இந்தியாவில் வெள்ளையர்பாணி கல்விகூடங்கள் ..
இந்தியாவில் முறையான ஆட்சி 1800களுக்கு பின் அமைக்கபட்ட பின்னரே வெள்ளையர்பாணி கல்விகூடங்கள் திறக்கபட்டது, .
இந்தியர்கள் படித்து கல்வியில் முன்னேறி பின்னர் உலகை முன்னேற்றவேண்டும் என்ற உயர்ந்தநோக்கம் எல்லாம் இல்லை, வெள்ளையர்களின் ஆட்சிக்கு உதவ பணியாளர்கள் வேண்டும், வெள்ளையர்களின் பராக்கிரமம் குழந்தைகளுக்கு தெரியவேண்டும் அவ்வளவுதான்.
வெள்ளையர்களும், அவர்களால் பயிற்றுவிக்கபட்ட இந்திய உயர்சாதியினரும் பாடம் நடத்துவார்கள், பெரும்பாலும் மொழி மற்றும் அடிப்படை கல்வி பெரிய கல்வி வேண்டுமென்றால் லண்டனுக்கே செல்லவேண்டும், லண்டனே சொர்க்கம். அமெரிக்கா ஆஸ்திரேலியா எல்லாம் அப்பொழுது தத்தி பழகும் தேசங்கள்.
என்னதான் இந்தியாவினை வெள்ளையர் அடக்கி ஆண்டாலும் ஒருவரை மட்டும் அவர்களால் அடக்க இயலவில்லை, அவர்தான் இந்திய வெயில். அவருக்கு பயந்தார்கள் ஓடினார்கள்,
இந்தியாவின் மிஸ்டர் வெயில் பலரை விரட்டியவர், ஆப்கன் மன்னர்களிலே பலர் அவருக்கு பயந்து ஓடியதாக செய்திகள் உண்டு, இன்னும் கொஞ்சம் உக்கிரமான வெயில் என்றால் ரஷ்ய குளிர் போல இந்தியாவிற்கு இயற்கை பாதுக்காப்பு ஆகியிருக்கும், ஆனால் இந்தியாவில் எல்லாமே அரைகுறை..
சிறிய பதவியில் இருப்பவர்கள் ஊட்டி,காஷ்மீர்,டார்ஜிலிங் என ஓடினார்கள், பெரும் பதவியில் இருந்தவர்கள் ஐரோப்பாவிற்கு அலறி அடித்து சென்று சுவிஸ் மலையில் அடைக்கலமானார்கள்.
எல்லோரும் சென்றுவிட்டால் யார்பணியாற்றுவது? அறிவித்தார்கள்
மேமாதம் முழுக்க விடுமுறை, கல்வி,நீதி துறை என முக்கிய துறைகளுக்கெல்லாம் விடுமுறை அளித்துவிட்டு 1 மாத ஓய்வில் குளிர்பிரதேசங்களில் ஒவருக்கு 8 பந்து ஒரு இன்னிங்க்ஸ் 10 நாட்கள் என டெஸ்ட் கிரிக்கெட் வளர்க்க தொடங்கினார்கள்.
பாருங்கள் கிரிக்கெட்டும் இந்தியர்களுக்காவே வளர்த்தார்கள்.
அன்றிலிருந்து இந்திய மாணவர்களுக்கு மேமாதம் என்பது கடும் கொண்டாட்டம், மாதம் முழுக்க விடுமுறை என்பதாலே பள்ளிக்கு சென்றவர்களும் உண்டு. மாணவர் உலகில் அது அவர்களுக்கான மாதம். உற்சாகம், உல்லாசம், கொண்டாட்டம்.
தூரத்து உறவினர்கள் வீட்டிற்கு செல்லுவது, தங்களின் வேர்களை கண்டுகொள்வது, கிராமங்களில் தாத்தா பாட்டி வீட்டுக்கு வரும் குழந்தைகள் புது நட்புக்களை பெறுவது என அக்குழந்தைகளின் உலகம் வித்தியாசமானது.
