இப்ப ஜெயிக்க முடியலண்ணா எப்பவும் முடியாதுய்யா….
போதையில் பெரும் போதை அதிகார போதை, ஒரு முறை அதை சுவைத்துவிட்டால் விடவே விடாது மனம், மானிட யதார்த்தம் அது
கிட்டதட்ட 30 ஆண்டுகள் அதனை சுவைத்து மல்லாக்க கிடந்தவர்கள் ஒரே நாளில் கிளம்பமாட்டார்கள், தங்களால் முடிந்த எல்லா தில்லாலங்கடி வேலைகளை செய்வார்கள், எந்த எல்லைக்கும் செல்வார்கள்
அதில் ஒன்றுதான் தினகரன் பாண்டே பேட்டி
பதவி இல்லை, பெரும் ரெய்டுகள், சின்னமும் இல்லை பெரும் சறுக்கலில் இருக்கும் தினகரனுக்கு ஏதாவது செய்தாக வேண்டிய கட்டாயம், கூடவே தன் சொத்துக்களுக்கு பினாமியாய் இருப்பவர்களையும் நான் இருக்கின்றேன் என எச்சரிக்க வேண்டும் இல்லாவிட்டால் ஓடிவிடுவார்கள், அதனால் பேட்டிக்கு வந்துவிட்டார்
தினகரனிடம் 4 கேள்விகள் உருப்படியாக கேட்டாலே திணறியிருப்பார், பத்திரிகை செய்திகள் அல்ல மாறாக கேட்டிருக்க வேண்டிய நீதிமன்ற விஷயங்களே போதும்
சசிகலா, நடராஜன், பாஸ்கரன், திவாகரன் ஏன் இப்பொழுது அமர்ந்திருக்கும் தினகரன் மீது வரை யார் மீது பொருளாதார குற்றசாட்டு நீதிமன்றத்தில் இல்லை, சிலர் மீது நீதிபதியே தண்டனை வாசித்தாகிவிட்டது
ஒரே கேள்வி, உருப்படியான ஒரே கேள்வி. என்ன தொழில் செய்தீர்கள்? என்ன முதலீடு செய்தீர்கள்? கங்கை அமரனையும் கொட நாடு எஸ்டேட் ஓணரையும் மிரட்டி சொத்து வாங்கும் அளவிற்கு வந்த பணம் எது?
விவேக் என்ன தொழில் செய்து முதலீடு கொண்டுவந்தார்?
உங்களை எல்லாம் கட்சியினை விட்டு விரட்டிய ஜெயலலிதா சசிகலாவினை மட்டும்தான் சேர்த்தார், அதுவும் வேலைக்காரியாக இருப்பேன் என அவர் எழுதிகொடுத்தபின்பு, பின் எப்படி நீங்கள் கட்சியின் உயர் பதவிக்கு வரலாம்?
இப்படி எல்லாம் மிக சாதாரணமான கேள்விகளில் மடக்கியிருக்க வேண்டிய தினகரனிடம் அடிபடுவது போல பம்மி கிடக்கின்றார் பாண்டே
அது எம்ஜிஆர் கட்சி அல்லவா, பயில்வான் ஜஸ்டினை ராமசந்திரன் சினிமாவில் குத்தியவுடன் அவர் விழுவாரே, உடனே கூட்டம் எல்லாம் சூப்பர் வாத்தியாரே என கைதட்டுமே அப்படி சிலர் கைதட்டிகொண்டிருக்கின்றார்கள்
உண்மையில் ஜஸ்டினின் மூச்சு காற்றுக்கு தாங்கமாட்டார் ராமசந்திரன், ஆனால் சரிந்து கிடப்பது போல நடிப்பார், அந்த நடிப்பினைத்தான் பாண்டே நடிக்கின்றார்
மோடியினை அழைத்ததால் எல்லா கட்சிகளும் தந்தி டிவி மீது தினதந்தி மீது சில அதிருப்திகளை வைத்தன, அதனை சரியாக்கும் வித்தைதான் இது
இதில் யார் கவனமாக இருக்கவேண்டும் என்றால் திமுக
ஆம் திமுக இரண்டாக பிரிந்தபின் எதிர்கட்சியாக காங்கிரசே அதிகாரத்திற்கு வந்திருக்க வேண்டும் ஆனால் கலைஞர் ராமசந்திரனோடு மல்லுகட்டி நின்று கும்மாங்குத்து, உள்குத்து, பட்டிமன்றம் எல்லாம் நடத்தியதில் அந்த இரு கட்சிகள்தான் தமிழகத்தில் உண்டு என்ற பிம்பம் உண்டாயிற்று
கைதேர்ந்த ராஜதந்திரம் இது, கலைஞரின் சாமார்த்தியம் அது
இன்று பழனிச்சாமிக்கும் தினகரன் கோஷ்டிக்கும் இடையில் நடைபெறும் களபேரங்களும் அந்த வரலாற்றை திருப்ப பார்க்கின்றன, தினகரன் திமிறிகொண்டு நிற்க காரணம் அந்த வரலாற்றுபாடம் தான்
“டேய் இரண்டுபேரும் ஓரமாக போய் உட்காருங்க, சின்ன பசங்க பேசக்கூடாது..” என எம்.ஆர் ராதா ஸ்டைலில் வரவேண்டிய திமுக மகா அமைதி
இந்த அமைதி நீடித்தால் அது நிச்சயம் திமுகவிற்கு பின்னடைவே
1987ல் ராமசந்திரன் காலமானார், சம்பிரதாய துக்கத்திற்கு பின் பம்பரமாய் சுழன்றார் கலைஞர்
அவருக்கே அன்றே வயது 65க்கு மேல் இருந்தது ஆனாலும் ஒரு நிமிடம் ஓயாதா சூறாவளியாக சுழன்றார்
“அய்யா, அவர் இல்லை அதிமுக சிதறிகிடக்கின்றது, நிச்சயம் வென்றுவிடுவோம், ஏன் இந்த உழைப்பு? கொஞ்சம் ஓய்வெடுக்கலாமே?” என சில திமுகவினர் சொன்னபொழுது சீறி சொன்னார் கலைஞர்
“யோவ் இப்பவும் ஜெயிக்க முடியலண்ணா எப்பவும் முடியாதுய்யா”
இந்த பழம் சம்பவங்களை எல்லாம் திமுகவினர் புரட்டி பார்த்தால் அவர்கள் கட்சிக்கு நல்லது.