இந்த தேர்வு நிச்சயம் அநியாயம்

எங்கு பார்த்தாலும் பள்ளிகள், பத்து பெண்களில் 7 பேர் ஆசிரியர் என இருக்கும் தமிழகம் இது

அதில் ஆசிரியருக்கான தேர்வு நடந்திருக்கின்றது, தேர்வானோர் சதவீதம் வெறும் 1%

இது பலத்த அதிர்ச்சியினை கொடுத்திருக்கின்றது.

உண்மையில் இது வடிகட்டலுக்கான தேர்வு சந்தேகமே இல்லை. முறையான படிப்பு இருந்தால் ஆசிரியராகிவிடலாம்,

இந்த தேர்வு நிச்சயம் அநியாயம்

ஒன்று இந்த தேர்வினை வைத்துவிட்டு அதன் பின் ஆசிரியருக்கான பயிற்சிக்கு அனுப்பவேண்டும், இல்லாவிட்டால் படித்து முடித்தவுடன் வேலை கொடுக்க வேண்டும்

ஆனால் இரண்டும் இல்லாமல் செய்யபடும் இத்தேர்வு உண்மையில் அநீதி

ஏன் இந்நிலை வந்தது?

இந்த அருமை தமிழகத்தில் பிச்சைகாரனும் கல்லூரி திறக்கலாம், கள்ளசாராய கோஷ்டியும் கல்விசாலை பி.எட் கல்லூரி திறக்கலாம் எனும் அவல நிலை உருவாக்கபட்டது

அதாவது திராவிட கட்சிகளின் பினாமியாக ஊருக்கு ஒன்று, தெருவுக்கு ஒன்று திறக்கபட்டது

அங்கே ஆசிரியருக்கு சம்பளம் அள்ளி இறைக்கபட்டது, இன்றும் வெளிநாட்டு ஆசிரியருக்கு கூட இல்லா சம்பளம் உள்நாட்டு ஆசிரியருக்கு கொட்டபடுகின்றது

திராவிட கட்சிகளின் சாதனை இது

இதனால் புற்றீசல், கரையான் , தேனி போல கூட்டம் கூட்டமாக ஆசிரியர் பட்டாளம் பெருகிற்று

திராவிட கட்சிகளுக்கு சிக்கலை தொடங்கி கல்லாகட்ட தெரியுமே தவிர சிக்கலை முடிக்க தெரியாது

விளைவு பெருகிவிட்ட ஆசிரியர்களை வடிகட்ட தேர்வுமுறை எனும் அநீதியினை கொண்டுவந்தார்கள்

அப்படியானால் 7 வருடம் படித்து வந்தவர்கள் தகுதி இல்லாதவர்களா? அவர்கள் செலவழித்த பணமெல்லாம் வீணா? என்ற எண்ணம் கொஞ்சமுமில்லை

குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் கல்லூரிகளை அனுமதித்திருந்தால் கணக்கு சரியாக இருந்திருக்கும், இந்த தேர்வுக்கு அவசியமே இருந்திருக்காது

பெருகிவிட்ட ஆசிரியர் ஒருபுறம், மூடபட்ட அரசுபள்ளிகள் மறுபுறம் என சிக்கிய அரசு தேர்வு என்ற முறையில் செய்ய வேண்டியதை செய்துவிட்டது

ஆம் சிரமபட்டு படித்து வந்த ஆசிரிய பெருமக்களை நீங்கள் தகுதி இல்லாதவர் என செவிட்டில் அடித்து அனுப்பிவிட்டது அரசு

அவர்கள் பட்டம் பெற்று, பட்டயமும் பெற்றது அரசு அனுமதியுடனே, அதே அரசு ஒரு தேர்வில் அவர்கள் தகுதியில்லை எனவும் சொல்லிற்று

இதெல்லாம் என்ன நியாயம்?

சரி இனி ஆசிரியர்கள் எதிர்காலம் என்ன?

