உடன்பிறப்பே , “நான் எத்தனை தேர்தல்களை சந்தித்தவன்….”
உடன்பிறப்பே
நான் எத்தனை தேர்தல்களை சந்தித்தவன் என்பதை வரலாறு போலவே நீயும் அறிவாய்
வெள்ளையன் தொடங்கி வைத்த உள்ளாட்சி தேர்தல் முதல், இந்திய குடியரசான தேர்தல்கள், அண்ணா இயக்கம் தொடங்கிய காலங்களின் தேர்தல்கள் வரை கண்டிருக்கின்றேன்
சுருக்கமாக சொன்னால் பெருமகனார் நேரு காலமுதல் இன்று அவரின் கொள்ளுபேரன் ராகுல் காலம் வரை 5 தலைமுறை தேர்தல்களை பார்த்திருக்கின்றேன், கலந்திருக்கின்றேன், வென்றும் இருக்கின்றேன்
ஆனால் இப்படி பணத்தால் ஜனநாயக குரல்வளையினை அறுக்கும், ஊழல் பணத்தால் மக்காளாட்சி இதயத்திற்கே ஊசி குத்தும் ஒரு கொடூர தேர்தலை இன்றுதான் கண்டிருக்கின்றேன்.
அவர்களிடம் இன்று மக்களை மயக்கும் முகங்கள் இல்லை, மாய தலைவர்கள் இல்லை, ஆனால் அவர்கள் விட்டுசென்ற ஊழல் பணங்களும், அவர்களை காட்டி இவர்கள் சுருட்டிய சுரண்டல் பணமும் கொட்டி கிடக்கின்றன.
எது இருக்கின்றதோ அதனை வைத்துதான் பிரச்சாரம் செய்வார்கள், அந்த பரிதாப கூட்டத்திடம் இப்போது இருப்பது பணம் மட்டுமே, அதனால் இதனைத்தான் செய்வார்கள்.
நாமோ இன்றல்ல, என்றுமே பணம் கொடுத்து வென்றவர்கள் அல்ல, வெல்ல முயற்சிப்பவர்களும் அல்ல, மாறாக மக்களிடம் நம் கொள்கையினை விளக்கி வென்றவர்கள்
உடன்பிறப்பே, அந்த காலங்களை நீ அறிந்திருக்கமாட்டாய்
அண்ணா கட்சி தொடங்கும்பொழுது காலணா கிடையாது, காங்கிரசிலே மிட்டா மிராசுகளும், பண்ணையார்களும், தொழில்நிலைய முதலாளிகளும் கிளப் போல குவிந்திருந்தனர்
இன்றைய லீ மெரிடியன் ஹோட்டல் போல அன்று காங்கிரஸ் பணக்காரர்களின் புகலிடமாக இருந்தது, காமராஜர் எனும் ஏழை மனிதனை வாயில் காப்ப்பாளன் போல வைத்துகொண்டு பிண்ணணியில் அவர்கள்தான் இருந்தனர்
நம்மை காலணாவிற்கு வக்கற்ற கட்சி என அவர்கள் சொன்னாலும் பரவாயில்லை, நம் தலைவர் பெரியாரே சில இடங்களில் சொன்னார், அப்படித்தான் நாம் இருந்தோம்
தேர்தல் என்றால் நியாயமான செலவுகள் உண்டு, போஸ்டர் முதல் மைக்செட் செலவு வரை உண்டு, நாம் தான் நம் வாழ்வினை தமிழகத்திற்கு கொடுத்தோமே ஒழிய, பாட்டாளிகள் வாழ்வினையும் கொடுங்கள் என கேட்க முடியுமா? செலவுகளை சமாளித்துதான் ஆகவேண்டும்
மக்களிடம் சென்று திரட்டினோம், துண்டு ஏந்தினோம், நாடகங்கள் நடத்தினோ, பசி பொறுத்தோம், தூக்கம் மறந்தோம், கால்களில் கொப்புளம் வருமளவு நடந்தோம், ஒரு வீடு விடாமல் சென்று கெஞ்சினோம்
முதன் முதலாக கட்சி நிதி 1 லட்சம் ரூபாய் பிரிந்தது, அண்ணா சொன்னது போல அவ்வளவு பணத்தினை நாங்கள் முதலாக பார்த்ததே அன்றுதான்
தேர்தல் செலவுக்கு அவையெல்லாம் கடல் மீன்களுக்கு பொறிவீசும் போன்ற பணங்கள், நாங்களெல்லாம் அஞ்சவில்லை
பணக்காரர்களும், கல்விமான்களும் , பெரும் முதலாளிகளும் நின்ற தொகுதிகளில் பாமரர்கள், ஏழைகள், தரித்திரர்கள், வக்கற்றவர்கள் என நிறுத்தினோம், பழஞ்சோறு குடித்துதான் பட்டினி கிடந்துதான் பிரச்சாரம் செய்தோம்
எங்களின் வாதங்களும், தொடர் பிரச்சாரங்களும், காற்றுக்கு ஓய்வு கொடுக்கும் வீச்சும் மக்களிடம் எங்களை சேர்த்தன வென்றோம்
ஆக நாம் கடந்த, நடந்த, நடந்துகொண்டிருக்கும் பாதை இத்தகையானது
ஆனால் அவர்கள்?
