இன்று ரஜினிகாந்த் பிறந்த நாள்…

Image may contain: 1 person, smiling, beard

அவர் பெரும் நடிகர் ஆவார் என அவருக்கே தெரியாது, எங்கோ கண்டக்டராகவும், நாடகங்களில் வித்தியாச சேட்டைகள் செய்பவருமாகவே இருந்தார்

பாலசந்தர் கண்ணில் பட்டது அவர் வாழ்வின் திருப்புமுனை ஆயிற்று, அப்படியும் வில்லன் நடிகராகத்தான் பிரபலமானார்

பல சினிமா இலக்கணங்களை அவர் உடைத்தார், அன்று ஹீரோ ஆகவேண்டும் என்றால் நிறம்,குரல், பணிவான தலைமுடி என பல அடிப்படை விஷயங்கள் வேண்டும்

ஆனால் மிக கருத்த நிறம், மிக ஒல்லியான உடல், புதுவித தமிழ், கலைந்த முடி இவற்றை கொண்டு ஒரு மனிதன் தமிழ் திரையுலகில் ஜெயித்தான் என்றால் அது ஆச்சரியம்

அவர் போட்ட வழியில்தான் பின் பல நடிகர்கள் வந்தார்கள், அவர்தான் அவர்களுக்கு எல்லாம் மூலம்

விதி அவரை எங்கோ கொண்டு நிறுத்திற்று.

அம்மனிதர் மேல் ஆயிரம் சர்ர்சை இருக்கலாம் ஆனால் இன்றைய தமிழகத்தின் சக்தி வாய்ந்த மனிதர் என்பதை மறுக்க முடியாது

தமிழகத்து பட அதிபர்கள் முதல் இந்திய‌ அரசியல்வாதிகள் , சாமியார்கள் வரை எல்லோரும் வலியதேடும் நபர் அவர்

உலகில் தமிழர் தாண்டி பல இனங்களில் பெரும் ரசிகர்களை கொண்டிருப்பவரும் அவரே

இந்தியா முழுக்க, மலேசியா, இந்தோனேஷியா, சீனா, ஜப்பான், கொரியா என அவருக்கு எல்லா இனங்களிலும் ரசிகர்கள் உண்டு

நல்ல கலைஞனுக்கு மொழி ஒரு தடையில்லை என ஜாக்கிசானை போல நிரூபித்து நிற்பவர் அவர்

அரசியலுக்கு வர நடிக்கின்றார், தயங்குகின்றார் என ஆயிரம் சர்ச்சைகள் அவர் மேல் இருந்தாலும் சில குணங்களில் அவரை அவரை பாராட்ட வேண்டும்

இவ்வளவு பெரும் ரசிகர்கர் படை இருந்தும், பெரும் செல்வாக்கு இருந்தும் அவர் அரசியலுக்கு வர ஆசைபடவில்லை, இன்றுவரை விரும்பவில்லை

அவர் இடத்தில் யார் இருந்திருந்தாலும் நிச்சயம் இறங்கி இருப்பார்கள், அவ்வளவு ஏன்? அவர் பலத்தில் ஆயிரத்தில் ஒரு பங்கு இருந்தாலும் வந்து நானே முதல்வர் என நிற்பார்கள்

ஒரு இடத்தை வெல்வது பெரிதல்ல, கையில் கிடைத்துவிட்ட அதிகாரமிக்க ஆசனத்தை விட ஒரு பெரிய மனது வேண்டும். நல்ல ஆன்மீக ஞானி தவிர யாருக்கும் அது சாத்தியமில்லை

அதில் ரஜினி உண்மையில் பாராட்டபட வேண்டியவர்.

இன்னொரு விஷயம் அவரின் எளிமை, இந்த ராமசந்திரன் போன்றோர் எல்லாம் மேக் அப் இல்லாமல், தொப்பி இல்லாமல் எங்கும் சென்றதில்லை, பல்செட் மகா முக்கியம்

ஆனால் பிரதமரே வந்தாலும், ஒரு அழுக்கு ஜிப்பாவினை அணிந்துகொண்டு வழுக்கை தலையுடன் வந்து அமர்ந்துகொள்வது என்பது பெரும் ஞானியின் மனநிலை

நான் இப்படித்தான், இதுதான் நான் என பகிரங்கமாக சொல்ல ஒரு தைரியம் வேண்டும்

அதுவும் மிக உயரத்தில் இருந்து கொண்டு இப்படி வந்து நிற்க அவருக்கு இருக்கும் தைரியம் வேறு எந்த நடிகனுக்கும் இல்லை.

