இணையம் என்பது சுவாரஸ்யமான களம்.. அதில் முகநூல் என்பது சிலிக்கான் பூங்கா

இணையம் என்பது சுவாரஸ்யமான களம், அதில் முகநூல் என்பது சிலிக்கான் பூங்கா

யாரெல்லாமோ வருவார்கள் போவார்கள், நண்பர்கள் கிடைப்பார்கள் திடீரென காணாமல் போவார்கள். சில பூக்கள் இருக்கும் தேள்கள் இருக்கும், அமைதியாக சில முதலைகளும் இருக்கும்

இங்கு பொழுது போக்காக வந்து பார்த்துவிட்டு போய்விட வேண்டும், நமக்கு கொடுக்கபட்ட சுவரில் ஏதும் கிறுக்கலாம் , அதை பார்த்து சிலர் கருத்து சொல்லலாம் அத்தோடு முடித்துவிட வேண்டும். அதுதான் நல்லது.

மாய உலகினை போலவே, இணையமும் மகா மாயமானது. அது காட்டும் மாயங்கள் ஏராளம்

இங்கு எல்லாமே உண்மையுமில்லை, அதே நேரம் சில விஷயம் பொய்யுமில்லை மிக கவனமாக கடக்க வேண்டிய இடம் இது

அப்படி ஆர்வகோளாறில் சிக்கிகொண்டவர்கள் கதை பல இருந்தாலும், இந்த ராமநாதபுரத்துக்காரர் நாகர்கோவிலில் சிக்கிய கதை சுவாரஸ்யமானது

அன்னார் சொந்த தொழில் செய்திருக்கின்றார், அவ்வப்போது முகநூல்பக்கம் வந்து சென்றிருக்கின்றார், இதில் நாகர்கோவில் பெண்ணின் நட்பு ஏற்பட்டிருக்கின்றது

முதலில் நட்பாக தொடங்கிய விஷயம், கொஞ்சம் கொஞ்சமாக சொந்த விஷயங்களை பகிரும் அளவு சென்றிருகின்றது

பின் “என் வறண்ட நிலத்தின் நீரூற்று நீ, என் இருண்ட வானத்தின் விளக்கு நீ, பிறண்ட மனதின் கரண்டி நீ” என ஆளாளுக்கு உருகியிருக்கின்றார்கள்

பின் என்னாகும்? செல்போன் கண்டுபிடிக்கபட்டதே தங்களுக்காக என உருகியிருக்கின்றார்கள்,

அம்பானியின் ஜியோ அதற்கு நன்றாக உதவி இருக்கின்றது

ஒரு சுப நாளில் அந்த பெண்ணை காண அன்னார் நாகர்கோவில் கிளம்பி இருக்கின்றார், சும்மா அல்ல ஏகபட்ட இனிப்பு பலகாரம் சகிதம் , இன்னபிற பொருட்கள் சகிதம் கிளியோபாட்ராவினை பார்க்க சென்ற சீசர் போல சென்றிருக்கின்றார்

ஆனால் அந்த பெண்ணிடம் இருந்து செய்தி இப்படி வந்திருக்கின்றது, “கண்ணாளா இது பத்தினி பெண்கள் நிறைந்த ஊர், நான் நேரடியாக பஸ்நிலையம் வந்து உன்னை ஆர தழுவி வரவேற்றால் என்னை ஊரைவிட்டு ஒதுக்கிவிடுவார்கள்

இது ஒன்றும் லண்டனோ, நியூயார்க்கோ அல்ல, அங்கு பிறக்க வேண்டிய நாம் பூர்வஜென்ம பாவத்தால் இங்கு பிறந்துவிட்டோம் அதே நேரம் ஏதோ புண்ணியத்தால் இணைந்தும் விட்டோம்

நான் வரமுடியாததால் என் தம்பியினை அனுப்புகின்றேன், அவனோடு என் கனவினை சுமந்தபடி வரவும், உங்களுக்காக வீட்டு கதவினை கழற்றி வைத்து காத்திருகின்றேன்”

மனிதர் உருகி போனார், நாகர்கோவில் அவருக்கு நியூயார்க்காக தெரிந்திருக்கின்றது, இறங்கி இருக்கின்றார்

