இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் மறைக்கபட்டனர்

இந்தியாவில் சில நல்ல அரசியல்வாதிகள் பல அரசியல் காரணங்களுக்காக மறைக்கபட்டனர் அல்லது மறக்கபட்டனர், வெகு சிலருக்கு சூரியன் வெளிச்சத்தில் விண்மீன்கள் தெரியாது என்பது போல விதி இருந்தது, ஆலமரத்தின் அடியில் புற்கள் முளைக்கமுடியாது என்பது போல அவர்கள் வாழ்வு இருந்தது

அவர்களின் உயர்ந்த குணமும், நேர்மையும் வெளிதெரியவில்லை, இவ்வளவிற்கும் பல நல்ல விஷயங்களை நாட்டுக்கு செய்தவர்கள் அவர்கள், அவர்களில் ஒருவர்தான் பெரோஸ் காந்தே அல்லது பெரோஸ் காந்தி

இந்திராவின் கணவரும், இன்றைய ராகுலில் தாத்தாவுமான அந்த பெரோஸ் காந்தி, காங்கிரஸ்காரர்களால் மட்டுமல்ல மொத்த இந்தியாவுமே மறந்துவிட்ட நபர் அவர், அப்படி ஒருவர் காங்கிரஸ் அரசியலில் இருந்த அடையாளம் கூட இன்று இல்லை, சோனியாவும் மேனகாவும் கூட தங்கள் மாமனாரை தேடியது இல்லை

பெண்ணாதிக்க உலகமிது

அவரை பற்றி 3 வித கதைகள் உண்டு. முதலாவது அவர் இஸ்லாமியர் எனவும் அவரை காதலித்து திருமணம் செய்த இந்திரா தன் பெயரை மைமுனா பேகம் என மாற்றியதாகவும், ஜின்னாவிற்கு எதிர் அரசியல் செய்த நேரு இதனால் அஞ்சி அவரை பெரோஸ் கானில் இருந்து பெரோஸ் காந்தியாக மாற்றியதாக ஒரு செய்தி

இரண்டாவது பெரோஸ்கானை காந்தி தத்தெடுத்து தன் மகனாக ஏற்று பெரோஸ் காந்தியாக மாற்றி நேரு மகளுக்கு திருமணம் செய்துவித்ததாக ஒரு செய்தி ஆனால் காந்தி தன் வாழ்வில் எதையும் மறைக்காதவர், இப்படிபட்ட சம்பவம் நடந்ததாக அவர் சொல்லவே இல்லை

மூன்றாவது விஷயம் பெரோஸின் இயற்பெயர் பெரோஸ் ஜெகங்கீர் காந்தெ என்றும் அவர் பார்சி என்றும், பெரோஸ் காந்தே எனும் பெயர் பெரோஸ் காந்தியாக மாறிற்று என்பதும் இன்னொரு செய்தி

அவர் பார்சி என்பதே பலரும் ஒப்புகொள்ளும் விஷயம், காரணம் அன்று அந்த பீர் சப்ளை வியாபாரம் பார்சிகள் கையிலே இருந்தது, பெரோஸ் நேருவின் அலகாபாத் மாளிகைக்கு ஒயின் சப்ளை செய்த வியாபார குடும்பத்துக்காரர்

அடிப்படையில் பெரோஸ் பத்திரிகைக்காரர், நல்ல பத்திரிகைக்காரர். ஒரு பத்திரிகைகாரனுக்குரிய நேர்மை துணிவு எல்லாம் அவரிடம் இருந்தது

இந்திராவும் பெரோஸும் நன்றாகத்தான் லக்னோவில் வாழ்ந்தார்கள், இரு குழந்தைகள் பிறந்த பின்பே தந்தையின் ஆனந்த பவனுக்கு இந்திரா குடிபெயர்ந்தார் அதன் பின்பே நெருடல் வந்தது