எங்கு சென்றாலும் ஒரே மனநிலை , ஒரேமுகபாவம் அது கலைஞர் அழைத்தாலும் சரி, ஜெயா அழைத்தாலும் சரி, மோடி அழைத்தாலும் சரி , தன் ரசிகனோடு நின்றாலும் சரி

எல்லாவற்றையும் சரிசமமாக ஏற்றுகொள்வது என்பது பக்குவபட்டவாரலே முடியும். கலைஞர் தன் அருகே அமரவைக்கும்பொழுது வரும் அதே சிரிப்பு, ஜெயா ஓரமாக நில் என சொல்லும்பொழுது வருகின்றதல்லவா? அதுதான் மனபக்குவம்

அவருக்கு எல்லோருமே சமம் தான். சிறு குழந்தை வந்தால் கூட அது தன்னை பற்றி சொல்வதை கேட்டு மனம் மகிழ்ந்து சிரிப்பவர் அவர்.

அவரை கவனித்தால் ஒன்று புரிகின்றது

மனிதர் கடவுளை மனமார நம்புகின்றார், அந்த சக்தியே தன்னை இவ்வளவு பெரும் உயரத்திற்கு கொண்டு வந்தது என்பதை அழுத்தமாக நம்புகின்றார்

சினிமாவில் அவருக்கு போரடித்துவிட்டதும் புரிகின்றது, அவர் மனம் ஆன்மீகத்தையே நாடுகின்றது

உச்ச நடிகன் எனும் இடத்தை விட்டு இறங்கி தனிமையில் ஆன்மீகத்தில் இறங்கவே அவர் மனம் துடிக்கின்றது

ஆனால் பாச பந்த வலையில் சிக்கிவிட்டபின் சில நிர்பந்தக்குளுக்காக நடிக்கின்றார், அதே நேரம் தன் ரசிகர்கள் தன்னிடம் அரசியல் எதிர்பார்ப்பதை கண்டிக்க முடியாமல் தவிக்கின்றார்.

ரசிகர்களுக்காக சில படங்கள் நடித்துவிடலாம், உயிர் இருக்கும் வரை நடிக்கலாம் என குழம்பி தவிக்கவும் செய்கின்றார்

உண்மையில் நல்ல நடிகனின் மனம், தன் நடிப்பிற்காக வரும் ரசிகர்களையே எதிர்பார்க்கும்

அப்படி ரஜினியினை நடிப்பிற்காக எதிர்ப்பார்க்கும் ரசிகர்கள் கோடான கோடி பேர் உண்டு. அரசியலுக்கு அவர் வரவேண்டும் என்பது சம்பாதிக்க நினைக்கும் கருப்பு ஆடுகளின் திட்டம்

அந்த நல்ல‌ ரசிகர்களுக்காக சில படங்களில் நடிக்கின்றார். இன்னொரு விஷயம் ரஜினி ஒரு படத்தில் நடிக்கின்றார் என்றால் மறைமுகமாக வளம்பெறும் வேலைவாய்ப்பும் சம்பளமும் பெறும் ஆயிரகணக்கான குடும்பங்கள் உண்டு, மறுக்க முடியாதது.

மறைமுகமாக எத்தனையோ பேர் பயன்பெறுவர், இது ரஜினிக்கும் தெரியாதது அல்ல‌

இன்று அவருக்கு பிறந்த நாள்.

