இந்த கணக்கு கோபாலபுரத்தில் ஓடிகொண்டிருக்கும்…

தமிழகத்தில் சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்து ஒரு பழக்கம் உண்டு, அதாவது என்ன சர்ச்சை என்றாலும் திமுகவினையும் கலைஞரையும் கை காட்டிவிட்டு செல்லலாம் என்பது

சீனப்போர், பாகிஸ்தான் போரை தவிர எல்லா பிரச்சினைகளிலும் திமுகவினையும் கலைஞரையும் இழுத்துபோட்டு சாத்துவார்கள்

அப்படித்தான் இப்பொழுதும் சசிகலா அதிமுகவினை கைபற்றுவதில் திமுகவிற்கு விருப்பமில்லை, அதுதான் பலரை தூண்டிவிட்டுகொண்டிருக்கின்றது என சிலர் கிளம்பியிருக்கின்றார்கள்

கொஞ்சம் கவனமாக பார்த்தால் சில விஷயங்கள் புரியும்

அதாவது கலைஞர் ஊழல்வாதி அவரை எதிர்த்து அரசியல் செய்யவந்த எம்ஜிஆர் மகா உத்தமர், அதிமுக இல்லாவிட்டால் கலைஞர் குடும்பம் தமிழகத்தை அல்ல மொத்த இந்தியாவினையும் விழுங்கிவிடும் என்ற கோணத்தில் அமைக்கபட்டது தமிழக அரசியல்

எம்ஜிஆர் மீதும் பல ஊழல் சர்ச்சைகள் வந்தன, 11 ஆண்டுகளும் அவர் தொடர்ந்து முதல்வராக இருந்து எதிர்கட்சிக்கு வாய்ப்பு இன்றி போனதும், ரே கமிஷன் அறிக்கை வருமுன் அவர் மரணமடைந்ததும் அவரின் கறைபட்டாத தன்மையினை காத்தது

ஜெயாவும் அப்படி ஆட்சிக்கு வந்தார், ஆனால் ஜெயா மீதான பெரும் கறை அல்லது குறை சசிகலா குடும்பத்தார் கொள்ளைகளை, ஆட்சியில் அவர் குடும்பத்தார் செய்யும் அட்டகாசங்களை காணாமல் விட்டார் என்பது.

வளர்ப்பு மகன் திருமணம் முதல் ஜாஸ் சினிமா சர்ச்சை வரை சசிகலா இன்றி இல்லை

ஜெயா மீதான எல்லா வழக்குகளிலும் சசியின் பெயரும் சேர்ந்தே வந்தது

இப்போது ஜெயா இல்லை, திமுக எப்படி யோசிக்கும்?

தன்னை ஊழல்வாதி என சொல்லியே அரசியல் செய்யும் அதிமுகவிற்கு ஊழல் முத்திரை இல்லா ஒரு தலமை கிடைத்தால் அது தனக்கு ஆபத்து என தெரியாதா?

சசிகலா இல்லா அதிமுக, மக்கள் மன்றத்தில் சென்று “பெருமக்களே பாரீர், புரட்சிதலைவன் தலைவியின் கனவான ஊழலில்லா அரசமைக்க வந்துள்ளோம், நாங்கள் இல்லாவிட்டால் அந்த பயங்கர ஊழல்வாதி கலைஞர் தமிழகத்தை அழித்துவிடுவார் விடலாமா?

முந்தைய தவறான சசிகலா இன்று கட்சியில் இல்லை, ஆதரவு தாரீர்” என நின்றால் என்னாகும்?

கலைஞர் ஆதரவு என்பதை விட, கலைஞர் எதிர்ப்பு தமிழகத்தில் என்றுமே அதிகம், அதற்கு பல காரணங்கள்.

ஆக ஊழல்வாதி என முத்திரை குத்தபட்ட திமுகவிற்கு, தன்னை எதிர்க்கும் பிரதான கட்சியான அதிமுகவில் ஒரு குற்றசாட்டும் சர்ச்சையும் உள்ள தலமையே விருப்பமானது

சசிகலா கட்சியின் உச்சத்திற்கு வந்தால் வளர்ப்பு மகன் திருமணம், வீடியோ, பெங்களூர் காட்சி, ஆச்சார்யா, ஜெ அஞ்சலி நிகழ்வு என போட்டு தாக்க திமுகவிற்கு பெரும் வாய்ப்பு

இது சாதரண அரசியல் கணக்கு,

அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட, கொட்டையினையும் விடாமல் பருப்பெடுத்து பாயாசம் வைத்த கட்சி திமுக‌

அது ஏன் இப்பொழுது அமைதியாக இருக்கிறது என்றால் இப்படித்தான்.

சசிகலா பதவிக்கு வந்தால் அதற்கு பல வகைகளில் லாபம்.

ஒன்று அவரை காட்டி அட்டகாசமாக அரசியல் செய்யலாம்

இரண்டாவது அக்கட்சியில் இருந்து யாரேனும் வெளியேறினால் உடனே அழைத்து அறையில் பூட்டலாம்,

விஜயகாந்த், வைகோ அளவிற்கு அதிமுகவினை ஆக்கிவிடலாம்

இந்த கணக்கு கோபாலபுரத்தில் ஓடிகொண்டிருக்கும்.

எனவே சசிகலாவினை எதிர்க்க திமுக தூண்டிவிட்டுகொண்டிருக்கின்றது என்பது அபத்தமானது, பெரும் வித்தகரான கலைஞர் இதனை 1 மாதம் முன்பே கணித்திருப்பார்

இப்போது ஆலோசனையா செய்வார்? ஹாயாக மருதநாட்டு இளவரசியோ, மலைக்கள்ளனோ, காஞ்சி தலைவனோ பார்த்துகொண்டிருப்பார்.

அதிமுகவில் கேட்கும் முணுமுணுப்பு 1987 முதல் உள் அடக்கி வைக்கபட்டிருந்த அழுத்தம், 30 வருட மவுனம், சொல்ல முடியாத கோபமும், ஆவேசமும்

அது இப்பொழுது புகைய ஆரம்பித்திருக்கின்றது, இன்னும் என்னவோ நடக்கலாம்

மொத்தத்தில் சுருக்கமாக இப்படி முடிக்கலாம்

சசிகலா தலைவராக வந்தாலும் அல்லது அப்படி அன்றி அதிமுக இரண்டாக உடைந்தாலும், பல கோஷ்டிகள் வெளியேறினாலும், எது நடந்தாலும் திமுகவிற்கு பெரும் லாபமே

அதனால்தான் அது சத்தமே இல்லாமல் கவனித்துகொண்டிருக்கின்றது

ஆக‌ சசிகலா எதிர்ப்பினை
திமுக தூண்டுகின்றது என்பதெல்லாம் சசிகலா
அதிமுகவினர் கிளப்பிவிடும் புரளியே அன்றி வேறல்ல.