இந்தியாவுக்கு காங்கிரஸ் என்ன செய்தது?

காங்கிரஸ் இந்தியாவுக்கு என்ன செய்தது என இந்த மோடியும் அவரின் அடிபொடிகளும் சொல்லிகொண்டே இருக்கின்றன, மிக பெரிய பொய் இது

வரலாற்றில் என்ன நடந்தது? வெள்ளையன் ஆட்சி எப்படி முடிந்து இந்தியா பிறந்தது? அதுவும் உலகபோர் எனும் உலகமே தரித்திர கோலத்தில் நின்ற நேரமது

ஆம் பஞ்சத்திலும் வறுமையிலும்தான் இத்தேசம் பிறந்தது, ஒன்றுமில்லாமல்தான் இத்தேசத்தை விட்டு போனான் வெள்ளையன்

அது சுதந்திரம் பெறும்பொழுதே மாபெரும் கலவரம் குழப்பம், பிரிட்டிசார் விதைத்து சென்ற மத பிரிவினையின் உச்சம், ஒரு கட்டத்தில் மாபெரும் தலைவனின் உயிர்பலியோடுஅது நின்றதது

ஆம் அந்த இக்கட்டான நிலையிலும் காந்தியினை கொன்றது யார் என்பது உலகிற்கே தெரிந்த விஷயம் , அன்றே நாட்டை விட மதம் இவர்களுக்க்கு முக்கியமாய் இருந்தது

சுதந்திரம் கொடுத்தாகிவிட்டது இன்னும் 2 ஆண்டில் இந்தியா 100 துண்டாக சிதறும் என்றார்கள், அதனை எல்லாம் எதிர்கொண்டு கடந்து உலகிற்கே அதிர்ச்சி கொடுத்தது இந்தியா, காங்கிரஸ் ஆண்ட இந்தியா

தேசம் நிலைத்தது, நேரு அந்த அதிசயத்தை செய்தார்

இந்தியர்களுக்கு ஜனநாயகம் தெரியாது, ஆளதெரியாது என்பதை எல்லாம் பொய்யாக்கி ஜனநாயக தேசமாக இதை வளர்த்தது காங்கிரஸ்

பின்னர் காஷ்மீரை காட்டி 2 போர்கள், அதையும் தாங்கியது தேசம், நண்பனாய் நினைத்து ஐ.நா சபையில் நிரந்தர இடம்கொடு என வாதாடும் பொழுதே சுய உருவம் காட்டிற்று சீனா, ஆசிய நாடு ஒன்றிற்கு ஐ.நாவில் அந்தஸ்து என நாம் அவர்களுக்காய் போராட , அவர்களோ ஆசியா தாதா நான் என முதுகில் குத்திற்று.

அதையும் தாங்கி வளர்ந்தது இந்தியா, மறுபடியும் போர், இன்னும் ஏராள பிரச்சினைகள் ஆனால் இந்தியா அசரவில்லை.

மீண்டும் போர், அதையும் தாண்டி மத கலவர முயற்சிகள், மக்கள் தொகை பெருக்கம், எப்போதும் நேரடியாக கொஞ்சமும், மறைமுகமாக நிறையவும் தொல்லை கொடுக்கும் வல்லரசுகள்.

காலிஸ்தான் சிக்கல், திராவிட சிக்கல், ஈழ சிக்கல், நக்சலைட்டுகள் இன்னபிற கொடுமை என எல்லாவற்றையும் சமாளித்து இத்தேசத்தை காங்கிரஸ், சத்தியமாக காங்கிரஸ்

எல்லாம் கடந்து எழும்பிய பொழுது பாபர் மசூதி இடிப்பும் அதை தொடர்ந்த கலவரங்களும் மறுபடியும் தேசத்தை எரிய வைத்தது, செய்தது யாரென வரலாறே சாட்சி

ஆளுக்க்கொரு கட்சி, அவனவக்கொரு கொள்கை, அவர்களுக்கென ஒரு வேலையற்ற கூட்டம், வெற்று கூச்சல், வீண் ஆர்ப்பாட்டம் என தினம் ஒரு பிரச்சினையை சந்தித்தாலும் வளர்கின்றது இந்தியா, குதிரை வேகமாக ஓடலாம், ஆனால் யானை எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் பலமானது, அதுதான் இந்தியா.

அன்று சுரண்டிபோட்ட பாத்திரமாக ஏழை இந்தியாவினை விட்டு சென்றான் வெள்ளையன், அந்த லட்சணத்தில் நாம் பாகிஸ்தானுக்கும் நஷ்ட ஈடு கொடுத்து திவாலில் இருந்தோம், தேர்தல் நடத்த கூட பணமில்லை.

உலகம் இரண்டாம் உலகப்போரின் தாக்கத்தில் இருந்ததால் பெரும் மந்த நிலை.

அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டோம். ஐந்தாண்டு திட்டம் என சொல்லி விவசாயம், பால், கடல் உணவு என உணவுக்கு தன்னிறைவு அடைந்தோம் அதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி

கல்விசாலைகள் கட்டி, அதற்காக பெரும் திட்டம் தீட்டி கல்வியில் உச்சம் பெற்றோம்.இன்று உலகநாடுகள் ஐ.டி உட்பட பல தொழில்களில் இந்தியாவினை மதிக்கின்றது என்றால் அந்த கல்விதான் அடிப்படை, அதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சி

அந்த நேருவினையும் காமராஜரையும் மறக்க முடியுமா?

ஒரு துப்பாக்கி கூட செய்ய தெரியா தேசமாக இருந்தோம், கொஞம் கொஞ்சமாக சுதாரித்தோம். இன்று உலகின் ராணுவபலம் பொருந்திய நாடுகளின் முதல் 5 இடங்களில் இருக்கின்றோம்

இதில் இந்திராவினை மறக்க முடியுமா? அவர்தான் அந்த காங்கிரஸ் தலைவிதான் இத்தேசத்தை பலமாக்கினார்

சைக்கிளில் ராக்கெட் பாகங்களை கொண்டுசென்றுதான் விண்வெளி ஆராய்ச்சிகளை தொடங்கினோம், நமக்கு கைகொடுப்பார் இல்லை. தத்தி திணறி தோல்வியுற்று படிபடியாக முன்னேறி இன்று கிரையோஜனிக் என்ஜின் வரை செய்து அசத்தியிருக்கின்றோம்,

செவ்வாய் கிரகம் வரை இந்தியரால் தொட முடிகின்றது.

சிறிய தேசங்கள் முன்னேறுவது விஷயம் அல்ல. இந்த மாபெரும் தேசம் இவ்வளவு பெரும் மக்களை வைத்துகொண்டு அதுவும் பல இன மொழி மக்களை வைத்துகொண்டு முன்னேறுவது வெகு சிரமம்

இன்னொரு நாட்டிற்கு இது சாத்தியமே இல்லை. அந்த அதிசயத்தை நாம் செய்துகாட்டியது அதற்கும் காரணம் காங்கிரஸ்

இவ்வுலகில் உள்ள நாடுகளை கவனியுங்கள், பல நாடுகளில் மக்கள் வாழவே முடியாது,பொறுப்பற்ற அரசாங்கமும் மனித தன்மை இல்லா போராட்டங்களும்,இன்னும் பற்பல கொடுமைகளும் பெரும் அச்சுறுத்தலை மக்களுக்கு கொடுக்கின்றது, உணவு இல்லை, கல்விசாலை இல்லை,ராணுவம் இல்லை, நீதிமன்றம் இல்லை,காவல் இல்லை, ஒன்றுமே இல்லை.

சிலநாடுகளில் ராணுவ ஆட்சி மட்டும் உண்டு, அது பெரும் ஆபத்து, சாப்பாட்டில் உப்பு போடுவதை கூட ராணுவம்தான் நிர்மானிக்கும்.

ஒரு வகையில் நாமெல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பொருளாதாரம் ஏறும் இறங்கும், ஆனால அமைதியாய் வாழ்கின்றோம், நிம்மதியாய் உறங்கி நம்பிக்கையாய் எழுகின்றோம், என்றாவது இங்கு வாழவே முடியாது என்று குடும்பத்தோடு அகதியாய் நாட்டை விட்டு கிளம்பியிருக்கின்றோமா?,

இதுதான் சுதந்திர இந்தியாவின் வெற்றி. ஆம் காங்கிரஸ் ஆண்ட சுதந்திர இந்தியாவின் வெற்றி

எந்த நாட்டில் சிக்கல் இல்லை? இவ்வுலகின் எல்லா நாட்டிலும் சிக்கலும், வறுமையும் உண்டு, இந்தியாவிலும் அப்படி சில சர்ச்சைகளும் பிரச்சினைகளும் இருக்கலாம். அதற்காக இத்தேசம் மகா மோசம் அதற்கு காரணம் என சொன்னால் அது ஏற்க கூடியதா?

ஆனானபட்ட ஐரோப்பிய தேசங்கள் அகதிகளை ஏற்க தயங்கியபொழுது நாமோ ஈழம், திபெத், வங்கம், மியன்மார் என எல்லா நாட்டு அகதிகளையும் அரவணைக்கின்றோம்

புத்தமும் காந்தியமும் அந்த மானிட நேயத்தை இங்கு கொடுத்திருக்கின்றன, எந்த நாட்டு மக்களையும் நம்மால் காக்க முடிகின்றது, நிச்சயம் பெருமைபட வேண்டும்

அது மோசம், இது மோசம், எல்லாமும் மோசம் எல்லாம் அசிங்கம் என குணா கமலஹாசன் போல மோச ராகம் பாடும் பத்திரிகைகளும், தொலைகாட்சிகளும் ஒன்றை மறந்து விடுகின்றன.

