இந்திய சுதந்திர வரலாறு : 06

இந்திய சுதந்திர வரலாறு : 06

முகமது கோரியின் அடிமையான குத்புதீன் ஐபெக் தொடங்கி வைத்த சுல்தானிய ஆட்சி அவனுக்கு பின் தொடர்ந்தது எனினும் படுகொலைகளும் குத்துவெட்டும் இன்னும் பலவுமாக கொஞ்சகாலம் அது நீடித்தது

சிந்துமுதல் வங்கம்வரை உள்ள பக்திகள் உலகின் வளமான பகுதிகளில் ஒன்று, அந்த பெரும் நதிகளும் வண்டல் மண்ணும் அப்படியான விளைச்சலை அள்ளி தரும் இன்னும் கடலும் பல வகை வருமானமும் அங்கு செல்வத்தை கொட்டும், அங்கு கால்வைத்து நிலைத்துவிட்டால் ஒரு அரசு எளிதாக வலுக்கும்

ஆற்றங்கரை மரம் போல் அங்கு கால் ஊன்றும் அரசு செழிக்கும், அப்படி அந்த அடிமை வம்ச அரசும் செழித்தது

இந்துக்களும் தொடர்ந்து எதிர்ப்பை தெரிவித்தே வந்தார்கள், கிட்டதட்ட 150 ஆண்டுகள் இந்த வம்ச ஆட்சி நீடித்தது , பால்பன் பெண் அரசி ரசியா பேகமெல்லாம் இக்காலத்தில் ஆண்டவர்களே

இவர்களின் காலம் 1290களில் முடியும் பொழுது இந்துக்கள் சிலிர்த்தெழுந்தார்கள், அந்நேரமே அவர்களை சுத்தமாக முடித்து இந்துஸ்தானை விடுவிக்க ஆங்காங்கே கிளம்பினார்கள்

ஆனால் அப்பொழுது உலகை ஒரு பெரும் சூறாவளி தாக்க தொடங்கிற்று அதன் பெயர் செங்கிஸ்கான்

அந்த மங்கோலிய வீரன் தலமையில் எழுந்த அந்த இனம் பெரும் அதிசயத்தை செய்தது சீனாவினை முழுக்க விழுங்கிய செங்கிஸ்கான் மேற்கு நோக்கிபாய்ந்தான் ஆப்கன், அரேபியா, எகிப்து என அவன் ஆட்சி நீண்டது

அப்படிபட்ட செங்கிஸ்கான் இந்தியாவுக்குள் பாய்ந்திருந்தால் மாபெரும் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம், இந்தியா மீளமுடியாதபடி பெரும் அழிவினை அவன் செய்திருப்பான் அவனுக்கு பின் இந்தியா மங்கோலிய தொடர்ச்சியாக கருதபட்டிருக்கும்

இன்றும் கம்யூனிச சீனா இந்தியா தங்களின் ஒருபகுதி என செங்கிஸ்கான் கால ஆதாரத்தை தூக்கி வந்திருக்கும்

செங்கிஸ்கானை உள்ளே விடாமல் இருக்க இந்துக்களுக்கும் ஆப்கானிய ஆட்சியாளர்களுக்கும் ஒரு புரிந்துணர்வு ஏற்பட்டது, அப்படி இல்லாமல் மோதிகொண்டிருந்தால் செங்கிஸ்கான் இந்தியாவினை என்ன செய்து தொலைத்திருப்பானோ தெரியாது

இந்தியாவில் ஒரு வலுவான அரசியல் நிலவுவதாக காட்டவேண்டிய அவசியம் எல்லோருக்கும் வந்ததால் செங்கிஸ்கான் இந்தியாவினை விட்டுவிட்டு ரஷ்யா மேல் பாய்ந்தான், போலந்துவரை அவன் பிடித்திருந்தான்

இன்றுவரை ஐரோப்பாவில் புகுந்து அடித்த ஒரே ஒரு ஆசியா மன்னன் அவனேதான்

இப்படியாக செங்கிஸ்கான் மேல் பெரும் அச்சம் நிலவிய நேரம் அலாவுதீன் கில்ஜி மிக சரியாக டெல்லி ஆட்சியினை 13ம் நூற்றாண்டில் கைபற்றினான் அத்தோடு அல்லாமல் இந்துஸ்தானம் முழுக்க தன் ஆட்சியினை விரிவுபடுத்த நினைத்தான்

