இசை புயல் ஏ. ஆர். ரஹ்மான் தோன்றிய நாள்
இயற்பெயர் : A.S திலீப்குமார்
பிறந்த நாள் : 06-01-1967
ஒரு மனிதனுக்கு கலை திறமை வருவது அபூர்வம், அதிலும் தன் கலையில் மகா உச்சம் தொடும் மனிதர்களும் அபூர்வம்
அந்த அபூர்வ மனிதர்களில் தலைகனமோ, ஆர்ப்பாட்டமோ இன்றி மிக எளிமையான மனிதர்கள் மகா மகா அபூர்வம்
கலையினை ஒரு தவமாக செய்தாலன்றி அந்த யோக நிலை கிட்டாது
அப்படி நம் தலைமுறையில் நாம் கண்ட கலைஞன் ஏ.ஆர் ரகுமான்.
25 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் தொடங்கி பின் உலகெல்லாம் வீசிகொண்டிருக்கும் சென்னை இசை அவர்.
இனி அவர் இசை உலகில் உச்சம் தொட ஒன்றுமில்லை, எல்லா உயரங்களையும் மிக சிறிய வயதிலே எட்டியாகிவிட்டது.
பொதுவாக மும்பை திரையுலகில் தென்னக கலைஞர்களுக்கு எதிரான அரசியல் உண்டு
ஐரோப்பாவில் ஆசியர்களுக்கு எதிரான அரசியல் உண்டு
சில இடங்களில் மதங்கள் கலைஞன் நுழைய அனுமதி கொடுக்கும் விஷயம்
ஆனால் இவை எல்லாம் தன் கட்டுபாடுகளையும், தன் விதிகளையும், தன் கவுரவங்களை எல்லாம் விட்டு ஒரு மனிதன் காலடியில் விழுந்து அழைக்கின்றது என்றால் அது ஏ.ஆர் ரகுமானை
மும்பை உலகம் அப்படி அழைத்தது, ஆசியர் பிடிக்காத லண்டன் அழைத்தது, கருப்பர்களை பிடிக்காத அமெரிக்கா அழைத்தது
இஸ்லாமியர்களை பிடிக்காத நாடுகள் கூட ரகுமானுக்கு சிகப்பு கம்பளம் விரித்தன
காரணம் அம்மனிதனின் திறமை அப்படி பணிய வைத்தது
பழம் காட்சிகளில் வரும் தான்ஸேன், பீத்தோவன் போன்றோருக்கு பின் இந்த நூற்றாண்டில் அது ரகுமானுக்கே வாய்த்தது
இனம், மொழி, நாடு எல்லாம் கடந்து அவனை உலகம் அணைத்துகொண்டது, காரணம் இசைக்கு மொழி இல்லை.
அது கடவுள் போன்றது.
எவ்வளவு பெரும் உயரம் தொட்டுவிட்டும் அதிலே நிற்கின்றார் ரகுமான்
மெட்ராஸின் மொசாட் என உலகமே கொண்டாடிகொண்டிருந்தாலும் மனிதர் அப்படியே தான் இருக்கின்றார்
எந்த சர்ச்சையிலும் அவர் பெயர் சிக்கவில்லை. எந்த கிசுகிசுக்களும் அவரை பற்றி இல்லை
இசையினை உணவாக, சுவாசமாக கொண்டு வாழும் மனிதர் அவர். இசையினை தவிர அவர் ஏதும் பேசியதுமில்லை
அரசியல், மதம், இன்னபிற சர்ச்சைகளில் ஒரு நாளும் அவர் சிக்கியதுமில்லை. இசை இல்லாத விவகாரங்களில் மூச் விட்டதுமில்லை.
ஏழு ஸ்வரங்களும் ஓடிய தமிழகத்தின் இசை அடையாளத்தை உலகிற்கு காட்டிய தமிழன்
ஆஸ்கார் மேடையில் தமிழனாய் தமிழ் பேசி நின்ற தமிழன்
பெரும் உயரம் தொட்டாலும் வெளிநாடுகள் வருந்தி அழைத்தாலும் சென்னையினை நீங்காத தமிழன்
தான்சேன், தாவீது அரசர் என எல்லா வரலாற்று அடையாளங்களின் இசையினையும் கலந்து பிறந்த பிறப்பு ரகுமான்
மிகையில்லை, சாதாரண இசையமைப்பாளருக்கு இவ்வுயரம் சாத்தியமே இல்லை.
பீத்தோவானின் தமிழ் பிறப்பான ஏ.ஆர் ரகுமானுக்கு இன்று பிறந்த நாளாம்
அவர் இன்னும் பல சாதனைகள் படைக்க வாழ்த்துவோம்
அவர் இசையும், பக்தியும் அதனை விட அவரின் எளிய பண்பும் மிக மிக பாராட்டதக்கது
உண்மையான இஸ்லாமியனுக்கு மிக பெரும் உதாரணம் ரகுமான், மகா உறுதியாக சொல்லலாம்
“எல்லா புகழும் இறைவனுக்கே” என அவர் சொல்வது போல, இன்று எல்லா பிரார்த்தனையும் அவருக்காகவே
இசையால் உலகினையே ஆட்டி வைக்கும் தமிழ்மகனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
எத்தனை தமிழ் திரைஇசையமைப்பாளர்கள் வந்தார்கள்? இளையராஜா, ரகுமானை தவிர யாரும் நிற்கவில்லையே ஏன்?
கிட்டதட்ட 50 க்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் வந்து புஸ்வானம் காட்டிவிட்ட இசையுலகில் இவர்கள் இருவராலும் எப்படி நிலைத்து நிற்க முடிந்தது
இவர்கள் இசையினை மனதில் இருந்து அல்ல, ஆன்மாவில் இருந்து கொண்டு வருகின்றார்கள்
அவர்கள் ஆன்மா ஆன்மீகத்தில் கரைந்திருக்கின்றது, பிரபஞ்ச அதிபதி அந்த பிரபஞ்சத்து இசைகளை எல்லாம் இவர்கள் ஆன்மா மூலம் உலகிற்கு தருகின்றான்
அந்த இசைகள் காலம் கடந்து நிற்கின்றன
ரகுமான் பதித்திருக்கும் முத்திரை மிக பெரிது, மிக மிக பெரிது.
அவர் இன்னும் ஏராளம் பதிக்கட்டும், தமிழன் இசை உலகெல்லாம் இசைக்கபடட்டும்
ஆஸ்கர் விருது பெற்ற முதல் தமிழனாக அவருக்கு பெருமை இருக்கலாம்,
அவரை தமிழனாய் பெற்றதில் நம் எல்லோருக்குமே பெருமை
அந்த இசைதமிழன் பல்லாண்டு வாழட்டும்.
