இதுதாண்டா மொசாத் : 04
வெறியோடு அலைந்த மொசாத்திற்கு ஒரு தகவல் நார்வேயில் இருந்து வந்தது, பொதுவாக மொசாத்தின் தகவல்கள் 100% துல்லியமானவவை, ஆனால் அம்முறை ஒரு உளவாளி சொதப்பிவிட்டான்.
அவர் இன்று தினகரன் எடப்பாடி அணிக்குள்ளும், எடப்பாடி தினகரன் அணிக்குள்ளும், சிலர் சொல்வது போல சசிகலாவின் உளவாளிகள் திமுகவில் இருப்பது போல உளவாளிகளாக இருந்திருக்கவேண்டும்.
ஒரு மனிதனை போல உலகில் 7 பேர் இருப்பார்கள் அல்லவா? அப்படி மீதி 6 பேர் எங்கிருந்தார்களோ தெரியாது, ஒருவன் அபு ஹாசன் போல மொராக்கோவில் இருந்தான்.
பிழைப்பிற்காக ஐரோப்பாவிற்கு சென்ற அவன் நார்வேயில் ஒரு ரெஸ்டாரண்டில் வெயிட்டராக இருந்தான், ஏதோ சூப் குடிப்பதற்காக அங்கு சென்ற மொசாத் ஏஜெண்டின் கண்ணில் சிக்கிவிட்டான்
அவ்வளவுதான், அபுஹாசன் நார்வேயில் இருப்பதாக தகவல் இஸ்ரேலுக்கு பறந்ததது. இரையினை குறிவைத்த கழுகு போல, தனியே பன்னீர்செல்வத்தை கண்ட தினகரனை போல பாய்ந்தது மொசாத்.
சிந்திக்க நேரமில்லை, மொசாத்தின் தகவல்கள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவை என சொல்லிகொள்வதால் தயக்கமின்றி காரியத்தில் இறங்கினார்கள், நார்வே தெருவில் தன் கர்ப்பிணி மனைவி கதற 4 முறை சுடபட்டு இறந்திருந்தான் அந்த மொரோக்காவின் அகமது பவுச்சிக்கி
ஏதோ கொலை என விசாரணையில் இறங்கிய நார்வே போலிஸுக்கு அதிர்ச்சி, பாம்பின் வாலை பிடித்து இருப்பது தெரிந்தது, செத்தது அபு ஹாசன் அல்ல, மொராக்கோ அகதி என்பதை அவர்கள் உறுதிபடுத்தினார்கள்
அதோடு மொசாத்தின் ஏஜெண்டுகள் 6 பேரை கைதும் செய்த்தார்கள், ஒரு கட்டத்தில் இஸ்ரேல் வகையாக சிக்கிவிட்டது, பெரும் ராஜதந்திர சிக்கல் ஏற்பட்டது, உலக அரங்கில் குற்றவாளியாய் நின்றது இஸ்ரேல், காரணம் மொசாத்தின் சொதப்பல்
எப்படி நிகழ்ந்தது தவறு?

அவன் அரைகுறை ஆங்கிலம் பேசினான், அசல் அபு ஹாசனாக இருந்தான், ஒரு மாதிரி பயந்து பயந்து அலைந்தான், குறிப்பாக மனைவி அழகாக இருந்தார் என என்னென்ன சாக்குபோக்கெல்லாம் அந்த தகவல் கொடுத்தவன் சொல்லிகொண்டிருந்தான்.
இனி நீ மொசாத் ஏஜெண்டின் கால் ஷூவினை கூட துடைக்க தகுதி இல்லாதவன் என சொல்லிவிட்டு அடுத்த கூட்டத்தை போட்டது மொசாத்.
நடந்த தவறினை ஏதோ டெக்னிக்கல் பால்ட் என சொல்லிவிட்டு, இனி இப்படி நடக்க கூடாது. அடுத்தமுறை அபு ஹாசன் மட்டும் சாகவேண்டும் என அலட்டிகொள்ளாமல் கூட்டத்தை முடித்தார்கள்.
அதன் பின் அந்த ராஜதந்திர சிக்கலை இஸ்ரேல் எப்படி கையாண்டது என தெரியவில்லை, ஆனால் கடந்தது. எப்படி என்றால் அதுதான் இஸ்ரேல்
பின்னாளில் பாலஸ்தீன் போராளி தலைவரும், இன்று கத்தாரில் வசிக்கும் காலித் மிஷாலும் மொசாத்தின் கொலை முயற்சியில் இருந்து ஜோர்டான் மன்னரால் தப்பித்தார், மொசாத் சறுக்கிய மிக சில சம்பவங்கள் இப்படி உண்டு எனினும் நார்வே சம்பவம் அவர்கள் வரலாற்றில் மிக பெரும் சறுக்கல்
சறுக்கினார்களே தவிர, அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என சொல்லிகொண்டு மொசாத் தீவிரமாக தேடியது.
