இளையராஜா எஸ்பி. பாலசுப்ரமணியம் ……

 

எந்த பெரும் கலைஞனுக்கும் தன் வித்தையில் ஒரு கர்வம் இருக்கும், தன் வித்தையில் எந்த நிலையிலும் தன்னால் உயர்ந்து நிற்க முடியும் என்ற தன்னபிக்கை அது

கலைஞர்கள் என்றல்ல, திறமையான எல்லோருக்கும் அவர்கள் துறையில் தன் இடம் என்ன என நிரூபிக்கும் ஒரு வெறி இருந்துகொண்டே இருக்கும், அதற்கு சோதனை வரும்பொழுதெல்லாம் அதனை நிரூபித்துகொண்டே இருப்பார்கள்

இளையராஜா அதனை எத்தனையோ முறை நிரூபித்துவிட்டார், நிச்சயமாக தமிழ் திரைப்பட உலகில் அவர் ஒரு சகாப்தம், வரலாறு

அவருக்கான இடம் என்றும் அவருக்கானது என்பதில் சந்தேகமே இல்லை

ஆனால் அவர் ஏன் தன் தகுதியினை மறந்து பல சர்ச்சைகளில் சிக்குகின்றார் என்பதுதான் புரியவில்லை

வைரமுத்துவுடனான அவருடன் பிரிவு நிச்சயம் தமிழ் திரையிசைக்கு இழப்பு, இன்றும் பாருங்கள் கடல் படத்தில் “நெஞ்சுக்குள்ளே உம்ம முடிஞ்சிருக்கேன்” பாடலில் வைரமுத்து அப்படியே இருக்கின்றார்

இளையராஜாவும் அப்படியே இருக்கின்றார், இருவருக்கும் இழப்பேதுமில்லை , இழப்பு ரசிகர்களுக்கே

Image may contain: 1 person, beard and close-up

அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவது இப்பொழுது இளையரஜாவுக்கு வழக்கமாயிற்று, ரகுமானை சீண்டுவது,தன் பாடலை ரெகார்டிங் செய்தவர் மீது சர்ச்சை என அவ்வப்போது சிக்கிகொண்டே இருந்தார்

கங்கை அமரனை கூட அவர் கழ்ற்றிவிட்டிருந்தார்

இப்பொழுது எஸ்பி பாலசுப்பிரமணியம் தன் பாடல்களை பாட கூடாது என நோட்டீஸ் அனுப்பியிருக்கின்றார்

இளையராஜா திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் பாடலுக்கு அவர் மட்டும் சொந்தம்கொண்டாட முடியாது

பாடல் ஆசிரியர், பாடியவர் முக்கியமாக பணம் கொடுத்த தயாரிப்பாளர் என எல்லோரின் கூட்டுமுயற்சி அது

இளையராஜா பணம் வாங்கிகொண்டுதான் இசை அமைத்தார், அதோடு அந்த பாடல் அவருக்கு சொந்தமில்லாதது ஆயிற்று

இளையராஜா அது எந்நாளும் அது என்பாடல் என சர்ச்சையில் இறங்குவாரானால், பாடல் எழுதிய வைரமுத்து இறங்கமாட்டாரா?

ஏன்? என் குரலில் பாடிய பாடலை வேறுயாரும் பாட கூடாது என ஜேசுதாசு, பால்சுப்பிரமணியனும், சித்ராவும், ஜாணகியும் வந்து நின்றால் எந்த பாடல் ஒலிக்கும்?

இதோ இளையராஜாவின் இசை எந்த நொடியும் நீங்காமல் உலகில் ஏதாவது ஒரு இடத்தில் ஒலித்துகொண்டே இருக்கின்றது, இன்னும் ஒலிக்கும்

ரேடியோ, டிவி, இணையம் என எங்காவது ஒலித்துகொண்டேதான் இருக்கும்..

அங்கெல்லாம் சென்று இது என் படைப்பு என அவரால் தடுக்க முடியுமா? அது ஏற்றுகொள்ள கூடியதா?

இளையராஜாவின் கலைஞன் எனும் கர்வம் பாராட்ட கூடியது, ஆனால் இப்படி வம்புக்கு வந்து நிற்பது முகம் சுளிக்க வைக்கின்றது

ஓவியம், சிற்பம், இசை என எத்தனை கலைஞர்கள் வாழ்ந்த உலகமிது, அவர்களின் படைப்பு காலத்திற்கும் நிற்கும், ஆனால் அவர்கள் காலத்திற்கும் நிற்கபோவதில்லை

கலைஞன் என்பவன் கலையில் தன்னை சாகாமல் நிறுத்திகொள்பவன், இளையராஜா அப்படி நிறுத்திய பின்னும் ஏன் இப்படி செய்கின்றார் என்பது மகா குழப்பமானது

அதுவும் முதிர்ந்தவயதில் , பெரும் புகழை ஈட்டியபின் அவர் இப்படி நடந்துகொள்வது நிச்சயம் அவரின் தகுதிக்கு ஈடானது அல்ல, அல்லவே அல்ல‌

எல்லா கலைஞனுக்கும் ஒரு உச்ச காலம் உண்டு, அவன் ஓய்வெடுக்கவும் ஒரு காலம் உண்டு , இந்த நியதிக்கு யாரும் தப்ப முடியாது

எந்த புகழோடு ஓய்ந்திருந்தார்களோ, அந்த புகழுடனே கடைசிவரை அவர்கள் இருந்துவிடுவதுதான் நல்லது

இளையராஜா இப்படி தடுமாற கூடாது என்பதுதான் எல்லொரின் விருப்பமும்

தமிழிசையின் பெரும் அடையாளம் அவர், அவரை கொண்டாடி உச்சத்தில் வைத்ததும் இதே தமிழ் உலகம்

அந்த தமிழர்கள் என் உத்தரவின்றி என் இசையினை கேட்க கூடாது என அவர் சொல்வது நிச்சயம் சரி ஆகாது

“எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு
கொள்ளாத கொள்ளாது உலகு”

அதாவது ஒருவன் உலகம் பரிகசிக்காத, தன் நிலைக்கு இழுக்கு வரும் காரியங்களை எண்ணி செயல்படவேண்டும் என்கின்றான் வள்ளுவன்

கம்பன், ராஜராஜ சோழன் முதல், பெரும் சிற்பிகள் வரை தங்கள் கலைகளை தமிழருக்கு விட்டுத்தான் சென்றிருக்கின்றார்கள்

அவர்கள் படைப்புகள் இருக்கும் வரை அவர்களும் இருப்பார்கள், இளையராஜாவும் அந்த இடத்தினை என்றோ அடைந்துவிட்டார்

அதனை மீறி இன்னும் அவர் புகழ் அடைய ஒன்றுமே இல்லை, இனி அந்த புகழை காத்து நின்றாலே போதும்….