கிராம மாணவர் நிலை இன்னும் கொண்டாட்டம் தெருப்புழுதி,அழுக்கு உடை, ரத்த காயங்கள் என குழந்தைகள் வேறு அவதாரம் எடுப்பார்கள். ஆடும் மாடும் கூடும் குளத்தில் தான் குடிநீர், எதைஎல்லாமோ சாப்பிடுவது என அவர்கள் சுற்றி திரிந்தாலும் அவர்களை அவை பாதிப்பதில்லை, உயிர்கொல்லி நோய்கள் எல்லாம் தாக்கியதில்லை.
சைக்கிள்,நீச்சல்,கூட்டாஞ்சோறு என மிக முக்கியமான விஷயங்களை படித்தார்கள், புது அனுபவங்கள் எல்லாம் பெறுவார்கள்
மே மாதம் அவர்களின் சமூக உறவை வளர்த்தது, இயற்கையுடன் அவர்கள் ஆடிய ஆட்டம் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்தது, குழுவாக ஆடிய மரம் ஏறுதல், வேட்டை இன்னபிற ஆட்டங்கள் எல்லாம் தைரியமும், தன்னம்பிக்கையும்,கூட்டு முயற்சியையும், வாழ்விற்கு மிக அடிப்டையான குணங்களை மனதிற்குள் வளரவைத்தது, சுருக்கமாக சொன்னால் உலகினை புரியவைத்தது.
இக்காலத்தின் மே மாத விடுமுறை மிக கொடுமையானது, மெக்காலே திட்டப்படி இன்றும் மேமாதம் விடுமுறைதான்,அதே வெயில்தான் எனினும் குழந்தைகளின் நிலை மகா மோசம்.
ஹைஜீனிக் சமூகம் இது, வெயிலிலோ,தெருவிலோ,அல்லது வேறு எங்குமோ குழந்தைகள் விளையாட விடுவதில்லை, ஷு இல்லாமல் தரையில் நடக்கவிடுவதில்லை, குடிநீர் கூட குளிர்சாதன பெட்டியின் நீர்தான், இல்லையென்றால் நோய் வந்துவிடுமாம்.
தாத்தாவிற்கும் பாட்டிக்கும், தாய்க்கும் தந்தைக்கும் அக்காலத்தில வராத நோய் பிள்ளைகளுக்கு மட்டும் வருமாம்!
விளையாட்டினை விடுங்கள், நீச்சல் வகுப்பு, இந்தி,பிரன்ஞ்,ஜப்பான் மொழி வகுப்பு,கம்பியூட்டர் வகுப்பு,இசை வகுப்பு, கராத்தே வகுப்பு, நாட்டிய வகுப்பு என வகுத்து வைத்து குழந்தைகளை வதைக்கும் கொடுமை ஏராளம்.
ஏரோப்பிளேன் ஓட்டும் வகுப்புகள் மட்டும் இன்னும் தொடங்கபடவில்லை.
இதை எல்லாம் விட பெரும் கொடுமை அடுத்த வருட முழு படிப்பினை மே மாதத்திற்குள் படிக்கவேண்டுமாம், பின்னர் அதனையே அடுத்தவருடம் முழுதும் படிக்கவேண்டுமாம். இதற்கெதற்கு விடுமுறை??
மாணவனின் நிலை டிவிடி டிஸ்கைவிட மோசம, எல்லாம் அவனில் பதியபடவேண்டும்.
பாவம் அவர்கள், உலகம் தெரிவதில்லை, சமூகம் புரிவதில்லை அதாவது சாபம் என விட்டுவிடலாம், தாய்வழி,தந்தைவழி உறவோ தெரிவது இல்லை சுய அடையாளமோ தெரிவதில்லை, தனது படிப்பு, தனது வாழ்க்கை, தனது சாவு இதை நோக்கியே பயிற்றுவிக்கபடுகின்றார்கள் .
விளைவு மிக,மிக சிறிய வயதிலே பெரிய கண்ணாடி அணிவிக்கின்றார்கள், சொந்த மொழி தவிர வேறு மொழிகள் படிக்கின்றார்கள். தொலைகாட்சியின் அனைத்து குப்பை நிகழ்வுக்கும், குப்பை உணவுக்கும் அடிமையாகி 16 வயதிற்குள் சர்க்கரைவியாதி, 20 வயதிற்குள் அல்சர் என உடல்நலம் தொலைக்கின்றார்கள்.