நெருடலும் குடும்ப உறவில் வரவில்லை, நேருவின் சில காரியங்களை பரோஸ் வன்மையாக கண்டித்தார் அதிலிருந்தே மோதல் தொடங்கியது

ஆம், பெரோஸ் நாடளுமன்ற உறுப்பினர், ஆனால் எதிர்கட்சி இல்லா காங்கிரஸின் அரசின் நேரு எதிரியே இன்றி செங்கோல் செலுத்தினார். இந்த பலத்தில் பல காங்கிரசார் ஊழலில் ஈடுபட்டனர்

பெரோஸ் அதை துணிச்சலாக அம்பலபடுத்தினார், பல அரசியல்வாதிகள் பெரோஸால் சிறை சென்றனர்

டிடி கிருஷ்ணமாச்சாரி எனும் நிதி அமைச்சர் பெரோஸ் காந்தி வெளிபடுத்திய விஷயங்களால் பதவி இழந்தார். காப்பீட்டு துறையின் ஊழலை பெரோஸ் அம்பலபடுத்த அது அரசுடமையனாது

எல்.ஐ.சி எனப்படும் இந்தியாவின் மிகபெரும் நிதிசுரங்கம் அரசுடமை ஆக்கபட பெரோஸ் காந்தியே காரணம்

ஒரு விஷயம் உறுதியாக சொல்லலாம், சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் ஒழிப்பு போராளி பெரோஸ் காந்தியே

பெரோஸின் இந்த செயல்பாடு நேருவிற்கு கடும் எரிச்சலை கொடுத்தது, கரைபடா கரமாக நேரு இருந்தாலும் சக காங்கிரசாரின் ஊழலை அவர் கண்டும் காணாமல் இருந்தார், பெரோசையும் இருக்க சொன்னார்

ஆனால் பத்திரிகா தர்மத்தை காத்த பெரோஸ் மறுத்தார், இந்திரா தந்தையின் மேலுள்ள பாசத்தில் பெரோஸை எதிர்க்க பிளவு வலுத்தது

ஆனாலும் அஞ்சவில்லை பெரோஸ், 1959ல் மக்களால் தேர்ந்தெடுக்கபட்ட கேரள கம்யூனிஸ்ட் அரசை நேரு கலைத்தபொழுது இது பாசிசம் என முதலில் சொன்னவர் பெரோஸ்

இந்திரா ஒரு சர்வாதியாக உருவெடுப்பார், இந்தியாவின் தாய் என தன்னை நினைத்து கொள்கின்றார், இந்த பரந்துபட்ட நாட்டில் எல்லோரையும் அரவணைத்து செல்ல அவருக்கு துளியும் விருப்பம் இல்லை என முதலில் சொன்னவர் பெரோஸ்

பின்னாளில் இந்திரா ஜனநாயகத்தை காலில் போட்டு நசுக்குவார் என முதலில் சொன்னவர் பெரோஸ்

காங்கிரசின் சர்வாதிகார போக்கு ஒரு கட்டத்தில் காங்கிரசையே நாசமாக்கும் என முதலில் சொன்னது அவர்தான், இன்று ராகுல் தன் தாத்தாவின் அந்த தீர்க்கதரிசனத்தை நினைக்காமல் இருக்க முடியாது

அதனால்தான் ராகுல் பல இடங்களில் சாமான்யனாக இறங்குகின்றார்.

