ஆடி தபசு
இந்த பிரபஞ்சம் பெரும் மூலசக்தி ஒன்றால் படைக்கபட்டு இயக்கபடுகின்றது, மானிடன் புரிந்துகொள்ள முடியா பல சூட்சும வழிகளில் பல சக்திகளாய் பிரிந்து அது இந்த உலகை இயக்கி கொண்டிருக்கின்றது
அந்த சக்திகள் பல வடிவில் உண்டு, அதனை மானுடன் புரிந்து கொள்ள கூடிய அளவில் அது பெயரிட்டு சொன்னாலும் , பல பிரிவுகளாய் விழும் அந்த அருவியின் மூலம் ஒன்றே என்றாலும் அறிவில் குறைந்த மானுடன் சில சர்ச்சைகளை செய்ய ஆரம்பித்தான்
அறியாமையால் எழுந்த அந்த சர்ச்சைகள் பெரும் குழப்பமாகி ஒரு கட்டத்தில் ஞானம் பெற வேண்டிய ஞான வழியிலே யார் பெரியவர்கள் எனும் அகங்காரத்தை கொண்டுவந்தது
பரம்பொருள் இதற்கு ஒரு நாடகம் மூலம் பதில் சொல்ல விரும்பினான், அப்படி உருவானதுதான் ஆடிதபசு விழா
ஆம், சைவம் பெரிதா வைணவம் பெரிதா? சிவன் பெரியவரா சக்தி பெரியவரா?, அந்த ஹரியா சிவனா? எனும் சர்ச்சை எக்காலமும் உண்டு அது அக்காலத்திலே இருந்தது
இதனை தொடங்கி வைக்க பரம்பொருள் தேர்ந்தெடுத்தவர்கள் இரு நாக அரசர்கள் ஒருவன் சங்கன் இன்னொருவன் பதுமன்
இந்த சங்கன் முழு சிவபக்தன், பதுமன் விஷ்ணு பக்தன். இந்த இருவரும் தாங்கள் வழிபடும் தெய்வமே பெரியது என வாதிட்டார்கள்
சிவன் அடிமுடி காணமுடியா நிலையினை சங்கன் சொன்னால் அவர் பஸ்மாசுரனுக்கு அஞ்சி விஷ்னுவிடம் வந்த காட்சியினை பதுமன் சொல்வான்
விஷ்ணுவே முதல்முதல் கடவுள் என இவன் சொன்னால் , கண்ணனும் ராமனும் சிவனை வணங்கிய கதையினை அவன் சொல்வான்
இப்படி தொடங்கிய வாதம் அடிதடியானது , அடிதடி பெரும் போராகி விஷயம் பெரும் தெய்வம் வரை சென்றது
சிவனும் விஷ்ணுவும் ஒருவரை ஒருவர் நோக்கிவிட்டு இந்த விஷயத்துக்கு தீர்ப்பு சொல்வது அன்னை பார்வதியே என முடிவெடுத்து பொறுப்பை அவளிடம் அணுகினார்கள்
பார்வதிக்கும் வேறு வழி தெரியவில்லை அவள் ஆழ்ந்த தியான நிலையில் அமர்ந்து இதற்கான பதிலை கண்டறிய விரும்பினாள்
அவள கோமதியாக வந்து புன்னைமரங்கள் நிரம்பிய கானகத்தில் தவமிருந்தாள், சில மரங்கள் சூட்சும சக்திகளை ஈர்த்து தருபவவை. ஆலமரம் அரசமரம் அத்திமரம் போல புன்னைமரமும் அதில் சிறந்தது
இதனாலே பல ஆலயங்களின் தல விருட்சமாக புன்னை மரமே நிறுவபட்டு இன்றுவரை அந்தபாரம்பரியம் தொடர்கின்றது
அப்படிபட்ட புன்னைமரங்கள் நிரம்பிய வனத்திலே ஊசிமுனையில் தவம் செய்தாள் அன்னை, மிக கடுமையான தவம் அது, அந்த தவத்தின் பெரும் பலனாய் அவளுக்கு அந்த காட்சி கிடைத்தது, அவள் தேடலுக்கு பதிலும் கிடைத்தது
ஆம், சிவனும் விஷ்ணுவும் சேர்ந்து அவளுக்கு காட்சி கொடுத்தார்கள், இருவரும் கலந்து தாங்கள் ஒருவரே என என சொன்னார்கள்
அந்த காட்சியில் “ஹரியும் சிவனும்” ஒன்று இருவரும் வேறு வேறு அல்ல, இருவரும் ஒருவரே என உணர்ந்த அன்னை மிக்க மகிழ்ச்சியானாள், அவளை தன்னோடு சேர்த்து கொண்ட சிவன் கையாலயம் ஏகினார்