அப்படித்தான் மாலிக்காபூர் எனும் அடிமையினை தக்காணம் மெல் ஏவினான்

தக்காணம் கண்ட முதல் அந்நியர் அதாவது ஆப்கானியர் படையெடுப்பு அதுதான், அதுவரை தக்காணத்தில் சேர, சோழ, பாண்டியர், பல்லவர், சாளுக்கியர் என அவர்களுக்குள் அடிப்பார்களே தவிர கொடுமையான அந்நிய தாக்குதல் இல்லை

அதுவும் மதம், கலாச்சார என முற்றிலும் வேறுபட்ட இனத்தின் தாக்குதல் அப்பொழுதுவரை இல்லை

அப்பொழுது 12ம் நூற்றாண்டில் இருந்த பலம் தெற்கே இல்லை, மராட்டிய பக்கம் யாதவர்கள் போஜராஜன் வழிவந்தவர்கள் அதற்கு முன்புவரை மிக பலமாக இருந்தார்கள்

பின்னாளில் சிவாஜி நடத்திய யுத்தங்களின் பிரதானமான கோட்டைகளெல்லாம் அவர்கள் கட்டியதே

தமிழகத்தில் அப்பொழுது ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் எனும் பெரும் பாண்டிய மன்னனின் வாரிசுகளுக்குள் சண்டை இருந்தது, அதுவும் குலோத்துங்க பாண்டியனின் வாரிசுகள் வீரபாண்டியனும், சுந்தரபாண்டியனும் நேரடியாக மோதிகொண்டிருந்தார்கள்

தக்காணம் வந்த மாலிக்காபூர் பெரும் கொள்ளை நிகழ்த்தினான் , அவனிடம் தன் குடும்ப சிக்கலை எடுத்து சென்றான் வீரபாண்டியன்

அதுவரை தக்காணத்தில் ஒரு மன்னர் குடும்பத்தில் இன்னொரு மன்னர் குடும்பம் தலையிட்டு பஞ்சாயத்து செய்வது போருக்கு வருவது மரபு, ஆனால் மாலிக்காபூரின் கொடூரம் பற்றி வீரபாண்டியனுக்கு தெரியாது, ஏதோ அடுத்தநாட்டு மன்னன் என்பது போல் கேட்டுவிட்டான்

அப்படி மதுரைக்குள் புகுந்த மாலிக்காபூர் திருச்சி திருவரங்க ஆலயத்தை துவம்சம் செய்தான், அப்பொழுதுதான் அந்த அழகர் சிலை அவனால் கைபற்றபட்டது, தொடர்ந்து தஞ்சாவூருக்கு சென்ற அவன் ராஜராஜசோழன் பெரியகோவில் கோபுரத்தை மூடியிருந்ததை பொன்னால் மூடியிருந்ததை கண்டான்

அதுவரை அப்படி ஒரு தங்க தகடுகளால் தஞ்சை ஆலயம் ஜொலித்தது உண்டு, கயிலாய காட்சியினை அங்கு காண ஏற்பாடு செய்திருந்தான் ராஜராஜன்

பின்னாளில் பாண்டியர் ஆட்சி வந்தபொழுதும் அந்த தங்க தகடை தொட்டுபார்க்கவில்லை காரணம் எல்லோரும் இந்துக்கள் சிவனடியார் குடும்பங்கள்

அப்பொழுது தமிழகம் ஆந்திராவின் சில பக்கம் என எல்லாமே பாண்டியர் ஆட்சியில் இருந்தது, ஜடாவர்மன் அந்த ஏற்பாட்டை செய்தான், அவனுக்கு பின்னரான குழப்பமான 13ம் நூற்றாண்டில்தான் மாலிக்காபூர் வந்து சொல்லணா கொடுமைகளை செய்தான்

மதுரை ஆலயமும் அவனால் சூறையாடபட்டது

அந்த ஆப்கானிய கும்பலுக்கு தங்கம் ஒன்றே குறி, இதனால் கோவில் சிலைகளை உடைத்தும் ஆலயங்களை சிதைத்தும் தங்கம் தேடினார்கள், மாலிக்காபூரின் கொள்ளையும் கோவில் உடைப்பும் கொடுமையாய் இருந்தது

அந்நேரம் மதுரை பாண்டியர்கள் ஆங்காங்கே கூடி விக்கிரமாதித்தன் தலமையில் எதிர்த்து அடித்தார்கள், மாலிக்காபூர் கிடைத்தது வரை போதும் என எடுத்து கொண்டு டெல்லிக்கு ஓடினான்

மாலிக்காபூர் தக்காணத்தில் அந்நிய ஆட்சியினை நிறுவவந்தான் என்றாலும் அவனால் ஆட்சி அமைக்க முடியவில்லை கொள்ளை பொருட்களுடன் ஓடினான்

