இது தற்கொலை அல்ல, நிர்பந்த கொலை

Image may contain: 1 person, sittingஅந்த அபலை அனிதா இனி இல்லை, தன் குடிசையில் இருந்தபடி பல ஆண்டுகளாக மருத்துவ கனவு கண்ட அவரின் கனவும் இனி இல்லை.

தன் கூட்டில் ஒரு குருவி திரும்பி வரமுடியாத இடத்திற்கு சென்றதை எண்ணி அந்த கூடே அலறி துடிக்கின்றது, பார்க்க முடியா சோகமது.

குனிந்த முதுகையும், உழைத்து ஓய்ந்த உடலையும் சுமந்து திரியும் அந்த கிராமம். இந்த மண்ணின் மகள் கல்வியால் உயர்வாள், பெருமை சேர்ப்பாள் என எண்ணியிருந்த அந்த அப்பாவி கூட்டம் தன் விதியினை எண்ணி கதறுகின்றது.

இது தற்கொலை அல்ல, நிர்பந்த கொலை

தமிழக மாணவர்களின் மனநிலையினை கொஞ்சமும் அறியா மத்திய அரசு ஒருபுறம், அந்த மத்திய அரசிடம் பதவி ஒன்றிற்காக மண்டியிட்டு நிற்கும் தமிழக அரசு ஒருபுறம்.

மத்திய அரசும் அதன் ஏவலான மாநில அரசும் கொடுத்த தவறான வாக்குறுதிகள் கொஞ்சமல்ல, அதுதான் முதல் காரணம்.

அரசியலுக்காக நீட்டை எதிர்ப்போம் என அனிதாவிற்கு ஆறுதல் என நின்ற எதிர்கட்சிகள் இன்னொரு பக்கம்.

எல்லோரும் சேர்ந்து அந்த மொட்டை மலராமலே கருக்கியாயிற்று.

இதே தமிழகத்து கனிமொழிக்கு ஒரு வழக்கென்றால் ரம்ஜெத்மலானி வாதாடுவார். ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் ராம்ஜெத்மலானியும், பால் நரிமனும் இன்னும் புகழ்பெற்ற வக்கீல்கள் எல்லாம் வருவார்கள்.

தினகரனுக்கும், ஆண்டிமுத்து ராசாவுக்கும் பெரும் வக்கீல்கள் எல்லாம் வருவார்கள்.

ஆனால் அனிதாவிற்கு வந்த வக்கீல்கள் யார்? ஒப்புக்கு வந்தார்கள், அவர்கள் பிரசித்தி பெற்றவர்கள் அல்ல‌

விடுதலைபுலிகளுக்காக கருப்பு கவுண் மாட்டிய வைகோ இந்த அமுதாவிற்கெல்லாம் கவுண் அணிய மாட்டார், திருமாவிற்கும் தான் ஒரு வக்கீல் என்பெதெல்லாம் மறந்துவிடது.

ஜல்லிகட்டிற்காக திரள அனுமதிக்கபட்ட தமிழகம் அனிதாவிற்காக பொங்க மறந்துவிட்டது.

ஆக அமுதாவின் சாவிற்கு எல்லோர் பங்கும் இருக்கின்றது, அனிதா சாவுகறை படியாத எந்த கரங்களும் இல்லை.

கொன்றவர்கள்தான் அவருக்கு இரங்கலும் அஞ்சலிலும் செலுத்திகொண்டிருக்கின்றோம். நிச்சயமாக அதுதான்

அம்மா ஆவி அடிக்கடி பேசும் அதிமுக தலைவர்களிடம் இனி அனிதா ஆவி பேசுமா என்றால் பேசாது.

ஆனால் அது மனசாட்சி உள்ள ஒவ்வொரு தமிழனிடமும் பேசுகின்றது, அதற்கு பதில் சொல்ல ஒரு தமிழனிடமும் பதில் இல்லை

மனசாட்சியே இல்லா அரசியல்வாதிகளிடம் அது பேசினாலும் அவர்களுக்கு புரியாது, ஆம் விலங்குகளுக்கு மனசாட்சி இருப்பதில்லை.

எதற்கு சுதந்திரம் பெற்றோம்? சர்வ சத்தியமாக வெள்ளையன் ஆட்சி நடந்திருந்தால் கூட பல ஏழைகள் மருத்துவராகியிருப்பார்கள், அனிதா செத்திருக்க மாட்டாள்.

நம் மக்களை நாமே கொல்லவா சுதந்திரம் வாங்கினோம்? நமக்கு நாமே அடிமையா?

சில வருடங்களுக்கு முன் சாந்தி என்ற தமிழக தடகள வீராங்கனையினை அவமானபடுத்தி மனதால் சாகடித்தார்கள், நடைபிணமாக அவர் வாழ்கின்றார்.

இன்றொரு அனிதாவினை கொன்றே விட்டார்கள். இன்னும் எத்தனை திறமையானவர்களை கொல்ல போகின்றதோ இத்திருநாடு.

