இவ்வளவு கொடூர , பாசிச மனநிலை பிடித்தவர்களா இவர்கள்?
தமிழகத்திற்கு காவேரி விவகாரத்தில் மாபெரும் அநீதி இழைக்கபட்டு அதற்கு தமிழகம் பொங்கிகொண்டும் இருக்கின்றது
தேசிய கட்சிகளுக்கு வாக்களிக்காத உங்களை இப்படித்தான் நோக வைத்து கொல்வோம் என்கின்ற அரசியல் நடக்கின்றது.
இது இந்நாட்டின் ஒருமைபாட்டுக்கும், தேசிய நல்லிணக்கத்திற்கும் சவால் விடுகின்றது. எல்லோரும் இந்நாட்டு மைந்தர் எனும் அடிப்படை கொள்கைக்கும், சட்டம் எல்லோருக்கும் சமம் எனும் அடிநாத கோட்பாட்டிற்கும் சவால்விடுகின்றது
காங்கிரசுக்கும், பாஜகவிற்கும் வாக்களிக்காத தமிழகத்திற்கு காவிரி நீர் தரமாட்டோம், உச்ச நீதிமன்றம் கட்டளை இட்டாலும் கொடுக்கமாட்டோம் என்பது உச்சபட்ச அநீதி
இந்தியா எம் நாடு , அது ஒருபோதும் எம்மை கைவிடாது என மனமார நம்பிகொண்டிருக்கும் தமிழக தேசபக்தர்கள் எல்லாம் அறம் கெட்ட, மதிகெட்ட இச்செயலை கண்டு மனம் வெதும்பிகொண்டிருக்கின்றோம்
இந்திய பிரிவினையின் பொழுது பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியும் இன்னும் சில பகுதிகளும் இந்தியாவோடு தொடர விரும்பின, ஆனால் அவர்கள் கண்ணீரை நோக்குவாரில்லை
கான் அப்துல் கபார்கான் போன்றவர்கள் “எங்களை பிரித்துவிடாதீர்கள், கைவிட்டு விடாதீர்கள் நாங்கள் இந்தியாவினையே நேசிக்கின்றோம். எங்களை விரட்டி விடாதீர்கள்” என கதறியது போல தமிழகத்தார் மனதால் அழுதுகொண்டிருக்கின்றார்கள்.
இந்நிலையில் தமிழக மக்களின் மனநிலையினை நோகடிகும் வகையில் கொஞ்சமும் பொறுப்பின்றி, எப்படி பேசினாலும் தங்களுக்கு வாக்கு கிடைக்காது எனும் விரக்தியில் தமிழக மக்களை மிக மிக நோகடிக்கும் எள்ளல் வார்த்தைகளை சுப்பிரமணியன் சாமியும் தமிழிசையும் பேசிகொண்டிருக்கின்றனர்
இவை எல்லாம் நொந்துகிடக்கும் தமிழர் மனங்களில் வேலால் கீறி மிளகும் உப்பும் இட்டு மகிழ்வதற்கு சமம்
இவ்வளவு கொடூர , பாசிச மனநிலை பிடித்தவர்களா இவர்கள்?
சீ சீ.. அவமானம்.. வெட்கம். கொடுமை
கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாத, நாகரீகம் இல்லாத இவர்கள் பாஜகவிற்கு மட்டுமல்ல இந்தியருக்கே மாபெரும் அவமானம்
கும்பிட்டு நிற்கும் தமிழர்கள் கையில் துப்பி வைப்பது எவ்வகையிலும் ஏற்றுகொள்ள முடியாது
பாஜக தலமை இவர்களை கட்டுபடுத்தி வைப்பது நல்லது, அரசியல் , கலவரத்திற்காக இவர்களை தூண்டிவிட்டால் நிச்சயம் இந்நாட்டு அமைதிக்கு நல்லதல்ல
தமிழகத்தின் பொறுமைக்கும் எல்லை உண்டு, அந்த எல்லையினை நோக்கி தமிழிசையும், சு,சாமியும் தமிழர்களை தள்ளிகொண்டிருக்கின்றார்கள்
இதன் விளைவுகள் பாரதூரமாகவே அமையும்
இந்தியாவினை நாம் மனமார நேசிக்கின்றோம்
ஆனால் பஞ்சாப் சண்டிகரின் சிந்து துணையாறுகளின் பகிர்வு, நர்மதை நதி பகிர்வு, கங்கா நதி பகிர்வு, கிருஷ்ணா நதி நீர் பகிர்வு எல்லாம் மிக அழகாக நடக்கும் தேசத்தில் காவிரியினை மட்டும் அற்ப வோட்டுக்காக அரசியல் செய்யும் மர்மம் என்ன?
