இந்த நெருக்கடியான நிலையில் ஒவ்வொரு மருத்துவரும் ததீசி முனிவரின் வடிவமே!
பாகவத புராணத்தில் ஒரு கதை உண்டு
இந்திரன் தன் அகம்பாவத்தாலும் அலட்சியத்தாலும் பெரும் தவறிழைக்க தேவலோகம் விருத்திகாசுரன் என்பவனிடம் சிக்கிவிட்டது. விருத்திகாசுரன் கதையினை சொல்ல ஆரம்பித்தால் பெரும் புத்தகமாக வரும் என்பதால் அவனும் இந்திரனும் மோதிய காட்சியினை காணலாம்

இந்திரனால் அந்த விருத்திகாசுரனை வெல்லமுடியவில்லை அவனின் வஜ்ராயுதம் கூட விருத்திகாசுரனிடம் வேலை செய்யவில்லை
அஞ்சிய இந்திரன் விஷ்ணுவிடம் சரண்டைந்தான் , விஷ்ணு விருத்திகாசுரனை வெல்லும் வழியினை போதித்தார், அதாவது கொடிய விருத்திகாசுரன் யாக தீயில் தோன்றியவன், எந்த ஆயுதத்தாலும் அவனை வெல்லமுடியாது
நெருப்பை நீர் அணைப்பது போல, தியாகத்தால் உருவான ஆயுதம் ஒன்றாலே அவன் அழிவான்
ததீசி முனிவரின் தியாகம் ஒன்றாலே அவன் அழிவான், அவரின் தியாகம் ஒன்றே இனி உங்களை காக்கும்” என சொல்லிவிட்டார்
ஆம் ததீசி முனிவர் பெரும் தவமுனி, மிகபெரும் நல்ல உள்ளம் படைத்தவர், பாற்கடலில் தோன்றிய விஷத்தை சிவன் எடுத்து விழுங்கியது போல, பாற்கடல் கொடுத்த பயங்கர ஆயுதங்களை விழுங்கி அவை உலகத்தை அழிக்காதவாறு காத்து கொண்டவர், அந்த தவவலிமையால் அவை அவரிடம் செயலற்று சாம்பலாயின, அதையும் குடித்து கொண்டார்
அந்த ததீசி முனிவர் சொன்னார். நான் உங்களை காக்க என்னை நெருப்பில் எரிக்கின்றேன், என் எரிந்தபின் முதுகெலும்பு மிஞ்சும் அதை கொண்டு ஆயுதம் செய்து அந்த விருத்திகாசுரனை அழிப்பாய்”
ஆம் தர்மம் வாழ தேவர்களும் முப்பெரும் தெய்வங்களும் புடைசூழ நெருப்பில் இறங்கி தன்னையே எரித்து எலும்பு கொடுத்தார் தவமுனி, அந்த எலும்பே பின் விருத்திகாசுரன் அழித்தது
தர்மம் மீண்டது
ஆம், இந்த கொடிய கொரொனா காலத்தில் மருத்துவ தெய்வங்கள் மானிடத்தை காக்க அந்த ததீசி முனியாக தங்களையே பலிகொடுக்கின்றன
எல்லா நாடுகளிலும் அந்த மருத்துவமுனிகளே தங்களை வருத்தி எரித்து கொரொனாவினை அழித்து கொண்டிருக்கின்றனர்
இந்த நெருக்கடியான நிலையில் ஒவ்வொரு மருத்துவரும் ததீசி முனிவரின் வடிவமே, அந்த தியாக பிம்பங்களை வாழ்த்த வார்த்தையில்லை
எதற்கும் அடங்காத விருத்திகாசுரன் அந்த முனிவரின் எலும்புக்கும் அடங்கவில்லை மாறாக அந்த எலும்பை கொடுத்த அந்த தியாக உள்ளத்துக்காக அடங்கினான் என்கின்றது புராணம்
தியாகத்தின் வலிமை அது
மருந்தே இல்லா கொர்னா எனும் விருத்திகாசுரன் , எந்த மருந்தாலும் வெல்லமுடியா அந்த கொரொனா அசுரன், மருத்துவர் மற்றும் காவலர்களின் தியாகத்தில் மனமுருகி அடங்கட்டும்.
நிச்சயம் அது நடக்கும். ததீசி முனிவரின் தியாகத்துக்கு குறைவின்றி உலகெல்லாம் மருத்துவ முனிகள் செய்யும் தியாகம் அந்த அதிசயத்தை நிச்சயம் செய்யும், கொரொனா ஒழியும், மானிடம் வாழும்.