இன்று காதலர் தினம் …

No automatic alt text available.

காதலர் தினம் கொண்டாட‌ போகின்றார்களாம், அதுவும் பிரவரி 14 விடியற்காலை தொடங்கி நள்ளிரவு வரை மட்டும் கொண்டாடுவார்களாம்.

அன்றுதான் காதலை வாழவைக்க வந்த வாலண்டைன் நாளாம். அவர்தான் காதலுக்கு வடிவம் கொடுத்தவராம். அதற்கு முன்னால் காதலே இல்லை என்பது, வெள்ளையர் வருமுன் இந்தியாவில் மனிதர்களே இல்லை என்பதை விட பெரும் பொய்.

எவ்வளவு பெரிய பொய்யினை நம்பவைக்கபட்டு இருக்கின்றோம், அதற்கு இச்சமூகம் தலையாட்டிகொண்டு பின்செல்கிறது.

ஒருவேளை செத்தாலும் சேர்ந்து சாகலாம் என ஏவாள் ஆதாமுக்கு பழம் கொடுத்த காலத்திலே காதல் இருந்தது, பைபிளின் பழைய ஏற்பாடுகளை பார்த்தால் கடவுளினால் ர்ந்தெடுக்கபட்டவர்களுக்கு கூட காதல் இருந்திருக்கிறது, “இது பாவம் உன்னோடு பேசமாட்டேன் போ” என கடவுள் சொல்லவே இல்லை.

ஆபிரகாமும், தாவீதும் செய்யாத காதல்கள் இல்லை, ஏராளமான காதல்கள் , ஆனாலும் கடவுள் ஆசீர்வாதமே கொடுத்தார்

இந்துக்களின் வரலாற்று புராணங்களில் சொல்லவே வேண்டாம், கடவுள்கள்,அவதாரங்கள்,தேவர்கள்,முனிவர்கள் என காதலித்தவர்கள்,தூது சென்றவர்கள் என பெரும் எண்ணிக்கை உண்டு.

காற்றுமுதல் அன்னபறவை வரைக்கும் தூது அனுப்பி மகிழ்ந்தார்கள்.

ஆண்டாள், மீரா என பெரும் காதல் அவதாரங்களே உண்டு. மானிட வாழ்வின் எல்லா உணர்வுகளையும் தெய்வமாக்கி பார்த்த்த இந்துக்கள், காதலும் கடவுளுக்கு உண்டு என சொல்ல தவறவில்லை.

தமிழரின் பண்பாட்டு அறிவின் மிகபெரும் அடையாளமான திருக்குறளின் இன்பத்துபாலை விடவா வாலண்டைன் காதலை பற்றி பெரியதாக சொல்லிவிட்டார்?

“அன்னலும் நோக்கினாள் அவளும் நோக்கினாள்” என்ற மங்க்காத வரியை தந்த கம்பனைவிடவுமா காதலை அவர் சிந்தித்து விட்டார்,
அகநானூறு பாடல்களைவிடவுமா காதலை உயர்வாக சொல்லமுடியும்?

கம்பனை விடுங்கள், காதலுக்காக உயிர் துறந்தான் அவர் மகன் அம்பிகாபதி அவனுக்கோர் நாள் உண்டா?,

உலக சரித்திலே முதன் முறையாக காதலுக்கு ஒரு அழியா சின்னம் கட்டிய மன்னன் ஷாஜகானுக்கு கூட ஒரு நாள் இல்லை, அவரது முன்னோரான அமரா காதலர் வரிசையில் இடம்பெற்ற சலீமுக்கு ஒரு மணிநேர நினைவு கூட இல்லை

நவீன இந்திய ஏவுகனைக்கு தன் பெயர் இடம்பெயர செய்த பெருவீரன் “பிருத்வி”ராஜன் காதலித்த பாவத்திற்காக கண் இழந்ததையும், தேசிங்குராஜன் ராஜ்யம் இழந்ததையும் சொல்வதற்கும் யாருமில்லை (ஆர்.எஸ்.எஸ் காரர்கள் கவனிக்க)

காதலை இன்றும் உயர்வாக பார்க்கும் தமிழ் சமூகமிது, இன்று எவ்வளவோ முக்கிய பிரச்சினைகள் பத்திரிகைகள் வெளியிட்டாலும், நயந்தாராவின் காதல் செய்திகளுக்கு இருக்கும் வரவேற்பே தனி.

ரோமை மன்னர்கள் மிக கொடுமையானவர்கள்,கோலோசியம் அமைத்து கொன்றவர்களின் அரசு அது, அரசின் சட்டத்தினை மீறி திருமணம் செய்துவைத்தார் வாலண்டைன் எனும் துறவி, இது தான் அவர் செய்த திருப்பணி. பின்னர் ரோமை அரசால் கொல்லபட்டார். இது அந்நாட்டில் நடந்த ஒரு சோக சம்பவம்.