அப்படி அவன் கொண்டுசென்ற திருவரங்கன் சிலைதான் கில்ஜியின் மகள் சுராதானியின் பொம்மையானது, சுராதானி அந்த அரங்கன் பொம்மையின் புன்னகைக்கு அடிமையானாள், அரங்கன் அவளை ஆட்கொண்டான்

ஏகபட்ட தங்க விக்ரகங்களை உருக்கிய கில்ஜி அரண்மனை இந்த அரங்கனை மட்டும் சுராதானி பொம்மையாக விட்டு வைத்தது

பின்னர் திருவரங்கத்தில் இருந்து இந்துக்கள் காசிக்கு சென்ற வழியில் டெல்லியில் அரங்கன் இருப்பதை அறிந்து ஆடல் பாடல் கோஷ்டிகளாக அரண்மனையில் புகுந்து எல்லோரும் அசந்தநேரம் அரங்கன் சிலையினை எடுத்து திருவரங்கம் வந்தார்கள்

அரங்கனை காணாத சுராதானி பைத்தியமாகி 20 வயதுக்குள்ளே இறந்தும் விட்டாள்

அவளை ஒரு நாச்சியாராக்கி, துலுக்க நாச்சியார் எனும் பட்டத்துடன் திருவரங்க ஆலயத்தில் அவளுக்கு சன்னதியும் எழுப்பினார்கள் இந்துக்கள், அது இன்றளவும் உண்டு. அவள் அந்த அரங்கன் மேல் கொண்ட காதல்தான் அச்சிலையினை காத்தது

மாலிக்காபூர் மதுரை வரை வந்தது பொதுயுகம் 1300ஐ அன்மித்த காலங்கள் அல்லது 13ம் நூற்றாண்டு தொடர்ச்சி

வடக்கே வலுத்த ஆப்கானிய அச்சுறுத்தல் தெற்கிலும் விளைவுகளை காட்டிற்று

செங்கிஸ்கானுக்கு அஞ்சி கில்ஜிக்கு இந்துக்கள் இடம் கொடுக்க அவனோ கடுமையாக ஆடினான், கோவில் இடிப்பும் ஒழிப்பும் தங்கவேட்டைக்காக நடந்தது இந்துக்களுக்கும் அவனுக்கும் பெரும் மோதல் எழுந்தது

இந்த மோதலில் கியானித் பின் துக்ளக் என்பவன் கில்ஜி வம்சத்தை அகற்றி ஆட்சிக்கு வந்தான் , அவனின் மகன் உலுக்கான் என்பவனை தெற்கு நோக்கி அனுப்பினான்

பெரிய துக்ளக் காலத்தில் இந்துக்கள் ஒரு தந்திரம் செய்தனர் ஒரு குஜராத்திய இந்துவினை இஸ்லாமியன் என மாற்றி அவன் பெயரை குரூஸ்கான் என சொல்லி ஆப்கானியரிடம் ஊடுருவ வைத்து டெல்லி ஆட்சியினை கைபற்றினர்

அவன் டெல்லியில் இஸ்லாமியனாக இருந்து இந்து ஆட்சியினை கொடுத்து கொண்டிருந்தான், இந்து ஆலயமெல்லாம் புத்தொளி பெற்றது, அந்நியர் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்தனர் எனினும் சில ஆண்டுகளிலே அவன் இரு இந்து என புரிந்து கொண்ட ஆப்கானிய கூட்டம் அவனை கொன்றது

இக்காலத்தில் தெற்கே வலுவாக காலூன்றியிருந்தான் உலுக்கான், அவன் 1335 வாக்கில் திருவரங்கம் மதுரை என பெரும் ஆலய கொள்ளைகளுடன் இங்கு ஆட்சியினை நிறுவினான்

மதுரையில் முதல் இஸ்லாமிய சுல்தானியம் துக்ளக்கால் நிறுவபட்டது,

இப்படி இந்தியா முழுக்க அவர்களின் கொடி உயரபறந்தது, முகமது பின் துக்ளக் இந்தியா முழுமையும் ஆண்ட முதல் அந்நிய மன்னனாக அறியபட்டான், அவன் ஆப்கானிய வம்சம் அல்ல பெர்ஷியா எனும் ஈரானிய வம்சம்

துக்ளக் ஆட்சியில் அவன் பகுதியில் இன்றைய மலையாளம் மட்டும் இல்லை , கேரள பகுதியின் மலை அமைப்பும் யானைபடையும் இன்னும் பல சக்திகளும் அவர்களுக்கு தனி பாதுகாப்பு கொடுத்தன‌