அங்கே ஒருவன் ரத்த கண்ணீர் காந்தாவின் தம்பிபோல் நின்றுகொண்டு “மாமோய் அக்கா உங்கள கூட்டியார சொல்லிச்சு..” என சொன்னவுடன் மனிதர் பைக்கில் துள்ளி அமர்ந்திருகின்றார்

அந்த பைக் யாருமற்ற காட்டில் நின்றிருக்கின்றது, மனிதரோ வாசல்கதவினை கழற்றியவள் தனக்காக வீட்டையும் இடித்துவிட்டாளோ என தேடி கொண்டிருக்கும்பொழுது பொடரியில் அடி விழுந்திருக்கின்றது

அடித்தது யாரென்றால் அந்த தம்பி

“எச்ச தாயோழி… என நாகர்கோவிலின் ஸ்பெஷல் வார்த்தைகளில் தொடங்கிய அர்ச்சனையுடன் அடியும் விழுந்து அதன் பின் மிரட்டபட்டிருக்கின்றார்

நகை, பணம் எல்லாம் பறிக்கபட்டபின்பும் அவரை அலேக்காக தூக்கி சென்ற தம்பி அவரின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி லட்சகணக்கில் எடுத்துவிட்டு பின் கார்டை அவரிடமே கொடுத்து பஸ்நிலையத்திலும் விட்டுவிட்டு பறந்திருக்கின்றான்

மனிதருக்கு அதிர்ச்சி ஒருபுறம், அடி வாங்கிய வலி மறுபுறம் அப்பொழுதும் வேறு எவனும் அவள் போனை ஓட்டுகேட்டு வந்துவிட்டானோ, தர்ம பத்தினி இப்படி செய்யமாட்டாளே என எண்ணி அவளுக்கு போன் செய்து

ஆனால் அம்மணி பறந்துவிட்டாள்

மனிதர் வாழ்வே வெறுத்து அலைந்திருக்கின்றார், வேறுவழியின்றி நாகர்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளித்து அழுது கொண்டிருக்கின்றார்

காவல் நிலையத்தில் மூன்றாம் பிறை கமலஹாசன் உணர்ச்சிகளை எல்லாம் கொட்டிகொண்டிருக்கின்றார்

அவர் அவளுக்காக வாங்கிவந்த இனிப்பு பலகாரம் காவல் நிலைய மேஜையில் சிரித்துகொண்டிருக்கின்றது

விசாரணை நடக்கின்றது,, முகநூலில் சிக்கியவர் முகம் வீங்கி அழுதுகொண்டிருகின்றார்

இந்த செய்தியினை படித்தவுடன் சங்கத்தின் அடிமனதில் எச்சரிக்கை மணி ஒலித்துவிட்டது, உடனே சங்க உறுப்பினர்களுக்கு எல்லாம் சுற்றறிக்கை அனுப்பிவிட்டது

“மரியாதைக்கும், போற்றுதற்கும், வாழ்த்துகும் உரிய நமது தங்க தலைவி குஷ்புவின் ரசிகர்களே

மேற்கண்ட சம்பவத்தினை போல நம்மிடமும் சதிகாரர்கள், கொள்ளைக்காரர்கள் அணுக கூடும்

தலைவி உங்கள் பக்திக்கு மெச்சினார், உங்களை சந்திக்க வர சொன்னார், உங்களோடு உணவு உண்ண அழைத்தார் என அந்த நயவஞ்சக கூட்டம் வலை வீசும்

ஏன் சங்கத்திடமே, கோலாலம்பூரில் தலைவி நூடுல்ஸ் உறிஞ்சி கொண்டிருக்கின்றார், உடன் வாருங்கள் என்றெல்லாம் தூண்டிலிடலாம்

நாமோ தலைவிக்காக உயிரையும் கொடுக்கும் கொள்கை வீரர்கள் என்பதால், நம்முடைய அந்த அர்பணிப்பு உணர்வினை இந்த சதிகாரர்கள் தங்களின் வஞ்சக திட்டத்திற்கு பயன்படுத்த கூடும்

அதில் எல்லாம் சிக்கிவிடாத படி, தலைவி பெயரினை சொல்லி நம்மை ஏமாற்றிவிடாத படி நாம் மிக எச்சரிக்கையாக , கண்ணும் கருத்துமாக கடமையாற்ற வேண்டும் என சங்கம் எல்லோரையும் கேட்டு கொள்கின்றது

வாழ்க தலைவி, வளர்க அவர் செல்வாக்கு”