இனி சசிகலா அதிமுகவிற்கு கடிவாளம் போடபோவது யார்
இதுவரை ஜெயா எனும் முகமூடி போட்டு ஆண்ட சசிகலா இனி தன் சொந்த முகத்துடன் ஆளபோகின்றார் அவ்வளவுதான்
ஒரு முகமூடியினை கொண்டாடிய தமிழகம், அதன் உண்மை முகத்தை கண்டவுடன் முகம் சுழிக்கின்றது.
சசிகலா எப்படி ஆளுவார்? அவர் கொள்ளை கூட்ட கும்பல் அல்லவா என சரமாரி கேள்விகள், அட அன்று ஜெயாவினை முன்னிறுத்தி பின்னால் நின்று இவர்கள் அடிக்காத கொள்ளையா? அவர் ஆளாதா ஆட்சியா?
1996க்கு பின் வாய்ப்பே கொடுக்காமல் விரட்டியிருந்தால் சசிகலாவிற்கு இந்த தைரியம் வந்திருக்குமா? வந்திருக்காது.
ஆனால் வந்தது? எப்படி?
கலைஞர் கொள்ளைக்காரர், திமுக கொள்ளைக்காரர் என காட்டியே ஆட்சிக்கு வந்தார்கள், வந்து இவர்கள் கொள்ளையடித்தார்கள்
அவன் திருடன் என சொல்லியே இன்னொருவர் திருடும் விசித்திரம் தமிழகத்தை தவிர எங்கும் சாத்தியமில்லை
ஆக தமிழகத்தை கடந்த 32 ஆண்டு காலமாக அழகாக புரிந்து வைத்திருப்பவர் சசிகலா, வோட்டு எப்படி விழும், எப்படி வாங்க வேண்டும் என ஜெயாவிற்கே போதித்தவர்கள் அவர்கள்.
எத்தனை அவதூறுகளும் வழக்குகளும் குற்றசாட்டும் வந்தாலும் அதனை தாண்டி வோட்டாக்குவது எப்படி என்பது அவர்களுக்கு தெரிந்திருக்கின்றது
பெரும் வழக்குகளை தாண்டி மூன்றாம் முறை ஆட்சிக்கு வந்தபின்னர் அந்த அச்சம் எவ்வளவு விட்டுபோயிருக்கும்? இவ்வளவுதானா? எவ்வளவு தாண்டிவிட்டோம், அசைக்கமுடியாத நிலை வந்துவிட்டோம்
இனி அஞ்ச என்ன இருக்கின்றது, மனமே துணிவுகொள் இனி நிரந்தர முதல்வர் நீயே, கட்சியும் உன்னுடையதே.
பணத்தை விட்டெறிந்தால் நூறு எம் எல் ஏ, பதவியினை விட்டெறிந்தால் சுற்றிலும் ஆதரவு
அவர்கள் கொள்ளையர்களோ அல்லது ஊழல்வாதிகளோ ஆனால் அப்படி ஆக்கியதில் தமிழக மக்களின் பொறுப்பும் இருந்து தொலைக்கின்றது
அவர்களை வளர்த்த பொறுப்பும் தமிழகத்திற்கே உண்டு என்பதும் மறுக்கமுடியாதது.
அந்த கும்பல் துணிந்து நிற்பது இப்படித்தான்.
ஆக ராமசந்திரனோடு அந்த அதிமுக அழிந்துவிட்டது, அதன் பின் இவ்வளவு காலம் ஆண்டது இந்த சசிகலா கும்பலே.
இனி சசிகலா முதல்வரானும் பாருங்கள், உறுதியாக இன்றே சொல்லலாம் அது ஜெயலலிதாவின் அடியொற்றிய ஆட்சியாகவே இருக்கும், ஒரு வித்தியாசம் கூட காணமுடியாது, காரணம் ஆண்டவர்கள் இவர்கள் அல்லவா? பின் ஏன் தடுமாற போகின்றார்கள்?
கட்சியும் ஆட்சியும் அவர்கள் நிர்வகித்து வந்தது என்பதால் ஒரு தடுமாற்றமும் அவர்களுக்கு வரப்போவதில்லை, வரவும் வராது.
நிச்சயம் அந்த ஜெயா ஒரு முகமூடி
அந்த முகமூடி கிழிந்தோ அல்லது கிழிக்கபட்டோ போனபின் நிஜமுகம் ஆளவருகின்றது.
தன் கைத்தடி அமர்ந்த நாற்காலியில் தான் அமர எந்த எஜமானிக்குத்தான் ஆசை இருக்காது?