“அம்மா அனிதா

+2 பாடம் புரிந்த அளவு உனக்கு இந்திய சூழல் புரியவில்லையா? கடிவாளம் போட்டு ஒரே திசையில் ஓடும் குதிரை போல ஓடி கொண்டிருந்தாயா?

ஆமை முட்டை கடலை நோக்கி திருப்பபட்டிருக்குமாம், வெளிவரும் குஞ்சுகள் நேரே கடலுக்கு செல்ல அந்த ஏற்பாடாம்.

நீ நேரடியாக அக்கடலில் செல்லலாம் என்றா நினைத்து ஓடினாய், முட்டையின் திசையினை பாவிகள் திருப்பி வைத்துவிட்டார்கள் தாயே, வழி தவறி ஓடிய நீ மரணித்துவிட்டாய்

சத்தியமாக இது உன் பாடத்தின் தவறு அல்ல, நீ இந்தியாவின் தற்போதைய சூழலை படிக்க மறந்ததுதான் தவறு

கலாமும் , ராதாகிருஷ்ணனும் பழைய இந்தியாகாரர்கள். ஏழைகள் படித்து இந்நாட்டில் எழும்பியதெல்லாம் பழைய இந்தியாவில் தாயே.

இது புதிய இந்தியா, ஆம் பிறந்துவிட்ட புது இந்தியா. இந்த இந்தியாவில் உன்னைபோன்றவர்கள் எல்லாம் எப்படி எழ முடியும்?

புது இந்தியா என இப்பொழுது உருவாகியிருப்பது மிக பழமையான இந்தியா, இதில் ஏழைகளும், அபலைகளும் அடிமையாக வாழலாம், உயர் கல்விக்கு எல்லாம் ஆசைபட கூடாது.

புதிய இந்தியா என்பது என்ன தெரியுமா? பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த அந்த இந்தியாவேதான். அதுதான் உருவாகிகொண்டிருக்கின்றது.

இக்கொடுமையில் நமக்கு போராட‌ யார் இருக்கின்றார்? ஒரு நிமிடம் நினைத்தாயா?

தமிழரின் நியாயத்தை சொல்லவேண்டிய அரசு அடிமையாய் நிற்கின்றது, ஆடி தீர்க்கவேண்டிய எதிர்கட்சி மென்னி முழுங்குகின்றது.

இருவராலும் கைவிடபட்டு நிற்கின்றது தமிழகம், அரசியலுகு அப்பாற்பட்டு களத்தில் உரிமைகளுக்காக நிற்க பெரியார் போன்ற பெரியவர்களுமில்லை

பின் எந்த தைரியத்தில் அம்மா நீ ஆசைபட்டாய்?

இதோ நீ சென்றுவிட்டாய், இரு நாட்களுக்கு அழுவோம். அதன் பின் உன் வீட்டார் தவிர யாருக்கு உன் முகம் நினைவில் இருக்க போகின்றது?

காந்தி, நேரு, பெரியார், காமராஜர் போன்ற பெரியவர்களை எல்லாம் மறந்துவிட்ட இத்தேசம் உன்னை மட்டும் நினைக்குமா?

உன்னால் வாழமுடியாத இந்நாட்டிலிருந்து நீ விடைபெற்றுவிட்டாய், போ

உன் உடல் மீது வைக்கபட்ட நெருப்பு, ஒவ்வொரு தமிழனின் ஆழ்மனதிலும் பெரும் நெருப்பை மூட்டிவிட்டது என்பது மட்டும் உண்மை, அது அணையும் சாத்தியமில்லை.

சில விஷயங்களை பொசுக்காமல் அது அணையாது.

திரும்ப மட்டும் இந்நாட்டில் பிறந்துவிடாதே, நீ ஆசைபட்ட படிப்பினை படிக்க வேறு நல்ல நாட்டில் பிறந்துவிடு.

ஏ கடவுளே, எம்முடைய பிரார்த்தனை அதுதான், அவளுக்காக இந்த அடிமைகள் அப்படித்தான் உன்னிடம் அழ முடியும்

மற்றபடி இத்தேசத்தின் தலைவிதியினை நீ திருத்தி எழுதபோவதுமில்லை, இத்தேசம் இனி திருந்தபோவதுமிலை

இந்த தமிழகத்திற்கு நீ ஏதாவது செய்யவேண்டுமென்றால் அந்த வெண்தாடி கிழவனை திரும்ப ஒரே ஒருமுறை அனுப்பிவிடு

ஒரே ஒரு முறை அனுப்பிவிடு, அவனின்றி விடியாது தமிழகம்.

ஏ தெய்வமே, அடிமைபட்ட தமிழகம், மருத்துவராகும் பெரும் தகுதி இருந்தும் தன் பிள்ளைகளில் ஒன்றை யாருக்காகவோ கொன்று உன்னிடம் அனுப்பிவைக்கின்றது.

இந்நாடு கொடுக்காத நிம்மதியினை நீயாவது கொடுத்துவிடு.

அடுத்த பிறவியிலாவது அவளை வேறொரு நாட்டில் மருத்துவராக்கி விடு, அவள் அடுத்த பிறவியிலாவது வாழ்வாங்கு வாழட்டும்”.