அவருக்கு புனிதர் பட்டமும் கொடுத்து காதலருக்கு இவர்தான் என உலகிற்கு ஐரோப்பியர் அளித்துவிட்டனர்.

அவர்கள் மூலமாக அது உலகெல்லாமும் பரவி விட்டது, மற்றபடி காதல் எங்கு இல்லை?

தமிழகத்தின் ஒரு வட்டாரத்தை எடுத்துக்கொண்டால் கூட‌ ஒருதலைராகம், சுப்பிரமணியபுரம்,நாடோடிகள்,முதல் மரியாதை போல‌ எவ்வளவோ திரைகலைஞர்கள் சொன்ன சொல்லாத கதைகள் உண்டு.

பாரதிராஜாவும் பாலசந்தரும் அதில் பாதியை கூட சொல்லியிருக்கமுடியாது.

கட்டுப்பாடுகள் நிறைந்த சமூகத்தில், எதிர்ப்புகளை மீறி திருமணம் செய்து வைத்து சாகும்வரை சாபம் வாங்கும் எத்தனையோ வாலன்டைன்கள் உண்டு.

சாக்லேட்டுக்கு ஆசைபட்டு காதல் தூதுவராகி முதுகில் வாங்கிகட்டிய சிறிய வாலண்டைன் முதல், “நண்பேண்டா….” என்று சொல்லி காவல்நிலையத்தில் குத்துசண்டை பழகும் பொருளாகிய மூட்டை வாலண்டைன்களும் உண்டு.

“யான்நோக்குங்கால் நிலம்நோக்கும் யான் நோக்காங்கால்
யான்நோக்கி மெல்ல நகும்”

என்ற குறளுக்கு இலக்கணம் எழுதுவது போல‌ எந்நாளும் காதல் வாழும்,அது அப்படித்தான். அதைவிட்டு வாலண்டைந்தான் காதலை வாழ்விக்க வந்தவர், அவரின் நாளில் மட்டும் காதலை கொண்டாடுவோம் என்றால், நன்றாக நினைவில் கொள்ளுங்கள்,

விரைவில் யூதாஸ் விழா என்று ஒன்று அறிமுகபடுத்தபடலாம், அது தற்கொலை விழா என அறிவிக்கவும்படலாம், மதிமயங்கிய சமூகம் அதனை பின்பற்றவும் செய்யலாம், வாழிவில் வெறுத்தவர்கள் அன்று போயும் சேரலாம்.

நம்மிடம் இல்லாத எதனையும் வாலண்டைன் சொல்லவில்லை, நாம் தான் வியாபார உலகில் வாலண்டைன் பெயருக்காக பணமிழக்கிறோம்.

ஒருவேளை கொண்டாடவேண்டுமென்றால் வாலண்டைன் நினைவுநாளில் யாருக்கு இந்த காதலர் சமூகம் நன்றி சொல்லவேண்டும்?

காதல் திருமணத்திற்கு உதவி செய்யும் கூட்டம், நடத்தி வைக்கும் குருக்கள், சட்ட பதிவாளர்கள் என வாலண்டைன் போல காதலுக்கு அவர்களுக்குத்தான் சொல்லவேண்டுமே தவிர, காதலிப்பவர்கள் கொண்டாடுவதில் என்ன அர்த்தம் இருக்கின்றது?

எம்மை பொறுத்த வரையில் தெய்வீக காதல் என்பதில் எல்லாம் அர்த்தமே இல்லை, “ஒருவரின் விதி அவர்கள் விழி வழியே தீர்மானிக்கபடுகின்றதன் பெயர்தான் காதல்” எனும் தத்துவத்தை சொல்லிவிட்டு நகர்ந்துவிடலாம்

ஜெயகாந்தன் சொல்வார், “காதல் என்பது அற்பமானது, அது தொடங்கவும், முறியவும் மிக அற்ப காரணம் போதும்”

அப்படி அற்பதனமாக தொடங்கி அற்பமாகவே முடியும் காதல் உண்டு

பெரும்பாலானா மானிட காதல்கள் இன்றுவரை அப்படியே..

ஒரு பெண்ணை உயிருக்கு உயிராய் காதலிப்பது ஒரு வகை காதல், பல பெண்களை பார்த்துவிட்டு பார்த்ததில் சிறந்தது இவளுடனான காதல் என சொல்வது இன்னொரு வகை

ரோமியோ ஜூலியட், லைலாஅ மஞ்னு, அம்பிகாபதி அமரவாதி, சலீம் அனார்கலின், நளன் தமயந்தி போன்றோரின் காதல் முதல் ரகம், ஷாஜகான் முதல் ஜெமினி கணேசன் போன்றோரின் காதல் இரண்டாம் ரகம்.

