இதுதாண்டா மொசாத் : 02
முதல் குறி டாக்டர் ஷம்சாரிக்கு வைக்கபட்டது, அவர் பிரான்சில் செல்வாக்காக வாழ்ந்துகொண்டிருந்தார், பிரென்ஞ் பெண்ணைத்தான் திருமணமும் செய்திருந்தார், அந்த ஏரியாவின் குறிப்பிடதக்க புள்ளி.
ஆனால் முனிச் படுகொலையில் அவர் சம்பந்தபட்டிருப்பதோ, அவரின் பெரும் தொடர்புகளோ வெளியே தெரியாது. அவர் செய்வதெல்லாம் ஐரோப்பிய பத்திரிகைகளி பாலஸ்தீன நியாயங்களை உணர்ச்சிகரமாக எழுதுவார், அவ்வளவுதான் உலகிற்கு தெரியும்,
மறுமுகத்தினை மொசாத் மட்டும் அறிந்திருந்தது.
நிச்சயமாக அவரை தெருவில் சுடமுடியாது, பிரச்சினை ஆகிவிடும். வீடு புகுந்தால் மனைவி பிரான்ஸ் குடிமகள் அதுவும் பிரச்சினை. அவரை முடிக்கவேண்டும் ஆனால் ஒரு தடயமும் கிடைக்க கூடாது.
மொசாத்திற்கு எப்படி அவருடன் பேசிபார்ப்பது என திட்டமிட்டார்கள், பொதுவாக மொசாத்திற்கு பேசபிடிக்காது, ஆனால் அடையாளங்களை சரிபார்க்க வேண்டுமல்லவா?
ஒரு பத்திரிகையிலிருந்து அழைப்பதாக அழைத்து, பாலஸ்தீன் பிரச்சினை பற்றி ஒரு கட்டுரை தரமுடியுமா? என இத்தாலிய மொழியில் கேட்டார்கள், அவர் பிறவிபயனே அதுதானே விடுவாரா? ஓடிவந்து மொசாத் அதிகாரி முன்னால் நின்றார்.
பாய்ந்து கழுத்தை கடித்து கொல்லும் வெறிதான் மொசாத்திற்கு, ஆனாலும் அடக்கி கொண்டு பாலஸ்தீன் கதை கேட்டார்கள், அவர் சொல்ல சொல்ல இவர்கள் அவரையும் அவரைபற்றி வந்த உருவ அமைப்பு இன்னபிற விவரங்களை சரிபார்த்தார்கள். எல்லாம் சரிபார்த்து முடிந்ததும் “பாலஸ்தீனில் இவ்வளவு கொடுமையா? என கண்ணீர் விட்டு ஷம்சாரியினை கட்டிபிடித்து அழுது வழியனுப்பி வைத்தார்கள்.
இதற்கு பின் மொசாத் ஏஜெண்டுகள் டெலிபோன் சர்வீஸ், கேஸ் பாய் என சகல வேடங்களிலும் அவ்வப்போது அவரின் வீட்டின் உள்புகுந்து ரகசிய போட்டோக்களாக எடுத்து மொசாத்தின் மேலிடத்திற்கு அனுப்பினர்.
மொசாத் அவரது சகல பர்னிச்சர்,எலெக்ட்ரானிக்ஸ் பொருள் மற்றும் கதவின் அமைப்பு வரை அலசி காயபோட்டு இறுதியாக முடிவெடுத்தது.
அவர் வீட்டு சோபா, அல்லது மேஜை அல்லது டெலிபோன் மேஜையினை குறித்து கொண்டார்கள். அச்சு அசலாக அதனைபோலவே ஒன்றை செய்தார்கள், ஒன்றே ஒன்றை மட்டும் கூடுதலாக சேர்த்தார்கள் அது வெடிகுண்டு.
அது டெலிபோன் டேபிள் அல்லது சோபா இரண்டில் ஒன்றுதான், எது என்பது மொசாத்திற்குத்தான் ரகசியம். ஆனால் அந்த பர்னிச்சர் அவ்வளவு அழகாக செய்யபட்டிருந்தது.
ஒரு நாளில் ஷம்சாரி குடும்பத்தோடு வெளியே சென்றிருந்த சமயம் வீட்டில் புகுந்து அவரின் டெலிபோன் அருகிருக்கும் பர்னிச்சரை மாற்றிவிட்டு வெடிகுண்டு பர்னிச்சரை வைத்துவிட்டார்கள். யாராலும் ஒரு வித்தியாசம் கூட கண்டுபிடிக்க முடியாது, மொசாத்தின் கச்சிதம் அப்படி.
அப்படி அல்ல ஆளில்லா நேரம் உள்ளே புகுந்து டெலிபோன் இருக்கும் மேஜைக்கு அடியில் வெடிகுண்டை பொருத்தினார்கள் எனும் தியரியும் உண்டு.
எப்படியோ குண்டு வைத்தாயிற்று
எல்லாம் சரி, இனி குண்டு வெடிக்கவேண்டும் ஆனால் இவர் மட்டும் இருக்கும் நேரம் மட்டும் வெடிக்கவேண்டும்
இல்லாவிட்டால் குடும்பம் காலி கூடவே மொசாத்தும் காலி.