கிட்டதட்ட நாமக்கல் கோழிபணைகளின் பிராய்லர் கோழிகளை போல பள்ளிகளை விட்டு வெளிவருகின்றார்கள், ஏட்டுபடிப்பினை தவிர ஏதும் தெரிவதில்லை. உறவுகள் தெரிவதில்லை, சமூகம் புரிவதே இல்லை.
படிப்பினை தவிர ஏதாவது, உலக விஷயங்களை விடுங்கள், சொந்த குடும்பத்தினை பற்றிகேட்டாலே மிரண்டு முழிப்பார்கள்.
சிறிய பிரச்சினைகளுக்கும் உயிரை மாய்த்து கொள்ளும் மனசிக்கலுக்கு ஆளாகின்றார்கள், 40 வயதிற்குள் அனைத்து மருந்துகளின் பெயர்களும் அத்துப்படியாகின்றது, 60 வயதில் பிழைத்திருந்தால் தானக முதியோர் இல்லம் செல்வார்கள்
முடிந்தது வாழ்க்கை.
நாளை வேலைக்கு சென்று சம்பளம் வாங்க மட்டும் தெரியும் அவர்களுக்கு வாழ்க்கை என்றால் என்ன என்று வாழ தெரிவதில்லை, அந்தோ பரிதாபம்.
அன்று டி.வி இல்லை, சிமெண்ட சாலைகள் இல்லை, பெரும் பள்ளிகூடம் இல்லை, வீடியோ ஆட்டங்கள் இல்லை ஏகபட்ட இல்லை,
ஆனால் அக்கால குழந்தைகள் அனுபவித்ததில் 1000ல் ஒன்று கூட இக்கால குழந்தைகளுக்கு இல்லை. அவ்வகையில் நாமெல்லாம் கொடுத்துவைத்தவர்கள் மிக நிச்சயமாக சொல்லலாம்
படிப்பு மட்டும் வாழ்க்கை அல்ல, வாழ்க்கை எப்பொழுது மாறும், யாருக்கு என்ன வேலை என்பது ஆண்டவனுக்கே தெரிந்த ரகசியம். படிப்பும் தேவையே தவிர உலக அனுபவமும்,சமூக உறவும்,உற்சாகமான மனநிலையும் குழந்தைகளுக்கு மிக மிக அவசியம், அவைதான் அவர்களை வாழவைக்கும்.
1980 வரை மேமாதம் அனுபவித்த மாணவர்கள் கொடுத்து வைத்தவர்கள், இக்கால குழந்தைகள் வாத்து கூட்டமாய் மேமாதத்திலும் அடைத்துவைக்கபடுவதை கண்டால் பெருமூச்சே வருகின்றது.
மேமாதத்தில் இன்னொரு விசித்திரமும் உண்டு, அக்காலத்தில் நீதிபதிகள் வெள்ளையர்கள் மே விடுமுறையில் லண்டன் சென்றார்கள் அதனால் கோர்ட் விடுமுறை சரி ஏற்றுக்கொள்ளலாம், இன்று உள்ளூர் இந்திய நீதிபதிகளையும், உள்ளூர் வழக்கறிஞர் பெருமக்களையும் கொண்ட கோர்ட்டிற்கு ஏன்?
சும்மாவே ஒரு வழக்கு 3 தலைமுறை நடக்கிறது, விடுமுறை அவசியமா என நாம் கேட்டகூடாது , அது இந்திய நீதிதுறையின் முடிவு, அது தனித்துவம் மிக்கது, மேமாத வெயிலில் மக்களை அலைய வைக்ககூடாது என்ற உயர்ந்த எண்ணம் தவிர வேறு காரணம் இருக்க முடியாது, முடியவே முடியாது.
(உஷ்ஷ்ஷ் எப்படியெல்லாம் சமாளிக்கவேண்டி இருக்கிறது.)
எப்படியோ அக்கால இந்திய அடிமைகளின் குழந்தைகளுக்கு வெள்ளையன் கொடுத்த மேமாத சுதந்திரத்தினைகூட சுதந்திர இந்திய குழந்தைகள் பெறுவதில்லை என்பதே சோகம்