இந்தியா என்ன மாபெரும் செல்வந்த நாடாகவா இருக்கின்றது?
ஏதோ இந்தியாவின் மொத்த வருமானமும் தமிழகத்தில் இருந்துதான் செல்வது போல பேசி கொண்டிருக்கின்றார்கள்
இங்கிருக்கும் விமான நிலையம் முதல் , ரயில்கள் வரை யார் இயக்குகின்றார்கள்? தங்க நாற்கர சாலை எல்லாம் யார் திட்டம்?
மத்திய அரசிற்கு நாம் கொடுக்கும் பணம் ஒன்றும் அப்படியே கடலில் கொட்டபடுவதில்லை
அது பாதுகாப்பு, மருத்துவம், கல்வி என நமக்கே திரும்ப வருகின்றது, தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் இல்லை என சொல்லமுடியுமா?
ஒவ்வொருவரும் அதனால் பலன்பெறுகின்றோம், நேரடியாகவோ மறைமுகமாகவோ பலன் பெறுகின்றோம்
இதில் 155 பில்லியன் டாலர் தமிழகம் கொடுக்கின்றதாம், நம்மை ஏமாற்றுகின்றார்களாம்
இந்நாட்டின் பாதுகாப்பு என்ன? எங்கோ இருக்கும் எல்லையில் சீக்கிய சகோதரனும் மற்ற மாநில சகோதரனும் நமக்காக சாகின்றார்கள்
உளவுபணிகளில் எந்தநாட்டு சிறைகளில் எல்லாமோ நமது பாதுகாப்பிற்காக சாகின்றார்கள்
ஆழமாக யோசித்தால் இந்நாட்டில் இருப்பது பெரும் பாதுகாப்பு என்ற உண்மை விளங்கும், சிற்சில சிக்கல்கள் இருக்கலாம் அவை எல்லாம் தீர்க்க கூடியவைகளே
தமிழக வருமானம் ஏன் டெல்லிக்கு செல்ல வேண்டும் என கொடிபிடிப்பவர்கள், அதனால் நாம் பெற்றுகொண்டிருக்கும் அனுகூலங்களை, வசதிகளை, சலுகைகளை, பாதுகாப்பினை உணரமாட்டார்கள்.
நாளை தமிழகம் சுருங்கினால் என்னாகும்? எல்லை சென்னைக்கு அடுத்து இருக்கும்
இப்பக்கம் இந்தியா அப்பக்கம் இலங்கை என பாக்குவெட்டிக்குள் மாட்டி சாக வேண்டும்
155 பில்லியன் டாலரில் ராணுவம், வெளிநாடுகளில் தூதரகம்,, உள்நாட்டு பாதுகாப்பு என எத்தனை செலவுகளை சமாளிக்கமுடியும்?
ஒரு விமான நிலையம் கட்டமுடியுமா?
இன்று இந்தியாவாக இருப்பதால் பல பொருட்கள் பஞ்சாபிலிருந்து கோதுமையாக, இன்னொரு மாநிலத்தில் இருந்து பருப்பாக இன்னும் என்னவெல்லாமோக வருகின்றது
நாளை தனிநாடு என்றால் எல்லாம் இறக்குமதி, அதற்கு எவ்வளவு செலவு, விலைவாசி எங்கு செல்லும் தெரியுமா?
கோதுமை இன்றி பரோட்டா கடை எப்படி இயங்கும்? பெரும் புரட்சி அதனாலே வெடிக்காதா?
தனிநாடு என்பது வன்னிகாட்டுக்குள் கண்ட பிரபாகரனின் ஈழமா?
நாடு அடைவது எனபது சாமான்யமா?
அதுவும் தும்பிகள் சும்மா இருக்குமா?