இது நடந்த இடம் இன்று நெல்லை மாவட்டட சங்கரன் கோவில் ஆலயமாக நிற்கின்றது, அந்த ஆலயமே சங்கரநாராயணன் ஆலயம் என அழைக்கபடுகின்றது
அன்னை தவமிருந்து அவளுக்கு அந்த திருகோல காட்சி கிட்டிய ஆடிமாத உத்திரட்டாதி நட்சத்திர நாளே “ஆடி தபஸ்” நாளாக கொண்டாடபடுகின்றது
இது வெறும் காட்சி அல்ல, சாதாரண புராண கதையும் அல்ல, என்றோ அன்னை தவமிருந்து “அரியும் சிவனும் ஒன்று” என உலகுக்கு சொன்னாள் என நகரும் விஷயமும் அல்ல
இதன் தத்துவம் பெரிது, இந்த காட்சி சொல்லும் சூட்சுமம் பெரிது அணுமுதல் அண்ட பிண்டம் வரை உள்ள தொடர்பு பெரிது
இரு எதிர் எதிர் துருவங்கள் ஒரே சமநிலை கொண்டு ஒரு காரியத்தை இயக்குகின்றன, அந்த சமநிலையில்தான் பல விஷயங்கள் சரியாக அதனதன் இயல்பு மீறாமலும் குறையாமலும் சரியான கலவையுடன் உலகையும் உலக உயிர்களையும் இயங்க வைக்கின்றது எனும் பெரும் தத்துவம் இது
அந்த இரு துருவங்களை பெரும் சக்திகளைத்தான் சிவன் விஷ்ணு என்றார்கள்
சிவன் நெருப்பின் அடையாளம் எனும் வெப்ப சக்தி என்றார்கள், விஷ்ணுவினை நீர் சக்தி என்றார்கள். இந்த இரண்டும் கலந்ததுதான் இந்த உலகம் என்பதை தெளிவாக சொன்னார்கள்
இந்த உலகம் வெப்பமும் குளிரும் சரியாக கலந்த காலநிலையில் பெரும் மூல சக்தியால் இயக்கபடுகின்றது, இந்த இரு சக்தியும் இல்லாமல் உலகமோ உயிர்களோ இல்லை என்பதை குறிப்பால் சொன்னார்கள்
இன்றைய விஞ்ஞானம் அது அணுவோ, செல் எனும் உயிர்கள் ஆராய்ச்சியோ அதை தெளிவாக சொல்கின்றது
அணுவின் உட்கரு ப்ரோட்டான் நியூட்ரான் எனும் இரு விஷயங்களை கலந்தது என்கின்றது விஞ்ஞானம், இரண்டும் வெவ்வேறு குணம் கொண்டது எனினும் அவை கலந்ததுதான் அணுவின் உட்கரு என்கின்றது
இந்த அணுவினை பிரித்தால் இன்னொரு அணு உருவாகும் அதிலும் இந்த இரண்டும் உண்டு அதாவது பிரிக்க முடியாத இரு சக்திகள் என்பதை சொல்கின்றது விஞ்ஞானம்
இதைத்தான் தன் விநாயகர் அகவலில் “அணுவுக்குள் அணுவாய்” என அந்த ரகசியத்தை சொன்னாள் ஒளவை
இன்னும் இது நீள்கின்றது
மானிட உயிரின் செல்களில் இருந்து வானலோக பிரபஞ்சம் வரை இந்த இரு சக்தி இணைப்பு உண்டு, இங்கு தனியானது என எதுவுமில்லை, எல்லாவற்றின் அடிப்படையிலும் இந்த இரு சக்தியும் உண்டு
இந்த பெரும் தத்துவத்தைத்தான் ஹரியும் சிவனும் ஒன்று என உணர சொன்னது இந்துமதம், எல்லா விஷயங்களும் அவற்றின் இயக்கமும் இந்த இரு சக்திகள் இணைவில்தான் அமைகின்றது என்றது அது
இன்றைய விஞ்ஞானத்தை அன்றே போதித்த மதம் அது
அந்த புராண காட்சியில் முக்கியமானது அன்னை செய்யும் ஊசிமுனை தவம்
ஊசிமுனை தவம் என்றால் ஊசியினை நட்டு அதன் மேல் அமர்ந்திருப்பது அல்ல, ஊசியினை குத்தி வைத்து அதில் ஏறி நின்று செய்யும் தவமும் அல்ல