அவர்கள் தனியார் பள்ளிகளில் குப்பை கொட்ட வேண்டும் அதுவும் 12 மணிநேரம் குப்பை கொட்ட வேண்டும் ஆனால் சம்பளம் அரசுபள்ளி பியூணை விட குறைவு

நிச்சயம் அரசு பள்ளிகள் மூடவும் தனியார்பள்ளிகள் பெருகவும் அரசு அள்ளிவிட்ட சலுகையே காரணம்

ஆசிரிய பயிற்சிபள்ளிகள் பெருகவும் கல்லூரிகள் பெருகவும் அரசுதான் காரணம்

ஆக இந்த ஆசிரியர்களுக்கு வேலை கொடுக்க முடியாமல் டெட் என வடிகட்டும் அரசு, அக்கொடுமைக்கு என்ன பரிகாரம் செய்யலாம் என்றால் தனியார் பள்ளிகளில் குறைந்த சம்பளத்தை நிர்ணயம் செய்யட்டும்

அது அரசு நிர்ணயித்த சம்பள அளவில் இருக்கட்டும், அதை கொடுக்கமுடியா பட்சத்தில் அந்த பள்ளிகளை அரசே எடுத்து நடத்தட்டும்

அப்படி கிடுக்கிபிடி போடும் பட்சத்தில் ஆசிரியர் வாழ்வு செழிக்கும், அரசு கையகபடுத்தும் திட்டத்தினால் பெரும் ஆசிரிய தேவை ஏற்படும் பொழுது டெட் போன்ற வடிகட்டுதல் இல்லாமல் காத்திருக்கு ஆசியர்களுக்கு வேலை கொடுக்க முடியும்

இதை எல்ல்லாம் அரசு சிந்தித்தால் நலம், ஆசிரியரும் நலம் , கல்வியும் நலம் எல்லாம் சுபம்

1980க்கு பின்னரான அழிச்சாட்டிய அரசியலில் எவ்வளவு சீரழிவு பள்ளி கல்விதுறையில் நடந்திருக்கின்றது என ஆழ கவனித்தால் சில கண்ணீர் துளிகளே மிஞ்சும்

தமிழ்நாட்டில் பரிதாபத்திற்குரிய இனங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் உண்டு

கரும்பு சக்கையும், செக்கு மாடும் அவர்களை விட கொடுத்து வைத்தவை

முதலில் நீக்க வேண்டிய தேர்வு இந்த டெட் தேர்வு

ஆம் மிகபெரும் சமூக அநீதி இது , 50 வயதாகியும் வேலை கிடைக்கா ஆசிரியர்கள் இருக்கும் சமூகத்தில் 21 வயதில் டெட் பாஸ் செய்துவிட்டார் என ஒருவருக்கு பணி கொடுப்பதெல்லாம் பெரும் அநீதி

ஆனால் டெட் பற்றி மாநில கட்சிகள் வாய்திறக்காது, மாறாக அய்யகோ நீட் என ஒப்பாரிவைப்பார்கள்

டெட் தேர்வினை மாநில அரசுதான் நீக்க வேண்டும்

இந்த மாபெரும் கொடுமையினை முதலில் மாநிலத்தில் களையட்டும், நீட் எல்லாம் பின்னர் பார்க்கலாம்

ஏன் டெட் பற்றி மாநில கட்சி பேசாது, அக்கொடுமை தெரிந்தும் அமைதி?

ஆம் அதில் அரசியல் செய்யமுடியாது, தமிழர் விரோதம் அது இது என டெல்லியினை சாட முடியாது

தமிழக கல்வி நிலையங்களை பகைக்க எந்த அரசியல் தலைவனும் விரும்பமாட்டான் அதுவும் தன் பினாமி பள்ளிகள், சக்தி வாய்ந்த சிறுபான்மை கிறிஸ்தவ பள்ளிகள் விவகாரத்தில் கைவைக்க ஒரு தமிழின தலைவனுக்கும் இங்கு தைரியமில்லை

அந்த அக்கிரமத்தில் ஆசிரியர் கல்வி படித்தோரில் கண்ணீர் பெருகி ஓடிகொண்டே இருக்கின்றது

இப்படித்தான் ஊரெல்லாம் கல்லூரி திறந்து எங்கள் வாழ்வினையும் கெடுத்தார்கள் என பொறியல் பட்டதாரிகளும் அழுகின்றார்கள்

இந்த அழுகைக்கும் கண்ணீருக்கும் பெயர் என்ன தெரியுமா?

திராவிட கல்வி புரட்சி…