ப்ரோஸ் காந்தியின் ஒரு மாபெரும் காரியத்திற்காக இத்தேசம் அவருக்கு நன்றிகடன் பட்டிருக்கின்றது

அதாவது அந்நாளில் பாராளுமன்ற நடவடிக்கைகள் வெளிதெரியாது, யாராவது வெளிவந்து பத்திரிகைகளில் சொன்னால், அது சர்ச்சையானால் கூட சட்டம் பாயும்

நாடாளுமன்றம் என்பது ரகசியமாகவே நடைபெற்றது, பத்திரிகையாளருக்கு எல்லாம் ஒன்றும் சொல்லபடாது, நாடாளுமன்ற விவகாரங்களில் பத்திரிகை சுதந்திரம் என்பது அவ்வளவு இல்லை

முதன் முதலில் இதனை எதிர்த்தவர் பெரோஸ், அதற்காக ஒரு மசோதாவே கொண்டுவந்தார், பின்னாளில் அதுதான் “ப்ரோஸ் காந்தி பத்திரிகை சட்டம்” என அறியபட்ட சட்டம்

ஆம் இன்று காணும் நாடாளுமன்ற நேரலை போன்ற விஷயங்களுக்கு மூலமே அந்த சட்டம்தான்

பெரோஸின் அந்த நடவடிக்கை மேல் இந்திராவிற்கு எவ்வளவு வெறுப்பு இருந்தது என்றால், அதை குப்பையில் போட்டுவிட்டுத்தான் அவசர நிலையினை பிரகடனபடுத்தினார்

மீண்டும் பெரோஸ்கானின் சட்டத்தை கொண்டுவந்தது பின்னாளைய ஜனதா அரசு

ஆம், இப்படித்தான் இந்திராவும் பெரோஸும் அரசியல் மோதி இருக்கின்றார்கள்.

ஆழ கவனித்தால் ப்ரோஸ் நிச்சயம் மாமனிதர். அவர் கொஞ்சம் அசைந்து கொடுத்திருந்தால் இன்றைய ராப்ர்ட் வதேரா போல ஹாயாக அமர்ந்து பிசினஸ் செய்திருக்கலாம்

ஒயின் பிசினஸை இந்தியா முழுக்க குத்தகைக்கு எடுத்து உலக பணக்காரன் ஆகியிருக்கலாம்

ஆனால் அந்த மனிதன் பத்திரிகையாளராய் நின்றான், அதற்கு தன் மனைவி மாமனார் எல்லோரையும் பகைத்தான்

ஊழல் , எதேச்சதிரிகாரம், சர்வாதிகாரம் இவற்றை எதிர்த்து தன் இரு குழந்தைகளையும் பிரிந்து தனியாக நின்று போராடினான்

ஓரளவிற்கு வெற்றியும் பெற்றான்

நிச்சயம் காங்கிரசில் அந்த மனிதனுக்கு தனி இடம் உண்டு, ஆனால் இந்திராவிற்கு அஞ்சி அவர் ஒதுக்கபட்டார், அப்படியே மறக்கவும் பட்டார்

பெரோஸை வெறுத்த இந்திரா அவரால் பெற்ற காந்தி எனும் பெயரை மட்டும் வெறுக்கவில்லை தன்னுடனே வைத்து கொண்டார்

அது ராஜிவ், சஞ்சய், சோனியா, மேனகா என தொடர்ந்து இன்று ராகுல், வருண் வரை வந்தாயிற்று

நிச்சயம் மகாத்மா காந்திக்கும் நேருகுடும்பதிற்கும் மண உறவு இல்லை

காந்தி எனும் பெயர் பெரோஸ் கொடுத்தது, இதை எல்லாம் இன்று நினைத்து பார்ப்பார் யாருமில்லை

சுதந்திர இந்தியாவின் முதல் ஊழல் ஒழிப்பு , பத்திரிகை சுதந்திரம், கருத்துரிமை சுதந்திரம் என முதலில் குரல் கொடுத்தவர் பெரோஸ் கான்

அதை தன் சொந்த மாமனாருக்கும் மனைவிக்கும் எதிராக எழுப்பினார் என்பதுதான் கவனிக்கதக்கது

(முதலில் பெரோஸை பழித்து பிரிந்த இந்திரா பின்னாளில் இந்திரா சர்வாதிகாரத்தை விட்டு இறங்கும்பொழுது பெரோஸ் இல்லை என்றாலும் நிச்சயம் அவரிடம் மனதால் மன்னிப்பு கோரியிருப்பார்..)

