ஆர்.கே நகர் இடைதேர்தலில் சுவாரஸ்யமான காட்சிகள்

இந்த ஆர்.கே நகர் இடைதேர்தலில் சுவாரஸ்யமான காட்சி காண கிடக்கின்றது

நாஞ்சில் சம்பத் தன் பலாப்பழ தலையினை அசைத்து என் தலைவன் தினகரன் என முழங்கிகொண்டிருக்கின்றார்.

இப்பக்கம் வைகோ ஸ்டாலின் முதல்வர் ஆவார் என பிரச்சாரம். வைகோவின் பேச்சு ஆர்.கே நகரில் திமுக வெல்ல வேண்டும் என்பதைவிட திமுகவிடன் நான் சரணடைந்துவிட்டேன் எனும் பொருளையே மறைமுகமாக சொல்கின்றது

இந்த இருவரும் திமுகவில் எப்படி இருந்தவர்கள்? கலைஞரே தலைவர் என சொல்லிகொண்டிருந்தார்கள்

பின் வைகோ தலைவர் என நாஞ்சில் சம்பத் சொல்லிகொண்டிருந்தார், மதிமுகவில் எப்படி எல்லாம் ஒன்றாக இருந்தார்கள்?

இருவரையும் தனியே பார்க்கவே முடியாது. நடக்கும் பொழுதும் , பேசும் பொழுதும் ஏன் சிறையில் கூட ஒன்றாகவே இருந்தார்கள்.

இப்பொழுது எங்கெல்லாமோ சுற்றிவிட்டு ஆளாளுக்கு ஒரு இடத்தில் ஐக்கியமாகி தற்போதைய தலைவர் இவர் என முழங்கிகொண்டிருக்கின்றார்கள்

திமுகவில் இருந்து சென்றபொழுது இவர்களுக்கு இருந்த எதிர்பார்ப்பு எவ்வளவு? கொடும் புலிவால் பிடித்தும் தமிழக யதார்த்த்தை உணர தவறியும் இப்படி ஆகிவிட்டார்கள்

(ஆனால் நாஞ்சில் சம்பத் ஜெயா இருந்தபொழுதே அங்கு அடைக்கலம் ஆனார், சம்மணம் போட்டு அமர்ந்த்கொண்டார். அதே ஜெயா இப்பொழுது இருந்தால் வைகோ ஸ்டாலின் பக்கம் செல்வாரா என்பது சந்தேகமே)

வைகோவினை பார்க்கும் பொழுது பைபிளில் வரும் ஊதாரி மைந்தன் கதை நினைவுக்கு வருகின்றது

நாஞ்சில் சம்பத்தை நினைத்தால் தாவீது அரசனோடு இருந்த சில சந்தர்ப்பவாதிகளின் நினைப்பும் வருகின்றது

ஆக இருவரையும் பார்க்கும்பொழுது வரும் வரி இதுதான்

“ஒரு மந்தையிலிருந்து இரு ஆடுகள் வேறு வேறுபாதைக்கு போய்விட்டன, அவை மீண்டும் ஆர்.கே நகரில் சந்தித்தபொழுது பேச முடியவில்லையே… ஓ மை ஜீசஸ்”