்கள், கடல் எல்லாவற்றையும் ஏற்றுகொள்ளும் கடவுளுக்கு சமம், கடவுளில் கலந்துவிட்ட முன்னோரை கடற்கரையில் நின்று நினைத்தால் மனம் ஒருவித நிறைவடையும்

அந்த ஆடி அமாவாசையின் ஒவ்வொரு ஏற்பாடும் மகா உன்னதமானது, அர்த்தம் மிகுந்தது.

ஏன் அமாவாசையினை தேர்ந்தெடுத்தார்கள் எல்லா விஷயமும் இல்லாத ஒன்றில் இருந்தே தொடங்கும். நாங்கள் சூனியம் நீங்கள் ஒளிதர வாருங்கள் என அழைக்க அந்த இருட்டு நாளை தேர்ந்த்டுத்தார்கள்

இன்னொரு கோணமும் உண்டு அது சாத்தியமான உண்மை.

நிலா காலண்டர் உள்ள அக்காலத்தில் அதுவே மாத தொடக்கம், அதுவும் ஆடி அமாவாசை என்பது விவசாய பணிகளுக்கான தொடக்க நாள்

அன்று தங்களுக்கு நிலமும் வயலும் குளமும் கால்வாயும் உருவாக்கி தந்த முன்னோரை மனமார வணங்கினார்கள்.

நன்றியினை பெரிதாக கொண்ட தென்புல சமூகம் தன் முன்னோர்களை எண்ணி செய்த பெரும் ஏற்பாடு இது , உலகின் மற்ற இனங்களை விட இந்த இனம் நீத்தார் கடனில் தனித்து நின்றது

அந்த மாபெரும் நன்றிவிழாவின் தொடர்ச்சியே இந்த ஆடி அமாவாசை

அந்நாளில் வழிபட்டால் பித்ருக்கள் ஆசி கிடைக்கும் என நம்பாதவன் கூட அப்படி செய்தால் ஏற்படும் மன‌ நிறைவினை மறுக்க முடியாது

முன்னோர்களின் சொத்து எப்படி வழிவழி வருகின்றதோ அப்படியே அவர்கள் செய்யும் நல்ல காரியங்களின் ஆசியும் அவர்கள் செய்த பாவத்தின் தொடர்ச்சி சாபமாக வருகின்றது என்பதும் இந்துக்களின் நம்பிக்கை

இதில் பகுத்தறிவாளர் ஒரு கேள்வி எழுப்புவர் நல்லதோ கெட்டதோ செய்தவனையன்றி அவன் வம்சத்தை தொடர்வானேன்? எல்லாம் கட்டுகதை என்பார்கள்

அவர்கள் அப்படித்தான்

ஒருவனுக்கு முன்னோர் சொத்து வழிவழியாக வந்தால் அதைகொண்டு அவர்கள் பெயரில் நற்காரியம் செய்தல் வேண்டும்

முன்னோர் செய்த பாவம் ஒருவனை தொடர்வதாக கருதினால் அதற்கு நிவாரணமாக தாழ கிடப்பவருக்கு சில உதவிகளை செய்து வாழவைக்க வேண்டும்

யாரையோ அழித்து முன்னோர் செய்த பாவம் அவன் வம்சாவழி யாரையோ வாழவைக்கும் பொழுது சரியாகின்றது

ஆண்டவனின் கணக்கு மிக துல்லியமாகின்றது

இன்று அயோக்கியர்கள் கையில் சேரும் சொத்து பல ஆயிரம் கோடிகளுக்கான சொத்து எதற்கு சேருகிறதென்று நமக்கு தெரியாது

ஆனால் அவன் சந்ததியில் ஒருவன் அந்த செல்வத்தால் 4 பேரை வாழவைப்பான் என்பது ஆண்டவனுக்கே தெரியும்

இன்றுநடக்கும் அநியாயங்களின் கொடுமை கடவுளில்லைஎன தலையாட்ட சொல்லலாம் , ஆனால் நாளை அந்த அநியாயக்காரரின் வாரிசுகள் பின்னாளில் பலகாரியங்களை செய்யும்பொழுது ஆண்டவன் கணக்கு சரியாகும் என்பது தெரியும்

இதெல்லாம் நம் அறிவுக்கு எட்டா விஷயங்கள், புரிந்து கொள்ள முடியா சூட்சுமங்கள்

ஒவ்வொருவனின் முன்னோரும் தன் வம்சத்துக்கு ஒருவித காரியங்களை கடவுள் விருப்படிசெய்ய இங்கு வருகின்றான்

அதை செய்துமுடித்துவிட்டு காலம் முடிந்து கிளம்புகின்றான்

அதன் காரிய காரணங்களை அவனும் அறியமாட்டான், அதை தெரிந்துகொள்ளும் அறிவும் அவனுக்கு இல்லை

ஆனால் அவன் வந்து சென்றதின் பலன் என்ன என்பது இப்பொழுது வாழும் தலைமுறைக்கே தெரியும்

அதனால் குறிப்பிட்ட நாளில் தன் குலம் உதித்த காரணமும் அது செய்த நற்காரியங்களையும் தான் இந்த உலகுக்கும் உறவுக்கும் சமூகத்துக்கும் செய்யவேண்டிய காரியம் சாப நிவர்த்தி போன்றவற்றை செய்ய சிந்திது பார்க்க செய்யும் நாளே ஆடி அமாவாசை

இந்த நாள் சொல்லும் தத்துவம் அதுவே

எல்லா மதங்களிலும் நீத்தார் வழிபாடு உண்டெனினும் மதங்களுக்கு தாயான இந்துமதம் அதை மிக தெளிவாக தனக்கே உரித்தான எளிமையுடன் அழுத்தமான தத்துவத்துடன் சொல்கின்றது

தென்புலத்தானாக அதில் பெருமை அடையலாம்

அவரவர் முன்னோரை இந்நாளில் கூர்ந்து கவனித்து நினையுங்கள், அவர்கள் நினைவுகளில் மூழ்குங்கள்

அது வாழ்வினை திரும்பி பார்க்க வைக்கும், முன்னோர்களின் நினைவுகள் நமக்கு ஏகபட்ட பாடங்களை சொல்லும்

இன்று அவர்களை வழிபட்டால் அவர்களின் ஆசி கிடைக்கும் என நம்பினால் அது கிடைக்கும், இல்லை குறைந்த பட்சம் மனநிம்மதியும் நாம் ஆற்றவேண்டிய கடமைகளின் பட்டியலும் மனதில் அப்படியே வந்து அமரும்

மிக அர்த்தம் பொதிந்த முன்னோர் நினைவுநாளை ஏற்படுத்திய இந்து தர்மத்தையும், அதை அடியொற்றி நடக்கும் இந்துக்களையும் தூர இருந்து பார்க்கும்பொழுது மனம் மகிழ்த்தான் செய்கின்றது

அவர்களின் முன்னோர்கள் அவர்களை ஆசீர்வதிக்கட்டும், முன்னோர்களின் கனவு இவர்கள் மூலம் நிறைவேறட்டும், உலகம் செழிக்கட்டும்

தர்மம் நிலைக்கட்டும்