இப்படியாக நன்றாக திட்டமிட்டுவிட்டு, காத்திருந்தார்கள், மறுநாள் மனைவி மகள் மட்டும் வீட்டைவிட்டு வெளியேறி காரில் செல்ல, மொசாத்தின் முகூர்த்தநாள் நெருங்கிற்று, அதாவது ஷ்ம்சாரி மட்டும் தனியாக இருந்தார். அது 1972 டிசம்பர் 8. அதாவது முனிச் படுகொலை நடந்த 3 மாதங்களுக்கு பின்னால்.
அந்த டெலிபோன் அடித்தது, ஷ்ம்சாரி எடுத்தார், “யேஸ் ஷ்ம்சாரி ஸ்பீக்கிங்..” அதுதான் அவரின் கடைசி வார்த்தை, குண்டு வெடித்தது, (ரிமோட் கண்ரோல் குண்டு அது)
உயிரோடு வீழ்ந்துகிடந்தார் ஷம்சாரி, ஆனால் மருத்துவமனையில் உயிர்விட்டார், அதோடு பாலஸ்தீன போராளிதலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
அவகாசம் கொடுக்காமல் அடிப்பது மொசாத்தின் தனிகலை. அடித்தார்கள் இன்னொரு போராளி அல் பஷீர் மறுநாள் கட்டிலில் குண்டுவெடிக்க இறந்தார். எப்படி படுக்கையில் குண்டுவந்தது என்பது யாருக்கும் தெரியவில்லை, ஆனால் வெடித்தது கட்டில்.
ஒருவழியாக பாலஸ்தீன தலைவர்களுக்கு புரிந்தது, கொல்லபடுபவர்களுக்கு இருக்கும் ஒரே தொடர்பு எல்லோரும் முனிச் படுகொலையில் சம்ப்ந்தபட்டவர்கள் என முடிவு செய்யும்பொழுதே பேராசிரியர் அல் குவைசி கொல்லபட்ட செய்தி வந்தது,
அவ்வளவுதான் ஐரோப்பாவின் அனைத்து பாலஸ்தீன் போராளிகளும் மகா சைலண்ட, கூடவே பரபரப்பு பயம்.
அனைவரும் அமைதியாகவே மொசாத்தின் பார்வை லெபனானுக்கு திரும்பியது, பாரீஸ் பொதுவான நாடு, போகலாம் கொல்லலாம் ஆனால் லெபனான் போராளிகளின் கோட்டை, எதுவும் சுலபமில்லை.
ஆனால் லெபனானின் புறநகர் பகுதியொன்றில் சம்பந்தபட்ட போராளிகள் மூன்றுபேர் தங்கி இருப்பததாக தகவல் வந்தது, லெபனான் இஸ்ரேலின் அண்டை நாடு, 4 மணிநேர பிரயாணம் கூட தேவையில்லை.
இந்த தாக்குதலுக்கு “இளமையின் வசந்தம்” என பெயரிட்டார்கள், அதன் தலைவர் யகுட் ஓல்மர்ட்.
இஸ்ரேல் பிரதமாராக இருந்து, 3ம் தேவாலயத்தை எருசலேமில் கட்டபோவதாக பரபரப்பினை ஏற்படுத்தி, பின்னாளில் ஒரு கம்பெனிக்கு முன்னுரிமை கொடுத்த குற்றத்தில் இன்று தண்டனை அனுபவித்துவரும் அதே எகுத் ஒல்மார்ட்.
உயிரை பணயம் வைத்து செய்யவேண்டிய காரியம் இது, எந்த நாட்டு வருங்கால பிரதமருக்கு சாத்தியம்? செத்துவிட்டால் பிரதமர் நாற்காலி என்னாவது? ஆவியாக வந்து அதில் அமர்ந்தாலும் என்ன பிரயஜோனம்? மந்திரவாதியோடு பேசவா?
ஆனால் இஸ்ரேல் இப்படித்தான், இன்றும் நாட்டிற்காக சாதித்தவர்கள் குடும்பம் மட்டுமே பிரதமர் நாற்காலியில் அமரமுடியும், இன்றைய நேதன்யாகு புகழ்பெற்றா உகாண்டா தாக்குதலில் உயிர்விட்டவரின் சகோதரர், இவரும் பெரும் முன்னாள் வீரர்.
அங்கு தலைவராக தகுதி வேண்டும், இப்படியாக அவர்கள் கவனமாக பார்த்து பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள், தமிழக முதல்வர் ஆவதற்கு ஒரே தகுதி குறைந்தபட்சம் 70 படங்கள் நடிக்கவேண்டும் அல்லது வசனம் எழுதவேண்டும்.
இப்பொழுதெல்லாம் முதல்வர் வீட்டில் வேலைக்காரராக இருந்த தகுதி போதும் என்கின்றார்கள்
பின் ஆட்சி எப்படி இருக்கும்? கனவிலே நன்றாக வாழ்ந்துவிட்டு எழுந்திருந்து புலம்பவேண்டியதுதான்.
நமது தலைவிதி அப்படி.
ஆனால் யகூத் ஒல்மார்ட் குழுவினரின் தலைவிதி வேறுமாதிரியாக இருந்தது.
3 அழகான பெண்கள் அந்த இரவு லெபனான் தெருக்களில் ஒரு அப்பார்ட்மெண்டினை நோக்கி நடந்து சென்றனர், அந்த பெண்களில் ஒருவர்தான் எகுட் ஒல்மார்ட், கனகச்சிதமாக வேடமிட்டிருந்தார்.
அழகுநடை நடந்து குறிப்பிட்ட வீட்டை அப்பெண்கள் நெருங்கினர்.
தொடரும் …