அவர்கள் என்றுமே ஜனநாயகத்தை நம்பியவர்கள் அல்ல, சில முகங்களை காட்டி மயக்குவார்கள், அது இல்லாவிட்டால் நோட்டுக்களை காட்டி ஆசைகாட்டுவார்கள.
இதனை நாங்கள் 1975 முதல் சொல்லிவருகின்றோம், யார் கண்டுகொண்டார்கள்? பார்பான கூட்டத்தில் சூத்திர தரித்திர தமிழ்குரல் எப்படி எடுபடும்?
ஆனாலும் ஒரு கட்டத்தில் காண சகிக்காத கொடுமைகள் அரங்கேற தொடங்கின, இந்தியாவில் அல்ல உலகில் எங்குமே காணாத ஜனநாயக கொலை தமிழகத்தில் அரங்கேறின.
நாம் சொல்லும்பொழுதெல்லாம் காதில் வாங்காத தேர்தல் ஆணையமே கொதித்தெழுது அரவக்குறிச்சி, தஞ்சை தொகுதிகளின் தேர்தலை நிறுத்தினால் நிலமை எவ்வளவு மோசமாக இருந்திருக்கும்?
இதோ ஆர்.கே நகரிலும் அதே பிரச்சினையினை காட்டி தேர்தல் நிறுத்தபடுகின்றது
உடன்பிறப்பே கவனித்துபார்
ஆடிமாத காவேரி வெள்ளமென, குற்றால அருவியென பொங்கி கொட்டிய பணத்தினை சந்தேகித்து வருமானவரி சோதனை நடந்தது , அது ஆளும் கட்சியின் அமைச்சர், அவரின் கூட்டனி கட்சிகள் என அங்கேதான் நடந்தது
பெரும் அளவு பணமும் இன்னபிற விஷயங்களும் கைபற்றபட்டன, இவை எல்லாம் திருப்பதிக்கும், திருச்செந்தூருக்கும் வைத்திருந்த காணிக்கையா?
இல்லை பாமர மக்களின் விழிகளில் பம்பரம் ஆட வைத்திருந்த பணம்
அது வந்த வழி? அதன் மூலம், அதற்கு வரி என்ன? என பல கேள்விகள் எழுகின்றன?
அவர்களுக்கு கொள்கையில்லை, வாக்கு கேட்க வக்குமில்லை. பண்ணையார்கள் பாமரர்களை சில்லறை கொடுத்து வயலுக்கு வர மிரட்டுவது போல இவர்கள் மிரட்ட தொடங்கிவிட்டார்கள்
இனி எல்லா தேர்தலிலும், எல்லா தொகுதிகளிலும் இப்படித்தான் இவர்கள் செய்வார்கள், தேர்தலும் நிறுத்தபட்டுகொண்டே இருக்கும்
அண்ணா சொல்வார், கொசுவினை விரட்ட கொசுவலை வாங்குவது அறிவா? இல்லை சாக்கடையினை மூடுவது அறிவா?