ஊசிமுனை தவம் என்பது தியானத்தில் நெற்றியின் புருவ மத்தியில் ஊசி போன்ற முனையளவுக்கு மனதை குவித்து செய்யும் தவம், அதாவது அந்த அளவு மனம் ஒரு புள்ளியில் ஒடுங்க வேண்டும் என்பது
அப்படிபட்ட தவத்தில் அரிய உண்மைகள் விளங்கும், சிவனும் விஷ்ணுவும் வேறல்ல எனும் பெரும் தத்துவம் விளங்கும் என்பதே ஊசிமுனை தவம் சொல்லும் தத்துவம்
இந்த தத்துவத்தை ஏன் ஆடிமாதம் அதுவும் உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று நினைவு கூற சொன்னார்கள்
நீரும் நெருப்பும் இணைந்த சக்திதான் மானிட உடல், அங்கே சிவதத்துவமும் விஷ்ணு தத்துவமும் கலந்திருக்கின்றது
இந்த உடலில் நீர் நிரம்பியிருக்கின்றது அதே நேரம் ஒரு வெப்பசக்தி இந்த உடலை இயக்குகின்றது, அந்த வெப்பம் எனும் உஷ்ணம் நீங்கினால் உடல் செயலற்றதாகின்றது அதே நேரம் ஒரு நாள் நீர் அருந்தவில்லை என்றால் கூட உடல் தாங்காது
இந்த இரு சக்திகளும் இணைந்த உடலையும் அதன் இயக்கத்தையும் ஒரு வானியல் நிகழ்வோடு உணர சொன்னார்கள்
இந்த கடகராசி என்பது நீர் ராசி சூரியன் என்பது வெப்பத்தின் அடையாளம், கடக ராசியில் சூரியன் சஞ்சரிக்கும் இக்காலத்தில் மானிட உடல் இயக்கத்தை உணர சொன்னார்கள்
அதை உத்திரட்டாதி நாளில் இன்னும் குறித்து சொன்னார்கள், உத்திரட்டாதி என்பது மீன ராசிக்குரிய நட்சத்திரம், அந்த ராசி மோட்ச மண்டலத்தை குறிப்பது
உன்னில் உறைந்திருக்கும் சக்தியில் இறைவனை தியானித்தால் முக்தி நிச்சயம் என்பதே “ஆடி தபசு” நாளில் உணர வேண்டிய விஷயம்
இங்கே சில விஷயங்கள் உங்களுக்கு குழப்பமாக இருக்கலாம்
சிவனும் சக்தியும் இணைந்தை சொல்லும் இந்துமதம், இப்பொழுது சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என்றால் அது குழப்பமாகத்தான் இருக்கும் சந்தேகமில்லை
சக்தி என்பது இயக்கம், விஷ்ணுவும் சிவனும் ஒரு நிலையான சக்திகள் அந்த சக்திகளை தூண்டும் சக்தி அன்னை அந்த இயக்கும் சக்தியே தேவி வடிவம்
அணு என்பது புரோட்டான் நியூட்ரான் எலெக்ட்ரான் என்பதால் ஆனது, அங்கு இயங்குவது எலக்ட்ரானே அதன் ஓட்டமே மின்னூட்டம் எனப்படுகின்றது
இந்த அணுவினை இன்னொரு நியூட்ரான் கதிரை கொண்டு பிளந்தால் அங்கே அணுபிரவாகம் நடக்கின்றது
இந்த பெரும் நுணுக்கமான தத்துவம்தான் பிரபஞ்சம் முழுக்க பரவி கிடக்கின்றது, அந்த தத்துவத்தாலே மாபெரும் பிரபஞ்சம் தோன்றுகின்றது இயங்குகின்றது மறைகின்றது
அந்த பிரபஞ்சத்தின் கோடான கோடி மூலையில் அதிலும் பல்லாயிரம் கோடி பங்கில் ஒன்றான இந்த பூமியும் அதன் இயக்கமும் அங்கு மானிடர் வாழ்வும் அப்படித்தான் நடக்கின்றது
இந்த தத்துவத்தைத்தான் சிவன் விஷ்ணு என சொல்லி மானிடனுக்கு முடிந்த வகையில் புரிய வைக்க முயன்ற மதம் இந்துமதம்
அந்த சிந்தனையினை வளர்க்கும் நாள்தான் ஆடி தபசு