காவேரி மீட்க கன்னடனுடன் போர், மலையாளத்தை மீட்க போர் , ஈழத்தை மீட்க போர் என பல புற நானூற்று காவியம், புலிக்காவியம் எல்லாம் படைக்க வேண்டும்
குட்டிநாடு என்றால் ஆளாளுக்கு மிரட்டுவார்கள் அடிப்பார்கள், அணு ஆயுதம் முதல் செயற்கைகோள் வரை செய்ய விடுவார்களா? குதறிவிடுவார்கள்
இப்படி கிளம்பினால் ஆப்கன், சிரியா, பர்மா வரிசையில் தமிழகம் சேருமே ஒழிய நல்ல வரிசையில் நிச்சயம் வராது
இன்றைய சூழலில் உலகில் ஒரு புது நாடு உதிக்கின்றது என்றால் அதெல்லாம் வல்லரசுகளின் ஆட்டத்தில் நடக்கும் விஷயம்
ஒன்று ஆதரிக்கும், ஒன்று எதிர்க்கும் விளைவு அந்த பகுதி ரத்தகாடாகும், இங்கு எல்லோரும் செத்திருப்பர் வெற்றி பெற்றோரும் தோல்வியுற்றோரும் எங்கோ அமர்ந்திருப்பர்
ஈழம், சிரியா, ஆப்கன், பாலஸ்தீன் என எங்கெல்லாமோ பார்க்கின்றோம், போராடும் மக்களுக்கு நியாயம் மட்டும் கிடைக்காது மாறாக ஆயுதம் முதல் ராக்கெட்டுகள் வரை கிடைக்கும்
இப்படி ரகசியமாக ஆயுதம் மட்டும் கிடைக்கின்றது, நியாயம் மட்டும் ஏன் கிடைக்காது என்றால் அதுதான் உலக அரசியல்
இவர்கள் தனிநாடு கோஷம் போடலாம், உடனே பயங்கரமான ஆயுதங்களும் நொடியில் கிடைக்கலாம்
ஆனால் விளைவு முள்ளிவாய்க்காலை விட , சிரியாவினை விட மகா மோசமாக இருக்கும்
இந்த பதர்களை தொடக்கத்திலே கிள்ளிவிடுவது நல்லது
அப்படி 8ம் அதிசயமாக தனி தமிழ்நாடு உருவாகினால் என்னாகும்?
இந்த 155 பில்லியனில் 30 பில்லியன் தூத்துகுடி கொடுக்கின்றது என்றொரு கோஷ்டியும், 50 பில்லியன் கோவை பகுதி என்றொரு கோஷ்டியும், 30 பில்லியன் சென்னை என்றொரு கோஷ்டியும் கிளம்பும்
பின் அந்த தமிழ்நாடும் நிச்சயம் உடையும், நடக்கும்
ஏம்பா தும்பிகளா அந்த 155 பில்லியன் என்றால் எத்தனை கோடி என தெரியுமா?
கலைஞரை சாட 1 லட்சத்து 75 ஆயிரம் கோடீஈஈஈஈஈ என வாய்பிளந்து வருவார்களாம், இப்பொழுது 155 பில்லியன் டாலர் என்பார்களாம்
முதலில் 155 கோடி டாலர் என்றால் எவ்வளவு இந்தியபணம் என படித்துவிட்டு வாருங்கள், அதில் மத்திய அரசின் பிடித்தம் போக ஏன் 4 லட்சம் கோடி கடனில் தமிழகம் இருக்கின்றது என யோசியுங்கள்
இன்று 155 பில்லியன் தமிழக பணம் என குதிப்போர் , ஒருவேளை நாடு அடைந்தால் எக்குரலை எதிர்கொள்வர்?
கோவை பகுதி பணம் 30 பில்லியன், தூத்துகுடி கொடுப்பது 30 பில்லியன், சென்னை கொடுப்பது 50 பில்லியன் என கிளம்பமாட்டார்களா?
பின் என்னாகும் அந்த தமிழகமும் உடையும், நிச்சயம் நடக்கும். பிரிவினை என்பது தொடங்கிவிட்டால் அது சங்கிலி தொடரே
சரி ஒருவேளை தனிநாடு அடைந்தால் யார் ஆள்வார்கள்?
பழனிச்சாமியா? முக ஸ்டாலினா? அன்புமணியா?
இல்லை 3 நாடாக பிரித்து ஆளுக்கொன்றா?
இல்லை உலகெல்லாம் வென்று “ஆளப்போறான் தமிழன்” என ஆளபோகும் அங்கிள் சைமனா?
“நாம் தமிழர்” ராணுவ ஆட்சியா?
உங்கள் கனவு தமிழகத்தின் அதிபர் யார்? அதை முதலில் சொல்லுங்கள், இந்த 155 பில்லியன் டாலரை நிர்வகித்து தமிழ்நாட்டை வல்லராசக்கபோகும் அதிபர் யார்?
இந்த தும்பிகளிடம் பிடித்ததே அவர்களின் அட்டகாச காமெடி, சீரியசாக காமெடி செய்வதில் அவர்களை மிஞ்ச முடியாது
இப்பொழுது கூட பாருங்கள், தமிழகம் பிரிந்தால் இந்தியா ஏழை நாடாகுமாம்
இப்பொழுது மட்டும் என்ன? பெரும் பணக்கார நாடாகவா இருக்கின்றது?