சில நாடுகளில் முகநூல் கூட கிடையாது, சீனாவில் தடைசெய்யபட்ட ஊடகங்கள் சீன பெருஞ்சுவரையும் தாண்டும், இன்னும் சில நாடுகள் செவ்வாய் கிரகத்தில் மனிதனின் நிலைபோல, உலகைவிட்டே துண்டிக்கப்ட்டிருப்பார்கள், ஆனால் இந்தியா அப்படி அல்ல‌

காந்தி முதல் மோடி வரை விளாச முடிகிறது, கார்ட்டூன்கள் போட்டு கலைஞர் வரை கலாய்க்கமுடிகிறது, பெரும் ஊழலை கூட அனாசயமாய் டீகடை பெஞ்சில் விவாதிக்க முடிகிறது, இது எத்தனை நாடுகளில் சாத்தியம்?

இந்த சுதந்திரத்தை கொடுத்ததே காங்கிரஸ்தான், நேரு அதனை செய்தார்

ஏராளமான நாடுகளில் இதெல்லாம் நினைத்தே பார்க்கமுடியாத விஷயங்கள். ஒரு வார்த்தை அரசினை விமர்சித்தாலே பிடுங்கி விடுவார்கள். காலத்திற்கும் சிறை அல்லது கல்லறை.

இத்தேசத்தில் எல்லா உரிமையும் மிக அதிகமாகவே கொடுக்கபட்டிருக்கின்றது.

இந்தியா கடந்த 71 ஆண்டுகளில் கடந்தபாதை மிக சிக்கலானது, எவ்வளவு இழப்புகள், எவ்வளவு நெருக்கடிகள், நிறைய துரோகங்கள்,முக்கியமாக பெட்ரோல் முழுதும் இறக்குமதி, அதனையும் தாண்டி வளர்ந்திருக்கின்றோம் அல்லவா? அதுதான் காங்கிரஸின் வெற்றி

1960களில் ஒரு நுட்பத்தினையும் தரமாட்டேன் அல்லது தரவிடமாட்டேன் என அடம்பிடித்த அமெரிக்கா, தனது செயற்கை கோள்களை ஏவுவதற்கு இந்திய உதவியை நாடுகின்றது அல்லவா? அது வெற்றி.

இந்தியாவின் உதவியின்றி தெற்கு மற்றும் கிழக்கு ஆசியாவில் அமைதி சாத்தியமில்லை என உலகம் கருதுகின்றதல்லவா அது வெற்றி. 1962 போல் அல்ல, நாம் அடித்தால் மறுநொடி இந்திய ஏவுகனைகள் ஷாங்காய் வரை தாக்கும் என சீனா யோசிக்கின்றது அல்லவா? அது வெற்றி.

ஐ.நா சபையில் நிரந்தர உறுப்பினராகலாம் எனும் அளவிற்கு தனது முத்திரையினை உலக அரங்கில் பதித்திருக்கின்றது அல்லவா? இது தான் வளர்ச்சி.

சொன்னால் சொல்லிகொண்டே செல்லலாம், அவ்வளவு குறிப்பிடதக்க முன்னேற்றம். அதனாலதான் 1998ல் நடந்த கிழக்காசிய பொருளாதார வீழ்ச்சி, 2008ல் நடந்த சிக்கல், சமீபத்திய கிரீஸ் திவால் மிரட்டல் இவை எல்லாம் இந்தியாவினை தாக்க முடியவில்லை.

இதை எல்லாம் செய்தது யார்? சாட்சாத் காங்கிரஸ் அரசு

.

இந்தியா ஒரு நாடு மட்டுமல்ல, ஒரு மாபெரும் அதிசயமும் கூட, பல இனங்கள், மதங்கள்,கலாச்சாரம் என கலந்து வாழும் அற்புதமான ஒரு அமைப்பு, இந்தியாவினை தவிர உலகில் எந்த நாட்டிற்கும் அது சாத்தியமானதே அல்ல.

அந்த சாத்தியத்தை செய்து காட்டியது காங்கிரஸ்

ஆக பொய்கள் மேல் பொய்களை சொல்லும் பாஜக சொல்வதில் உச்சமான பொய் 71 ஆண்டுகளாக காங்கிரஸ் இத்தேசத்திற்கு ஒன்றுமே செய்யவில்லை என்பது

இந்த தேசத்திற்கு ஒன்றுமே செய்யவிலை என காங்கிரசை சாடும் பாஜகவுக்கும், திமுக தமிழ்நாட்டுக்கு ஒன்றுமே செய்யவில்லை என கரித்துகொட்டும் இந்த நாம் தமிழர் கோஷ்டிக்கும் வித்தியாசம் ஏதுமில்லை