அப்படி நாமும் சொல்கின்றோம், தேர்தலை நிறுத்த தொடங்கினால், இனி தமிழகத்தில் தேர்தல் நடத்த முடியாது
ஆனால் இந்த குழப்பங்களுக்கு யார் காரணமோ அவர்களை முற்றிலும் அப்புறபடுத்தினால் இந்த குற்றங்கள் குறையும், நியாயமான தேர்தல் நடக்கும்
யாரால் குழப்பம் வந்ததோ அவர்களை கண்டறிந்து அக்கட்சிக்கு தேர்தலில் தடை என சொல்வதுதான் அறிவுடமையே தவிர, நியாயமாக போராடும் எல்லோரையும் வருந்த வைத்து தேர்தலை நிறுத்துவது அல்ல
ஆளும் கட்சி அடாவடியாக தேர்தல் விதிமுறைகளை புறக்கணிக்கும்பொழுது அதுவும் அமைச்சர் வீட்டிலே கோடான கோடி பணங்கள் கைபற்றபடும்பொழுது என்ன செய்யவேண்டும்?
அமைச்சரை மட்டுமல்ல, அந்த ஆட்சியினையே கலைத்து ஜனநாயகத்தை நிறுத்தவேண்டாமா?
அற்ப காரணங்களுக்கு எல்லாம் முன்பு திமுகவின் ஆட்சியினை கலைத்தவர்கள், இந்த ஜனநாயக கொலைக்கு பின்னும் இந்த ஆட்சியினை நீளவிடும் மர்மம் ஏன்?
பணம் கொட்டியவர்கள் எல்லாம் தேர்தலில் வென்றதில்லை என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு, ஆனால் இப்படி எல்லாம் செய்து பெரும் தவறான முன்னுதரணாமாக மாறிவிட கூடாதே என்பதால் சொல்கின்றோம்
அன்றொருநாள் இக்கட்சியின் தரித்திர வேட்பாளர்களை பெரும் முதலாளிகளுக்கு எதிராக வெற்றிபெற வைத்த தமிழகம் இது, அதன் பின்னால் இருந்தது திமுக எனும் ஒப்பற்ற இயக்கத்தின் போர்குணமும், வாதமும், உழைப்பும் எல்லாவற்றிற்கும் மேல் தமிழகத்து சாக்ரட்டீஸ் பெரியாரும், தென்னக இங்கர்சால் அண்ணாவும் கற்றுகொடுத்த சிந்திக்க வைக்கும் விந்தை இருந்தது
உடன்பிறப்பே
தேர்தல் நிற்கட்டும், பின் நடக்கட்டும், பணமழை கொட்டும் கட்சி முடங்கட்டும் அல்லது பார்ப்பண சூதில் நடக்கட்டும். கொள்ளை அரசு இருக்கட்டும் ஒருவேளை நீதி கிடைத்தால் மடியட்டும்
நாம் உழைத்துகொண்டே இருப்போம், மக்களின் மனதினை தட்டிகொண்டே இருப்போம், அவர்கள் காதில் அவர்கள் உரிமையினை உணர்த்திகொண்டே இருப்போம்
இப்படி எல்லாம் உழைத்துதான் அன்று பண்ணையார்களை வீழ்த்தினோம், பெரும் தனவான்களை விரட்டினோம்
அந்த பெரும் யானைகளையே விரட்டி ஓடவைத்த நமக்கு, இந்த நரிகூட்டம் எம்மாத்திரம்? இந்த செந்நாய் கூட்டம் எந்த நொடிக்கு?
அடலேறே கலங்காதே , திகையாதே. வெற்றி என்றுமே நம்பக்கமே, மாயைகளும் , பணங்களும் இந்த சூரியனை சிலகாலம் மறைத்தாலும் அவை எல்லாம் நீங்கி சூரியன் பிரகாசிக்கும் நேரம் நெருங்கிகொண்டிருக்கின்றது..
பணத்தினை நம்பியோர் பாடை ஏறிய கதையும், மக்களை நம்பியோர் மணிமுடிய வரலாறும் தமிழகத்திற்கு புதிதல்ல
நாம் மக்களை நம்புவோம், மணிமுடி சூட்டுவோம்..