அன்னை தவமிருந்தது ஒரு வழிகாட்டல், அப்படி நாமும் தவமிருந்தால் இறைவனை உணரலாம் அந்த மூலபரம்பொருள் ஒன்றே என்பதை அறியலாம் என்பதை சொல்லும் நாள் இது
உண்மையில் இந்த விழா ஒவ்வொரு இந்துவும் உலகெல்லாம் சிறப்பிக்க வேண்டிய பெருவிழா, ஒரு காலத்தில் அப்படித்தான் இருந்தது ஆனால் பின்னாளில் நெல்லைமாவட்டம் சங்கரன்கோவிலில் மட்டும் என சுருங்கிவிட்டது
இந்த நாளையும் அதன் பொருளையும் புரிந்து கொண்டால் சைவம், வைஷ்ணவம் எனும் சர்ச்சையோ. அத்வைதம் துவைதம் மீமாம்சம் போன்ற தத்துவ மோதல்களோ வராது
உண்மையில் இந்த பிரிவுகளும் தத்துவங்களும் உருவாக்கபட்டது ஒவ்வொரு மானிடனும் பல வழியில் சிந்தித்து மூல பரம்பொருள் ஒன்றே என்பதை உணர்வதற்காகவே
ஆனால் அது பின்னாளில் பல சர்ச்சைகளுக்கு வழி செய்தது, சில சர்ச்சைகள் இன்றளவும் உண்டு
ஆடிதபசை முழுமையாக உணர்ந்த இந்து இந்த சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்ட ஞானம் பெறுவான், எல்லா பிரிவுகளையும் கடந்த பெரு ஞானத்தில் நிலைத்திருப்பான்
இந்த நாள் மிக நுணுக்கமாக சித்தர்களும் ஞானியரும் சொன்ன தத்துவத்தின் பெரும் போதனையினை நினைவுபடுத்த வேண்டிய நாள்
தெய்வம் என்பது எல்லா இடத்திலும் பரவியிருக்கின்றது, அது காற்றுபோல் வெளிச்சம் போல் எல்லா இடத்திலும் பரவியிருகின்றது என்றார்கள்
“அணுவுக்குள் அணுவாய் அணுவுக்குள் அப்பாலாய்” என தெய்வ தத்துவத்தை சொன்னாள் ஒளவை, “அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்திலும் உண்டு” என்றார்கள் ரிஷிகள்
அப்படி பிரபஞ்சத்தை இயக்கும் சக்தி இந்த உடலை இயக்கி அங்கு செயலாற்றுகின்றது என்பதை சொன்னார்கள்
மானிட உடலில் வெப்பமாக சிவனும், நீராக விஷ்ணுவும் இயக்கும் சக்தியாக அன்னையும் இருக்கின்றார் என்பதை உணர சொன்ன இந்துமதம் இந்நாளில் தெய்வம் நம்முள்ளும் இருப்பதை சொல்கின்றது.
இங்கு ஒரு கேள்வி எழலாம்?
சிவனும், விஷ்ணுவும் நம்முள் இருக்கின்றார்கள் என்றால் பிரம்மன் என்பவன் எங்கே?
அதைத்தான் சொன்னது இந்துமதம் “அகம் பிரம்மாஸ்மி”, பிரம்மன் உள்ளேயே மனமாக இருக்கின்றான்
ஆம், தெய்வம் என்பது அணுவுக்குள்ளும் உண்டு அணுவுக்கு அப்பாலும் உண்டு, அண்டத்திலும் உண்டு பிண்டத்திலும் உண்டு, எல்லா உயிரிலும் உண்டு கல்லிலும் உண்டு காணும் காணாத எல்லாவற்றிலும் உண்டு என்பதை உணர்ந்த இந்துமதம் அந்த மூல தெய்வம் ந்ம்முள்ளும் உண்டு
அந்த தெய்வத்தை தவமிருந்து தியானத்தால் ஒரே தெய்வமாக அறியலாம், உணரலாம் என்பதை சொல்லும் நாளே ஆடிதபசு
இந்த ஞானபண்டிகையினை கொண்டாடும் மதமாக இந்துமதம் கம்பீரமாக நிற்கின்றது, அந்த ஞானபண்டிகையினை சிறப்பிக்கும் இந்துக்களும் தாங்கள் எவ்வளவு பெரும் ஞானபாரம்பரியம் என்பதை உணர்ந்து பெருமையுடன் அதை சிறப்பிக்கின்றார்கள்