கிளியோபாட்ராவிற்கு ஆண்டனி மீது வந்தது ஒரு வகையான காரிய காதல், கமீலா பார்க்கருக்கு சார்லஸ் மீது வந்த ரகம அது.

ஆக எல்லா வகை காதலும் வரலாற்றில் நிரம்ப கிடக்கின்றது.

இந்த உலகின் காதல் வரலாற்றினை எடுத்துகொண்டால் மிக உன்னதமாக காதல் என ஒரு மாவீரனின் காதலை சொல்லலாம், அது பிரென்ஞ் மாவீரன் நெப்போலியனின் காதல்.

பொதுவாக பிரான்ஸ் மக்கள் ரசித்து வாழ்பவர்கள், உணவு முதல் உறவு வரை அவர்கள் ரசனை பெரிது.

அந்த பிரான்சுக்கு அகதியாய் வந்த விதவைதான் ஜோசப்பைன், பெரும் அழகி அல்ல, ஏன் அழகி என்ற வரையரைகுள்ளே அவள் வரமாட்டாள். மெலிந்த தேகமும், எடுப்பான பற்களும், ஒடுங்கிய முகமும் கொண்ட சராசரிக்கு கீழான பெண், ஆனால் சாதாரண படைவீரனாக நெப்போலியன் அவளை சந்தித்தபொழுதே காதல் ஊற்றேடுத்தது

அவன் அதன் பின் பெரும் உயரங்களுக்கு சென்றாலும் அவளுடனான காதல் மாறவில்லை, நொடியும் விழித்திருக்கும் சாகாமிக்க போர்களத்திலிருந்து அவன் ஜோசப்பினுக்கு எழுதிய கடிதங்கள் அவன் அடிமன காதலின் சாட்சி

இவ்வளவிற்கும் ஜோசப்பைனுக்கும் சிலருடன் தொடர்பிருந்திருக்கின்றது, நெப்போலியனும் நம் கவிஞர் கண்ணதாசன் வகையறா. அரசு வாரிசுக்காக திருச்சபை மரபுபடி இன்னொரு திருமணமும் செய்தவன் அவன்.

ஆனாலும் எத்தனை பெண்களை சந்தித்தாலும் என் மனம் ஜோசப்பினை சந்தித்தால்தான் மகிழ்ச்சியும் திருப்தியும் கொள்கின்றது என நெப்போலியன் சொன்னதே அவன் காதலுக்கு சாட்சி

மரிக்கும் பொழுதும் அவன் சொன்ன வார்த்தை ஜோசப்பின்.

எமக்கு பெரும் காதல் அனுபவம் எல்லாம் இல்லை, காரணம் காதலிக்கபடுவதற்கு சில குணங்களும் தகுதிகளும் வேண்டும், சசிகலா போல ஒரு வித கமுக்கம், நடராஜன் போல தந்திரம், பன்னீர் போல பணிவு, கலைஞர் போல சில உருக்கம், என பல விஷயங்கள் வேண்டும்

ஜனகராஜினை போல சிரித்துகொண்டே இருந்தாலோ, அல்லது மனதில் பட்டதை விஜயகாந்த் போல சொன்னாலோ, அல்லது எல்லாவற்றிலும் நுழைந்து வைகோ போல பேசினாலோ அது காதலுக்கு உதவாது

“இவன் அதற்கு சரிபட மாட்டான் என கிளம்பிவிடுவர்கள்”

அதனால் இந்த இம்சைகளை எல்லாம் சந்தித்ததில்லை

இப்படி மிக அபூர்வ காதல்களும் உண்டு

சரி ஊரோடு வாலண்டைன் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வோம்

யாருக்கு? காதலுக்கு உதவுபவர்கள், அவர்களுக்காக அடிவாங்குபவர்கள், காவல் நிலையத்தில் டின் கட்டபட்டவர்கள் என அவர்களுக்கும்

(சாக்லேட்டிற்கு ஆசைபட்டு காதல் கடிதம் கொண்டுபோகும் வாண்டுகள் முதல் போன் நம்பர் பெற்றுதருபவர்கள் வரை எல்லோரும்..)

காதலை அங்கீகரித்து திருமணம் செய்துவைக்கும் எல்லா குருமார்களுக்கும், பதிவாளர்களுக்கும் வாலண்டைன் நாள் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம்

உண்மையான வாழ்த்து அவர்களுக்குரியது, வாலண்டைனின் காரியங்களை அவர்கள்தான் முன்னெடுத்து செல்கின்றார்கள்..