உலுக்கான் எனும் துக்ளக் திருவரங்கம் மதுரை ஆலயங்களை கொள்ளையடித்த விதம் கொடுமையானது, அப்பொழுதுதான் அரங்கன் சிலை கேரளா வழியாக பாதுகாப்பாக கொண்டு செல்லபட்டது, கேரள ஆலயங்களில் தென்னக கோவில் தங்கங்கள் குவிந்ததும் அப்பொழுதுதான்

பெரும் அச்சுறுத்தலும் கொடுமைகளும் செய்தான் துக்ளக்

இக்காலத்தில்தான் மதுரை ஆலயம் பாழ்பட்டது, 40 ஆண்டுகளாக மீனாட்சி சுவரோடு சுவராக மறைக்கபட்டது இக்காலத்தில்தான், திருவரங்க ஆலய மூலவர் ஒளித்துவைக்கபட்டு பூஜைகள் நின்றதும் இக்காலத்தில்தான்

மதுரை ஆலயத்தை முழுக்க இடித்து தங்கம் தேடும் திட்டம் துக்ளக்கு இருந்தது ஆனால் ஒரு கல்யானைக்கு அவன் விளையாட்டாய் கரும்பை கொடுத்து விளையாட அது திடீரென அதனை வாங்கி தின்ற அதிர்ச்சியில் அவன் அந்த முயற்சியினை கைவிட்டான்

வரலாறு அதை தெளிவாக சொல்கின்றது

இந்த துக்ளக்தான் டெல்லி சரியான தலைநகராக இருக்கமுடியாது என தேவகிரிக்கு தலைநகரை மாற்றினான், அது சரியான திட்டம்தான் ஆனால் குழப்பமானதால் டெல்லிக்கே ஓடினான்

அவன் டெல்லிக்கு ஓடியதில் தெற்கே பாமினி என்பவன் அவர்களில் இருந்து பிரிந்து தனி சுல்தானியத்தை பாமினி சுல்தானியம் என ஏற்படுத்தினான் தக்காணம் முழுக்க அவன் கட்டுபாட்டில் இருந்தது , மலையாளம் மட்டும் இல்லை

இந்த பாமினி சுல்தான்கள் தென்னகத்தில் வலுத்தபொழுதுதான் 13ம் நூற்றாண்டின் மத்தியில் கன்னடபக்கம் ஒரு முனிவருக்கு காளி தோன்றினாள், எப்பொழுதும் இந்தியாவிற்கு ஆபத்தென்றால் முன்னால் வரும் காளி அந்த பக்தன் முன்னாலும் வந்தாள்

என்ன வேண்டும் என அவள் கேட்க “இந்த மலை தங்கமாகட்டும்” என அவன் சொல்லை அப்படியே அது தங்கமாயிற்று

ஆனால் சுதாரித்த முனிவன் “நான் எல்லாம் துறந்தவனாயிற்றே இந்த தங்கத்துக்கு ஆசைபட்டது தவறு அல்லவா?” என வருந்தி அந்த தங்கத்தையெலாம் வித்யாரண்யர் எனும் ஞானியிடம் கொடுத்துவிட்டான், அறபணிகள் செய்ய சொன்னான்

வித்யாரண்யர் சாணக்கியன் போல் பெரும் ஞானி, அவர் அந்நியர் செய்த கொடுமைகளை எல்லாம் கண்டு இந்துமதம் காக்க என்ன செய்யலாம் என யோசித்துகொண்டிருந்தவர்

அவர் ஒரு சகோதர்களை கண்டறிந்தார் ஹரிகரன் புக்கன் என அவர்களுக்கு பெயர், இருவரையும் வீரர்களாக்கினார் அந்த தங்கத்தை கொண்டு பெரும் படையும் உருவாக்கினார்

ஒருஇந்து படை இப்படி உருவானது இது விஜயநகரம் பக்கம் உருவான இந்து அரசு

அது “விஜயநகர அரசு” என இந்துமதம் காக்க எழும்பிற்று, வராகம் அதன் கொடியாயிற்று

பாமினி சுல்தான்களை எதிர்த்து பெரும் போர் புரிந்த அந்த அரசு பெரும்பான்மை தென்னக பகுதிகளை அவர்களிடம் இருந்து மீட்டு இந்து ஆலயங்களை காத்தது

அப்படித்தான் திருச்சி மதுரை தஞ்சையெல்லாம் அந்நியரிடம் இருந்து 13ம் நூற்றாண்டின் இறுதியில் மீண்டது