இதற்குத்தான் இத்தனை சலசலப்பும், அழிச்சாட்டியமும்
முகமூடி என்றால் ஆதரிப்பார்களாம், நிஜமுகம் என்றால் முகம் சுளிபார்களாம், எப்படி அறிவார்த்த தமிழினம் இது?
இப்படி அன்றே ராமசந்திரனின் சினிமா வேடம் தவிர்த்த நிஜமுகம் கண்டு விரட்டிவிட்டிருந்தால் இன்று தமிழகத்திற்கு இந்த அவலம் வந்திருக்குமா?
உச்சநீதிமன்ற தீர்ப்பு அவர்களுக்கு பாதகமாக வந்தால் கூட இன்னும் 4 வருடத்திற்கு எந்த மாற்றமும் இங்கு வந்துவிடாது, சாதகமாக வந்துவிட்டால் 4 வருடம் அசைக்கமுடியாத சக்தி நிச்சயம் சசிகலா தான்.
இனி சசிகலா அதிமுகவிற்கு கடிவாளம் போடபோவது யார்?
நிச்சயமாக ஸ்டாலினால் முடியும் என்பது போல தெரியவில்லை, டெல்லியில் சசிகலா தப்பி 4 வருடம் மங்கம்மாள் ஆட்சி நடத்தினால் போதும், தமிழக மறதி பிரசித்தி பெற்றது
உலகின் வரலாறு எங்கும் காட்சிகள் கிடக்கின்றன, மிக திறமையான வேலைக்காரன் மிக எளிதாக அரசினை கைபற்றிவிடுவான்
யூதர்களின் ராஜா தாவீது முதல், மாவீரன் நெப்போலியன், ராபர்ட் கிளைவ், ஹைதர் அலி என எவ்வளவோ சான்றுகள் கிடக்கின்றன
இப்பக்கம் சசிகலா அதனை செய்துவிட்டார்,
அப்பக்கம் யார்?
எந்த தோட்டத்தில் எந்த சசிகலாவோ? என்பதுதான் இப்பொழுதுள்ள டிரெண்ட்
திமுக தோட்டத்து பணியாளர்கள், முரசொலி அலுவலர்கள், அறிவாலய அல்லக்கைகள் அப்படி யாரையாவது இனி நம்பிக்கையாய் பார்த்து தொலைவோம்
அப்படி ஒருவர் திமுகவினை கைபற்றி இனி சசிகலா கும்பலுக்கு கடிவாளமிடட்டும்.
கலைஞர் அந்த அதிசயத்தை செய்தார், கிட்டதட்ட ஹைதர் அலி மைசூர் அரசினை மிக திறமையாக கைபற்றியது போல பெரும் தலைவர்கள் நிரம்பிய அன்றைய திமுகவினை அவர் கைபற்றினார்
ஆனால் ஸ்டாலின் பரம்பரை மன்னர்கள் போல துக்ளக் ஸ்டைலில் அரசியல் செய்கின்றார், இது நீண்ட நாளைக்கு சரிவராது. நீண்ட நாள் என்ன? 4 வருடத்திற்கே தாங்காது.
இப்பொழுது சசிகலாவிற்கு சவால் விடும் எதிரி என தமிழகத்தில் யாருமில்லை என்பதில்தான் அவர் மதப்பு கொண்ட யானையாக அசால்ட்டாக வலம் வருகின்றார்.
காலம் அவர் பக்கம் சரிந்து நிற்கும் பொழுது யார் என்ன செய்ய முடியும்?
தன் முகமூடி ஆண்ட தமிழகத்தில் தன் முகம்காட்டி ஆளாமல் சசிகலா விடுவாரா?
என்ன விலை கொடுத்தேனும் அதனை நடத்தியே தீருவார்
ஏன் இவ்வளவு அவசரம் இந்த பக்கம்?
ஏன் இவ்வளவு இழுப்பு ஆளுநர் பக்கம்?
ஆக இருவருக்கும் ஏதோ புகை வாசம் வந்திருக்கின்றது
ஒரு வாரம் கூட தாமதிக்கமுடியாது என இவர்களும், ஒரு வாரம் எப்படியாவது இழுத்துவிட வேண்டும் என டெல்லியும் மல்லுகட்டிகொண்டிருக்கின்றன என்பதில்தான் ஏதோ விஷயம் இருக்கின்றது.
அப்படி அவர்களுக்கு தெரிந்த ரகசியம் நமக்கும் தெரிய இன்னும் ஒரு வாரம் பொறுக்க வேண்டும்.
அதுவரை பொறு மனமே..