இப்படி மொசாத் தீவிரமாக தேட, அந்த அபுஹாசன் எங்குதான் இருந்தான்?
அவன் அக்கால மிஸ் லிபியாவினை திருமணம் செய்து அமெரிக்காவில் செட்டில் ஆகியிருந்தான், இதனை கண்டுபிடிக்க மொசாத்திற்கு 5 ஆண்டுகள் ஆகியிருந்தது
சிஐஏவிற்கும் அபுஹாசனுக்கும் தொடர்பு உண்டு என்பதற்கு இதுதான் பெரும் ஆதாரமாக முன் வைக்கபட்டது, அபுஹாசனை கண்டுகொண்டார்களே தவிர கை வைக்க துணியவில்லை, நினைத்திருந்தால் அமெரிக்காவிலே முடித்திருக்கலாம், ஆனால் செய்யவில்லை. பல காரணங்கள்
அபு ஹாசனோ நார்வேயில் இஸ்ரேல் வசமாக சிக்கிவிட்டது, இனி தன்னை இப்போதைக்கு தேடாது என எண்ணியிருந்தான், சுதந்திரமாக சுற்ற ஆரம்பித்தான் அவன் மீது குண்டூசி கூட படாமல் காத்தது சாட்சாத் மொசாத்
ஆம் தற்செயலாக ஏதும் நடந்தால் கூட அபுஹாசன் மொசாத் என பதுங்கிவிடுவான் எனும் எச்சரிக்கை அது.
கொஞ்சம் கொஞ்சமாக பயம் மறந்த அபுஹாசன் முதலில் பக்கத்து தெரு, பக்கது ஊர், பக்கத்து நாடு என சுற்ற ஆரம்பித்தான், ஆபத்தில்லை என்றவுடன் லெபனானுக்கே வந்தான்
இது லெபனான், எங்கும் நமது ஆட்கள். மொசாத் இனி இங்கு வரமுடியாது எனும் மிதப்பில், பெய்ருட்டில் ஒரு அப்பார்மெண்டில் குடியிருந்தான்.
அவன் பெய்ரூட் வர மகா முக்கியமான காரணம் அந்த , மிஸ் லெபனான். அவள் அவ்வளவு அழகி என்கின்றார்கள். குஷ்பூ அளவிற்கு சொல்லமுடியாது என்றாலும் அந்த லெபனானில் அவள்தான் அழகி.
அபுஹாசன் ஒரு விளையாட்டு பிள்ளை, ஏகபட்ட பட்டாம்பூச்சி அந்த அழகன் பின்னால் சுற்றிகொண்டிருந்தார்கள், 1980களில் இம்ரான்கான் போல 1970களில் நிச்சயமாக அபுஹாசன், அவன் ஜெர்மனியில் படிக்கும் பொழுதே நிறைய பெண்கள் சுற்றினார்கள், அப்படிபட்ட அபுஹாசனுக்கு அந்த அழகி சிக்கியது ஆச்சரியமில்லை
அவளை 1978ல்தான் திருமணம் செய்தான் ஹாசன், தன் பிள்ளை லெபனானில்தான் பெற்றெடுப்பேன் என அவள் சொன்னததாலும், பிள்ளைக்கு லெபனான் பாதுகாப்பு என்பதாலும் அங்கு வந்தான் அபுஹாசன்.
இம்முறை பல நூறுதடவை உறுதி செய்து அபுஹாசனை கொல்ல முடிவெடுத்தது மொசாத், பல வகை சோதனைகள், ஏகபட்ட தகவல்கள், போராளிகள் உள்ளே ஊடுருவி அவனை நேரில் கண்ட உளவாளி தகவல்கள், அபுஹாசனின் மனைவி செல்லும் மருத்துவமனை என பல தகவல்கள்
குறிப்பாக அபுஹாசனின் தாய், அவரும் பெய்ரூட்டில்தான் வசித்தார், அடிக்கடி அபுஹாசன் அவரை சென்று சந்திப்பது வழக்கம். தாயினை முதலில் உறுதிபடுத்தினார்கள், அப்படியானால் இவன் நிச்சயமாக நமது குறி என உறுதிபடுத்தினார்கள்.
மீண்டும் ஒருமுறை உறுதிபடுத்த தங்கள் தந்திர திட்டத்தை அரங்கேற்றினார்கள், அவள் மொசாத் ஏஜெண்ட், பெயர் எரிக்கா
அவள் லண்டன் பாஸ்போட்டில், லண்டனில் படித்த டிகிரியுடன் ஏதோ டிரஸ்ட் கொடுத்த லட்டருடன் பெய்ரூட் வந்தாள், பாலஸ்தீன அகதிகள் முகாமில் தொண்டு செய்ய வந்திருப்பதாக சொன்னாள்.