டெல்லிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக தமிழர்களை இப்படி எல்லாம் பழிவாங்குவதா? தாங்குமா?
என் அருமை இந்தியாவே,
பாகிஸ்தானுக்கு கொடுக்கும் நீரில் துளியாவது குறைத்தயா? இல்லை அந்த ஒப்பந்தம் அப்படியே இருக்கின்றது
வங்கத்திற்கும், சீனாவிற்கும் பர்மாவிற்கும் செல்லும் நதிகளில் ஒரு ஸ்பூனாவது உன்பக்கம் திருப்பினாயா? இல்லை
அதிலெல்லாம் கனத்த நியாயத்தை கடைபிடிக்கும் எம் தேசம் இந்த எளிய தமிழரின் உரிமையில் கை வைப்பது இந்தியாவிற்கே வெட்கமாக இல்லை
வெளிநாடுகளுடன் எல்லாம் நியாயமாக நடப்பார்களாம், பாகிஸ்தானிக்கும், வஙக தேசத்தவனுக்கும், சீனனுக்கும் தண்ணீரை சரியாக கொடுப்பார்களாம்
ஆனால் சொந்த இந்தியனான தமிழனுக்கு, இத்தேச குடிமகனுக்கு கொடுக்க மறுப்பார்களாம்,
எப்படிபட்ட உயர்ந்த சிந்தனை இது? கொள்கை இது?
என் அருமை தேசமே, எம்மை கைவிடாதே என்றுதான் தமிழகம் கெஞ்சி கேட்டுகொண்டிருக்கின்றது
அந்த பொறுமையினை பலகீனமாக நினைத்து இந்த சு.சாமி, தமிழிசை போன்ற
அல்லக்கைகளை கொண்டு ஏறிமிதித்தால் நாங்கள் எதனை எல்லாம் மறக்க விரும்புகின்றோமோ? எதனை எல்லாம் கனவிலும் நினைக்கவில்லையோ அதனை நோக்கி செல்ல நேரிடும்
ஆம் கண்ணீரோடு செல்ல நேரிடும்.
நீ கூடவே இருந்தாக வேண்டும், ஆனால் வாழவிடமாட்டோம் உன் உரிமை என ஏதுமில்லை என்னை அரசனாக்கி என் காலடியில் இருந்தால் வாழலாம் இல்லாவிட்டால் இப்படி போட்டு அடித்து அழவைத்து கொண்டே இருப்போம் என்றால் எப்படி வாழமுடியும்?
கண்ணீரோடு கிளம்புவதை தவிர என்ன செய்ய முடியும்?
ஆனால் இந்த படுபாதகத்தில் , இந்நாட்டின் ஒருமைபாட்டை உடைக்கும் உங்கள் அற்ப வாக்கு வங்கி அரசியல் மோசடியில் , இந்த பாவத்தில் எங்களுக்கு துளியும் பங்கில்லை
உரிமை இல்லை என்றீர்கள் தாங்கினோம், மொழி இல்லை என்றீர்கள் முணுமுணுத்தோம்
அடிமேல் அடித்தீர்கள் இந்தியன் என்பதற்காய் தாங்கினோம்
இப்பொழுது ஒரு சொட்டு நீரும் தரமாட்டேன் வானம் பெய்தால் வாங்கிக்கொள் என்கின்றீர்கள், இது யாருக்கு பொறுக்கும்?
இந்நாட்டின் சட்டம் எல்லோருக்கும் சமம் என்ற வகையில் உச்சநீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினை கையில் வைத்து கொண்டு துளி தண்ணீருக்காக எம் உரிமையினை கெஞ்சி கேட்கின்றோம்
அதனையும் தூர எறிந்துவிட்டு நக்கலாய் சிரிக்கின்றீர்கள், எப்படி இருக்கும் எங்களுக்கு?
யாரால் தாங்க முடியும்?
நிச்சயம் வரலாறு இந்நாட்டிற்கு பெரும் துரோகமிழைத்தவர்கள் என எங்களை நிச்சயம் சொல்லாது