மனிதர் மீது ஆயிரம் சர்ச்சைகள் இருக்கலாம், குஷ்புவினை ஏன் ஜோடியாக்கவில்லை எனும் பல கோபங்கள் இருக்கலாம்

ஆனால் எளிதாக கைக்கு கிடைக்கும் முதல்வர் நாற்காலியினை தொடாமல் ஓரமாக அமைதியாக நடந்து செல்லும் அந்த ஞானி மனநிலைக்கு எழுந்து நின்று கைதட்டியே ஆக வேண்டும்

நாம் ரஜினி ரசிகர் அல்ல, குஷ்பு ரசிகர் தான். ஆனால் இந்த உயரிய குணத்திற்காக கைதட்டலாம், கண்களில் நீர் கோர்க்க கைதட்டலாம்

சராசரி ரசிகனாக ரஜினியிடம் எமக்கு பிடித்ததெல்லாம் அவரின் வில்லன் நடிப்பும் காமெடியுமே

நிச்சயம் அந்த இரு நடிப்பிலும் அவர் மாபெரும் நடிகன்

நெடுநாளைக்கு பின் அந்த வில்லனை ரோபாவில் மீட்டெடுத்தார் ஷங்கர், அனால் தில்லு முல்லுவிற்கு பின் அவருக்குள் இருக்கும் காமெடி நடிகன் மீட்டெடுக்காமலே விடபட்டிருக்கின்றான்

யாராவது மீட்டெடுக்கட்டும்

கவனித்து பார்த்தால் புரிந்துகொள்ள சிரமான மனிதர் அவர். இந்த உலகில் யாரைத்தான் புரிந்துகொள்ள முடிகின்றது, யாரையும் முழுக்க புரிந்துகொள்ளவே முடியாத உலகிது

அதில் நான் நடிகன், என் தொழில் அது , என் நடிப்பினை மட்டும் பாருங்கள் மற்றபடி என் முடிவினை நீங்கள் எடுக்காதீர்கள் என மறைமுகமாக சொல்லியபடி செல்லும் ரஜினி ஆச்சரியமான நபர்

அவரோடு நெருங்கி பழகியவர்கள் எல்லாம் சொல்வது, ரஜினி பழைய வாழ்வை மறக்காதவர், அதனை எல்லாம் முன்பு நம்பவில்லை

இங்கொரு பேராசிரியர் அறிமுகமானார், அவர் பெங்களூர்காரர், ரஜினி போலவே தமிழ் பேசுவார், வயது முதிர்ந்தவர்

அவரிடம் பேசிகொண்டிருந்தபொழுது பேச்சு ரஜினி பக்கம் திரும்பிற்று, ரஜினி கண்டக்டாராக இருந்த காலத்தில் இவர் அந்த பேருந்தில் சென்றவராம்

“இன்னைக்கு சூப்பர் ஸ்டாரா ரஜினிய தெரியும் , ஆனா அவர் எவ்வளவு கஷ்டபட்டிருக்கார்னு தெரியுமா? சில பேருக்குத்தான் தெரியும்

எனக்கு அவர் நெருங்கிய நண்பர் இல்லை, பஸ் பழக்கம்தான் ஆனால் எப்பொழுது சென்றாலும் நான் அவரை சந்திக்கலாம், எப்பொழுது அழைத்தாலும் பேசலாம் , யாரையும் அவர் மறக்குறதில்ல சார்.

ப‌ந்தாங்கிறது கொஞ்சமும் அவர்கிட்ட இல்ல‌

அந்த நல்ல மனசுக்கு அவர் எங்கிருந்தாலும் நல்லா இருப்பார்”

அந்த ரஜினி எங்கிருந்தாலும் வாழட்டும்,

உலகம் முழுக்க இருந்து வாழ்த்திகொண்டிருக்கின்றார்கள்

அவர் வணங்கும் ராகவேந்திரரும், பாபாவும் அவருக்கு நீண்ட ஆயுளையும் அமைதியினையும் வழங்கட்டும்.

இவ்வுலகில் ஆசையினை வெறுத்த ஞானிகளுக்கு மட்டுமே அவரின் ஆழ்மனம் புரியும்

அந்த ஞானிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள், குஷ்பு சங்கம் அவரை வாழ்த்துகின்றது

அதே நேரம் இன்னொருமுறை தலைவியினை ஜோடியாக நடிக்க வைக்கவும் கோரிக்கை வைக்கின்றது.

தலைவி நடிக்க‌ மறுத்தால் சம்மதிக்க வைக்க வேண்டியது சங்கத்து பொறுப்பு