இதுதான் உணவு உலகம் கண்டுவிட்ட முன்னேற்றமாம்…

வயது ஏற ஏற பலவிதமான கலக்கங்கள் ஏற்படுகின்றன, திடீரென கல்லூரியில் கூட படித்தவன் காலி என திகைப்பூட்டும் செய்திகள் வருகின்றன, அதை தாண்டி செல்வதற்குள் பள்ளியில் கூட படித்தனுக்கு ஹார்ட் அட்டாக் தெரியுமா, அவனுக்கு மஞ்சள் காமாலை இருவருமே இல்லை என வரும் செய்திகள் திகைப்பூட்டுகின்றன‌

சந்தேகமே இல்லை இன்றுள்ள உணவு பழக்கமும், எண்ணெயும், உடற்பயிற்சி இல்லாமையுமே இவற்றிற்கு எல்லாம் காரணம். இவைகளில் கொஞ்சமேனும் கவனம் வேண்டும் என்ற அச்சம் வந்துவிட்டது

நல்ல மருத்துவரிடம் கேட்டால் ஆடோ மாடோ விஷயம் அல்ல, அது சமைக்கபடும் எண்ணெய்தான் விஷயம் என்கின்றார்கள், ஆக சுத்தமான எண்ணெய்க்கு பெரும் பட்ஜெட் போட்டாகிவிட்டது வேறு வழி இல்லை

இதை சுருக்கி சேமித்தால் பின் திடீரென மருத்துவ செலவுக்குத்தான் சென்று நிற்கும் என்கின்றார்க உடல்நல நிபுணர்கள்

இப்படியாக ஒவ்வொரு விஷயத்திலும் கவனம் வந்தபொழுது அரிசி வகையறாவிலும் வந்தது

அரிசியும் உடல்நலம் காப்பதில் மிக முக்கிய பங்கு என்கின்றார்கள். உண்மையில் அரிசி என்பது நெல்லை வேகவைத்து எடுக்கபடவேண்டும், இன்னும் பல விஷயங்கள் உண்டு அதுதான் சத்தான அரிசி

இப்பொழுது வருவதெல்லாம் பாலிஷ் ரைஸ், அவை நெல்லாக இருக்கும்பொழுது அவிக்கபடுவதுமில்லை, பக்குவபடுத்தபடுவதுமில்லை எல்லாம் குப்பை

உண்மையில் அரிசி மகா அத்தியாவசியமா என்றால் ஆச்சரியமாக சிறுதானியங்கள் அவற்றின் இடத்தினை பிடிக்கின்றன‌

சாமை, வரகு குதிரைவாலி, சோளம், கேழ்வரகு எல்லாம் அதனை ஈடுகட்டுகின்றன, அரிசி இல்லா வாழ்வு சாத்தியம் உறுதியாக சொல்லலாம் நிச்சயம் சாத்தியம்

அக்காலத்தில் அப்படித்தான் வாழ்ந்திருக்கின்றார்கள், பின்னாளில் அரிசி அந்த இடத்தினை பிடித்துகொண்டது, பின் வியாபார காலத்தில் எங்கும் எதிலும் வியாபித்துவிட்டது

அரிசி விளைய ஆற்றுகரை அவசியம், இன்னும் பல விஷயங்கள் உண்டு, விளையவைப்பது சிரமம்

ஆனால் சாமை வரகு போன்றவை அப்படி அல்ல, விதைத்துவிட்டால் குறைந்த நீரிலே விளைய கூடிய புன்செய் பயிர்கள்

ஒரு காலத்தில் அரிசி பணக்காரர் உணவாகவும் , வரகு வகையறா ஏழைகள் உணவாகவும் இருந்திருகின்றது ஏழைகள் ஆயினும் ஆரோக்கியமாக இருந்திருக்கின்றார்கள்

அவர்கள் கூலியே வரகு , சாமை, கேழ்வரகு என்றுதான் இருந்திருக்கின்றது

பின் ஏழைகள் பணக்கார உணவினை நோக்கி செல்ல செல்ல இந்த புன்செய் உணவுகள் வழக்கொழிந்திருக்கின்றன‌

பின் அரிசி எல்லா இடத்திலும் வியாபித்துவிட்டது, இந்தியா போன்ற நாடுகளில் அரிசி மிக முக்கிய இடத்தை பிடித்ததும், இந்த சிறுதானியம் பின்னால் தள்ளபட்டதிலும் வியாபாரம் , உலக அரசியல், கார்பரேட் என ஏகபட்ட விஷயங்கள் இருக்கின்றன‌

இப்பொழுது தேடிபோனால் வரகு, சாமை எல்லாம் அரிசியினை விட பன்மடங்கு விலையில் இருக்கின்றது

காலசக்கரம் என்பது இதுதான்

இன்று அக்கால பணக்கார உணவான அரிசி எங்கும் சல்லி விலையில் கிடைக்கின்றது, ஆனால் அன்று ஏழைகளின் உணவாக இருந்த சிறுதானிய விலை உச்சத்தில் இருக்கின்றது, கிடைக்கவுமில்லை

தமிழகம் என்றல்ல எல்லா நாட்டு உணவு பொருளும் இப்படித்தான் மறைந்துவிட்டு அரிசி கோதுமை பார்லி என வந்து நிற்பதாக சொல்கின்றார்கள்.

அன்று பணக்கார உணவாக கருதபட்டவை எல்லாம் அடிமாட்டு விலைக்கு வந்தாயிற்று.

அன்று ஏழைகள் ஏழ்மையில் மிக எளிதாக உண்ட உணவிற்கு இனி பெரும் செலவு செய்ய வேண்டும் போலிருக்கின்றது

இதுதான் உணவு உலகம் கண்டுவிட்ட முன்னேற்றமாம்,

உண்மையில் பின்னோக்கித்தான் சென்று கொண்டிருக்கின்றது.

எதை நோக்கி இவ்வுலகம் ஓடிகொண்டிருக்கின்றது என்றால் எதெல்லாம் மிக எளிதாக கிடைத்ததோ அதெல்லாம் இனி உயிரை கொடுத்து உழைத்து, பெரும் தொகை கொடுத்தால்தான் கிடைக்கும் என்ற நிலைக்கு வந்தாயிற்று.

உண்மையில் யார் ஏழைகள் என்றால் இனி வரப்போகும் எதிர்கால சந்ததியினர்தான்

அவர்களுக்கு நல்ல சத்தான‌ உணவு என எதுவும் எளிதில் கிடைக்க போவதில்லை போலிருக்கின்றது