அவர் எழுப்பிய அந்த குரல்தான் பின் ஜனதா, திமுக என நாடெல்லாம் காங்கிரஸ் எதிர்ப்பினை கொடுத்தது, பாஜகவாக இன்று வளர்ந்து நிற்கின்றது

பெரோஸின் வழியில்தான் மேனகாவும் வருண் காந்தியும் பாஜகவில் நிற்கின்றனர்

பெரோஸின் புதல்வர்களில் அவரின் குணம் ராஜிவிற்கும், இந்திராவின் அடாவடி குணம் சஞ்சய்க்கும் வந்தது

சஞ்சய் காந்தி ஆடிய ஆட்டம் கொஞ்சமல்ல, ராஜிவின் பெருந்தன்மையும் சாதாரணம் அல்ல‌

ராஜிவினை போலவே பெரோஸ் சாகும் பொழுதும் அவருக்கு வயது 47

ஆம் மிக குறைந்த வயதில் இறந்தார் பெரோஸ், அவரை தொடர்ந்து அந்த துரதிருஷ்டம் அந்த குடும்பத்தையும் பிடித்தது

அந்த மாமனிதனுக்கு இன்று பிறந்த நாள், சர்வ நிச்சயமாக காங்கிரசார் இதனை காங்கிரசார் கொண்டாட வேண்டும் ஆனால் அவர்களுக்கோ அப்படி ஒரு மனிதன் இருந்ததே தெரியாது

இந்தியாவின் நியாயமான பத்திரிகையாளனுக்கு, தன் கடமையினை சரிவர செய்த, தன் சொந்த குடும்பம் இடைஞ்சலான பொழுதும் குடும்பத்தை தியாகம் செய்து நாட்டின் பத்திரிகை சுதந்திரத்தை நிலைநாட்டிய அந்த தியாக தலைவனுக்கு இன்று பிறந்தநாள்

இந்நாள் இந்திய பத்திரிகை சுதந்திர தினமாக கொண்டாட வேண்டியதே அந்த மாமனிதனுக்கான அஞ்சலி

பத்திரிகையால் ஊழலை வெளிகொணர முடியும், நாட்டை சர்வாதிகார பிடியில் இருந்து காக்க முடியும் என செய்து காட்டியவர் பெரோஸ் காந்தி

இன்றைய இந்திய ஊடகக உலகிற்கு அவரின் கொள்கையும் அவரின் போராட்ட குணமே அவசியம் தேவை

அதிகார வர்க்கத்தை ஆட்டுவித்து கட்டுபடுத்தி அதை நாட்டுக்கு ஏற்ற வகையில் வழிநடத்த பத்திரிகை மகா அவசியம் என செய்து காட்டியவர் பெரோஸ்

இன்றைய அவசிய தேவை அதுதான்

பத்திரிகை பொறுப்பு எதுவென முதலில் சுதந்திர இந்தியாவில் காட்டியவர் அவர். அந்த பொறுப்பு எல்லா பத்திரிகைக்கும் வேண்டும்

அந்த மாமனிதனுக்கு தியாக தலைவனுக்கு, தன் குடும்பம் பிரிந்தாலும் தனி மனிதனாய் கருத்து சுதந்திரத்திற்கு போராடிய அந்த பெரோசுக்கு அஞ்சலி செலுத்த வேண்டியது எல்லா பத்திரிகையாளரின் கடமை

நாம் முகநூலில் எழுதுபவர் ஆயினும் ஓரளவு பத்திரிகை தர்மத்தோடு எழுதுவதாக உணர்வதால் அவருக்கு எம்முடைய சிறப்பான அஞ்சலியினையும் சமர்பிப்போம்

Image may contain: 1 person, text
Image may contain: 2 people, people standing