அங்கு அபுஹாசனும் வருவது வழக்கம், சும்மாவே பெண்களை கண்டால் ஏதாவது ஒரு அம்பை எடுத்து மன்மதன் ஹாசன் மீது எய்வது வழக்கம், அப்படி அவனுக்கு அடிக்கடி வேலை இருந்தது.
எரிக்கா விஷயத்தில் மொத்தமாக ஐவகை அம்பையும் எறிந்தான் மன்மதன். மொத்த விஷயத்தையும் கறந்தாள் எரிக்கா, பயிற்சி அப்படி.
இவ்வளவிற்கும் லெபனான் அரசின் பாதுகாப்பில் இருந்தான் அவன், அந்த எரிக்காவினை கூட முழுக்க விசாரித்து அவள் அடுத்த அன்னை தெரசா என சொல்லித்தான் அனுமதித்திருந்தார்கள்
அபுஹாசனின் மெய்காவல் படை கூட அவள் மீது சந்தேகமில்லை என சர்ட்பிக்கேட் கொடுத்திருந்தது
அபுஹாசன இனி எப்படி கொல்ல என சிந்தித்தார்கள் மொசாத், பல முயற்சிகள் திட்டமிடபட்டு கைவிடபட்டன, உதாரணம் அவன் செல்லும் ஜிம்மில் குண்டு வைப்பது, கிளப்பில் அவன் மீது ஊசி குத்துவது என நிறைய, ஆனால் எல்லாம் பலனளிக்கவில்லை
தகுந்த காலத்திற்காக பதுங்கினார்கள், ஒரு வாய்ப்பு வந்தது.
அந்த அப்பார்ட்மெண்டுக்கு பெயின்ட் அடிக்க தொடங்கினார்கள், அப்பொழுது தெரு எல்லாம் அலங்கோலமாக கிடக்கும் அல்லவா? ஆங்காக்கு பெயிண்ட் பாக்ஸ், வாகனங்கள், கிரேன்கள், சாரன்கள், லாரிகள் என நிறுத்தபட்டன.
பெயிண்ட் அடிக்கும் தொழிலாளிகளில் ஒரு மொசாத் ஏஜெண்டும் புகுந்தார், அவன் எப்பொழுது எந்த காரில் செல்கின்றார் எனும் தகவலை அவர்தான் சொல்வார் பெயிண்ட் அடித்தபடியே
அன்று தன் தாயின் பிறந்த நாளுக்காக செல்ல தயாரானான் அபுஹாசன், அவன் கார் கிளம்பியதும் பெயிண்டர் தகவலை சொன்னான்.
தெருவெங்கும் பல வாகனங்கள் நிறுத்தபட்டிருந்தன, அதில் ஒரு வேனும் நின்றிருந்தது, சும்மா அல்ல 100 கிலோ வெடிபொருள் இருந்தது.
நெரிசலில் மிக மெதுவாக அபுஹாசனின் கார் அந்த வாகனத்தை நெருங்கியபொழுது ரிமோட் கண்ட்ரோல் குண்டு வெடித்தது, அந்த ஏரியாவே அதிர்ந்தது. அபுஹாசனின் மெய்காவலர்கள் அங்கே செத்தனர், கடும் காயங்களோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லபட்ட ஹாசன் அங்கே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
அது ஜனவரி 1979.
கிட்டதட்ட 6 வருடம் காத்திருந்து தன் திட்டத்தை வெற்றிகரமாக முடித்தது மொசாத்.
அபுஹாசனின் மரணம் பெரும் கிளர்ச்சியினை உண்டு பண்ணியது, அவருக்கு எப்படிபட்ட மக்கள் அபிமானம் இருந்தது என்பதை அவரின் இறுதி ஊர்வலம் காட்டிற்று, யாசர் அராபத் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார், பெரும் மக்கள் திரள்.
39 வயதான அந்த அபுஹாசன் தான் முனிச் தாக்குதலுக்கு முதல் சூத்திரதாரி என்பது உலகிற்கு தெரிந்தது.
இஸ்ரேலியர் மீது யார் கைவைத்தாலும் அவர்கள் எங்கு இருந்தாலும் கொல்வோம் என மறுபடியும் நிரூபித்து தங்கள் “கடவுளின் பிரம்படி” எனும் ஆப்பரேஷனை வெற்றிகரமாக முடித்தது மொசாத்.
இன்னும் ஏராளமான சாகசங்கள் உண்டு , வாய்ப்பு கிடைத்தால் அவ்வப்போது பார்க்கலாம்.