இந்தியாவில் அந்நியருக்கு எதிராக எழுந்த முதல் பெரும் அரசு விஜயநகர இந்து பேரரசுதான், அவர்களால் தென்னகத்தில் அந்நியர் ஒழிக்கபட்டு இந்துமதம் துளிர்த்தது

மதுரையில் சிக்கந்தர் ஷாவினை வீழ்த்தி கம்பண்ண உடையார் இந்து ஆட்சியினை நிறுவினார், இந்த விஜயநகர சாம்ராஜ்யம் அடுத்த 200 ஆண்டுக்கு நிலைத்தது

ஆனால் அவர்களுக்கு வடக்கே பாமினிக்கள் வலுவாக இருந்தார்கள் அவர்களுக்கு வடக்கே டெல்லியில் துக்ளக் கும்பல் ஆட்சியில் இருந்தது

1390களில் ஒரு பெரும் புயல் டெல்லியினை நோக்கி வந்தது, அவனின் வரவுதான் இந்துக்களுக்கு ஒரு நம்பிக்கையினை கொடுத்தது

அதாவது வலுவாக இருக்கும் ராஜ்ஜியத்தை அகற்றுவது கடினமானது,அந்த ராஜ்ஜியம் இன்னொரு எதிரியுடன் மோதும்பொழுது அதை அகற்ற முயற்சிப்பது எளிதானது

அதாவது ஆப்கானியர் அவர்களுக்குள் மோதும்பொழுது இந்துக்களும் உள்ளே புகுந்து தங்கள் நாட்டை விடுவிக்க முயற்சிப்பார்கள் ஒருவகை முக்கோண போர் இது

அவ்வகையில் உஸ்பெக்கில் இருந்து அவன் வந்தபொழுது இந்துக்கள் அதை செய்துபார்க்க முயன்றனர்

அவன் பெயர் தைமூர், செங்கிஸ்கானின் வம்சாவழியாக உஸ்பெக்கிஸ்தானில் பெரும் அரசை நிறுவியிருந்தான், டெல்லிக்கு பொழுது போக்காக வந்து கப்பமும் பணமும் அள்ளி செல்ல வந்திருந்தான்

வந்தவன் சில சர்ச்சைகளால் கோபமாகி பெரும் அழிவுகளை ஏற்படுத்தி டெல்லியினை கிட்டதட்ட தரைமட்டமாக்கி துக்ளக் ஆட்சியினை தீர்த்துகட்டியிருந்தான்

அடுத்து இந்துக்கள் ஆளமுயலாம் எனும் நிலை வந்தபொழுது தைமூர் விடவில்லை அவன் சாஹித் எனும் வம்சத்தை தன் அடியாட்களாக நிறுவினான்

இந்த சஹித் வம்சம் 1400களில் இருந்து 1451 வரை டெல்லியினை ஆண்டது

இக்காலகட்டத்தில் வடக்கே சாஹித்திய அரசு நடுவில் பாமினி தென்னகத்தில் விஜயநகர பேரரசு என மூன்று அரசுகளாய் இருந்தது, இந்துக்கள் ஆப்கானியரை விரட்டி வடக்கே ஆட்சி நிறுவினால் நடுவில் இருக்கும் பாமினி சுல்தான்களை இருபக்கம் இருந்தும் அடித்து நொறுக்கும் காட்சி நெருங்கியது

அடுத்தடுத்தடுத்த காலங்களில் சாஹித்கள் ஆட்சி முடிந்து லோடி என்பவன் ஆட்சியினை கைபற்றினான், அந்நேரம் செங்கிஸ்கான் தைமூர் என பெரும் மிரட்டல்கள் முடிந்திருந்ததால் இந்துக்கள் மெல்ல தலையெடுக்க ஆரம்பித்தனர்

வருடம் 1500ஐ கடந்திருந்தது, ராஜபுத்திர மன்னர்கள் சங்கரசிம்மன் தலமையில் பெரும் சக்தியாக எழும்பினர், லோடி வம்சத்துக்கும் அவர்களுக்கும் இடையில் தீரா போர்கள் தொடங்கின‌

லோடியினை அவர்கள் முடித்துகட்டும் நேரம்தான் உள்ளே புகுந்து குழப்ப திட்டமிட்டான் தைமூரின் வம்சாவழியில் வந்த சஹிர் உத்தீன் முகமட்

அப்படி சொன்னால் தெரியாது என்பதால் இப்படி சொல்லலாம் அவன் பெயர்தான் பாபர்

(தொடரும்..)